Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தொடர் மூடுவிழா; ஆனால், ஆடை தயாரிப்பு துறையே சிறிலங்காவை உயர்த்தும் என்கிறது அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தொடர் மூடுவிழா; ஆனால், ஆடை தயாரிப்பு துறையே சிறிலங்காவை உயர்த்தும் என்கிறது அரசு

சிறிலங்காவின் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் கடந்த வெள்ளிக் கிழமை வெண்ணிற உடை அணிந்து பணிக்கு வந்தனர்.

சம்பளக் குறைப்பு மற்றும் பணயாளர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்படுவது என்பவற்றுக்குத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதேசமயம், நாட்டின் ஆடைத் துறை தொழிலாளர்களின் நிலைமை தொடர்பாக அவர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்கள் என்றும் அறிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஆடைத் தொழிற் துறையில் சுமார் 8,000 பணி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கவாதிகள் கூறுகின்றனர்.

http://www.puthinappalakai.com/view.php?20100120100347

மோசமான சம்பளம் காரணமாக பணியில் இருந்து விலகிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இது ஆடைத் தொழிற்சாலைகளைத் தொடர்ந்து மூடவேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது.

தொழிற்சங்கவாதியான பாலித அத்துக்கோறளவின் கூற்றுப்படி ஆடை உற்பத்தித் துறையில் சம்பளம் இப்போது 6,500 க்கும் 7,000க்கும் இடைப்பட்டதாகவே அமைந்துள்ளது. மேலதிக நேர வேலையையும் உள்ளடக்கியதாகவே இந்தக் கொடுப்பனவு காணப்படுகின்றது.

கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் வேறு எந்தவிதமான படிகளோ நன்மைகளோ கிடைக்காத நிலையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் அத்துக்கோறள தெரிவிக்கிறார்.

அண்மைய மாதங்களில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 75 மூடப்பட்டுள்ளன. எஞ்சி இருப்பவைகூட வெற்றிடங்களுக்கு ஆட்களை நிரப்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன.

“தொழிற்சாலைப் பிரதிநிதிகள் பணியாளர்களைத் தேடி ஒவ்வொரு நாளும் சுதந்திர வர்த்தக வலயப் பகுதியில் சுற்றி அலைவதைப் பாருங்கள்” எனச் சொல்கிறார் அத்துக்கோறள.

“நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கூட அவர்கள் ஆட்கள் தேடி அலைகிறார்கள். வேலைக்கு ஆட்களைப் பிடித்துத் தரும் தரகர்கள் ஒவ்வொரு பணியாளருக்கும் தரகுப் பணம் கேட்கிறார்கள். இது தான் ஆடை உற்பத்தித் துறையின் இன்றைய யதார்த்தம்” என அவர் மேலும் கூறுகிறார்.

இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு சிறிலங்கா முதலீட்டுச் சபை எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை என்றும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களை விட அதிகமான சம்பளம் பெறுகிறார்கள் என்றும் குறைப்பட்டுக் கொள்கிறார் அத்துக்கோறள.

ஆடை உற்பத்தித் துறைப் பணியாளர்களின் இன்றைய அவல நிலைக்கு அரசும், எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரும் கூட்டாகப் பொறுப்பானவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார், சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் தொழிற்சங்கத் தலைவர் அன்ரன் மார்க்கஸ்.

“அரச தலைவர் தேர்தலின் முதன்மை வேட்பாளர்கள் இருவரும், மக்களின் உண்மையான பிரச்சினைகளை விட்டுவிட்டு போர் எப்படி நடத்தப்பட்டது என்றும் அது எப்படி வெற்றி கொள்ளப்பட்டது என்றுமே பேசி வருகின்றார்கள்” என்கிறார் அவர்.

ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளையும் சலுகைகளையும் நிறுத்துவதற்கு உலகளாவிய பொருளாதார நலிவை ஒரு காரணமாக ஆடை தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் மார்க்கஸ் கூறுகிறார். “எல்லா இடமும் இதுதான் நடக்கிறது” என அவர் பொருமுகிறார்.

ஆடைத் தொழிற்துறை தொழிற் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.சுகுமாரன் நிலைமையின் வீரியத்தைக் குறைத்துக் காட்டுவதற்கு முற்படுகின்றார். தனிப்பட்ட அல்லது குடும்பக் காரணங்களுக்காக ஊழியர்கள் வெளியேறிச் சென்றதனாலேயே பணி வெற்றிடங்கள் ஏற்பட்டன என அவர் விளக்கினார்.

“பெரும்பாலான பெண் ஊழியர்கள் திருமணம் போன்ற தமது தனிப்பட்ட காரணங்களுக்காகச் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள். அவர்களில் பலர் திரும்பி வரவில்லை. அதேசமயத்தில் வேறு சிலர் நகரங்களிலும் பெரும் பட்டினங்களிலும் வெவ்வேறு துறைகளில் மாற்று வேலைகளைத் தேடிக்கொண்டுள்ளனர்” என்கிறார் சுகுமாரன்.

ஆனால் - இதற்கிடையில் -

ஆடைத் தொழி்துறை மூலம் உலகச் சந்தையில் பெரும் உயர்வடையும் வாய்ப்பு சிறிலங்காவிற்கு அதிகரித்து வருகின்றது என்று சிறிலங்கா திறைசேரிச் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் காணப்படும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் சிறிலங்காவின் ஆடை உற்பத்தித் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கு அண்மையில் கொழும்பு கலதாரி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு திறைசேரிச் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர உரையாற்றினார்.

ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனமும் A&E Lanka Ltd நிறுவனமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

சிறிலங்கா வருடாந்தம் 10.5 பில்லியன் டொலர் பெறுமதியான பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் 7.2 பில்லியன் டொலருக்கே ஏற்றுமதி செய்கின்றது. அதிலும் 46 வீதம் 3.3 பில்லியன் டொலர் பொருட்கள் ஆடை உற்பத்தித் துறை சார்ந்தவை.

நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி 3.3 பில்லியன் டொலர் அதிகம். இந்த நிலையைத் தலைகீழாக மாற்றிக் காட்ட முடியுமா என்று தொழிற்துறையினரிடம் திறைசேரிச் செயலர் வினவினார்.

அந்த நிலையை அடைய வேண்டுமாயின் சிறிலங்கா மேலதிக ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஆடைத் துறையின் ஏற்றுமதிகள் அதிகரிக்கப்படும் அதே நேரத்தில் இறக்குமதிகள் தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தும் எனத் தெரிவித்த ஜெயசுந்தர, அந்த நிலையை எட்டுவதற்கு ஆடைத் துறை குறைந்தது 3.3 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயை அதிகமாகப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியை அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் 1.6 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு முயற்சி செய்யுமாறும் அவர் தொழிற்துறையினரிடம் கேட்டுக் கொண்டார்.

ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால், ஏற்கனவே உள்ள சந்தைகளுக்குப் புறம்பாகப் புதிய சந்தைகளை ஆடை உற்பத்தித் துறை கண்டறிய வேண்டும் என்பது ஜெயசுந்தரவின் கருத்து.

புதிய சந்தைகளைக் கண்டறியும் போது அவை உலகளாவிய முக்கியத்துவம் மிக்கவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆடை வடிவமைப்புத் துறை கல்வி நிறுவன சிறிலங்கா பிராந்திய தலைவரான கலாநிதி ரோகன குரூப்பு மற்றும் பிரான்டிக்ஸ் ஆடைத் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் ஆடைத் துறையில் காணப்படும் தற்காலப் போக்குகள் குறித்து கருத்தரங்கில் விபரித்தனர்.

ஆடைத் துறையைப் பொறுத்த வரையில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பாதகமான தாக்கத்தைச் செலுத்தவில்லை என்று கூறும் குரூப்பு, காணப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்துபவர்கள் வெற்றிபெறலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

2008ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் தேக்கம் காணப்பட்ட போதும் வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை அங்கிருந்து ஈட்டியுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதன்மை விநியோகத்தர்களாக தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் காணப்படுகின்றன என குரூப்பு கூறுகின்றார்.

“2008ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கான ஆடை இறக்குமதியை நோக்கினால், ஒரு சதுர மீற்றருக்கு சராசரியாக 1.85 டொலராக அது காணப்பட்டது. தெற்காசிய நாடுகள் அதே ஒரு சதுர மீற்றரை 1.69 டொலருக்கு வழங்கின. அதேசமயத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து அதே ஒரு சதுர மீற்றர் 2.68 டொலருக்கு அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது” எனச் சுட்டிக்காட்டினார் ரோகன குரூப்பு.

இதன் பொருள் என்னவென்றால், தெற்காசிய நாடுகளின் ஆடைகள் சந்தையில் நல்ல போட்டியை ஏற்படுத்தக்கூடியவை என்பதாகும். அதனால்தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட தெற்காசிய நாடுகளால் அமெரிக்காவுக்கு 37 விழுக்காடு அதிகமான துணிமணிகளை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளது.

இந்தப் புள்ளி விபரங்கள் எல்லாம் - அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகள் வளர்ச்சி அடைவதற்கான அடித்தளத்தைக் கொண்டுள்ளன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்குரிய சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கான திட்டங்களைத் தனித் தனியே தாமே வரைந்து கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.