Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினையே ஐ.நா. சபை தலையிடக்காரணமானது

Featured Replies

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினையே ஐ.நா. சபை தலையிடக்காரணமானது கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன .

ஏகாதிபத்திய சக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முழு அளவில் உதவியதாகவும் தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்ததும் பல்வேறுபட்ட சர்ச்சைகள், விவாதங்கள், குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இதற்கெதிராக தமது சக்திகள் அனைத்தையும் திரட்டி செயற்படுகின்றது. உலகம் முழுவதும் ஆதரவு வேண்டி பயணங்களை மேற்கொண்டுள்ளது.

உண்மையில் 2009 இல் நடைபெற்ற இறுதி யுத்தகாலப் பகுதியில் மிகப்பெரிய மக்கள் அழிவு இடம்பெற்றிருந்தது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள், 12,000 இளைஞர்கள் சிறைவைக்கப்பட்டனர், 2,86,000 மக்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். உடைமைகள் யாவும் அழிக்கப்பட்டன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்றும் அமுலில் உள்ளது. வடக்கு,கிழக்குப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இன்றும் உள்ளது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எங்கே என்ற கேள்வி அரசாங்கம் கூறிய கணக்கில் இருந்தே வெளிக்கிளம்பியது. யுத்தம் தொடங்கும் போது 3,86,000 க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. யுத்தம் முடிந்த பின்னர் 2,86,000 பேரே வந்துள்ளதால் மிகுதிப் பேருக்கு என்ன நடந்தது என்பதற்கு இன்று வரை மறுமொழியில்லை.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலித்தேவன், நடேசன் போன்றோர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும்போது கொல்லப்பட்டனர். இதனால் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருந்தது. எனவே இவை அனைத்துக் காரணிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு வழிவகுத்தது. என்னைப் பொறுத்தவரை பான் கீ மூனினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை நான் ஒரு விதத்தில் ஆதரிக்கின்றேன். அவருக்கு நன்றியும் கூறுகின்றேன். ஏனென்றால் நாம் தொடர்ந்து கூறிவந்தவற்றை வலியுறுத்தியதை அவர் ஏற்றுக்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக நான் லண்டன் பாராளுமன்ற வளாக மண்டபத்தில் இதைக் கூறியமைக்காகவே தேசத்துரோகி எனக் குற்றம் சுமத்தப்பட்டு நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் தாக்கப்பட்டேன். தற்போது நான் கூறியவற்றையே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

இன்று தாய் நாட்டை நேசிப்பவர்கள் என்று தம்மை அழைப்பவர்கள் பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏகாதிபத்திய சக்திகளே இத்தகைய செயற்பாட்டின் பின்னணியில் இருப்பதாகவும் இந்த ஏகாதிபத்திய சக்திகளுடன் விடுதலைப் புலிகள் செல்வாக்கு கலந்திருப்பதாகவும் கூறுகின்றனர். யுத்தத்தில் தாம் ஏகாதிபத்திய உதவி இல்லாமல் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர். மறுபுறம் பான் கீ மூனின் அறிக்கை வந்தவுடன் எல்லாமே ஈடேறிவிடும் என்ற தரப்பும் உள்ளது.

இந்த அறிக்கையை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். மறுபகுதியினர் ஏன் ஆதரிக்கவில்லை என்கின்றனர். உண்மையில் பான் கீ மூன் யாரின் நலனுக்காகச் செயற்படுகிறார் என்பதையே பார்க்க வேண்டும். அறிக்கையை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதல்ல பிரச்சினை, இதன் மூலம் நடைபெறப் போகின்ற முன்னெடுப்புகளையே கவனிக்க வேண்டும்.

உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு முழு அளவில் உதவின. தமது நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்தன. அவர்களின் நிதியை முடக்கின. உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறைவைத்தனர். இன்றும் தடை அமுலில் உள்ளது. இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெற ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்ப உதவிகள் என எல்லாவற்றையும் செய்தன. தமிழ் மக்கள் மிகப்பெரிய அழிவுக்குள் நிற்கும்போது பார்த்துக்கொண்டு நின்றன.

அவரால் ஒன்றும் செய்ய முடியாது என தாய்நாட்டுப் பற்றாளர் வாதிடுகின்றனர். இது அவர்களின் அறிவு வளர்ச்சியின் பற்றாக்குறையைக் காட்டுகிறது. தனக்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவரால் குழுவை நியமிக்க முடியும். அந்த அறிக்கையை அவர் பெற்றதும் மேல் நடவடிக்கைக்குச் செல்ல முடியும். தமிழ் மக்களின் எழுச்சிக்கு அரசியல் தீர்வை வழங்கி தீர்த்திருக்கலாம். முன்னாள் இராணுவ அதிகாரியான மறைந்த டென்சில் கொப்பேகடுவ, இராணுவத்தீர்வு பலன்தராது அரசியல் தீர்வே உகந்தது என்றார். கெரில்லா இயக்கம் மக்கள் இயக்கமாக இருந்தது. எனவே அதை அழிக்க முயன்றால் பாரிய மக்கள் அழிவு ஏற்படும். வன்னிப் போர் முனையில் அதுவே நடைபெற்றது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் போரை முன்னெடுத்தது. விளைவு ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்படும் நிலையே ஏற்பட்டது. பாரிய மனித உரிமை மீறல்கள், சொத்தழிவுள் ஏற்பட்டுள்ளன. எனவே தேசிய எழுச்சி இராணுவ முறை மூலம் ஒடுக்கப்பட்டால் அதன் அழிவின் தாக்கம் அடுத்த எழுச்சிக்கு வழிகோலும்.

இன்றைய உலகமய சக்திகளுக்கு மக்கள் அழிவைப்பற்றி கவலையில்லை. அவர்களுக்கும் தேவை வளம். வடக்கு,கிழக்கில் உள்ள வளங்கள் இன்று அவர்களுக்கு வந்துள்ளது. இதனாலேயே இந்தப் பேரிழிவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். யுத்தத்தின் போது சர்வதேச நிறுவனங்கள் போதிய கடன்களை வழங்கியது. இன்று வளத்தில் உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது.

இன்று ஏன் பான் கீ மூன் இலங்கை தொடர்பான கோவையை முன்நிலைப்படுத்துகிறார். இதற்கு இந்திய அழுத்தம் பிரதான காரணியாகும். இந்தியா விடுதலைப் புலிகளை அழிப்பதில் குறியாக இருந்தது. மரணச் சான்றிதழ் பெற்றே சென்றது. ஆனால் ஏதாவது அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறது. தமிழ்த் தலைமைகளை இணைத்து செல்லுமாறு கோருகிறது.

மகிந்தவிற்கு இதுவே பிரச்சினையாயுள்ளது. இன்று இந்தியா ஒவ்வொரு முனையிலும் மகிந்தவிற்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. கடலில், கிரிக்கெட் விளையாட்டில், மீள் கட்டுமானத்தில் மகிந்த பணிந்தே வருகின்றார். இதேபோன்று தான் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் குழு அறிக்கையில் உள்ளுக்குள் இணங்கிப்போகும் தன்மையை காட்டிவிட்டு வெளியே வந்து தாய்நாட்டுப் பற்றாளர் கோஷத்தைக் கோருகின்றார்.

எனவே எதிர்காலம் சர்ச்சை நிறைந்த ஒன்றாகவே காணப்படும். 1987, 1988 காலப்பகுதி போன்ற நிலை தற்போது இல்லை. அன்றைய காலப்பகுதியில் பேரினவாதம் ஆட்சிக்கு செல்வாக்குக் கொண்டிருக்கவில்லை. எனவே ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கு தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க பிரச்சினை இருக்கவில்லை.

இன்று நிலைமை அப்படி அல்ல. பேரினவாதம் ஆட்சித் தளத்தில் உள்ளது. படைத்தரப்பில் உள்ளது. அமைச்சரவையில் உள்ளது. எங்கும் உள்ளது. எதிலும் உள்ளது. எனவே மகிந்த ராஜபக்ஷ தீர்வை நோக்கி நகர்ந்தால் சதிகள், எதிர்ப்புகள் நிறையவே தோன்றும். இவற்றைக் கடந்தே அவர் மாற்றத்துக்குத் தயாராக வேண்டும்.

நிபுணர் குழு இலங்கை வரவில்லை. ஊடகவியலாளர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் கருத்துகளைக் கொண்டே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே அது வலிதாக இருக்கமாட்டாது என்றும் வாதிடுகின்றனர். இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இவை எல்லாம் வலிதற்றவை. நான் இங்கு பேசுவதைக் கூட அவர்களால் பார்க்க,கேட்க முடியும். மேலும் இந்தப் பிரச்சினையில் சீனா, ரஷ்யா எமக்கு உதவும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. சீனா,ரஷ்யா, சூடானை கைவிட்டதும் லிபியா மீது தாக்குதல் நடத்த அனுமதித்ததும் யாவரும் அறிந்த உண்மையாகும். மேலும் ஜி8 தற்போது ஜி20 ஆகியுள்ளது. உலகமய சக்திக்குள் சீனா,ரஷ்யா உள்ளன. எனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இணங்கியே போகும்.

உண்மையில் இந்த நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமானால் வடக்கு,கிழக்கிற்கு சுயாட்சி வழங்கவேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும். போதிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றார்.

http://www.thinakkural.com/news/all-news/local/3281-ino.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.