பாகம் பதினாறு
எனக்கு அன்றைக்கு மனம் நிறைய மகிழ்ச்சியாக இருந்தது.
என்னை ஒரு முக்கியமான பயிற்சிக்கு அழைத்திருந்தது தான் என் மகிழ்ச்சிக்கு காரணம்.
அது எவ்வளவு கடினமான பயிற்சி என்று எனக்கு தெரிந்திருந்தும், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஒரு ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்தி, காட்டுக்குள் அடுத்த கட்ட போராளிகளை நகர்த்துவதற்கான திட்டம் தீட்டபட்டிருந்தது.
அதற்கான விசுவாசமான போராளிகளின் அணியில் என்னையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். தளபதி அன்பு மாஸ்டர் தலைமையில் எங்களுக்கு பயிற்சி வழங்கபட்டது.
காட்டுக்குள் சென்று, அடுத்தகட்ட போராட்டத்துக்கு தேவையான ஆயத்தங்களை தொடங்குவதற்கான ஏற்பாடுகளுக்கான பயிற்சி.அந்த கால அவகாசத்துக்கு தேவையான பொருட்களையும் முதுகிலே சுமந்து செல்வதற்கான பயிற்சி.
கிட்டதட்ட அறுபது கிலோமீட்டர், முதுகிலே ஐம்பது கிலோ பையுடன் நடைபயிற்சி.
உறவுகளே ....என்ன நீங்கள் வியப்பில் வாயை பிளந்து நிற்பது எனக்கு தெரிகிறது.காரணம் நிச்சயமாக பயிற்சி கடினம் சம்பந்தபட்டதாக இருக்காது.
இராணுவம் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் பிடிச்சு இரட்டைவாய்காலில் வந்து நிற்கிறான், இவர்களிடம் எங்கே அறுபது கிலோமீற்றர் நடக்கிறதுக்கு இடம் இருக்கு என்பது தானே அந்த வியப்புக்கு காரணம்.
உண்மைதான் உறவுகளே, எங்களிடம் வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மட்டும் தான் இருந்தது, நீளமாக பார்த்தால் கூட எங்களிடம் ஒரு ஆறு கிலோமீற்றர் தான் வரும்.ஆனாலும் நாங்கள் நடந்தோம்.
ஆமாம் ஒரு மூன்று கிலோமீற்றர் கடற்கரை பகுதியில் இருபது முறை நடந்தோம். கடற்கரை மணலில் கால் புதைய, புதைய , சிங்களவனின் கொடிய பல் குழல் எறிகணைகளுக்கும், கடலில் இருந்து ஏவும் பிரங்கிகள், நீண்ட தூர சன்னங்களுக்கும் மத்தியிலும், குனிந்த படி கூட நடந்தோம்.
எங்கள் முதுகில் இருந்தது ஐம்பது கிலோ பாரம் மட்டும் இல்லை எங்கள் மக்களின் விடிவு என்று நினைத்து சுமந்தோம்.
சொல்லுங்கள் உறவுகளே. அன்றைய நிலையில் நீங்கள் இருந்திருந்தால் கூட.. உங்களிடம், எங்கள் மக்களின் அடுத்த கட்ட போராட்டம், எங்கள் மக்களின் விடிவு, ஒப்படைக்க பட்டிருந்தால் ஐம்பது கிலோ என்ன.. ஐநூறு கிலோ என்றாலும் தூக்கும் மனநிலை உங்களுக்கு வராதா..??
ஆனால் என்ன, நல்ல சாப்பாடே கிடைப்பது கடினம், நல்ல சாப்பாடு என்ன.. சாப்பாடே இரண்டு நாளுக்கு ஒரு முறை தான். இதில் நடைபயிற்சியின் போது தண்ணீர் கூட அருந்த தடை. ஒரு போத்தல் தண்ணீருடன் மட்டுமே இவ்வளவு பயிற்சியையும் முடிக்க வேண்டும். காட்டிலே தண்ணீர் கிடைக்காது என்று காரணம் வேறு சொல்லுவார்கள்.
நடந்து முடிய, கடின ஆயுத பயிற்சி. அந்த தன்னியக்க கடின ஆயுதங்களை தூக்கவே உடம்பில் தெம்பிருக்காது, ஆனால் மனசில் இருக்கும் தெம்பால் தூக்குவோம். சுடும்போது வரும் பின்னுதைப்பை தாங்க நெஞ்சிலே பலம் இல்லைவிட்டாலும், உறுதி இருந்தது. நிச்சயம் வெல்லுவோம் உறவுகளே.
கடந்த இரண்டு நாள் பயிற்சியின் போதும் எதுவுமே சாப்பிடவில்லை. அது கட்டாயம் இல்லை.. ஆனால் உண்மையில் சாப்பாடு இல்லை.
இரண்டு நாளைக்கு பிறகு இன்றைக்கு பின்னேரம் தான், எங்களின் முகங்களில் ஒரு சிறு புன்னகை. ஆமாம் எங்களுக்கு சாப்பாட்டு பொதி ஒன்றை தந்திருந்தார்கள்.மூன்று பேருக்கு ஒரு பொதி. அது தான் எங்களின் புன்னகைக்கான காரணம்.
அடுத்த நாட்களை பயிற்சியுடன் தாக்குப்பிடிக்க அந்த உணவு கட்டாயம் தேவை. எங்கே பயிற்சியில் ஏலாமல் விழுந்துவிட்டோம் என்றால் எங்களை அணியில் சேர்க்கமாடார்களோ என்ற பயம் வேற.
எங்கள் மக்களுக்காக, அவர்கள் விடிவு பெறும் வரை போராட வேண்டும். கடவுளே அதற்கான மனத்துணிவு என்னிடம் இருக்கு உடல் பலத்தை மட்டும் கொடு என்று ஒவ்வொரு நாளும் நான் வேண்டாத தெய்வமில்லை. அதன் பலன் தானோ என்னவோ இன்றைய சாப்பாட்டு பொதி.
அதற்குள் என்ன இருக்கு என்று அவிழ்த்து பார்க்கும் ஆசை எல்லாருக்கும் இருந்தாலும், குளித்து விட்டு வந்து ஆறுதலாக ரசித்து சாப்பிடுவோம் என்று அந்த எண்ணத்தை கைவிட்டோம்.
என்ன உறவுகளே..என்னடா இவன் ஒரு சாப்பாட்டு பொதிக்கு இவ்வளவு அலைகிறானே என்று யோசிக்காதீங்கள். அந்த நேரத்தில் அதன் பெறுமதி உங்களுக்கு என்ன என்று புரியாது...
குளித்துவிட்டு வந்து, மூவரும் சுற்றிவர அமர்ந்து அந்த பொதியை பிரித்தோம். பயறும், பருப்பும் கலந்த சோறு. காலையிலையே சுட சுட கட்டியிருப்பார்கள் போலும், கொஞ்சம் குழைந்து போய் இருந்தது. ஒரு ஆறு சிறங்கை தான் வரும்.ஆளுக்கு இரண்டு சிறங்கை என்று பங்கு போட்டு கொண்டோம்.
ஒரு சிறங்கை சோற்றை கையிலே எடுத்து வாயிலே வைக்க போகும் போது..
தம்பீ ..
என்று ஒரு குரல்.
எங்களை கட்டி போட்டது. அந்த கடற்கரை பொட்டல் வெளியில், சோற்றை வாயிலே வைக்கவிடாமல் எங்களை, அந்த குரல் நோக்கி திரும்ப வைத்தது.
அங்கே ஒரு நடுத்தர வயது அம்மா, கையிலே ஒரு குழந்தையுடன்..அந்த அம்மாவின் சேலை தலைப்பை பிடித்தபடி இன்னொரு குழந்தை. எலும்புகளால் மட்டுமேயான குழந்தைகள். அவர்களின் உடம்பில் தோல் எங்கே இருக்கு என்று ஒரு ஆராச்சியே நடத்தலாம். அந்த அளவுக்கு ஒடுங்கி போய் இருந்தார்கள். வயிறு பெருத்திருந்தது. தலை ஒடுங்கி இருந்தது.வாய், மூக்கு, கண்கள் எல்லாம் இலையான்கள் மொய்த்துகொண்டிருந்தன. கண்களில் ஒரு பசி ஏக்கம் அப்படியே தெரிந்தன.
வறுமையான ஆபிரிக்க நாட்டு குழந்தைகளை படங்களாக பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம். இன்று எந்த மக்களுக்காக நாங்கள் போராடுகிறமோ அந்த மக்களே..அந்த மக்களின் குழந்தைகளே , ஒரு தமிழ் குழந்தை எங்கள் கண்முன்னாலே..
நாங்கள் எங்கள் நெஞ்சுக்குள் படும் வேதனை கொஞ்சமாவது உங்களுக்கு புரிகிறதா உறவுகளே..
சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தை தன்னாலான மட்டும் கைகளால் தன்னில் மொய்த்து கொண்டிருந்த இலையான்களை கலைத்து கொண்டிருந்தான். அந்த அம்மாவின் கைகளில் இருந்த குழந்தையோ எதுவுமே செய்யாமல் பேசாமல் இருந்தது.
தம்பீ..மீண்டும் அதே குரல் எங்களை சுய நினைவுக்கு கொண்டுவந்தது. தம்பி சாப்பிட்டு ஆறு நாளாச்சு. எனக்கு வேண்டாம் தம்பி.. இந்த குழந்தைக்காவது கொஞ்ச சோறு தருவீங்களா.?
தம்பி மாட்டேன் என்று மட்டும் சொல்லிபோடாதேங்கோ..உங்கட காலிலே விழுந்து வேணும் என்றாலும் பிச்சையாக கேட்கிறேன்.. கொஞ்ச சோறு தாறீங்களா..?
சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்களை கேட்டால் அந்த மனசின் வலி ஜென்மத்துக்கும் ஆறுமா ..?
எந்த நெஞ்சையும் உருக்கும் அந்த பிச்சை குரலுக்கு உருகாமல் இருக்க நாங்கள் ஒன்று கல் ஜென்மங்கள் இல்லை தானே.. எங்கள் கைகளில் இருந்த உணவு எங்களை அறியாமலே, யாரையும் கேட்காமலே அந்த அம்மாவின் கைகளுக்கு மாறியது.
அவசரமாக கைகளில் இருந்த குழந்தையை அப்பாலே கிடத்திவிட்டு, சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தைக்கு, கைகளால் சோற்றை குழைத்து தீத்த தொடங்கினாள் அந்த அம்மா..
தீத்தியபடியே..தம்பி நீங்கள் நல்லா இருக்கணும் தம்பி. எனக்கு தெரியும் நீங்கள் இந்த வெய்யிலில் முதுகில் பாரங்களுடன் ஓடி திரிந்ததை நான் பார்த்தேன். உங்களுக்கு பசிக்கும் என்று நல்லா தெரியும். உடம்பிலே தெம்பிருந்தால் தான் நாளைக்கு சண்டைக்கு போகலாம் என்றும் எனக்கு தெரியும்.
என்ன செய்கிறது தம்பி.
பசி...... அது எங்களையும் மீறி உங்களை கேட்கவைத்துவிட்டது.
தம்பி. நீங்கள் வென்று தருவீங்கள் என்று தான் நாச்சிகுடாவில் இருந்து உங்கள் பின்னால் வந்தோம். இப்படி தான் எங்கட வாழ்க்கை முடியபோகுது என்றால் நாங்கள் குடும்பமாகவே பூச்சி மருந்தை சாப்பிட்டு அங்கேயே செத்திருக்கலாம் தம்பி.
இப்படி புருசனையும் பறிகொடுத்திட்டு, ஒரு பிடி சோத்துக்காக பிச்சை எடுகிறதை விட அது எவ்வளவோ மேல் தம்பி.
உண்மையான வசனங்கள்.. நெஞ்சை சுட்டன..உங்களுக்கு சுடவில்லையா உறவுகளே..
"அம்மா..நீயும் கொஞ்சம் சாப்பிடன்..."
அந்த பிஞ்சு குழந்தை கைகளிலே கொஞ்ச சோற்றை எடுத்து அம்மாவின் வாய்க்கு கிட்டே நீட்டியது. நெஞ்சையே கசக்கி பிழிந்தது. அந்த பசியிலும் அந்த பிள்ளையின் தாய் பாசம் உலகத்திலே எதுக்கும் ஈடு இணை இல்லை.
நாங்கள் அவர்களையே பார்த்து கொண்டிருந்தோம். எங்களை அறியாமலே எங்கள் கண்கள் குளமாகின. போராளிகள் அழ கூடாது என்று எங்கள் தளபதி அடிக்கடி சொல்லுவார்.
இதை பார்த்தும் நாங்கள் அழவில்லை என்றால் நாங்கள் மனுஷரே இல்லை..
"அம்மா .."
எங்களின் குரலுக்கு நிமிர்ந்து பார்த்தார் அந்த அம்மா..
என்ன தம்பி உங்களுக்கு கொஞ்சம் வேணுமா..மிச்சம் வைக்கட்டுமா ..தாய்மையின் பாசம் கொப்பளிக்க கேட்டார்...
"இல்லை அம்மா அந்த மற்ற குழந்தைக்கும் கொஞ்சம் கொடுக்கலாமே .." நா தழதழக்க கேட்டோம்.
அவர் சொன்ன பதில் எங்களை ஆயிரம் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.
எங்கள் மக்களுக்கு இப்படி ஒரு நிலை வர நாங்கள் என்ன செய்தோம்.
எங்கள் மக்கள் எங்கள் மேல் இவ்வளவு பாசம் வைக்க நாங்கள் என்ன செய்தோம்.
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும் இந்த மக்களுக்கு மத்தியில் பிறந்தது இந்த மக்களுக்காகேவே போராடணும் என்று தோணிச்சு.
உங்களுக்கும் தோணும் உறவுகளே ..ஏன் என்றால் நீங்களும் மனுசர் தான் உறவுகளே..
அந்த அம்மா சொன்ன பதில் ..
நான் அந்த பிள்ளையை காட்டி பிச்சை எடுக்கவில்லை தம்பி. ஏன் என்றால் அது நான் அந்த பிள்ளைக்கு செய்கிற துரோகம்.
காரணம்
இன்றைக்கு காலையில் தான் அந்த பிள்ளை பசி தாங்காமல் செத்து போச்சு தம்பி..
(தொடரும்)
பாகம் பதினேழு இங்கே அழுத்துங்கள்