Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. உணர்வுபூர்வமான அருமையான பதிவு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 'எனது மரணச் சடங்கு' என்று தலைப்பிட்டதால் நான் எழுதியதைப் போல அல்லது என் மகள் எழுதியதைப் போல அமைந்திருக்குமோ என்று நினைத்தேன் - மற்றவர்கள் உலகை நமது கண்ணாடி அணிந்து பார்ப்பது வேடிக்கையானது என்று தெரிந்தும் கூட. இருப்பினும் எங்கள் எழுத்துகளையும் கீழே இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/16mRbucbQJ/
  2. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - சுப.சோமசுந்தரம் மனிதர்களில் பெரும்பாலானோர் தம் மரணத்தைப் பற்றிப் பேசுவதை, ஏன் நினைப்பதையே விரும்புவதில்லை. "அது வரும்போது வரட்டுமே !" என்று கடந்து போவதோ அல்லது நழுவி விடுவதோ எளிது. ஒரு நாள் தற்செயலாக ஒரு அருமையான நிகழ்வைக் காணும் பேறு பெற்றேன். தாத்தா ஒருவர் தம் பேரனிடம், "எலேய், தாத்தா செத்துப் போனா எப்படி டான்ஸ் ஆடுவே ?" என்று கேட்டார். அவர்கள் சமூகத்தில் வயதானோர் சாவைக் (வெளிப்படையாக) கொண்டாடும் வழக்கம் இருக்கலாம். உடனே அப்பேரன் ஆடிக் காண்பிக்கவே, அந்தத் தாத்தா கைதட்டி ரசித்தார். தம் சாவைத் தாமே கொண்டாடும் இவரின் முதிர்ச்சி எனக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அன்று என் மரணத்தையும் கற்பனையில் ரசித்தேன். அந்த மரணத்திற்கு என்னைத் தயார் செய்வதற்கே எனது எஞ்சியுள்ள வாழ்க்கை என்று எனக்குத் தோன்றியது. எனது வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைத் தானம் செய்வதாய் எழுதிக் கொடுத்தேன் (என் மரணத்திற்குப் பிறகுதான் !). எனது நண்பரும் குருநாதர்களில் ஒருவருமான பேராசிரியர் ஒருவர் அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடச் சொன்னார். முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் நான் தனியன் இல்லையே ! பலர் இல்லாவிட்டாலும், இச்சமூகத்தில் சிலர் இதுபோல் எழுதிக் கொடுத்தது உண்டே ! என் நண்பர்கள் சிலரே உண்டு. எனவே பொதுவெளியில் நான் பதிவிடுவது சுய விளம்பரம் ஆகாதா ? இக்கேள்விகளுக்கு என் பேராசிரியர் பதிலோடு வந்தார், "எதை எதையோ பதிவிட்டு மக்கள் சுய விளம்பரம் தேடும் காலகட்டத்தில் இது இன்னொரு சுய விளம்பரமாக இருந்து விட்டுப் போகட்டுமே !இதனால் பெரும் பயன் ஒன்று உண்டு. மிகவும் சாதாரண விஷயங்கள் கூட நம்மில் பலருக்குப் பல நேரங்களில் தோன்றுவதில்லை. மற்றவர் செயல்படுத்துவதைப் பார்த்த பின்பே நாமும் செய்யலாமே எனத் தோன்றுகிறது. அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே !". உண்மைதான். சமீபத்தில் அநேகமாக எல்லோருக்கும் தோன்றும் ஒரு சாதாரணச் செயல்பாட்டிற்கு சாட்சிக் கையொப்பமிட எனது இன்னொரு குருநாதரை அழைத்தேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் வந்தது மட்டுமல்லாமல் தாமும் அது போன்று விரைவில் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். என்னை விடப் பத்து வயது மூத்த என் குருவானவர்க்கு நான் வழிகாட்டியாய் இல்லாவிடினும், ஒரு நினைவூட்டலாய் அமைந்ததை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. எனவே உடல் தானத்தின் மூலமாக இறுதிச் சங்கு வேண்டாம் என முடிவெடுத்தபின் சுய விளம்பரம் எனும் சங்கை எடுத்து நானே முழங்கி விடுகிறேனே ! இந்த உடல் தானம் தொடர்பில் மேலும் ஒரு அனுபவப் பகிர்வு உண்டு. நான் எழுதிக் கொடுத்த உடல் தானம் சிறப்பு என்றால் அச்சிறப்பின் பெரும்பகுதி என் மனைவி, மக்களையே சாரும். என் உடல் தானத்திற்கு அவர்கள் எழுதித் தந்த சம்மதம் மலையினும் மாணப் பெரிது. இறை நம்பிக்கையுள்ள என் மனைவி அந்த நம்பிக்கை இல்லாத என்னிடமும் பிள்ளைகளிடமும் தன் கருத்தைத் திணிக்க முற்படுவதில்லை. எங்களை எங்களின் கருத்துகளோடும் முன்னுரிமைகளோடும் ஏற்றுக்கொண்ட என் மனைவி எங்களுக்கான வரம். அவள்தன் சாமியால் (!) எங்களுக்காகவே படைக்கப்பட்டு இருப்பாளோ என்னவோ ! எனவே என் கருத்தையும் உணர்வையும் அறிந்து என் உடல் தானத்திற்கு அவள் எழுதிக் கொடுத்த சம்மதம் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. பகுத்தறிவாளர்களாகவே வளர்ந்த எனது இரு பெண் பிள்ளைகளும் முதலில் தயக்கம் காட்டியது நான் எதிர்பாராத ஒன்று. இறையிலும் மதத்திலும் நம்பிக்கை இல்லாத அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முதலிய சம்பிரதாயங்கள் ஒரு பொருட்டே அல்ல. அவர்களது தயக்கத்திற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது, அவர்கள்தம் தந்தையின் மரணத்தை இப்போதே நினைத்துப் பார்ப்பதினால் ஏற்படும் அதிர்வு; இரண்டாவது, தம் தந்தையின் உடல் கூறு போடப்படுவது அவர்கள் நினைத்தே பார்க்க விரும்பாதது. இவற்றில் முதலானதை நான் எளிதாய் எதிர் கொண்டேன். "இவ்வாறு எழுதித் தரும் மகிழ்ச்சியில் நான் நூறு வருடங்கள் வாழலாம். உதாரணமாக ஒருவர் தம் பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்த பின்பு உடனே மரணிக்க வேண்டும் என்பதில்லை; எச்சரிக்கையாய் இருக்கிறார் என்று பொருள்". இரண்டாவது காரணத்திற்குப் பின்வருமாறு கேட்டேன், "தந்தையின் இறந்த உடல் செந்தழலில் வேகும்போது உங்களுக்குச் சுடாதா ? உடல் வேகும்போது சுருண்டு கொள்ளுமே, அப்போது சுடுகாட்டில் வெட்டியான் எனப்படும் அத்தொழிலாளி கழியால் அடித்துச் சமன் செய்வாரே ! அப்போது உங்களுக்கு வலிக்காதா ? மின் மயானம் எனின் உங்கள் உடலில் அந்த மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படாதா ?". போதாக்குறைக்கு எனது தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களை என் பிள்ளைகளிடம் பேசச் சொன்னேன். அவர் மீது அவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. "மண்ணோ நெருப்போ உண்ணப் போகும் உடலை வைத்து மாணாக்கர் சிலர் படித்துவிட்டுப் போகட்டுமே ! சமூகத்திற்கு அவர்கள் கற்றது பயன்படும். அவர்கள் படித்தபின் மீண்டும் அவ்வுடல் மண்ணில் புதையுண்டு மரத்திற்கு உரமாகும். ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தபின் அழியும் உடலுக்கு இதற்கு மேல் என்ன மரியாதை இருக்க முடியும் ?" - இவை அவர் பேசியவை. இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டு என் பிள்ளைகளும் மன நிறைவோடு தம் சம்மதத்தை எழுதித் தந்தார்கள். நான் கற்றவையும் பெற்றவையும் நன்றாகவே அமைந்த நிறைவு எனக்கு. இந்த அனுபவப் பகிர்வு உங்கள் அனைவருக்கும் உதவும் எனும் நோக்கத்திலேயே ! எல்லாம் சரிதான். ஆனால் இறை நம்பிக்கை, மதச் சடங்குகளில் நம்பிக்கை என நம்பிக்கைகளிலேயே வாழும் மனிதர்களுக்கும் இது தொடர்பில் சமாதானம் உண்டா ? உண்டு. இறந்தபின் நீங்கள் உங்கள் இறைவனை சந்திக்க அல்லது இறைவனிடத்தில் கரைந்திட இந்த உடலை எடுத்துக் கொண்டா செல்வீர்கள் ? உங்கள் கூற்றின்படி உங்கள் ஆன்மாதானே இறை தேடும் ? இந்தப் பாழும் உடலை வைத்துக்கொள்ள முடியாமல்தானே அதனை மண்ணில் புதைக்கிறீர்கள் அல்லது சிதையில் தள்ளுகிறீர்கள் ? எனவே யாராக இருந்தாலும், வாழும்போது ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்தோமோ என்னவோ, செத்த பின்பு உறுதியாய் ஒரு பயனுள்ள புத்தகமாய் அமைவோமே ! உடல் தானம் எழுதிக் கொடுத்தபின் இந்த மன நிறைவுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்வோமே ! https://www.facebook.com/share/p/1Xm7GdHGzi/
  3. அவலத்தை விவிலியம், சிலம்பு, கலித்தொகை என்று கலந்து அளித்த தங்களின் சான்றாண்மையை எடுத்து இயம்புதல் எளிதன்று. தங்களின் சொல்லாட்சியிலும், கருத்துச் செறிவிலும், அவற்றின் வழி கடத்தப்படும் அவலச் சுவையிலும் அசைவற்ற சிலையாகிறோம்.
  4. ஆட்சியில் இருந்தபோது அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லையே ? பெரும்பான்மை இனத்தவரின் வெறுப்பு அரசியலில் நிர்ப்பந்திக்கப்படும் எந்தவொரு இனக்குழுவும் தனிநாடு கேட்டுப் போராடுவது உலக நியதிதானே ! சரி, தனிநாடு இல்லாவிட்டாலும் சுயாட்சி அதிகாரத்தோடு தனிமாநிலத்துக்கான நகர்வினை ஏற்படுத்தித் தமிழினம் தன் அடையாளத்தோடும் உரிமைகளோடும் வாழ வழி செய்திருக்கலாம். அதிகாரத்தை ஒன்றியத்தில் குவித்து மையப்படுத்தும் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எந்த நாடும் விதிவிலக்கில்லை போலும் - இலங்கை, இந்தியா, பழைய சோவியத் யூனியன் .....................
  5. உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம் பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறது. இது தொடர்பாகப் பொதுவான புரிதல் என்னவென்றால் தலைவியை சொல்லிக் கொள்ளும் அளவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தலைவன் பிரியும்போது தலைவிக்குப் பசலை நோய் தோன்றிப் பிறரறிய அவளது வாட்டத்தை அறிவிக்கும் என்பதாம். ஆனால் வள்ளுவனோ ஒரு படி மேற்சென்று, அணைத்தலின் நெகிழ்வில் ஏற்படும் பிரிவைக் கூடத் தாங்கவொண்ணாத தலைவியின் கண்களில் பசலை படர்ந்ததாய்க் கூறி நம்மை நெகிழ வைக்கிறான். அஃது உயர்விலும் உயர்வுநவிற்சி. "முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்" (குறள் 1239; உறுப்பு நலன் அழிதல்) குறளின் பொருள் : அணைத்தலுக்கிடையே (முயக்கிடை) குளிர்ந்த காற்று அவர்களை ஊடறுத்துச் செல்ல (தண்வளி போழ), அப்பேதையின் குளிர்ந்த பெரிய கண்களைச் (பெருமழைக் கண்) சுற்றிப் பசலை படர்ந்ததாம். அடுத்து நாம் கையிலெடுக்க எண்ணுவது 'இடை'யில் வந்த உயர்வுநவிற்சி. மங்கையவள் மெல்லிய இடையினள் எனச் சொல்ல, அவள்தன் எடையைத் தாங்க இயலாத இடை பற்றிப் பேசும் பரவலான உயர்வுநவிற்சி. "தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம்மெல் ஆக நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின" (குறுந்தொகை பாடல் 159 ன் வரிகள்) என்று தோழி கூற்றாக வரும் குறுந்தொகைப் பாடல் வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன. பாடல் வரிகளின் பொருள் : தழை ஆடையையே (தழையணி) தாங்கவொண்ணாத (தாங்கல் செல்லா), அடிவயிற்றின் (அல்குல்) மீது அமைந்த இடைக்குத் (நுசுப்பிற்கு) துன்பம் அளிப்பதாக (எவ்வமாக) அழகிய (அம்) மெல்லிய (மெல்) மார்பில் (ஆகம்) நிறைவாகப் (நிறைய) பெருத்துத் (வீங்கி) திரட்சியுடன் தேமல் போன்ற நுண்ணிய வரிகளுடன் திகழும் முலையானது (வரி முலை) குங்குமச் சிமிழை (செப்புடன்) ஒத்து இருந்தது (எதிரின). அவளது திரண்ட மார்பகத்தின் எடை தாங்காத இடை பேசப்பட்டுள்ளது. அடுத்து, "உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு அபயம் அபயமென அலற நடைபயிலும் அரிவை மீர்" (கலிங்கத்துப் பரணி; பாடல் 58) என்று கலிங்கத்துப் பரணியிலும் ஒடியும் இடை காணலாம். பாடற் பொருள் : முலையிரண்டும் (உபய தனம்) அசைகையில் இடை ஒடியுமாதலால் நடையை விட்டொழியும் என்று கூறும் ஒளி பொருந்திய காற்சிலம்பு (ஒண் சிலம்பு), 'அபயம் அபயம்' என்று அலறும் அளவு நடை பயிலும் அரிவையரே !(பெண்ணின் ஏழு பருவ நிலைகளில் ஒன்று; 20-25 வயதினர்). பக்திப் பாடலும் இடையை விட்ட பாடில்லை. இதோ தாயுமானவர் பாடல் : "மின்போலும் இடை ஒடியும் ஒடியும் என மொழிதல் போல் மென்சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள்" (தாயுமானவர் பாடல்கள் - 12 120/1). பாடற் பொருள் : அழகிய மடந்தையரின் (மடமின்னார்கள்) வீங்கிப் புடைத்து விழும் முலைகளின் (கொங்கை) சுமையினால் மின்னல் போன்ற இடை ஒடியும் ஒடியும் என்று அறிவிப்பது போல் அவர்களின் மென்மையான காற் சிலம்புகள் ஒலிக்கின்றன (ஒலிகள் ஆர்ப்ப). இதுகாறும் நாம் கண்ட உயர்வுநவிற்சி உடல் எடையைத் தாங்காத இடை பற்றியது. வழக்கம்போல் வள்ளுவன் ஒரு படி மேற்சென்று மலர்க் காம்பின் எடை கூடத் தாங்காத இடையைக் குறிப்பது உயர்விலும் உயர்வுநவிற்சி. "அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு நல்ல படாஅ பறை" (குறள் 1115; நலம் புனைந்துரைத்தல்) மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு) – இடை ஒடிந்ததற்கு – நல்ல பறை படவில்லை (ஒலிக்கவில்லை). அஃதாவது சாப்பறை (இழவு கொட்டு) ஒலித்தது. எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை (ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து, கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலேய் ! தனியாவா தூக்குத ? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் மேற்கண்ட குறளில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காண்கிறோம். பாமரன் கோடு போட்டால் பாவலன் ‘ரோடு’ போட வேண்டாமா ? அதுதானே இலக்கிய இன்பம் ! பின் குறிப்பு : 'அனிச்சப் பூ கால் களையாள்' குறள் எனது கட்டுரைகளில் இதற்கு முன் எடுத்தாண்டதுதான். கட்டுரையிலுள்ள குறுந்தொகை, கலிங்கத்துப் பரணி பாடல்கள் முகநூல் அன்பர் கார்த்திக் அவர்களால் கவனம் பெற்றேன். எனவே எனது இக்கட்டுரையை அவருக்கே அன்புடன், நன்றியுடன் காணிக்கை ஆக்குகிறேன்.
  6. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான். அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம். பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன் எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல.
  7. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் என் இளம் பிராயத்தில் என் ஆச்சி (பாட்டி) அடுத்த வீட்டு ஆச்சியிடம் என் சேட்டைகள் குறித்து அங்கலாய்த்தாள், “ஒம் பேரன் என்னா சேட்டை பண்ணுதாங்கே !”. நிஜத்தில் நான் இவளுக்குத்தான் பேரன். என்னை அவள் பேரன் ஆக்கியது அவர்களது நட்பின், உறவின் நெருக்கத்தைக் காட்டுவது. சில காலம் கழித்துத் தமிழாசிரியர், கம்பனின் யுத்த காண்டத்தில் “குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம் புகலருங் கானம் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை" என இராமன் வீடணனுக்குச் சொன்னதை எடுத்துரைத்த போது சத்தியமாக என் ஆச்சிதான் நினைவுக்கு வந்தாள். தயரதனின் நான்கு புதல்வரோடு குகனை ஐந்தாவதாக, சுக்ரீவனை (குன்று சூழ்வான் மகன்) ஆறாவதாக, அன்பினால் எதிரிக் கோட்டையிலிருந்து வந்த வீடணனை ஏழாவதாக வரிசைப்படுத்துகிறான் இராமன். அத்தோடு நின்றானில்லை. “அரிய கானக வாழ்வை எமக்குத் தந்து மென்மேலும் புதல்வர்களால் பொலிவு பெற்றான் உன் தந்தை (நுந்தை)" என்கிறான். வீடணனை உடன்பிறப்பாய் ஏற்ற இராமன் தன் தந்தையை 'உன் தந்தை' எனச் சொல்லி உடன்பிறப்பு எனும் உறவை உடனே உறுதிப்படுத்துகிறான். தன் பேரனை 'உன் பேரன்' எனத் தோழியிடம் சொன்ன என் ஆச்சி கம்பனை அறிந்தாளில்லை. கம்பன் அவளை அறிந்திருக்கிறான் என்பதை உணர்ந்து வியந்துதான் போனேன்.
  8. இலக்கிய உறுபொருள் - சுப.சோமசுந்தரம் எனது பள்ளித் தோழர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் 'தினம் ஒரு தமிழ்ப் பாடல்' எனும் தலைப்பில், எனது சிறிய இலக்கிய வாசிப்பின் அடிப்படையில், தற்போது சுருக்கமாகப் பதிவிடுகிறேன். அங்கு இன்றைய என் பதிவை இங்கும் பகிரத் தோன்றியது. இன்றைய இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது. மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812 இல் "வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்" என்று சுக்ரீவனிடம் நட்பு பாராட்டுகிறான் இராமன். பாடற் பொருள் : விண்ணுலகானாலும் மண்ணுலகானாலும் உன்னைப் பகைத்தவர் (செற்றவர்) என்னையும் பகைத்தார்; தீயவராய் இருப்பினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர். இலக்கியம் அறிந்தோர் ஒரு பாடலை மேம்போக்காகப் பொருள் கொள்வதில்லை. 'தீயரே எனினும்' என்றது நட்பின் திண்மை பற்றிக் கூற வந்த உயர்வுநவிற்சி. அவ்வளவே ! மேலும் அது தேர்ந்து தெளிந்த நட்பின் மீது உள்ள நம்பிக்கை. அத்தகு நண்பன் தீயோரை நட்பாகக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளடக்கியது. "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்" (குறள் 580) என்ற வள்ளுவமும் நட்பின் வலிமையும் நம்பிக்கையும் பற்றியது. மேலும், தேர்ந்து தெளிந்த நண்பன் தந்ததோ சொன்னதோ மனதிற்கு ஏற்புடைத்தாய் இல்லையெனினும் அதனை ஏற்றமைவது நாகரிகம் என்பதன் குறியீடே குறளில் வந்த நஞ்சும் நாகரிகமும். "முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்" (நற்றிணை பாடல் 355; வரிகள் 6 & 7) என்று மேற்சொன்ன குறளுக்கு நல்ல இணையாக நற்றிணை பகர்வதும் உவந்து நோக்கத்தக்கது.
  9. தெரிவு - சோம.அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும், சக்தி என்பான்! குலசாமி என்பான்! தாயே துணை என்பான்! மனைவியே தெய்வம் என்பான்! மகளே உலகம் என்பான்! கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்பான்…! என்ற தோழர் மதியின் கவிதையுடன் கதிரவனும் தகிக்கத் தொடங்கியிருந்தது. இதை வாசித்ததும்தான் உவளுக்குத் திடீரென நினைவிற்கு வந்தது. தேநீர் மேசையில் நீட்டியிருந்த கால்களைச் சட்டென மடக்கிக் கீழே தொங்க விட்டுச் சிறு பதற்றத்திற்குள்ளானாள். இந்த மாதம் உவளுக்கு மாதவிடாய் வரவில்லை. அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து நாள்காட்டியில் நாட்களைக் கணக்கிட்டாள். பத்து நாட்கள் தள்ளிப் போயிருந்தது. இது முற்றிலும் வழக்கமற்ற ஒன்று. உவன் எழுந்துவிட்டதைக் கூட பொருட்படுத்தாத அளவிற்கு மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஈர முகத்தைத் துடைத்தவாறே உவள் அருகில் வந்து அமர்ந்தான். “காபி எடுத்துட்டு வரேன்” என்றாவறே அடுப்படிக்குச் சென்றாள். கூறாமை நோக்கக் குறிப்பறியும் உவனிடம் இருந்து தற்காலிகமாகத் தப்பிச் சென்றாள். காபி கொண்டு வந்தவளிடம், “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான். “ஒண்ணுமில்லையே” என்று சமாளிக்க முயன்றவளை “வழக்கமான புன்னகையைக் காணோமே” என்று மடக்கினான். நெஞ்சம் கடுத்தது காட்டும் தன் முகத்தில் செயற்கையாக முகமலர்ச்சியைக் கொண்டு வர முனைந்தவளிடம் “Good try! ஆனா ஒட்டவே இல்ல. இப்ப என்னன்னு சொல்லப் போறியா? இல்லையா?” என்று காபியின் ஒரு மிடறை உள்ளிறக்கியவாறே கேட்டான். சொன்னாள். “வாவ்” என்று விளையாட்டாகச் சிரித்தான். உவளது இதயத்துடிப்பை அது இன்னும் அதிகரித்தது. மேலும் பேச்சைத் தொடர விரும்பாமல் காலை உணவைத் தயார் செய்யச் சென்றாள். “பாத்து… மெதுவா நட” என்று அக்கறையான தொனியில் உவன் கிண்டலாகக் கூற செல்லமான கோபத்துடன் உவனைத் திரும்பிப் பார்த்தாள். அடுப்படி அலமாரியில் கொஞ்சம் உயரத்தில் இருந்த சட்டியை எட்டி எடுக்க முற்பட்ட உவளிடம், “தள்ளு… நான் எடுத்துத் தர்றேன். இந்த நேரத்துல இப்பிடில்லாம் எக்கக் கூடாது” என்று கண்களைச் சிமிட்டியவாறே சட்டியை எடுத்துக் கொடுத்தான். உவளும் பதிலுக்கு விளையாட்டாக உவனது வயிற்றில் லேசாகக் குத்தினாள். இதற்குள் உவர்களது மூன்று வயது மகள் “அம்மா…” என்று கண்களைக் கசக்கியவாறே படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள். தூங்கி விழித்ததில் காலைக் கதிரொளியினால் அக்குட்டிக் கண்கள் இன்னும் கூசிக் கொண்டிருந்தன போலும். சுருங்கியிருந்த கண்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்குப் பழகிக் கொண்டிருந்தன. ஓடிச் சென்று மகளை வாரி அணைத்தவள், “நல்ல தூங்குனியாடா ராஜாத்தீ? முகம் கழுவிக்கிறீங்களா, தங்கம்? அப்புறம் பால் குடிக்கலாம்” என்றவாறே கொஞ்சியபடி குழந்தையைத் தூக்கினாள். “ஹே! இந்த மாதிரி நேரத்துல வெயிட்லாம் தூக்கக் கூடாது” என்று மீண்டும் உவளைச் சீண்டினான். “ப்பா..” என்று அழுவதைப் போல் முகத்தைச் சுளித்தவாறே சிரித்தாள். “ஓ! அதான் கொஞ்ச நாளா முகம் பளிச்சுன்னு இருக்கா? அப்பவே சந்தேகப்பட்டேன்” என்று வம்பிழுத்தான். “சும்மாதான் இருங்களேன் ப்பா” என்றவாறே குழந்தைக்குப் பல் தேய்த்துவிட அழைத்துச் சென்றாள். அனைவரும் குளித்துக் கிளம்பி காலை சிற்றுண்டி நடந்து கொண்டிருந்தது. “நல்லா சாப்பிடுடா… இப்போதான் நல்லா சாப்பிடணும். தெம்பு வேணுமில்ல?” – உதட்டின் ஓரம் நெளிந்த சிரிப்பை அடக்கி உவளிடம் சொன்னான். இருந்த அவசரத்தில் குழந்தைக்கு ஊட்டிவிட்டபடியே உவனை லேசாக முறைத்தாள். குழந்தையைப் பள்ளியில் விட்ட பின் உவளை நூலகத்தில் விடும் வழியில் வழக்கத்திற்கு மாறாக வேண்டுமென்றே நல்ல குத்துப்பாட்டாக மகிழுந்தினுள் ஒலிக்க விட்டு குஷியான மனநிலையில் ஆடியபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். நூலகம் வரை உவன் மீது படர்ந்திருந்த உவளது உக்கிரமான பார்வையைக் கண்டு கொள்ளாதது போலவே பாடல் வரிகளை உரத்துப் பாடித் தன் மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தினான். “பாத்து… பத்திரம். எதுவும்னா கூப்பிடு” உவனது வார்த்தைகள் காதில் விழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல் இறங்கிச் சென்று விட்டாள். அன்று மதியம் பள்ளி முடிந்து குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. குழந்தைக்கு விளையாட்டு காட்டியவாறே சோறூட்ட முயன்றாள். முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. பல வகையான யோசனைகள் உவளை இயங்கவே விடவில்லை. இத்தலைமுறையினருக்கே உண்டான கூகுள் வியாதி உவளையும் அன்று பீடித்தது. என்னவெல்லாமோ தேடினாள். பப்பாளி பழச் சாறு, அன்னாசிப் பழச் சாறு எனத் தொடங்கி தாம் வசிக்கும் மாகாணத்தில் பன்னிரண்டு வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டப்படி பிரச்சனை இல்லை என்பது வரை கன்னா பின்னாவென தேடினாள். திடீரென, “அய்யோ! என்ன செய்து கொண்டிருக்கிறேன்? உவன் எவ்வளவு ஆசையாக இருக்கிறான் இன்னொரு குழந்தைக்கு? நான் ஏன் இப்படி….? ச்சை” என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னை நினைத்து கொஞ்சம் அருவருப்பு கூட மேலிட்டது. “உடன்பிறப்புன்னு கூட ஒண்ணு இருந்தா நாள பின்ன ஒண்ணுக்கொன்னு ஒத்தாசையா ஆதரவா இருக்கும்ல” – இதைச் சொல்பவர்கள் அனைவரும் தங்களது உடன்பிறப்புக்களுடன் ஒட்டும் உறவுமாகவா இருக்கிறார்கள்? எனவே வருங்காலத்தில் இதற்குப் பெரிய அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. நல்ல உடன்பிறப்பு அமைவது உறுதியல்லவே! ஆனால் நமது தெரிவு நல்லதொரு கேண்மையை நிச்சயம் கொண்டு வரும். அது உடன்பிறப்பின் இடத்தை மிக அழகாகச் சமன் செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம். தனக்குள் முன்னும் பின்னுமாக முட்டி மோதிக் கொண்டிருந்த எண்ணவோட்டங்களினால் பொழுது மாலையைச் சூடிக் கொண்டதை உவள் உணரவே இல்லை. உவனால் எழுந்த கதவு தட்டலின் ஒலிதான் உவளை உசுப்பியது. கதவைத் திறந்ததும், “தூங்கிட்டு இருந்தியா?” என்று கேட்டான். இல்லை என்பதாகத் தலை ஆட்டினாள். “நல்லா ஓய்வெடுக்க வேண்டியதுதான? அதான் உடம்புக்கு நல்லது” – மறுபடியும் துவக்கினான். “ப்ச்” என்றபடியே திரும்பிச் சென்று தேநீர் தயாரிக்கலானாள். உவன் உடை மாற்றிக் கொண்டு வரவும் தேநீர் கோப்பையை உவன் கைகளில் தந்தாள். “நீ பால் குடிச்சியா? இங்க வா… வந்து உக்காரு. நான் போட்டுத் தரேன்” – இப்போது உவளுக்கு நிஜமாகவே உதறத் துவங்கியது. அதை மறைத்துக் கொண்டு, “இப்போ எதுக்கு திடீர்னு இவ்ளோ அக்கறை?” என்றாள். “திடீர்னு ஒண்ணும் இல்லையே. எப்பவும் உள்ளதுதான்” என்றான். “ஒருவேளை…” – அதற்கு மேல் தொடர சரியான வார்த்தைகளின்றி உணர்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். “ஹ்ம்ம்?” என்று கோப்பையிலிருந்து பார்வையை அகற்றி நிமிர்ந்து பார்த்தான். “உங்களுக்கு நிஜமாவே இப்போ இன்னொரு குழந்தை வேணுமா?” – என்னத்தைப் போட்டு பூசி மெழுகி…? பளிச்செனக் கேட்டு விட்டாள். “இருந்தா நல்லாதான் இருக்கும். ஏன்? உனக்கு வேண்டாமா?” “‘இப்போதைக்கு’ வேண்டாம்” – ‘இப்போ’வில் உவள் தந்த அழுத்தம் உவனைச் சென்றடைந்ததா என உவனது கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். “ஹ்ம்ம்ம்… சரிடா” என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி முடித்துவிட்டான். மேற்கொண்டு அதைப் பற்றி உவன் பேச விரும்பவில்லையா அல்லது பேச ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டானா என உவளுக்குப் புரியவில்லை. “ஒருவேளை நான் இப்போ உண்டாயிருந்தா என்ன பண்றது?” – தயங்கியபடியே கேட்டாள். “அத நீதான் சொல்லணும்” – தேநீரைக் காலி செய்தபடியே மிகவும் நிதானமாகச் சொன்னான். எப்படி இவனால் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது? “அது வந்து…. இப்போதான் பாப்பா அவளோட வேலைய கொஞ்சம் தன்னால செய்யப் பழகுற பருவத்துக்கு வந்துருக்குறா… அதுக்குள்ள இன்னும் ரெண்டு மூணு வருஷம் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க கொஞ்சம்….. அதுவும் நான் இன்னும் வேலைக்கும் போகல…” - ஆங்காங்கே நிறுத்தியும் வார்த்தைகளை விழுங்கியும் கூறினாள். “அததான் சொன்னேன்… உன் முடிவுதான்னு. ஒருவேளை நீ இப்போ மாசமாயிருந்து, கலைக்குறது உன் உடம்புக்கு நல்லதில்ல, அதனால இப்போ பெத்துக்குறத தவிர வேற வழி இல்லன்னு மருத்துவர் சொல்லும் அளவிற்கான சூழல் இருந்தாலும் கவலைப்படாத. உன்னையும் ரெண்டு பிள்ளைகளையும் நான் பாத்துக்குறேன். உனக்கு பிடிச்சதைச் செய்ய எந்தத் தடையும் இல்லாம ஏற்பாடு பண்ணித் தரேன். மருத்துவப் பரிசோதனைகள் அப்படி சொல்லாத பட்சத்துல எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னு ஆசை இருக்குங்குறதுக்காகவெல்லாம் நீ பெத்துக்கணும்னு அவசியம் இல்லை. உன் உடம்புதான் முக்கியம்.” என அதீத புரிதலுடன் பேசினான். “நீங்க வேற காலைல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… அதான்” “அடேய்! அது சும்மா உங்கிட்ட ஒரண்ட இழுத்துட்டு இருந்தேன். அதெல்லாம் பெருசு பண்ணாத” என்று உவளுக்குச் சாதகமாக ஆறுதலளித்தான். தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களை எடுத்துரைப்பது அத்தனை எளிதல்ல என உணர்ந்தாள். இன்னொரு குழந்தை பெற்றும் கொள்ளும் எண்ணம் உவளுக்குப் பெரிதாக இல்லை. அதிலும் இப்போதைக்குக் கண்டிப்பாக இல்லை. இருந்திருந்து இப்போதுதான் சிறிது மூச்சு விட நேரம் கிடைத்தாற்போல் இருக்கிறது. பிள்ளை பெறுவதைப் பற்றி நினைத்தாலே…. வயிற்றைத் தள்ளிக் கொண்டு மூச்சு வாங்கியபடியே ஒன்பது மாதத்தையும் கழித்தது; நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, குமட்டல், குறுக்கு வலி; சுறுசுறுப்பு என்ற சொல்லே மறந்தாற்போல் எப்போதும் மந்தமாகவே இருந்தது; தூங்கித் தூங்கி விழுந்தாலும் சரியான தூக்கம் இன்மையால் அவதிப்பட்டது; பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம்; அகச்சுரப்பிகள், இசைமங்கள்(hormones) என எதுவுமே தன் கட்டுக்குள் இல்லாது தாறுமாறாக இயங்கியது; கர்ப்பப்பை கட்டிகளினால் ஏற்பட்ட அளவிற்கு அதிகமான இரத்தப்போக்கு; அதீத சோர்வு; தன் உடலைக் கவனிக்கக் கூட நேரம் இல்லாமல் போனது; தற்போது வரை குழந்தையின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பது; கருவுற்றதில் இருந்து தற்போது வரை உடல்நிலையாலோ நேரமின்மையாலோ வாசிக்கவும் படிக்கவும் இயலாமல் போனது - என எல்லாமே ஒரு கணம் அகக்கண்ணில் வந்து பயமுறுத்தின. தன் ஆசைக்கும், நீளமான நாக்குகள் பலவற்றைக் கொண்ட ஊர் வாயை அடைக்கவும் என கண்மணியாக ஒரு பிள்ளை பெத்தாயிற்று. இவளை நன்கு படிக்க வைத்து ஆளாக்கினாலே போதும்தான். தான் வேலைக்குச் சென்று ஓரளவு சொந்தக் காலில் ஊன்றி நின்று தனக்கான அடையாளத்தை உருவாக்கிய பின், பொருளாதாரச் சூழலோடு உடலும் மனதும் தயாரான பின் உவனது ஆசைக்காக வேண்டுமானால் பின்னர் இன்னொன்று பெற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என நினைத்தாள். அதை விடுத்துச் சும்மா சும்மா குட்டி போட்டுக் கொண்டு அம்மா மற்றும் தங்கையின் உதவியை நாடுவது கொஞ்சம் வெக்கங்கெட்டத்தனமாகவே தோன்றியது உவளுக்கு. வழக்கம்போல் மனக்குழப்பத்தின் போது தன்னுடனேயே பேசுவதைப் போன்ற உணர்வைத் தரும் தங்கையை நாடினாள். அவள் இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு தெளிவான மனநிலையை எட்டவும் உதவுவாள். “வாந்தி, தலைசுத்தல் மாதிரி ஏதாவது இருக்கா?” எனக் கேட்டாள் தங்கை. “மொதல்ல உண்டாயிருந்தப்பவே அதெல்லாம் பெருசா இல்லையே. குமட்டல் மட்டும்தான இருந்துச்சு? நேத்து ராத்திரி சாப்பிட்டு முடிச்சவுடனே அப்போ மாதிரியே குமட்டுச்சு” “Pseudocyesis, maybe” “அப்பிடீன்னா?” “Phantom pregnancyயா கூட இருக்கலாம். சோர்வா இருக்கா?” “இல்ல. ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு pregnancyயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதெல்லாம் வச்சு சொல்ல முடியாதுல்ல?” அதன் பிறகு உவளது மனக்கலக்கம் குறித்து எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டுத் தங்கை சொன்னாள் – “இங்க பாரு. இப்போ மறுபடியும் நீ உண்டானா அது எங்களுக்கு சந்தோஷமான விஷயம்தான். சந்தோஷம் மட்டும்தான் எங்களுடையது. உன் வலியை எங்களால வாங்கிக்க முடியாது. உனக்கான எல்லா உதவியை மட்டும்தான் நாங்க செய்ய முடியும். மேலும் குழந்தைங்குறது ரொம்பப் பெரிய பொறுப்பு. அதுக்கு நீ தயாரான்னு யோசிச்சுக்கோ. உன்னை மட்டும் வச்சி யோசி. இதுல சரி தப்புன்னு ஒண்ணுமே கிடையாது. நீ உன்னையும் உன் வளர்ச்சியையும் தேர்ந்தெடுக்குறது சுயநலம் கிடையாது. ஒரு பொண்ணோட உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவளைத் தவிர சுற்றியிருக்கும் வேறு ‘யாருக்கும்’ கருத்து சொல்லவோ முடிவு எடுக்கவோ உரிமை கிடையாது… கணவனே ஆயினும் கிடையாது! உன் விஷயத்துல அத்தானே உன் பக்கம்தான் நிக்குறாங்க. தைரியமா முடிவு எடு. புரிஞ்சுப்பாங்க” எல்லோருக்கும் எப்படி இவ்வளவு லேசான விஷயமாகத் தோன்றுகிறது இது? இருவரும் உவளது மூளைக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களைத் தான் கூறிக்கொண்டிருந்தார்கள். அதை மனதிற்குக் கடத்துவதுதானே பெரும்பாடு! Pregnancy Kit வாங்கிப் பரிசோதித்துப் பார்க்கும் மனத்திடம் சுத்தமாக இல்லை. இரண்டு நாட்களாக உழன்று கொண்டே வந்தவள் மிகவும் தயங்கியபடியே அலுவலகத்தில் இருக்கும் உவனை அலைபேசியில் அழைத்தாள். “ப்பா!” “ம்ம். சொல்லுடா…” – மறு முனையில் பரபரப்பான சூழ்நிலையிலும் அழைப்பிற்குப் பதில் தந்தான் உவன். “கொஞ்சம் வரும்போது பப்பாளி வாங்கிட்டு வர்றீங்களா?” “ஹ்ம்ம். சரி டா. நான் கடைக்குப் போய்ட்டு வீடியோ கால் பண்றேன். எதுன்னு நீயே பாத்துச் சொல்லு” – எவ்விதத் தடுமாற்றமும் இன்றி மிக இயல்பாகக் கூறினான். அது உவளுக்கு இன்னும் வயிற்றைப் பிசைந்து கொண்டு வந்தது. மேசையில் பப்பாளி இருந்த பையைத் திறந்து கூடப் பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் கழிந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் வாங்கி வரச் சொல்லிவிட்டாள். ஆனால் அதன் அருகே செல்வதற்கு மனம் கொஞ்சமும் ஒத்துழைக்காமல் வெதிர் எடுத்தது. ஏதோ கொலை பாதகம் செய்யத் துணிந்து விட்டதைப் போல் மருண்டாள். “ஒருவேளை கர்ப்பப்பை கட்டிகளின் வளர்ச்சியால் சில வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள இயலாமல் போய்விடுமோ? ஒருவேளை இப்போது தவறான முடிவை எடுக்கிறோமோ? ஒருவேளை இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளும் அடுப்படியும்தான் வாழ்க்கை இப்படியே கழிந்து தேக்க நிலையை அடைந்து விட்டால்?” - எல்லாமே தன் கையில்தான் என்பதுதான் ‘ஒருவேளை’களாக உருவெடுத்து உவளைப் பாரமாக அழுத்தியது. ‘இப்போது குழந்தை வேண்டாம்’ என்ற ஆழ்மனதின் பரிதவிப்பை வெளிப்படையாகத் தன்னிடமே கூடச் சொல்ல முடியாமல் தவித்தாள். ஒரு மாதிரி மூச்சு முட்டிக் கொண்டு வந்ததில் உவளுக்கும் சேர்த்து அந்த அறையே பெருமூச்செறிந்தது. ‘பப்பாளியை இன்று உட்கொண்டுவிடுவோமா?’ , ‘மருத்துவரிடம் செல்லலாமா?’ – இவ்விரு கேள்விகளுக்கும் இடையில் நசுங்கி வாடி வதங்கியவாறே மறுநாள் காலை சமைத்துக் கொண்டிருந்தாள். திடீரென…. கால்களுக்கு இடையில் பிசுபிசுப்பாக உணர்ந்தாள். அடுப்பை அப்படியே அணைத்துவிட்டு குளியலறைக்கு ஓடினாள். ஓடி வந்த வேகத்தில் கரண்டைக் கால் வரை வழிந்தது இரத்தம். அப்படியே அங்கிருந்த முக்காலியில் அமர்ந்துவிட்டாள். இரண்டு நிமிடங்கள் உலகமே உறைந்து போய்விட்ட மாதிரி இருந்தது. என்ன நிகழ்கிறது என மூளை மனதிற்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தது. “ஐயோ! உவன் ஆசையில் மண் விழுந்துவிட்டதே!” என்ற வருத்தம் கலந்த ஏமாற்றம்; “எவ்வளவு கொடூரமாக வறட்டுத்தனமாக சுயநலமாக இருக்க முடிந்தது என்னால்?” என பொதுபுத்தியினால் விளைந்த பயம்; ஆண்டாண்டு காலமாக வழிவழியாகப் பெண்களுக்கு மரபுவழியே கடத்தப்பட்ட ‘பிறர்நலம்’ என்னும் பண்பில் இருந்து விலகியதால் “எப்பேர்பட்ட முடிவை எடுக்கத் தெரிந்தேன்?” என்ற குற்றவுணர்வு; “நல்லவேளை! ஒன்றும் செய்யாமல் தானாக வந்துவிட்டது” என்ற ஆசுவாசம்; “எனக்குப் பிடித்தவற்றையெல்லாம் தங்கு தடையின்றி செய்யலாம். இனி வானமே எல்லை” என்ற மகிழ்ச்சி – அனைத்து உணர்வுகளும் ஒரே பிடியாக ஒன்றாக அழுத்தியதில் என்னவென்று உணர்வது என்றறியாமல் திகைத்தாள். அத்திகைப்பு கண்ணீராக வெளிப்பட்டது உவளுக்கே வியப்பைத் தந்தது. “இப்போது ஏன் அழுகிறோம்?” என்று கூட புரியவில்லை. குளித்து முடித்து வெளியே வந்தவள் மேசை மேல் பிரிக்காமல் இருந்த பப்பாளியைப் பார்த்தாள். முந்தைய நாள் வரையிலும் அதைத் தன் மனதினுடைய குரூரத்தின் உருவகமாகக் கருதி வந்தவள் தற்போது அவ்வாறாகக் கருத வைத்த பொதுபுத்தியையும், தன் தெரிவு என்ற எண்ணமே துளிர் விட விடாமல் சமூகம் தன்னுள் சாமர்த்தியமாக விதைத்துவிட்டிருந்த அர்த்தமற்ற குற்றவுணர்வையும் மட்டும் குப்பையில் போட்டு விட்டு பப்பாளியைத் தூக்கிப் பழக் கூடையினுள் இட்டாள். நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.
  10. வழக்குக்குத் தொடர்பில்லாத தீர்ப்பாக இருக்கலாம். உடனே நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கலாம். ஆனாலும் சரியான நிலைப்பாடு எது என்பது மக்கள் சமூகத்தில் மீண்டும் மீண்டும் பேசப்படத்தானே வேண்டும் ? குறிப்பாக, தமிழினத்திற்கான நல்லதொரு கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.
  11. மத்தேயு 6 : 3 - சோம.அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல். இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின் ஆசைக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும். “வேணாங்கண்ணு… படிக்குறதுனா படி; இல்லனா பக்கத்து வீட்டுக்குப் போய் விளையாடக் கூட செய். எதுக்குப் போட்டு அந்தக் கூட்டத்துல வந்து….?” “ம்மா… ப்ளீஸ் மா…” - மறுதலிக்கவே முடியாத ஒரு முகத்தை எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? வேறு வழியில்லாமல் அந்த வெகு சில நாட்களில் இன்றும் ஒன்றாகிப் போனது. மிகவும் பொறுப்பாக ஒரு சிறிய கூடையைத் தானாக எடுத்து வந்து, “ம்ம்.. எனக்கும்” என்று மலரிடம் நீட்டினாள். “சொன்னா கேட்க மாட்டா… இந்தா.... ஆனா கொஞ்சந்தான் தருவேன்” என்றபடி வெறும் நான்கைந்து பூச்சரங்களை மட்டுமே அக்குட்டிக் கூடையினுள் இட்டாள். அம்மாவைப் போலவே கூடையை இடுப்புப் பக்கத்தில் வைத்துப் பிடித்தவள் தன் வயதிற்கே உரிய களிப்புடன் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி துள்ளிக் குதித்தவாறே தன் குதிரைவால் இடமும் வலமும் ஆட குதூகலமாகச் சென்றாள். தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தவாறே மென்புன்னகையுடன் உடன் நடந்து வந்தாள் மலர். அந்தத் தெருமுனையில் வறுத்த கடலைப் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த எழிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் கோவில் தெருவை நோக்கி நடந்தார்கள். கோயிலுக்கு வருபவர்கள், அதைச் சுற்றி இருக்கும் ஏராளமான கடைகளுக்கு வருபவர்கள் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிக அகலமானதும் நீண்டதுமான ரத வீதி அது. எனவே ஆளுக்கு ஒரு புறமாக விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். “படிக்குற புள்ளைகள்லாம் என்னத்துக்கு என் கூட வாரீக?” என்று செல்லமாக அதட்டினாள் மலர். “சும்மா வா அக்கா” என்று சிரித்த எழில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிப்பவள். “அம்மா! இப்பிடி ஏதாவது வெளிய வந்தாதான் உண்டு. நாங்க பாட்டுக்கு எங்க சோலிய பாக்கப் போறோம். உனக்கு என்ன எடைஞ்சலாம்?” – தனது அணியில் எழில் வந்துவிட்ட தைரியத்தில் கயலின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தைக் கையில் திணித்துத் தானும் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டவாறே நடந்தாள் எழில். கடைவீதியை வேடிக்கை பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு கயலுக்கு. எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்ப்பளே தவிர ஒரு நாளும் அம்மாவிடம் எதையும் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கவே மாட்டாள். “நாங்கதான் படிக்கல. உங்களுக்கு இருக்குற ஒரே வேலை – படிக்குறது. அத மட்டும் பாக்குறதுதானே? அதுக்குத்தான கெடந்து இப்பிடி கஸ்டப்படுதோம் நாங்க” என்றள் மலர். வீட்டில் சில சமயம் பூ தொடுத்துக் கொண்டிருக்கும் போது கயல் படிப்பதை ஆசையாய்ப் பார்க்கையில் மலரின் கண்களே பூக்களாய் மாறிப் போகும். பத்தொன்பது வயதில் மணமாகி இருபது வயதிலேயே கயலுக்குத் தாயாகிவிட்டாள். நன்கு படிக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் கல்லூரியின் முதலாமாண்டோடு படிப்பைத் தூக்கிப் போட வேண்டிய குடும்பச் சூழல். இப்போது அவளது உலகம், உயிர், மூச்சுக்காற்று என எல்லாமே கயல்தான். ஆனாலும் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் வகையில் அனைத்து உலக நடப்புகளையும் அறிந்து கொள்ள முயல்வாள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் மலரை விட்டுப் போகவே இல்லை. கோயிலில் அம்மன் சன்னதிக்கென்று தனி நுழைவுவாயில் உண்டு. கயல் உடன் வரும் நாட்களில் மட்டும் உள்ளே செல்வாள். ஐயருக்காகக் காத்திருக்கவும் மாட்டாள். அர்ச்சனையும் செய்ய மாட்டாள். வேண்டிக்கொள்ளுதல் என்பதும் அவளுக்குத் தெரியாது. சாமி கும்பிடுதல் என்பது அவளைப் பொறுத்த வரை சில நொடிகள் அக்கற்சிலையைக் கூர்ந்து நோக்கியவாறு மனதினுள் கயல் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என தனக்குள் வைராக்கியமாக சொல்லிக் கொள்வது. சொல்லிக் கொள்வது என்பதையும் தாண்டி அம்மனிடம் கயலைப் பெரிய கெட்டிக்காரியாகக் கொண்டு வரப்போவதாகச் சூளுரைப்பது போல இருக்கும். அதன் வீரியம் எப்படி இருக்குமென்றால் அவளது மனதிற்குக் காலமே செவி சாய்த்து அதை நிகழ்த்தித் தரும் முயற்சியில் அர்ப்பணிப்போடு ஈடுபடத் துவங்கும் அளவிற்கு இருக்கும். பின்னர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த இசைத்தூணில் கொட்டப்பட்டிருக்கும் குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து கயலின் நெற்றியில் இருக்கும் சிறிய கருப்புப் பொட்டிற்கு மேல் மெலிதான கோடாக இடுவாள். சட்டென்று யாரும் நெட்டி முறிக்கும் அழகைப் பெற்றுவிடும் அம்முகம். உடனே கண்களை இறுக மூடி புருவங்களையும் மூக்கையும் சுருக்கிச் சுளித்தும் விரித்தும் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே விளையாடுவாள் கயல். குங்குமம் லேசாக கண்களுக்குக் கீழேயும் மூக்கின் மேலேயும் மகரந்தத்தைப் போல் சிதறிப் படியும். அதைத் துடைத்து விட்டவாறே மலரிடம் இருந்து பரிசாகக் கிடைக்கும் ஒரு முத்தத்திற்குத்தான் இந்தக் குறும்பெல்லாம். “ரொம்ப தூரம் போய்டாதீங்க… நான் பாக்குற தூரத்துலயே இருங்க ரெண்டு பேரும்” – ரத வீதியை அடைந்ததும் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னாள் மலர். சரியென்றவாறே கூட்டத்தினுள் பிரிந்து சென்றனர். கோயில் ஒலிப்பெருக்கியில் உரத்துப் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பி, ஒவ்வொரு கடை வாசலிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மக்கள், வாகன இரைச்சல்கள் ஆகியவற்றுடன் “பூவு… பூவு… மல்லிப் பூவு… அக்கா பூ வாங்கிக்கோங்க”, “கடல… கடல… வறுத்த கடல… அண்ணா ஒரு பொட்டலம் அஞ்சு ரூபாதான்… வாங்கிக்கோங்கண்ணா” ஆகியவையும் போட்டி போட்டன. அவ்வளவு கூட்டத்திலும் வேக வேகமாகத் தன் கண்களால் துழாவி அவ்வப்போது இருவரின் இருப்பையும் உறுதி செய்தவாறே பூ விற்றுக் கொண்டிருந்தாள் மலர். கயலை உடன் அழைத்து வரும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திலேயேதான் பொழுது கழியும் மலருக்கு. “சீக்கிரம் பூக்கள் விற்றுத்தீர்ந்து விடாதா?” என்றிருக்கும். கண்ணை விட்டு கயல் ஒரு நொடி மறைந்து விட்டாலும் மீதமிருக்கும் மொத்தப் பூக்களையும் சட்டை செய்யாமல் கயலைத் தேடிக் கண்டடைந்து வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவாள். கூடையில் இருக்கும் பூக்களையும் அவர்கள் வரும் நேரத்தையும் பார்த்து அக்கம்பக்கத்தினர், “ஏங் கயலு? அம்மைய விட்டுத் தள்ளிப் போனியோ?” என்று விளையாட்டாகக் கேட்டுச் சிரிக்கும் அளவிற்கு அத்தனை பேருக்கும் கயலின் மீதான மலரது பேரன்பு பரிச்சயம். “ஏஞ் சிரிக்க மாட்டீங்க? வச்சுருக்குறது ஒத்த புள்ள… அதைக் காணாம ஒரு நிமிசம் உசுரே போயிருது. இன்னைக்கு யாவாரத்துல கொட்டுனது போதும். இந்தப் பூவையெல்லாம் ஆளுக்கு ஒண்ணா எடுத்து வச்சுக்கிடுங்க” என்பாள். அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாக நடந்தது மூவருக்கும். கிட்டத்தட்ட எல்லாமே விற்றுத் தீரப் போகும் சமயம். கயலைக் காணவில்லை. லேசான பதற்றம் தொற்றிக் கொண்ட போதிலும் ‘வழக்கம் போல் எங்கேனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாள்’ என மனம் ஆசுவாசப்படுத்த முயன்றது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவ்வீதியை இரண்டு முறை கால்களால் அளந்து அலசி விட்டாள். கண்கள் இருப்பு கொள்ளவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்ததில் இப்போது நிஜமாகவே பீதியடையத் தொடங்கினாள். “மலரக்கா… என்னாச்சு? ஏன் இப்பிடி அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டு இருக்க? உன்ன தேடிக் கண்டுபிடிக்குறதே பெரும்பாடா போச்சு. கயல எங்க?” – எழில் “அவளதான் காணும்னு தேடிட்டு இருக்கேன்” “பயப்படாத… இங்கதான் எங்கயாவது வாய் பார்த்துட்டு நிப்பா. அடுத்த தெருவுல போய் பாப்போமா?” “இல்ல… கண்டிப்பா இந்த ரத வீதிய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்” – பரபரத்தாள் மலர். “சரி. வா… தேடுவோம்” என்று எழிலும் மீண்டும் ஒரு முறை அத்தெரு முழுக்க சல்லடை இட்டுத் தேடினாள். யாரிடமேனும் விசாரிக்கத் துவங்கும் அளவிற்குச் சூழல் கையை மீறிச் சென்றுவிட்டதாக நம்பும் திராணி அற்றவளாக மாறிப் போயிருந்தாள் மலர். ஒவ்வொரு நொடியும் கொடூரமாகக் கழிந்தது. “வர வேண்டாம்னு சொன்னா எங்க கேக்குறா… கழுத” என்று கோபம் கோபமாக வந்தது மலருக்கு. நேரம் ஆக ஆக அழுகை வரும் போல் இருந்தது. இருவருக்கும் என்னென்னவெல்லாமோ தோன்றியது. ஆனால் வாய்விட்டுச் சொல்ல விரும்பாமல் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என மனதினுள் வேண்டிக்கொண்டிருந்தார்கள். “கோயில் வாசல்ல ட்ராஃபிக் போலீஸ் நிப்பாரு. அவர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று கேட்டாள் எழில். நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதை அவளது வார்த்தைகள் சட்டென வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்குக் கூட பயந்து போனவளாக மருண்டு நின்றிருந்தாள் மலர். செய்வதறியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கால்கள் நிலைகுத்தி நின்றன எனினும் கண்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் கூட்டத்தினுள் ஊடுருவி அலைந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்து விட்டது. திடீரென ஒரு இரு சக்கர வாகனத்திற்கும் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தவருக்கும் நடுவில் தென்பட்ட இடைவெளியில் பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்று அவ்வீதியில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மஞ்சள் பூ போட்ட சிகப்புச் சட்டை… கயலேதான்! “யக்கா… அங்க பாரு… கயலு!” கூட்டத்தைப் பிளந்து கயலை நோக்கிப் பாய்ந்து சென்றாள் மலர். கையில் ஒரு ஜிகிர்தண்டா கோப்பையுடன் சிரித்தவாறே அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள் கயல். “என்ன கயலு? எத்தன தடவ சொல்லிருக்கேன்? நீ பாட்டுக்கு எங்கயாவது போகாதன்னு” – பதற்றம் தணியாத குரலில் படபடத்தாள். “இங்கதாம்மா இருந்தேன். இந்த அண்ணாதான் வாங்கித் தந்தாங்க. சூப்பரா இருக்குமா. இந்தா நீ ஒரு வாய் சாப்பிட்டுப் பாரேன்” – கோப்பையைத் தூக்கிக் காண்பித்தாள். மகள் கிடைத்துவிட்ட ஆறுதலில் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே நன்றி கூற வாய் எடுத்தாள். ஆனால் அவன் கைகளில் முளைத்திருந்த கண்கள் அவளைக் கொஞ்சம் உறுத்தின. “என்ன தம்பி பண்றீங்க?” “ஒண்ணும் இல்லையே” என்றவாறே தோள்களைக் குலுக்கினான். மலரது பார்வையில் கோபம் மெல்லமாக ஏறத் துவங்கியிருந்ததை அவளது நெரிந்த புருவங்கள் காட்டிக் கொடுத்தன. உடனே அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, “அட! நெஜமாவே ஒண்ணும் இல்லீங்க. குழந்தை பூ வித்துட்டு இருந்தா. சும்மா பேசிட்டு இருந்தேன். ‘என்ன படிக்குற?’, ‘என்ன பாடம் பிடிக்கும்?’, ‘என்னவாகப் போற?’, ‘அம்மா என்ன பண்றாங்க?’… வழக்கமா கேக்குறதுதான். ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதான்” “அதுக்கு எதுக்கு ஃபோன்ல படம் புடிக்கிறீங்க?” “என்னோட வலைதளத்துல போடுறதுக்கு” – இப்படிச் சொல்லும் போது அலைபேசியை அணைத்துச் சட்டைப் பையினுள் வைத்து விட்டிருந்தான். “அதான் எதுக்குன்னு கேக்கேன்” அவனிடம் சரியான பதில் இல்லை. அல்லது பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்க தைரியம் இல்லை. “அது… வந்து… நெறைய பேரு பாப்பாங்க” “பாத்து? ஆமா… நீங்க போடுற இந்த வீடியோவ எப்படி உண்மைன்னு நம்புவாங்க?” “அதுலாம் நம்புற மாதிரி பண்ணிடலாம்” – விளையாட்டாகச் சிரித்தான். “எப்படி? பிண்ணனியில ஒரு சோக பாட்டு இல்லேனா உத்வேகத்த கெளப்புற மாதிரியான பாட்ட சேர்த்தா?” – அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எழில் கொஞ்சம் காட்டமாகக் கேட்டாள். “ஏதோ இந்தக் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கணும் போல இருந்துச்சு. அதுக்குப் போய் இவ்வளவு….” என்று பம்மினான். இதற்குள் அந்தச் சிறு சலசலப்புக்கு ஏற்ற சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. அதில் ஒருவன் அந்த இளைஞனைப் பார்த்து, “டூட்! நீங்க… சமூக வலைதளத்துல… அந்த genz_idiots பக்கத்தோட…” என அடையாளம் கண்டு கொள்ள முனைய அவனுக்கு அது இன்னும் ஏந்தலாய் இருந்தது. அவனைப் பின் தொடரும் 2 மில்லியன் தலைகளும் அவனுக்காக அங்கு ஆஜர் ஆனதாகவே உணர்ந்தவன் தன் தொனியைச் சற்றே மாற்றினான். “நல்ல மனசோட உதவி பண்ண நெனச்சேன் பாருங்க. என்னைச் சொல்லணும். தெரியாம பண்ணிட்டேன். போதுமா? ஆள வுடுங்க. நல்லதுக்கே காலம் இல்ல” என்று எரிச்சலடைந்தான். “தம்பி! நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட வந்து உதவியும் கேட்கல. நீங்க உதவி பண்ணனும்னு நெனச்சதயும் நான் தப்புன்னு சொல்லல. அத படம் புடிச்சு ஒளிபரப்பணும்ங்கிற ஈன புத்தியைத்தான் தப்புன்னு சொல்றேன்” – மலர் நிதானமாக சொல்ல முயன்றாலும் அந்த ஒரு வார்த்தையில் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது. “ஈன புத்தியா? என்ன வாய்க்கு வந்தபடி பேசுற? Ungrateful bi**h” “ஏய்! இந்த புடுங்கித்தனத்தலாம் வேற யார்கிட்டயாவது காட்டு…. எங்களுக்கும் பேசத் தெரியும்… You imbecile ba****d” – எழிலும் பதிலுக்கு எகிறினாள். சண்டை முற்றத் துவங்க, யாரோ ஒருவர் அதைத் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் இணைய உலகில் தன் பிம்பம் கலைந்து விடுமோ என்று அஞ்சி, “ஹலோ! ஃபோன ஆஃப் பண்ணுங்க. யார கேட்டு ரெக்கார்டு பண்றீங்க? டெலீட் பண்ணுங்க. It’s an invasion of privacy” என்று குதித்தான். “ஹய்ய்ய்! உனக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளிச் சட்னியா? இல்லாதப்பட்டவங்கன்னா கேக்காம கொள்ளாம உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணுவியா? எங்க கூட பேசுறதயே ஏதோ தாராள மனசுக்காரன் மாதிரி எடுத்துப் போட்டுட்டு இருக்க?” என்று கடுகடுத்தாள் எழில். “நான் நல்லது பண்ணததான் வீடியோ எடுத்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு” “நல்லது பண்ணனும்னு நெனைக்குறவன் சத்தங்காட்டாம செஞ்சுட்டுப் போவான். இப்பிடி பெரும பீத்தீட்டு இருக்க மாட்டான். ஒரு 20 ரூபாய்க்கு ஜிகிர்தண்டா வாங்கி குடுத்தது நீ கட்டை விரல் பிச்சை எடுக்கத்தானே? நீ நோகாம சம்பாதிக்குறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா?” – தான் நினைப்பதை எவ்வாறு வார்த்தைகளில் வடிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்ற மலருக்கும் சேர்த்து எழிலே பேசினாள். “What nonsense? இதைப் பாத்து இன்னும் நெறைய பேருக்கு உதவணும்னு தோணும் இல்லையா?” “உதவி பண்ணனும்னு நினைக்குறதும் நீ பண்றதும் ஒன்னா? மனுசனா பொறந்த ஒவ்வொருத்தனும் தன்னால முடியும்னா கண்ணு முன்னால பசிச்சுக் கெடக்குறவனுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுக்கத்தான் செய்வான். நீதான் ஏதோ பெரிய சமூக சேவை செஞ்ச மாதிரி அனத்தீட்டு திரியுற” – அவ்வளவு பெரிய விஷயத்தை அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் எழில். வசமாக மாட்டிக் கொண்டதாக உணர்ந்தவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “வா எழிலு… போலாம்” என்று அவ்விடத்தை விட்டுக் கிளம்ப முயன்ற மலரின் கைப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட எழில், “இருக்கா… அதான் பேச்சு இவ்ளோ தூரம் வந்துட்டுல்ல… இரு, கொறையையும் பேசீட்டு வந்துருதேன்” என்றவாறு அவனை நோக்கித் திரும்பினாள். “நீ மலரு அக்காட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் உன் வீடியோல சிலத பாத்தேன். போன வாரம் ஒரு வீடியோ போட்டுருக்கியே? அவரு பிச்சைக்காரரா? சொல்லு?” என்று அவனைப் பார்த்துக் கத்தியவள், கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள் – “நாலாவது தெருவுல இருக்க எங்க சித்தப்பா போன வாரம் மில்லு வேலை முடிஞ்சு களைப்பா இருக்குன்னு காட்சி மண்டபத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. இவன் ‘உங்கள ஆளையே மாத்துறோம்’னு சொல்லி சித்தப்பாவுக்கு முகச்சவரம் செய்து முடிவெட்டி குளிப்பாட்டி புதுத்துணி சாப்பாடுன்னு வாங்கி குடுத்து அனுப்பியிருக்கான். அவரும் ஏதோ ஷூட்டிங்னு நெனச்சுட்டு சிரிச்சுட்டே வந்துருக்கார். இப்போ பாத்தாதான் புரியுது”. மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “நேத்து கூட அந்த நாய்க்குட்டியையும் நீதான் வேணும்னு சாக்கடைக்குள்ள வீசிட்டு காப்பாத்துறாப்புல வீடியோ போட்டுருப்ப. இந்த லட்சணத்துல உன்ன நம்ப வேற செய்யணுமா?” என்றவள் ஒரு சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தாள். “நீ பண்றது பேரு என்ன தெரியுமா? Pandering. Emotional Prostitution. You are just feeding your bloody ego” என்று முகத்திற் அறைந்தாற் போல் வார்த்தைகளை வீசினாள் எழில். அவற்றின் வெப்பம் பொறுக்க முடியாமல், சுற்றி நிற்பவர்களின் அருவருப்பான பார்வை தன் மீது நெளிவதைச் சகிக்க முடியாமல் நழுவப் பார்த்தான். இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “சரி, விடும்மா! புள்ளைக்கு அவன் வாங்கிக் குடுத்ததுக்கு நன்றி சொல்லிட்டு அத அத்தோட விட்டுட்டுக் கலைஞ்சு போங்க” என பெரியதனமாகக் கூறவும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது எழிலுக்கு. “போன வருசம் அஞ்சு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு அத அம்பது தெருவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுன மகாபிரபுதானே நீங்க? நியாயம் சொல்ல வர்ற மூஞ்சியெல்லாம் பாரேன்” அதன் பிறகு ஒருவரும் வாயைத் திறக்கத் துணியவில்லை. “வீடியோவ டெலீட் பண்ணு” என்று மட்டும் சொன்னாள் மலர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் அவசர அவசரமாக அலைபேசியைத் தட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி அந்தக் காணொளியை அழித்தாள் எழில். பின்னர் Recently deletedக்கும் சென்று அழித்துவிட்டுச் சொன்னாள், “இவ்வளவுக்கு அப்புறமும் இப்போ எடுத்தத மீட்டெடுத்து ஒளிபரப்புனேனா நீ மனுசனே இல்ல!” அலைபேசியைத் திரும்பப் பெற்றவன் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டாகப் பறந்தே விட்டான். மூவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கடைத்தெருவின் அவ்வளவு சத்தமும் அவர்களது அமைதியில் அமிழ்ந்து போனது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கயலுக்கு என்ன நடந்தது என்று சுத்தமாகப் புரியவில்லை. அவர்களின் கோபத்திற்குத் தான்தான் காரணமோ என்று அவள் வயதிற்கே உரிய யோசனையில் கொஞ்சம் பயந்து கூட போயிருந்தாள். அவர்களின் மௌனத்தில் கல் எறியும் பொருட்டு அருகில் வேகமாக வந்து நின்றது அவர்கள் தெருவில் வசிக்கும் இஸ்மாயிலின் சைக்கிள். சைக்கிளில் இருந்து இறங்கி அவர்களுக்கு நடைத்துணையாக சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தவர் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி மெல்ல பேச்சை ஆரம்பித்தார். “எழிலு… ஏன்டா அவ்வளவு கோவம் உனக்கு?” “சும்மா இருங்க பெரியப்பா… அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டீங்க” என்று மலர் பதிலுரைத்தாள். “லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு அங்கனதான்டா இருந்தேன். முதலாளி இருந்தனால வர முடில. அதான் கேக்கேன்… அவன் ஏதோ இந்தக் காலத்து வழக்கத்துக்கு ஏத்தாப்புல… எல்லாரும் எங்கன பாத்தாலும் ஃபோனும் கையுமாத்தான் திரியுதாங்க. இப்போல்லாம் இது சகஜம்தான?” “என்ன பெரீப்பா நீங்களும்? அவன் செஞ்சது தப்பில்லையா? புள்ள ஏதோ பிச்சைக்கு நின்ன மாரியும் இவன் கொடை உள்ளத்தோட உதவுற மாரியும்… பெரிய வள்ளல்னு நெனப்பு. உணர்வுப்பூர்வமா உதவி பண்றவன், அவசர உதவி பண்றவன்… எல்லாவனுக்கும் அத ஆவணப்படுத்தியே ஆகணுமோ? அதெப்படி உதவி பண்ற இக்கட்டான நேரத்துலயும் வறட்டுத்தனமா பொறுமையா படம் பிடிக்க முடியுது? இது பேரு உதவிலாம் இல்ல. தன்னை எல்லோரிடமும் இரக்க குணமுள்ள நல்லவனாகக் காட்டிக் கொள்ள முனையும் அசட்டுத்தனம்” – எழில் “என்னமோ உலகத்துல ஒருத்தர் விடாம இதத்தான் பாத்துட்டு இருக்கப் போற மாதிரி… விட்டுத் தள்ளு கழுதைய!” என்று அவர்களை அதை உதாசீனப்படுத்த வைக்கும் எண்ணத்தில் கூறினார் இஸ்மாயில். “உலகத்துல ஏதோ ஒரு மூலையில கூட அவளைப் ‘பாவம்’ன்னு யாரும் பரிதாபப் பார்வை பார்த்துடக் கூடாதுன்னுதானே இப்பிடி ஓடி ஓடி ஓடா தேயுறேன்?” வழக்கமற்ற குரலில் கூறினாள் மலர். இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்திருந்ததா உடையத் துவங்கியிருந்ததா எனத் திருத்தமாகக் கூற இயலவில்லை. “இதுல இவ்ளோ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?” - இஸ்மாயில் “உணர்ச்சி வசப்படல பெரியப்பா. சரி - தப்பு பத்திதான் இங்க பேச்சே. இப்பவும் பெத்தவங்கள ‘அம்மா’, ‘அப்பா’ன்னுதானே கூப்பிடுறோம்? இரத்தல் இன்றைக்கும் பழிக்கக்கூடிய நாணக்கூடிய தொழிலாகத்தானே இருக்கு? சில விஷயங்கள் மாறாது; மாறவும் கூடாது. நாம ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது உதவி பெறுபவர் இரத்தல் தொழிலே செய்பவராயினும் அவர் கண்ணியத்தையும் தன்மானத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நல்ல பெயர் எடுக்கணும்ங்கிறதுக்காக உலகின் கண்களில் ஒரு தனிமனிதரின் இயலாமையைச் சாதமாகப் பயன்படுத்தி அவரைக் கூனிக் குறுக வைக்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாமல் நல்ல பெயர் எடுத்து என்னத்துக்கு?” – தீர்க்கமாகப் பேசி முடித்தாள். எழில் பேசுவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தார் இஸ்மாயில். அவரது நரைத்துப் போன தாடிக்குள் இருந்து ஒரு புன்னகை, “யம்மாடி! எவ்ளோ வெவரமா பேசுதா?” என்ற ஆச்சரியத்துடன் வெளிப்பட்டது. வழியில் இருந்த தேவாலயத்தை அவர்கள் கடந்து செல்கையில் மிகச் சரியாக மத்தேயு 6 : 3 வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.
  12. Offensive ? So What ? - சோம.அழகு நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால் திணிக்கப்படாவிட்டால் முற்றிலும் மறைந்து விடும் தன்மையானதாக ஏன் இருக்கிறது? ஒரு குழந்தை ஐரோப்பா/இந்தியா/இஸ்ரேல்/ சவுதி அரேபியாவில் பிறக்குமாயின் அது பெரும்பாலும் கிறித்தவ/இந்து/யூத/இசுலாம் மதத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனில் மதம் என்பது முற்றிலும் புவியியல் சார்ந்தது. எனவே இறை நம்பிக்கை என்பது தானாகக் கிட்டும் தெய்வீக அனுபவமோ ஒரு நிலையான உண்மையோ அல்ல. எனவே ஒரு குறிப்பிட்ட தலைமுறையில், அனைத்து குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களான பின் சுமாராக இருபது வயதிற்குப் பின்னர் தான் அவர்களுக்கு மதமும் கடவுள் நம்பிக்கையும் சொல்லித்தரப் பட வேண்டும் என உலகம் முழுக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டால் அத்தலைமுறையோடு அனைத்து மதங்களும் அழிந்துவிடும். ‘ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது’, ‘மன அமைதியைக் கொடுக்கிறது’… என பிறருக்குத் தொல்லை தராத வரை ஒரு தனிநபரது கடவுள் நம்பிக்கையில் எப்பிரச்சனையும் இல்லை. ஆனால் உடன்பாடு இல்லாத பிறர்மீதும் அர்த்தமற்ற சடங்குகளைத் திணிக்கும் போதும் பெரும்பாலான பக்திப் பரவச உரையாடல்களில் “அப்டிங்களா… ரொம்ப சந்தோசம்… நன்றி” என்று வெறுமனே கடந்து செல்ல முனையும் என்னைக் கிட்டத்தட்ட ‘சண்டைக்கு வா’ என அழைப்பு விடுக்கும் போதும் அவர்களின் மடமையை நான் பரிகசிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் வம்படியாக வந்து என்னுள் கடவுள் நம்பிக்கையை விதைக்கும் நற்பொறுப்பை ஏற்று அதை ஏதோ தாம் இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகக் கருதி அதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு, பின்னர் மலங்க மலங்க முழித்தவாறே திரும்பிச் சென்ற சுவாரஸ்யமான தருணங்கள் சில உண்டு. அவ்வப்போது வாசிக்கக் கிடைத்த பெரும் ஆளுமைகள் பதிலுரைக்கும் போது மிகச் சரியாக வந்து கை கொடுத்திருக்கிறார்கள்! “நம்மை மீறிய அற்புத சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது. நம்பு, நம்பிக்கைதானே எல்லாம்” “சரி. நிரூபியுங்கள்” “உனக்குத்தானே சந்தேகம்? நீ இல்லைன்னு நிரூபி, பார்ப்போம்” “ஓ! நீங்க அப்பிடி வர்றீங்களா? அப்ப சரி. நான்தான் அந்த அற்புத சக்தி” “அது எப்படி?” “உங்கள் தர்க்க படி, உங்களுக்கு சந்தேகம்னா இப்போ நீங்கதான் நிரூபிக்கணும், நான் அற்புத சக்தி இல்லனு!” “கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்” “நானும்தான்” “உன்னால கடவுள் செய்யுறத எல்லாம் செய்ய முடியுமா?” “நடக்குறதெல்லாம் பாத்துட்டு கம்முன்னு கல்லாட்டம் இருக்கணும்தான? கொஞ்சம் கஷ்டம்தான்” “பகுத்தறிவாளர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” “மருத்துவர்கள் ஏன் நோய்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?” “இறையின் இடத்தை எதைக் கொண்டு சமன் செய்வாய்?” “புற்றுநோய்க் கட்டியை அகற்றிய பின் அவ்விடத்தை எதைக் கொண்டும் நிரப்ப வேண்டியதில்லை” “கடவுள் நம்பிக்கையே இல்லாவிட்டால் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?” “ ‘எஜமானர்களே இல்லாவிட்டால் நான் யாருக்கு அடிமையாக இருப்பது?’ என கவலைப்படுகிறீர்களா?” (உபயம் : Dan Barker) “பொதுவுடைமை, பகுத்தறிவாதம்லாம் கேட்க நல்லாருக்கும்; நடைமுறைக்கு சரி வராது” “முதலாளித்துவம், மதம்லாம் கேட்கவே நல்லா இல்லையே” “ ‘ஒரு’ கடவுளின் மீது கூடவா நம்பிக்கை இல்லை?” “மடமை எவ்வுருவில் எப்பெயரில் வந்தால் என்ன?” “என்ன நடந்தால் நம்புவாய்?” “பெரியார் சொன்னதைப் போல் நேரில் வந்தால் நம்பி விடுவேன்” “நம்பிக்கையற்ற உனக்கு ஏன் தரிசனம் தர வேண்டும்?” “என்னை நம்ப வைக்க!” “அதீத பக்தியுடன் இருக்கும் எங்களுக்கே தரிசனம் கிட்டியதில்லை” “Exactly. அப்புறம் எதுக்கு நம்பிகிட்டு?” “புனித நூல்களைக் கொஞ்சம் வாசி. அப்போதாவது உன்னில் மனமாற்றம் வருகிறதா, பார்க்கலாம்” “பேசும் பாம்புகள், ஏழு தலை உயிரினங்கள், சூரியனை விழுங்கும் குட்டி குரங்கு, எலியின் மீது அமர்ந்து வலம் வரும் யானை, மலையைச் சுமக்கும் பறக்கும் குரங்கு…. – இவை இடம் பெற்றிருப்பவற்றை புனித நூல்கள் என்பதை விட ‘புனைவுகள்’ என்று கூறினால் சாலப் பொருத்தமாயிருக்கும். அவற்றைக் கொஞ்சம் வாசித்த பிறகுதான் கடவுள் இருப்பு குறித்த சந்தேகங்கள் முற்றிலும் அகன்று, ‘கருப்பு’ மனதிற்கு நெருக்கமாகிப் போனது” “ப்ச்… எவ்வளவு நன்னெறி ஒழுக்கங்கள் மதிப்பீடுகள் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?” “அதற்கெல்லாம் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறதா? சரி எது தவறு எது என்று பிரித்தறியக் கூடவா தெரியாது?” “இவ்வளவு பெரிய அண்டம் இத்தனை அற்புதங்களுடன் தானாக உருவாகியிருக்கவே இயலாது. அனைத்து உயிரினங்களும் தாமாக உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை” “ஹ்ம்ம்… பூமியை உருவாக்கி பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரத்தையும் அதிலேயே விட்டு அதை கண்டறியும் அறிவையும் நமக்குத் தருவானேன்? நாம் சந்தேகம் கொண்டு இறையின் இருப்பைக் கேள்வி கேட்டு நரகத்திற்குச் செல்ல வேண்டியா? நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்து அதைப் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்து வினோதமான வழிமுறைகளுடன் இயங்குகிறார் கடவுள்” “கடவுள் அன்பே உருவானவர். நீ ஏன் அவரை வெறுக்கிறாய்?” “முதலாவதாக நீங்கள் இந்த உருவகத்தின் மூலம் அன்பைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். இரண்டாவதாக, இல்லாத ஒன்றை எப்படி நான் வெறுக்க இயலும்? கடவுள் என்னும் பெயரில் உலவும் கருத்தாக்கத்தைத்தான்(concept) வெறுக்கிறேன்” “நீ அவரது அன்பை உணர மறுக்கிறாய்” “ஆமாமா! இஸ்ரேலியர்கள் மனிதத் தன்மையுள்ளவர்கள்; இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை நேசிக்கிறது; பார்ப்பனர்கள் சனாதனத்தை அடியோடு வெறுப்பவர்கள்;…. கடவுளும் அன்பானவர்தான். உணர்ந்துட்டேன்” “சரி! உன்னைப் பொறுத்த வரை கடவுள்னா என்ன?” “பசியில் வாடும் குழந்தைகளின் முனகல்கள், புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளின் வலி மிகுந்த அழுகைகள், வன்புணர்வு செய்யப்படும் குழந்தைகளின் ஓலங்கள், காஸாவில் தனது ஏழு வயது மகனின் தலை மட்டும் தனியாகக் கிடைக்க அதைக் கையில் ஏந்தியபடி வெளிப்பட்ட ஒரு தந்தையின் கேவல்கள், பிரசவித்த மறுநொடியே தன் குட்டியைச் சிங்கக் கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற முயன்று போராடி இறுதியில் இயலாமல், தாயும் (நிற்கப் பழகுவதற்குக் கூட நேரம் கிட்டாத) மான்குட்டியும் இரையாகிப் போகும் போது காடு அதிர கேட்கும் வெற்றி கர்ஜனை - இவை அனைத்தும் விண்ணை முட்டி வெளியை (space) அடையும் போது இவற்றிற்குப் பதிலாகக் கிடைக்கும் காதைக் கிழிக்கும் குரூரமான அமைதியின் பெயர்தான் ‘கடவுள்’!” இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக எரிச்சலூட்டும் ஒரு வாதம் உண்டு. “நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரிதான் இருந்தேன்” - “மொதல்ல தெளிவாதான் இருந்தேன்; அப்புறம்தான் மண்ட கோளாறு வந்துச்சு” என்பதில் என்ன பெருமை? இப்படிச் சொல்வதன் மூலம் தமது மடமையை இன்னும் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே அன்றி வேறென்ன? ஏதோ இப்போது உலகம் புரிந்துவிட்டதாகவும் தான் ஞானி ஆகி விட்டதாகவும் நம்மை நம்ப வைக்கும் பரிதாப முயற்சிகள் எதற்கு? கொள்கை பிடிப்புள்ள பகுத்தறிவாளர் யாரும் எந்தக் கட்டத்திலும் மனமாற்றம் அடைந்து இறையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே இவ்வாறு பேசுபவர்களுள் துவக்கத்திலிருந்தே ஆத்திகமும் ஒருபிடி அடிப்படைவாதமும் உறைந்தே இருந்திருக்கிறது என்றுதான் பொருள். “நானும் (சிறுவயதில்) உங்களைப் போல்தான் இருந்தேன். நீங்கள் பொய்களை நம்பத் தொடங்கிய காலத்தில் நான் அதைக் கைவிடத் துவங்கியிருந்தேன்” என பதிலுக்குச் சொல்லச் சொல்லி அரித்தெடுக்கும் மனதைப் பல முறை அமைதிபடுத்தியிருக்கிறேன். எல்லாரும் நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள் - பயமும் மதமும் விதைக்கப்படும் வரை. “வளர வளர புரியும்” என்கிறார்கள். வளர வளர என்னிடம் கேள்விகள்தாம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அடுத்ததாக இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர் “கடைசி காலத்தில் இறையை உணருவாய்” என்று சாபம் விடும் தொனியில் கூறும் போதுதான் சிரிப்பை அடக்க இயலாது எனக்கு. என் மரணப் படுக்கையில் இல்லாத கடவுளைப் பற்றி ஏன் எண்ணிக் கொண்டிருக்கப் போகிறேன்? அப்பாவிடம் இன்னும் ஒரு ரசனையான சங்கப் பாடலைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கலாம்; அம்மாவின் கையால் இன்னும் ஒரு நெய் தோசை சாப்பிட்டிருக்கலாம்; என் மகளை இன்னும் ஒரு முறை இறுக அணைத்து அன்பைப் பொழிந்திருக்கலாம்; என்னவனுடன் இன்னும் ஒரு பயணம் சென்றிருக்கலாம்; இன்னும் ஒரு புத்தகம், ஒரு நல்ல சினிமா, இசைக்கோர்வை என ரசித்திருக்கலாம்… இப்படித்தான் நீளும் என் சிந்தனைகள். மேலும், ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட (வாய்ப்பில்லை! சும்மா ஒரு பேச்சுக்கு) அத்தருணத்தில் இறையை உணார்ந்துதான் என்ன ஆகப் போகிறது? You have the right to believe in what you want; I have the right to believe it’s ridiculous – Ricky Gervais ஒரு முறை வீட்டில் நான் தலை சீவிக் கொண்டிருக்கையில் சாமி கும்பிட வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே என்ன தோன்றியதோ? விளையாட்டாக இவ்வாறாக பதில் கூறினேன் – “இச்சீப்பின் வழியாக ஆண்டவனாகிய கடவுளிடம் எல்லாம் வல்ல இறைவனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்”. “பைத்தியம்! சீக்கிரம் வா” என்று சிரித்தவாறே சென்றுவிட்டார் அழைக்க வந்தவர். அவ்வாக்கியத்தில் ‘சீப்பு’ என்ற சொல் ஒன்றுதான் பிரச்சனையாகப் பட்டிருக்கிறது, பாருங்களேன்! மற்றபடி அடுத்த அறைக்கு சென்று சில வண்ண வண்ணப் படங்களைப் பார்த்துப் பேசுவது, கல்லைப் பார்த்துப் பேசுவது, உத்திரத்தை நோக்கிப் பேசுவது, சுவற்றுடன் பேசுவது, நெடுஞ்சாண் கிடையாகவோ மண்டியிட்டோ விழுந்து தரையுடன் பேசுவது – இவையெல்லாம் நல்ல மனநிலையில் உள்ளவர் செய்வதற்கு ஏற்றவைதானாம். “நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்; நான் அவ்வாறு செய்வதாக நடிக்கிறேன்” – இரண்டிற்குமான பலன்களில் என்ன வித்தியாசம் என்று காண விருப்பம். கோவில் வாசலில் இரப்பவனின் தட்டில், உள்ளே செல்லும் சாமானியன் இடும் அதே அலட்சியமும் மௌனமும் கருவறையில் வீற்றிருக்கும் கல்லிடம் இருந்து அச்சு பிசகாமல் அப்படியே சாமானியனுக்கும் கிட்டுவதுதான் இயற்கையின் சமநிலை! “எனது நம்பிக்கையால் நான் இதைச் செய்கிறேன்/செய்ய மாட்டேன்” என்ற அளவில் இருப்பது “எனது நம்பிக்கையால் நீ இதையெல்லாம் செய்/செய்யாதே” என்றாகும் போதுதான் பிரச்சனையே! ஒரு கட்டத்தில் ‘சரி! செய்துவிட்டுத்தான் போவோமே! இச்செய்கைகள் என்னில் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடப் போகின்றன?’ என பிறரது நம்பிக்கைகளை மதிக்கும் பொருட்டு விளக்கேற்றி பூஜை செய்தாலும் ‘கடமைக்குன்னு செய்றதுக்கு எதுக்கு செய்யணும்?’ என்ற அஸ்திரம் வரும். பகுத்தறிவாத நங்கைகளிடம் “உன் நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன்” என்று கூறும் ஆத்திகர்களை ஓரளவு முற்போக்குவாதிகளாக நான் அனுமானித்து வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. அதாகப்பட்டது ஓர் இறை மறுப்பாளரின் நம்பிக்கையைத் தவறென்று நேரடியாகப் பழித்துரைக்காது இச்சமூகம். சடங்குகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றையும் அவர் ஒழுங்காகப் பின்பற்றிவிட வேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்க்கப்படும். (என்னே உங்கள் சனநாயகம்!) அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் எனது பிம்பம் கண்ணாடியில் எதிரொளிக்கும் போது எனக்கு ஊன்றுகோலாயிருக்கும் பகுத்தறிவுப் பகலவனின் கைத்தடியும் என் பார்வையை விசாலமாக்கித் தெளிவுபடுத்தித் தரும் அன்னாரது கண்ணாடியும் கொஞ்சம் கொஞ்சமாக என்னில் இருந்து தூரமாக விலக ஆரம்பித்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் புதைந்திருக்கிறது என் ஆளுமை! ஒரு தனிமனிதனின் மதிப்பீடுகள் வாழ்வியல் நெறிமுறைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இறை நம்பிக்கையோடு சிக்கலான முடிச்சு போட்டே பார்த்துப் பழகிய சமூகத்திற்குப் புரியாத புதிராக விளங்கும் ஒன்று – இறை மறுப்பாளர்களால் எவ்வித கண்காணிப்பு சாதனமும் இன்றி தாமாகவே நல்லவர்களாகவும் கற்பனையான உந்துதலின்றி தன்னம்பிக்கையாளர்களாகவும் இயங்க இயலும் என்பதே! எவ்வித ஆதாரங்களும் இன்றி நம்பப்படுவது எனில் மதத்திற்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட பொய்களால் ஆன ஒரு ஸ்தாபனத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? மதம் என்பது மனிதத்திற்கும் மனித குலத்தின் மதிநுட்பத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம், மாபெரும் அவமதிப்பு. அறிவுக்கு நேர்மையாக நடந்து கொள்வதன் இயற்கை விளைவாகிய பகுத்தறிவாதம் என்பது உண்மையும் நம்பிக்கையும் ஒரே புள்ளியாகி ஒன்றாக சங்கமிக்கும் இடம். நாம் முன்வைக்கும் ஒரு வாதத்திற்கு ஏரணத்திற்குட்பட்ட ஒரு சரியான எதிர்வாதம் இல்லாதவர்களின் கடைசி புகலிடம் - ‘It’s offensive’. இதன் பின்னால் ஒளிந்து கொண்டால் தாம்தான் சரியென்றும் ஒரு படி மேலே சென்றுவிட்டதாகவும் இவர்களுக்கு யார் சொல்லித் தந்தது? ‘That’s offensive’ is not an argument – Christopher Hitchens இனி ‘offensive’ஐ தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கு எனது பதில், “So What?” "One day Atheism will disappear as a concept. Instead there will be normal people and some weirdo believers" – Frank Zappa நன்றி - 'கீற்று' இணைய இதழ். https://www.facebook.com/share/r/1AaTbmWWi1/
  13. தனியார் பள்ளிகளில் (மாநில) அரசு உதவி பெறும் பள்ளிகள் உண்டு. சுயநிதிப் பள்ளிகளும் உண்டு (அதாவது, உயரிய கல்விக் கட்டணம் வசூலித்து நடைபெறுவன. எனவே சுயநிதி என்பது மாணவர் தம் சுயநிதி எனக் கொள்க; பள்ளியை நடத்துவோரின் நிதி அல்ல). அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகள் மட்டுமே. இந்த இரண்டு மொழிப் பாடங்கள் தவிர ஏனைய பாடங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ நடைபெறும். சுயநிதிப் பள்ளிகளை நடத்தும் தனியார் பெரும்பாலும் CBSE (ஒன்றிய அரசின் Central Board for Secondary Education) பாடத்திட்டத்திலேயே நடத்துகின்றனர். அங்கே மும்மொழி என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம், இந்தி சொல்லித் தரப் படுகின்றன. சில இடங்களில் சமஸ்கிருதமும் (!!!), ஃபிரெஞ்சும் இருக்கலாம். ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில் நடைபெறும். வேடிக்கை என்னவென்றால், எங்கெல்லாம் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளனவோ, அங்கே பெரும்பாலான பெற்றோர் தமிழை விடுத்து மூன்று மொழிகள் தேர்ந்தெடுப்பர். கேட்டால், "தமிழ்தான் வீட்டில் பேசுகிறார்களே !" என்ற அறிவார்ந்த பதில் வரும். எந்த மக்கள் திரளிலும் பெரும்பாலானோர்க்குத் தாய்மொழி கூட ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே ! சமீப காலத்தில் அரசுப் பணிக்கு - குறிப்பாக அரசு மருத்துவர் பணிக்கு - தமிழ்த் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்பதால், போனால் போகிறது என்று தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகக் கேள்வி. இந்த லட்சணத்தில் ஒன்றிய அரசுப் பள்ளிகளும் சிலவுண்டு. அவற்றில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என்பது கூடுதல் தகவல். இதற்கு அந்த அரசை மட்டும் குறை சொல்வானேன் ? பெரும்பாலான பெற்றோர் தமிழை விரும்பத் தயாரில்லையே ! சுருக்கமாகச் சொல்வதானால், மாநில அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழ் உயிர்ப்புடன் இருக்கும் (மற்றபடி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் வாழும். எதையோ இழந்தவன்தான் அந்தப் பொருளுக்காக ஏங்குவானோ !) மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தொழில் சார்ந்து அடுத்து வரும் படிப்புகளுக்கான தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவதால், பெரும்பாலானோர் எந்த மொழியையும் உருப்படியாகப் படிப்பதில்லை. எனவே அந்த வேற்று மொழிகளின் தாக்கத்தினால் தமிழ் தேய்ந்து விடப் போவதில்லை என்ற அற்ப மகிழ்ச்சியுண்டு. தாய்மொழி குறித்த சாமானியரின் மனநிலையை வைத்து முன்னர் ஒரு கட்டுரை எழுதியதுண்டு. இங்கு அது ஓரளவு பொருந்தி வரலாம் :
  14. உங்கள் பின்னூட்டத்தை முழுவதுமாகப் படியெடுத்து சோம.அழகுவிற்கு அனுப்பி விட்டேன். நன்றி.
  15. இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; அமெரிக்காவில் வாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியில். ஆசிரியர் நான் அல்லன்; என் மகள் சோம.அழகு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.