Posts posted by கிருபன்
-
-
உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும்
8 Sep 2025, 7:12 AM

ராஜன் குறை
தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது.
பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவர் பெயரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரிவான அரசியல் தத்துவ நூலாகவோ, சித்தாந்த நூலாகவோ எழுதவில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களிடையே பிரசாரம் செய்து பெரும் சிந்தனைப் புரட்சியை பொதுமன்றத்தில் உருவாக்கியவர். செயல்முறை தத்துவம் (philosophical praxis) என்பதை மேற்கொண்டவர். கற்றோருக்கான நூல்களை எழுதுவதைவிட, அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்து சுயமரியாதையை சுடர் விடச் செய்வதையே அவர் முக்கியப் பணியாகக் கருதினார்.
அவர் வாழ்நாளிலேயே அவர் உரைகளின் எழுத்து வடிவங்களும், எழுத்துக்களும் தொகுக்கப்பட்டு வெளிவந்தாலும் அவை மொழியாக்கம் செய்யக் கடினமானவை என்பதால் பெருமளவு அவ்விதம் நடந்து வெளியுலகில் பரவவில்லை. மேலும் கல்விப்புலத்தில் நிறைந்திருந்த பார்ப்பனர்களுக்கும், பிற மேல் தட்டினருக்கும் அவரைக் குறித்த சரியான புரிதல் இல்லை. இட து சாரி சிந்தனையாளர்கள் பலருக்கும் கூட அவரைக் குறித்த சரியான புரிதல் இருக்கவில்லை. அதனால் அவருடைய அளப்பரிய அரும்பணி, மானுடவரலாற்றில் அவர் உருவாக்கிய தனித்துவமிக்க சிந்தனைப் புரட்சியின் சிறப்பம்சங்கள் உலக அரங்கில் விவாதிக்கப்பட கணிசமான காலதாமதம் ஆகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடியும்.
அப்படி அறியப்படவேண்டிய சிறப்பம்சங்கள் என்ன என்பதையும் சுருக்கமாக க் கூறிவிடுவோம். பெரும்பாலான உலகத் தலைவர்கள் மக்களை திரட்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் அல்லது தேசிய விடுதலையை சாதித்து புதிய அரசுருவாக்கத்திற்கு வகை செய்வார்கள். இதற்கு மாறாக பெரியார் மக்களின் சிந்தனையிலே புரட்சிகர மாற்றத்தை உருவாக்கி, புதிய விழுமியங்களின் அடிப்படையிலே குடியரசை உருவாக்க முயற்சித்தார். இதனை சமூக சீர்திருத்தம் என்று சொல்லிவிட முடியாது. புதிய குடியரசின் அடித்தளத்தை உருவாக்குதல்.
இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய சமூகத்தில் பரவலாக வேரூன்றிய வர்ண தர்ம சிந்தனையை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும், பிறப்பையே தண்டனையாக்கும் வர்ண தர்ம சமூக ஒழுங்கை முற்றிலும் அகற்றி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப சமத்துவ விழுமியத்தை நிலைநிறுத்துவதே அவர் மேற்கொண்ட சிந்தனைப் புரட்சியின் அடிப்படை. அவருடைய பணியின் விளைவாக “திராவிட-தமிழர்” என்ற ஒரு மக்கள் தொகுதி தன்னுணர்வு பெற்று பிராமணீய கருத்தியல் மேலாதிக்கத்தினை (Brahmin Hegemony) மறுதலிக்கும் ஆற்றலுடன் செயல்படுவது சாத்தியமானது. இருப்பினும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் உருவாக்கும் தளைகளை மீறி இந்த மக்கள் தொகுதி தொடர்ந்து தன் இலட்சியத்தை அடைய போராடி வருகிறது.
இந்த உண்மை, பெரியார் மக்களின் சிந்தனைப் புரட்சியை நாடியவர், தேசிய அரசை உருவாக்க முனையாமல், குடியரசு விழுமியங்களை நிறுவ முயன்றவர், அதன் மூலம் மக்களின் மன ங்களிலே சுயமரியாதைக் கனலை உருவாக்கியவர் என்ற உண்மை இன்னம் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. தேசிய அரசை உருவாக்குபவர்களே வரலாற்றில் கவனம் பெறுவார்கள் என்பதால் பெரியாரின் சிந்தனைப் புரட்சி போதிய கவனம் பெறவில்லை என்றும் கூறலாம்.
ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பேரொளி எல்லை கடந்தும் வீசத் துவங்கியுள்ளதை வியப்பதற்கில்லை. இந்த கருத்தரங்கத்தை ஒருங்கமைத்த அமைப்பு எது, பங்கேற்ற அறிஞர்கள் யார், யார் என்பதை நாம் சுருக்கமாக அறிய வேண்டும்.

இரு நாள் கருத்தரங்கம்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பல்வேறு துறைகளும், 36 கல்லூரிகளும் அடங்கியுள்ளன. அவற்றில் ஒரு கல்லூரிதான் செயிண்ட் ஆண்டனி கல்லூரி. அதில் உள்ள ஆசிய ஆய்வு மையம் “சுயமரியாதை இயக்கமும், அதன் தாக்கங்களும்” (Self Respect Movement and its Legacies) என்ற தலைப்பில் ஒருங்கமைத்த கருத்தரங்கம் செப்டம்பர் 4,5 தேதிகளில் நடந்தேறியது. அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் ஜிம் மாலின்சனும், ஃபைசல் தேவ்ஜியும் இந்த கருத்தரங்கின் அமைப்பாளர்கள் ஆவார்கள். இந்த கருத்தரங்கம் குறித்த செய்திகள் பல்வேறு நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ளன.
உலகின் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள் பலர் இதில் பங்கேற்று கட்டுரைகள் வாசித்துள்ளனர். அபிமன்யு ஆர்ணி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம்; கணேஷ்வர், ஹைதராபாத் பல்கலைகழகம்; சுந்தர் சருக்காய், பேர்ஃபுட் பிலாசஃபர்; எஸ்.ஆனந்தி, எம்.ஐ.டி.எஸ்; கிருபா முனுசாமி, மிடில்சக்ஸ் பல்கலைகழகம்; விக்னேஷ் ராஜாமணி, கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; கார்த்திக் ராம் மனோஹர், நேஷனல் லா ஸ்கூல்; ஜெ.ஜெயரஞ்சன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு; ஆ.இரா.வெங்கடாசலபதி, எம்.ஐ.டி.எஸ்; கிறிஸ்டொஃபே ஜெஃபர்லோ, சையின்ஸ் போ, பாரிஸ்; சூரஜ் யாங்டே, ஹார்வார்டு பல்கலைகழகம்; பிரான்சிஸ் கோடி, டொராண்டோ பல்கலைகழகம்; மார்த்தா ஆன் செல்பி, ஹார்வார்டு பல்கலைகழம்; சாரா ஹோட்ஜஸ், கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; சுமதி ராமசாமி, டியூக் பல்கலைகழகம்; தாரிணி அழகர்சாமி, சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம்; கமலா விஸ்வேஸ்வரன், ரைஸ் பல்கலைகழகம்; சரோஜ் கிரி, டெல்லி பல்கலைகழகம் என முன்னணி ஆய்வாளர்கள் பங்கேற்று பங்களித்துள்ளனர்.
இந்த சிறப்புமிக்க கருத்தரங்கின் பகுதியாகத்தான் செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியுள்ளார். பகுத்தறிவுப் பகலவன் பெரியார் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துள்ளார். செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை இறுதிச் சிறப்புரையை புகழ்பெற்ற மூத்த மானுடவியல் ஆய்வாளர், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அர்ஜுன் அப்பாதுரை அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிகழ்வுகளின் பகுதியாக கார்த்திக் ராம் மனோஹரனும், ஆ.இரா.வெங்கடாசலபதியும் தொகுத்துள்ள கேம்பிரிட்ஜ் கம்பேனியன் டு பெரியார் என்ற ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் குறித்த ஆய்வுப்புலத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையக்கூடிய நூல் இது எனலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வில் முதல்வர் பங்கேற்றது, பெரியார் பட த்தை திறந்துவைத்ததும் திராவிட மாடல் அரசின் சித்தாந்த வேர்களை எடுத்துரைக்கும் சிறப்பு வாயந்தது. சுயமரியாதை என்ற சொல்லின் சிறப்பினை முதல்வர் எடுத்துரைத்து உரை நிகழ்த்தியுள்ளதை காணொலிகளில் காண முடிகிறது. திராவிடவிய அரசியலின் வரலாற்றுத் தொடர்ச்சியில் மற்றொமொரு மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைகிறது என்றால் மிகையாகாது. முதல்வருடன் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட திராவிட இயக்க ஆர்வலர்களும் பங்கேற்றுள்ளனர்.

பாஜக ஏன் பெரியாரை எதிர்க்கிறது?
இந்த நிகழ்ச்சி தரும் எழுச்சியை சகிக்க முடியாமல் பாஜக தலைவர் தமிழிசை பேசியுள்ள ஒரு காணொலி ஒன்று இணையத்தில் பரவலாகக் கிடைக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமே நடத்தவில்லை, அந்த வளாகத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து தி.மு.க நட த்தியுள்ளது என்றெல்லாம் பேசியுள்ளார். இதே போன்ற தகவலை தினமலர் நாளேடும் காணொலியாக வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்விற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று வலியுறுத்திச் சொல்கிறார்கள். கல்யாண மண்டபத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுப்பதுபோல தி.மு.க-வினர் வாடகைக்கு எடுத்து அதனை ஆக்ஸ்போர்டு பல்கலைகழக நிகழ்ச்சி என்று பொய் பிரசாரம் செய்வதாகக் கூறுகிறார்கள்.
முதலில் சுயமரியாதை உள்ள தமிழர்களாக நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரியாரைக் குறித்து கருத்தரங்கம் நடத்துவதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமையே தவிர, அதனால் பெரியாருக்கோ, தி.மு.க-விற்கோ தனியான பெருமை எதுவும் சேரப்போவதில்லை. திராவிட இயக்கத்தின் பெருமையெல்லாம் தமிழ் சமூகத்தை வர்ண தர்மத்தின் பிடியிலிருந்து விடுவித்து மானமுள்ள, சுயமரியாதையுள்ள தன்னுணர்வு பெற்ற சமூகமாக மாற்றி வருவதுதான். உலக வரலாற்றை படிப்பதற்குத்தான் பல்கலைகழகமே தவிர, பல்கலைகழகத்திற்காக வரலாறு நிகழ்வதில்லை.
அடுதத்ததாக நாம் மேலே சொன்னபடி கருத்தரங்க நிகழ்வுகளை தெளிவாக நாளேடுகளில் வாசித்து அறியலாம். நாம் சொன்ன பேராசிரியர்கள் மேடையில் முதல்வருடன் அமர்ந்திருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அரங்கத்தை வாடகைக்கு எடுத்ததுபோல பேராசிரியர்களாக யாரேனும் நடிக்கிறார்கள் என்றும்கூட சொல்வார்கள். அந்த பேராசிரியர்கள் நாம் நன்கு அறிந்தவர்கள்தான். அவர்கள் பெயர்களை கூகுள் செய்து அவர்கள் புகைப்படங்களைப் பார்த்துத் தெளியலாம். இவ்வளவு மலினமான பொய் பிரசாரத்தை ஏன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி.
இந்தக் காழ்ப்பிற்கு விடை தேடுவது கடினமல்ல. அதையும் இந்த கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம். வர்ண தர்மத்தை இந்தியக் குடியரசு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றவர் பெரியார். அதனையே குடியரசின் அடிப்படையாக க் கொள்ள வேண்டும் என்றவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தவாதி கோல்வால்கர்.
பொதுவாகவே இந்திய தேசியவாதிகள், சிந்தனையாளர்கள் பலரும் உறுதிபட மனு ஸ்மிருதி முன்வைக்கும் வர்ண தர்மத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று கூறியதில்லை. அவ்விதம் கூறுவது அந்த தர்மத்தை சமஸ்கிருதத்தில் எழுதி, இன்று வரை தங்களை அதன்படி உயர் பிறப்பாளர்களாக க் கருதிக்கொள்ளும் பிராமணர்களை வருந்தச் செய்யும் என்பதால் சற்றே நீக்கு போக்காகத்தான் அதைப்பற்றிப் பேசுவார்கள். அதனை முற்று முழுதாக எதிர்த்து பேசியவர்கள் பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகிய பேராளுமைகள்தான்.
பெரியார் அதனை பெரியதொரு மக்கள் இயக்கமாக மாற்றி. திராவிடர் கழகம் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக விட்டுச் சென்றுள்ளார்.அது இன்றுவரை வர்ண தர்ம மீட்பு வாத த்துடன் போராடுகிறது. அதுதான் அவர்களுக்கு இந்த காழ்ப்பு. இந்த மையப் பிரச்சினையை மறைத்து கடவுள் நம்பிக்கை, இந்து மதம் என்று ஏதேதோ பேசுவார்கள். ஆனால் திராவிட-தமிழ் மக்கள் ஏமாறுவதில்லை. அவர்கள் விரும்பும் தெய்வங்களை வழிபடுவார்கள்; பெரியாரின் சுயமரியாதை தத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள்.
பிரச்சினை மனிதர்களுக்குள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கூடாது என்பதுதானே தவிர கடவுளை வணங்குவது இல்லை. கடவுள் பெயரால் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதால்தான் பெரியார் கடவுளின் இருப்பையும் கேள்விக்கு உள்ளாக்கினார். அவர் அதையே தெளிவாக விளக்கவும் செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைத்து சமூகத்தையும் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் அவரைக் கொண்டாடவே செய்தனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பார்ப்பன வகுப்பைச் சார்ந்த வ.ராமசாமி, 1944-ஆம் ஆண்டு வெளியான தமிழ் பெரியோர்கள் என்ற நூலில் பெரியாரையே முதலில் சிறப்பித்து, கொண்டாடி எழுதியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியும் வர்ண தர்ம பித்தை அகற்றிவிட்டு, திராவிட நெறியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். அதுவே உண்மையான தேச நலனாக இருக்கும். அப்போது பெரியாரும் தேசியத் தலைவராகத் தெரிவார்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
https://minnambalam.com/periyar-portrait-at-oxford-university/
-
மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு!
Vhg செப்டம்பர் 09, 2025
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35, ம் ஆண்டு நினைவு இன்று(09/09/2025)ஆம் திகதி இந்த தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாநகரபகுதி எங்கும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை 09(/09/1990)ல் இடம்பெற்றது.
Y
இலங்கை இராணுவமும், முஷ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டுப்படுகொலைகளில் இதுவும் ஒன்றாகும்.
-
காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
09 Sep, 2025 | 09:57 AM

காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பும் குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல், துனிசியா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (09) ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காலநிலை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அவர்களும் இந்த கப்பலில் சென்றுள்ளார்.
“குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற “குடும்ப கப்பல்” என அழைக்கப்படும் முக்கிய கப்பல்களில் ஒன்று ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதை குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (GSF) உறுதிப்படுத்துகிறது.
போர்த்துகீசியக் கொடி ஏந்திய கப்பலில் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் அது உடனடியாக வெளியிடப்படும்” என அந்த அமைப்பு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224597
-
பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி
பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார்.
பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது.
மேலும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள நாளைய தினம் பிரதமர் பிரான்சுவா பேய்ரூவை அந்த நாட்டு ஜனாதிபதி மெக்ரோன் சந்திப்பார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
எவ்வாறாயினும் பிரான்ஸ் ஜனாதிபதியும் உண்மையை புரிந்து கொண்டு பதவி விலக வேண்டும் என நம்பிக்கை வாக்கெடுப்பை தோல்வியடைய செய்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmfbfuptp00b7o29nlq605s94 -
கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா!

பொன்சேகா வெளியிடும் தகவல்கள்
மலேசியாப் பொலிஸாரே கே.பி.யைக் கைது செய்தனர். இலங்கைக்கு கொண்டுவரப்படும் வரை அவர் கே.பி என்பது எமக்குத் தெரியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.கோத்தாபய ராஜபக்ச கே.பி.யை வீட்டுக்கு வரவழைத்தே உரையாடினார். அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர்மேலும் தெரிவிக்கையில், கே.பி.யை மலேசியப் பொலிஸாரே கைது செய்தனர். அது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார். குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதற்கமைய நால்வரடங்கிய சி.ஐ.டி குழு அங்கு சென்றது. அந்தக் குழுவுடன் மலேசியா வில்இருந்தும் குழுவொன்றும் வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே, கைதுசெய்யப்பட்ட வர் கே.பி என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர். கோத்தாபய ராஜபக்ச என்ன செய்தார்? 24 மணி நேரத்துக்குள் கே.பி.யை வீட்டுக்கு அழைத்தார். தனியாகப் பேச்சு நடத்தினார். அப்போது கே.பி. வசம்தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்துக்குப் பின்னர் கேபி விடுவிக்கப்பட் டார். அப்போது நான் இராணு வத்தில் இருக்கவில்லை. கே.பி வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது? அவை அரசுடமையாக்கப்படவில்லை. கேபியுடன் இவர்கள் தான் (ராஜபக்சக்கள்) கலந்துரையாடினார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்குதான் தெரியும். எனவே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.
https://newuthayan.com/article/கைது_செய்யப்பட்ட_கே.பி.யுடன்_தனித்து_உரையாடிய_கோத்தா!
-
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிட்டது!
adminSeptember 9, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் பயணம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்துகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தவறுவதன் மூலம் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (ORAC) பணியை பிரித்தானியா ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முக்கிய குழுவும் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஐ.நா.வுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் அய்யர் தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டார், மேலும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார்.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள நடவடிக்கையாக மாற்ற இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது.
அமர்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.https://globaltamilnews.net/2025/220202/
-
கொக்கென நினைத்தாயோ ?
ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்
தமிழாக்கம் : கார்த்திக்
பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலத்தில் அவர்களை சந்திக்க ரிஷி மார்கண்டேயர் அங்கே வந்தார். அப்பொழுது அவரிடம் யுதிஷ்டிரன் பெண்களை பற்றி உயர்வாக பேசினான். அந்த சமயத்தில் அவர்களுக்கு மார்க்கண்டேயர் ஒரு கதையைக் கூறினார். முன்னொரு காலத்தில் கௌசிகன் என்றொரு ப்ராமண பிரம்மச்சாரி வசித்து வந்தார். கடுமையான விரதங்கள் மூலம் தனது பிரம்மச்சரியத்தை காத்து வந்தார். ஒருநாள் மரத்தடியில் அவர் த்யானத்தில் இருந்த பொழுது அங்கே பறந்த கொக்கு ஒன்று அவரது தலையில் எச்சமிட்டது. அதனால் கோபமடைந்த கௌசிகன் கோபத்துடன் எரித்து விடும் எண்ணத்துடன் அதை பார்த்தார். அடுத்த நொடி அந்த கொக்கு எரிந்து சாம்பலானது. தான் நினைத்தது உடனே பலித்ததை எண்ணி பெருமை அடைந்தார்.
அடுத்த நாள், தனது தினசரி வழக்கப்படி பிக்ஷை எடுக்க சென்றார். அவர் சென்ற வீட்டுப் பெண்மணி, தனது வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்ததனால் அவரைக் காத்திருக்க சொன்னாள். அவள் வேலையை முடிக்கும் தருணத்தில் அவளது கணவன் வந்து விட அவனை கவனிக்க சென்று விட்டாள். அவனுக்கு உணவளித்தப் பின், கௌசிகனுக்கு பிக்ஷை இட வந்தாள். வெகுநேரம் காத்திருந்ததால் கோபமடைந்த கௌசிகன் அவளை கோபமாய் பார்க்க அவளோ ” நீ கோபத்துடன் பார்த்தால் எரிந்து விட நான் என்ன கொக்கா? நான் எனது தர்மத்தை சரியாக கடைப்பிடிக்கும் பெண்” என்றுக் கூறினாள்.

தான் கொக்கை எரித்தது இவளுக்கு எவ்வாறு தெரிந்தது என கௌசிகனுக்கு ஆச்சர்யம். அதைக் கண்ட அந்த பெண் “பார்த்தால் கற்றறிந்தவர் போல் இருக்கிறீர்கள். ஆனால் , எது தர்மம் என அறியாமல் உள்ளீர்களே? உண்மையான தர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கத்துக்கு நகரத்தில் வசிக்கும் தர்மவியாதரை சென்று சந்தியுங்கள்” எனக் கூறினாள்.
வியப்புடன் நகரத்திற்கு சென்ற கௌசிகனுக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. தனிமையான குடிலில் தவம் செய்து கொண்டிருக்கும் ஒருவரை எதிர்ப்பார்த்து சென்றவருக்கு தர்மவியாதர் கசாப்பு தொழில் செய்பவர் என தெரிந்ததும் அவர் என்ன தர்மத்தை தமக்கு சொல்லி விட முடியும் என்ற யோசனை தோன்றியது.
கௌசிகனை கண்டதும் “தர்மம் அறிந்த பெண்மணி அனுப்பியவர்தானே தாங்கள்? சற்று காத்திருங்கள். என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்” எனக் கூறி தனது வேலையை கவனிக்க துவங்கினார். மீண்டும் ஆச்சரியப்பட்ட கௌசிகன் அவருக்காக காத்திருந்தார். தன் வேலையை முடித்துக்கொண்டு கௌசிகனை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார் தர்மவியாதர். அங்கே சென்றும் எதுவும் கூறாமல் , அங்கே இருந்த அவரது வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்யத் துவங்கினார். அதுவரை தன்னைப் பற்றி மட்டும் எண்ணி வந்த கௌசிகனுக்கு உண்மையான தர்மம் என்னவென்று புரிந்தது. தனது வீட்டிற்கு திரும்பியவர் தனது பெற்றோரை கவனிக்கத் துவங்கினார்.
தங்கக் கூண்டில் இருந்து விடுதலை
வனவாசத்தின் பொழுது ஒருமுறை ரிஷி விபாண்டகர் வசித்த ஆசிரமத்தின் வழியாக சென்றனர் பாண்டவர்கள். அப்பொழுது அவர்களுக்கு விபாண்டகரின் மகனான ரிஷி ரிஷ்யஸ்ருங்கரை பாரிய கதையை லோமேஸர் அவர்களுக்கு கூறினார். விபாண்டகர், தன் மகனுடன் துறவிகளுக்கு உண்டான வாழ்வை வசித்து வந்தார். பொதுமக்களிடம் இருந்து மிகவும் தள்ளி தனியாக வசித்து வந்த காரணத்தினால் ரிஷ்யஸ்ருங்கர் மற்ற யாருடனும் பழகியதே இல்லை. தன் தந்தையிடம் இருந்து கற்று தேர்ந்த ஞானத்துடன், பிரம்மச்சரிய வாழ்வை கடைப்பிடித்ததால் உண்டான தூய்மை மற்றும் புனிதத்தினால் அவர் மிக அதிக சக்தி உடையவராக இருந்தார்.
அருகில் இருந்த அங்க தேசத்தில் ஒரு முறை கடுமையான வறட்சி ஏற்பட்டு அதனால் பஞ்சம் உண்டானது. அங்க தேச அரசனான ரோமபாதா, கற்றறிந்த ஞானிகளிடம் இதற்கு தீர்வை கேக்க, அவர்கள் ரிஷ்யஸ்ருங்கரை நாட்டுக்கு வரவழைக்க சொன்னார்கள். ரிஷ்யஸ்ருங்கர் எங்கு சென்றாலும் அங்கே மழை வரும். எனவே அவரை எப்பாடுபட்டாவது அழைத்து வர கூறினார்கள்.
அதன் பின், ரிஷ்யஸ்ருங்கரை அழைத்து வர ரோமபாதா திட்டம் தீட்டினான். நாட்டின் மிக சிறந்த அழகிகளை அழைத்து ரிஷ்யஸ்ருங்கரை தன் நாட்டுக்கு அழைத்துவர உத்தரவிட்டான். உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தால் அரசனின் கோபத்திற்கு உள்ளாக நேரிடலாம். அதே நேரத்தில், அதற்கு கட்டுப்பட்டு ரிஷியிடம் சென்றால் அவர் சபிக்க நேரிடலாம். எனவே பயந்து கொண்டே தகுந்த திட்டம் தீட்டினர் அந்த அழகிகள்.
ஒரு மிகப் பெரிய படகொன்றை தோட்டங்கள் நிறைந்த ஆசிரமம் போல அலங்கரித்து ரிஷ்யஸ்ருங்கரின் ஆசிரமம் அருகே கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் ரிஷி விபாண்டகர் எங்கோ வெளியே சென்றிருக்க, அதை உபயோகப்படுத்திக் கொண்ட அழகி தன்னை ஒரு இளம் பெண் துறவி போல் உருமாற்றிக் கொண்டு ரிஷ்யஸ்ருங்கரை காண சென்றாள். அது நாள் வரை , வேறு மனிதரையே பார்த்து அறியாத ரிஷ்யஸ்ருங்கர், அந்த இளம் துறவியை பார்த்தவுடன் மயங்கினார். அதை பயன்படுத்திக் கொண்டவள் ஆசை வார்த்தைகளாலும், மலர்களாலும் தன் தொடுகையாலும் அவரை தன் வசப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றாள்.
சிறிது நேரம் கழித்து தன் ஆசிரமம் திரும்பிய விபாண்டகர் எப்பொழுதும் தெளிந்து இருக்கும் தன் மகனின் முகமானாது இப்பொழுது குழம்பி எதோ ஒன்றில் மயங்கி இருப்பது போல் இருப்பதைக் கண்டு, ரிஷ்யஸ்ருங்கரிடம் என்ன நடந்தது என விசாரித்தார்.
நடந்ததை உள்ளவாறு அவர் விவரிக்க, கோபம் கொண்ட விபாண்டகர் அந்த இளம் பெண் துறவியை தேடி காடு முழுவதும் சுற்றினார். ஆனாலும் அவள் அகப்படவில்லை. சிலநாள் கழித்து விபாண்டகர் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் மீண்டும் அந்த படகு அங்கே வந்தது. இம்முறை ரிஷ்யஸ்ருங்கர் படகில் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயே படகை அங்கிருந்து நகர்த்தி சென்றனர். அந்தப் படகு அங்க தேசத்தில் நுழைந்து, ரிஷ்யஸ்ருங்கர் கரையிலே காலடி வைத்தவுடன் நாடு முழுவதும் மழை பெய்து மண்ணை நனைத்தது. ரிஷ்யஸ்ருங்கருக்கு ராஜ உபச்சாரம் தந்து கௌரவித்த ரோமபாதா, தன் மகள் சாந்தாவையும் அவருக்கு மணம் செய்து வைத்தான்.
நடந்ததை அறிந்த விபாண்டகர் கோபத்துடன் அங்க தேசத்தை நோக்கி சென்றார். இதை முன்பே எதிர்பார்த்திருந்த அரசன், அவர் வரும் வழியில் அவருக்கு உபசாரங்கள் செய்வித்து மனம் குளிர்விக்க ஏற்பாடுகள் செய்திருந்தான். கோபத்துடன் தன் பயணத்தை துவங்கிய ரிஷி , அவனின் உபச்சாரங்களால் மனம் குளிர்ந்தார்.
தன் அரண்மனைக்கு வந்த ரிஷி விபாண்டகரை அவருக்கு உரிய மரியாதைகள் செய்வித்து நடந்ததை அவருக்கு விளக்கினான் ரோமபாதா. பின், மணமக்களை ஆசிர்வதித்த விபாண்டகர், ஆண் குழந்தை பிறக்கும் வரை அரணமனையில் இருந்துவிட்டு அதன் பின் ஆசிரமம் திரும்ப ரிஷ்யஸ்ருங்கருக்கு உத்தரவிட்டார்.
அவர்களுக்கு ஆண் மகவு பிறந்ததும் கானகம் சென்ற தம்பதியர், அதன் பின் துறவு வாழ்க்கை வாழ்ந்தனர்.
-
உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்!

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார்.
உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பு 2022 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து ரஷ்யா சுமார் $985 பில்லியன் (£729 பில்லியன்) எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய கொள்முதல் நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிசக்தி கொள்முதலை வியத்தகு முறையில் குறைத்துள்ளது – ஆனால் முழுமையாக நிறுத்தப்படவில்லை.
ஜூன் மாதத்தில், 2027 ஆம் ஆண்டுக்குள் பிரஸ்ஸல்ஸ் அனைத்து கொள்முதலையும் நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது.
கடந்த மாதம், ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கான பதிலடியாக, இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது.
எனினும் இந்திய அரசாங்கம், தனது மக்களின் பொருளாதார நலன்களுக்காக எண்ணெய் வாங்குவதில் “சிறந்த ஒப்பந்தத்தை” தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறியுள்ளது.
கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் சீனாவிற்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதாக ரஷ்யா கூறியது.
இதனிடையே, கடந்த மாதம் அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டின் உச்சிமாநாடு நடத்தியதிலிருந்து ரஷ்யா உக்ரேன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மனிதப் புதைகுழியா?; உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது காணாமல் போனோர் அலுவலகம்

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வட பிராந்தியத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மேற்படி பகுதிக்கு சென்றது
அந்தப் பகுதி சந்தேகத்துக்கிடமாக இருக்கின்றபடியால் அதனை துரிதமாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 2019 ஆம் ஆண்டிலேயே நாம் விடுத்திருந்தோம். அந்த விடயம் பொருளாதார சிக்கல் கொரோனாவுக்கு பிறகு தற்போது தலை தூக்கி இருக்கிறது.
மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த இடத்தில் அது திறக்கப்படுகிறதோ என்ற அச்ச சூழ்நிலை காரணமாக அந்த விவகாரம் மேற்கிளம்பியுள்ளது.
இந்த விடயப் பரப்புகளில் எங்கள் கரிசனை அதிகமாக இருக்கும். மைதானம் அமைக்கப்படுவதாக இருந்தால் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அதன் பின்னரே இந்த மைதானம் அமைக்கப்பட வேண்டும்.அந்தப் பகுதி அந்த இடத்தில் இருக்குமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வழக்கு வரும் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலம் அதனை முன்வைக்கும் – என்றார்.
-
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் நீதியரசர் நியமனம்!
உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அரச தரப்பு சட்டத்தரணியாக இணைந்துக் கொண்டார். அதன்பின்னர் மேலதிக சொலிட்டர் ஜெனராலாக பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியால் எஸ்.துரைராஜா ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டு அதே ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://newuthayan.com/article/நீதிச்_சேவைகள்_ஆணைக்குழுவின்_உறுப்பினராக_தமிழ்_நீதியரசர்_நியமனம்!
-
இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்
செய்திகள்
போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் இதன்போது சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
-
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை!
adminSeptember 8, 2025

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார்.
ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
-
-
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம்

— வீரகத்தி தனபாலசிங்கம் —
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது.
இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகப்பரப்பிலும் பெருமளவில் விமர்சனரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விஜயத்தின் மூலமாக இலங்கை ஜனாதிபதி எத்தகைய செய்தியை, யாருக்கு கூறுவதற்கு முயன்றார் என்ற கேள்வியைச் சுற்றியவையாகவே அந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் அரசியல் அவதானியுமான நிருபமா சுப்பிரமணியன் “இலங்கையின் ஒரு தீவிடமிருந்து சமிக்கை” ( Signal From a Lankan island) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘சீனாவில் ஜனாதிபதிகள் சி ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை பாராட்டியபோது இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆரவாரமின்றி ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகுந்த நல்லுறவு நிலவுகின்ற ஒரு நேரத்தில், அதுவும் கச்சதீவு தொடர்பில் புதுடில்லி எந்தப் பிரச்சினையையும் கிளப்பியிராத வேளையில், புதுடில்லிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய தேவை ஜனாதிபதி திசநாயக்கவுக்கு இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னமும் ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்புலத்தில் மாநில அரசியல்வாதிகள் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முனைப்புடன் முன்வைக்கத் தொடங்கியிருப்பதால் அவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்காக திசநாயக்க அந்த தீவுக்கு விஜயம் செய்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து இருக்கிறது.
கச்சதீவுக்கு செல்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி திசநாயக்க அந்தத் தீவு இலங்கை மக்களுக்குச் சொந்தமானது என்றும் பலவந்தமாக அதை பறிக்க எவரையும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
எது எவ்வாறிருந்தாலும், திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் அடையாளபூர்வமான கனதியொன்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம் கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூட கச்சதீவை பார்வையிட வேண்டும் என்று அக்கறை காட்டவில்லை. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த எந்தவொரு பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ கச்சதீவுக்கு விஜயம் செய்ததில்லை. இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்க்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் 285 சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்தத்தீவுக்கு விஜயம் செய்வதற்கு அக்கறை காட்டாமல் இருந்தார்களோ தெரியவில்லை. அந்தத் தீவில் காலடிவைத்த முதல் இலங்கை அரச தலைவராக ஜனாதிபதி திசநாயக்க “வரலாற்றுப் பெருமையை” தனதாக்கிக் கொண்டிருக்கிறார்.
அவரின் அந்த விஜயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு “யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான பல அங்குரார்ப்பண நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் இன்று (01) பங்கேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க கச்சதீவுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். கடற்தொழில், நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வடபகுதி கடற்படைத் தளபதி றியர் அட்மிறல் புத்திக்க லியனகமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்” என்று மாத்திரம் குறிப்பிட்டது.
பாக்குநீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கு தனது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் ஒரு “துணிச்சலான சமிக்கையாக” ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று இன்னொரு கருத்து இருக்கிறது. ஆனால், வடபகுதி மீனவர்கள் தங்களது கரையோரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் நெருக்கமாக வந்து கடல் வளங்களைச் சூறையாடுவது குறித்து கவலைப்படுகிறார்களே தவிர, கச்சதீவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதாக கூறமுடியாது.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போன்று கச்சதீவை மீண்டும் இந்தியா தனதாக்கிக் கொள்வதன் மூலம் மாநில மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும் என்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களுக்கு மாத்திரமல்ல, கிழக்கிலங்கை கரையோரத்துக்கும் நெருக்கமாக இந்திய மீனவர்கள் எதற்காக வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து நிருபமா சுப்பிரமணியன் தனது கட்டுரையில் முன்வைத்திருக்கும் கருத்து மிகுந்த கவனத்துக்குரியது.
“இழுவைப்படகுகள் போன்ற நீண்டகாலத்துக்கு பயன்படுத்த முடியாத மீன்பிடி முறைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் கடைப்பிடித்து வந்ததால், பாக்குநீரிணையின் இந்தியப் பக்கத்தில் இருந்த கடல் வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கண்டிப்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் விளைவாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் பெருமளவு வளங்களை கொண்டதாக இருந்த பாக்குநீரிணையின் இலங்கைப் பக்கம் இந்திய மீனவர்களை கவர்ந்திழுக்கிறது.
“அனேகமாக தினமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் செய்கின்ற ஊடுருவல்கள் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதிலும் படகுகளையும் வலைகளையும் பறிமுதல் செய்வதிலும் வந்து முடிகிறது. ஆனால், மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் அல்லது மீன்பிடித்துறையை பல்வகைப்படுத்துவதில் உள்ள பிரதான சவால்களை கையாளுவதற்கு பதிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீனவர்களின் சகல பிரச்சினைகளுக்கும் கச்சதீவே பதில் என்ற மாயையை ஊக்குவிக்கிறார்கள்.” என்று அவர் எழுதியிருக்கிறார்.
கச்சதீவை இந்தியா மீண்டும் சொந்தமாக்க வேண்டும் என்று இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் அரசாங்கங்கள் இதுவரையில் நான்கு தீர்மானங்களை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியிருக்கின்றன. கச்சதீவு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா செய்த உடன்படிக்கைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தற்போது அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 15 ஆம் விசாரணைக்கு வருகிறது.
இத்தகைய பின்புலத்தில் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் தனது கட்சியின் மகாநாட்டில் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“இலங்கை கடற்படையின் தாக்குதல்களினால் இதுவரையில் சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பதற்கு பெரிதாக எதையும் செய்யுமாறு நான் பிரதமர் மோடியைக் கேட்கவில்லை. மிகவும் சிறிய ஒரு விடயத்தை செய்யுமாறுதான் கேட்கிறேன். எமது மீனவர்களின் பாதுகாப்புக்காக இப்போதாவது கச்சதீவை இலங்கையிடமிருந்து பிரதமர் மீட்டெடுக்க வேண்டும்” என்று விஜய் கூறினார்.
இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “தேர்தல்காலப் பேச்சு” என்று அதை அலட்சியம் செய்தார். “தென்னிந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்களைக் கூறுவார்கள். இது முதற்தடவை அல்ல. முன்னரும் கூட கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்தல் பிரசாரங்களின்போது முன்வைக்கப்பட்டன” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயத்துக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை (4) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய அரசாங்க பேச்சாளரான சுகாதார அமைச்சர் நாலிந்த ஜயதிஸ்ஸ தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக கூச்சல்களுக்காக ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்லவில்லை என்றும் இலங்கைக்கு சொந்தமான அந்த தீவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை மக்களின் உணர்ச்சிகளை கிளறக்கூடிய கோரிக்கைகளை சிறிய உதிரிக்கட்சிகள் மாத்திரமல்ல, பிரதான கட்சிகளும் கூட தேர்தல் காலங்களில் முன்வைக்கத் தவறுவதில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை போன்றவை அவற்றில் முக்கியமானவை. தேர்தல்கள் முடிவடைந்ததும் அந்த கோரிக்கைகளின் உக்கிரம் தணிந்து விடுவதும் வழமை.
கடந்த வருடம் புதிதாக கட்சியை தொடங்கி அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜயை பொறுத்தவரை, மற்றைய அரசியல்வாதிகளை விடவும் முற்றிலும் வேறுபட்டவராக தன்னை காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பல தடவைகள் அறிவித்திருக்கின்ற போதிலும் கூட, மீனவர் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியில் அந்தத் தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்துக்கு எதிரான தீவிரமான தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தனது வழமையான தான்தோன்றித்தனமான பாணியில் கச்சதீவை இந்தியாவிடமிருந்து மீட்காவிட்டால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். விஜயின் அரசியல் பிரவேசத்தின் விளைவாக தனது கட்சியின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சும் சீமானுக்கு இனத்துவ தேசியவாத உணர்ச்சிகளை தூண்டிவிட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் இருப்பதாக தெரிகிறது.
வழமையாக தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளே கச்சதீவுப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் கிளறுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு போக்கில் 2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கூட பாரதிய ஜனதாவுக்கு மாநில மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக கச்சதீவுப் பிரச்சினை பயனபடுத்துவதில் அக்கறை காட்டினர்.
இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகவும் கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மோடியும் ஜெய்சங்கரும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாக்குநீரிணையில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமுமே முக்கிய காரணம் என்று தேர்தல் மேடைகளில் பேசினர்.
கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உடன்படிக்கை தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின்போது பிரச்சினை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அவர் கச்சதீவைப் பற்றி பேசியதாக செய்தி எதுவும் வந்ததாக இல்லை.
காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்துக்காக கச்சதீவு உடன்படிக்கை பற்றி மோடியும் ஜெய்சங்கரும் பேசினார்களே தவிர, அந்தத் தீவை மீட்டெடுப்பது குறித்து எதுவும் பேசவில்லை. அடுத்த வருடம் ஏப்ரில் — மே மாதங்களில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் மோடி கச்சதீவு விவகாரத்தை மற்றைய கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் பெருமளவுக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் அறிகுறிகளை தற்போது இருந்தே காணக்கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது.
திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
விமர்சனம் : மதராஸி!
7 Sep 2025, 11:07 AM

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா?
முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்?
தியேட்டரில் ‘மதராஸி’ தரும் திரையனுபவம் அந்த கேள்வியைத் தவிடுபொடியாக்கியிருக்கிறதா?
’ஆபத்பாந்தவன்’ பார்முலா!
மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற ‘ஆக்ஷன்’ படங்களின் கதை என்னவாக இருக்கும்?
மக்களை ஆபத்திற்கு உள்ளாக்குகிற வகையில் சில பிரச்சனைகளை வில்லன்கள் இழுத்துக் கொண்டுவருவார்கள். அதனைச் சமாளிக்க முடியாமல் எல்லோரும் திணறும் நேரத்தில், அந்த களத்திற்குள் ஹீரோ வருவார். வில்லனை நேருக்கு நேராக எதிர்கொண்டு வெல்வார். அவரே எல்லோரையும் காக்கிற ‘ஆபத்பாந்தவன்’ என்பதைப் பாதிப்படத்திலேயே உணர்த்திவிடுவதே இப்படிப்பட்ட படங்களின் சிறப்பு. நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் அதனையே விரும்புவார்கள் என்பதே திரையுலகின் நம்பிக்கை.

கிட்டத்தட்ட அதனைப் பிரதிபலித்திருக்கிறது ‘மதராஸி’ கதை.
பெருமளவில் துப்பாக்கிகளைச் சுமந்துகொண்டு சில ட்ரக்குகள் தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுகின்றன. அதனை முன்னரே அறிந்து தடுக்க முயற்சிக்கின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். அவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை.
அந்த நிகழ்வில் காயம்பட்ட என்.ஐ.ஏ குழு அதிகாரியின் முன்னே சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார் ஒரு இளைஞன். காதலி தன்னைவிட்டுச் சென்றுவிட்டார் எனத் தற்கொலை செய்யத் துடிப்பவர் அந்த நபர். அவரது இருப்பு அந்த அதிகாரியை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.
இந்த நிலையில், அந்த கும்பல் எங்கிருக்கிறது என்ற விவரம் தெரிய வருகிறது. அந்த இடத்தைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துவது அபாயகரமானது என்பதை அறிந்தவுடன், ‘தற்கொலைப்படை நடவடிக்கை’ போன்ற ஒன்றைச் செய்யலாம் என்று திட்டமிடுகிறார் அந்த அதிகாரி.
அதற்காக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் அந்த இளைஞனை இந்த பிரச்சனைக்குள் தள்ளுகிறார்.
அந்த இளைஞரும் அந்த துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஆலைக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில், அந்த இளைஞரைத் தேடி அவரது காதலியும் என்.ஐ.ஏ. அலுவலம் வருகிறார்.
ஆலைக்குள் சென்ற இளைஞர் அந்த இடத்தைத் தகர்க்க முற்படுகையில், அந்த கும்பலின் தலைவர் அவர் கையில் சிக்குகிறார்.
அதனை அவர் அந்த அதிகாரியிடம் தெரிவிக்கிறார். அதேநேரத்தில், அந்த கும்பலைச் சேர்ந்த இன்னொருவரிடமும் அத்தகவலைத் தெரிவிக்கிற கட்டாயம் உருவாகிறது.
அப்போது, ‘அந்த கும்பலின் தலைவனைச் சுட்டுவிடு’ என்கிறார் அந்த அதிகாரி. ‘அப்படிச் சுட்டால் உன்னைச் சார்ந்தவர்களை துவம்சம் செய்துவிடுவேன்’ என்கிறார் எதிர்முனையில் இருக்கிற அந்த கும்பலைச் சேர்ந்தவர்.
அவர்கள் சொன்னதைக் கேட்டபிறகு, அந்த இளைஞர் என்ன செய்தார்? அந்த இளைஞனின் காதலி ஏன் அவரை விட்டுச் சென்றார்? முடிவில், ‘துப்பாக்கி’ பிரச்சனை என்னவானது என்று சொல்கிறது ’மதராஸி’யின் மீதி.
ஆக்ஷன் படங்களுக்கான சிக்கல்!
குறிப்பிட்ட காலகட்டத்தில் சில ‘ஆக்ஷன்’ படங்கள் பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், ’அதே பார்முலா’வில் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிற சில படங்கள் சில காலம் கழித்து வெளியாகித் தோல்வியைத் தழுவும். எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டு இப்போதுவரை தொடர்கிறது அந்த சிக்கல்.
ஏ.ஆர்.முருகதாஸும் அப்படியொரு சிக்கலைச் சமீப ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறார்.
‘கஜினி’ சூர்யா போல, ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் ப்ளஸ் அல்லது மைனஸாக இருக்கும்.
’மதராஸி’ திரைக்கதையில் இரண்டு, மூன்று முக்கியத் திருப்பங்கள் இருக்கின்றன.
வில்லன்களின் உலகத்திற்குள் நாயக பாத்திரம் காலடி எடுத்து வைப்பது அதிலொன்று. அதற்கான விதையாக, ‘பிளாஷ்பேக்’கள் இதில் இருக்கின்றன. நாயகியின் இருப்பும் அதையொட்டி கதையில் நியாயப்படுத்தப்படுகிறது.
இடைவேளையை ஒட்டி, அந்த வில்லன்களோடு நாயகனுக்கு நேரடியாக மோதல் ஏற்படுவது இன்னொரு திருப்பம்.
இவையிரண்டும் ‘முருகதாஸின் வெற்றிகரமான ஆக்ஷன் பட’ அனுபவத்தைத் தருகின்றன.
இப்படத்தின் பின்பாதியிலும் சில திருப்பங்கள் இருக்கின்றன. அவை ‘க்ளிஷே’க்களாக தெரிகின்றன.
மற்றபடி, ஒரு வழக்கமான ஆக்ஷன் படத்திற்கான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது ‘மதராஸி’.
அதற்கு சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அருண் வெஞ்சாரமூடுவின் தயாரிப்பு வடிவமைப்பு, அனிருத்தின் பின்னணி இசை ஆகியன துணை நிற்கின்றன.
அனிருத் இசையில் ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ பாடல்கள் ஓகே ரகம். ஆனால், ‘தூள் கிளப்பும்’ ரகத்தில் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்பது குறையே.
விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட பல நுட்பங்கள் இதில் சிறப்புற அமைந்திருக்கின்றன.
கமர்ஷியல் படங்களில் நாயக பாத்திரம் என்றால் ‘கெத்தாக’ இருக்க வேண்டுமென்று நம்புவதில், அதனை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பதில் சில நடிகர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.
மிகச்சில நாயகர்கள் அந்த எல்லைக்கோட்டில் இருந்து அவ்வப்போது விலகி நிற்பார்கள். அப்படியொரு பாத்திர வார்ப்பினை இதில் முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
என்ன, குழந்தைகளும் ரசிக்கிற அவரது படத்தில் ‘நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்’ என்று அடிக்கடி வசனம் பேசுவதைத்தான் ஏற்க முடியவில்லை. அந்த இடங்களைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

நாயகி ருக்மிணி வசந்த் அழகாகத் திரையில் காட்டப்பட்டிருக்கிறார். ஆனாலும், ‘ரொம்ப மெச்சூர்டு’ என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது.
ஒரு காட்சியில் ‘இப்பதான் நல்ல வொய்ப் மெட்டீரியலா ஆயிருக்கே’ என்று சிவகார்த்திகேயன் வசனம் பேசுவார். அது போன்ற இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த படத்திற்கு இவர் தேவையில்லைதான்.
வில்லனாக இதில் வித்யுத் ஜாம்வால், சபீர் கல்லாரக்கல் தோன்றியிருக்கின்றனர். இருவருக்குமே தனித்தனியாகச் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. இருவருமே அதில் கலக்கியிருக்கின்றனர். ஆனாலும், பல படிகள் முன்னே நிற்கிறார் வித்யுத். நாயகனாகத் தொடங்கிவிட்டார் என்பதற்காகவே, அவருக்காகப் பிரத்யேகமாகச் சில ‘பில்டப்’களை இதில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தில் பிஜு மேனன், விக்ராந்த் முக்கியப் பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டபோதும், அது திரைக்கதையில் அடிக்கோடிடும் வகையில் அமையவில்லை.
இவர்களோடு தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் உட்படச் சிலர் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர். வினோதினி வைத்தியநாதன், சந்தானபாரதி போன்றவர்களும் அதில் அடக்கம்.
இன்னும் சித்தார்த் சங்கர், ரிஷி ரித்விக் உட்படச் சிலர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு நடுவே விமலா ராமன் போன்ற சிலரும் ‘ஒப்புக்கு சப்பாணியாக’ச் சில ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர்.
மேற்சொன்னவற்றில் இருந்து இப்படத்தில் நாயகி தவிர்த்து பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைவு என்பது புரிந்துவிடும்.
தற்போது இப்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துகள் கலவையாக உள்ளன.
இப்படம் இதற்கு முன் வந்த ஏ.ஆர்.முருகதாஸின் படங்களை நினைவூட்டுகிற வகையில் உள்ளது. அதேநேரத்தில், சமீபத்திய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ‘மதராஸி’ உள்ளதா என்ற கேள்வி அவ்விஷயத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மேற்சொன்ன இரண்டும் ஒன்றிணைகிறபோது சில முரண்கள் எழும். அவை இப்படத்திற்கான பலவீனங்கள்.
லாஜிக் மீறல்கள் என்று பார்த்தால் ‘மதராஸி’யில் கணிசமாகச் சிலவற்றை நம்மால் கண்டறிய முடியும்.
அதேநேரத்தில் சமீபகாலமாகத் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான ‘பெரிய நாயகர்களின்’ ஆக்ஷன் படங்களை ஒப்பிடுகையில் இப்படத்தின் கதை சொல்லலும் காட்சியாக்கமும் நம்மை பெரிதாக அயர்ச்சியுற வைக்காது. இது தமிழைவிடத் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெறவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை மேற்சொன்னது நிகழாவிட்டால், இப்படத்தை ஓடிடியிலோ, தொலைக்காட்சிகளிலோ காணும்போது ‘இந்த படம் நல்லாத்தானே இருக்கு’ என்று அதே ரசிகர்கள் சொல்லலாம். அதற்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது ‘மதராஸி’.
மற்றபடி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துவிட்டால் அற்புதமான ’கமர்ஷியல் பட அனுபவம்’ கிடைக்கும் என்று அவர்களது ரசிகர்கள் நம்பினாற் போன்றதொரு விஷயத்தை ‘மதராஸி’ நிகழ்த்தவில்லை..!
https://minnambalam.com/sivakarthikeyan-madharasi-movie-review/
-
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது.அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார். கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி வைத்துள்ளார். இடையில் ஒரு சாகசப் பயணமாக கச்சதீவுக்கும் போய் வந்திருக்கிறார்.
கடந்த ஓராண்டு கால பகுதிக்குள் வடபகுதிக்கு மட்டும் 1250 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் முல்லைத்தீவில் வைத்துச் சொன்னார். கடந்த கிழமை வடக்கில் அவர் மண்டை தீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான அடிககல்லை நாட்டினார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திக்கான வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்.நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்தார். வன்னியில் தெங்கு முக்கோணத் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தார். வவுனியாவில் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தார். முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.”உங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று முல்லைத்தீவில் வைத்து அனுர கூறினார்.
அபிவிருத்தி வேண்டும். அதில் சந்தேகமில்லை. போரால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து அந்த பாதிப்பில் இருந்து விடுபடாதவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் தங்களைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். எனவே அபிவிருத்தி வேண்டும்.
ஆனால் தமிழ் மக்கள் போராடியது அபிவிருத்திக்காக அல்ல. அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளுக்காகத்தான். அபிவிருத்தி என்பது ஒரு சமூகம் அதன் நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டியது. அது அதன் நோக்கு நிலையிலிருந்து அபிவிருத்தியைத் திட்டமிடுவதற்கு அவசியமான கூட்டு உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனது கடலின் மீதும், துறைமுகங்களின் மீதும்,காட்டின் மீதும்,நிலத்தின் மீதும் அதன் வளங்களின் மீதும் அதிகாரத்தைக் கொண்டிராத ஒரு மக்கள் கூட்டமானது தனக்குரிய அபிவிருத்தியைத் தானே திட்டமிட முடியாது.
அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தாமல் அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பது இனப்பிரச்சினையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தும் ஓர் உத்திதான்.
எதை அபிவிருத்தி செய்வது? எப்பொழுது செய்வது? எப்படிச் செய்வது? யாரிடம் உதவி எடுப்பது? போன்ற எல்லாவற்றையும் திட்டமிடுவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிய கூட்டுஉரிமைகள் வேண்டும். அந்தக் கூட்டு உரிமைகள் அதாவது அரசியல் உரிமைகளைக் கேட்டுத்தான் தமிழ் மக்கள் போராடினார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும் வரையிலும் அதாவது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் உறுதி செய்யப்படும் வரையிலும் அபிவிருத்தியைச் செய்யாமல் இருக்க முடியாது என்பதனை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தமிழ்மக்கள் தமது கூட்டுரிமைக்கான கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் எப்பொழுதும் இருக்கும்.
அனுர அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின்போது தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வீட்டில், தட்டாதெருவில் தங்கியிருக்கிறார். இதற்கு முதல் முறை யாழ்ப்பாணம் வந்த பொழுது அவர் குருநகர் மத்தியூஸ் வீதியில் உள்ள க்யூடெக் அலுவலகத்திற்கு சற்று நேரே உள்ள ஒரு நண்பரின் வீட்டில்தான் இளைப்பாறிக் ,குளித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிட்டார். கடந்த கிழமை புதுக்குடியிருப்புக்குச் சென்ற போது அங்கே தன்னுடைய கட்சிக்காக உழைக்கும் ஒருவருடைய வீட்டில் மதிய உணவை எடுத்தபின் அந்த வீட்டுக் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொண்டார். பொதுவாக வடக்குக்கு வரும் ஜனாதிபதிகள் இங்குள்ள உயர்தர விடுதிகளில்தான் தங்குவார்கள். பாதுகாப்பு ஒரு காரணமாகக் கூறப்படும். ஆனால் அனுர தன் பழைய நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளில் தங்குகிறார்; உணவருந்துகிறார்; குளித்து உடுப்பு மாற்றிக் கொள்கிறார். சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு எளிமையான, எளிதில் கிடைக்கக்கூடிய தலைவர் என்ற அபிப்பிராயம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் மத்தியிலும் அப்படி ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.
அவர் எந்தப் பிம்பத்தை கட்டியெழுப்பினாலும் இறுதியாக நிலைக்கப் போகும் பிம்பம் எது என்பதை இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வு எது என்பதுதான் தீர்மானிக்கப் போகிறது.
தேசிய மக்கள் சக்தி,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை அதன் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதன் தேர்தல் அறிக்கையிலும் காண முடிந்தது. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமென்று ஏற்றுக்கொண்டால்தான் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்யத் தேவையான கூட்டு உரிமைகளை ஏற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கம். மயிலிட்டித் துறைமுகம் எனப்படுவது ஒரு காலம் இலங்கைத்தீவின் முன்னணி கடல் வாணிபத் துறைமுகமாக விளங்கியது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையைக் கொண்டவர்கள். போருக்கு முன்பு தீவின் மொத்தக் கடலுணவில் கிட்டத்தட்ட 40 விகிதம் வடக்கிலிருந்தே கிடைத்தது. வடக்கில் மயிலிட்டிதான் முன்னணித் துறைமுகமாகக் காணப்பட்டது. போரில் அது உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் விழுங்கப்பட்டது. விளைவாக மயிலிட்டி அதன் சோபையை, பொலிவை இழந்து விட்டது. அதன் மக்கள் இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து மெலிந்து போய்விட்டார்கள். தொடர்ச்சியான இடப்பெயர்களால் ஒரு தலைமுறை அதன் பாரம்பரிய தொழில் தொடர்ச்சியை,தொழில் திறன்களின் தொடர்ச்சியை இழந்து வருகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தியை ஜனாதிபதி தொடக்கி வைத்திருக்கிறார்.
.ஆனால் மயிலிட்டி அமைந்திருக்கும் அதே பிரதேசத்தில் சில கிலோமீட்டர் தொலைவில்தான் தையிட்டி அமைந்திருக்கிறது. அங்கு கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரையானது சிங்கள பௌத்த மயமாக்கலின்,நிலப் பறிப்பின் ஆகப்பிந்திய குறியீடாக நிற்கிறது. தையிட்டி விகாராதிபதி மயிலிட்டியில் நடந்த வைபவத்துக்கு வருவாராக இருந்தால் அது ஒரு விவகாரமாக மாறும் என்று கருதியதனால் அந்த வைபவத்துக்கு எந்த மதத் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மண்டைதீவில் வைத்து அனுர தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
மயிலிட்டியில் அபிவிருத்தி;தையட்டியில் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்தமயமாக்கலும். இது தற்செயலான முரண்பாடு அல்ல. இவை இரண்டுமே ஒரே நோக்கத்தை கொண்ட அரசு இயந்திரத்தின் இரு வேறு செயற்பாடுகள்தான். ஒன்று வெளிப்படையாக ஆக்கிரமிப்பைச் செய்கின்றது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய நிலத்தின் மீதும் கடலின் மீதும் உரிமை இல்லை என்பதனை அது நிரூபிக்கின்றது. இன்னொன்று தமிழ் மக்களை அபிவிருத்திக்குள் கரைத்து விட முயற்சிக்கின்றது. அதனால்தான் திரும்பத்திரும்பக் கூறவேண்டியிருக்கிறது,தமிழ் மக்கள் கேட்பது அபிவிருத்தியை அல்ல.அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை என்று.
கடந்த வாரம் அனுர யாழ்ப்பாணத்தில் நின்ற அன்று செம்மணியில் ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணிப் புதைகுழியை உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு களமாக அரசாங்கம் கையாண்டு வருகிறது. புதுக்குடியிருப்பில் அனுர ஒரு சிறு பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு படம் எடுத்திருக்கிறார். அதுபோல ஒரு சிறு பிள்ளையை அணைத்தபடி செம்மணியில் ஒரு தாய் புதைக்கப்பட்டார். அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் நீதி கிடைத்தால்தான் புதுக்குடியிருப்பில் அனுர எடுத்த படத்துக்கு ஒரு வரலாற்றுப் பெறுமதியிருக்கும். இல்லையென்றால் அது வரலாற்றின் குப்பை கூடைக்குள் எறியப்பட்டுவிடும். ஏனென்றால் “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” என்று மார்க்சிஸ்டுக்கள் கூறுவார்கள்.
-
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு
07 Sep, 2025 | 04:05 PM

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் வற்புறுத்தி வந்தனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராக கருத்து எழுந்தது. இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலக அவர் மறுத்து விட்டார்.
இந்த சூழலில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது. மேலவையில் மொத்த எண்ணிக்கை 248. பெரும்பான்மையை நிரூபிக்க 3 ஆசனங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதில் தோல்வி கண்டுள்ளது எல்டிபி கூட்டணி. இந்த நிலையில் தான் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்
07 Sep, 2025 | 03:51 PM

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்கு 1980 இல் பிறந்த ஷபானா, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.
2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்த ஷபானா, 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, உள்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
-
கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
07 Sep, 2025 | 11:11 AM

(நா.தனுஜா)
இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 13 பேரை சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்துச்சென்று, அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அந்நாட்டு அரசாங்கம், அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு இந்நகர்வு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் பங்கேற்பதற்கு இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான கூட்டாட்சித் திணைக்களத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயலாளரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அக்கட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கலாநிதி உபாலி பன்னிலகே, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்ததின் செயலாளர் சந்திம ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நிலாந்தி கொட்டஹச்சி மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.சி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
சுவிட்ஸர்லாந்தில் 8 நாட்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்படவிருப்பதுடன் முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன.
இச்செயலமர்வானது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குமான வாய்ப்பை இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கை அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சுவிஸ் அரசியல் முறைமையின் முக்கிய கூறுகளை உள்வாங்குவதற்கும், பல்லின மற்றும் பன்மொழி சமூகங்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அறிந்துகொள்வதற்கும் இது உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
-
மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்
தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் இரண்டு வருடம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது.
எனினும் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட 3025 ஹெக்டயர் நிலப்பரப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதற்கான எந்த பதிவும் இடம்பெறவில்லை.
இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம்
கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடையவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வருகிறது.
எனவே கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-
-
விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்றும் இதன்போது நடைபெற உள்ளது.
வோல்கர் டர்க்கின் இலங்கை விஜயத்திற்குப் பிறகும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்தும் நடைபெறும் இந்த மாநாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும்.
இந்த ஆண்டு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் பங்கேற்கவுள்ளார். -
உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது.
இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதை கீவ் நகரின் நிர்வாக தலைவரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது. அதில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு வார காலத்தில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிக தீவிர ட்ரோன் தாக்குதலில் இது இரண்டாவதாக அமைந்துள்ளது. தீ பற்றிய அரசு தலைமையக அலுவலக கட்டிடத்தில் உக்ரேன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வசிப்பதாக தகவல்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் எண்ணெய் குழாய் வழிதடத்தை ட்ரோன் மூலம் உக்ரேன் தாக்கியது. இதை உக்ரைனின் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்துள்ளார்.
அண்மையில் உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரேன் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. இந்த சூழலில் உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்கிறது.
https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உக்ரேன்-மீது-800-ட்ரோன்களை-ஏவிய-ரஷ்யா/50-364136
-
இலங்கை இராணுவத்தால் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆவது நினைவு தினம்!
adminSeptember 7, 2025

செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.09.25) நடந்தது.
கிருசாந்தி வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் நடந்தது.
படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அத்தோடு “வாசலிலே கிருசாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்!
:max_bytes(150000):strip_icc()/ex-machina-silo-cb89b9f0c89745ef9c9e971b08ccd26a.jpg)

சர்ச்சையை கிளப்பிய கடற்றொழில் அமைச்சரின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!
in ஊர்ப் புதினம்
சர்ச்சையை கிளப்பிய கடற்றொழில் அமைச்சரின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!
கடல் அட்டை பண்ணை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்து, அவர் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் கடல் அட்டைப் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலின் அவர் தெரிவித்த கருத்தே இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது, கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் எனவும் நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசாங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலங்களில் கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிராக சந்திரசேகரன் கருத்து தெரிவித்து வந்தார்.
தற்போது அமைச்சராக உள்ள நிலையில் சட்ட விரோதமாக கடல் அட்டை பண்ணைகளை மேற்கொண்டு வருகின்றவர்களை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமையை காணக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சீன நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் கடல் அட்டை உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இவ்வாறான ஒரு நிலையில் ஆழம் குறைந்த யாழ்குடா கடற் பரப்பில் பாரம்பரிய மீன் பிடியை நம்பி பல கடற்றொழில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடல் அட்ட பண்ணைகளை மீள ஏக்கர் கணக்கில் வழங்க முற்படுவது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பல் தேசிய கம்பனிகளை ஊக்குவிக்கும் செயற்பாடா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளளதாக கூறப்படுகிறது.
https://newuthayan.com/article/சர்ச்சையை_கிளப்பிய_கடற்றொழில்_அமைச்சரின்_கடல்_அட்டைப்_பண்ணை_கருத்து!