Everything posted by ரஞ்சித்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2017 கிரானில் தனியார்க்காணிகளை பலவந்தமாகப் பறித்தெடுத்து தனது சகோதரியின் பெயரில் எழுதிய கருணாவும் எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கும் மட்டக்களப்பு காவல்த்துறையும் இலங்கை சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைப்படையொன்றினை நடத்திவருபவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிரான் பிரதேசத்தில் தடாணை பகுதியிலுள்ள 16 பேருக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் தனியார் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி தனது சகோதரியின் பெயரில் பதிவுசெய்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தம்மால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை பொலீஸார் ஏற்கமறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட காணியுரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 2009 இல் முடிவுற்ற இனக்கொலையில் முற்றாகப் பங்கெடுத்து ராணுவத்திற்கு உதவியதற்குச் சன்மானமாக மகிந்த அரசாங்கத்தின் துணையமைச்சராக பதவி கொடுக்கப்பட்ட கருணா, பின்னர் சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் துணைத்தலைவர்களில் ஒருவராகவும் வலம்வந்தவர். பின்னர், தனது சகோதரியை மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்கள் பிரிவின் தலைவியாகவும் நியமித்திருந்தார் கருணா. மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் அரசின் கீழ் சுதந்திரமாகச் செயற்படும் கருண கொலைக்கு ஆயுததாரிகள் சத்தியன் எனும் கருணாவின் நெருங்கிய சகா தலைமையிலும் கருணாவின் சகோதரியின் துணையோடும் இவ்வாறு பலாத்காரமாக தாம் பறித்த காணிகளில் இன்னும் விவசாயம் செய்துவரும் உரிமையாளர்களை மிரட்டியிருக்கின்றனர். "தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயத்தில் ஈடுபட்டால் உங்களை வெட்டிக் கொல்வோம்" என்று கருணாவின் சகோதரி இந்த உரிமையாளர்களை மிரட்டியதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். கிரான் பிரதேச சபை இக்காணிகள் அந்த உரிமையாளர்களுக்கே சொந்தம் என்று உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், கருணாவும் அவரது சகோதரியும் கூறுகையில் இக்காணிகள் புலிகள் காலத்தில் ஒரு பண்ணையாகப் பாவிக்கப்பட்டதாகவும், இன்று புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இக்காணிகள் தமக்கே உரியவை என்று வாதாடிவருவதாகவும் கூறப்படுகிறது. காணியுரிமையாளர்கள் இதுபற்றிக் கூறுகையில் புலிகளின் காலத்தில் சமுதாயத்தின் நலனுக்காக தமது காணிகளில் புலிகள் பண்ணையொன்றினை நடத்த தாமே காணிகளை முன்வந்து வழங்கியிருந்ததாகவும், இக்காணிகளுக்கான குத்தகையினைப் புலிகள் தமக்கு வழங்கிவந்ததாகவும் கூறுகின்றனர். மேலும், சமூக நலனுக்காக அன்று பாவிக்கப்பட்ட தமது காணிகளை தமிழினத்திற்கு எதிராக இன்றுவரை செயற்பட்டுவரும் ஒரு துரோகிக்கு தாம் வழங்கவேண்டிய தேவை இல்லையென்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். கிரான் மக்களின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்த காலத்தில் சுமார் 32 குடும்பங்களைச் சேர்ந்த 112 ஏக்கர்கள் தனியார் காணிகளில் புலிகள் பண்ணையொன்றினை நடத்திவந்ததாகவும், பெரும்பாலும் உள்ளூர் தொழிலாளிகளே இங்கெ வேலை செய்துவந்ததாகவும், பலருக்கு இப்பண்ணை வாழ்வாதாரமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். இந்தப் பண்ணையின் ஒரு பகுதியான 25 ஏக்கர்களையே கருணாவும் சகோதரியும் ஆயுதமுனையில் உரிமையாளர்களிடமிருந்து பறித்திருப்பதாகத் தெரியவருகிறது. மழை காலத்தில் வெள்ளப்பெருக்கின் அபாயத்தினை எதிர்கொள்ளும் இப்பகுதியில், காணிகளை பரவலாக்கம் செய்து வீடுகளை அமைப்பதுபற்றியும் சில உரிமையாளர்கள் சிந்தித்துவருவதாகவும் தெரிகிறது. அதனாலேயே இக்காணிகளை பலவந்தமாக தம்வசப்படுத்த கருணாவும் அவரது சகோதரியும் முயல்வதாகத் தெரியவருகிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஆடி 2017 தமிழர் தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட இனரீதியான சிதைப்பிற்கு எதிராகச் செயற்படும் சமூக ஆர்வலர்களை கொல்லும் ராணுவ புலநாய்வுத்துறையினரும், தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரும், அவர்களைக் காத்து நிற்கும் சிங்கள நீதித்துறையும், காவல்த்துறையும் இலங்கையில் தமது பிராந்திய நலன்களைக் காத்துக்கொள்ளும் போட்டியில், தமிழர் மீதான திட்டமிட்ட இனக்கொலையினையும் அவர்களின் தாயகம் மீதான இனரீதியிலான சிதைப்பினையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு வரும் சர்வதேச, பிராந்திய சக்திகளின் போக்கினை தனக்குச் சாதகமாக பாவித்துவரும் சிங்கள இனவாத அரசு , தனது கருவிகளான ராணுவப் புலநாய்வுத்துறையினரையும், அவர்களினால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழுக்களினையும் தமது குற்றங்களிலிருந்து தொடர்ச்சியாகக் காப்பற்றியே வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்ச் சமூகம் தனது தாயகம் சிதைக்கப்படுவதற்கு எதிராக , அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் சமூக ஆர்வலர்களின் தன்னலமற்ற முயற்சியினையே வேண்டிநிற்கின்றது என்றால் அது மிகையில்லை. ஆனாலும், அரச ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆக்கிரமிப்பிற்கெதிராகக் குரல்கொடுத்துவரும் தனி நபர்களைத் தனது துணைராணுவக் கொலைக் குழுக்கள் மூலம் முதலில் அச்சுருத்தியும், பின்னர் கொன்றும் தனது தடைகளை அரசு அகற்றி வருகிறது. அழிக்கப்படும் தமது தாயகத்திற்காக உதவியின்றிப் போராடிவரும் ஒரு சில தன்னார்வ சேவையாளர்களைக் கூட கொன்று தமது எஜமான விசுவாசத்தினைக் காட்ட இப்பகுதிகளில் இயங்கிவரும் தமிழ் ராணுவத் துணைக் குழுக்கள் பின்னிற்பதில்லை என்பது தமிழினத்தின் சாபமேயன்றி வேறில்லை. ஆனாலும், தமிழர்களின் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் அரசின் திட்டமிட்ட தாக்குதல்களும் படுகொலைகளும் அரச நீதித்துறையினராலும், காவல்த்துறையினராலும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வருவதும், சர்வதேசத்தில் சிங்கள அரசுக்கான தாராள அனுமதியும் இவ்வாறான படுகொலைகளையும் தாக்குதல்களையும் மேலும் மேலும் தங்குதடையின்றி செயற்படுத்த வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னார்வ மனிதவுரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் இதுபற்றிக் கூறுகையில், 2007 ஆம் ஆண்டின்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா - பிள்ளையான் கொலைக் குழுக்களாலும், அரச ராணுவப் புலநாய்வுத்துதுறையினராலும், காவல்த்துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் பற்றி முன்வைக்கப்பட்ட எந்த முறைப்பாடுகள் மீதும் நடவடிக்கைகளைனை எடுப்பதற்கு சிங்கள காவல்த்துறையும், நீதித்துறையும் மறுத்தே வருகின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். கேதீஸ்வரன் தேவராஜா 2010, மார்கழி 31 ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் துணைராணுவக் கொலைப்படையான டக்கிளஸ் ஆயுதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத்திற்கு முரணனான மணல் அகழ்வினை வெளிப்படுத்தியமைக்காக டக்கிளஸினால் படுகொலை செய்யப்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் கேதீஸ்வரன் தேவராஜா. கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன், படுகொலை செய்யப்பட்ட நாள் 26, வைகாசி 2014 மதிசாயன் சச்சிதானந்தம் , படுகொலை செய்யப்பட்ட நாள் 25, வைகாசி 2015 பொலீஸாரினால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்ஷன் சுகந்தராஜா மற்றும் கஜன் நடராஜா, கொல்லப்பட்ட நாள் 20, ஐப்பசி 2016 யோகராஜா தினேஷ், கொல்லப்பட்ட நாள் 8, ஆடி 2017 மட்டக்களப்பு மனிதவுரிமை ஆர்வலர்கள் இப்படுகொலைகள் பற்றிக் கூறுகையில் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் தான்னார்வத் தொண்டர்கள் மீதான படுகொலைகளை ஒத்ததாகவே கிழக்கில் அரச ராணுவத் துணைக்குழுக்களால் நடத்தப்படும் படுகொலைகளும் காணப்படுகின்றன என்று கூறுகிறார்கள். 43 வயதுடைய மண்டூர் சமூக நல சேவகர் மதிசாயன் சச்சிதானந்தம் கருணா துணைக் கொலைப்படையினரால் கொல்லப்பட்டு 26 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை இதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ள காவல்த்துறை மறுத்து வருகிறது. தனது கிராமமான மண்டூர் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிதிமுறைகேடுகள் மற்றும் கருணாவினால் அமைக்கப்படவிருந்த ஆற்றையன்றிய விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றிப் பேசியதால் அவர் கருணா கொலைக்குழுவால் கொல்லப்பட்டார். பொலீஸாரால் இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு துணைராணுவக் குழு உறுப்பினர்களும் அப்போது பதவியிலிருந்த துணையமைச்சர் ஒருவரின் அழுத்தத்தினாலும், அவருக்கு ஆளும்வர்க்கத்துடன் இருந்த தொடர்புகளினாலும் விடுவிக்கப்பட்டதாக பொலீஸார் தெரிவித்திருந்தனர். இவ்வாறே 13 மாதங்களுக்கு முன்னர், குடும்பிமலைப் பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்களுக்குப் பாதுகாப்பளிக்க அமைக்கப்பட்ட ராணுவ முகாமிலிருது செய்ற்பட்டு வந்த ஐந்து ராணுவத்தினர் மரங்களை வெட்டி தெற்குச் சிங்கள வியாபாரிகளுக்கு விற்றுவருவதை அறிந்து அவர்களை விசாரித்த கிராம சேவகர் சண்முகம் குருவை இழுத்துச்சென்று, கடுமையாகத் தாக்கி வாழைச்சேனை வைத்தியசாலையில் எறிந்துவிட்டுச் சென்ற நிகழ்வும் நடந்திருந்தது. தாக்கப்பட்ட கிராம சேவகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போதே தனக்கு நடந்த விடயத்தை வெளியே சொன்னால் கொல்லப்படுவாய் என்று ராணுவப் புலநாய்வுத்துறையினரால் மிரட்டப்பட்டதும், இவ்வதிகாரிக்கு தகவல் வழங்கிய மாவீரர் குடும்பத்தை கருணா கொலைக்குழு "மீதமிருக்கும் அனைவரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொவோம்" என்று மிரட்டியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு மாவட்டம் புன்னக்குடா வீதி தளவாயிலும், ஏறாவூர்ப் பகுதி சவுக்கடியிலும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்து வெளியாருக்கு விற்கமுயன்ற கொழும்பின் அரசில் துணையமைச்சராகவிருந்த ஒருவரின் முயற்சிக்கு எதிராகக் குரல்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த அமைச்சின் இயக்குநர் விமலராஜ் நேசகுமார் இவ்விடயத்துடன் தொடர்புபட்ட ஆயுததாரிகளால் சுடப்பட்டு கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், பொலீஸார் இந்த தாக்குதல்பற்றி நடவடிக்கை எதனையும் எடுக்க மறுத்துவருவதாகவும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆளும் வர்க்கத்துடன் இருக்கும் மநெருக்கமே இதற்குக் காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவை தமிழர் தாயகத்தில் தமிழ் ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்டுவரும் ஒரு சில சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. இவைபோன்ற பல சம்பவங்கள் முறையிடப்படாமலேயே விடப்பட்டு வருகின்றன. பல தடவைகளில் சாதாரண உடையில் வரும் ஆயுததாரிகள், இலக்கத் தககடற்ற வாகனங்களில் பலரைக் கடத்திச் செல்வதாகவும், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும், சட்டத்திற்குப் புறம்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிலர் கொல்லப்படுவதாகவும் கூறும் சமூக ஆர்வலர்கள், இந்த மனிதவுரிமை மீறல்கள்பற்றிப் பேசினால் குடும்பங்களைக் கொன்றுவிடப்போவதாகவும் பலர் அச்சுருத்துப்பட்டுவருவதாகவும் கூறுகின்றனர். தமிழர் தாயகத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் ராணுவ மற்றும் துணை ராணுவக் குழுக்களின் அக்கிரமங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்தில் நிலவும் நிலைமை உதவிவருவதாகவும், இதன்மூலம் அவர்கள் தமது குற்றங்களிலிருந்து இலகுவாகத் தப்பிவிடுவதாகவும் அந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இதே பாணியிலான வன்முறைகள் யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அரச சார்பு ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், அரசின் செல்வாக்கு இவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது. மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மழுங்கடிக்க முயலும் அரசும் காவல்த்துறையும், இவ்விசாரணைகளை நாட்டிற்கு வெளியேயான அமைப்பொன்றிடம் கொடுத்த்தன் மூலம், இந்த விசாரணைகளை திசைதிருப்பி மக்களின் மனங்களிலிருந்து அகற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் வசித்துவந்த முன்னாள் தமிழீழக் காவல்த்துறை அதிகாரியான நகுலேஸ்வரன் தனது பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வந்தார். அரச ராணுவத்தாலும், கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழரின் நிலங்கள் தொடர்பாக தொடர்ச்சியாகப் பேசிவந்ததற்காக நகுலேஸ்வரன் 2014 ஆம் ஆண்டு கார்த்திகை 12 அன்று அரச புலநாய்வுத்துறை ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை தொடர்பாக சிலரை மன்னார் காவல்த்துறை கைதுசெய்தபோதும், அரசின் ஆதரவுடன் அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவம், சிங்களக் குடியேற்றக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மரக்கடத்தல், மணற்கொள்ளை மற்றும் போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உள்ளூரில் இயங்கிவரும் அரச ஆதரவுடனான துணைராணுவக் குழுக்களுக்கும் பங்கிருக்கின்றதென்று மக்கள் கூறுகின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, வைகாசி 2017 காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிதேடலினை அடக்குவதற்கு மேற்குலக நிதியினைப் பாவிக்கும் ரணில் அரசு மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ புலநாய்வுத்துறையினரின் வழிநடத்துதலில் இயங்கும் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைப்படைகளால் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி நீதிகோரிவரும் பெண்கள் அமைப்புக்களை வாய்மூடி மெள்னிக்கவைக்க மேற்குலக நிதியுதவியின் மூலம் செயற்படும் ஓட்டமாவடியைச் சேர்ந்த அரசுசார்பற்ற அமைப்பொன்றினை ரணில் அரசாங்கம் பாவித்துவருவதாக அப்பெண்கள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். கிழக்கிற்கான சமூக அபிவிருத்தி நிதியம் எனும்பெயரில் இயங்கிவரும் இவ்வமைப்பு காணமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் முன்னின்று போராடிவரும் பெண்களைக் குறிவைத்து தனது நிகழ்ச்சித்திட்டத்தை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ஐக்கியநாடுகள் சபையினூடாகக் கிடைக்கும் நிதியுதவியினைக் கொண்டே இவ்வமைப்பு இயங்கிவருவதாகத் தெரியவருகிறது. ஆனாலும், இவ்வமைப்பின் நிர்வாக இயக்குனரான புகாரி முகமது கூறுகையில், தமது அமைப்பிற்கான நிதியினை இங்கிலாந்தின் ஒரு அமைப்பும், லக்ஸம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னொரு அமைப்புமே வழங்கிவருவதாகக் கூறியிருக்கிறார். காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிவரும் பெண்களைக் குறிவைத்து செயற்படும் இவ்வமைப்பு கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் நீலன் திருச்செல்வம் நிதியத்தின் மூலமும் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான விடயங்களில் தலையிட்டு வருவதாகத் தெரிகிறது. கொழும்பிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி மட்டக்களப்பில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிவரும் பெண்களின் குரலினை அடக்குவதற்கே இந்த அரசுசாரா அமைப்பினை ரணில் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அத்துடன், இப்போராட்டங்களில் முன்னால் நின்று செயற்பட்டுவரும் பெண்களை அணுகியுள்ள இவ்வமைப்பின் அதிகாரிகள், போராட்டங்களைக் கைவிடுமாறும், அதற்குப் பதிலாகப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறும் பலதடவைகள் வற்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். அவர்கள் இதுபற்றி மேலும் கூறுகையில் கருணா மற்றும் பிள்ளையான் கொலைப்படையினரின் விபரங்களையேந்தியும், ராணுவப் புலநாய்வுத்துறையினரை அடையாளம் காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இப்பெண்களை போராட்டத்திலிருந்து விலக்குவதற்காக ரணில் அரசாங்கத்தின் தரகர்களாக இவ்வமைப்பினர் செயற்பட்டுவருவது அப்பட்டமாகத் தெரிகிறது என்றும் கூறுகின்றனர். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும், பாலின வேறுபடுத்தல்கள் தொடர்பாக சில குறிப்பிடத் தக்க நடவடிக்கைகளை இவ்வமைப்பு மேற்கொண்டுவந்தாலும் கூட, இவ்வமைப்பின் உண்மையான நோக்கம் கொழும்பின் அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் குரலினை அடக்கி ஈற்றில் நீதிகிடைப்பதை இல்லாமல்ச் செய்வதுதான் என்று கிழக்கின் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, பங்குனி 2017 ராணுவப் புலநாய்வுத்துறைப் போர்க்குற்றவாளிகளையும், துணைராணுவக் கொலைப்படைகளையும் காத்துவரும் ரணில் விக்கிரமசிங்க சந்திரிக்கா குமாரதுங்க காலத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம்வரைக்கும் தமிழ்மக்கள் மேல் கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டுவந்த ராணுவப் புலநாய்வுத்துறையினரையும், ராணுவ புலநாய்வுத்துறையினரால் இயக்கப்படும் தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரையும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது நீதிதேடலின் முக்கிய குற்றவாளிகளாக தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுவருவதனையடுத்து இந்த போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இவர்கள் தொடர்பான ஆதாரங்களையும், ஏனைய விபரங்களையும் அழிக்கும் நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள இப்போர்க்குற்றவாளிகளை ராணுவத்தினதோ அல்லது காவல்த்துறையினதோ வேறு பிரிவுகளுக்கு ரணில் அரசாங்கம் மாற்றிவருவதாகவும், பலருக்கு ஓய்வினை வழங்கி தலைமறைவாக வாழ ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் அரச துணைராணுவக் கொலைப்படையான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர் தமிழ்நெட் செய்திச் சேவைக்கு வழங்கிய தகவலில் கூறியிருக்கிறார். மகிந்த ராஜபக்ஷவின் இனக்கொலை அரசால் ஸ்தாபிக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை அமைப்பான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் முன்னால் சாட்சியம் வழங்கிய தமிழர்கள் தமது உறவுகளைக் கைதுசெய்து இழுத்துச்சென்று காணாமலாக்கிய போர்க்குற்றவாளிகளை தெளிவாக அடையாளம் காட்டியிருந்ததும், கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும், கடத்தப்பட்ட இடம், நேரம் ஆகிய விடயங்களையும் வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களால் அடையாளம் காணப்பட்ட ராணுவப் புலநாய்வுத்துறையினரில் பிரிகேடியர்கள், கேர்ணல்கள், லான்ஸ் கோப்ரல்கள், மேஜர்கள், கப்டன்கள் ஆகிய அதிகாரிகளும் அடங்கியிருப்பது சிங்களப் பேரினவாதிகளுக்கு தமது புலநாய்வுத்துறையினரைக் காக்கவேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்திவிட்டிருந்தது. ஆகவே இவ்வதிகாரிகளின் இருப்பினை மறைப்பதற்கு இவர்களுக்கான பாதுகாப்பினை வழங்கியுள்ளதோடு, அவர்களின் சொந்த ஊர்களுக்கே மீளவும் வேறு பதவிகளைக் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தம்ழினக்கொலையில் முன்னின்று செயற்பட்ட தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் டயஸ், வசந்த கரன்னகொட ஆகிய அதியுயர் அதிகாரிகள் உட்பட பலரை சர்வதேச நாடுகளின் இலங்கை உயர்ஸ்த்தானிகராலயங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களுக்கும் அனுப்பி, அவர்களின் குற்றங்களில் இருந்தான பாதுகாப்பினை, விலக்களிப்பினை உறுதிசெய்துவைத்திருந்தார். தமிழ்மக்களுக்கெதிரான போர்க்குற்றங்களிலும், மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்ட பல ராணுவப் புலநாய்வுத்துறையினரின் பெயர் விபரங்களை விடுதலைப் புலிகள் சேகரித்து வந்ததோடு, புலிகளின் புலநாய்வுத்துறையினர் துணைராணுவக் குழுக்களுக்குள் ஊடுருவியும் பல போர்க்குற்றவாளிகள் பற்றிய விபரங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். இவ்வாறு மக்களாலும், புலிகளாலும் போர்க்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட அனைத்து ராணுவ புலநாய்வுத்துறையினருக்கும், துணை ராணுவக் கொலைப் படையினருக்கும் "தேசிய பாதுகாப்பு" எனும் திட்டத்தின் மூலம் பாதுகாப்பினை வழங்கிட ரணில் அரசாங்கம் முயற்சியெடுத்து வருகின்றது. 2006 இல் புலிகளின் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மாணினால் தயாரிக்கப்பட்டு நோர்வே சமாதானக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆவணமொன்றில் புலிகளுடன் நிழல் யுத்தம் ஒன்றினை அப்போது தொடங்கி நடத்திவந்த அரசாங்கத்தின் அச்சாணிகளாகச் செயற்பட்டு வந்த ராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் தமிழ்க் கொலைப்படை உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டிருந்தது. புலிகளால் அடையாளம் காணப்பட்ட அனைத்து ராணுவப் புலநாய்வுத்துறையினர் மற்றும் தமிழ் கொலைக்குழு உறுப்பினர்கள் என அனைவருமே தலைமறைவாகியுள்ளதுடன், இவர்கள் பற்றிய விபரங்களும் மறைக்கப்பட்டுவிட்டன. புலிகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணத்தில் குறைந்தது 4 மேஜர்களும் 10 கப்டன்களும், பல கீழ்நிலை அதிகாரிகளும் அடங்கியிருந்ததோடு பல தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரும் அடங்கியிருந்தனர். புலிகளால் நோர்வே சமாதானக் குழுவினருக்கு வழங்கப்பட்ட அந்த ஆவணம் இலங்கையரசுக்கும் கிடைத்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டு நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருக்குக் கையளிக்கப்பட்ட ஆவணத்தின் ஒரு பகுதி. https://www.tamilnet.com/img/publish/2011/12/Chapter_4_Partners_in_Crime.pdf
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 06, புரட்டாதி 2016 தமிழர்களின் வாழ்வாதார முடக்குதலோடும், தாயகச் சிதைப்போடும் முன்னெடுக்கப்பட்டுவரும் "கிழக்கின் அபிவிருத்தி" - உபயம் கருணா கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவள அமைச்சினூடாகவே தமிழர் தாயகச் சிதைப்பும், சிங்களக் குடியேற்றங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்கிற போர்வையில் தமிழர்களின் வாழ்வாதார கால்நடை மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டுவருவதோடு, அவர்களின் தாயகமும் சிங்களக் குடியேற்றங்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழரின் மேய்ச்சல் நிலங்கள் இவ்வருட ஆரம்பத்திலிருந்து இன்றுவரைக்கும் குறைந்தது 1000 ஹெக்டெயர்கள் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அடங்கலாக பெருமளவு தமிழர் நிலம் சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் காவுகொள்ளப்பட்டிருக்கிறது. கிரான் பால்ப்பண்ணை விவசாயிகள் அமைப்பின் தலைவரான திரு நிமலன் கந்தசாமி இதுபற்றிக் கூறுகையில் தமது மேய்ச்சல் நிலங்களை அடாத்தாக அபகரித்துக் குடியேறிவரும் சிங்களவர்களின் பாதுகாப்பிற்கென்று ராணுவமும், சிங்கள ஊர்காவல்ப்படையும், முன்னாள் ராணுவ - காவல்த்துறை அதிகாரிகளும் அரசால் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்களே தமிழரை இந்நிலங்களிலிருந்து அச்சுருத்தி விரட்டிவருவதாகவும் தமது கால்நடைகளைக் கொன்றும் களவாடிச் செல்வதாகவும் கூறுகிறார். தமிழர்களின் மேய்ச்சல் நில அபகரிப்பு மயிலத்த மடு மற்றும் மாதவணை ஆகிய பகுதிகளிலேயே அதிகமாக நடைபெற்று வருவதாகவும், இப்பகுதிகளில் நாள்தோறும் சிங்களவர்கள் குடியேறிவருவதாகவும் இவர் கூறுகிறார். கடந்த 3 வருடங்களில் மட்டும் குறைந்தது 1000 பசுக்கள் சிங்களவர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலநூற்றுக்கணக்கான பசுக்களை சிங்களவர்கள் கொன்றபின்னர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அரச ஆலோசனைப்படி தமிழர்களின் வாக்குகளால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட இனவாதி மைத்திரிபால தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த திட்டமிட்ட இனரீதியிலான ஆக்கிரமிப்பினை உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிழக்கு வாழ் கல்வியாளர்களின் கருத்துப்படி, அமெரிக்காவில் வெள்ளையினத்தவர்கள் குடியேறியபோது, மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைக் கொன்று நிலத்தினைக் கைப்பற்றியதற்கு ஒத்ததாக இன்று மட்டக்களப்பில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் திகழ்வதாகக் கூறுகின்றனர். திரு கந்தசாமி மேலும் கூறுகையில், " கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநராக இருக்கும் ஒரு இனவாதி , மைத்திரியின் கிழக்கு மாகாண ஆலோசகராக பதவி வகிப்பதோடு, அரசால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள ஆக்கிரமிப்பினை ஆதரிப்பதாகவும், தமிழர்களின் இதுதொடர்பான முறைப்பாடுகளை அசட்டை செய்துவருவதாகவும் கூறுகிறார். தமிழரின் மேய்ச்சல் நிலங்களை சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கும் கைங்கரியம் 2007 ஆம் அண்டிற்குப்பிறகே அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கருணாவின் துணையுடன் கிழக்குமாகாணம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தபின்னர் இவை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர் கூறுகிறார். இலங்கை அரசாங்க பாற்பண்ணை அமைப்பின் அனுமதிப் பத்திரங்களைக் கொண்டே தமது கால்நடைகளை தமது மேய்ச்சல் நிலங்களில் மேய்த்துவருவதாக இப்பகுதித் தமிழர்கள் கூறுகின்றனர். தமது மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாலும், கால்நடைகள் கொல்லப்பட்டுவருவதாலும் விரக்தியுற்றிருக்கும் தமிழப் பண்ணையாளர்கள், அரசின் பாற்பண்ணை அமைப்பிற்குத் தாம் வழங்கிவரும் பாலினை தற்போது நிறுத்திவைத்து தமது எதிர்ப்பினைக் காட்டிவருகின்றனர். நாட்டின் மொத்த பாற்பொருட்கள் உற்பத்தியில் 22 வீதத்தினை மட்டக்களப்பு பண்ணையாளர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்களக் குடியேற்றத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென்று கூறிவரும் அரச பாற்பண்ணை அமைப்பு, தெற்கில் சிங்களப் பண்ணையாளர்களுக்குக் கொடுக்கும் விலையினைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைகே தமிழ்ப் பண்ணையாளர்களிடமிருந்து பாலினைக் கொள்வனவு செய்துவருவதாகவும் நிமலன் குறிப்பிடுகிறார். தமிழ் பண்ணையாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளையடுத்து இப்பகுதிக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகளும், காவல்த்துறை அதிகாரிகளும் நிலைமையினை ஆராய்ந்து, தமிழர்களின் நிலங்கள் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படுவதையும், கால்நடைகள் கொல்லப்படுவதையும் ஆதாரங்களுடன் அறிக்கையாக கிழக்கு மாகாண இனவாத ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கின்றனர் என்று தெரியவருகிறது. கடந்த வைகாசி மாதம் கிழக்கு மாகாண ஆளுநரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான களுபாகே ஒஸ்டின் பெர்ணான்டோ என்பவனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவன் தொடர்ந்தும் மறுத்துவருவதாகத் தெரிகிறது. ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடமிருந்து வைகாசி மாதம் முடிவிற்கிடையே பதிலளிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும் நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லையென்று தமிழ்ப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மகாவலி திட்டம் "பி" - படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதி மகாவலி திட்டம் "பி" பிரிவானது தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் நோக்கத்துடனும் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர். திரு நிமலன் கந்தசாமியின் கருத்துப்படி 2007 வரை படுவான்கரையின் தமிழர்களின் காணிகளும் வாழ்வாதாரமும் தமிழீழ விடுதலைப் புலிகளால் காக்கப்பட்டு வந்தது. ஆனால், பிரதேசவாதம் பேசிக்கொண்டு அரசுடன் சேர்ந்து சொந்த இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கும் சிலரால் இன்று மட்டக்களப்பு மாவட்டமே முற்றான சிங்களமயமாக்கலின் ஆபத்தினை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார். சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து 2007 வரை புலிகளால் காக்கப்பட்டு வந்த படுவான்கரை இது இவ்வாறிருக்க, அரச வனவளக் கூட்டுத்தாபனம் தமது நடவடிக்கைகளுக்கு தமிழ்ப் பண்ணையாளர்கள் முட்டுக்கட்டைபோடுவதாகவும், மேய்ச்சல் நிலங்களில் இருந்து அகல மறுப்பதாகவும் கூறி 2010 இல் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆகவே, தமிழ்ப் பண்ணையாளர்கள் தமது குற்றத்தினை ஒத்துக்கொண்டு, மேய்ச்சல் நிலங்களை விட்டு அகன்று, வனவள அமைச்சின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் சிங்கள நீதித்துறையின்மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது. "நாம் செய்யாத குற்றத்திற்காக நாம் ஏன் பொறுப்பெடுக்கவேண்டும்? எமது தாயகத்தை அபகரித்து, எமது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவருவது அரசல்லவா? அவர்கள்தானே உண்மையான குற்றவாளிகள்?" என்று திரு நிமலன் கேள்வியெழுப்புகிறார். "கொல்லப்பட்ட எமது கால்நடைகளை புகைப்படமெடுத்தும், தகுந்த ஆதாரங்களிக் கொண்டு ஏறாவூர்ப் பொலீஸில் நாம் முறைப்பாடு செய்தபோதும், சிங்கள குடியேற்றவாசிகளுக்கெதிராக தம்மால் நடவடிக்கையெடுக்க முடியாது என்று கூறுகிறார்கள்" என்று நிமலன் மேலும் சொன்னார். தமிழர்கள் தமது நிலங்களுக்காகவும், காவுகொள்ளப்படும் கால்நடைகளுக்காகவும் தொடர்ந்தும் போராடிவருமிடத்து சிங்களக் குடியேற்றவாசிகள் மேலும் மேலும் தமிழர் பகுதிகளுக்குள் ஊடுருவி நிலங்களைப் புதிதாக ஆக்கிரமித்து வருவதோடு, அவ்விடங்களில் புத்த விகாரைகளையும் கட்டிவருவதாகவும் நிமலன் கூறுகிறார். "எமது மேய்ச்சல் நிலங்களை, முற்றாக அழித்து, தெற்கிலிருந்து கொண்டுவரப்படும் ஏழைக் கூலித் தொலிழாளர்களைக் கொண்டு விவசாய மண்ணை பல படிமங்களாகக் கொட்டிப் பரவிவருகிறார்கள். இந்த நிலங்கள் விவசாயத்திற்கு உகந்ததல்ல என்பது அவர்களுக்குத் தெரியும், ஆகவே இதன்பின்னால் இவர்களிடம் வேறு ஏதோவொரு திட்டமிருக்கிறது. இவர்கள், பல்வேறான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ராணுவத்தையும், ஊர்காவல்படையினரையும் இணைத்து செயற்படுத்திவருகிறார்கள்" என்றும் நிமலன் மேலும் கூறினார். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பெரும்பகுதி திட்டம் "பி" பிரிவிற்குள்ளேயே அடங்குகிறது. மொத்த திட்டத்தின் நில அளவான 75,441 ஹெக்டெயர்களில் மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்டங்களில் மட்டும் 27,179 ஹெக்டெயர்கள் நிலம் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகிறது. இதிலும் பெரும்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இருக்கின்றது. ஆகவே, பொலொன்னறுவை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதிகளை சிதைத்து, மகாவலித் திட்டம் எனும்பெயரில் பொலொன்னறுவை மாவட்டத்துடன் இணைத்து சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் பல்லாண்டுகளாகவே இப்பகுதியில் செயற்பட்டு வரும் ஒருவர் என்று தெரியவருகிறது. தமது பிராந்திய, சர்வதேச நலன்களுக்காக ஒரு இனவாத அரசிற்கு முண்டுகொடுத்து, பணத்தினை வாரி இறைத்துவரும் சக்திகள், தமிழரின் தாயகம் இனரீதியாகச் சிதைக்கப்பட்டு, தமிழரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, தமிழர்கள் ஏதிலிகளாக விடப்படுவதற்கு இதுவரையிலும் உதவியே வருகின்றன என்று கிழக்கு மாகாண கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, ஆனி 2016 மட்டக்களப்பில் சட்டவிரோத மரம்வெட்டுதலுக்கு எதிராகச் செயற்படும் அதிகாரிகளை அச்சுருத்திவரும் ராணுவப் புலநாய்வுத்துறையும், கருணா துணைராணுவக் கொலைக்குழுவும் குடும்பிமலைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோத காடழிப்பிலும், மரவிற்பனையிலும் ஈடுபட்டுவரும் ராணுவத்தினர் ஐவரை கடந்த முதலாம் திகதி இப்பகுதிக்கான கிராம சேவக அதிகாரி சண்முகம் குரு அவர்கள் விசாரித்தபோது, அவரை தமது முகாமிற்கு இழுத்துச்சென்று கடுமையாகத் தாக்கி, குற்றுயிராக வாழைச்சேனை வைத்தியசாலையில் ராணுவத்தினர் எறிந்துவிட்டுச் சென்றது பலருக்கு நினைவிருக்கலாம். தற்பொழுது இந்த கிராமசேவக அதிகாரிக்கு தமது மரம் கடத்தல் தொடர்பான தகவல்களைக் கொடுத்தமைக்காக இப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றிற்கு ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கருணா குழு ஆயுததாரிகளால் மரண அச்சுருத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. இரு உந்துருளிகளில் வந்த துணைப்படையினர், "இனிமேல் ராணுவத்தினரின் மரம்வெட்டும் விடயத்தில் தலையிட்டீர்கள் என்றால் உயிருடன் இருக்கமாட்டீர்கள்" என்று எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். அச்சுருத்தலுக்குள்ளாகியிருக்கும் குடும்பம் தற்போது நண்பர்களினதும், உறவினர்களினதும் வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை ராணுவ அராஜகத்திற்கெதிராகவும் துணைராணுவக் கொலைக்குழுவின் மிரட்டலுக்கெதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இப்பிரதேச கிராம சேவக அதிகாரிகள் , தமது சக உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தாம் பணிக்குத் திரும்பபோவதில்லை என்று கூறியிருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கானாந்தனை பகுதியில் அமைந்திருக்கும் திருமதி மூத்ததம்பி இலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற துணைராணுவக் கொலைப்படையினர், " ராணுவத்தால் குடும்பிமலைக் காட்டிற்குள் நடைபெற்றுவரும் சட்டவிரோத மரம் வெட்டும் தொழில்பற்றி எவரிடமும் கூறினால் வீட்டில் மீதமிருப்போர் அனைவரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டியிருக்கிறது. ராணுவப் புலநாய்வுத்துறையினராலும், துணைராணுவக் கொலைப்படையினராலும் மிரட்டப்பட்டிருக்கும் இக்குடும்பம் ஒரு மாவீரர் குடும்பம் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. தமிழர் தாயகத்தில் உட்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களில் ஈடுபட்டு வரும் ராணுவம் இனவாதப் பிக்குகளைக் கொண்டு இவற்றினை ஆரம்பிப்பதுடன் அரசின் அனைத்து அமைச்சுக்களினதும் வெளிப்படையான ஆதரவினையும் இதுதொடர்பாக பெற்றிருக்கிறது. தொல்பொருள், வனவளம், வனவிலங்குகள் அமைச்சு, உல்லாசப் பயணத்துறை அமைச்சு என்று மிக முக்கியமான அமைச்சுக்கள் இக்குடியேற்றங்களின் பின்னால் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தமிழர் தாயகத்தின் உட்புறங்களை அழித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் சிங்கள ராணுவம், தமிழரின் வனவளத்தை அழித்து, தெற்குச் சிங்கள வியாபாரிகளுக்கு குறைந்தவிலையில் மரங்களை விற்றுவருகின்றதென்று இப்பகுதிக் கிராமசேவக அதிகாரிகள் தொடர்ச்சியாகவே முறையிட்டு வருகின்றனர். ஆகவே, தமது தாயகச் சிதைப்பினை வெளியுலகின் கண்களுக்குக் கொண்டுவரும் முகமாக இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், தேசியத்தினை நேசிக்கும் மக்களும் ராணுவத்தின் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி தகவல்களைச் சேகரித்து அதிகாரிகளுக்கு அறிவித்து வருகின்றனர். ஆனாலும், இப்பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் உலவ விடப்பட்டிருக்கும் கருணா துணைராணுவக் கொலைக்குழு இந்த சமூக ஆர்வலகள் தொடர்பாகவும், தேசியத்தினை நேசிக்கும் மக்கள் தொடர்பாகவும் தகவல்களை தொடர்ச்சியாக ராணுவப் புலநாய்வுத்துறையினருக்கு வழங்கி வருகின்றது. கருணா துணைராணுவக் கொலைப்படையினராலும், ராணுவத்தாலும் மரண அச்சுருத்தல் விடுக்கப்பட்டிருக்கும் திருமதி இலட்சுமி, தற்போது நண்பர்கள் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ளதாகவும், தனக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல் தொடர்பாக எவரிடமும் பேசுவதற்குக் கூட அச்சப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கருணா துணைராணுவக் கொலைப்படைக்கு மேலதிகமாக இப்பகுதிகளில் சிங்கள துணைராணுவக் குழுவொன்றினை நிலைப்படுத்தியிருக்கும் ராணுவம், இவர்களைக் கொண்டும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், தமிழர்கள் மீதான பயமுருத்தும் நடவடிக்கைகளிலும் இவர்களைப் பயன்படுத்தி தனது பெயரைக் காத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. கடந்த முதலாம் திகதி ராணுவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் கிராம சேவகரின் கட்டுப்பாட்டில் வரும் பிரதேசங்களில் மாதவணை மற்றும் மயிலத்தனை ஆகிய தமிழர்களின் ஆக்கிரமிற்குள்ளாகியிருக்கும் மேய்ச்சல் நிலங்களும் அடங்குகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. குடும்பிமலையின் அமைவிடம், குடும்பிமலையின் அருகில், அல்லை ஓடை சந்தி மற்றும் மாவட்டவன் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் புதிய சோதனைச் சாவடிகள்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 06, வைகாசி 2016 கருணாவின் சொந்த இடமான கிரானிலேயே நடக்கும் சிங்களக் குடியேற்றமும், தொடர்ந்தும் துணைராணுவக் கொலைக்குழுவாகச் செயற்படும் கருணாவும் மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குள் வரும் கிரான் பகுதியில் தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களாகவிருந்த 16,000 ஏக்கர் நிலத்தினை விழுங்கியிருக்கும் சிங்களக் குடியேற்றமொன்று, புதிதாக இன்னும் 300 சிங்களக் குடும்பங்களை பொலொன்னறுவை, பதுளை, மொனராகலை ஆகிய பகுதிகளிலிருந்து அழைத்துவந்து குடியேற்றியிருப்பதாக மட்டக்களப்பு செயலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு குடியேறிவரும் சிங்களவர்கள் தாம் புதிதாகக் குடியேறியுள்ள கிரான் பிரிவில் புத்த கோயில் ஒன்றைக் கட்டிவருவதாகவும், இதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் நேரில் சென்று சேகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமிருந்து பிரதேசவாதக் காரணங்களைக் காட்டி வெளியேறி, அரச ராணுவத்தின் கொலைக்குழுக்களில் ஒன்றாகச் செயற்பட்டுவரும் துணையமைச்சர் கருணாவின் பிறப்பிடம் கிரான் என்பதும், அவர் தனது கிராமம் பறிபோவது தெரிந்தும் அதே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏஜெண்டாகவும், சிங்கள அரசின் எடுபிடியாகவும் தொடர்ந்தும் செயற்பட்டுவருவது தெரிவிக்கும் உண்மை அவர் கிழக்கு மக்களின் விடிவிற்காக புலிகளிடமிருந்து பிரிந்து செல்லவில்லையென்பதும், தனது சொந்த இச்சைகளுக்காகவும் நலனிற்காகவும் மட்டும்தான் என்பதாகிறது. இப்புதிய குடியேற்றம் பற்றி மேலும் தெரியவருவதாவது. கிரான் பிரதேசத்தில் மையிலத்தைமடு பகுதியில் இடம்பெற்றுவரும் இப்பாரிய சிங்களக் குடியேற்றம் முன்னாள் சிங்களப் பொலீஸ் அதிகாரி தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது. 2007 ஆம் ஆண்டுவரை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பகுதி ராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் கடுமையான சிங்களக் குடியேற்ற அழுத்தங்களைச் சந்தித்துவருகிறதென்பது குறிப்பிடத் தக்கது. 2016 இலிருந்து கட்டப்பட்டுவரும் புத்த விகாரைக்கு அண்மையாக இலங்கை ராணுவம் இரு எறிகணைத் தளங்களையும் நிறுவியுள்ளது. தமது மேய்ச்சல் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 259 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்திலும், சுமார் நாளொன்றுக்கு 3000 லீட்டர்கள் தரக்கூடிய பாலுற்பத்தி நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து வருவதையும் அறிந்து மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும், கிழக்கு மாகாணசபையின் விவசாய கால்நடை அபிவிருத்தியமைச்சரும் இப்பகுதிக்கு நிலைமைகளை ஆராயும்வண்ணம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். மயிலத்தைமடு - சிங்களமயமாகும் தமிழர் தாயகம், அரச அதிபர் மற்றும் மாகாணசபை அமைச்சருடன் விவாதத்தில் ஈடுபடும் குடியேற்றத்தின் முன்னோடிகளில் ஒருவரான இனவாதப் பிக்கு மயிலத்தை மடுவில் கட்டப்பட்டுவரும் புத்த விகாரை புதிதாகக் குடியேறியுள்ள சிங்களவர்களின் தற்காலிக தங்கும் கூடாரம் ஒன்று மயிலத்தை மடுவை "மலமண்டி" என்று சிங்களத்தில் பெயர்மாற்றி குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இன்னொரு சிங்களக் கூடாரம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்ப் பண்ணையாளர்கள் தெரிவிக்கையில், தமது நாளாந்த வாழ்வாதாரத்தினை இந்தச் சிங்களக் குடியேற்றம் முற்றாக அழித்துவருவதாகவும், தமது கால்நடைகளை குடியேற்றத்திற்குப் பொறுப்பாகவிருக்கும் முன்னாள் பொலீஸ் அதிகாரியும் அவரது மகனும் சுட்டுக் கொன்றுவருவதாகவும் முறையிட்டுள்ளனர். "புலிகள் இருக்கும்வரை எமது வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தது, எமது கால்நடைகளும் மேய்ச்சல் நிலங்களும் பாதுகாக்கப்பட்டன. ஆனால் இன்றோ காக்க எவருமின்றி முற்றான சிங்கள மயமாக்கலினை செய்வதறியாது எதிர்கொண்டு நிற்கிறோம்" என்று அரச அதிகாரிகளிடம் அவர்கள் கவலையுடன் கூறியிருக்கிறார்கள். தமது தாயகம் மீது சிங்கள அரசால் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனரீதியிலான அழிப்புத் தொடருமானால் தாம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிப்பதனைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களால் மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி சார்ள்ஸிடமும், கிழக்கு மாகாண சபையமைச்சர் துரைராஜசிங்கத்திடமும் செய்யப்பட முறைப்பாடுகளையடுத்து மயிலத்தைமடுவில் இனவாதப் பிக்கு தலைமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் பெளத்த விகாரை தொடர்பாக ஆராய்வதற்கு அவர்கள் அங்கு விஜயம் செய்திருக்கின்றனர். இவர்களுடன் கிரான் மற்றும் செங்கலடி பிரதேச சபை அதிகாரிகளும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர். ராணுவத்தாலும், கருணா தலைமியிலான துணைராணுவக் கொலைக்குழுவின் உதவியுடனும் இப்பகுதிக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் இனவாதப் பிக்குவே இந்தக் குடியேற்றத்தில் முன்னோடியாகச் செயற்படுவதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பாக சிங்கள ஊர்காவல்ப்படை எனும் ஆயுதக்குழுவொன்று இப்பகுதியில் நிலைவைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் தலைவராகச் செயற்பட்டுவரும் முன்னாள் பொலீஸ் அதிகாரியும் அவரது கூட்டமுமே தமது கால்நடைகளைச் சுட்டுக் கொன்றுவருவதாகவும் தமிழர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அரச அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இனவாதப் பிக்கு, "சிங்களவர்கள் இப்பகுதியில் 1967 ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் தமது நிலத்தில் புதிதாகக் குடியேற்றங்களை உருவாக்குவதையோ, புத்த விகாரையினைக் கட்டுவதையோ யாரும் கேள்விகேட்க முடியாது, அது எமது உரிமை" என்று காட்டமாகக் கூறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், பிக்குவின் கூற்றினை முற்றாக மறுதலித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம், "இது முற்றான தவறான தகவல். சிங்களவர்கள் இப்பகுதியில் புதிதாகவே குடியேறி வருவதுடன், பொலொன்னறுவை மாவட்டத்துடன் இப்பகுதியினையும் அடாத்தாக இணைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச எல்லைகளை மாற்றிவருகின்றனர்" என்றும் தெரிவித்தார். மேலும், கருணாவின் நெருங்கிய நண்பரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்குப் பொறுப்பாக சிங்கள அரசுகளால் அமர்த்தப்பட்டவருமான மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரோ எனும் இனவாதப் பிக்கு, தனது பணிப்பின்பேரிலேயே இந்தப் புதிய குடியேற்றமும், புத்த விகாரையின் நிர்மாணமும் இடம்பெற்றுவருவதாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்டுவரும் சிங்களக் கிராமத்திற்கு தலைவராக (சிங்களத்தில் சபாபதி) லியனகே எனும் முன்னாள் பொலீஸ் அதிகாரி ஒருவரே செயற்பட்டு வருகிறார். ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவரும் இந்த முன்னாள் பொலீஸ் அதிகாரி, கட்டப்பட்டுவரும் விகாரையிலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் இரு எறிகணைத் தளங்களை நிறுவுவதற்கான கட்டுமானங்களையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. மயிலத்தைமடுவில் புதிதாகக் குடியேறியுள்ள சிங்களவர்கள். முன்னாள் பொலீஸ் அதிகாரி லியனகே ( சிவப்பு நிற மேற்சட்டையுடன் காணப்படுபவர்), இக்குடியேற்றத்தின் பிதாமகரும், பாதுகாப்பிற்குப் பொறுப்பானவரும். இவரும், இவரது மகனுமே தமது ஆயுதப்படையுடன் சேர்ந்து தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாக மக்கள் முறையிட்டுள்ளனர். குறிப்பு : சிங்களவர்கள் மிருகவதை செய்யாதவர்கள், ஒரு பசுவைக் கொன்றால்க் கூட பிராயச் சித்தம் கேட்டு அழுவார்கள், தமிழ்ப் பண்ணையாளர்கள் பணம் படைத்தவர்கள், ஏழை சிங்கள விவசாயிகள் ஓரிரு மாதங்களின் பின்னர் வெளியேறிவிடுவார்கள், இவர்கள் தேவையில்லாமல் சத்தம்போடுகிறார்கள், அபிவிருத்தியே முக்கியம் அதனாலேயே துணைராணுவக் கொலைக்குழுக்களை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு இந்த நிகழ்வு சமர்ப்பணம் !
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, மாசி 2016 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் நடந்துவரும் வேகமான சிங்களக் குடியேற்றங்களும், கருணாவின் எஜமானர்களின் கைவரிசையும் மைத்திரிபால சிறிசேன அரசின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைகளில் அமைந்திருக்கின்ற தமிழர்களின் புராதனக் கிராமங்கள் வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக உள்ளூராட்சி அபிவிருத்திச் சபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இப்பகுதியில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ராணுவம் அண்மைக்காலத்தில் பெருமளவு இனவாத பெளத்த துறவிகளை இவ்விடங்களுக்கு அழைத்துவந்து நிரந்தரமாக அவர்களைத் தங்கவைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007 இல் இம்மாவட்டம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னால் இப்பகுதியெங்கும் பல ராணுவ முகாம்களும், அவற்றுக்கு அருகில் பெளத்த பன்சலக்களும் அமைக்கப்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இவ்வகையான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஜனாதிபதி மைத்திரியின் மாவட்டமான பொலொன்னறுவை எல்லையிலும் ராணுவத்தாலும் பெளத்த துறவிகளாலும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொலொன்னறுவை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாதிபதி மைத்திரி தான் அரசியலுக்கு வருமுன்னமே மட்டக்களப்பு மாவட்ட எல்லையோரத்தில் சிங்களவர்களை குடியேற்றி, மட்டக்களப்பு மாவட்டத்தினைத் துண்டாடுவதில் ஆர்வத்துடன் செயற்பட்டவர் என்று தெரியவருகிறது. தனது அரசியல் பிரவேசத்தின் மூலம், மகாவலி அபிவிருத்தி எனும்பெயரில் புணானை, வெலிகந்த ஆகிய பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபகுதியில் பாரிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரியான கருணாவின் நெருங்கிய தோழரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களின் இணைப்பாளராக மகிந்தவினால் அமர்த்தப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரோ எனும் பிக்கு கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு அனுப்பிய பணிப்புரையில் தான் 50 சிங்களக் குடும்பங்களை இப்பகுதியில் குடியேற்ற அழைத்துவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தமிழ்க் கிராமங்களை கூட அகற்றும் நோக்குடனேயே இந்தக் குடியேற்றம் பிக்குவினால் மேற்கொள்ளப்படுவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். துறைநீலாவணைப் பகுதித் தமிழர்கள் இவ்வாறு பிக்குவினால் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படவிருக்கும் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை கிராம அபிவிருத்திச் சபை ஆதிகாரிகளிடம் கையளித்து இந்தக் குடியேற்றத்திட்டத்தினை தடுத்துவிடுமாறு கோரியிருக்கின்றன்ர். இதே பிக்குவினால் கெவுளியாமடுவிலும் தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதி கிராம அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கூறுகையில், கெவுளியாமடுவில் சுமனரத்ன தேரர் கடந்தவாரம் குறைந்தது 4புதிய வீடுகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றையுள்ளதாகத் தெரிவித்தனர். இதேவேளை, இப்பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்கள் தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்துவருவதுடன், தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாக இப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். குடியேறிவரும் சிங்களவர்களின் பாதுகாப்பிற்கென்று சிங்கள ஊர்காவல் படையொன்றினையும் சிங்கள ஆக்கிரமிப்பு அரசு உருவாக்கி இப்பகுதிகளில் நிலைவைத்திருப்பதாக பிரதேச சபை அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றன்ர். இனவாத துவேஷம் மிக்க பெளத்த துறவிகளை தமிழரின் தாயகத்திற்கு அழைத்துவருவதன்மூலம் இப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளில் அனைத்துச் சிங்கள அரசுகளும் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டே வந்திருக்கின்றன. தமிழர் தாயகத்தில் பெளத்த சிங்கள காலாசராத் தொன்மை என்கிற பொய்யான கூப்பாடுகளுக்கு ஆதரவாக அரச அமைச்சுக்களையும், ராணுவ - பொலீஸ் இயந்திரத்தையும் தமது சிங்களக் குடியேற்றங்களுக்காக இந்தப் பெளத்த பிக்குகள் பாவித்து வருகின்றனர். அப்படியானவர்களுக்கு கிழக்கில் இனவாத அரசின் ஏஜெண்ட்டுகளாக, ஒருங்கிணைப்பாளர்களாக, துணையமைச்சர்களாக, மாகாணசபை முதலைமைச்சர்களாக, உறுப்பினர்களாக, நிர்வாக அதிகாரிகளாக இருக்கும் துணைராணுவக் கொலைக்குழுக்கள் ஆதரவு நல்கி வருகின்றனர் என்பது வேதனையான விடயம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தமிழர் தாயகத்தில் இருந்து தமிழர்களைக் கிராமம் கிராமமாக விரட்டி, அங்கே சிங்களவர்களைக் குடியேற்றிவரும் பெளத்த பிக்குகளும், அரசும் புதிதாக அமைக்கப்பட்ட "சிங்கள - பெளத்த "நிலங்களுக்கு "யாத்திரை" வருமாறு தெற்குச் சிங்களவர்களை வரவழைப்பதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தொன்மையான பெளத்த கலாசார இடங்கள் எனும் மாயையினையும் சிங்களவர்களிடையே ஏற்படுத்த முனைகின்றனர். உதாரணத்திற்கு, 1990 இல், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருந்த தொன்மையான கச்சிக்கொடி சுவாமி மலை எனும் பழம்பெரும் தமிழ்க் கிராமத்திலிருந்து ராணுவத்தாலும், சிங்களக் குடியேற்றவாசிகளாலும் அங்கிருந்து துரத்தப்பட்ட 385 குடும்பங்களுக்குப் பின்னர், இப்பகுதி தூய சிங்கள பெளத்த தொல்லியல் சிறப்புவாய்ந்த பகுதியென்று அரசால் அறிவிக்கப்பட்டு முற்றான சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுவிட்டதென்பது குறிப்பிடத் தக்கது. இப்பகுதியிலிருந்து விரட்டப்பட்ட தமிழர்களை மீள இப்பகுதியில் குடியேற்ற பின்னிற்கும் அரசு, இதுவரையில் 62 குடும்பங்களை மட்டும் இப்பகுதியின் எல்லையில் குடியமர அனுமத்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனாலும், இப்பகுதியில் அமைந்திருந்த சைவ வணக்கஸ்த்தலத்திற்கு மிக அருகாக இரு புத்த கோயில்களை அரசு கட்டியெழுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. கிராம அபிவிருத்திச் சபை அதிகாரிகளின் கருத்துப்படி பின்வரும் தமிழ்க் கிராமங்கள் உடனடியான முற்றான சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. 1. கச்சக்கொடி சுவாமிமலை 2. தாந்தாமலை 3. அடைச்ச கல் 4. கெவுளியாமடு 5. காண்டியன் ஆறு 6. 35, 36 மற்றும் 37 ஆம் கொலணிகள் 7. மத்திய முகாம் 8. சின்ன வத்தை 9. பலாச்சோலை 10. நெடிய வெட்டை 11. மாலையர் கட்டு 12. யானை கட்டிய வழி தாயகம் கபளீகரம் செய்யப்பட்டாலும் பரவாயில்லை, சலுகைகள் முக்கியம் எனும் சிலருக்கு இது சமர்ப்பணம் !
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, மாசி 2016 அம்பாறை மாவட்டத்தில் மீதமிருக்கும் தமிழர் நிலங்களை அபகரிக்கும் தெற்குச் சிங்களவர்களும், உறுதுணைபுரியும் கருணா குழுவும் அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 50 வருடங்கள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் ஆலயத்திற்குச் சொந்தமான 8 ஏக்கர்கள் நிலத்தினை போலியான காணியுரிமைப் பத்திரங்களைக் காண்பித்து அபகரிக்கும் கைங்கரியம் ஒன்றினை தெற்குப்பகுதியான மாத்தறை மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் இரு சிங்களவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஆலய நிர்வாகத்தினர் முறையிட்டிருக்கிறார்கள். ஆலய நிர்வாகத்தினால் பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து அதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெற்கிலிருந்து வந்த இரு சிங்களவர்களுக்கும் சார்பாக பொத்துவில் பகுதியில் இயங்கிவரும் துணைராணுவக் குழுவான கருணா கொலைக்குழுவின் முக்கியஸ்த்தர்கள் களம் இறங்கியிருப்பதாகவும், பெருந்தொகைப் பணத்திற்காக இவ்வாலய காணியை சிங்களவர்கள் அபகரிக்க இத்துணைக்குழு உறுப்பினர்கள் உடந்தையாக இருப்பது மாத்திரமல்லாமல், ஆலய நிர்வாகத்தினரை இதுதொடர்பாக மிரட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துணைராணுவக் கொலைக்குழுக்களைப் பாவித்து அம்பாறை மாவட்டத்தில் மீதமிருக்கும் தமிழரின் காணிகளை தென்பகுதிச் சிங்களவர்கள் உரிமைகோரிவருவதாகவும், கருணா கொலைக்குழு உறுப்பினர்களும், மகிந்தவின் இப்பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பாளரும் இதனை பணம்பார்க்கும் தொழிலாகச் செய்துவருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்த ஆலய காணி அபகரிப்புத் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. பொத்துவில் பகுதியில் ஊரணி எனும் இடத்தில் அமைந்திருக்கும் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு வந்த மாத்தறையைச் சேர்ந்த இரு சிங்களவர்கள் போலியான காணி உரிமைப்பத்திரங்களைக் காண்பித்து, "இது எங்களுடைய நிலம், நீங்கள் இங்கே சட்டத்திற்கு முரணான வகையில் ஆலயத்தைக் கட்டியுள்ளீர்கள், ஆகவே உடனடியாக நிலத்தினை எமக்குத் தந்துவிட்டு வெளியேறவேண்டும் "என்று மிரட்டியிருக்கிறார்கள். கூடவே கருணா துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்களும், மகிந்தவின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளரும் நிற்பதைக் கண்ட ஆலய நிர்வாகத்தினர் நடக்கவிருக்கும் விபரீதத்தினை அறிந்து, பிரதேச சபை அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்றார்கள். இந்த ஆலய நில அபகரிப்பு விடயத்தில் தம்மை மிரட்டிய இரு ஆயுததாரிகளை அப்பிரதேச மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். அதன்படி இவர்களுள் ஒருவர் கருணா கொலைக்குழுவின் முக்கியஸ்த்தர் பார்த்தீபன் என்றும், மற்றையவர் இதே துணைராணுவக் குழுவைச் சேர்ந்தவரும் இனக்கொலையாளி மகிந்தவின் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான "சேவா லங்கா" மஜீத் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த இருவரும் இப்பகுதியில் நடந்துவரும் சிங்களக் குடியேற்றங்களுக்காக தமிழர்களை அச்சுருத்திப் பணியவைக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருபவர்கள் என்று இப்பிரதேச மக்களால் பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டு வந்ததும் குறிப்பிடத் தக்கது. இப்பகுதியில் அமைந்திருக்கும் பொத்துவில் நகர், கொட்டுக்கல், இன்ஸ்பெக்டர் ஏற்றம், ஊரணி மற்றும் கனகர் கிராமம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கும் இவ்விருவருக்கும் தொடர்பிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். . சித்திவிநாயகர் ஆலய நிலத்தை துணைராணுவக் கொலைக்குழுவின் துணையுடன் அபகரிக்க சிங்களவர் எடுத்திருக்கும் நடவடிக்கயினை எதிர்த்து ஆலய நிர்வாகத்தினர் பொத்துவில் பொலீஸில் முறையிடச் சென்றபோது, "சிங்களவர்களுக்கு எதிராக முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது, அவர்களின் ஆவணங்கள் உண்மையானவை, ஆகவே முறைப்பாட்டினைத் திரும்பிப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று பொலீஸாரினால் அறிவுருத்தப்பட்டிருக்கின்றனர். இக்கிராமத்தில் முன்னர் குறைந்தது 600 தமிழ்க் குடும்பங்களாவது வாழ்ந்துவந்தனர். ஆனால், இப்பகுதியில் அரசாலும், துணைராணுவக் குழுக்களின் துணையுடனும் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் இப்பகுதியின் இனப்பரம்பலினை மிகவும் பாதித்திருப்பதோடு, தமிழரை சிறுபான்மையினராக்கிவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இக்கிராமத்தில் வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 230 குடும்பங்கள் மட்டும் தான் என்பதோடு, இவர்களில் பலரும் இக்கிராமத்திலிருந்து கருணா குழுவினதும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களினதும் அழுத்தத்தினால் வெளியேறும் முடிவினை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களின் பிரசித்திபெற்ற சித்திவிநாயகர் ஆலயம் அம்பாறை மட்டக்களப்பு வீதியில், பொத்துவில் நகரிலிருந்து 7 கிலோமீட்டர்கள் வடக்கில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. .
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஐப்பசி 2015 தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள மத யாணைக் கூட்டங்களைப் பாவித்து தமிழர்கள் விரட்டியடிப்பு - உபயம் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு துணையாக நின்ற துணைராணுவக் குழுக்களின் துரோகம் தமிழர் தாயகத்தை சிறுகச் சிறுகத் துண்டாடி ஈற்றில் அவர்களின் வாழிடங்களிருந்து நிரந்தரமாகவே விரட்டிவிடும் சிங்கள அரசின் இனரீதியிலான நில ஆக்கிரமிப்பிற்கான ஏதுநிலையினை கருணாவும் அவனுடைய சகாக்களும் ராணுவத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் இன்று தமிழர் தாயகத்தில் தங்குதடையற்ற சிங்கள ஆக்கிரமிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் 2007 இற்கு முன்னர் கனரக பீரங்கிகளினாலும், விமானக் குண்டுவீச்சினாலும் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்த தமிழினம் தற்போது மதம் பிடித்த காட்டு யானைகள் வடிவில் உயிர்களையும், வாழ்வாதாரத்தினையும் இழந்துவருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் காட்டு யானைகளின் அட்டகாசம் தானே என்று தெரிந்தாலும், இதன் பின்னாலிருக்கும் சூட்சுமம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டுவரும் செயற்கையான அனர்த்தம் என்றால் அது மிகையில்லை. 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படுவான்கரைப் பகுதியில் தற்பொழுது மீள்குடியேறியுள்ள தமிழர்களின் நிலங்களில் அதிகப்படியான காட்டுயானைகளின் தாக்குதல்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறன. இத்தாக்குதல்களில் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, பல வீடுகள், விவசாயப் பயிர்கள் என்பன நாசமக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்தாக்குதல்கள் பற்றிக் கூறும் படுவான்கரையினை தனது பிறப்பிடமாகவும் வாழ்ந்த இடமாகவும் கொண்ட பல தமிழர்கள் இந்த யானைகளின் அட்டகாசம் தாம் இதுவரையில் பார்த்திராதவொன்று என்று குறிப்பிடுகின்றனர். இந்த யானைகளின் தாக்குதல்களின் பின்னால் தம்மை தமது நிலங்களிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் கை மறைந்திருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் பட்டிப்பளை - கச்சகொடி கிராம அபிவிருத்திச் சபையின் தலைவரான யோகராசா கணேஷ் இதுபற்றிக் கூறுகையில், தம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல முறைப்பாடுகளை பிரதேச செயலக அதிகாரிகளோ வனவள அமைச்சகமோ ஏற்றுக்கொள்ள மறுத்துவருவதாகவும், அதேவேளை சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தேவையானளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "யுத்தம் நடைபெற்ற காலத்தில் எமது பகுதிகளில் யானைகாளின் தாக்குதல் எதுவுமே இருக்கவில்லை. காட்டுயானைகளை காண்பதென்பது மிக அரியவிடயமாகவே அப்போது இருந்தது. எப்போதாவது ஊர்மனைகளுக்குள் வரும் யானை எதுவித சேதத்தினையும் செய்யாது திரும்பிச் சென்றுவிடும். ஆனால், இப்போது அப்படியல்ல. கூட்டமாக மதம் பிடித்த யானைகள் வருகின்றன. இவை கண்ணில்ப் படும் மக்களைக் கொல்வதுடன் வீடுகள், பயிர்கள் என்பவற்றிற்கும் கடுமையான சேதத்தினை உண்டுபண்ணுகின்றன" என்று அவர் கூறுகிறார். இலங்கை வனவிலங்கு திணைக்களத்தின்படி தென்பகுதிக் காடுகளிலிருந்து பல அபிவிருத்தித் திட்டங்களுக்காக அப்பகுதி நிலங்கள் உபயோகிக்கப்பட்டபோது அக்காடுகளில் சுற்றித்திருந்த பல யானைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடுகளில் தாம் இறக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக அம்பாந்ந்தோட்டை, மத்தளை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கான காட்டு நிலங்களிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகளே மட்டக்களப்பில் காடுகளுக்குள் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்தகாலத்தில் யானைகளின் பயம் இருக்கவில்லையென்று படுவான்கரை மக்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் முகாம்களும், காவலரண்களும் இப்பகுதியெங்கும் பரவிக் கிடந்ததனால் யானைகள் இப்பகுதிக்குள் நுழைவதென்பது தடுக்கப்பட்டே வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், 2007 இன் பின்னர் துணைராணுவக் குழுக்களின் உதவியோடு கிழக்குமாகாணம் புலிகளிடமிருந்து ராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டபின்னர் நிலைமை மாறியிருப்பதோடு, தென்பகுதி யானைகள் மட்டக்களப்பு காடுகளில் இறக்கிவிடப்படுவதும் நடந்துவருகிறதென்று மேலும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். "எமது பிள்ளைகளால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. வீட்டின் வருமானத்திற்காக ஆண்கள் வேலைக்குச் செல்வது கடிணமாக இருக்கிறது. வேலைக்குப் போகாது வீட்டிலிருந்து தமது குடும்பங்களை யானைகளிடமிருந்து காக்கவேண்டியிருப்பதால் பெருமளவு குடும்பங்கள் கடுமையான பிரச்சினைகளை சந்தித்துவருகின்றன. அண்மையில்கூட வெல்லாவெளிப் பகுதியில் வீட்டில் தனியாக உதவியின்றி இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை யானை அடித்துக் கொன்றிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். "காட்டுயானைகளின் அட்டகாசத்தினைப் பொறுக்கமுடியாத ஊர்மக்கள் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் முன்னால் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்". "யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியபோது, "ஒன்று அல்லது இரண்டு யானைகள்தான் இருக்கின்றன. அவற்றையும் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றுவிட்டோம், இனி பிரச்சினையில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது, மேலும் அதிகாரிகள் சொல்வதுபோல ஒன்றோ இரண்டு யானைகளோ அல்ல, அவை கூட்டமாக வருகின்றன" என்று அவர் மேலும் கூறுகிறார். 2007 இல் புலிகள் கச்சக்கொடி பகுதியிலிருந்து முற்றாக வெளியேறியபின்னர் இதுவரையில் யானைகளின் அட்டகாசத்தில் குறைந்தது 27 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 40 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 20 வீடுகள் முற்றாக நாசமாக்கப்பட்டிருப்பதோடு, பெருமளவு பயிர்களும் நாசமாக்கப்படுள்ளன. "யானைகள் கூட்டம் கூட்டமாகவே தாக்குதலில் ஈட்டுபடுகின்றன. இவை எங்கிருந்து வந்தன என்பது பெரும் புதிராகவே இருக்கிறது" என்று கணேஸ் கூறுகிறார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பாறையுடனான எல்லைப்பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்களுக்கு ராணுவமும், சிங்கள துணைராணுவக் குழுவொன்றும் யானைகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கிவருகின்றன என்று தெரியவருகிறது. ஆனால், தமிழர்களின் கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊர்காவல் நிலையங்கள் யானைகள் தமிழர் பகுதிக்குள் ஊடுருவுவதை அனுமதிப்பதுடன், வேண்டுமென்றே தடைகளைத் தளர்த்திவருவதாகவும் தமிழ்மக்கள் முறையிட்டுவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் துணைராணுவக்குழுக்களின் துணையுடன், சிங்கள அரசு பெருமளவு சிங்களவர்களைக் குடியேற்றிவருகிறது. அம்பாறை, பொலொன்னறுவை எல்லைகளில் இடம்பெறும் இக்குடியேற்றங்களை ஊக்குவிக்கும் முகமாக இவ்வெல்லைகளில் அமைந்திருக்கும் தமிழர் கிராமங்களுக்குள் காட்டுயானைகளின் ஊடுருவலினை அரசாங்கம் ஊக்குவித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் சமூக சேவக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழர்கள் தாமாகவே பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்தபின்னர் அப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவது இலகுவென்று அரசு நினைப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். படுவான்கரைப்பகுதிகளில் தற்போது குடியேறிவரும் சிங்களவர்கள் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அறுகம்பை, உகன ஆகிய பகுதிகளிலிருந்தும், கண்டி , நுவர எலிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்திருப்பதாக மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு குடியேறிவரும் பெருமளவு சிங்களவர்கள் சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கச்சகொடி கிராம அபிவிருத்தி சபைத் தலைவரின் கருத்துப்படி, 2007 இல் இப்பகுதியில் யுத்தம் முடிவிற்கு வந்தபோது சுமார் 350 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வந்ததாகவும், அதன்பின்னர் இடம்பெற்றுவரும் யானைகளின் தாக்குதல்களையடுத்து பலர் வெளியேறிவிட்ட நிலையில் தற்பொழுது வெறும் 62 குடும்பங்களே கச்சக்கொடி பகுதியில் வாழ்வதாகவும் கூறுகிறார். மீதமுள்ள தமிழர்களில் பலர் கச்சக்கொடிப் பகுதியினை விட்டு வெளியேறும் எண்ணத்திலேயே இருப்பதாகவும், சிங்கள அரசும் இதைத்தான் எதிர்பார்க்கிறது என்று அவர் மேலும் கவலையுடன் கூறுகிறார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஐப்பசி 2015 சிறிசேனவும், ராணுவமும் தமிழர் நிலங்களை அபகரிக்க, ஆதரவு நல்கும் துணைராணுவக் குழுக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியான சிறிசேனவின் அதிகாரத்தில் இருக்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சு மட்டக்களப்பு வனவளத் திணைக்கள அதிகாரிக்கு அனுப்பியிருக்கும் கட்டளையின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட "ஒமுனுகல" எனும் சிங்களக் குடியேற்றத்தின்கீழ் மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தினை சேர்க்குமாறு கோரப்பட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியென்கிற பெயரில் முன்னைய மகிந்தவின் அரசு ஆரம்பித்த இந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு மேலும் 25,000 ஏக்கர்களை மைத்திரிபால சிறிசேனவின் அரசு இணைக்கவிருக்கிறது. முன்னைய அரசில் துணையமைச்சராகவும் கிழக்கு மாகாணத்தின் புணர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான அமைச்சராகவும் இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி எனும் ஆயுததாரியும், கிழக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் ஆயுததாரியும் இந்தத் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் குறித்து எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்துவருவதாகவும், சிலவிடங்களில் இவர்களே சிங்கள அரசின் ஏஜெண்ட்டுகளாக தமிழர்களை இந்நிலங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறிசேன அரசினால் தமிழரிடமிருந்து பறிக்கப்படவிருக்கும் சுமார் 25,000 ஏக்கர்கள் காணிகளில் தமிழர்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதனை ராணுவம் தடுத்திருப்பதோடு, இது இனிமேல் சிங்களவர்களுக்குச் சொந்தமான பகுதி, அத்துமீறிப் பிரவேசித்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் கூறியிருக்கிறது. தமிழர்களை அவ்விடத்தை விட்டு அகலுமாறு கோரும் அரசின் அறிவித்தற் பலகைகளும், புதிய எல்லைக் கோடுகளும் இப்பகுதியெங்கும் ராணுவத்தாலும், அரச அதிகாரிகளாலும், துணைராணுவக் கொலைக்குழுக்களாலும் போடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. தமது நிலங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழர்களின் வேதனைகளை அதிகரிக்கும் முகமாக, "பாதுகாக்கப்பட்ட வனம் " என்கிற போர்வையில் பறிக்கப்பட்ட இந்த மேய்ச்சல் நிலங்களில் சிங்களவர்களை விவசாயம் செய்ய அரசும் ராணுவமும் ஊக்குவித்துவருவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒமுனுகல வனப்பகுதிக்காக அரசினாலும் ராணுவத்தாலும் இடப்பட்ட அறிவிப்பு தமிழர்களின் தாயகத்திலிருந்து துண்டாடப்படுவதற்கு ஏதுவாக ராணுவத்தாலும், துணைராணுவக் கொலைக்குழுக்களாலும் நிலத்தில் வரையப்பட்டிருக்கும் புதிய எல்லைக் கோடுகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட பிரேரணையினை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்வதாகப் பாசாங்கு செய்துள்ள சிறிசேன அரசு, தமிழரின் நிலங்களை அவர்களிடமே மீண்டும் ஒப்படைப்பதென்றும், ராணுவம் நிர்வாக விடயங்களில் தலையிடாது என்றும் உறுதியளித்துவிட்டு கிழக்கில் தனது ராணுவத்திற்கும், சிங்கள அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ள பணிப்பின்படி, மேலும் மேலும் தமிழர் நிலங்களை சிங்களமயமாக்கி வருவதுடன் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீண்டும் அப்பகுதிக்கு வந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும், கால்நடைகளைக் கைப்பற்றுவோம் என்றும் மிரட்டிவருகிறது. தமிழர்களை அழைத்து மிரட்டும் இந்த கூட்டங்களில் தவறாமல் பங்குகொள்ளும் கருணா மற்றும் பிள்ளையானின் முக்கியஸ்த்தர்கள் தமது பிரதேச மக்களின் அவலநிலைகண்டு எதுவுமே செய்யாமல், "இனிமேல் இங்கு வரவேண்டாம்" என்கிற ராணுவத்தின் பாணி மிரட்டல்களையே விடுப்பதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூறுகிறார்கள். மகாவலி அபிவிருத்தியமைச்சு மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு அபிவிருத்தி நிறுவனம் 1980 ஆம் ஆண்டு வரைந்த திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 53,665 ஹெக்டெயர்கள் நிலம் மகாவலி திட்டத்தின்ற்குள் உள்வாங்கப்படுமென்றும், இப்பகுதிக்கு "ஒமுனுகல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி" என்று அழைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டு, மகிந்த அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விடுத்த அறிக்கையில் 25,000 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலம் இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சேர்க்கப்படப்போகிறது என்று கூறியிருந்தார். அதன்படி கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, கோரளைப்பற்று தெற்கு மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய தமிழர் பகுதிகளிலிருந்து பெருமளவு மேய்ச்சல் நிலங்கள் இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சேர்க்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார். சுமார் கடந்த 50 வருடங்களாக தமது வாழ்வாதாரத்திற்காக இந்நிலங்களை உபயோகித்துவரும் தமிழ் விவசாயிகள் இதனால் தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களையும், கூடவே வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. படுவான்கரையில் வாழும் தமிழர்கள் மீது ராணுவமும், கருணா மற்றும் பிள்ளையானின் கொலைக்குழுக்களும், சிங்கள துணைராணுவக் குழுவொன்றும் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து இப்பகுதிகளிலிருந்து அவர்களை நிரந்தரமாகவே வெளியேற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். படுவான்கரையில் இதுவரையில் ராணுவத்தால் அடாத்தாகக் கைப்பற்றப்பட்ட தமிழரின் நிலங்களுக்கு அரசின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் மூலம், நிரந்தரமாகவே தமிழர்கள் தமது தாயகத்தை பகுதிகளாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. தமது நிலங்களில் சிங்களவர்கள் அடாத்தாகக் குடியேறிவருவதைக் கண்டித்து பொலீஸாரிடமும், பிரதேச செயலக அதிகாரிகளிடமும் தமிழர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், வருடம் தோறும் தமிழ் விவசாயிகளை பயிர்ச்செய்கைகளுக்கு முன்னர் சந்திக்கும் அதிகாரிகள் தற்போது வேண்டுமென்றே தவிர்த்துவருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை அரசாங்கத்தாலும், ராணுவத்தாலும், துணைராணுவக் குழுக்களின் அனுசரணையுடனும் துண்டாடப்பட்டுவரும் தமிழரின் மேய்ச்சல் நிலங்களில் சிங்களவர்கள் காலப் பயிர்ச்செய்கைக்காக நிலங்களை கனரக இயந்திரங்கள் கொண்டு உழுதுவருவதை தமது காணிகளைப் பறிகொடுத்த தமிழர்கள் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருப்பது நடந்துவருகிறது. பல நூற்றுக்கணக்கான சிங்கள விவசாயிகள், ராணுவத்தினதும், துணைராணுவக் கொலைக்குழுக்களினதும் உதவியுடன் இந்நிலங்களில் பயிர்ச்செய்கையினை ஆரம்பித்திருக்கும் நிலையில், தரவைப்பகுதியை ஆக்கிரமித்து நிற்கு ராணுவம் இப்பகுதிக்குள் காலநடைகளைக் கொண்டுவந்தால் தாக்கப்படுவீர்கள் என்று கூறியிருப்பதுடன், இனிமேல் இப்பகுதிக்குள் அவர்களை நிரந்தரமாகவே வரக்கூடாதென்று மிரட்டி அனுப்பியிருப்பதாக அங்கு வரவழைக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆவணி 2015 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ரோந்தில் ஈடுபடுத்தப்படும் பிள்ளையான் கொலைக்குழு கொக்கட்டிச்சோலைப் பகுதியிலிருந்து வரும் செய்திகளின்படி, படுவான்கரையின் பல கிராமங்களிலும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. திடீரென்று மக்களை அச்சுருத்தும் வகையில் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழுவும் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கியிருப்பது தமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவு துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் உலாவருவது மக்களை அச்ச நிலையில் வைத்திருந்து வாக்குகளைப் பிரிக்கும் தந்திரத்திற்காகத்தான் என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். பொதுச்சந்தைகள், வங்கிகள், தேனீர்க் கடைகள், முக்கியமான சந்திகள் ஆகிய இடங்களில் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் சிங்கள புலநாய்வுத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் தாந்தா மலை ஆலய உற்சவத்தின்போது, தொடர்ச்சியாக அவ்வாலயத்திற்கு வந்த துணை ராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்களை அச்சுருத்தும் பாணியில் நடந்துகொண்டதாகவும், ஆலயத்திற்கு வருகைதந்த பல பக்தர்கள் இவர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானுக்குப் பெருமை சேர்த்த இரட்டைப் படுகொலைகள். அமரர்கள் ஜோசேப் பரராஜசிஙம் மற்றும் ரவிராஜ் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், துணைராணுவக் கொலைக்குழுக்களும் வீதிகளில் வலம்வந்து பாடசாலை செல்லும் மாணவிகளை துன்புறுத்துவதாகவும், இதனால் பாடசாலை செல்வதற்கே அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கும் பெற்றோர்கள், வீடுகளில் தனியே இருக்கும் பெண்களின் பாதுகாப்பும் இந்தச் சமூக விரோதிகளால் கேள்விக்குறியாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இதேவேளை படுவான்கரை மற்றும் பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் பிள்ளையான் கொலைக்குழுவுக்கு ஆதரவாக மக்களை அச்சுருத்திவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழு உறுப்பினர்களும், மக்களை பிள்ளையானின் கட்சிக்கே வக்களிக்க வேண்டுமெ என்றும் வற்புறுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 01, ஆனி, 2015 சமூக ஆர்வலர் மதிசாயனின் கொலைமூலம் கிழக்கில் சமூக ஆதரவாளர்களைப் பயமுறுத்தியிருக்கும் கருணா மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மதிசாயன் சச்சிதானந்தத்தின் படுகொலை கிழக்கில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதாக கிழக்கிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மண்டூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றுவரும் நிதிமுறைகேடுகள் தொடர்பாக மதிசாயன் மேற்கொண்டு வந்த தேடல்களும், வெளிப்படுத்தல்களும், அரசின் ஆசீருடன் இயங்கிவரும் ஆலய பரிபாலன சபைக்கும், அதன் பின்னணியில் இருந்து செயற்படும் துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுத் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் தலையிடியாக மாறிவந்திருந்தன. அத்துடன் மண்டூர் பகுதியில் ஆற்றுப்படுக்கைக்கு அண்மையாக நிர்மானிக்கப்படவிருந்த உத்தேச விளையாட்டு மைதானம் ஒன்றினால் மக்களின் விவசாய நிலங்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்களை முன்வைத்து மதிசாயன் இந்த நிர்மானத்திற்கெதிராக மக்களிடையே விளிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார் என்றும் அறியப்படுகிறது. இவ்விளையாட்டு மைதான நிர்மாணிப்பில் முன்னின்று செயற்பட்டுவந்த கருணாவுக்கு மதிசாயனின் சமூக விளிப்புணர்வு நடவடிக்கைகள் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்ததாக மண்டூர் மக்கள் தெரிவிக்கின்றனர். 2014 கார்த்திகை மாதம் நகுலேஸ்வரத்தில் இதேவகையான சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளால் மக்களை ஒருங்கிணைத்த சமூக ஆர்வலர் ஒருவர் ராணுவத் துணைக்குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த மண்டூர் மக்கள் அவரின் கதியே மதிசாயனுக்கும் நேர்ந்திருக்கிறது என்று கூறுகின்றனர். அம்பாறை மாவட்டம், நாவிதான் வெளி பகுதியில் சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியாகச் செயற்பட்டுவந்த மதிசாயன் சில நாட்களுக்கு முன்னர், சத்திர சிக்கிச்சையொன்றிற்காக ஓய்விலிருந்திருக்கிறார். தனது வீட்டில் ஓய்விலிருந்த வேளையில், உந்துருளிகளில் வந்திறங்கிய கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் அவரை அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தெரியவருகிறது. கொல்லப்பட்ட மதிசாயனின் நண்பர்களின் கூற்றுப்படி, கொலையாளிகள் முனைக்காடு நிர்வாக அதிகாரிகளினதும், அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்குவிக்கும் கருணாவினதும் கூலிகளே என்று கூறுகிறார்கள். மண்டூர் முருகன் ஆலய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை விசாரித்து, அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, முன்னாள் ஆலய நிர்வாக சபையினை பதவி விலகப் பண்ணுவதில் மதிசாயன் மும்முரமாகச் செயற்பட்டுவந்தார் என்று மண்டூர் மக்கள் கூறுகின்றனர். மண்டூர் முருகன் ஆலயம் மிகப்பழமையான தமிழர் ஆலயம் என்பதுடன், தமிழர்களின் ஆதி வேடர்களின் வணக்க நிகழ்வுகளைத் தற்போதும் கடைப்பிடித்துவருவதாகக் கூறப்படுகிறது. தமிழர்களால் "சின்னக் கதிர்காமம்" என்றழைக்கப்படும் இவ்வாலயம் தனக்கேயுரிய வழிபாட்டு முறைகளுக்காகவும், சடங்குகளுக்காகவும் தமிழர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. கதிர்காமம் முருகன் ஆலயம் நோக்கி யாத்திரைகளை மேற்கொள்ளும் பக்தர்கள் மண்டூர் முருகன் ஆலயத்திற்கும் தவறாது வந்துசெல்வதாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். வருடாந்தம் காணிக்கைகளாலும், நன்கொடைகளினாலும் சுமார் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை சேரும் பணம் ஆலயத்தின் அபிவிருத்திக்கும், மேம்படுத்தலுக்கும், சுற்றுப்புற மக்களின் மக்களின் வாழ்வினை மேம்படுத்தவும் பாவிக்கப்படுதல் அவசியம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், சேர்க்கப்படும் பணத்திலிருந்து ஆலயத்தின் மேம்பாட்டிறென்று எதுவும் செய்யப்படாமலும், ஆலயத்தின் கட்டிடங்கள் அப்படியே பழமையானவையாக இருப்பதனாலும், சேர்க்கப்படும் பணத்தின் பெரும்பகுதி நிர்வாக சபையிலிருப்போரால் சூரையாடப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது. யுத்த காலத்தின் பின்னர் அரசுக்கும், ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் ஆதரவான நிர்வாக சபை இவ்வாலயத்தின் கணக்கு வழக்குகளை வேண்டுமென்றே நெறிப்படுத்தாது இருந்துவந்தது என்பது நிரூபணமாகியிருக்கிறது. 2007 ஆம் ஆண்டுவரை மண்டூர் ஆலயம் அமைந்திருக்கும் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்தது. மதிசாயனின் நண்பர்கள் இவ்வாலய முறைகேடுகள் பற்றிக் குறிப்பிடுகையில், இப்பகுதிக்கான நிர்வாக சபை அதிகாரியாக அமர்த்தப்பட்டவர் ஆலயத்தில் சேர்க்கப்படும் நிதி மற்றும் அந்த நிதியினைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சமூக அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்தல் ஆகிய பணிகளுக்காக அமர்த்தப்பட்டபோதிலும், , ஊழல் விரித்தாடிய ஆலய நிர்வாக சபையுடன் சேர்ந்து அவரும் செயற்பட்டுவந்தார் என்றும், நிர்வாக சபையினால் மேற்கொள்ளப்பட்டுவந்த நிதிக்கையாடலில் அரசால் அமர்த்தப்பட்ட இந்த நிர்வாக அதிகாரிக்கும் ஒரு பங்குபோய்ச் சேர்வதாககவும் குறிப்பிடுகிறார்கள். சமாதான நீதவானாகவும் செயற்பட்டு வந்த மதிசாயன் இந்த நிதிமுறைகேடுகளை கடுமையாகக் கேள்விகேட்டு வந்ததுடன் , மோசடிகளில் ஈடுபட்டுவரும் ஆலய நிர்வாகத்தினருக்கு பின்புலத்திலிருந்து செயற்பட்டுவந்த அரச அதிகாரிதொடர்பாகவும், துணையமைச்சர் கருணா தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உயர்தரப் பரீட்சையில் நான்கு பாடங்களிலும் "ஏ" அதியுயர் சித்திகளைப் பெற்றிருந்த மதிசாயன், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின்னர் ஆசிரியராக மண்டூர் 13 ஆம் கிராமத்தில் 1998 இலிருந்து 2 வருடங்கள் பணிபுரிந்தார் என்று தெரியவருகிறது. பின்னர் ஏறாவூர் பிரதேசச் சபையில் சமூக சேவைகள் அதிகாரியாகப் பதியேற்றுக்கொண்ட மதிசாயன் மண்முனைப்பற்று, மண்முனை, பட்டிப்பழை ஆகிய இடங்களிலும் பின்னர் கடந்த 18 மாதங்களாக அம்பாறை மாவட்ட நாவிதான் வெளியிலும் சமூக சேவைகள் அதிகாரியாகவும் சேவையாற்றிவந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. கிரமப்புற அபிவிருத்தியில் மிகுந்த ஈடுபாட்டுடன் சேவையாற்றி வந்த மதிசாயன், கிராம அபிவிருத்திக் குழுவில் இணைந்து செயற்பட்டுவந்ததுடன், மண்டூர் வைத்தியசாலையினை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார் என்றும் மக்கள் கூறுகின்றனர். ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நலனுக்காக ஆலயம் இதுவரையில் தேவையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டின்பெயரில் செயற்பட்டுவந்த மதிசாயன், தன்னால் முன்மொழியப்பட்டதும் தற்போதைய நிர்வாக சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான பக்தர்களுக்கான இளைப்பாறும் மண்டப நிர்மாணத்தினை தாமதமின்றி உடனேயே ஆரம்பிக்கவேண்டுமென்றும் கூறிவந்தார் என்று சொல்லப்படுகிறது. இதேவேளை இப்பகுதியில் கடந்தவருடம் மகிந்தவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணா மகிந்தவின் பணத்திலிருந்து பத்துலட்சம் ரூபாய்களை "விஷ்ணு விளையாட்டு மைதானம்" என்கிற பெயரில் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றினை நிர்மாணிக்க ஒத்துக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் மைதானத்தினை சீரமைப்பதை விடுத்து, புதிதாக ஆற்றுப்படுக்கைக்கு அண்மையாக, நிலத்தினை உயர்த்தி நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மைதானம் பற்றிக் கடுமையான விமர்சனங்கள் கிராமத்தவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. மதிசாயன் தலைமையிலான மண்டூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு இந்த உத்தேச மைதான நிர்மாணம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை சமூக நலனைக் காரணமாக காட்டி முன்வைத்து வந்தது. மழை காலத்தில் ஆற்றின் நீர்மட்டம் இதனால் உயர்வதோடு, ஆற்றுவெள்ளம் கிராமத்திற்குள் உட்புகவும் இது ஏதுவாக்கும் என்று அவர்கள் கூறிவந்தார்கள். ஆகவே, கருணாவினால் தெரிவுசெய்யப்பட்ட பகுதிக்குப் பதிலாக, கிராமத்தின் வேறோர் இடத்தில் இந்த மைதானத்தை அமைத்துக்கொள்ளலாம் என்று மதிசாயன் தலைமையிலான சமூக அமைப்புக் கோரிவந்தது. இதனால், இந்த உத்தேச மைதான நிர்மாணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க, மண்டூர் பொலீஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் கொலையாளிகள் ரிவோல்வர் ரக சுழல் கைத்துப்பாகியொன்றினைப் பாவித்தே மதிசாயனைக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கொலையாளிகளை அடையாளம் காட்டக் கூடிய ஆதாரங்களை மண்டூர் பொலீஸார் தம்மிடம் வைத்திருப்பதாகக் கூறும் மண்டூர் மக்கள், அரச அழுத்தங்களாலும், துணைராணுவக் குழுவினரின் செல்வாக்கினாலும் அவற்றை வெளியிட்டு உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்வதில் பின்னடிப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, பங்குனி 2015 கிரானில் காணி உரிமையாளரைத் தாக்கிய கருணா மட்டக்களப்பு மாவட்டம், கிரான் பிரதேசத்தில், நூறு ஏக்கர் பகுதியில் விவசாயம் செய்துவரும் வனராஜா என்பவரை துணையமைச்சரும், துணை ராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கருணா என்றழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் போர் நடவடிக்கைகளையடுத்து இப்பகுதியில் வசித்துவந்த வனராஜாவும் அவரது குடும்பமும் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் வந்தபோது, வனராஜாவின் காணி புலிகளால் பாவிக்கப்பட்டு வந்தது. 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் ராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், வனராஜாவும் அவரது குடும்பமும் மீண்டும் தமது பகுதிக்குத் திரும்பிவந்து தமது சொந்தக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அக்காணி தனக்கே உரியதென்றும், தனது வர்த்தக நோக்கங்களுக்காக அக்காணியை தான் எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறிய கருணா வனராஜாவை தனது சகாக்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். சனிக்கிழமை காலை 10:30 கருணாவால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து வனராஜா வாழைச்சேனை வைத்தியசாலையில் கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது தொண்டர்கள் புடைசூழ வான்களில் வந்திறங்கிய கருணா வனராஜாவின் காணியில் வேலைபார்த்துக்கொண்டு நின்ற தொழிலாளர்களை அடித்து விரட்டியுமிருக்கிறார். கருணாவின் அடாவடித்தனத்திற்கெதிராக வாழைச்சேனை பொலீஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருக்கிறது. அரச மாற்றத்தின்பிறகு துணைராணுவக் குழுக்களின் கொட்டம் அடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், நிலைமைகளில் மாற்றமேதும் ஏற்படவில்லையென்று, வழமைபோலவே கருணா துணைராணுவக்குழு ராணுவத்தினருடன் பவனி வருவதாகவும், வெளிப்படையாக ஆயுதங்களைக் கொண்டு திரிவதாகவும் கூறுகின்றனர். ராணுவத்தினரிடையே கருணாவுக்கு இருக்கும் செல்வாக்கு இன்னமும் குறையவில்லையென்றும், அவரைத் தொடர்ந்தும் தமது துணைராணுவக் குழுவின் தலைவராகவே அவர்கள் நடத்திவருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கருணாவின் செல்வாக்குப் பற்றித் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கருணாவுக்குமிடையிலான தொடர்பு அப்பட்டமாகத் தெரிவதாகவும், அவரது நடவடிக்கைகளில் ஆட்சிமாற்றம் எதுவித மாற்றத்தினையும் உருவாக்கவில்லையென்றும் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மாசி 2015 அம்பாறையில் செயற்பட்டுவரும் அரச ராணுவக் கொலைக்குழுவிற்கெதிராக நடவடிக்கையெடுங்கள் - அரசைக் கோரும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் - கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இனியபாரதி எனப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மிக முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமாரை உடனடியாகக் கைது செய்து, தண்டனை வழங்குமாறு அம்பாறை மாவட்டத்தில் இவனால் வலிந்து காணமலாக்கப்பட்ட பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளின் பெற்றோர் அரசை வேண்டிக்கொண்டுள்ளனர். 2007 இற்குப் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து இனியபாரதியால் இதுவரையில் குறைந்தது 200 இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகளிலிருந்து தெரியவருகிறது. மேலும், புலிகளிடமிருந்து பிரிந்து பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பல முன்னாள்ப் போராளிகளும் இவனது குழுவினரால் காணாமலாக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இனியபாரதி தனக்கென்று தனியான கொலைக்குழுவொன்றினை நடத்திவருவதாகத் தெரிகிறது. சுமார் 700 ஆயுதம் தரித்த கொலைக்குழுவினர் இவனது கட்டுப்பாட்டில் இயங்குவதோடு, கடத்தல்கள், காணாமற்போதல்கள், கப்பம் உட்பட மிகக் கொடூரமான வன்முறைகளில் இவனும் இவனது குழுவும் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பல சர்வதேச அமைப்புக்கள் உட்பட பல மனிதவுரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, மகிந்தவின் அரசுக்கும் இவனுக்குமான நெருக்கம் பற்றியும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தன. இனியபாரதி ஆரம்பத்தில் செய்த கொலைகளில் குறிப்பிடத் தக்கது கிழக்கின் அனுபவம் மிக்க செய்தியாளரான ஐய்யாத்துரை நடேசன் என்பவரது படுகொலையாகும். 2004 இல் அவரது இல்லத்திற்கு மிக அருகே இனியபாரதியால் பலதடவைகள் தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நடேசனின் மரணத்தில் தற்போது ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிரிசேனவின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இனியபாரதியால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஐய்யாத்துரை நடேசனின் இறுதி நிகழ்வு ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரி அபயரட்ணவின் நேரடி வழிகாட்டலில் செயற்படும் இனியபாரதியின் கொலைக்குழு, கருணா கொலைக்குழு அங்கத்தவர்களையும், ஈ என் டி எல் எப் எனும் இந்தியாவின் துணையுடன் இயங்கும் துணைப்படையின் உறுப்பினர்களையும், சில முஸ்லீம் ஆயுதக் குழு உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் இக்கொலைக்குழு அவ்வப்போது தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையேயான பிணக்கினை பெரிதுபடுத்தவும் மகிந்த அரசினால் பாவிக்கப்பட்டு வந்தது, இன்றும் நிலை அப்படித்தான். 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நடவடிக்கையொன்றில் சரணடைந்த இரு இனியபாரதி கொலைக்குழு உறுப்பினர்களின் தகவல்களின்படி இனியபாரதி மைத்திரிபால சிரிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா அக்கியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்திருந்தான் என்று தெரியவந்திருந்தது. இவ்வாறு புலிகளிடம் சரணடைந்த இனியபாரதியின் கொலைக்குழு உறுப்பினர்கள், தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தாம் இனியபாரதியுடன் சேர்ந்தது அவனைக் கொல்வதற்காகவே என்றும், தாம் தப்பி வருமுன்னர் இனியபாரதியையும், அவனது சகாக்கள் சிலரையும் கொன்றுவிட்டுத் தப்பிவந்ததாகவும் கூறியிருந்தனர். ஆனால், இனியபாரதி அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டான் என்பது நாம் அறிந்ததே. கடந்த புதனன்று, திருக்கோயில் பிரதேச செயலகத்தின்முன்னால் கூடிய ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70 உறவினர்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொன்றுபோட்ட இனியபாரதியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனியபாரதியின் கொலைக்குழு முகாம் அமைத்திருந்த பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டு தமது சொந்தங்களின் எச்சங்கள் இருக்கின்றதா என்று கண்டறியப்படவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். இனியபாரதியின் கொலைமுகாமிலிருந்து தப்பிவந்த ஒரு சிலரின் தகவல்ப்படி இனியபாரதியால் கடத்திக் கொண்டுவரப்பட்ட பல இளைஞர்கள் இம்முகாமிலேயே கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அத்துடன், தம்பிலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சந்தைப் பகுதியில் இனியபாரதி அமைத்திருக்கும் அவனது "பாதுகாப்பு வீடு" உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்டு அவன் கைதுசெய்யப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இனியபாரதி இப்போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் கூறுகையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு, திருக்கோயில், காரைதீவு, நாவிதான்வெளி, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் குறைந்தது 5000 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமற்போயுள்ளனர் என்றும், இவர்களுள் பலநூற்றுக்கணக்கானவர்களின் காணாமற்போதல்களோடு இனியபாரதி நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறான் என்றும் கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் அம்பாறை மாவட்டத்தின் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் பங்கெடுத்திருந்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, தை 2015 மட்டக்களப்பில் துணை ராணுவக் கொலைக்குழுக்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துங்க்கள் - உள்ளூர் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரசரட்ணம் சசிதரன் விடுத்துள்ள வேண்டுகோளில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கிழக்குமாகாணத்தில் பல படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட துணைராணுவக் கொலைக்குழுக்களின் உறுப்பினர்களை புதிய அரசாங்கத்தின் எந்தப் பதிவிகளிலும் அமர்த்தக் கூடாது என்று கோரியிருக்கிறார். மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சிக் கிளையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தில் நான்கு முக்கிய துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இவர்கள் புதிய அரசின் எந்தப் பதவியிலோ அல்லது அரசின் ஆதரவுக் கட்சிகளினூடாக எந்தப் பதவிகளிலுமோ அமர்த்தப்படக் கூடாதென்று கோரப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்க ரணிலோ அல்லது மைத்திரியோ உண்மையாகவே விரும்பினால் இக்கொலைக்குழுக்களை மட்டக்களப்பிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளனர் மட்டக்களப்பு ஐக்கியதேசியக் கட்சியினர். "விலைபோன" பியசேன இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்றம் சென்றுவிட்டு பின்னர் பெருந்தொகைப் பணத்திற்காக மகிந்தவின் கட்சிக்குக்குத் தாவிய பியசேனவுக்கு எதிரான போராட்டம் ஒன்று அம்பாறை மாவட்ட தமிழ் மக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. கொலைக்குழு ஆயுததாரி "தேஷமான்ய" இனியபாரதி அத்துடன், மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் பிரதான ஆயுதாரியுமான "தேஷமான்ய" இனியபாரதிக்கெதிரான போராட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் திகதி திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஆயுததாரி இனியபாரதியின் வீட்டைச் சூந்துகொண்ட சுமார் 3000 தமிழர்கள் அவனை பிடிக்க எத்தனித்தபோது பொலீஸாரின் உதவியோடு அவன் பாதுகாப்பாகத் தப்பிவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். இத்தீர்மானத்தின்படி, முன்னாள் துணையமைச்சரும் துணைராணுவக் குழுவொன்றின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதி அலி சாகீர் மெளலானா, பிள்ளையானின் நெருங்கிய ஆயுததாரி கணபதிப்பிள்ளை மோகன் ஆகியோர் அப்புறப்படுத்தப்படவேண்டிய மக்களுக்கு எதிரான சக்திகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏறாவூர் உள்ளூராட்சிச் சபையின் தலைவராக இருக்கும் அலி சாகீர் மெளலானா புதிய அரசாங்கத்தின் ஆதரவாக செயற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, 2004 இல் புலிகளிடமிருந்து கருணா போலியான பிரதேசவாத காரணங்களை முன்வைத்து பிரிந்துசென்று அரச ராணுவத்துடன் இணைவதற்கு உதவிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அலி சாகீர் மெளலானா தனது தோழனும், ஆயுததாரியுமான கருணா பற்றிக் கூறியது அத்துடன், தற்போது மகிந்தவின் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருக்கும் கொலைக்குழு தலைவன் பிள்ளையானும் புதிய அரசிடமிருந்து தனக்கு ஆதரவையும், பாதுகாப்பையும் கேட்டிருப்பதாகத் தெரியவருகிறது. கொலைக்குழு ஆயுததாரிகளின் தலைவன் - பிள்ளையான் அதேவேளை, துணைராணுவக் கொலைக்குழுவின் ஆயுததாரி கருணா தனது துணையமைச்சர் அதிகாரங்களை இன்னமும் மீளக் கையளிக்காத நிலையில், புதிய அரசாங்கத்திற்கு தனது ஆதரவு இருக்கும் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கொலைக்குழு ஆயுததாரிகளின் தலைவன் - கருணா ரணிலும், அமெரிக்காவும், அவர்களது புலிகளுக்கெதிரான சர்வதேச வலையமைப்பும் 2004 இல் ரணில் தலைமையிலான அரசே கருணாவைப் புலிகளிடமிருந்து பிரித்து, புலிகளைப் பலவீனமாக்கி இறுதியில் அழிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெற்கில் மார்தட்டி வந்த நிலையில் கருணாவின் இந்த ஆதரவுக்கரம் ரணிலின் புதிய அரசிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ரணில் அண்மையில்க் கூட வெளியிட்ட அறிக்கையொன்றில் தனது அரசாங்கத்தின் காலத்தில், கருணாவைப் பிரித்து, புலிகளைப் பலவீனமாக்கி, அமெரிக்காவின் உதவியுடன் "பாதுகாப்பு வலைப்பின்னலை " உருவாக்கி, இறுதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை மகிந்த முற்றாக அழித்துமுடிக்க தாமே ஏற்பாடு செய்ததாகக் கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, தை 2015 மட்டக்களப்பில் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிய பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்கள் மகிந்த அரசாங்கத்தினால் முன்னர் பதவியில் அமர்த்தப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்றைய மகிந்தவின் கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவொன்றினை நடத்துபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் ஆயுததாரி பொது எதிரணியினரால் மட்டக்களப்பில் இடம்பெறும் தேர்தல்களைக் கண்காணிக்கவென நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிவருவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சித்தாண்டிப் பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்க்களில் கண்காணிப்பாளர்களாக நிறுத்தப்பட்ட பலர் பிள்ளையான் கொலைக்குழுவினரால கொலைப்பயமுருத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவருகிறது. இதேவேளை அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பகுதியில் இயங்கிவரும் இன்னொரு கொலைக்குழுவான கருணா குழுவின் பிரதான ஆயுததாரி, "தேஷமான்ய" இனியபாரதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தின் உறுப்பினர் ப. விஜயராஜா என்பவரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறார். காயப்பட்ட உறுப்பினர் திருக்கோயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. சித்தாண்டிப் பகுதியில் குறைந்தது 3 வாக்குச் சாவடிகளை சுற்றி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் வலம்வருவது அவதானிக்கப்பட்டிருப்பதுடன், அப்பகுதியில் பணியாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தொடர்ச்சியாக இக்குழுவினரால மிரட்டப்பட்டுவருகின்றனர் என்றும் தெரியவருகிறது. இப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராகச் செயற்பட்டுவரும் தவராசா ஜெயசிறியின் வீட்டிற்குச் சென்ற பிள்ளையான் கொலைக்குழு அவரது தங்கையை மிரட்டி, "உனது சகோதரன் தொடர்ந்தும் தேதல் கண்காணிப்பில் ஈடுபட்டால், பாரிய விளைவுகளைச் சந்திப்பீர்கள், உனது சமுர்தி வேலை இல்லாமல்ப்போவதோடு வேறு பல கடுமையான விளைவுகளும் ஏற்படும் " என்று மிரட்டிவிட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது. இதுவரையில் பிள்ளையான் கொலைக்குழுவினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 44 தேர்தல் வன்முறைகள் அரங்கேற்றப்படுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் முறையிட்டிருக்கிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். "தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, "அவனைப் பிடியுங்கள்" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய் பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2014 தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் அம்பிடிய சுமனரத்ன தேரருக்கு ஆதரவாக நிற்கும் காவல்த்துறையும் கருணாவும் தமிழ் அரச அதிகாரிகளைத் தாக்கும் சுமனரத்ன பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லையோரத் தமிழ்க் கிராமங்களை அபகரித்து சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன எனும் பிக்குவே தலைமைதாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பிக்குவின் தலைமையில் அபகரிக்கப்பட்ட தமது நிலங்கள் தொடர்பாக மக்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்தபோது, பிரதேச செயலகத்தினால் அம்முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். தமிழரின் நிலங்களை அபகரிக்கும் இனவாதப் பிக்குவுடன் சமரசம் செய்யும் கருணா ஆனால், பிரதேச செயலாளரின் துணையோடு மக்களால் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டவேளையில், வெள்ளாவெளிப் பொலிஸார் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் பிக்குவின் தலைமையில் அண்மையில் சிங்களவர்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி படுவான்கரையின் சின்னவத்தை எனும் கிராமம் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் ஊடகவியலாளருக்கு பகிரங்க அச்சுருத்தல் விடும் பிக்கு வெள்ளாவெளி பொலீஸ் நிலையத்தில் தமது காணிகளில் அத்துமீறி சிங்களவர்கள் விவசாயம் செய்துவருவதாக லக்ஷ்மணன் நாகமுத்து, கமலலக்ஷ்மி நாகமுத்து, ராசமணி காத்தமுத்து, ராஜலக்ஷுமி காத்தமுத்து ஆகிய காணி உரிமையாளர்கள் முறையிடச் சென்றபோது பெளத்த பிக்குகளுக்கு எதிராக இலங்கையின் காவல்த்துறை ஒருபோதுமே செயற்படாது , ஆகவே உங்களின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி அவர்களை விரட்டியடித்ததாக அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் காணிகளை அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கு உள்ளூர் பிக்கு, மட்டக்களப்பு விகாரையின் சுமனரத்ன தேரரின் பணிப்பின்பேரிலேயே செயற்படுவதாக மேலும் இந்த உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த அடாத்தான காணி ஆக்கிரமிப்புப் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. கிழக்கில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் முகவர் பிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டம் முற்றான சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய தோழரான சுமனரத்ன தேரர் எனும் இந்தப் பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்களை ராணுவத்தினரின் உதவியோடும், பொலீஸாரின் காவலோடும் , பிரதியமைச்சரும், மகிந்தவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரான கருணாவின் துணையோடும் தொடர்ச்சியாகச் செய்துவருவதாகக் கூறுகிறார். அரசிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கான அரசின் முயற்சிகளும் கருணாவின் துணையோடு பிக்குவினால் தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை - மட்டக்களப்பு மற்றும், பொலொன்னறுவை - மட்டக்களப்பு ஆகிய எல்லையோரங்களில் தற்போது நடந்துவரும் இந்தப் பிக்குவின் தலைமையிலான நில அபகரிப்பு தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லையென்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 2013 இல் திருமதி வில்வரட்ணம் எனும் பிரதேச சபை அதிகாரியுடன் பட்டிப்பளையில் விவாதத்தின் ஈடுபடும் இனவாதப் பிக்கு சுமனரத்ன தேரர். சில மாதங்களுக்குப் பின்னர் பொலீஸாரைக் கூட்டிவந்து பிரதேச செயலாளருக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் தேரர். தேரருக்கு ஆதரவாக காவல் நிற்கும் சிங்களக் காவல்த்துறை. சிங்கள அரசாங்கம் தமிழர் பகுதிகளில் தான் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை, அபிவிருத்தி எனும் போர்வைக்குள் மறைத்து அரங்கேற்றிக்கொண்டு வருகிறது. உள்ளூர் அரச அதிகாரிகளால் தலையீடு செய்யப்பட்டபோதும் , அரசின் காவல்த்துறையும், ராணுவமும் அரச அதிகாரிகளை உதாசீனம் செய்து பிக்குவின் தலைமையிலான ஆக்கிரமிப்பினை ஆதரித்து, துணையாகவும் நிற்பது அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சலுகைகளுக்காக சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் தம்பிமுத்து, கருணா மற்றும் பிள்ளையான் இதற்கு மேலதிகமாக கிழக்குத் தமிழர்களின் சுபீட்சமான வாழ்வுக்காக அரசுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் கருணாவும் பிள்ளையானும் பிக்குவிற்கு உதவியாக தமது இனத்தின் நிலங்களை ஆக்கிரமிக்க துணைநிற்பதாக மக்கள் விசனப்படுகின்றனர். இதேவேளை, தமிழர்களின் நிலங்களை வெளிப்படையாகவே சிங்களவர்களது என்று அபகரித்துவரும் சுமனரத்ன எனும் பிக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான விரிசலினை பெரிதாக்க முயன்றுவருவதாகத் தெரிகிறது. முஸ்லீம்களை தமிழருக்கும் சிங்களவர்களுக்குமான பொதுவான எதிரியென்று அடையாளப்படுத்தும் பிக்கு, தமிழர்கள் சார்பாக முஸ்லீம்களுக்கெதிராகத் தான் போராடுவதாகக் காட்டிக்கொண்டு, தமிழரின் நிலங்களைத் தொடர்ச்சியாக அபகரித்துவருகிறான் என்று பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2014 கருணாவின் உதவியுடன் சிங்களமயமாகும் கஞ்சிகுடிச்சியாறும் தங்கவேலாயுதபுறமும் புலிகளுடனான யுத்தத்தில் 2007 இன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் இரு புராதன தமிழ்க் கிராமங்களான கஞ்சிகுடிச்சியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளை சிங்கள ராணுவம் முற்றாக ஆக்கிரமித்திருக்கிறது. தற்போது இவ்விரு கிராமங்களையும் படிப்படியாக சிங்களமயமாக்கும் கைங்கரியத்தில் அரசும் ராணுவமும் ஈடுபட்டுவருகின்றன என்று தெரியவருகிறது. கடந்து 3 நாட்களுக்கு முன்னர் இப்பகுதிக்கும் விஜயம் செய்த பெளத்த பிக்கு ஒருவரும் இரு கருணா குழு முக்கியஸ்த்தர்களும் இவ்விரு கிராமங்களுக்கிடையேயும் விகாரை ஒன்றைக் கட்டுவதற்கான பணிகளை இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பிக்கப்போவதாகவும், அப்பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறிவிடவேண்டும் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விரு கிராமங்களினது இடையில் வரும் சந்தியொன்றில் மகிந்த ராஜபக்ஷவின் பாரிய உருவப் படம் ஒன்றினை கட்டிய கருணா குழு முக்கியஸ்த்தரும் பிக்குவும், "மகிந்தவின் சிந்தனையையும், செயற்பாடுகளையும் இக்கிராமம் மக்கள் வரவேற்கின்றனர்" என்றும் பதாதைகளையும் தொங்கவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. கட்டப்பட்டுவரும் கஞ்சிக்குடியாறு பெளத்த விகாரையின் அமைவிடம் கூகிள் வரைபடத்தின்படி. https://www.google.com/maps/@7.0447405,81.7732417,196m/data=!3m1!1e3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மகிந்தவின் கட்சிக்குத் தாவிய பொடியப்பு பியசேன எனும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் இக்கிராமங்களில் மகிந்தவுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு தமிழர்கள் சிலரை பணத்திற்காக வாங்கியிருப்பதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தங்கவேலாயுதபுரம் கிராம அபிவிருத்திச் சபையின் தலைவரை அகற்றி மகிந்தவின் விசுவாசி ஒருவரை பதவியில் அமர்த்தும் கைங்கரியத்தில் பியசேன மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது. இவ்விரு கிராமங்களிலும் சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்துவரும்போதும்கூட, சுமார் 200 இற்கும் குறைவான குடும்பங்களே மீள்குடியேற்றப்பட்டு வாழ்வதாகத் தெரிகிறது. மீதிக்குடும்பங்கள் அடிப்படை வசதிகளேதும் அற்று அநாதரவாக அரசாலும், அரசுசாரா நிறுவனங்களாலும் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் தீவிரவாத தடுப்புப் பிரிவான விசேட அதிரடிப்படை இக்கிராமங்களில் ஆடிய நரவேட்டையினயடுத்து தங்கவேலாயுதபுரத்திலிருந்து 435 குடும்பங்களும், கஞ்சிகுடிச்சியாறு பகுதியில் இருந்து 332 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு உயிர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, வைகாசி 2014 "இனிமேல் எந்த விதமான கிளர்ச்சிகள் நடந்தாலும் நீங்கள் கொல்லப்படுவீர்கள்" முன்னாள்ப் போராளிகளை எச்சரித்த ராணுவப் புல்நாய்வுத்துறையும் கருணா குழுவும் கடந்த 5 நாட்களாக கருணா குழுவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலவிடங்களிலும் முன்னாள்ப் போராளிகளைத் தேடி கைதுசெய்தல் மற்றும் விசாரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முள்ளிவாய்க்கால் இனக்கொலையின் நினைவுநாட்கள் இன்னும் ஒருசில தினங்களில் அனுஷ்ட்டிக்கப்படவிருக்கும் நிலையில் முன்னாள்ப் போராளிகளையும் தென் தமிழீழ மக்களையும் அச்சமூட்டும் நடவடிக்கைகளை ராணுவப் புலநாய்வுத்துறை கருணா குழுவின் உதவியோடு ஆரம்பித்திருக்கிறது. ராணுவமும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும், அவர்களால் வழிநடத்தப்படும் கருணா துணைக் கொலைப்படையினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையில் படுவான்கரையிலும், அதனைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் வாழ்ந்துவரும் முன்னாளப் போராளிகள் அனைவரும் அருகிலுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் முகாம்களுக்கு வருமாறு பணிக்கப்பட்டிருந்தனர். முகாம்களுக்கு இழுத்துவரப்பட்ட முன்னாள்ப் போராளிகளை மிரட்டிய புலநாய்வுத்துறை "இனிமேல் ஏதாவது கிளர்ச்சி நடவடிக்கைகள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கொல்லப்படுவீர்கள்" என்று மிரட்டியதோடு ராணுவ முகாம்களில் துப்புரவாக்கும் பணி போன்றவற்றிற்கு கட்டாயமாக வரவேண்டும் என்று விண்ணப்பப் படிவங்களைத் திணித்து பலவந்தமாக அவர்களின் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டதாகத் தெரியவருகிறது. இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்களின்பொழுது ராணுவத்துடன் பவனிவந்த கருணா குழு, போராளிகளின் வீடுகளுக்குள் நுழைந்து ராணுவத்தில் சேருமாறும் அப்படியில்லையென்றால் உங்களைக் கவனிப்போம் என்று கூறியும் மிரட்டியதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை மற்றும் படுவான்கரைப் பகுதிகளிலேயே இந்தக் கடுமையான அச்சமூட்டும் சுற்றிவளைப்புத் தேடுதல்களை கருணா குழுவினருடன் சேர்ந்து ராணுவப் புலநாய்வுத்துறை செய்துவருகிறது. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, வைகாசி 2014 குடும்பிமலை (சிங்களத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டபின் தொப்பிகல), பூலாக்காடு, கூழாவடி, திகிலவெட்டை, பெண்டுகல்ச்சேனை, கோரளைப்பற்று தெற்கு, கதிரவெளி, வாகரை, பால்ச்சேனை, வம்மிவெட்டுவான், பனிச்சங்கேணி, வாகரை மத்தி மற்றும் கோரளைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளிலேயே இந்தத் தேடுதலும் சுற்றிவளைப்பும் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. கோரளைப்பற்று தெற்கின் பகுதிகளுக்குள் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட ராணுவத்தினரும், துணைக்குழுவினரும் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்று சிங்களத்தில் அச்சிடப்பட்டிருந்த படிவங்களில் போராளிகளின் கையொப்பங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. வீட்டு உறுப்பினர்கள், தற்போது செய்யும் வேலை, போய்வரும் இடங்கள், வழமையான பயணப் பாதை ஆகிய விடயங்களை அவர்கள் பதிந்துகொண்டு சென்றதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை பிரதேசத்திலிருக்கும் முன்னாள்ப் போராளிகளில் குறைந்தது 250 பேரின் வீடுகளுக்குச் சென்று அவர்களை தமது முகாம்களுக்கு வருமாறு ராணுவமும் துணைக்குழுவும் பணித்தபோதும்கூட பனிச்சங்கேணி முகாமிற்கு வெறும் 26 முன்னாள்ப் போராளிகளே சமூகமளித்திருந்ததாகத் தெரியவருகிறது. சுற்றிவளைப்புகளின் பொழுது அனைத்து முன்னாள்ப் போராளிகளையும் கைதுசெய்த ராணுவம், ஒரேவிதமான கேள்விகளை அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. கிராமப்புறத் தலைவர்கள் ராணுவத்தின் புதிய பதியும் நடவடிக்கை பற்றிக் கேட்டபோது, முன்னாள்ப் போராளிகளுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவே விபரங்களைச் சேகரிப்பதாகக் கூறியிருக்கிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, சித்திரை 2014 துணைராணுவக் குழுவினராலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டுவரும் முன்னாள்ப் போராளிகள் மற்றும் பொதுமக்கள். ராணுவப் புலநாய்வுத்துறையினரும், அவர்களின் எடுபிடிகளான துணைராணுவக் குழுவினரும் மட்டக்களப்பில் முன்னாள்ப் போராளிகளையும் சாதாரண பொதுமக்களையும் தொடர்ச்சியாக அச்சுருத்திவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மையில்க் கூட வவுனியாவில் வசித்துவரும் முன்னாள்ப் போராளிகள் குடும்பம் ஒன்றினை கைதுசெய்து அழைத்துச் சென்ற துணைராணுவக் குழுவினரும், புலநாய்வுத்துறையினரும் விசாரணைகளின் பின்னர் பூசா தடைமுகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளனர். கருணாவின் பிரதேசவாதப் பிரிவிற்கு முன்னரே இயக்கத்தைவிட்டு விலகிய இவர்கள் இருவரும் திருமணம் முடித்து பொதுவாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. வவுனியாவில் சாதாரண தொழில்களை செய்து தமது வாழ்க்கையினை ஓட்டிக்கொண்டிருந்த இந்த முன்னாள்ப் போராளித் தம்பதிகளே பிள்ளைகளுடன் கருணா துணைராணுவக் குழுவினராலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலும் கைதுசெய்யப்பட்டு பூசாவில் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இவர்களின் மூன்று குழந்தைகளும் மட்டக்களப்பு ஆயித்தியமலையில் இருக்கும் அவர்களின் பேத்தியாரின் வீட்டில் விடப்பட்டிருக்கிறார்கள். வவுனியாவில் கைதுசெய்யப்பட்டு பூசாவில் அடைக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகளின் விபரங்கள் : லோகனாதன் வீரக்குட்டி, 41, ஆயித்தியமலை, மட்டக்களப்பு. மகேஸ்வரி கிருஷ்ணபிள்ளை 30, சந்திவெளி, மட்டக்களப்பு. இவர்களுடன் கைதுசெய்யப்பட்ட இன்னொரு முன்னாள்ப் போராளியின் விபரம் : ரவிச்சந்திரன் கிருஷ்ணபிள்ளை 36, சந்திவெளி, மட்டக்களப்பு. இவர் 2001 இல் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் 2004 இல் விடுதலையாகியிருந்தவர் என்பதும், தற்போது சந்திவெளியில் வாழ்ந்துகொண்டிருந்தவேளை கருணா குழுவினராலும் புலநாய்வுத்துறையினராலும் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தென் தமிழீழத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அனைவரையும் கூட்டம் ஒன்றிற்கு வருமாறு கருணா துணைராணுவக் கொலைக் குழுவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும் அண்மையில் பணித்திருந்தனர். இம்மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், "புலம்பெயர் தமிழரின் கதைகளையோ, அவர்களது கருத்துக்களையோ நீங்கள் கேட்கவோ ஏற்றுக்கொள்ளவோ கூடாது. மேற்குலகத்தினர் புலம்பெயர் தமிழர்கள் மூலம் உங்களுக்கு ஆயுதங்களை வழங்கி மீண்டும் ஒரு போருக்குள் இழுத்துவிடப் பார்க்கிறார்கள். அவர்களின் திட்டத்திற்காக வீணே பலியாகாதீர்கள்" என்று கருணாவினாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் தமக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டது என்று இக்கூட்டத்திற்கு வலிந்து கொண்டுவரப்பட்ட முன்னாள்ப் போராளிகள் தெரிவித்தனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, ஐப்பசி, 2011 குறிப்பு : விக்கிலீக்ஸில் வந்த செய்தி. முன்னர் இணைக்கமுடியாமல்ப் போய்விட்டது. அதனால் தொடரின் நடுவே இதன் முக்கியத்துவம் கருதி இணைக்கிறேன். அமெரிக்கத் தூதுவர் பட்ரிஷியா அவர்களால் வோஷிங்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கேபிள் செய்தி அம்பாறைத் தேர்தல்கள் : பயமுருத்தலும், முறைகேடல்களும் "அமெரிக்க தூதரும் (நானும்), யு எஸ் எயிட் மிஷன் நிர்வாகியும் அம்பாறை மாவட்டத்திலிருந்து பத்து வர்த்தகப் பிரமுகர்களையும் அம்பாறை மாவட்ட அரச அதிபர் கன்னங்கரவையும் சந்தித்தோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழர்களின் எண்ணிக்கை அம்பாறையில் மிகவும் குறைவானது. 2005 கணக்கெடுப்பின் பிரகாரம் 40 வீதம் சிங்களவர்களும், 40 வீதம் முஸ்லீம்களும் 18 வீதம் தமிழர்களும் அம்பாறையில் வாழ்கிறார்கள்". மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் சூழ்நிலை ஆயுததாரி "தேசமான்ய" இனியபாரதி "அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்கள் எம்மிடம் கூறிய தகவல்களின்படி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளரான கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி சுமார் 700 ஆயுததாரிகளை வைத்துக்கொண்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கிறார் என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதனை அச்சுருத்தித் தடுத்துவருகிறார் என்றும் தெரியவருகிறது". "ஆனாலும், மகிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு மிகவும் பலவீனமாகவே இங்கு காணப்படுகிறது. கடந்த தை மாதம் அவரது ஒருங்கிணைப்பாளர்களால் இங்கு கூட்டப்பட்ட தேர்தல் கூட்டமொன்றிற்கு வந்த பொதுமக்கள் 500 பேரில், ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன் உலர் உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன. தமிழ் வக்காளர்களைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ஷவைக் காட்டிலும் சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்களின் கருத்துப்படி குறைந்தது 85 வீதமான தமிழர்களும், 60 இலிருந்து 80 வீதமான முஸ்லீம்களும், 50 வீதமான சிங்களவர்களும் சரத் பொன்சேக்காவுக்கே வக்களிப்பார்கள் என்று கருதுகிறார்கள். ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் ராஜபக்ஷ 67 வீதமான வாக்குகளையும் பொன்சேக்கா 30 வீதமான வாக்குளையுமே பெற்றதாக இறுதியில் அரசால் அறிவிக்கப்பட்டது". ------------------------------------------------------------------------------------------------------------ "அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. இம்மாவட்டத்தில் அரச அதிபர் இதுதொடர்பாக தன்னாலான முயற்சிகளை எடுத்துவருவதாகக் கூறுகிறார். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி எதிரணியினரின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த பேரூந்துகள் மீது உந்துரிகளில் வந்த சுமார் 40 ஆயுததாரிகள் ராணுவச் சாவடியொன்றில் வைத்து வாட்களாலும் தடிகளாலும் தாக்கியிருக்கின்றனர். இப்பேரூந்துகளின் அமைவிடம் மற்றும் பாதை பற்றிய தகவல்களை தாக்குதல் நடத்தியவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்கிறது. அதே நாள் வேறொரு சம்பவத்தில் குறைந்தது 25 எதிரணி ஆதரவாளர்கள் இதே அணியினரால் தாக்கப்பட்டுக் காயப்பட்டிருக்கிறார்கள். பொலீஸாரைப் பாவித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட அரச அதிபர் முயல்கிறார். சுமார் 70 - 8- பொலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோதும் குறைந்தது 25 - 30 வரையான பொலீஸார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று தெரியவருகிறது. இதனால் பொதுக்கூட்டங்களை தேர்தல் முடியும்வரை ஒத்திவைப்பதாக மாவட்ட அரச அதிபர் கூறுகிறார். -------------------------------------------------------------------------------------------------------------------- "சுமார் 420,000 இலிருந்து 627,000 வரையான வாக்களர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், அரச ராணுவத் துணைக்குழுக்களின் வன்முறையினால் பலர் வாக்களிப்பில் கல்ந்துகொள்ளத் தயங்குவதுபோலத் தெரிகிறது. சுமார் 59,000 சிங்கள ஊர்காவல்ப் படையினைக் கொண்ட அணியொன்றினை உள்ளூர் அரசியல்வாதியான சரத் வீரசேகரா எனப்படுபவர் தலைமைதாங்கி நடத்துவதாகத் தெரிகிறது. இம்மாவட்டத்தில் இருக்கும் சிங்களவர்களுக்கான பாதுகாப்பிற்கே இப்படை அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது". ---------------------------------------------------------------------------------------------------------------------- தேர்தல் செயன்முறைகள் "அம்பாறை மாவட்டத்தின் அதிகாரம் வாய்ந்த தேர்தல் அதிகாரியாக அம்மாவட்டத்தின் அரச அதிபரே இருக்கிறார். சுமார் 20 ஒருங்கிணைப்பு நிலையங்களை இம்மாவட்டத்தில் நிறுவியுள்ள அவர், தேர்தல் கால முறைகேடுகளைக் கண்காணிக்க அதிகாரிகளையும் நிறுத்தியிருக்கிறார். இம்மாவட்டத்தில் முறையிடப்படும் தேர்தல் கால முறைகேடுகளை மக்களிடமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் பெற்றுக்கொண்டு தேர்தல் ஆணையாளருக்கு அதுபற்றி அறிவிப்பது அவரது கடமையாகும். தேர்தல்களின் நிறைவில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், இம்முறை தேர்தல்களில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரின் தகவலின்படி மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களுட்பட 8 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்த உத்தியோகபூர்வ பணிப்பின் பேரில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு அறியத்தருமாறு கட்டளையிடப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்". "இதற்கு மேலதிகமாக போலி வாக்காளர் அட்டைகளைப் பாவித்து வாக்களித்தமை, வாக்குப் பெட்டிகளை போலியான வாக்குகளைக் கொண்டு நிரப்பியமை, கைகளில் இடப்பட்ட மையினைக் கழுவியபின்னர் பலதடவைகள் வாக்களர்கள் வாக்களித்தமை உட்பட பெருமளவு தேர்தல் மோசடிகளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மகிந்தவின் ஒருங்கிணைப்பாளர்கள் நடத்தியிருக்கிறார்கள்".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்கழி 2013 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னர் மட்டக்களப்பில் குடியேறிய தமிழர்களை வஞ்சித்த கருணா முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர்தப்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுமார் 1100 குடும்பங்கள் மீளவும் மட்டக்களப்பில் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் உதவிகள் அனைத்துமே மறுக்கப்பட்டு மிகவும் அவலமான நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். 2004 இல் மட்டக்களப்பிலிருந்து வன்னிநோக்கி இம்மக்கள் இடம்பெயர்ந்தபொழுது, இவர்களின் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்களை அபகரித்துக்கொண்ட கருணாவும் அவரது குழுவினரும், மீதமிருந்த வீடுகளையும், ஏனைய சொத்துக்களையும் அழித்தது நினைவிலிருக்கலாம். இனவழிப்புப் போரின் பின்னர் இவர்கள் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து குடியேறியபோது அரசசார்பற்ற நிறுவனங்களும், ஐ நா அமைப்புக்களில் சிலவும் இவர்களுக்கான தற்காலிக தங்கு கொட்டகைகளை வழங்கியிருந்தன. ஆனால், அதன்பிறகு இம்மக்களுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரியவருகிறது. தமக்கு ஐ நா வினாலும், அரசாரா தொண்டர் நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட கொட்டகைகளைக் கொண்டே தாம் வேறுபடுத்தி அடையாளம் காணப்படுவதாகவும், இப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏனைய மக்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணங்கள் தமது கொட்டகைகளை தாண்டிச் சென்றுவிடுவதாகவும், வன்னியில் புலிகளுடன் இருந்த காரணத்தினாலேயே தாம் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்தியாவின் இலவச வீட்டுத் திட்டத்திலும் தாம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கொடூரமான இனவழிப்பு யுத்தத்திற்கு முகம்கொடுத்து, அவலங்களைச் சுமந்து மீண்டும் தமது மாவட்டத்திற்குத் திரும்பியிருக்கும் இத்தமிழர்களுக்கான அனைத்து நிவாரணங்களையும் கருணா தனது அரசியல் பலத்தினைப் பாவித்து தடுத்து வருவதாகவும், தம்மை வந்து பார்ப்பதற்குக் கூட அரச அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 4000 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இந்தியாவின் திட்டத்தின்படி, மட்டக்களப்பில் மாத்திரம் 2000 வீடுகள் கட்டப்படுவதாகவும். இவற்றுள் ஒரு வீடுகூட வன்னியிலிருந்து மட்டக்களப்பு திரும்பியிருக்கும் மக்களுக்கு ஒதுக்கப்படவில்லையென்றும், பெரும்பாலான வீடுகள் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர் தப்பி, ராணுவ தடுப்புமுகாம்களில் சித்திரவதைகளைச் சந்தித்து, முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு அல்லற்பட்ட இம்மக்கள் கோரளைப்பற்று வடக்கு - வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான், வவுணதீவு, கோரளைப்பற்று, பட்டிப்பளை, போரதீவுப்பற்று மற்றும் மண்முனைப்பற்று ஆகிய பகுதிகளிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, புரட்டாதி 2013 முன்னாள்ப் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கத் தொடங்கியிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் கிழக்கில் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கும் கைங்கரியத்தில் கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்தால் பணிக்கப்பட்டிருப்பதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் மற்றும் பெண் போராளிகளை பலவந்தமாக இணைக்க ஆரம்பித்திருக்கும் இத் துணை ராணுவக் கொலைக்குழுக்கள் அவ்வாறு இணைய மறுக்கும் போராளிகளின் பெற்றோரை அல்லது குடும்பஸ்த்தவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டிவருகின்றனர் என்று இப்போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை, வெள்ளாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளில் முன்னாள்ப் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் துணைராணுவக் கொலைக் குழுக்கள் போராளிகளை மிரட்டி வருவதுடன் அவர்களைப் பலவந்தமாக ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இறுதிப் போரின்பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து, புணர்வாழ்வு எனும்பெயரில் கடுமையான உடல், உல சித்திரவதைகளுக்குப் பின்னர் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட பல போராளிகள் இன்னும் மன ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்பட்டே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இப்போராளிகளை மிரட்டி ஆக்கிரமிப்பு ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தினை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கொலைக்குழுக்களான கருணாவும் பிள்ளையானும் செய்துவருகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் எஜமானர்களால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரையில் ஒவ்வொரு துணைப்படை உறுப்பினரும் குறைந்தது இரு போராளிகளையாவது ஒரு மாதத்தில் ராணுவத்தில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும் என்றும் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே கருணாவும் பிள்ளையானும், திருமணம் முடித்த அல்லது தனியே இருக்கும் ஆண் மற்றும் பெண் போராளிகளைக் கட்டாயப்படுத்தி இணைத்துவருவதாகத் தெரியவருகிறது. இந்த பலவந்த ஆட்சேர்ப்புப் பற்றி மனிதவுரிமை அமைப்புக்களிடம் தெரிவித்தால் தாக்குதலுக்கு உள்ளகலாம் என்கிற அச்சத்தில் இப்போராளிகள் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ராணுவத்திடம் சரணடைந்து கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் நடைபிணங்களாக சமூகத்தில் உலவ விடப்பட்டிருக்கும் முன்னாள்ப் போராளிகளை ராணுவப் புலநாய்வுத்துறையும், துணைப்படைக் கொலைக் குழுக்களும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தனது வீட்டிற்கு வந்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் தனது வீட்டிற்கு வந்துபோகும் உறவினர்கள் பற்றிக் கடுமையாக விசாரணை செய்ததாக ஒரு பெண்போராளி கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னாள்ப் போராளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில நிவாரணங்களைக் கூட ராணுவப் புல்நாய்வுத்துறையினரும், துணைப்படைக் கொலைக் குழுவினரும் சந்தேகிப்பதாகவும், இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்கள் போராளிகளைச் சந்தித்த மறு நிமிடமே புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழுக்களும் போராளிகளை விசாரணைகளுக்கு இழுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தம்மிடம் காண்பித்து கையொப்பம் இடும்படி தம்மைச் சித்திரவதை செய்யும் ராணுவப் புலநாய்வுத்துறை, ஒவ்வொருமாதமும் தம்மால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகப் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து போராளிகளின் ஒப்புதல் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்வதாகவும், நிவாரணம் என்று இதுவரை அரசால் தமக்கு எதுவுமே வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.