Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"துரோகம்"
"துரோகம்" நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான். தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செய்யும் பொழுது, தற்செயலாக அவள் அங்கு ஒரு குளத்தில் தோழிகளுடன் குளித்துக்கொண்டு இருக்கும் பொழுது பார்க்க நேர்ந்ததாகவும், அவளின் அழகும் இளமையும், துடிப்பும் தன்னை கவர்ந்ததாகவும் , பிறகு மெல்ல மெல்ல அவளுடன் கதைத்து, அவளைப்பற்றி முழுதாக அறிந்து, அவள் சாதாரண படிப்பு என்றாலும், அவளின் குணம் பிடித்துக்கொண்டதாகவும், அவளையே தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் கூறினான். அதன் பின் ஒவ்வொரு முறையும் ஊர் போய் திரும்பி வந்தால் , அவளின் கதை தான்! இருவரும் ஒன்றாக படங்களும் எடுத்துள்ளனர், எனக்கும் ஒரு முறை, நான் அவனின் கிராமத்துக்கு சென்றபொழுது, அவளை அறிமுக படுத்தினான். உண்மையில் அவனின் தெரிவு நல்லதாகவே இருந்தது. மிகவும் பண்பாடாக என்னுடன் கதைத்தாள். என்னை அண்ணா என்று கூப்பிடுவாள். நானும் என் தங்கையாக மிக மரியாதையுடன் கதைப்பேன். "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே" அவளை என்னால் அன்று கவிதையில் சொல்லக்கூடியதாக இருந்தது. கிராமத்து மணம் வீசும், ஒரு சாதாரண பெண் அவள், என் நண்பனுடன் உயிருக்கு உயிராக அன்பாக நட்பாக பழகினாள். அவனும் அப்படித்தான் எனக்கு அன்று தெரிந்தது. பொதுவாக நகரத்திற்கு வரும் கிராமத்து பெண்களின் பேச்சு, நடை, உடை பாவனைகளை பார்க்கும் நகரத்து பெண்கள் அவர்களை ஏளனம் செய்வது நான் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் அந்த கிராமத்துக்கு போய் அவர்களின் வாழ்வை நேரடியாக பார்க்கவேண்டும். அப்ப தான் அவர்களின் கிராமத்து மணம் வீசும் உண்மையான அன்பும் பற்றும் கொண்ட அவர்களின் பண்பாட்டு வாழ்வை அறிவார்கள். இவளும் அப்படித்தான். இதழ்களில் வழிந்தோடும் கனி ரசமான இரத்தின புன்னகை - அதில் முத்துக் குளிக்க காத்திருக்கும் வரிசையான பற்கள், பின்னல் போடும் மயில் தோகை - அதில் இருந்து வெளி வரும் இயற்கை. மணம். பொய்கள் வசீகரம் இல்லா உண்மையான வார்த்தைகள்! . என்றாலும் விதி யாரைத்தான் விட்டது? நாட்டில் கலவரங்கள் , அரசியல் கொந்தளிப்புக்கள் தொடர்ந்து ஏற்பட, அவன் நாட்டை விட்டு திடீரென ஒருநாள் வெளிநாடு போய்விட்டான். தான் அங்கு முறையாக குடியேறியதும், அவளை கூப்பிடுவதாக என்னிடம் கூறினான். அவளும் தன்னிடம் அப்படி கூறியதாகவும் , அந்தநேரம் தன் பெற்றோரிடம் கதைப்பார் என்றும் கூறினாள். நானும் அதன் பின் திருமணம் செய்து, மனைவியுடன் வெளிநாடு போய்விட்டேன். நன்பனுடன், அல்லது அவனின் காதலியுடன், அதன் பின்பு எனக்கு தொடர்பு இருக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து, முகநூல் மூலம் என் நண்பன் மீண்டும் என்னுடன் இணைந்து கொண்டான். நானும் மிக மகிழ்ச்சியாக எங்கே என் தங்கச்சி [அவரின் காதலி] என்றேன். அதெல்லாம் முடிந்து விட்டது என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன் என்ன நடந்தது தங்கச்சிக்கு என்று ஆவலாக கேட்டேன். ஒரு பக்கம் அவளுக்கு ஏதாவது நடந்து விட்டதா என்ற கவலையும் ஏக்கமும் ஆனால் அவனோ, சிரித்தபடி, அதெல்லாம் அந்தநேரம். நான் வெளியே வந்ததும் மறந்துவிட்டேன். நான் இங்கேயே ஒருவளை காதலித்து மணந்து விட்டேன். அவளுக்கு தெரியுமா என்றேன் ?. இப்ப அவள் எப்படி என்றேன் ?? தான் அவளுக்கு சொல்லவில்லை என்றும், அது தேவையும் இல்லை என்றும் கூறி, எப்படி நீ என கதையை மாற்றினான். மனைவி படமும் காட்டினான். அவளை விட அழகு என்று சொல்ல முடியாது, ஆனால் வசதியான படித்த பெண்ணாக தெரிந்தது. என்றாலும், அண்ணா என்று அன்பாக, பண்பாக என்னுடன் கதைத்த அவளை பற்றி அறியவேண்டும் என்ற கவலை என்னில் இருந்தது. முகநூல், மற்றும் நண்பர்கள் மூலம் தேடி, ஒருவாறு அவளை கண்டு பிடித்தேன். அவள், அவன் வெளிநாடு சென்றபின், வருவான் வருவான் என்று காத்திருந்து, பின் வேறு ஒருவரை கல்யாணம் செய்ய மறுத்து, தனிக் கட்டையாக இன்னும் வாழ்வதாக அறிந்தேன்! அவன், தனது வசதிக்கு ஏற்ப, முன்னையதை தூக்கி எறிந்து விட்டு, புதியதை ஏற்று, வாழ பழகிவிட்டான். காலம், வசதிக்கு ஏற்ப தன்னை சரிப்படுத்தி விட்டான். அதை அவன் துரோகம் என்று கூட கருதவில்லை. அவன் சொன்ன காரணம். நாம் காதலித்தோம் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எல்லோரும் எதோ ஒரு நேரத்தில் காதல் கொள்ளுவது புதுமை இல்லை. நம்பிக்கை கொடுத்ததும் கூப்பிடுவேன் என்று சொன்னதும் உண்மைதான். இவை எல்லாம் அந்த நேர பேச்சுக்கள். அதை தூக்கி பிடித்துக்கொண்டு வாழ்வை வீணாக்க முடியாது. மகாவம்சத்தில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன், அங்கு அடைக்கலம் புகுந்து, யக்கினி குவேனியை திருமணம் செய்கிறான். என்றாலும் பிறகு அது தனக்கு பெருமை மற்றும் வசதி இல்லை என்று, அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கும் மக்களுக்கும் தான் திருமணம் செய்த குவேனிக்கும் துரோகம் செய்து, பாண்டிய மன்னனின் மகளை திருமணம் செய்து, இலங்கையின் துரோக வரலாற்றை ஆரம்பிக்கிறான் என்று கூறுகிறது. ஆகவே என் நண்பனின் கதை எனக்கு ஆச்சிரியம் தரவில்லை. ஆனால் அவள் மேல் பரிதாபம் இருந்தது. அவள் கிராமத்து நம்பிக்கைகள் கூடிய அப்பாவி பெண்! அவளுக்கு இதெல்லாம் புரியாது. காதல் செய்யும் பொழுதே, தன்னை இச்சையில் தொடும் பொழுதே, இவன் தான் என் புருஷன் என, தான் வணங்கும் காவல் தெய்வத்துக்கும் சொல்லிவிடுவாள். அவளுக்கு பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. காதல் வாழ்வை சூழலுக்கு ஏற்ப சரிப்படுத்தி நகரவும் தெரியாது ! பரிணாமம் என்பது புதுமை படைப்பதோ, புரட்சி செய்வதோ அல்ல. அது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம்கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வது போன்றது. அப்படித்தான் அவனும் இலங்கையில் இருந்த சூழலும் வெளிநாட்டு சூழலும் ஒன்றுக்கொன்று மாற அவனும் தன்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டானென்று சொல்வதா ? இல்லை இது துரோகம் தானா ?உங்களுக்கு எப்படியோ ?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு"
"கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு" "கிள்ளை மொழி பேசும் மரகதமே கிளியே எங்கள் குலக் கொடியே கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாட கிருத்திகை நன்னாளில் கண் உறங்காயோ?" "மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே மடியில் தவழ்ந்து தள்ளாடி சத்தமிட்டு மல்லிகை பந்தலில் ஓடி விளையாடி மகரிகை தொங்கும் மஞ்சத்தில் உறங்காயோ?" "சின்ன பூவே சிங்கார பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தைநிறுத்தி இமைகள் மூடாயோ ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?" "பச்சை இலுப்பை அளவாய் வெட்டி பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி படுக்க இதமாய் கம்பளி விரித்து பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?" "யாழ் எடுத்து ராவணன் இசைமீட்க யாவரும் ஒன்றுகூடி கானம் கேட்க யானை துதிக்கையால் ஏணை ஆட்ட யாழ் மொழியாளே கண் உறங்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [கிருத்திகை - கார்த்திகை, குதலை - மழலைச் சொல், சிஞ்சிதம் - அணிகலவொலி, தூளி - ஏணை, வடந்தை - வாடை]
-
'இன்றைய ஆசிரியர் நிலை'
'இன்றைய ஆசிரியர் நிலை' "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆசையற்று கவனமற்று ஆர்வம் அற்று ஆசிரியர் நிலை இன்று தட்டுத்டுமாறுது!" "பெற்றோர் இருவரும் வேலைக்கு போக பெரிதாக கவனம் இல்லாமல் போக பெருமையான மதிப்புகள் மாணவரிடம் குறைய பெரும்பழி சுமக்கிறான் இன்றைய ஆசான்!" "குருகுலதில் தொண்டுசெய்து பெற்ற கல்வி குடும்பத்தை விட்டுவிலகி கற்ற அறிவு குணம் பக்குவப்பட்டு அறிந்த அனுபவம் குன்றாய் அவனை உயர்த்திக் காட்டியது!" "காலம்மாற நாகரிகத்தின் கோலமும் மாற காத்திரமான அமைப்பாக பாடசாலை தோன்ற காலையில் மாணவர் வகுப்பில் ஒன்றியிருக்க காலட்சேபம் செய்கின்றனர் இன்றைய ஆசிரியர்!" "மரியாதை இல்லை இன்று கவனமுமில்லை மருந்துக்கு கூட இன்று ஒழுக்கமுமில்லை மல்லுக்கட்ட முடியாமல் ஆசிரியரும் ஒதுங்க மந்தமாய் போயிற்று இன்று கற்றல்நெறியும்!" "ஆசான் காட்டும் பாரபட்சமும் அவசரமும் ஆத்திரம் கொண்டு தண்டிப்பதும் திட்டுவதும் ஆழமறிந்து ஆளையறிந்து படிப்பிக்க தவறியதும் ஆசிரியர்நிலை இன்று தெய்வமற்று போயிற்று!" "சிலநேரம் மாணவனை கண்டித்தும் உணர்த்தியும் சிலநேரம் தோள் கொடுத்தும் தாங்கியும் சிலநேரம் வழிகாட்டியும் விளக்கம் கொடுத்தும் சிந்தித்து படிப்பிப்பதே இன்றைய அழகு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!"
"வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!" "நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென அறுபத்தி ஐந்து ஓய்வை சொல்லுது பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது தாண்டி எண்பது வரவோ ஞானம் பிறந்து சவக்குழி தேடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 04 ‘இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்? அல்லது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம்’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. உதாரணமாக பண்டைய கிரேக்க மருத்துவர்கள் [The early Greek physicians recommended treating diabetes with exercise, if possible, on horseback. They believed that this activity would reduce the need for excessive urination] அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். அதாவது வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வரும் என்பது அவர்களின் ஒரு ஊகமாக இருந்திருக்கலாம். ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ அங்கு மருத்துவமாக இருந்திருக்கிறது. அப்போலனைர் (Apollinaire Bouchardat / July 23, 1809 – April 7, 1886) எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவுக்கு வைத்தியம் செய்ய தொடங்கினார். [Bouchardat is often credited as the founder of diabetology, and was a major figure involving dietetic therapy for treatment of diabetes prior to the advent of insulin therapy] அவர் பட்டினி கிடப்பது. சிறுநீரில் குளுக்கோஸ் (சர்க்கரை) இருப்பதை குறிக்கும் கிளைகோசூரியாவை [glycosuria] குறைக்கலாம் என்றும். நீரிழிவுக்கு முக்கிய காரணம் கணையத்தில் [pancreas] அமைந்திருக்கிறது என்றும் கூறினார். அவர் தனது சிகிச்சையின் பொழுது உடற்பயிற்சி [exercise] முக்கியம் என்றும் தனது சிறுநீரை தானே அதில் உள்ள சர்க்கரையின் [glucose] அளவை பரிசோதிக்கும் முறையையும் உருவாக்கினார் [self-testing urine]. அது மட்டும் அல்ல குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை [a low-carbohydrate diet] தனது நோயாளிகளுக்கு உருவாக்கினார். 1916-ல் அமெரிக்க பாஸ்டன் [Boston] நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், [Elliott Proctor Joslin (June 6, 1869 – January 28, 1962) was the first doctor in the United States to specialize in diabetes] ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை [The Treatment of Diabetes Mellitus, the first textbook on diabetes in the English language] வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதனை சிரமப்படுத்திய நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’ ஆகும். இது நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல. ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே ஆகும். இன்று ' நீரிழிவு நோய் ' பலரை வருத்திக் கொண்டு வருகிறது. இலங்கை, இந்திய போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்பு வந்த இந்த 'பணக்கார நோய்' ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் வீட்டுக்கு ஒருவருக்கு இந்த நோய் தாக்கினாலும் தாக்கலாம். உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம் (அதிகமாய் மாவுச்சத்து உண்பது), அதிக மனக்கவலை, பதற்றம் [டென்ஷன்], உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவிதங்களில் இது மக்களை தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன் நோய், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை இழுத்தல் போன்ற கொடூரங்களும் ஏற்படலாம். 'இன்சுலின்' தூண்டினால் நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும் என்ற அற்புதமான அந்த மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடரிக் கிராண்ட் பாண்டிங் என்பவர் ஆவார். [Sir Frederick Grant Banting / November 14, 1891 - February 1941]. கணையத்திலிருந்து 'இன்சுலின்' சுரக்காததால் 'நீரிழிவு நோய்' வருகிறது. இன்சுலினை கொடுத்தால் கணையம் வேலை செய்து இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிகப்படும் சர்க்கரையை குறைக்கிறது என்பதே அவரின் கண்டுபிடிப்பாகும். இனி நாம் சித்த மருத்துவம் பக்கம் எம் பார்வையை திரும்புவோம். ஒரு பிரச்சனை அல்லது வருத்தம் ஒன்றுக்கு தீர்வு அல்லது மருந்து வேண்டுமாயின், அந்த பிரச்சனை அல்லது வருத்தத்திற்கான காரணம் புரியவேண்டும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானுறு 18 சுருக்கமாக “உண்டிமுதற்றே உணவின்பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன என் சொல்லாமல் சொல்கிறது! " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என திருக்குறள் தெளிவாக கூறுகிறது. அதாவது முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் என்கிறது. அதைத்தான் எம் பெரியோர் 'பசித்துப் புசி' என்பர். இந்த அடிப்படையை தான் பிரெஞ்சு மருத்துவர் அப்போலனைர் வைத்தியத்தில் நாம் காண்கிறோம். ஆமாம் 'நீரை உண், உணவைக் குடி' என்பர் எம் பெரியோரும்! மனிதனுக்கு நோய் வருவதற்கான பெரும்பான்மைக் காரணங்களாக உணவு, செயல்களில் ஏற்படும் மாறுபாடு அமைகின்றன. இவையன்றி திடீரனத் தோன்றும் கொள்ளை நோய்களும் மனிதனைப் பாதிக்கும். நோய் வருவதற்கான காரணங்கள் எவையாக இருந்தாலும் அந்த நோய்களை எதிர்த்துக் குணப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் வண்ணம் உடலைத் தயார் செய்வதுதான் பொதுவாக சித்த மருந்துகளின் தலையாய பணியாக இருக்கிறது. இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் நீரிழிவு நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் [Aids, cancer] போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே இந்த நோய் உள்ளது. பொதுவாக நீரிழிவு வியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக முதலாம் வகை என கூறப்படும் நீரிழிவு - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது என்றும் இரண்டாம் வகை என்பது - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை. உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது எனலாம். மற்றும் நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகலாம். இன்றைய நவீன காலத்தில், தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய, இலங்கை மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதை எனோ மறந்து விட்டார்கள்? அது மட்டும் அல்ல, இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். எனவே இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 05 தமிழ் மருத்துவத்தின் வரலாறு பொதுவாக இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை தொகுத்து, மருந்து, மருந்துக்கான மூலப் பொருட்கள், மருத்துவன், மருத்துவம், நோய் , நோயாளி, நோயில்லா நெறி, உணவே மருந்து, உணவு பொருள்கள், அறுசுவை, மருத்துவக் கோட்பாடு .... போன்ற பல தலைப்புகளில் இன்று ஆராயப் படுகிறது. ஒருவருக்கு நோய் தீரவேண்டுமாயின் அவரின் சித்தம் அல்லது மனம் இங்கு முக்கியமாகிறது. உதாரணமாக " நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே நீயாகிறாய்" என்பதை கவனிக்க! அதாவது உன்னை பலவீனன் அல்லது நோயாளி என்று நினைத்தால், நீ அப்படியே ஆகிவிடுவாய் என்கிறது. எனவே இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது. எது எவ்வாறாகினும் நாம் மனிதனின் உடற்கூறுகளை என்றும் மாற்ற முடியாது. ஆனால் நீரிழிவு நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது என இன்று எம் அனுபவம் எடுத்துரைக்கிறது. தேரையரின் மனதுக்கினிய சீடரான யூகிமுனி வைத்திய முறைகளை எளிமையாய் சொல்லக்கூடியவர். இவரின் வைத்திய காவியம் ஒன்று நீரிழிவு நோய்க்கு காரணம் கூறுகிறது. "கட்டளைமிகுந்திட்டாலுங் காலங்கள்தப்பினாலும் இட்டமாம் பாலும் நெய்யும் ரத்தமும்புளிப்பும் மிஞ்சில் வட்டமாம் முலையார் தங்கள் மயக்கத்தின் கலவியாலும் நெட்டிலைகோரை போலே நீரிழிவாகுந்தானே." [யூகிமுனி வைத்திய காவியம்] அதாவது ஓய்வு அற்ற, கூடிய வேலை [அதிக வேலை பழு, மன அழுத்தம்] , ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், கொழுப்பு கூடிய நெய், பால், மிருக இறைச்சி / கொழுப்பு போன்ற உணவு முறை. வட்ட வடிவான நகில்களை [முலைகளை] உடைய மகளிருடன் பாலியல் செயல்களில் அதிக ஈடுபாடு வைப்பது, நீண்டு (140 செ.மீ / 55 அங்குலம்) வளரக்கூடிய கோரை புல்லு [Nut grass] அல்லது தரமற்ற பொருட்கள் / உணவுகள் போல இது தானாக நீரிழிவு கோளாறுக்கு வழிவகுக்கிறது என்கிறது. கோரை புல் ஒரு களை (Weed) ஆகும். களை என்பது பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுப்பாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் என பொருள் படும். உடல் உறவு அல்லது பாலியல் நடவடிக்கை என்பது உண்மையில் மெதுவோட்டம் [நடையோட்டம்] அல்லது உயிர்வளிக்கோரும் பயிற்சி போன்ற ஒரு பயிற்சியே. எனவே இது இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கும் [Sex is an exercise, like jogging or aerobics, and it can bring on low blood sugar, says the American Diabetes Association (ADA)], எனவே கூடிய பாலியல் நடவடிக்கைகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தாது. இது ஒரு தவறான புரிந்துணர்வு என்று நம்புகிறேன். "பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் நீ வருவாயே" என்ற பாடல் ஞாபகம் வருகிறது. ஆமாம் அமெரிக்கா நீரிழிவு கூட்டமைப்பு சர்க்கரை குறைவதை தடுப்பதற்கு சற்று முன்போ அல்லது சற்று பின்போ உண்ண சொல்லுகிறது [To avoid low blood sugar, plan to eat food either immediately before or shortly after sex to cover the glucose you use.] அதனால் தான் 'பாலும் பழமும்' பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்? இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்ன என்று யூகிமுனி மேலும் இன்னும் ஒரு பாடலில் கூறுகிறார். "முகமுங்காந்துநெஞ்சலர்ந்து முறிந்தவுடலுநடுநடுங்கி நகமேலறிந்து நாவறண்டு நஞ்சுண்டவர்போல் மிகசோர்ந்து பகலுமிரவி முறங்கிஉடல் பரிந்தே தட்டி மெலிந்து உழன்று மிக வேதனை உண்டாகி வேண்டாதன்னம் வேண்டாதே". அதாவது, முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு, தாகம் கூடி நெஞ்செரிவு உண்டாகி, உடல் நடுநடுங்கி, நாவறண்டு, நஞ்சு உணடவர் போல் மிக சோர்ந்து, உடல் மெலிந்து, வேதனை உண்டாக்கும் என்கிறது. நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பாண், பாஸ்தா (Pasta), கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்து விட வேண்டும். மேலும் சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவை கட்டுப்பாடுடன் கொஞ்சமாக எடுக்கலாம். முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை. அதேநேரம் அதிக அளவில் உண்ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி [Ragi Barley] போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய் [Olive oil], பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (walnut / வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும். நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. சுருக்கமாக, “நீரிழிவு நோயாளிகள் அனைத்துச் சத்துகளும் நிறைந்த உணவு, அதற்கேற்ற உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோயின் தன்மையையும் வீரியத்தையும் கட்டாயம் குறைக்க முடியும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] தற்காலிகமாக முடிவுற்றது
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 02 தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு பெரிதாகப் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் சமஸ்கிருத மொழி பேசும், கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படும் சுசுருதர் (Sushruta), வரலாற்று சாட்சியங்கள் கூடிய, இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர் என அறியப்படுகிறது. இவர் நீரிழிவு (நீீர்+அழிவு) நோயைப் பற்றியும் அறிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே நீரிழிவு ஒன்றும் புதிததல்ல. நேற்றுப் பிறந்த நோயும் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளாகவே இது இருந்துதான் வந்து இருக்கிறது என்பது கிரேக்கத்திலும் இந்தியாவிலும் கிடைத்த வரலாற்று குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, எகிப்திலேயுள்ள பழைய சுவடுகளில் இந்நோயைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அச்சுவடியில் நீரிழிவு நோய் பற்றியும் அதற்கான மருந்துகளும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அந்த சுவடு ஒன்றில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தியர்கள் [ancient Egyptians] ஒரு நோயை பற்றி குறிப்பிடும் பொழுது அது அடிக்கடி அல்லது மேலதிகமாக சிறுநீர் கழித்தல், தாகம் [நீர்வேட்கை] மற்றும் எடை இழப்பு / உடல் இளைத்தல் [excessive urination, thirst, and weight loss] கொண்ட, ஈற்றில் கொல்லும் விநோதமான நோய் என பதியப் பட்டுள்ளது [உதாரணமாக, கி.மு. 1552-லேயே ஹெஸி-ரா [Hesy-Ra, an Egyptian physician] எனும் எகிப்திய மருத்துவர், நீரிழிவைப் பற்றிப் பேசியிருக்கிறார்]. எனவே இது அதிகமாக முதலாம் வகை நீரிழிவு [type 1 diabetes] ஆக இருக்கலாம் என நாம் இன்று ஊகிக்கலாம். இதற்கு முழு தானியங்களின் உணவு [diet of whole grains] நல்ல தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. இது இலங்கையில் சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய இந்தியாவில் கிடைத்த குறிப்புகளின் படி, ஒருவருக்கு நீரிழிவு இருக்கா இல்லையா என்பதை அறிய, ஒரு விசித்திரமான முறை ஒன்றை கையாண்டார்கள். சிறுநீர் கழித்த இடத்தில், சிறுநீரை ருசி பார்க்க எறும்பு மொய்த்தால், கட்டாயம் அந்த சிறுநீரில் இனிப்பு கலந்து இருக்கவேண்டும் என முடிவு எடுத்தனர். இந்த இனிப்பு அதிகமாக காணப்படும் நிலையை [high sugar levels] அவர்கள் மதுமேக [madhumeha / honey urine] அல்லது தேன் சிறுநீர் என அழைத்தனர். என்றாலும் கிரேக்கத்தில் கி.பி. 150 ஆண்டளவில், இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் [Hippocrates] என்பவரின் மாணவரான "அரிடாயஸ்” அல்லது அரேஷியஸ் [Aretaeus] என்பவரே இந்நோய்க்கு “டயாபடீஸ்” எனப்பெயரிட்டார். இவர் இதை ‘தசையும் ஊனும் சிறுநீர் வழிக் கரைந்து வெளியேறும் நோய்’ ["the melting down of flesh and limbs into urine."] என்று அன்று விளக்கமும் கொடுத்தார். பின்னாளில் அந்த அர்த்தத்தில்தான் Diabetes (Flowing through) என்ற பெயர் இந்த நோய்க்கு ஏற்பட்டது. என்றாலும் கிமு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அபோலோனிஸ் மெம்பிஸ் [Apollonius of Memphis] தான் முதன் முதலில் “டயாபடீஸ்” [diabetes] என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார் என அறியமுடிகிறது. எறும்பு மொய்க்கும் சிறுநீரை அடையாளமாக இந்த நோய்க்குக் கண்டறிந்த அந்தக் கால மருத்துவர்கள், நோயின் நிலைமையை அறிய சிறுநீரை சுவைத்துப் பார்த்துச் சொல்வதற் கென்றே, சிலரைப் பணியில் அமர்த்தி இருந்தனராம். அவர்களுக்கு நீர் சுவைப்பவர்கள் [‘வாட்டர் டேஸ்டர்ஸ்’ / "water tasters"] என்று பெயருண்டு. அதாவது சர்க்கரை நோயாளியின் சிறுநீரைக் கையால் தொட்டு, பிசுபிசுக்கிறதா எனப் பார்த்து, அப்புறம் நாவில் சுவைத்துப் பார்த்து, நோயைக் கணித்துச் அன்று சொல்லியிருக்கின்றனர். காலப்போக்கில், கிரேக்க மருத்துவர்கள் [Greek physicians] டயாபடீஸ் மெல்லிடஸ் [நீரிழிவு நோய்] மற்றும் டயாபடீஸ் இன்சிபிடஸ் [diabetes mellitus and diabetes insipidus] ஆகியவற்றின் வித்தியாசத்தை கண்டறிந்தனர். இங்கு மெல்லிடஸ் என்றால் மது (தேன்) என்று பெயர். இங்கு டயாபடீஸ் இன்சிபிடஸ் என்பது கூடுதல் சிறுநீர்க் கழிப்பு நோய் அல்லது வெல்லமில்லாத நீரிழிவு அல்லது நீர்நீரிழிவு; கழிநீரிழிவு என்று கூறலாம். டயாபடீஸ் இன்சிபிடஸ் நோய் வாசோபிரசின் அல்லது வாசோபிரெசின் என்ற ஒரு ஹார்மோன் குறைபாட்டால் வருகிறது. இதை பிட்யூட்டரி சுரப்பி சுரக்கிறது [Diabetes insipidus results from a problem with a hormone called vasopressin that the pituitary gland produces]. இந்த வாசோபிரெசின் (Vasopressin) இயக்குநீர், ஆண்டிடையூரிடிக் இயக்குநீர் என்றும் அழைக்கப்படுகிறது [also called antidiuretic hormone (ADH), arginine vasopressin (AVP) or argipressin]. இந்நோய் கண்டவர்கள், அதிக அளவில் சிறுநீர் வெளியேற்றுவார்கள் (பாலியூரியா / polyuria). இதனைத் தொடர்ந்து அதிக அளவில் தாகம் கொண்டு பெருமளவு தண்ணீர் அருந்துவார்கள் (பாலிடிப்ஸியா / polydipsia). இது நீரிழிவு நோயுடன் தொடர்பு இல்லாவிட்டாலும், நீரிழிவு நோயின் சில அறிகுறிகளை [signs and symptoms] அப்படியே கொண்டுள்ளன. கலென் (Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு என்பவர் ரோமன் குடியுரிமை கொண்ட ஒரு பண்டைய கிரேக்க மருத்துவர் ஆவார். இவரும் டயாபடீஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், தான் ஆக இரண்டு பேரையே அந்த நோயுடன் பார்த்ததாக ஆச்சிரியப் படுகிறார்! இவர் கி மு 129 இல் இருந்து கி மு 216 வரை வாழ்ந்தவராவார். இது எமக்கு எடுத்துக்காட்டுவது இந்த நோய் அந்த நாட்களில் ஒப்பீட்டளவில் அரிதானது என்பதே ஆகும். கி பி ஐந்தாம் நூற்றாண்டளவில், இந்திய மற்றும் சீனா மருத்துவர்கள் முதலாம் வகை நீரிழிவு (Diabetes mellitus type 1) மற்றும் இன்சுலின் சாராத நீரிழிவு (அல்லது) முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவுக்கு (Diabetes mellitus type 2) இடையில் உள்ள வேறுபாட்டை கண்டறிந்தார்கள். அது மட்டும் அல்ல, இரண்டாவது வகை நீரிழிவு பருமனான, பணக்கார மக்களிடம் பொதுவாக காணப்படுவதாகவும் [more common in heavy, wealthy people], இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சாதாரண மக்களை விட கூடுதலாக சாப்பிடுவதுடன் குறைந்த அளவு வேலை செய்வதுமே என்றும் பதிந்து உள்ளார்கள். இன்றும் உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்], உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாமை [obesity, diet, and a lack of exercise] ஒரு குறைபாடாகவே இரண்டாவது வகை நீரிழிவு நோய்க்கு கருதப் படுகிறது. இன்று உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவ்வித முயற்சிகளால் இரத்த குளுக்கோசு அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத பட்சத்தில் மெட்ஃபார்மின் [Metformin] , இன்சுலின் [Insulin] போன்ற மருந்துகள் தேவைப்படலாம். இங்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவே மெட்ஃபார்மின் மாத்திரை கொடுக்கப்படுகிறது. அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும். ஒரு நோயாளிக்கு, ஒருநாளைக்கு 250 மில்லிகிராம் முதல் 2 கிராம்வரை பரிந்துரைக்கப்படும். நோயாளியின் எடையை வைத்து மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். நோயாளி உடல் தாங்கிக்கொள்ளும் வகையில் மாத்திரையின் அளவை மருத்துவர்கள் பிரித்துக் கொடுப்பார்கள். இன்சுலின் என்பது ஒரு புரதமாகும். இதில் 51 அமினோ அமிலங்கள் உள்ளன. இரத்தத்தில் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்க இன்சுலின் உதவுகிறது. சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க இயலாமை தான். சர்க்கரை நோயின் பொதுவான ஒரு அறிகுறி என்னவென்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனான இன்சுலின் சரியான அளவு உடலில் சுரக்காதது தான். நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் ஆற்றலுக்கு சர்க்கரை தேவை. ஆனால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையால் உடலின் செல்களுக்கு தானாக செல்ல முடியாது. பொதுவாக நாம் உணவைச் சாப்பிட்ட பிறகு, நம் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். உடனே கணையத்தில் உள்ள செல்கள் (பீட்டா செல்கள்) இன்சுலினை உருவாக்கி சுரக்கும். இந்த இன்சுலின் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்ச சொல்லி செல்களுக்கு அறிவுறுத்தும். இப்படி தான் செல்கள் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டில் இருந்து சர்க்கரையை உறிஞ்சி ஆற்றலை பெறுகிறது. எனவே டயாபடீஸ் மேலும் ஒரு எல்லையை தாண்டும் பொழுது, இன்சுலினை நேரடியாக செலுத்தி வைத்தியம் செய்யலாம் என்பதை முதன் முதல் ஜனவரி 11,1922- இல் மனிதர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டு பிடித்த இன்சுலினை செலுத்தி மருத்துவம் செய்ய தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. [Insulin is a hormone created by your pancreas that controls the amount of glucose in your bloodstream at any given moment.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 03 இலங்கையில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. அதுமட்டும் அல்ல, இது ஒரு மாற்ற முடியாத நோயாகவே கருதும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நோயினால் ஏற்படும் வேதனைகளும் அல்லது துன்பங்களும் ஏராளம். யாழ்ப்பாணத்து மருத்துவ நூல்களான பரராசசேகரம் ஐந்தாம் பாகம், செகராசசேகர வைத்தியம், செகராசசேகர வைத்தியத் திறவுகோல், அமிர்த சாகர பதார்த்த சூடாமணி என்பனவற்றில் ஆவாரை சேர்ந்த மருந்துகளை நீரிழிவு நோயிற்கு பரிந்துரைக்கிறது. ஆவாரை [Senna auriculata] அல்லது ஆவிரை என்பது ஒரு சங்க கால மலராகும். "பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் .. " என குறுந்தொகை 173 ஆவாரை பற்றி பாடுகிறது. அதாவது 'பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருக்கமாகக் கட்டிய, பல நூல்களாலான மாலைகளை அணிந்த .. ' என்கிறது. மேலும் ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது ஒரு சித்த மருத்துவப் பழமொழியும் ஆகும். இவை ஆவாரையின் சிறப்பை சொல்லாமல் சொல்லுகிறது. இது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. மேலும் இன்சுலின் குறைபாட்டால் ஏற்படும் நீரிழிவு நோயில் இன்சுலினைக் கூட்டும் தன்மை ஆவாரை இலைக்கு இருப்பதாகவும் [insulinogenic : of, relating to, or stimulating the production of insulin] இன்சுலினைச் சுரக்கும் சதையில் உள்ள அழிந்த அந்த குறிப்பிட்ட உயிரணுவை அல்லது செல்லை [beta cells in the pancreas] புதுப்பிக்க வைக்கும் ஆற்றல் அல்லது தன்மை [regenerative action] ஆவரசம் பூவிற்கு இருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். முருகேச முதலியார் - குணபாடம் என்ற நூலில் அல்லது அகத்திய முனியின் பதார்த்த குண சிந்தாமணி என்கிற நூலில் ஆவரைப் பிசின் குணம் பற்றி கூறுகையில் "பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும் வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் – தருநீர்வை புனுமேணிக் கமலப் பொன்னே பீடகரெலாம் பேணு மேகாரிப்பி சின்" என்கிறது. அதாவது அழகு பொருந்திய கமலமின்ன னைய காரிகையே! ஆவரைச்செடியின் பிசினானது வெகு மூத்திரத்தையும் [அதி மூத்திரம் அல்லது நீரிழிவு அல்லது சிறுநீர்த் தொல்லை] பிரமேகரோகத்தையும் வாதகரிச்சுரத்தையும் போக்கும் என்கிறது. இங்கு மேககாரி என்பது ஆவாரையின் இன்னும் ஒரு பெயராகும். பரராஜசேகரம் என்பது யாழ்ப்பாண பரராசசேகரன் மன்னனால் 12 மருத்துவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட மருத்துவ நூலாகும். ஆனால் உண்மையில் பரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர் செகராசசேகரன் என்பதாகும். இவர்கள் 1246 முதல் 1615 வரை குலசேகரன் மன்னன் தொடக்கம் எதிர்மன்னசிங்கம் மன்னன் வரை பத்து மன்னர்கள் ஆவார்கள். எனவே எப் பரராசசேகரன் காலத்தில் என்பதை நிச்சயமாக கூற இன்றுவரை ஆதாரமெதுவுமில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே நாம் கருதலாம். இடையில் ஒரு தடவை சப்புமால் குமாரயா அல்லது செண்பகப் பெருமாள், "ஆறாம் புவனேகபாகு" என்ற பெயரில் கோட்டை அரசை ஆண்ட ஒருவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்கிறது வரலாறு. இந்நூல் பெரும்பான்மை விருத்தப்பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்றாலும் செய்யப்ட்டுள்ளது. என்றாலும் சில பகுதிகள் இன்றுவரை கிடைக்கவில்லை. என்றாலும் 8000 செய்யுள் கொண்ட ஒரு வைத்திய நூலாக இன்று ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. உண்மையில் அங்கு 12000 செய்யுள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தன்வந்திரி என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது எழுதப் பட்டது என்பதனை இதன் கடவுள் வணக்கச் செய்யுள் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது. "தரணியோர் மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப் பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப் பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்" என்ற செய்யுள் அதை உறுதிப் படுத்துகிறது. மேலும் இங்கு ஒரு செய்யுளில் தான் சலக்கழிச்சல் என நீரிழிவு நோயை கூறுகிறது. சித்த மருத்துவத்தில் [SIDDHA MEDICINE] இன்னும் ஒரு பாடலில் எருமை மோரும் சகலக்கழிச்சலுக்கு பரிந்துரைக்கிறது. “தாகம் கிரகணி சலக்கழிச்சல் காமாலை கம் குடையு மற்றுப்போ மோகமில்லா தேவாமிரதமு மாஞ்சீர் மானிடர் தமக்கு மோவா மருந்து எருமை மோர்.” அதாவது எருமை மோரை மருந்தாக உண்டால் - தாகம், கிராணி [கிராணி என்பது ஓயாத மலக்கழிச்சல் அல்லது ஒருவகைக் கழிச்சல்நோய் ], சகலக்கழிச்சல் [எல்லாவிதமான அல்லது சகல வயிற்றுப்போக்கு], காமாலை [Jaundice], வ்யிற்றுக்குடைச்சல் [Abdominal diarrhea] தீரும் என்கிறது. என்றாலும் இவை எல்லாம் ஆய்விற்குரிய விடயங்கள் ஆகும். எது என்னவென்றாலும் இந்நோய் பற்றி ஆங்கில வைத்தியம் ஒருவகையான அடிப்படைக் கருத்தினையும், எமது முன்னோர்களின் வைத்தியமான சித்தம் [சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள்], ஆயுள்வேதம் [Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்], யூனானி [கிரேக்க-அராபிய வைத்திய முறை] போன்ற வைத்திய முறைகள் வேறு ஒரு வகையான அடிப்படைக் கருத்தினையும், கொண்டுள்ளதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. உதாரணமாக, இந்நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அதனை அறவே இல்லாமல் செய்துவிட முடியாது. கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது அலபோதி வைத்தியம் [ஆங்கில வைத்தியம்]. ஆனால், சித்த ஆயுள் வேதமோ கவனமாக இருந்தால் அறவே இல்லாமல் செய்துவிடலாம் என்று கூறுகின்றது? மேலும் அறுசுவையுண்டியென்பது தற்செயலாக ஏற்பட்ட ஒன்றல்ல. இது திட்டமிடப்பட்ட ஒரு உணவு முறையே எனவும், ஒவ்வொரு சுவையும் எமது உடலிலேயுள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் தேவையான காரணியாகும் எனவும் இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் ஒரு மோட்டார் வண்டி (கார்) சரியாக இயங்குவதற்கு பெட்றோல், இன்ஜின் ஒயில், பிரேக் ஒயில், கியர் ஒயில் போன்ற பல ஒயில்கள் தேவைப்படுவது போல எமது உடலின் உறுப்புக்கள் சரியாக இயங்குவதற்கு அறுசுவைகளும் தேவைப்படுகின்றன எனவும், “கணயம் என்ற எமது உள்ளுறுப்பு” “இன்சுலின்” என்ற நீரினைச் சுரந்து எமது உணவினைச் சக்தியாக மாற்றமடையச் செய்ய உதவுகின்றது. இந்தக் கணையம் (Pancreas) இயங்க அறுசுவைகளுள் ஒன்றான கசப்புத் தேவை எனவும், இந்தக் கசப்பு பாகற்காய், திராய் [கசப்பான கீரை வகை] போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சித்த மருத்துவ குறிப்பு ஒன்று கூறுகிறது. 'கோபக்கார மாப்பிள்ளைக்கு பாகற்காய் பத்தியமாம்’ என்ற பழமொழியை கவனிக்க! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும்
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 01 “டயாபடீஸ்” என்பதற்கு தமிழில், சித்த மருத்துவத்தில், ஆயுர்வேதத்தில் பல பெயர்கள் காணப்படுகின்றன, தமிழில் இதை நீரிழிவு [நீீர்+அழிவு (diabetes)] என அழைத்தாலும் சித்த மருத்துவத்தில் சலக்கழிச்சல் [பரராஜசேகரத்திலும்] என்றும், ஆயுர்வேதத்தில் மதுமேகம் [வாதஜபிரமேகத்திலும்] என்றும் அழைக்கப் படுவதுடன், சித்த மருத்துவத்தின் ஆரம்பகாலத்திலேயே இதைப் பற்றி பாடல்களாக கூறப்பட்டுள்ளன. இந்த பாடல்களில் இது மேலும் மேகநீர், இனிப்பு நீர், நீரினைப் பெருக்கல் நோய்கள், சலரோகம், மிகுநீர், வெகுமூத்திரம், பிரமேகம், தித்திப்புநீர், நீர்ப்பாடு என கூறப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது. தேரையர் சித்தரின் ஒரு பாடலில் "நீரிழிவின் குணத்தை நீயறிய விரித்து சொல்வோம், நீரினை பெருக்கல் ஒன்று, நீரினை மறுக்கள் ஒன்று, நீரிழிவுடனே கொல்லும் நீர்ச் சொட்டு வினைகள் ஒன்று" என கூறி இருப்பதை கவனிக்க. உதாரணமாக, சித்த மருத்துவத்தில் நோயின் பத்து அவதிகளாக அல்லது வேதனைகளாக, மெலிய வைப்பதில் இருந்து முதுகில் ஏற்படும் ‘நச்சுப்பரு’ (carbuncle / கார்பங்கிள்) கட்டிகள்வரை அடையாளமும் காட்டியுள்ளனர். கடைசியாக குணப்படுத்தப்படாத மேகநோயின் முடிவில், மெல்ல உடலை இளைத்துக் கொல்லும் என்றும் அது கூறுகிறது. ஏன் இந்த நோய் வருகிறது என்பதற்கு பல பாடல்களை அங்கு காண முடிகிறது. உதாரணமாக, "கோதையர் கலவி போதை: கொழுத்த மீனிறைச்சி போதை, பாதுவாய் நெய்யும் பாலும் பரிவுடன் உண் பீராகில் ... " அதாவது, பெண்போகம், பெரிய மீன், இறைச்சி, மற்றும் நெய், பால் அதிகம் உண்ணுதல் போன்றவை எனக் காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது. "மாதர் மயக்க மிகுதியினான் மதியி லச்ச மிகுதலினால் போதை தருங்கள் ளருந்துதலாற் புலான் மீனிறைச்சி நெய்ப்பாலால் சீத வுணவாற் பதனழிந்த தீனை விரும்பித் தின்பதால் ... " என்று இன்னும் ஒரு பாடல் கலவி, பயம், கள் அருந்துதல், புலால், மீன், நெய். இறைச்சி, பால், சீத உணவு [எல்லா பொருட்களும் உஷ்ணம் (சூடு) அல்லது சீதம் (குளிர்ச்சி) என்ற இரண்டில் ஏதாவது ஒரு வீரியம் உடையதாக இருக்கும்], பதனழிந்த [அழுகிய] உணவு உண்ணல், உறக்கமின்மை, போகம் [புலன்களால் அடையும் இன்பம்: Enjoyment of eight kinds. See அஷ்டபோகம்], தேக வருத்தம், வெயிலில் மிகு நடை, போன்றவற்றால் மேகநோய் வருமென கூறுகிறது. "மேகமெனு நீரிழிவு வரும் விதத்தை விளம்புகிறேன் முன்செய்த கன்மந்தன்னாற் றாகமுடன் மதுரபதார்த்தங்கள் நன்றாய்த் தான் புசிக்கையாலு சித்தனத்தின் மங்கை போக மதிகையாலு முட்டணந்தான் போதமிஞ்சுகையினாலுந்தயிர் , மோர் , நெய் , பால் , வேகமாய்ப் புசிக்கையாலுங் கொழுத்திறைச்சி யென்று முண்கையாலுவர் நீருண்கையாலே" என்று இந்த பாடலும் நீரிழிவு உண்டாகும் காரணத்தை விளக்குகிறது. அதாவது, முன் செய்த கன்மம் அதாவது, முன்வினைப்பயன் இதனைப் பரம்பரையென்றும் நாம் கருதலாம், அதிக தாகத்துடன் இனிப்பான பானங்கள் அருந்துதல். இனிப்பான பதார்த்தங்கள் புசித்தல். போகம் மிதமிஞ்சுதல், தயிர், மோர், நெய், பால் என்பவற்றை வேகமாய்ப் புசித்தல். இறைச்சி உண்பதாலும், உவர்நீர் உண்ணல், வழுதிலங்காய் (கத்தரிக்காய் / 'அரிசி சமைச்சிருக்கு ஆட்டிறைச்சி ஆக்கிருக்கு வடிவாய்ப் பொரிச்சிருக்கு வழுதிலங்காய் சுண்டிருக்கு' - மட்டக்களப்பு நாட்டுப்பாடல்) அதிகமாய்ப் புசித்தல். காலந்தவறி உணவு உண்ணல். நடை அலைச்சல், போதைப் பொருள் உண்ணல், அதிகமாய்க் கண்விழித்தல், இருகையால் நீருண்ணல், அதிகமான சூடு உடலில் ஏற்பட்டாலும் நீரிழிவு வந்து தொல்லை தரும் என்கிறது. மேலே கூறிய சித்த மருத்துவ காரணங்கள் எல்லாம் சரியென இன்று நாம் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும், பல காரணங்கள் ஒத்துப்போகக் கூடியவையாகவும் இருக்கின்றன. உண்மையில் நீரிழிவு என்பது கணையம் (பாங்க் ரியாஸ் / Pancreas : சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ. மீ நீளம் உடைய ஓர் உறுப்பு ஆகும்) என்ற உறுப்பு அதன் சுரப்பு நீரான இன்சுலினைச் சுரக்காதலால், இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதால், அளவுக்கதிகமான குளுக்கோஸ் சிறுநீரில் கலந்து வெளியாகிறது. இதுவே “ டயாபடீஸ்” என்னும் நீரிழிவு நோயாகும் என இன்று கூறப்படுகிறது. இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்தால் உடலின் உள்ளுறுப் புக்களான இருதயம் இரத்தக்குழாய்கள், நரம்பு, சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும். கடைசியில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியது ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
"வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!" [நீரழிவு நோயும் நானும்] "நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென அறுபத்தி ஐந்து ஓய்வை சொல்லுது பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது தாண்டி எண்பது வரவோ ஞானம் பிறந்து சவக்குழி தேடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
ஒரு சித்தர் பாடல்
என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது சமய நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே! நீங்கள் எடுத்துக் காட்டியது போல, எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாக கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்தி ரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்று கிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்தி கத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் . எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது"
உங்கள் பேரனுக்கு வாழ்த்துவதுடன் உங்களுக்கும் நன்றி
-
"பாரிஸ் பையா பாரிஸ் பையா"
[01] பாரிஸ் சும் இத்தாலி பைசா கோபுரமும் பக்கத்துக்கு பக்கத்திலே இருக்குதா? கட்டாயம் பக்கத்தில் பக்கத்தில் இல்லை பாரிஷில் அந்த பையன் இருந்து இருந்தால், எவருமே 'பாரிஸ் பையா' என்று கூப்பிட மாட்டார்கள். அவன் வேறு ஒரு நாட்டுக்கு போகும் பொழுதுதான் அப்படி கூப்பிடுவார்கள். அது இயற்கை !. கொஞ்சம் சிந்தியுங்கள் !! அது தான் இங்கு நடந்தது. அவனின் திருமண விழா இத்தாலியில் !! பெண்ணின் பிறந்த பூமி இன்று அது !!! [02] Artificial intelligence கவிதையும் எழுதுமாமே உண்மையா ? உண்மை, ஆனால் தமிழில் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. நாளடைவில் வரலாம்? ஆனால் ஆங்கிலத்தில் ஓரளவு முழுமை பெறுகிறது. [03] இம்கூம் இதுவேறையா எனக்கு வந்த சந்தேகம் உண்மைதான் போல் உள்ளது நோ நெவெர்? அது என்ன சந்தேகம் ? வெட்கப்படாமல், ஒழிக்காமல் சொல்லுங்க?
-
"தமிழ் புத்தாண்டு"
"தமிழ் புத்தாண்டு" / பகுதி: 02 இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல், தொல்காப்பியம் ஆகும். இது கி.மு 300க்கும் முன்னால் எழுதப் பட்டிருக்கலாம் என கூறப் படுகிறது. அதில் திணைகளைப் பற்றி கூறப் பட்டுள்ளது. திணை என்பது ஒழுக்கம், வாழ்க்கை நெறி என்பதைக் குறிக்கும். ஒழுகுதல் என்பது நன்னெறிகளோடு வாழ்தல் - living in conformity with the laws and normal behaviour - ஆகும். இந்த திணைகள் - முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் - நிலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு எனினும், இது பொதுவாக மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன. அடுத்து ஒவ்வொரு திணைக்கும் உரிய பொழுதுகள் கூறப்படுகின்றன. பொழுது என்பது காலக் கணக்கு. இன்று ஓர் ஆண்டை நான்கு பருவங்களாகப் பகுக்கின்றனர். அவை, கோடை, இலையுதிர், குளிர், வசந்தம் - Summer, Autumn, Winter, Spring - என்ற நான்கு பருவங்கள் ஆகும். எனவே, ஒவ்வொரு பருவத்துக்கும் மூன்று மாத காலம் உண்டு. நம் முன்னோர்களும் ஓர் ஆண்டைக் கார்காலம், கூதிர்காலம், பனிக்காலம், வேனில்காலம் எனப் பகுத்தனர். ஆனால், தமிழகப் பகுதியில் கார்காலம் எனப்படும் மழைக்காலமும், கூதிர்காலம் எனப்படும் குளிர்காலமும் வெகுசில மாதங்களே நீடிக்க, பனிக்காலமும், வேனில் காலமும் நீண்ட காலம் தொடர்வதைக் கண்ட அவர்கள், பனிக் காலத்தை முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என இரண்டாகவும், வேனில்காலத்தை, இளவேனில் காலம், முதுவேனில் காலம் என இரண்டாகவும் பிரித்தனர். இந்த, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு காலங்களையும் பெரும் பொழுது எனக் கூறினர். இவை ஆறும், ஆவணி தொடங்கி, ஒவ்வொன்றும் முறையே இரண்டு மாதங்கள் கொண்டவை ஆகும். இனி தொல்காப்பியர் தொகுத்த திணை, பெரும் பொழுதை [காலத்தை] பார்ப்போம். "மாயோன் மேய காடு உறை உலகமும் சேயோன் மேய மை வரை உலகமும் வேந்தன் மேய தீம் புனல் உலகமும் வருணன் மேய பெரு மணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. காரும் மாலையும் முல்லை. குறிஞ்சி,கூதிர் யாமம் என்மனார் புலவர்." ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்! [இங்கு, என்மனார் புலவர் என மொழிப என ஆசிரியர் கூறியிருப்பதால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல - தமிழர் மரபு என்பது புரியும்.அதாவது, * முதல் திணை = முல்லை! * முதற் காலம் = மழைக் காலம்! எனினும் உறுதியாக, இது தான் புத்தாண்டுத் தொடக்கம் என நேரடியாக இங்கு கூறவில்லை? இது திணை வரிசை மட்டுமே! ஆனால் இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் என்கிறார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆவணி, புரட்டாசி பொதுவாக கார்காலம் என்பர். ஆகவே, நச்சினார்க்கினியரின் உரையின் படி, கார்காலம் அல்லது சிங்க ஓரை (ஆவணி) முதல் மாதம் என்றும், திங்களுக்கு உரிய கடக ஓரை (ஆடி) இறுதி என்று நாம் வெளிப்படையாக கருதலாம்? இங்கு தையும் இல்லை சித்திரையும் இல்லை என்பதை கவனிக்க. அதே போல, சோழப் பேரரசு காலத்தில், கி.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளில், உருவாக்கப் பட்ட, நிகண்டுகளிலும் [thesauruses], சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு போன்றவற்றில் ஆவணியே முதல் தமிழ் மாதமாக கூறுகிறது. உதாரணமாக, 'காரே , கூதிர், முன்பணி, பின்பணி, சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு இருமூன்று வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா இரண் டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே.' என்று திவாகர நிகண்டு பாடுகிறது. இப்பாடல் கார் முதலிய ஆறு பருவங்களையும் முதலில் குறிப்பிட்டு, பிறகு இப்பருவங்கட்கு உரியனவாக ஆவணி முதலாக இரண்டிரண்டு திங்கள்களாக எண்ணிச் சேர்த்துக் கொள்க என்று கூறுகிறது. திருஞானசம்மந்தரும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் இறந்த ஒரு பெண்ணை உயிர்பிக்க, தேவாரம் பாடும் பொழுது, முதல் பாட்டில், "ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.", நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் [ஆவணி / பூரட்டாதியில் நிகழ்வது] அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? என்று தொடங்கி, "ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்" [ஐப்பசி ஓணம்], "தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்." [கார்த்திகை விளக்கீடு], என பாடி, ..........., இறுதியாக "பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்." [பெருஞ்சாந்தி / நீர்முழுக்கு] என்று முடிக்கிறார். இங்கும் ஆவணியில் இருந்து ஒரு ஆண்டில் நடக்கும் திருவிழாக்களை வரிசைப் படி குறிப் பிடுகிறார். குறைந்தது 2300 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியத்திலும் இதையே நாம் கண்டோம். எனவே, இங்கே கார்ப்பருவமாகிய ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது என நாம் ஊகிக்கலாம்? பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே", முதன்மையாக / மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ? மேலும் எட்டுத் தொகை / பத்துப் பாட்டு போன்ற பல பாடல்களில் தை திங்களும் தை நீராடலும் கூறப் பட்டு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் தை தான் வருடத்தின் [ஆண்டின்] தொடக்கம் என நேரடியாக எங்கும் கூறவில்லை? எனினும் தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில் ..... மிகச் சிறப்பாக / மிக அதிகமாகப் பேசப்படும் /போற்றப்படும் மாதமாக = தை! அல்லது "தைஇத் திங்கள்" இருக்கிறது. “வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தைஊண் இருக்கையின்.........” , பனி பெய்து நனைந்த முதுகுடன் நோன்பு நோற்கும் பெண்கள் தைமாத விரத உணவை உண்ண இருந்தது போல் தோன்றியது என்கிறது நற்றிணை :22 “தைஇத் திங்கள் தண்கயம் படியும்பெருந்தோள் குறுமகள்“ , தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல என்கிறது நற்றிணை :80 “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்“ , தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய, குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ள தெளிந்த நீரைத் தந்தாலும் என்கிறது குறுந்தொகை :196 “தைஇத் திங்கள் தண்கயம் போல்கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்“, தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! ...... கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது ..... பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்! என்கிறது புறநானுறு :70 “நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்தைஇத் திங்கள் தண்கயம் போல“, உன் மனைவி உன்மேல் சொல்லில் அடங்காத கோபத்திலிருக்கிறாள். ஏனென்றால், தைமாத நோன்பிருக்கும் மணம் பொருந்திய மலர்களையும் கூந்தலையும் கொண்ட மகளீர் பலரும் ஒரே குளத்தி்ல் தோய்ந்து நீராடுவார்கள் அல்லவா? அப்படி உன்னுடைய மார்பு, பலபெண்கள் தோய்ந்து, துய்க்கும் கயமாக (குளமாக) இருக்கிறது என்பது உன் மனைவிக்குத் தெரிந்திருக்கிறது அல்லவா! என்கிறது ஐங்குறுநூறு :84 "வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையில் நீராடி தவம் தலைப் படுவையோ?”, நீ தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயனைப் பெறுவாயோ ? என்று கேட்கிறது கலித்தொகை :59:12-13 "பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?, விளையாட்டுத்தனமான நோன்பாகிய சடங்குகள் நீ கடை பிடித்ததாலும், பிறர் மனையின்கண்ணே நீ பாடியதாலும் பெற்ற பலன் உனக்கு பயன் தருவதொன்றோ? என்று கேட் கிறது கலித்தொகை : 59:16-17 ‘தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’, தவம் செய்பவர் போலக் காணப்பட்டதாலும், தாய்மார் அருகில் நின்றதாலும், வையையில் நிகழ்ந்த மகளிர் ஆட்டம் தைந்நீராடல் போல் காணப்பட்டது என்கிறது பரிபாடல் :11;91-92. அதே சங்கத் தமிழ் மரபில், பின்னால் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்! தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாதம்! நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில் "திண் நிலை மருப்பின் 'ஆடு தலை' ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து," [160 /161] என்ற இரு வரிகளை காண்கிறோம். இது, திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து திரிதலைச் செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு என்று பொருள் படும். [தலை = முதல்! (தலையாய = முதன்மையான)]. சூரியன் மேஷத்தில் புகுவது, சித்திரை மாதம் ஆகும். இங்கு, நக்கீரர் மேஷம் [ஆடு / Aries ] தான் முதல் என்று கூறுகிறார் .அதாவது ராசி மண்டலத்துக்கு முதல்! "வீங்கு செலல் மண்டிலத்து" என்கிறார். ஆனால் எங்கும் ஆண்டுக்கு முதல் என்று கூறவில்லை ? மேலும் மேஷம் புகுவதே, "ஆண்டின் தொடக்கம் " என்பதற்கு என்ன ஆதாரம்? சிலப்பதிகாரம், இந்திர விழா வைப் பற்றி கூறும் பொழுது, "நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, ‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என, சொல்கிறது. இது சித்திரை திங்களில், அதாவது இளவேனில் காலத்தில் [வசந்த காலத்தில்] நடந்தது என்கிறது. அவ்வளவுதான். அது காமவேள் விழா / காதல் விழா (Valentines Day) என்று தான் சொல்கிறது . ஆனால் அதைப் "புத்தாண்டு" அல்லது வருடத்தின் தொடக்கம் என்று சொல்லவில்லை? மேலும், அறுபது வருட சுற்றுகளின் பெயர்கள் சோழர் கல்வெட்டில் இருந்தாலும் ..... அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே ஆகும் ? எனவே, தமிழ்ப் புத்தாண்டு நாள் பண்டை இலக்கியங்களில் கிடையாது! அவை பிற் கால சேர்க்கையே. அதனால் தான் அவை பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படவில்லை போலும். எப்படி ஆயினும், பல வருடங்களாக வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மற்றும் பிற இடங்களிலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டு வாசலில் கோலம் போட்டு விருந்து படைத்து இந்த நாளை கொண்டாடுகிறார்கள். சூரியன் மேட வீட்டிற்கு [மேஷ ராசிக்கு / இளவேனில் கால தொடக்கத்தை] போவதை, இந்து மாதத்திற்குள் உள்வாங்கப்பட்ட தமிழர்கள் தமது புதுவருட ஆரம்பமாக கருதுகிறார்கள். இது தமிழ் மாதம் சித்திரை தொடக்கத்தில் நிகழ்கிறது. சாத்தனார் என்பவர் ஆக்கிய, கூத்துக் கலை பற்றிய இலக்கண நூலான, முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டை சேர்ந்த, கூத்த நூல், ஒவ் ஒரு மாதத்துடனும் தொடர்புடைய மேகங்களை விபரிக்கும் பொழுது, ஒரு வருடத்தில் உள்ள மாதங்களை, வரிசை முறை படி சித்திரை திங்கள் தொடக்கி பங்குனி திங்கள் முடியும் வரை கூறுகிறார். அவ்வளவு தான். எந்த இடத்திலும் இது ஆண்டின் தொடக்கம் என கூறவில்லை? கை விஷேடத்துடன், இலங்கை தமிழர்கள் தமது பாரம்பரிய புது வருடத்தை, சித்திரை ஒன்றில் கொண்டாடுகிறார்கள். "எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம் (கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வு ஏர் அல்லது கலப்பை (Plough) மூலம் நிலத்தைக் முதலாவதாக கிளறிப் புது பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக மற்றும் நிகழ்வாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட புண்ணிய காலத்தில் சகலரும் "மருத்து நீர்" தேய்த்து குளித்து புது வருடத்தை ஆரம்பிப் பார்கள். போர்த் தேங்காய் உடைத்தலும் மாட்டு வண்டி பந்தயமும் கொண்ட்டத்தை மெருகேற்றும். அது மட்டும் அல்ல குடும்ப வருகைகளும் நடை பெரும். என்றாலும் பழைய தமிழ் இலக்கியத்திலோ சரித்திரத்திலோ, சித்திரை மாதத்தில் தான் புது வருடம் பிறக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. சித்திரை உண்மையிலேயே வருடப் பிறப்பாக இருந்தால், ஏன் "சித்திரை பிறந்தால் வழி பிறக்கும்" என வழக்கில் இல்லாமல் இருக்கிறது? இது ஜோசிக்க வேண்டிய ஒன்று? பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப் படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும், ஆடி முதல் மார்கழி வரை தென்செலவு மாகும். அந்த வகையில், கதிரவன் வட செலவைத் [பயணம்] தையில் தான் தொடங்குகிறது. மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள். அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது. எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஆடியில் இருக்க வேண்டும், அல்லது தையில் புத்தாண்டு வர வேண்டும் அல்லவா? எப்படி ஆயினும், இன்று நாம் புது வருடத்தை கொண்டாடுவோம் . உங்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது
-
"தமிழ் புத்தாண்டு"
"தமிழ் புத்தாண்டு" / பகுதி: 01 "தமிழ் புத்தான்டு, சிக்கலாகி போனது ஜனவரியா? ஏப்ரலா? ஒரே முழக்கம் என்னைக் குழப்பி, தடுமாற்றிப் போனது வாழ்த்துச் சொல்ல, தடுத்துப் போனது!" "பட்டிமன்றம், விவாதம், பல கேள்விகள் தையா? சித்திரையா? ஒரே அலசல் சித்திரை ஒரு மத விழா?, தையோ ஒருங் கிணைக்கும் தமிழர் விழா!" "கொஞ்சம் மறந்து, இன்று கொண்டாடுவோம், பழையன கழியட்டும், புதியன மலரட்டும் இனிப்புடன் காக்கை கரைதலும் கேட்கட்டும் வசந்தம் வீசட்டும், புத்தாண்டு வாழ்த்துக்கள்!" தமிழ் புத்தாண்டு ஜனவரி [தை] 14 /15 /16 அல்லது ஏப்ரல் [சித்திரை] 14 /15 /16 என்பதில் ஒரு கருத்து மாறுபாடு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக நாம் தமிழ் மாதம் சித்திரை முதலாம் திகதி புத்தாண்டை கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாக இருந்துள்ளது. என்றாலும் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம்?. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். இந்தியாவில் / அதன் பின் தென்னாட்டில், ஆரியர்களின் ஊடுருவலால், தமிழரின் சைவ மதம் இந்து மதத்திற்குள் உள்வாங்கப் பட்டதால், இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப் பட்டது எனலாம். அதனால் தான் இன்னும் ஆண்டின் பெயர்கள் வட மொழி பெயர்களாகக் காணப் படுகின்றன. 60 ஆண்டுகள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனைகதை முன்வைக்கப் படுகிறது. இதன் விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். சென்னையில் வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக்களஞ்சிய நூலை 1910-ல் வெளியிட்டார். அவரது மகன் 1934-ல் இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது இந்தக் கதை அங்கு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எனினும், இந்த ஆரியக் கதையை தவிர்த்து, இந்த 60 ஆண்டுகள் நாட்காட்டி [காலண்டர்] முறையை ஆய்வு செய்யும் பொழுது, இது காலத்தைப் பற்றிய மனித அறிவின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டமே என நாம் கருதலாம். இன்றைய இராக் [Iraq] எனப்படுகிற நாட்டின் தென் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் [திராவிடர்களின்] மூதாதையர் என கருதப்படும் சுமேரிய மக்களும் 60 வருடங்கள் கொண்ட ஒரு முறையை பயன்படுத்தி யுள்ளனர். அதே போல, இன்றைய மத்திய அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ, கவுதமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில், கி.மு., 2500 முதல் கி.பி., 950 வரை வாழ்ந்த, மாயன் நாகரிக மக்களும் 60 ஆண்டுகள் சுழற்சி முறையைப் பயன்படுத்தி யுள்ளனர் எனவும் தகவல்கள் உள்ளன. அது மட்டும் அல்ல, இந்த மாயன்களால், 'குக்கிள்கான்'[குகுல்கன் அல்லது குவெட்சால்கோட்டில் / Kukulcan or Quetzalcoatl / Maya snake deity, பாம்புக் கடவுள், the Mayan’s supreme god] என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் சிசேன் இட்ஷா பிரமிட் [சிசென் இட்ஸா / Chichen Itza pyramid] கட்டப்பட்டது. உண்மையில் இந்தக் குக்கிள்கான் / குகுல்கன் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்று கருதப்படுகிறது. இந்தக் குக்கிள்கான் / குகுல்கன் தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வெளிரிய மங்கலான தோற்றமும் தாடியும் கொண்ட இந்த குகுல்கன் அல்லது குவெட்சால்கோட்டில் அல்லது எவராயினும், இவர் ஒருவர் அல்ல, அதிகமாக பல நபர்களை கொண்ட ஒரே இனத்தை சேர்ந்த ஒரு கூட்டம் என கருதப் படுகிறது. பண்டைய மாயன் மக்களின் சிலம் பலம் (Chilam Balam / அவர்கள் மொழியில் சிறுத்தையை "பலம்" என்றும், சிலம் என்பதை பூசாரி என்றும் சொல்வார்கள்.) என அழைக்கப் படும் மத புத்தகம், மெக்ஸிகோ நாட்டின் உள்ள யுகடான் [Yucatan] பகுதியினை வாழிடமாக கொண்ட முதல் மக்கள், நாக மக்களென்றும் [நாகர் / People of the serpent] அவர்கள் கிழக்கில் இருந்து படகில் அங்கு தமது தலைவர் இட்ஸாமானவுடன் [Itzamana] வந்தவர்கள் என்கிறது. அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்தால், அந்த கால பகுதியில், இரண்டே இரண்டு விடைகள் தான் உண்டு. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை ஆகும். என்றாலும் பத்து வருடம் அங்கு தங்கி இருந்து ஆட்சி செய்த பின், அவர்கள் வந்த வாறே, அவர்கள் சூரியன் உதிக்கும் திசை நோக்கி மறந்து போனார்கள் என்கிறது. சீனாவிலும் இந்த 60 வருட சுழற்சி முறை இன்னமும் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. எது எப்படி ஆயினும், 1921 ஆண்டிலும் அதன் பின்பும் தமிழ் அறிஞர்களால் தை பொங்கலே தமிழர் புத்தாண்டு என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள் பலர் 1921 இல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒருங்கே கூடி ..... . தமிழ் ஆண்டு பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்! மறை மலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர் ஒன்று கூடி இந்த ஆய்வு நடைப் பெற்றது.! ஆனால், அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? என்பது இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை! இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அதில் சொல்லியிருப்பது : * இப்போது சொல்லப்படும் பிரபவ - விபவ என்னும் அறுபதாண்டுகள், தமிழ் அல்ல! * திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே தமிழ் ஆண்டு என இனிக் கொள்ள வேண்டும்! * திருவள்ளுவர் காலம் கி.மு. 31= எனவே ஆங்கில ஆண்டுடன் 31- ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு! எனினும் திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் கூறுகிறார். திருக் குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயம் நாம் உணரலாம். ஆகவே சரியாக திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக் கடினமானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இன்னும் இருக்கிறது? மீண்டும் சில ஆண்டுகள் கழித்து, திருச்சி அகிலத் தமிழர் மாநாடு என்ற பெயரில் பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் ஒரு மாநாடு நடை பெற்றது. இதில் கா.சுப்ரமணியனார், மதுரைத் தமிழவேள், பி.டி. இராசன், தெ.பா. மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப.சாமி, திரு வி.க. மறைமலை அடிகள, தந்தை ஈ.வெ.ரா.பெரியார், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏப்ரல் 14 ஐ, பொதுவாக இந்து புத்தாண்டு [Hindu New year] என்றே கூறுகிறார்கள். இலங்கை நாட்காட்டியில் இந்து, சிங்கள புது வருடம் என குறிக்கப்பட்டு இருப்பதையும் கவனிக்க. அது மட்டும் அல்ல, இது, இந்து , புத்த புது வருடம் என குறிக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இது ஏன் என்றால் வேறு நாடுகளில் உள்ள மற்ற பவுத்தர்கள் தங்களுக்கு என வேறு புது வருட திகதிகள் வைத்திருப்பதால் ஆகும். இந்துக்களால் நம்பப்படும் புராணத்தை இனி இங்கு சற்று விரிவாக ஞாபகப்படுத்துவது நல்லது என நம்புகிறேன். ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை நோக்கி, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "என்னுடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால் , நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து வாழ விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் வாழ்ந்து, அறுபது மகன்களைப் பெற்றார். பிராமண, ஆரிய சமூகம் எவ்வளவு தூரம் ஆணை மையமாக கொண்ட , தந்தை வழிச் சமூகம் என்பதை இது தெட்டத் தெளிவாக காட்டுகிறது. இந்த அறுபது பிள்ளைகளிலும் ஒரு மகள் - பெண்-கூட கிடையாது?. தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன ….. இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை … .. உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போன தெல்லாம் காலப் போக்கில் ஏற்பட்ட பரிணாமம். இந்த நாரதர் பெற்ற அறுபது மகன்களும், 'பிரபவ' [Prabhava] தொடங்கி 'அட்சய' [Akshaya] வரை பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. இந்த கதை உண்மையோ பொய்யோ என்பதை விட , இப்படியான அருவருக்க தக்க வரலாற்றின் அடிப்படையில் புத்தாண்டை நிர்ணயிப்பது, அறிவியல், பொது விவேகம் இவைகளுக்கு ஏற்புடையவை அல்ல. அது மட்டும் அல்ல இந்த 60 பெயர்களும் தமிழ் பெயர் அல்ல. அப்படியாயின் இது எவ்வாறு தமிழ் புது வருடமாக இருக்கக்கூடும் ? "இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "அட்சய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் வட இந்தியா மன்னன் சாலி வாகனன் என்பவனால் [கி.பி 78 இல்] ஏற்பட்டவை என்பது இன்னும் ஒரு கருத்து. இந்த 60 ஆண்டுகளும் சுற்று ஆண்டுகள். தொடர் ஆண்டுகள் அல்ல. அதாவது 61 ஆவது ஆண்டில் மீண்டும் 1 ஆவது ஆண்டு வந்துவிடும். எனவே எத்தனை யாவது ஆண்டு என்று கணக்கிட முடியாது. உதாரணமாக அட்சய ஆண்டில் பிறந்தவர் இவர் என்று கூறினால், அது எந்த அட்சய ஆண்டு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அட்சய ஆண்டு வந்து விடுகிற தல்லவா? எனவே அவரது வயதைக் கணக்கிட முடியாது. இதனால் சரித்திர முக்கிய நிகழ்வுகளை சரியாக பதிய இயலாமல் போகிறது. மேலும் ஆலயத்தில் இன்னும் புரோகிதர்கள் புரியாத மந்திரங்களை தமிழ் பக்தர்களுக்கு ஓதுவது போல, இந்த பெயர்களும் பிரபவ, விபவ, சுக்ல, பிரமோ தூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசு வாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய .... என போகிறது? அது மட்டும் அல்ல, இந்த ஆண்டுகளின் பெயர்களும் பெருமை படக் கூடியதாகவும் இல்லை. உதாரணமாக, மூன்றாவது ஆண்டின் பெயரான "சுக்கில" ஆண் விந்தைக் குறிக்கிறது, இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி", எதிரி என்பதாகும், முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி". அழகற்றவன் என்பதாகும், முப்பத் தெட்டாவது ஆண்டு "குரோதி", பழிவாங்குபவன் என்பதாகும், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி" கெட்டபுத்தி என்பதாகும். உதாரணமாக, ஆண்டுகள் என்பது வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை மேலும் குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். இனி பிந்திய சங்க காலத்தில் தொடங்கிய தமிழ் மாதம் தை ஒன்றின் கொண்டாட்டம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். சங்க இலக்கிய படைப்பான பரிபாடலின் படி, திருவாதிரை நோன்பு (விரதம்) கொண்டாட்டத்துடன் இந்த நாள் தொடர்புபடுகிறது. மார்கழி மாதம் முழுவதும் கடவுளை வழி பட்டு, நோன்பு விரதம் இருந்த கன்னிப் பெண்கள், இறுதி நாளான தை ஒன்றில், தை நீராடளுடன் முடிக்கிறார்கள். கலித்தொகை பாடலின் படி, மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருப்பது தங்களால் விரும்பத்தக்க சிறந்த தலைவனைப் பெற்று, அவருடன் தங்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்ற ஒரு நம்பிக்கையே என்கிறது. அத்துடன் சூரியனை ஒரு தெய்வமாகவும் இது சொல்லுகிறது. ராஜராஜ சோழன் காலத்தில் தான் பொங்கல் பண்டிகை "புதியீடு" என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். இதை 'புதியீடு விழா' என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. மார்கழி மாத நோன்பு விரதமும் தை முதல் நீராடலும் இன்றும் கொண்டாடப் படுகிறது. இந்த உலகியல் சார்ந்த சடங்குமுறையே, 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் திருப்பாவை - திருவெம்பாவை பாட தூண்டியது. சங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது. ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது. திருவெம்பாவை - திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது. திருப்பாவையில், ''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் '' பாவை நோன்பை கடைப்பிடிப்பதற்காக அதிகாலையில் துயில் கலைந்து எழுந்த ஆண்டாள், தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு நீராடச் செல்வதற்க்காக, அவர்களைப் பார்த்து, "அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்பு கின்றவர்கள், என்னுடன் வாருங்கள், நாம் ஒன்றாக போகலாம் என்கிறாள். திருவெம்பாவையில், '' போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய் '' இறைவன் திருவடிகளே எம்மை ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய் என மாணிக்கவாசக சுவாமிகள் அறை கூவல் விடுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்
-
'என் தங்கை'
'என் தங்கை' நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " [அகநானூறு 12] எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இளைய மகளே!, நின் சிறிய அடி சிவப்புற என் செயச் செல்கின்றாய் என்று கூறும் - இப்படித்தான் சங்க காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது. ஆனால் இப்ப வீட்டில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்து விட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. அப்படித்தான் என் பெற்றோர்களும் இருந்தார்கள். மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர் புலம்புவதை காணக் கூடியதாக உள்ளது. அது என் பெற்றோருக்கும் பொருந்தும். கர்ப்பம் தரித்து 12 கிழமைக்கு பின் , கர்ப்பத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்று இன்றைய நவீன பரிசோதனை மூலம் அறியலாம். எனவே என் அம்மா அந்த பரிசோதனைக்காக அப்பாவுடன் வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியரின் அறைக்கு சென்றார். என்னை அங்கு உள்ளுக்குள் போக விடவில்லை. நான் வெளியே அம்மம்மாவுடன் வாங்கில் அமர்ந்து இருந்தேன். கொஞ்ச நேரத்தின் பின் செவிலியர் ஒருவர் என் கையை பிடித்து, அம்மம்மாவுடன் அம்மா இருந்த அறைக்குள் கூட்டி சென்றனர். 'வாழ்த்துக்கள்! இப்ப நீங்கள் இருவரும் ஒரு அழகான பெண் பிள்ளையின் பெற்றோர்கள்' என வாழ்த்துவது என் காதில் கேட்டது. என்னை கண்ட அந்த வைத்தியர், உனக்கு ஒரு தங்க தங்கச்சி வரப்போகிறார் என மகிழ்வாக கூறினார். நானும் உண்மையில் மகிழ்ச்சியாக சிரித்தேன். அப்பொழுது தான் என் பெற்றோரை பார்த்தேன். அவர்கள் இருவரின் முகத்திலும் எந்த மகிழ்வையும் சிரிப்பையும் காண முடியவில்லை. தமிழர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள். இதனால் தான் இன்னும் கிராமிய / நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள் என்கிறது வரலாறு. உலகளவில், எல்லா சமுதாயத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு ஓரளவு முன்னுரிமை காணப்படுகிறது, என்றாலும் கிழக்கு மற்றும் தெற்காசியாவில் இந்த முன்னுரிமை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற பகுதிகளில் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு முதலில் இருந்தே பெண் சிசுக்கொலை நடைபெற்று வருவதாக புள்ளி விபரங்கள் காட்டுகிறது. மேலும் இதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், முக்கிய காரணம், பெண்பிள்ளைக்கு சீதனம் கொடுப்பது என வாதிடப்படுகிறது. இதற்கு முதல் காரணம் குடும்ப பெயரை காவிக்கொண்டு முன் செல்பவர்கள் ஆணாக இருப்பதும் ஒரு காரணம். அதே போல திருமண சந்தையில் இன்னும் ஆணுக்கு கூடிய வாய்ப்பு இருப்பதும் மற்றும் ஆண்கள் பொதுவாக எல்லா விதமான வேலைகளுக்கும் வேலை நேரங்களுக்கும் இலகுவாக சரி செய்யக்கூடியதாக இருப்பதும், ஆகவே வருமானத்தை பொறுத்த வரையில் முன்னணியில் இன்னும் இருப்பதும் மற்றும் ஒரு காரணமாகும். இன்னும் ஒரு காரணத்தையும் சொல்லியே ஆக வேண்டும், அதாவது ஆண் ஒரு வீட்டிற்கு காவலாக இன்னும் கருதப் படுவதுடன், எங்கும் எந்த நேரமும் போய்வரக்கூடியதாக இருப்பதும் ஆணின் முன்னுரிமையை அதிகரிக்கிறது எனலாம். பெண்ணில்லாமல் ஒரு சமுதாயம் வளரவும் பெருகவும் முடியாது. இன்பம் ஆணும் பெண்ணும் கூட்டிலேயே பொதுவாக உள்ளது. ஏன் என் அம்மா கூட ஒரு பெண் தானே? ஆனால் எனக்கு அந்த வயதில் இவைகளை பற்றி ஒன்றும் தெரியாது. எனக்கு தம்பியை விட என் அம்மா போல், என் அம்மம்மா போல் ஒரு தங்கை வேண்டும் என்ற எண்ணமே ஓங்கி இருந்தது. வைத்தியர் கொடுத்த ஊடு கதிர்களால் [ஸ்கேன்] எடுக்கப் பட்ட புகைப்படத்தை பார்த்து கற்பனையில் மூழ்கிவிட்டேன். என்றாலும் ஏன் என் பெற்றோர்கள் கவலையாக இருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எதோ வேண்டா வெறுப்பாக கதைப்பது மட்டும் எனக்கு புரிந்தது. அன்று இரவு முழுவதும் என் தங்கையின் ஞாபகமே , மனதில் பல பல கற்பனைகள், பெயர் கூட தெரிவு செய்து விட்டேன். எப்படி அழகாக இருப்பாள் என்று வேறு கற்பனை. எப்படி இருவரும் விளையாடுவது, அம்மாவுக்கு செல்லக் குழப்படி செய்வது இப்படி நீண்டு கொண்டே போனது. என் தங்கை என்ற எண்ணம் சுற்றி சுற்றி என்னை வந்து கொண்டே இருந்தது. என்றாலும் அம்மா, அப்பாவின் முகத்தில் உள்ள மாற்றம் புரியவே இல்லை. அன்று இரவு என் அம்மாவும் அப்பாவும் கதைப்பது, நான் தங்கையை பற்றிய கற்பனையில் முழித்து இருந்ததால், தற்செயலாக கேட்கக் கூடியதாக இருந்தது. நான் அதிர்ந்தே விட்டேன். அவர்கள் இருவருக்கும் என் சின்ன தங்கை வேண்டாம் என்பது தெரிய வந்தது. என் கண்களில் இருந்து ஒரே கண்ணீர். நான் என் தங்கையின் படத்தை தடவி தடவி கொஞ்சிய படி அயர்ந்து தூங்கி விட்டேன். விடிய நேரத்துடன் எழும்பினேன். அம்மம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். அம்மா அப்பா வெளியே போய்விட்டார்கள் , கொஞ்ச நேரத்தால் வருவார்கள் என்று மட்டும் சொன்னார். ஏன் அம்மாவும் அப்பாவும் என் தங்கையை விரும்பவில்லை, அவர் என்ன தவறு செய்தார்? இன்னும் என் மனதை துளைத்துக்கொண்டே இருந்தது. அம்மா அன்று மாலை வீடு திரும்பும் பொழுது அவரின் முகத்திலும் வயிற்றிலும் மாற்றம் இருந்தது. அவர் முன்பு போல கலகலப்பாக இருந்தார். வந்ததும் வராததுமாக என்னை கட்டி பிடித்து கொஞ்சினார். எனக்கு உண்மையில் அருவருப்பாக இருந்தது. எனக்கு என் தங்கையின் முத்தமே வேண்டும். ஒ .. என்று சத்தம் போட்டு அழ தொடங்கிவிட்டேன். அம்மா அப்பா இருவரும் என்னை கொஞ்சி கொண்டு, அவருக்கு வருத்தம் வந்துவிட்டது. அதுதான் எம்மைவிட்டு பிரிந்துவிட்டார், உனக்கு அடுத்த ஆண்டு தம்பி பாப்பா வாங்கி வருவோம் என்றனர். நான் சத்தம் போட்டு எனக்கு தங்கை வேண்டும். இந்த என் தங்கைதான் வேண்டும் என்று அவர்களை உதறி தள்ளிவிட்டு ஒரு ஓரமாக வெறுத்து பார்த்துக்கொண்டு நின்றேன்! அவர்கள் மாறவே இல்லை, எரிச்சலாக எனக்கு வந்தது. அம்மம்மா அது எல்லாம் கொஞ்ச நாளைக்கு , பிறகு மறந்திடுவான், நீங்க போய் உங்க வேலையை பாருங்க என்று கூறி . என்னை தூக்கி சென்றார் நான் இப்ப திருமணம் செய்துவிட்டேன் . என் ஒரே ஆசை . இந்த உலகத்தை எட்டி பார்க்காமல் சாக்கடிக்கப் பட்ட என் தங்கை என் மகளாக பிறக்கவேண்டும். என் பெற்றோர்கள் இவள் என் பேத்தி என்று தலையில் வைத்து கூத்தாட வேண்டும்! கட்டாயம் நடக்கும். உங்கள் எல்லோருக்கும் இனிப்பு பண்டங்கள் அவள் கையால் தருவேன் !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தனிமை"
"தனிமை" தனிமை என்பது எதோ தனிய காலம் கழிப்பது அல்ல, சிலவேளை எம்மை சுற்றி பலர் இருப்பார்கள், என்றாலும் சில காரணங்கள் எம்மை அவர்களில் இருந்து மனதளவில் தனிமை படுத்துவதும் உண்டு. வெளியில் பேசி கதைத்தாலும் உள்ளுக்குள் தனிமை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். அதற்கு புறம்பானவர்கள் உன்னை முழுதாக சூழ்ந்து இருக்கும் பொழுது நீ தனிமையாகி விடுவாய்!. அப்படித்தான் என் பாடசாலை வாழ்வும் அமைந்தது. நான் யாழ் மத்திய கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, அதற்கு முன்னால் அமைந்து இருந்த யாழ் நூலகத்திற்கு போவது வழமை. இது தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அன்று திகழ்ந்தது. இது 1981 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி, 97,000 அரிய நூல்களுடன் அரச காடையர்களால் எரிக்கப்பட்டு, யாழ் இளைஞர்களைப் படிப்பில் இருந்து தனிமை படுத்த எடுத்த கொடூரமான நிகழ்வு இன்றும் என் மனதில் உண்டு. அங்கு பல நூல்களை வாசிக்க தொடங்க, சமயம், சம்பந்தமாக பல கேள்விகள் என் மனதில் எழ தொடங்கின. இதுவரையும் கேள்வி கேட்க்காமல் நம்பி இருந்த பல விடயங்கள், கேள்விகளாக என் மனதை துளைத்தன. அதனால் என்னிலும் சில மாற்றம் ஏற்படுவது என்னால் உணர முடிந்தது. அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு இன்னும் ஆலயத்துக்கும் சமய பிரசங்கங்களுக்கு போனாலும், எனக்கு அங்கு முழுதாக ஈடுபடமுடியாமல் இருந்தது. என்னை சுற்றி அம்மா, அப்பா இப்படி பல கூட்டங்கள். இருந்தாலும், அவர்களின் சமய சம்பந்தமான கதைகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணங்கள் அறிய அறிய, அவை என்னை அந்த கூடத்தில் இருந்து தனிமை படுத்த தொடங்கின. நான் என் ஆதங்கத்தை கேள்விகளாக கேட்க்கத் தொடங்க, இவன் உருப்படமாட்டான் என்று அதற்கு பதில் சொல்லாமல், விலத்தி போக தொடங்கினார்கள். இது மேலும் மேலும் தனிமையை கூட்டிகொண்டே போனது. உதாரணமாக, கல்லூரிக்கும் முதல் முதல் போகும் ஒருவன், அவனை சுற்றி பலர் இருந்தாலும், அவன் தொடக்கத்தில் ஒரு தனிமை அவனை வாட்டிக்கொண்டு இருக்கும். அப்படித்தான் எனக்கும் இருந்தது. தனிமை ஒரு வெறியாக, மேலும் மேலும் என் பாட்டில் நூலகம் போய் ஆய்வுகள் செய்ய தொடங்கினேன். இப்ப நானே என்னை தனிமையாக்க தொடங்கிவிட்டேன். நான் அறிந்தவற்றை உதாரணங்களுடனும் காரணங்களுடனும் வாதாடவும் தொடங்கினேன். இது பலரை எண்ணில் இருந்து தூர தூர விலக தூண்டியது. அப்பொழுது தான் எனக்கு புரிந்தது எவ்வளவுக்கு நிறைய விடயங்களை காரணம் அறியாமலே, பகுத்தறியாமலே, நம்பிக்கைகளை வளர்த்துள்ளார் என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், எமக்கு பௌதிகவியலில் கிரகங்கள் எப்படி உண்டாகின்றன என படிப்பித்த ஆசிரியை, கிரகணத்தின் போது இராகு கேது என அழைக்கப்படும் கற்பனை கிரகங்களை சுற்றி வந்து வழிபடுவது தான்!. இது என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உழைப்புக்காக எதோ பாடம் படிப்பிக்கிறார்கள் போல் தான் எனக்கு தோன்றியது. ஆனால் அவர்களின் நம்பிக்கை வேறு எங்கோ ? என்னை சுற்றி பலர் இருந்தாலும், நான் மனத்தளவில் , எண்ணங்களில் விலகி விலகி போவது, என் தனிமை உணர்வை மேலும் மேலும் கூட்டியது. நானும் அவர்கள் மாதிரி, வேலை வேறு, வீடு வேறு என்று இருந்து இருந்தால், தனிமை என்னை இன்று வாட்டாது. ஆனால், ஏன் நான் அவர்களையும் சிந்திக்க தூண்டக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் மேலோங்க தொடங்கியது. அதற்கு ஒரே வழி, பாடசாலையில் . சமயத்தை பகுத்தறிவுடன், மானிடவியலுடன் சேர்த்து கற்பிக்க வேண்டும். எனவே, ஒரு நாள் அதிபரை சந்தித்து என் அவாவை கேட்க முடிவு செய்தேன். ஆனால் பின்பு தான் உணர்ந்தேன் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று. ஆமாம் அதிபர் தந்த பிரபு அடியும், அதை பார்த்து, இவனுடன் சேரக்கூடாது என மேலும் விலகிய கூட்டமும் தான் மிச்சம். ஆனால் ஒன்று உண்மை தனிமை என்னை மனிதனாக்கியது. அதனால் ஏற்பட்ட வைராக்கியம் என்னை படிப்பில் உயர்த்த தொடங்கியது. நான் இன்று பொறியியலாளர். என்றாலும் இன்னும் என் அம்மா அப்பா இவன் திருந்த மாட்டான் என்று சொல்வதில் இருந்து விலகவில்லை. பல நிகழ்வுகளில் என்னை விலத்தியே வைக்கிறார்கள். நானும் என் பாட்டில் வாழ பழகிவிட்டேன். தனிமை என்னிடம் தோற்கத் தொடங்குகிறது! வேதத்தில் , பிரம்மாவை, ஆண்டவனின் சந்ததி என, பிரஜாபதி என்று கூப்பிடுவார்கள். அவர் தனது தனிமையை போக்க உயிரினங்களை படைத்தார் என்கிறது. நானும் அதன் பின் திருமணம் செய்து, எனக்கு என ஒரு வாழ்வையே அமைத்து மனைவி, பிள்ளைகளுடன் தனிமை போக்க தொடங்கிவிட்டேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மாட்டு வண்டிக்காரன்"
"மாட்டு வண்டிக்காரன்" வேலன் ஒரு விவசாயி. அவன் எங்க பெரியம்மா வீட்டிற்கு அருகில் இடைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அது ஒரு தோட்டங்கள் நிறைந்த அச்சுவேலிக்கும் செல்வச் சன்னதிக்கும் இடைப்பட்ட கிராமம். அவன் தன்னுடைய தோட்டத்திலும் மற்றும் அந்த கிராமவாசிகளின் தோட்டத்திலும் விளையும் மரக்கறிகளை காலையில் அச்சவேலி சந்தைக்கு, தனது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று விற்பது வழக்கம். வேலன் என்று சொல்வதை விட, 'மாட்டு வண்டிக்காரன்' என்றால் அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை வழமையாக செய்வது போல, மரக்கறிகளை சுமந்து கொண்டு, அவனின் மாட்டு வண்டி சந்தையை நோக்கி போய்க் கொண்டு இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், அந்த மண் வீதி சேறும் சகதியுமாக இருந்தது. அவன் நேரத்துடன் சந்தைக்கு போனால் தான், அவன் கொண்டு வந்த மரக்கறி முழுவதும் விற்க இலகுவாக இருக்கும். எனவே கொஞ்சம் விரைவாக, எதோ ஒரு காதல் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு மாட்டு வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான். அவனின் வேகமும் தாகமும் வண்டில் சில்லுக்கு புரியுமா? அது திடீரென சேற்றில் புதைந்து, உருள முடியாமல் போய் விட்டது. மகாபாரதத்திலும் இதற்கு ஒத்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. விறுவிறுப்பான போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேரின் சக்கரம் சகதியில் சிக்குகிறது. அதை மீட்கும்படி தேரோட்டி சல்லியனுக்கு கட்டளையிடுகிறான். ஆனால் அவன் மறுத்து அங்கிருந்து வெளியேறுகிறான். ஆனால் கர்ணன் மனம் தளரவில்லை, சோர்வடையவில்லை, தானே சக்கரத்தை தன் தோளின் வலிமையால் உயர்த்தி அதில் இருந்து எடுக்க முற்பட்டான் என்பது வரலாறு. ஆனால் எங்க வண்டிக்காரனுக்கு அது புரியவில்லை. அவன் மாட்டு வண்டியில் இருந்து இறங்கி அதன் பக்கத்தில் நின்று யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்றான். மரக்கறி எல்லாம் விற்காவிடில் பழுதாகி விடுமே என்ற கவலை ஒருபக்கம். அவனுக்கு. அவன் வானத்தை பார்த்து சத்தம் போட்டான்: " நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், இந்த ஆண்டவன் அங்கே என்ன செய்கிறான்? அவனுக்கு என்ன குறை ?? நாம் தான் பூலோகத்தில் எல்லா கஷ்டமும் அனுபவிக்கிறோம்?" என்று பெரும் முறையீடு செய்து கொண்டு இருந்தான்! அந்த நேரத்தில் தான் நான் பெரியம்மா வீட்டிற்கு அச்சுவேலி தாண்டி, ஸ்கூட்டர் [scooter] ஒன்றில் நெருங்கி கொண்டு இருந்தேன். வேலனை முன்பே எனக்கு தெரியும் என்பதால், "சும்மா சத்தம் போட்டு, ஆண்டவன் என்ற ஒருவனுக்கு முறையிட்டு ஒன்றும் நடக்காது." என்று கூறிக் கொண்டு அவன் அருகில் சென்று நடந்ததை விசாரித்தேன். திருப்பவும் கர்ணன் தான் ஞாபகம் வந்தது. போர் தர்மத்திற்கு எதிராக ஆயுதம் இல்லாது, தேர் சில்லை உயர்த்திக் கொண்டு இருந்தவனை, நல்ல சந்தர்ப்பம் என்று ஆண்டவனாக கருதப்படும் கிருஷ்ணர் சொல்ல , அருச்சுனன் அம்பு எய்தி, கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. அதை கண்டு, ஏன் அப்படி அதிசயமாக கேட்ட அருச்சுனனுக்கு, உடனடியாக உதவி செய்ய, பிராமணன் வேடம் போட்டு ஒரு நாடகமே நடத்தியதாக நான், நல்லூர் திருவிழா மூட்டம், மணி ஐயர் பிரசங்கம் கேட்டது என் மனதில் நிழலாடியது. ஆனால் அவன் [ஆணடவன்] இங்கு வரவில்லை, ஏன் மனிதன் நாகரிகம் அடைந்து தன் பாட்டில் சிந்திக்க பாமரமக்கள் தொடங்கிய நாளில் இருந்து இன்னும் வரவில்லை, ஏமாற்றும் பல சாமியார்கள் வந்துள்ளார்கள், வந்து கொண்டு இருக்கிறார்கள்!. என் உருவில் வந்தான் என்று இதற்கு விளக்கம் கொடுக்க பலர் காத்திருப்பது எனக்கும் புரியும். நான் அவனிடம் சுருக்கமாக ஆனால் நம்பிக்கை வரக்கூடியதாக, " நீ முறையிடுவதால், வண்டி அசையாது. முயற்சி இன்றி வெற்றி வராது! துணிவுடன் எடுத்த செயலை செய்யின், நினைத்த எண்ணம் தானாய் வரும் என்று கூறி, எழும்பு, உன் தோள்பட்டை சக்கரத்தில் வைத்து தூக்க பார், எல்லாம் சரிவரும் என்று, நானும் சேர்ந்து உயர்த்தி வெளியே எடுத்தோம்! எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் [குறள் 666] வண்டியின் சில்லு வெளியே வந்ததை பார்த்த அவன், தன் செய்யலை எண்ணி வெட்கப்பட்டான். அதை சமாளிப்பதற்காக வண்டிக்கார வேலன், என்னை பார்த்து " வேலனை வள்ளியுடன் இணைக்க, விநாயகர் யானை வேடம் போட்டு உதவினார், இன்று தில்லையில் இருக்கும், லிங்கத்தை தனது அடையாளமாக கொண்டவனின் மகனாக இந்த விநாயகர் எனக்கு உதவி புரிந்தார்" என என் பெயரை [தில்லைவிநாயகலிங்கம்] சொல்லாமல் சொல்லி வாழ்த்தி சென்றான் மாட்டு வண்டிக்காரன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது"
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது" [ஒரு குழந்தை பாட்டு] "கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது காலை வேளையில் வடை சுடுறாள் காத்து இருக்குது பூவரசம் வேலியில் கானா பாட்டு பாடி ஆடுறாள் !" "கார்த்திக் கார்த்திக் பூனை பாயுது காரிருளில் இரு கண்கள் மிளுருது காரை கொஞ்சம் விரைவா செலுத்து காத தூரம் போக வேண்டும் !" "கார்த்திக் கார்த்திக் பட்டம் மிதக்குது காடை கோழி எட்டி பார்க்குது காளான் பூஞ்சையை கொத்தி சாப்பிடுது காட்டுப் பக்கம் அறுந்து போகுது !" "கார்த்திக் கார்த்திக் அம்புலி தெரியுது காங்கேயம் காளை துள்ளி வருகுது காவற் கடவுளை கூவி கூப்பிடு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் !" "கார்த்திக் கார்த்திக் பிறந்தநாள் இன்று காலம் போனது எமக்கு புரியலை ? காய் பழங்கள் துள்ளி பிடுங்கிறாய் காலால் பாய்ந்து ஒலிம்பிக் பார்க்கிறாய் !" "கார்த்திக் கார்த்திக் தாத்தாவின் பாராட்டு காதோரம் சொல்லும் அகவை வாழ்த்து காற்று வெளியில் பறந்து வருவேன் கார்த்திக் குட்டியை தூக்க வருவேன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பாரிஸ் பையா பாரிஸ் பையா"
"பாரிஸ் பையா பாரிஸ் பையா" [திருமண நிகழ்வை மையமாக வைத்த துள்ளு பாட்டு / முதல் முயற்சி] "பாரிஸ் பையா பாரிஸ் பையா பாய்ந்து வாடா பாய்ந்து வாடா பைசா கோபுரம் கொஞ்சம் சரியுது தோள் கொடுடா தோள் கொடுடா" "படிப்பு பாதி தியாகம் பாதி பல்லக்கில் வருவாள் உந்தன் பாதி எண்ணம் பாதி கனவு பாதி மஞ்சத்தில் சாய்வாள் உந்தன் பாதி" "பாரிஸ் பையா பாரிஸ் பையா பச்சை கிளி எட்டி பார்க்குது பஞ்சு மெத்தை காத்து இருக்குது தோள் கொடுடா தோள் கொடுடா" "ஆண்மை கொண்ட அழகு சிங்கமே ஆசை நிறைந்த அழகு வாலிபனே ஆலாத்தி எடுக்க மாமி நிற்கிறா கழுத்தை நீட்ட மங்கை ஏங்கிறா" "பாரிஸ் பையா பாரிஸ் பையா மனம் இழுக்குது மணமேடை அழைக்குது நெஞ்சம் தழுவுது மணமகள் கொஞ்சுது கடிவாளம் போடுது காதில் கிசுக்குது " "பாரிஸ் பையா பாரிஸ் பையா இதழ்கள் சேருது கைகள் கோருது மடியில் கிடக்குது தலையை கோதுது மணமகள் வருகுது பல்லக்கில் வருகுது" "தெறிக்குது வெடிகள் பறக்குது தோரணம் அறுக்குது மனம் ஏங்குது உடல் நொறுக்குது ஆசை ரசிக்குது உள்ளம் இறங்குது பல்லக்கில் நெருங்குது உன்னை" "திமிராக வாடா மணமேடை வாடா திலகம் இடடா கையை பிடியடா வாழ்வை ரசியடா அவளை மதியடா தோள் கொடுடா தோள் கொடுடா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா"
"பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய இரு திருமந்திரப் பாடல் "அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலு மாமே" இதன் சுருக்கமான பொருள் "நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்" நாட்டு வைத்தியர் தனது உதவியாளருக்கு “அணு அளவு பாதரசம்” சேர் என் கட்டளை இடுவார். இதன் கருத்து மிக மிக சிறிய பகுதி என்பது. [நுண்மை, பொடி, சிறு துகள்கள், இம்மி, ஆன்மா எனவும் பொருள் படும்] "மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிர மாயினால் ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றாமே" இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை (மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, அந்த ஆயிரத்தில் ஒன்றினை நூறாயிரம் கூறுபோடச் சொல்லுகிறார். சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம் மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன் (size of an hair = 100 micron ) 100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர் (100 micron = 0.1 millimeter) NB: The term micron and the symbol µ, representing the micrometre, A micrometre (or micrometer) is 1×10−6 of a metre (SI Standard prefix "micro" = 10−6) or one-thousandth of a millimetre, 0.001 mm, or about 0.000039 inches இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம் 0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM) அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம் 0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM) இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நூறாயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர் 0.000001/100000 = 0.00000000001 மில்லிமீட்டர் (MM) ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 மில்லிமீட்டர் (MM). இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா?... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருப்பது . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் "Higgs boson" சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு (பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் "God particle" "கடவுள் துகள்" அல்லது "கடவுள் அலை" என்னும் போசோன் கண்டுபிடிப்பு. [In our current description of Nature, every particle is a wave in a field. The most familiar example of this is light: light is simultaneously a wave in the electromagnetic field and a stream of particles called photons. In the Higgs boson's case, the field came first. The Higgs field was proposed in 1964 as a new kind of field that fills the entire Universe and gives mass to all elementary particles.] அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை. ஒரு காலத்தில் "கடவுள் துகள்" இன் அளவு அறியும் போது அதுதான் திருமூலர் குறிப்பிட்ட சிவனுடைய வடிவமோ என அறிய நேரிடும்? [ஹிக்ஸ் போஸான் என்பது, விண்வெளியில் இருக்கும் அடிப்படைத் துகள்களில் ஒன்று. விண்வெளியெங்கும் ஹிக்ஸ் போஸான்கள் அடர்த்தியாகப் பரவியிருக்கின்றன. அப்படி அவை பரவியிருப்பதை ‘ஹிக்ஸ் வெளி’ (ஹிக்ஸ் ஃபீல்டு) என்கிறார்கள். மிகமிகச் சிறியதான அடிப்படைத் துகள்கள், இந்த ஹிக்ஸ் வெளியினூடாக நகர்ந்து செல்லும்போது, அந்தத் துகள்களின் தன்மையைப் பொறுத்து, அவற்றுடன் ஹிக்ஸ் போஸான்கள் சேர்ந்துகொள்கின்றன. அப்படி அவை சேர்வதால், அந்தப் பொருளுக்கு எடை கிடைக்கிறது.]
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்நன்றி
-
"எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?"
"எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?" "பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை, வஞ்சகி உனக்கு ஏனடி பாசாங்கு, ஏதுக்கடி போலி வாழ்வு? மனிதனின் உண்மை தேவையை, பாசாங்கு உணராது வஞ்சகி பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!" "அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி? விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா, பேரழிவை உண்டாக்கவா மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா, வஞ்சகி? கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல, பெண்ணே!" "உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல, ஒரு துளியே, வஞ்சகி ? கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவு தெரியும் என்கிறாய் உன்செயலே மனிதனின் குறுகிய மனப்பான்மையை காட்டுது, வஞ்சகி? உன் அறியாமை, நீ உண்மையில் குருடியே என்கிறது, பெண்ணே!" "மனிதனின் இறுதித் தீர்ப்பு, நிலையற்ற இறப்பே, வஞ்சகி ? நீ நீர்க்குமிழி வாழ்வை விட்டு அங்கையே போகிறாய் நீ முடிகின்ற ஒன்றில் வல்லுநராகி, எதைசாதிப்பாய், வஞ்சகி ? உனக்கு மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாயோ, பெண்ணே!" "From the moment of advent till the moment we go, Why pretence Why false show, cunning woman? Pretence make us ignore things that really matter, cunning woman False hopes grow, Shattering real joys, dear woman!" "What are human beings master of, cunning woman? whether to give despair or disaster by finding devices Whether to control fleeting affairs of our lives, cunning woman? But not what is permanent & eternal: our soul, dear woman!" "We are not so big, truly we are so small, cunning woman? you learn a bit, yet you feel you know it all your action show you are so small minded, cunning woman? your ignorance show you are truly blinded, Dear woman!" "Final frontier of human is mortal death, cunning woman? We reach 'there., bursting this bubble life 'here' What you achieve, by becoming masters of them, cunning woman? Don't you know that death is awaiting, Dear woman!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"நாளைய உலகம்" / "Tomorrow's World"
"நாளைய உலகம்" / "Tomorrow's World" "பொத்தானை அழுத்தி, மறு கரையில் காதலிப்போம் ஜன்னளை திறந்து, புதியவானம் காண்போம் கண்ணே? உலகம் சுருங்குதோ, எண்ணம் அப்படி தோன்றுதோ தொழில் நுட்பம், அப்படி மாற்றுதோ கண்ணே?" "நாளாந்த வாழ்வில், பல பல மாற்றங்கள் ஒன்றாய் அனுபவிப்போம், ஆனால் எந்த இழப்பில் கண்ணே? ஆண்டாண்டு மாசுபடுத்தி, சூழலை கெடுத்து விட்டோம் நெருக்கடி வந்தபின்பே, மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?" "மதிநுட்ப சிந்தனையாளனா, நாம் மரத்துப்போனவனா இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே? கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா [அல்லது] தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதோ கண்ணே?" "இன்று என்ன செய்கிறோமோ என்ன பேசுகிறமோ நாளை விட்டுசெல்ல வேண்டியவற்றை பாதிக்கும் கண்ணே? அடுத்த தலைமுறைக்கு எங்கள் காதல் வாரிசுக்கு விட்டுப் போவது பெரும் இன்பமா துன்பமா கண்ணே?" "Dear love, Shall we Press button and love at distant shores? Dear love, Shall we open windows and enjoy under different skies? Dear love, What you are thinking, Whether world is shrinking? Or technology changed affect our ways of thinking?" "Dear love, Much much changes, In our daily life Dear love, We enjoyed much much, But at what what expenses? Years years pollution, Destroyed yours ours environment Dear love, At crisis point, We desperate for a solution?" "Dear love, Are we intellectually astute, Are we emotionally numb Dear love, Have you thought anytime, What we have become? Are we blindly heading, towards point of disaster or Dear love, Have we allowed technology, serve as the master?" "Dear love, What do we today, Will affect will influence What do we bequeath, For our children tomorrow ? For our future generation, For our loving children Dear love, What will we leave, Great happiness or sorrow?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"விண்ணில் வாழும் வீரன் இவன்!"
"விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்று கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சிந்து சம வெளியில் ஏறு தழுவல்" / "Bull fighting in Indus valley"
"சிந்து சம வெளியில் ஏறு தழுவல்" / "Bull fighting in Indus valley" மொஹெஞ்ச தாரோவில் கண்டெடுக்கப்பட்ட, ஏறு தழுவல் கல் முத்திரை, நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய காளை துரத்தும் பாறை ஓவியம், சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ள ஏறு தழுவல் கல்வெட்டு என்பன ஜல்லிக்கட்டு என இன்று அழைக்கப்படும் எருதுவேட்டை என்ற மாடு பிடிக்கும் அல்லது ஏறு தழுவும் விளையாட்டுக்கு பண்டைய சாட்சியாக உள்ளன. ஏறு தழுவல் என்பது காளையை அடக்கி அமைதி ஆக்குபவருக்கு மாட்டின் கொம்புகளில் முன்னமே துணியில் கட்டி வைத்துள்ள 'சல்லி காசை' அல்லது 'நகைகளை' பரிசாக கொடுக்கும் ஒரு வீர விளையாட்டு ஆகும்.இது இன்றைய வடிவில், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்ற,திருமலை நாயக் காலத்தில்,கி பி 1623-1659 இல், 400 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது என பெரும்பாலும் நம்பப்படுகிறது.எனினும் இந்த மாடு அடக்கும் அல்லது பிடிக்கும் வீர விளையாட்டு உண்மையில் மிக நீண்ட சரித்திரத்தை தமிழ் நாட்டில் கொண்டுள்ளது.கி மு 700 தொடக்கம் கி பி 300 காலம் கொண்ட சங்க இலக்கியம் இதற்கு சான்றாக உள்ளது. மேலும் 1930-களில் மொஹெஞ்சதாரோவில் கண் டெடுக்கப்பட்ட, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் முத்திரை ஒன்றில் தெளிவாக ஏறு தழுவல் சிற்பமாக பொறிக்கப்பட்டு, இந்த ஜல்லிக்கட்டுக்கான முன்னைய ஆதாரம் இப்ப கிடைத்துள்ளது. இது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது ஜல்லிக் கட்டின் சரித்திரத்தை கி மு 2000 ஆண்டுவரை கொண்டு செல்கிறது. அது மட்டும் அல்ல சிந்து வெளியில் இந்த வீர விளையாட்டின் முக்கியத்தையும் எமக்கு எடுத்து காட்டுகிறது என தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சுட்டிக் காட்டுகிறார். அத்துடன் கி பி 2004 இல் நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களிலும் ஏறு தழுவல் காணப்படுகின்றது. இது 4000 ஆண்டுகளாக, சங்க காலத்திற்கு முன்பே, தமிழ் நாட்டிலும் ஏறு தழுவல் அல்லது மஞ்சு விரட்டு இருந்ததை உறுதிப்படுத்துவதுடன் தமிழரை சிந்து வெளியுடன் பண்பாட்டு ரீதியாக இணைக்கிறது. இங்கு காளையுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, மனிதர்கள் காளையை அல்லது காளைகளை துரத்துகிறார்கள். இந்த காளைகள் நல்ல தேகக் கட்டுடையதுடன் பெரிய திமிழையும் [எருத்தின் கொண்டை] நீண்ட நேரான கொம்பையும் கொண்டுள்ளது. பெரும்பாலும் இது காளையுடன் சம்பந்தப்பட்ட முன்னைய விளையாட்டாக அல்லது காளை சண்டைக்கு முற்பட்ட ஒரு ஆரம்ப விளையாட்டாக இருக்கலாம்? இது மனிதனுக்கும் காளைக்கும் இடையேயான ஒருவித ஓட்ட பந்தயம் ஆகும். இவ்விளையாட்டில், ஓடும் காளைகளை துரத்தி அவைகளை கடப்பதையே வெல்வதாக கொள்ளப் பட்டது. இவ்விளையாட்டு எந்த வித உடல் சேதமும் வராத வண்ணம், மக்களை மகிழ்விக்க விளையாடப்பட்ட விளையாட்டாக இருக்கலாம். மேலும் மொஹெஞ்ச தாரோ கல் முத்திரையில் ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் செதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை, ஒன்றுக்கு மேற்பட்ட ஏறு தழுவும் வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் குட்டிக் கரணம் [பல்டி / somersault] அடிப்பது போலவும், 5-வது நபர் பரிதாபகரமாக தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறு கிறார்கள். என்றாலும் இது குறித்து சிந்து சம வெளி மற்றும் பிராமி கல் வெட்டு ஆய்வாளர் திரு ஐராவதம் மகாதேவன் கூறும் போது இந்த முத்திரையை சற்று கூர்ந்து பார்த்தால், இன்றைக்கு ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் காளையை பிடிக்கும் களம் போன்று தத்ரூபமாக உள்ளது என்றும் ஒருவரே பல கோணங்களில் தூக்கி அடிப்பது போலவும் அல்லது பலர் காளையால் அடிபட்டு நாலாபுறமும் சிதறுவதைப் போலவும் இருக்கலாம் என்றும், எது எப்படி இருந்தாலும் தெளிவாக காளை தான் வெற்றி பெற்றுள்ளது என்பதை உணர முடிகிறது என்கிறார். இதை பல்வேறு ஆராய்ச்சி யாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த வீர விளை யாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம். ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம்? இன்னும் ஒரு சிந்து வெளி முத்திரையில் வீரன் ஒருவன் நீண்ட வேல் ஒன்றை தனது வலக்கையில் தூக்கி காளையின் பிடரியில் தாக்குகிறான். அப்பொழுது தனது இடைக்கையால் காளையின் ஒரு கொம்பை பிடித்தும் தனது இடக்காலால் அதனது நெற்றியை உதைத்து காளையை அடக்குகிறான். அத்துடன் இம்முத்திரையில் பசுபதி என்ற சிறப்புப் பெயர் கொண்ட சிந்து வெளி சிவனும் இருக்கிறார். சில ஆய்வாளர்கள் இதை ஒரு பலியிடும் நிகழ்வாக கருதுகின்றனர். அப்படி ஒரு ஆண்டவனுக்கு பலியிடும் சம்பவமாக இருந்தால், அந்த வீரனின் கால் கட்டாயம் நெற்றியில் இருக்காது. அதே போல இடக்கையும் கொம்பை பிடிக்காது. அது மட்டும் அல்ல ஆண்ட வனுக்கு பலியிட்டு வழி படும் காட்சியாக இருந்தால் பயபக்தியுடன் தான் இச்சிற்பம் வடிக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறுந்தொகை 362 இல், "பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி," என்ற வரி வருகிறது. பல வர்ணங்களில் அமைந்த சோற்றுப் பலியொடு, நீ ஆட்டுக்குட்டியை வெட்டிப் படையல் வணக்கம் செய்து அதன் இரத்தத்தை இவள் நெற்றியில் பூசுகிறாய் என்கிறது. இங்கு நெற்றியை ஒரு புனித இடமாக கருதுவதை காண்க. அதே போல நம் முன்னோர்கள் வலதுக்கு மிக அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ளனர். உதாரணமாக கடிகாரம் வலமாகச் சுற்றுகிறது? பக்தர்கள் கோவிலை வலமாகச் சுற்று கிறார்கள்? மணமகளே,மண மகளே வா, வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!! என்கிறது. மேலும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் / அரங்கேற்று காதையில், சிலப்பதிகார வரிகள்: 129-132 இல், "இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி" என்கிறார். அங்கு அரசன் முதலான அனைவரும் அமர்ந்திருந்தனர். இசைக்கருவிகளை இசைப்பவர்தாமும் நின்றனர் . நாட்டிய விழாவின் நாயகியான மாதவி முதல் முதலாக அரங்கேறும் நடனக் கணிகை வலது புறத் தூணின் பக்கமாக நிற்கவேண்டும் என்ற மரபுப்படி, தன் வலது காலை எடுத்து முன் வைத்து நடன அரங்கில் ஏறி, வலப்பக்கத்தூண் அருகே நின்றாள் என்கிறார். அத்துடன் கிரேக்க கவிஞர் ஹோமர் கி.மு 800 ல் எழுதிய ஆடிஸியில் [Odyssey] பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். புறநானூறு 190 இல், "கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்தென அன்று அவண் உண்ணாதாகி வழி நாள் பெரு மலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் புலி பசித்தன்ன" என்ற ஒரு வரி வருகிறது. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் என்கிறது . ஆகவே ஒரு பொது விழாவின் போது தங்கள் இறைவன் முன் காளையை அடக்கும் ஒரு வீர நிகழ்வாக இது இருக்கலாம் என நாம் இலகுவாக கருதலாம். எருதுமாட்டு சண்டையை விரும்பும் மக்கள் இடையே காளை பெரும்பாலும் ஒரு புராண செல் வாக்கை [அந்தஸ்த்தை] பொதுவாக பெற்றுள்ளது. அத்துடன் மேலும் காளை நீண்டகாலமாக தெய்வீகத் தன்மையுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. சிந்து சம வெளி நாகரிகம் வர்த்தகத்தை தவிர விவசாயத்தை முதன்மையாக கொண்டது. சிந்து சம வெளி விவசாயிகள் பொதுவாக கோதுமை, தானியங்கள், கால்நடைகள் வளர்த்தார்கள்.மேலும் பசு, ஆடு, செம்மறி யாடு போன்றவை பாலும் இறைச்சியும் கொடுத்தன. மேலும் எருது ஏர் அல்லது கலப்பை இழுக்க அங்கு பயன்படுத்தப்பட்டது. அதனால் மாடு அங்கு அவர்களால் பெருமைப்படுத்தப் பட்டது. அது மட்டும் அல்ல சிவாவை பெரும்பாலும் நினவூட்டத்தக்க பசுபதி என்ற ஆண்டவனும் அங்கு இருந்தார். அவரைச் சுற்றி பசுக்கள் மற்றும் விலங்குகள் நிற்பது போன்ற முத்திரைகள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன. அவரை விலங்குகளின் தலைவன் என்கின்றனர். சிந்து வெளி முத்திரையில் பெரும்பாலும் காளை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. பல பல முத்திரைகளில் இது காணப்படுகிறது. இது மீண்டும் எமது கருத்தை வலுவாக்கிறது. பண்டைய காலத்தில் இது ஒரு வீரமிக்க விளை யாட்டாக, சமாதான காலத்தில் கூட போர்வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்க பாவித்திருக்கிறார்கள். அத்துடன் இதை மண மகனை தேர்ந்து எடுக்கும் ஒரு சோதனை களமாகவும் பாவித்தார்கள். ஆனால் இன்று கடந்த 400 ஆண்டுகளாக காசு அல்லது நகை பரிசுகளை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. இப்படி இந்த காளை சண்டை தமிழர் பண் பாட்டில் பல வேறுபட்ட கூறுகளை [அம்சங்களை] கொண் டுள்ளது. இது ஸ்பெயின் காளை சண்டையுடன் ஒத்தும் அதே நேரம் பழமை வாய்ந்ததாகவும் இருந்தாலும் அதில் வேறு பாடுகளும் காணப்படுகின்றன. இங்கு காளை சண்டையில் அகப்பட்டு சாவதற்கு பதிலாக அதனுடன் போட்டி போடும் மக்களே காயப்படுகிறார்கள் அல்லது இறக்கிறார்கள். சங்கம் பாடல்களில் வர்ணித்தவாறும், சிந்து சமவெளி முத்திரையில் பதித்தவாறும் , கொம்புகளை பற்றி அதை மடக்கி பிடித்து தழுவுவது பொதுவாக மிகவும் கடினமான ஒன்று. என்றாலும், இப்படி வென்றதும் வீரர்களும்,இளைஞர்களும் பெருமைப்படுகிறார்கள். ஆகவே பொதுவான ஆங்கில சொற்றொடரான 'Take the bull by the horns' என்பதன் அர்த்தம் புரியக்கூடியதாகவும் உள்ளது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Bull fighting in Indus valley" A seal made of stone, found at Mohenjo-Daro, depicting “Bull fighting”, A painting of bull chasing on a massive rock surface at Karikkiyur in the Nilgiris, 2,000 B.C. to 1,500 B.C, & A Bull taming inscription in Salem district museum, Tamil Nadu - All these indicating Jallikattu in ancient days. Jallikattu, which is bull-baiting or bull fighting, in its present form, where gifts in the form of cash and jewellery are tied to the bull and the one who tames it gets them, which is believed to have been introduced during the rule of Thirumalai Nayak in Madurai, Tamil Nadu (1623-1659), was a 400-year-old tradition. However, the bull-centred sport itself has a much longer history in Tamil Nadu. There is literary evidence to establish its existence in Tamil Nadu during the much-celebrated Sangam Age (700 B.C. to A.D. 300). Also a well-preserved seal,made of stone, now found at Mohenjodaro in the 1930s, and is on display at the National Museum in New Delhi, have traced the ancient origins of jallikattu-type bullfight to 2000 B.C, and it clearly shows that the sport was an important feature of the Indus Valley Civilisation, according to Iravatham Mahadevan, a specialist in Indus and Brahmi scripts. In addition, rock paintings discovered recently at Karikkiyur in the Nilgiris district of Tamil Nadu and dated to 2000 B.C.-1500 B.C. confirm that sports involving bulls is an ancient Dravidian tradition that was practised about 4,000 years ago, connect culturally between Indus valley and Tamils. In ancient Tamil country, during the harvest festival, decorated bulls would be let loose on the “peru vazhi”(highway) and the village youth would take pride in chasing them and outrunning them. Women, elders and children would watch the fun from the sidelines of the “peru vazhi” or streets. Nobody was injured in this. Or the village youth would take delight in lassoing the sprinting bulls with “vadam” (rope). Here instead of fight with bull, It show men chasing bull or bulls, which seem to be a sturdy lot, with big humps and long and straight horns. May be early form of sport involving bull or bull fight in Tamil Nadu as mentioned. However, the particular seal of Mohenjo-Daro portrays a ferocious bull in action, several men or a single man (according to two different interpretations), thrown in the air by it as they try to control it. This seal, made of stone, found at Mohenjo-Daro, now in Pakistan, shows a single bull with curved horns in the “action” of goring a single man or several men. One school is of the opinion that the seal shows several men, who tried to control the bull, thrown up in the air by the animal. A couple of men are shown flying in the air with their legs and hands spread out, a third man is seen jumping to grab the bull, another is somersaulting and yet another has pathetically come to rest on his haunch. Mr. Mahadevan, however, is of the opinion that the seal shows only one man, who is flung into the air by the bull, his flying, his plunging, his somersaulting and finally sitting on his haunch. Clearly, the bull is the victor. Also Several other scholars had commented upon this seal as portraying bull-baiting during the Indus civilisation, Remnant of this sport is still surviving in Tamil Nadu. But such traditions are also known, for example, in Spain and in Portugal and the Iberian peninsula. There may well be a pre-historic connection between these very similar cults. In another Indus Valley seal, we find a warrior, holding a spear in his right hand and attack bull in its nape, while with his left hand grab the bull by its horn, he kick its forehead by his left leg, and take control of the bull. Also we find the Indus vally god Pasupathi there. However, according to some scholars, it is a ritual killing of a buffalo to satisfy a god or a goddess. But it is very doubtful, Because, If it is a ritual killing or offering to god as a sacrifice, the man legs definitely not on the forehead of the bull and Similarly he would not hold horn by his left hand. Not only that the picture will not demonstrate Violence, rather it will show devotion with godly fear. In Sangam love poem ,Kurunthogai 362, It says: "You offer boiled rice and many other things along with a killed, small goat, and rub blessings on my friend’s fragrant forehead. You pray and offer all this to powerful Murukan". This clearly shows the importance of the forhead in an ancient & present culture and further In another Sangam poem, Purananuru 190,It says: "like a hungry tiger that will not eat a harsh-eyed bow since it fell to its left, but on the next day wakes up hungry in his mountain cave, rises up to bring down to his right side, a large bull elephant!". In Sundara Kanda in Ramayana when Hanuman enters Lanka for the first time. He says An enemy or a person wishing the downfall of the family will not enter through main door, but through a back door or, jump over the compound wall and place left foot first. Also, In Homer's Odyssey, the birds appearing on the right side is considered as the positive omens, for example in 15.34, It mentioned that "not without a god's will did this bird fly past you on the right". Even now when a Tamil / indian bride enters the new home, she puts her RIGHT foot first in the house. Therefore we can easily conclude that it is a festival or function or sports, conducted front of god, where muscular, aggressive and Raging bull is tamed or bring under control by competitors as in jallikattu. The bull has an almost mythical status among those who love the sport of bullfighting. The bull has had a long history of being associated with divinity. Farming was one of the most important occupation during Indus valley civilization other than trade. The Indus valley farmers grew wheat, grains, and animals on land. Cows, goats, and sheep gave milk and alternatives. Also they plough the land with wooden ploughshares drawn by men and oxen, and so, the bull was given much respect at that time. There was also a deity, much like Shiva, who was then worshipped as the Pasupathi (the caretaker of herds). we also find that the bull is the most popular animal motif on the Indus Valley glyptic art, which again confirm our assumption. This bull sport represent a different facet of the Tamil culture. This was a martial sport in olden days to keep the warriors prepared for the war even during the peace time. Also prove their manhood / bravery to win the hearts of brides during the Sangam period & thereafter. but recently, for about 400 years for the gifts of cash & jewellery. Though it look similar to and older than the Spanish running of the bulls, it is different. Instead of bulls getting killed, it’s the people who gets injured / killed. Though It's usually hard to take the bull by the horns as described in Sangam poems & seals, most warriors/young youth feel great, once they take the bull by the horns, It may also give the answer to the question "Where does that strange but common expression 'Take the bull by the horns' come from. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]