விதைக்கப்பட்டது வீரமும்தான்
நவம்பர் 15, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து
மேஜர் ரவிசங்கர் யூலியஸ் வின்சன் கெனடி சாவற்காடு, மன்னார். பிறப்பு: 08.09.1970 வீரச்சாவு: 09.06.1992
சிறுநாவற்குளம் படை முகாமிலிருந்து 300யார் தூரத்திலுள்ள பிரதான வீதிச் சந்தி.
எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை.
முன்னிலையில் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜி யைக் கொண்டதாக, எந்த நேரமும் இரைதேடியபடி அந்த அணி காத்திருக்கும்.
இந்த இராணுவ அணியை வளைத்துத் தாக்கி அழித்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. வேவு பார்த்து – திட்டமும் தயாரிக்கப்பட்டது. ரவிசங்கர் இந்த முயற்சியில் ஓய்வின்றிச் செயற்பட்டுக்கொண்டிருந்தான்.
எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியாகி முடிந்திருந்தபோது 28,07,1992 அன்று, எதிர்பாராதவிதமாக ஒரு துயரம் சம்பவித்துவிட்டது.
மேஜர் பாரதி உட்பட எங்களது 4 பெண் போராளிகள் இதே பாதையால் தவறுதலாகப் பிரவேசித்ததில், அதே இராணுவ அணியின் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துவிட்ட சோகம் நிகழ்ந்தது.
ரவிசங்கர் துடித்துப்போனான். ‘எல்லாம் தயார்’ என்றாகியிருந்த சமயத்தில் இப்படியாகி விட்டதே என்று வேதனைப்பட்டான்.
“அந்த ஏ.கே.எல்.எம்.ஜி காரன்தான் எங்கட பெண்போராளிகளைப் போட்டிருப்பான்…… முன்னுக்கிருக்கிற அவன்ர ‘ரேஞ்ச்’க்குள்ளதான் அவையள் சிக்கியிருக்கினம்……” என்று தோழர்களிடம் பொருமினான்.
“நான் செத்தாலும் பரவாயில்லை…… இந்தச் சண்டையில அந்த ஏ.கே.எல்.எம்.ஜி காரனை சாகடித்து, அந்த ஏ.கே.எல்.எம்.ஜி யை எடுத்தே தீருவன்……” என்று, தன் இலக்கில் இன்னும் உறுதியாகினான்.
இது நடந்து ஒன்பதாவது இரவு அந்த இராணுவ அணி தாக்கப்பட்டது. புலிகளின் ஆவேசமான பாய்ச்சல். அனல் விழிகளோடு சண்டையில் முன்னேறிய ரவிசங்கர் அந்த இராணுவத்தினனை வீழ்த்தி அந்த எல்.எம்.ஜி யை எடுத்துச் சக போராளிகளிடம் கொடுத்தான். தன் நோக்கத்தை அடைந்த திருப்தி அவனது முகத்தில் பளிச்சிட்டது. ஆனால் அடுத்த நொடி…… எதிரியின் ரவைகளில் சில அவனைத் துளைத்துச் சென்றன.
சண்டை முடிந்த பின்னர் – வேறு ஆயுதங்களுடன் இந்த ஏ.கே.எல்.எம்.ஜி யையும் ரவிசங்கரின் உடலையும், நெஞ்சத்தில் அவனது நினைவையும் சுமந்துகொண்டு நாங்கள் வந்தோம்.
லெப்டினன்ட் சாம் துரைரட்ணம் ஜெயரூபன் சுன்னாகம், யாழ்ப்பாணம் பிறப்பு: 27.04.1964 வீரச்சாவு: 06.10.1985
அது ஒரு முற்பகல்வேளை.
முகாமில் சாம் தனது கைத்துப்பாக்கியைத் துப்பரவு செய்து கொண்டிருந்தான்.
அருகில் சில தோழர்கள் ஏதேதோ வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள்
என்ன நினைத்தானோ தெரியவில்லை. திடீரென்று சாம் சொன்னான்: “தம்பிமார், எங்கட எந்த ஒரு பொருளும் ஆமியிட்டை சிக்கக்கூடாது; போக விடக்கூடாது.”
அருகிலிருந்த நண்பன் சிரித்துக்கொண்டே கேட்டான், “நீங்க ஆமியிட்ட அகப்படுற சந்தர்ப்பம் வந்திட்டா, இந்த றீட்டாவை என்ன செய்வீங்க அண்ணை…?”
குனிந்திருந்து துடைத்துக்கொண்டிருந்தவன் நிறுத்திவிட்டு, தலையை நிமிர்த்திப் பார்த்துச் சொன்னான்:
“ஆமி இதை முழுதாக எடுக்கேலாது. அப்படி ஒரு நிலை வந்தால், றீட்டாவை அடித்து உடைத்துவிட்டுத்தான் நான் சாவன் தம்பி……”
அன்றைய நாளின் பிற்பகல் வேளை
ஏதோ அலுவலாக, மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சாம் புறப்பட்டான்.
எதிர்பாராதவிதமாக, நாயாற்றுவெளியில் பதுங்கியிருந்த இராணுவத்தினரிடம் சாம் சிக்க நேர்ந்தது. அவர்கள் வளைத்துத் தாக்க, மோட்டார் சைக்கிளைப் போட்டுவிட்டு சாம் தப்பி ஓட முயன்றான்.
நூற்றுக்கணக்கில் சுற்றிவளைத்துத் துரத்தும் படையினரை நோக்கித் தனது கைத்துப்பாக்கியால் சுட்டபடி சாம் வெளியேற முயன்றான்.
இயலுமானவரை விரைந்து ஓடினான். எவ்வளவு தூரம்தான் ஓடமுடியும்…? கைத்துப்பாக்கியின் கடைசி ரவையும் சுடப்பட்டு விட்டது.
இராணுவத்தினர் அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டனர். அதன்பின் நடந்தது யாருக்கும் தெரியாது.
ஆனால், காலையில் தான் சொன்னதையே மாலையில் அவன் அப்படியே செய்திருந்ததை, மறுநாள் இரவு ‘ரூபவாஹினி’ ஒளிபரப்பிய போது அறிந்தோம்.
குப்பி கடித்த வாயோடு சாம் விழுந்து கிடந்ததையும் கல்லில் அடித்து உடைக்கப்பட்ட ‘றீட்டா’ அருகில் நொருங்கிக் கிடந்ததையும் கண்டோம்.
லெப்டினன்ட் கேணல் சூட்டி சின்னத்தம்பி இராசு செல்வேந்திரன் கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் பிறப்பு: 24.05.1967 வீரச்சாவு: 14.07.1991
ஆனையிறவுப் பெருஞ்சமரின் ஆரம்பம்.
வெற்றிலைக்கேணிக் கரையோரம் உதவிக்குத் தரையிறக்கப்படும் சிங்களப்படையை எதிர்கொள்ளவென நிறுத்தப்பட்டிருந்த புலிகளின் சேனைக்குத் தளபதியாக, குட்டி நியமிக்கப்பட்டிருந்தான்.
சூட்டி ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தான்.
இரவு பகலாக எங்கள் அரண்களைச் சுற்றி சூட்டி நடந்துகொண்டிருப்பான்.
“எனது சடலத்தின் மீதுதான் எதிரி முன்னேறுவான்” என்று சொன்னான்.
14.07.1991 காலை.
அதிகமான நம்பிக்கையோடு அலட்சியமாக நின்ற ஒரு குழுத்தலைவனைக் கூப்பிட்டு சூட்டி சொன்னான்;
“சண்டையின் முடிவில் நாங்கள் சோகத்தோடு செல்லலாம்; ஆனால் அவமானத்தோடு திரும்பக்கூடாது.”
அன்று மாலை தரையிறங்குவதற்கு எதிரி இரண்டு தடவைகள் எத்தனித்தான்.
முதற்தடவை விரட்டியடிக்கப்பட்டவன், இரண்டாவது தடவை குண்டுமழை பொழிந்து வந்து கரையேறினான்.
தனது அரணில் அசையாது நின்று போராடிய சூட்டியின் சடலத்தைக் கடந்துதான், எதிரி முன்னேறினான்.
இப்போது ஆனையிறவுச் சமர் முடிந்துவிட்டது.
சூட்டி அண்ணன் சொன்னதுபோல, நாங்கள் சோகத்தோடு மட்டுமே திரும்பி வந்தோம்; அவமானத்தோடு அல்ல…
கப்டன் மோகன் / மேத்திரி காசிநாதன் நகுலேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் பிறப்பு: 30.09.1965 வீரச்சாவு: 02.09.1990
கடலைப்போல எங்களது மனங்களும் கொந்தளித்துக் கொண்டிருந்தன.
தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த ‘டோரா’ வரவரப் பெருத்துக்கொண்டிருந்தது; அலைகள் கிழிய நேவிப் படகு நெருங்கிக்கொண்டிருந்தது.
எங்களின் அந்தப்படகுகள் இரண்டும் தமிழகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தன.
அவற்றில் புலிவீரர்களுடன் முக்கிய தளபாடங்களும் கலந்து இருந்தன.
நேவிப்படகின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடித்தப்பிவிடலாம் என்பதுஇ, அன்றைய நாளில் அரிதான ஒரு நிகழ்ச்சிதான்.
உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையேல் இரண்டு படகுகளுமே அழிக்கப்படுவது உறுதி.
பொருட்களை இழந்தாலும் பரவாயில்லை. போராளிகளையாவது காக்க வேண்டும்.
மோகன் மேத்திரியின் மூளை துரிதமாக வேலை செய்தது.
எங்கள் எல்லோரையும் அடுத்த படகிற்கு மாற்றிவிட்டு, பொருட்களைத்தான் இருந்த படகில் ஏற்றிக்கொண்டான்.
“உங்கட வண்டியை வேகமா கரைக்கு விடுங்க. நான் இன்னொரு பக்கமாக கரைக்கு ஓடுறன். அவன் என்னைக் கலைப்பான்.
தப்பினா… வந்திடுவன், அவன் நெருங்கிட்டானெண்டா வண்டியையும் சாமான்களையும் எரிச்சிடுறன்……”
தான் இறந்தாலும்கூட படகோ, பொருட்களோ எதிரியிடம் அகப்படக்கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.
கனத்த இதயங்களோடு நாங்கள் பிரிய; இரு வண்டிகளும் இரு திசைகளில் விரைந்தன.
மோகன் / மேத்திரியின் படகை நேவிப் படகு துரத்திக்கொள்ள, எங்களது படகு கரையைத் தொட்டுவிட்டது.
அவன் கரையை நோக்கி ஓட, அதைவிட வேகமாக ‘டோரா’ அவனை நெருங்கியதை நாம் பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஒரு கட்டத்தில்; இனி அவன் தப்பமுடியாது என்பதை நாங்கள் துயரத்தோடு உணர்ந்துகொண்டபோது, நடுக்கடலில் ஓடிக்கொண்டிருந்த படகில் தீப்பிடித்தது.
எரிந்துகொண்டிருந்த படகிலிருந்து கையை உயர்த்தி அவன் அசைத்திருப்பான் போலும்….
எங்களது மனங்கள் துடிக்க, எங்களது கண்ணெதிரிலேயே கடலில் எரிந்துகொண்டிருந்தான்!.
வீரவேங்கை சுஜாத் நடராசா குமரகுருநாதன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம் பிறப்பு: 23.09.1971 வீரச்சாவு: 16.06.1990
நள்ளிரவு.
மாங்குளம் இராணுவ முகாம் மீதான முதலாவது தாக்குதல்.
எதிரி தனது அரண்களில் இருந்து பொழிந்து கொண்டிருந்த ரவை மழைக்கு நடுவில், புலிகள் முன்னேறினர்.
புலிகளின் அணி காவலரணுக்கு நெருக்கமாக மிக அருகில் வந்துவிட்டபோது, எதிரி கைக்குண்டுகளை வீசத்துவங்கினான்.
அக்கம் பக்கங்களில் விழுந்த குண்டுகள் வெடித்தன.
திடீரென 7,8 போராளிகள் இருந்த ஒரு இடத்தில், எதிரியின் குண்டு ஒன்று அவர்களுக்கு நடுவில் விழுந்தது.
திகைத்துப்போன கணம். அடுத்த விநாடிகளில் அது வெடித்து அத்தனைபேரையும் பலி எடுக்கும்.
சுஜாத் பாய்ந்தான். “விலத்துங்கோடா……!” என்று உரத்துக் கத்திக்கொண்டு; முன்னால் நின்ற தோழர்களை இரு கைகளாலும் தள்ளி விழுத்திவிட்டு, குண்டின் மீது சுஜாத் பாய்ந்தான்.
அடுத்த நொடி… தோழர்களைக் கொல்ல இருந்த குண்டின் சிதறல்களைத் தான் ஏற்ற அந்த நண்பன், அந்தத் தோழர்களின் முன்னாலேயே சிதறிப்போனான்.
தொடர்ந்தும் புலிகளின் அந்த அணி எதிரியைப் பிடிக்கும்வரை முன்னேறியது; சிதறிய தங்கள் தோழனின் இரத்தக் கறைகளுடன்.
வீரவேங்கை ரமேஸ் பசுபதி மணிவண்ணன் வட்டக்கச்சி, கிளிநொச்சி பிறப்பு: 01.10.1970 வீரச்சாவு: 10.03.1989
வட்டக்கச்சிக் கிராமம் மெல்ல விடியத்துவங்கியது.
இந்தியப்படை முகாமிற்கு அருகில் மிதிவெடி நாட்டும் தனது பணியைச் செவ்வனே முடித்திருந்தான் புலிவீரன் ரமேஸ். கூடவந்தவன் ஈசன். அதே ஊரைச் சேர்ந்த புலிகளின் ஓர் ஆதரவாளன்.
அருகிலேதான் அப்போராளி ரமேசின் வீடு. தன் அம்மாவைப் பார்க்க வேணும்போல ரமேசுக்கு இருந்தது. இருவரும் போனார்கள். வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கூடவந்த ஈசனை நிறுத்தி, “கவனம் அண்ணை” என்றுவிட்டு ரமேஸ் வீட்டுக்குள் நுழைந்தான். கையில் இருந்த பையில் மிதிவெடிகளும், ‘கிறனைட்டு’க்களும் இருந்தன.
தாயினதும் தனயனதும் பரவசமான சந்திப்பு. உச்சி முகர்ந்தாள்; அள்ளி அணைத்தாள். மகனைக் கண்ட அளப்பரிய சந்தோசம் அம்மாவுக்கு!
அவர்கள் அளவளாவிக்கொண்டிருக்க நிமிடங்கள் கரைந்தன. கனத்த சப்பாத்துக்களின் கீழ் சருகுகள் நெரிபடும் ஓசைகேட்க, தாயின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். காதுகளைக் கூர்மையாக்கினான்.
‘செத்தை’ நீக்கலுக்கூடாக வெளியே பார்த்தான். குழை செருகப்பட்ட தலைகள்; நீட்டிய துப்பாக்கிகள்.
வாசற் படலையை உதைத்தபடி இடிபோலக் கத்திக்கொண்டு, துப்பாக்கியோடு வீட்டுக்குள் நுழைந்தான் ஓர் இந்தியன்.
அம்மா அசைவற்றுப் போனாள். திக்பிரமை அடைந்தவளாக அவள் வாசலையே பார்த்து நிற்க, முதுகுப்புறமாக அம்மாவோடு சாய்ந்து கொண்டான் ரமேஸ். வாசலைப் பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். இவனோடு வந்த ஈசன் இப்போது அவர்களோடு வந்தான். பச்சைத் துரோகம்.
தப்பி ஓடுவதென்பது முற்றாகச் சாத்தியமற்றது என்பது அவனுக்குப் புரிந்தது.
அம்மாவோடு இறுகச் சாய்ந்து கொண்டான்.
கண்ணாடி நொருங்கும் சத்தம் சடுதியாகக் கேட்க அம்மா திடீரெனத் திரும்பினாள்.
குப்பி இல்லாத வெறும் கயிறு, வாயிலிருந்து வழுகிவிழ, அவன் அம்மாவின் காலடியில் சரிந்து கொண்டிருந்தான்.
அம்மாவுக்கு உயிர் அசையவில்லை. தான் பெற்ற பிள்ளை தனது கண்முன்னாலேயே, தனது காலடியிலேயே…
“ஐயோ…! … ரா…சா……”
அந்தத் தாயின் ஓலத்தை மிதித்துக்கொண்டு, ரமேசது உடலைக் ‘கொறகொற’வென இந்தியர்கள் இழுத்துச் சென்றனர்.
லெப்டினன்ட் கேணல் ஜோய் கணபதிப்பிள்ளை ரகுநாதன் செங்கலடி, மட்டக்களப்பு பிறப்பு: 02.02.1970 வீரச்சாவு: 30.11.1991
மட்டக்களப்பின் அடர்ந்த காடுகளினூடு சிங்களப்படை பாரிய தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.
3000 இற்கும் அதிகமான துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்ட இந்நடவடிக்கையின் பெயர் ‘வட்ட றவும்’
சிங்களப்படைக்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற மட்டு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க ஜோய் பதுங்கித் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டான்.
21 வயதே உடைய ஜோய், தென்தமிழீழத்திலிருந்து எமக்குப் பாதகமான சூழ்நிலையை மாற்றவென, மட்டக்களப்பு – அம்பாறைப் பிராந்தியத் தளபதியாக நியமிக்கப்பட்டு, தேசியத் தலைவர் அவர்களால் அங்கு அனுப்பப்பட்டான்.
பன்குடாவெளி, முதிரையடி ஏற்றம் படை முகாம்களிலிருந்து செங்கலடிக்கு வரும் ரோந்து அணி, ஜோயின் இலக்கானது.
29.11.1991 அன்று காலை 8.40 மணிக்கு ஆரம்பித்த சண்டை சில நிமிடங்களில் முடிந்தபோது; எதிரியின் ரவை ஒன்று ஜோயை தொண்டைக்குக் கீழே துளைத்துச் சென்றுவிட்டது.
படுகாயமடைந்த தளபதியைத் தூக்கிக் கொண்டு புலிகள் பின்வாங்கினர். பல படையினர் கொல்லப்பட்டதுடன் ஆயுதங்களும் எடுக்கப்பட்டிருந்தன.
புலிகளின் காட்டு முகாம்.
கழுத்துக் காயத்தின் வேதனையால் ஜோய் துடித்துக்கொண்டிருந்தான். ஒரு முழு நாளாக அந்த உயிர் போராடிக்கொண்டிருக்கிறது.
அருகிலே இருந்த சிறப்புத் தளபதியின் கையைப் பற்றிக்கொண்டு, முனகலுக்கிடையிலும் அவன் கூறிக்கொண்டிருந்தான்
“தலைவர் சொல்லிவிட்டதை முழுசா செய்து முடிக்கேலாமப் போட்டுது… அது ஒண்டுதான் எனக்குக் கவலையா இருக்கு…”
காயத்தின் ஆழத் தன்மையால் காயமடைந்த மறுநாள் அதிகாலையில் எம்மைப் பிரியும் போதுகூட, அவன் அது ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்;
“தலைவர் சொல்லிவிட்டதை முழுசா செய்து முடிக்கேலாமப் போட்டுது… அது ஒண்டுதான் எனக்குக் கவலையா இருக்கு…”
லெப்டினன்ட் ரொனி யோசப் சொந்தரநாயகம் உயிலங்குளம், மன்னார் பிறப்பு: 13.03.1965 வீரச்சாவு: 14.11.1985
முற்றுகையிட முயன்ற சிங்களப்படையிடமிருந்து புலிகள் தப்பித்துக்கொண்டனர். ஆனால் மேஜர் அசோக் காயமடைந்துவிட்டான்.
இருந்ததோ இரண்டொரு றைபிள்கள்தான். எனவே துரத்திக்கொண்டுவரும் எதிரியுடன் மோதுவது அவ்வளவு சுலபம் அல்ல. மேலே வட்டமிட்டுக்கொண்டு உலங்குவானூர்தி ஒன்று சுட்டுக் கொண்டிருக்க ரவைகள், புலிகளுக்கிடையில் தரையைக் கிளறிக் கொண்டிருந்தன. காயம்பட்ட அசோக்கோடு போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
வழியில் வெளியான பகுதி ஒன்று எதிர்ப்பட்டது. உலங்குவானூர்தியின் கண்களுக்குத் தப்ப உடனடியாக அருகிலிருந்த கட்டடத்திற்குள் புகுந்து கொண்டார்கள். எதிரி மிக அண்மித்துவிட்டான். உலங்குவானூர்தியிலிருந்து துப்பாக்கி சடசடத்துக்கொண்டே இருந்தது. தொடர்ந்து அங்கே நிற்க முடியாது. அது ஒரு இக்கட்டான நிலை.
அசோக் முனகிக்கொண்டேயிருந்தான். “என்னைப் போட்டிட்டு நீங்கள் தப்புங்கோடா…” என்று முனகலுக்கிடையே கத்தினான்.
முற்றிலும் பாதகமான நிலை ஒன்று அங்கு உருவாகி வந்தது. அவ்வேளை ரொனி சொன்னான், “அண்ணை… எனக்கு இரண்டு குண்டு தாங்கோ… நான் அவங்களை திசை திருப்புறன். ஆமிக்காறரை என்னோட மினக்கெட வைக்கிறன். நீங்க அசோக் அண்ணையோட தப்புங்கோ.”
தான் தீர்மானித்தபடி ரொனி குண்டுகளை வாங்கினான்.
‘கிளிப்பு’களைக் கழற்றினான்.
அது உடன் வெடிக்காதவண்ணம் ‘லிவர்’ அமுக்கியை தன்கைகளால் இறுக அழுத்தியபடி வெளியில் வந்தான்.
இந்த நிலையில் இராணுவத்தினரின் கவனத்தைத் தன்பக்கம் திசை திருப்ப எதிர்ப்புறமாக ஓடினான்.
எதிரியின் கவனம் ரொனி பக்கம் சென்றது.
இராணுவத் துப்பாக்கிகள் இவன் சென்ற திசையை நோக்கி ரவைகளைப் பொழிந்தன. இதற்குத் தன்னையே இலக்காக்கியபடி தன்னிடமிருந்த குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டிருந்தான் ரொனி.
மறுபக்கத்தால் வெளியேறிய தோழர்கள் வயல் வரப்புக@டாக அசோக்கையும் இழுத்துக் கொண்டு ஊர்ந்துகொண்டிருந்தார்கள்.
காயம்பட்ட அசோக்குடன் மற்றையவர்கள் மீண்டுவிட்டார்கள்.
சகதோழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற இலட்சிய வீறுடன், ரொனி தன்னையே அர்ப்பணித்துவிட்டான்.
கப்டன் திலகா ரதீஸ்வரி ராசதுரை சேனையூர், திருகோணமலை பிறப்பு: 18.05.1970 வீரச்சாவு: 03.08.1991
இருந்து சண்டையை வழி நடாத்தினாள் திலகா.
“செத்துப்போன ஒவ்வொரு போராளியையும் நினைச்சு நினைச்சு அடிபடுங்கோ” இப்படிச் சொல்லிச் சொல்லியே களத்தை நெறிப்படுத்தினாள்.
வானிலிருந்தும், தரையிலிருந்தும் எதிரி அகோரமாகத் தாக்கியபடி முன்னேறினான்.
திடீரென எதிரியின் எல்.எம்.ஜி. தாக்குதலொன்று திலகாவைப் படுகாயப்படுத்தியது.
களத்திலிருந்து வெளியேற்றப்படும் பொழுதும் திலகா கத்தினாள் “செத்துப்போன ஒவ்வொரு போராளியையும் நினைச்சு நினைச்சு அடிபடுங்கோ.”
விரைந்து செல்லும் ‘அம்புலன்ஸ்’ வண்டியொன்றினுள் சுயநினைவற்றுப் படுத்திருக்கும் போதும், திரும்பத் திரும்ப அவள் அதையே அரைகுறையாகச் சொன்னாள்.
வைத்தியசாலைக் கட்டிலில் மயக்கமுற்ற நிலையில், மெல்லமெல்ல அவளது மூச்சு நின்று கொண்டிருக்கும் போதும், அவளது வாய் அதனையே உச்சரித்தது. “செத்துப்போன… ஒவ்வொரு… போராளியையும்… நினைச்சு… நினைச்சு… அடிபடுங்கோ…”
லெப்டினன்ட் இளங்கோ இந்தூஸ்பிள்ளை மேரிதாசன் லிங்கநகர், திருகோணமலை வீரச்சாவு: 12.05.1985
இளங்கோ ஏற்கெனவே இரு குழந்தைகளுக்கு அப்பா.
இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவனது இரண்டாவது மழலைச் செல்வம் பிறந்தது.
அது 1986ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலம். மட்டக்களப்பில் போராட்டம் அப்பொழுதுதான் வேர்விடத் துவங்கியிருந்தது. தென்தமிழீழத்தைப் பொறுத்தவரை அவன் முதன்மையானவன்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆயுதங்கள் வரும் ஒவ்வொரு தடவையும், மூதூரிலிருந்து மட்டக்களப்பிற்கு அவற்றை எடுத்துச் செல்லும் பணியில் இளங்கோ இருப்பான்.
அன்றுஇ அவனது மூன்றாவது குழந்தை பிறந்து பதினோராவது நாள். புறப்பட வேண்டியிருந்தது. அவனது மனைவிக்குத் துணையாக, யாருமே இல்லை; ஆனாலும் புறப்பட்டான்.
புறப்படும் போது தன் மனைவியிடம் ‘போட்டுவாறன்… நான் வந்ததுக்குப் பிறகு மகளுக்கு என்ன பேர் வைக்கலாம் என்று தீர்மானிப்பம்…”, என்றுதான் சொல்லிவிட்டு வந்தான்.
“என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம். நான் சமாளிச்சுக் கொள்ளுவன்; நீங்கள்தான் கவனம்” என்றுதான் அவள் வழியனுப்பி வைத்தாள்.
தனது பிள்ளைகள் மூன்றையும் அவன் கட்டி அணைத்து முத்தமிட்டபோது; அவை தன் கடைசி முத்தங்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
வெருகல் துறைமூலம் அவன் அடிக்கடி பயணிப்பதை அறிந்த இராணுவம், ஆற்றோரத்தில் அன்றும் பதுங்கியிருந்தது.
மூதூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவனும், கஜேந்திரனும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
கஜேந்திரனைத் தப்பி ஓடச்சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த எஸ்.எம்.ஜி. மூலம் இளங்கோ இராணுவத்துடன் சண்டையிடத் தொடங்கினான்.
அதே இடத்தில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமகன் ஒருவர், இந்தச் சம்பவத்தை கதைகதையாகச் சொல்லுகின்றார்.
“இளங்கோ அண்ணை சண்டையிட்டார்; ரவைகள் தீரும்வரை சண்டையிட்டார். தனது துப்பாக்கி எதிரியிடம் கிடைக்கக்கூடாது என்பதற்காக, எஸ்.எம்.ஜி. யைப் பகுதி பகுதியாகப் பிரித்து பொங்கிப் பெருகும் வெருகல் ஆற்றில் வீசி எறிந்தார்.
நிராயுதபாணியாக நின்ற அவரை உயிரோடு பிடித்துவிடச் சிங்களப்படை ஆவேசமாக எழுந்து பாய்ந்தபோது, இளங்கோவை சயனைட் பாதுகாத்தது.
வீரவேங்கை றஞ்சன் சரவணமுத்து சத்தியசீலன் மாங்குளம், முல்லைத்தீவு பிறப்பு: 08.05.1968 வீரச்சாவு: 11.03.1986
ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் வானூர்திகளிலும், கவச வண்டிகளிலும் வந்திறங்கி துணுக்காயை முற்றுகையிட்டனர்.
மூன்று நாட்கள் இந்தப் பாரிய முற்றுகை நடந்தது.
அந்த முற்றுகையின் இரண்டாம் நாள்.
அனிச்சங்குளத்தில் காத்திருந்து படையினரின் வண்டித் தொடர்மீது கண்ணிவெடித் தாக்குதல் நடாத்திய ஜீவாவும், ரஞ்சனும் நடந்து வந்த இராணுவத்தினரின் வளைப்பிற்குள் அகப்பட்டுக்கொண்டனர்.
ஆயிரக்கணக்கான படையினருக்கு நடுவில் அவர்கள். தூரத்திலிருந்த எம்மால் எதுவுமே செய்ய முடியாத நிலை. ‘வோக்கி’த் தொடர்பு மட்டுமே எங்களுக்கிடையில் இருந்தது.
அவர்களிடமிருப்பது ஒரேயொரு றைபிள்தான் என்பதையும், அவர்கள் இருவர் என்பதையும் மிகச்சரியாக ஊகித்துக்கொண்ட எதிரி; உயிரோடு பிடிக்கும் நோக்கம் கொண்டு, ரவைகளைப் பொழிந்தபடி வட்டமாக நெருங்கினான்.
ஜீவா தனது எஸ்.எல். ஆரால் சுட்டுக்கொண்டேயிருந்தான்.
“கடைசி ரவை இருக்கும் வரை நாங்கள் சண்டையிடுவோம்… எம்மைப்பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம்….” வோக்கியில் அவனது குரல் தளம்பலின்றி ஒலித்தது.
சண்டை தொடர ரவைக்கூடுகள் வெறுமையாகின.
வீரவேங்கை ஜீவா கந்தையா கெங்காதரன் செட்டிகுளம், வவுனியா பிறப்பு: 27.10.1964 வீரச்சாவு: 11.03.1986
“ரவை முடிந்துவிட்டது. இனி எங்களுக்கிது பயன்படாது. ஆனாலும், றைபிளை அவன்களின்ரை கையில கிடைக்கவிடமாட்டன்.”
நிதானமாக ‘வோக்கி’யில் சொல்லியவன், அருகில் இருந்த மரத்தோடு எஸ்.எல்.ஆரை அடித்து நொருக்கினான்.
இப்போது அவர்களிடமிருப்பது 6 குண்டுகள். ஒவ்வொன்றாக வீசத் தொடங்கினார்கள்.
எதிரிகள் நெருங்கிக்கொண்டிருந்தார்கள். அவை தங்களது கடைசி நொடிகள்தான் என்பது ஜீவாவுக்கும், ரஞ்சனுக்கும் தெரியும்.
ஜீவா கழுத்தைத் தடவினான். சயனைட்டைக் காணவில்லை; ரஞ்சனிடமும் இல்லை.
“எங்களிடம் குப்பி இல்லை. ஆனாலும் உயிருடன் பிடிபடமாட்டோம்….” ஜீவாவின் குரல் உறுதியோடு ‘வோக்கி’யில் ஒலித்தது.
நாங்கள் உறைந்துகொண்டிருந்தோம். எதுவுமே செய்யமுடியாத நிலை; எதுவுமே சொல்ல முடியாத நிலை. ஒவ்வொரு தடவையும் அவர்கள் பதிலுக்காய் காத்திருக்கவுமில்லை.
“என்ன செய்ய…?” என்று அவர்கள் கேட்கவில்லை; “இன்னது செய்கிறோம்…” என்றுதான் சொன்னார்கள்.
5 குண்டுகள் வீசப்பட்டன. எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று. அந்தக் கடைசி மணித்துளிகளிலும், ஜீவா தெளிவாகவும் உறுதியாகவும் ‘வோக்கி’யில் கதைத்தான்.
“நாங்கள் புலிகள். ஒரு புனிதப் பாதையில், தியாகத்தின் அடிப்படையில் தலைவர் எங்களை வளர்த்தார். எங்கள் வீரமரபுக்கிணங்க எம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். எம்மிடமிருக்கும் ஒரேயொரு குண்டு அதைச் செய்யப்போகிறது. நாங்கள் கட்டிப்பிடித்துக்கொண்டு, எங்களுக்கிடையில் வைத்து குண்டின் கிளிப்பைக் கழற்றுகிறோம்.”
அவ்வளவுதான்; தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாமலிருந்த அந்தச் சில விநாடிகள் கழிய, அந்தக்குண்டின் அதிர்வு எங்கள் இதயங்களைத் தாக்கியது. ஜீவாவையும், ரஞ்சனையும் இறுதிவரை எங்களை இணைத்திருந்த அந்த ‘வோக்கி’யையும் நாங்கள் இழந்துவிட்டோம்.
லெப்டினன்ட் கேணல் றீகன் இராசையா சிற்றம்பலம் வெல்லாவெளி, மட்டக்களப்பு பிறப்பு: 06.11.1963 வீரச்சாவு: 16.07.1990
மட்டக்களப்பு, பாலையடி – வெட்டையில், முன்னேறிவந்து நிலை கொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர்.
கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் – பலவீனத்தை அறிந்துவர, தளபதி றீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான்.
இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக எதிர்கொள்ள நேரிடுகிறது.
மோதல் வெடித்தது; றீகனுக்கு குண்டடிபடுகிறது.
இவர்கள் இருவர்; எதிரியோ கும்பலாக இருந்தான். இயலுமானவரை பின்னால் வந்தார்கள். இரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு அளவுக்குமேல் றீகனால் நகர முடியவில்லை.
கூடப்போன போராளியால், தளபதியை நீண்டதூரம் தூக்கிக்கொண்டு தப்பி ஓட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டான்.
றீகன் சொன்னான்; “இனி என்னால வர ஏலாது. நீயும் நிண்டால் சாக நேரிடலாம். ஆயுதங்களும் பிடிபட்டுவிடும்; என்னை விட்டிட்டு, எல்லாத்தையும் கொண்டு நீ ஓடு.”
‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்; அந்தப் பிராந்தியத்தின் இரண்டாவது தளபதி. தன்னந்தனியனாகச் செத்துக்கொண்டிருக்க, எப்படி இடை நடுவில் அநாதரவாக விட்டுவிட்டுச் செல்லலாம்….?’ அந்தப் போராளி உறைந்து போய் நின்றான்.
ஆனாலும் வேறு வழி எதுவுமே அற்ற நிலை.
தன்னிடமிருந்த எம் – 16, கிரனைட் லோஞ்சரையும், இடுப்பில் கட்டியிருந்த பிஸ்டலையும் கழற்றிக்கொடுத்து; சிறப்புத் தளபதியிடம் சொல்ல வேண்டிய சில இரகசியத் தகவல்களையும் காதோடு சொல்லிவிட்டு, குப்பியைத் தன் வாயில் செருகிக்கொண்டே, “போட்டு வா” என்று வழியனுப்பிவைத்தான் அத்தளபதி.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை 1993).
https://thesakkatru.com/vithaikkappaddathu-veeramumthaan/