Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்ந்த மண்ணையே மீளக் கேட்கின்றோம் சர்வதேசத்திற்கு ஏன் இது புரியவில்லை? - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

தமிழீழ விடுதலைப் போரட்டம் உலகின் கண்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலங்கள் சென்றுள்ள போதிலும் தற்போதுதான் எமது போராட்டம் உலகின் பார்வையில் நியாயம் மிக்கதாக மாறியுள்ளது. இந்த நியாயத் தன்மையை சர்வதேசம் எவ்வாறு பயன்படுத்த போகின்றது என்பதே தமிழ் மக்களின் கேள்வியாக உள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக இடம்பெற்ற வன்னி யுத்தத்தில் மட்டும் ஒரு இலட்சம் வரையான தமிழ் மக்களை எமது தாயகம் இழந்திருக்கின்றது. இந்த இழப்பினை நாம் வெறும் வார்த்தையாக எடுத்துக்கொள்ள முடியாது. எமது இனத்தை அழிப்பதற்கான நீண்டகால முயற்சியாகவே தமிழர் தாயகத்தில் இந்த அழிவு அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

ஒரு இனமே அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றபோது கண்டும் காணாதது போல இருந்த மேற்குலகம் இன்று தமிழர்களுக்கு ஆதரவான தோற்றப்பாட்டுடன் நடந்துகொள்ள முற்பட்டிருக்கின்றது. நடந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்கா இன்றுவரை சர்வ வல்லமை பொருந்திய நாடாகவே கணிக்கப்படுகின்றது. தனது செயற்பாடுகள் காரணமாக ‘சர்வதேச பொலிஸ்காரன்’ என்ற பட்டப் பெயரையும் அமெரிக்கா தனக்குத் தானே சூட்டியிருக்கின்றது.

உலக உருண்டையில் உயிரினங்கள் இருக்கும் வரை உலகிற்கு தானே மன்னன் என்ற கௌரவப் பெயருடனேயே அமெரிக்கா வலம் வரத் துடிக்கின்றது. இப்படியான ஒரு நாடு இருக்க வேண்டியதும் அவசியமானதுதான். இல்லாவிடில் உலகத்தில் பொதுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுவிடும். ஆனால், இந்த நாட்டினால் தமிழ் மக்கள் என்ன பயனை அடைந்தார்கள்? என்ன பயனை அடையப்போகிறார்கள்? என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளன.

ஈழத்தில் சிங்கள இராணுவம் தமிழ் மக்களை கொன்றொழித்த போது மறைமுகமாகவும் இராஜதந்திர ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பல்வேறு உதவிகளை வழங்கிய மேற்குலகம் இன்று சிறீலங்கா அரசு குற்றம் செய்துவிட்டதாகவும் அரசாங்கத்தை தண்டிப்பது போலவும் ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளன.

ஈழத்தமிழ் மக்கள் மட்டுமன்றி சர்வதேசத்தில் வாழுகின்ற மக்களும் ஏனைய மக்களும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த எதிர்பார்ப்புகள் வீண்போகாத வகையில் 9 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

24 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 15 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளன. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாண மக்கள் என்றுமில்லாத பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த மக்கள் மனதில் பெரும் ஏமாற்றத்தினையே அவதானிக்க முடிகின்றது. இந்த ஏமாற்றம் பல உயர் கல்விமான்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

‘இலங்கையின் பகீரதப் பிரயத்தனம் மிக்க இராஜதந்திர முயற்சிகளை மீறியும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால் பலவீனமான தீர்மானமாக உள்ளமை எங்களை மனவருத்தமடைய வைத்துள்ளது’ என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து எங்களை ஏமாற்றிவிட்டன, இந்தத் தீர்மானத்தினால் எதனையும் சாதித்துவிட முடியாது ‘ என்று யாழ்ப்பாணத்தின் புறநகர் கிரமத்தில் வசிக்கும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் ‘இந்தத் தீர்மானம் இலங்கையை நேரடியாகப் பாதிக்கும் என்று நாம் நம்பவில்லை, ஆனால்? தீர்மானத்தால் தமிழ் மக்கள் நன்மையடைவார்களாயின் அதனை நாம் வரவேற்போம். போரினால் பெரும் அழிவுகளைச் சந்தித்த தமிழ் மக்களின் வேதனைகளும் விம்மல்களும் இன்றுவரை எம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன, இதற்குரிய தீர்வினை வழங்க வேண்டியது சர்வதேசத்தின் கடமை’ என்று யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ர வைத்திய அதிகாரி ஒருவர் கருத்துக் கூறினார்.

அமெரிக்காவின் தீர்மானம் குறித்து கல்விமான்களும் பொதுமக்களும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளமைக்கு காரணம் இல்லாமல் இல்லை, சிறீலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்புகள் செய்த அட்டூழியங்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள். உலகிலே தடைசெய்யப்பட்ட நவீனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறீலங்கா அரசு கொடூர தாக்குதல் நடத்திய போது கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கருகி மாண்டதை நேர்மை, நீதியான எந்தவொரு மனிதர்களும் மறக்கவே மறைக்கவோ மாட்டார்கள்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் 5 இலட்சம் மக்கள் வாழ்ந்த போதிலும் வெறும் 60 ஆயிரம் வரையிலான மக்களே அங்கு உள்ளதாக அரசாங்கம் கூறியது. ஏனைய மக்களை அப்படியே அழித்தொழிப்பதே அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நோக்கமாக இருந்தது. ஆனால் தமிழீழ தேசியத் தலைவரினதும் தளபதிகளினதும் தந்திரோபாய நடவடிக்கைகள் காரணமாகவே இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான பொது மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.

தற்போது வன்னியில் வழ்ந்து வருகின்ற மக்களுடன் நேரடியாகச் சென்று உரையாடினால் இந்த உண்மையை அவர்கள் தெரிவிப்பார்கள். இது இவ்வாறு இருக்க அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் தாக்கவல்லமை உடையது அல்ல என்றே யாழ் குடாநாட்டு மக்களும் வன்னியில் உள்ள மக்களும் கூறுகின்றனர். அரசும் இராணுவமும் இனப்படுகொலை செய்தது, போர் விதிகளை மீறிச் செயற்பட்டது. எனவே சிறீலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா தீர்மானம் போர்க் குற்றவாளியாக்கும் என்று நம்பி இருந்த இந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கின்றமை தவிர்க்க முடியாதது.

நல்லிணக்க ஆனைக்குழுவின் அறிக்கையை அழுல்படுத்த வேண்டும் என்பதை மையப்படுத்திய தீர்மானமே ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தயாரித்த அறிக்கையானது படையினருக்கும் அரசாங்கத்திற்கும் சாதகமாக அமைந்திருந்தது.

வன்னியில் வாழ்ந்த மக்கள் இறுதி நேரத்தில் அங்கு தாங்கள் எதிர்கொண்ட அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக ஒப்புவித்தனர். இவை அனைத்தையும் புறம் தள்ளிய நல்லிணக்க ஆணைக்குழு இராணுவத்தைப் பாதுகாக்கும் அறிக்கை ஒன்றையே இறுதியில் தயாரித்திருந்தது.

ஆனால், சர்வதேச நாடுகளைச் சமாளிப்பதாற்காக தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சில விடையங்களை மட்டும் நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது. ஆயினும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைமை நிராகரித்திருந்தது.

இந் நிலையிலேயே அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மையப்படுத்தியதாக அமைந்துள்ளமை வடபுலத் தமிழ் மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறியிருக்கின்ற நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், பொதுச் செயலாளர் செலவராஜா கஜேந்திரனும் இணைந்து காத்திரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஈழத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏமாற்றத்துடன் இந்த அறிக்கையும் ஒத்துப் போவதாகவே உள்ளது. தமிழ் மக்களின் இழப்புகளும் துன்பங்களும் எல்லையற்றவை. தமிழர்கள் சிந்திய குருதிக்கும் இழந்த உயிருக்கும் சுதந்திர தமிழீழத்தைத் தவிர வேறு எதுவும் தீர்வாக அமைய மாட்டாது என்பது முடிந்த முடிவாக உள்ளது.

அதற்காக தமிழ் மக்கள் இனி ஒரு போராட்டத்தை விரும்பவில்லை, அழிவுகளை விரும்பவில்லை, ஆட்சிமாற்றத்தினை விரும்பவில்லை. அமெரிக்க உள்ளிட்ட சர்வதேசம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈழத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் இல்லாத ஒன்றை கேட்கவில்லை, தலைவர் பிரபாகரனும், தளபதிகளும், போராளிகளும் ஹிட்லர் போன்று நில ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடவில்லை. ஈழத் தமிழ் மக்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ்வதற்கான உரிமைகளையே கேட்டோம். ‘முந்தி வந்த இனம் என்ற அந்தஸ்தோடு குந்தி இருக்க ஒரு குடிநிலம் கேட்டோம். இன்றும் அதையே கேட்கிறோம். ‘சர்வதேச பொலிஸ்காரனும்’ அதன் நேச அணிகளும் இந்தியாவும் இன்றுவரை அதை ஏன் புரிந்து கொள்ளவில்லை?

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.