Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறுமா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறுமா? - யதீந்திரா

சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள் இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுமா என்னும் கேள்வியை எழுப்புகின்றது. இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளுவதற்கென சிறப்புத் தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. இதற்கென ஓய்வு பெற்ற மூத்த ராஜதந்திரியும், தற்போதைய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவருமான பூரி நியமிக்கப்படலாம் என்றவாறான தகவல்களும் வெளிவருகின்றன. பூரி 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் கொழும்பு தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றியவராவார்.

ஒரு நாடு பிறிதொரு நாடு தொடர்பில் சிறப்புத் தூதுவர்களை நியமிப்பதென்பது இரு நாடுகளுக்கிடையிலான உறவு நெருக்கடியில் இருக்கும் சந்தர்ப்பங்களிலேயே இடம்பெறும். எனவே தெற்காசியாவின் அதிகாரமான இந்தியா, சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்குமாயின், அது இலங்கையுடனான உறவு நெருக்கடியில் இருக்கிறது என்பதையே காட்டும். முன்னர் அத்தகையதொரு நிலைமையிருந்த பின்புலத்திலேயே இந்தியாவின் நேரடித் தலையீடு இடம்பெற்றது என்பதையும் நாம் இவ்விடத்தில் குறித்துக் கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு தேர்தலொன்றை சந்திக்கவுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தமிழர் பிரச்சனை முக்கிய விடயமாக மாறக்கூடிய சாத்தியமுண்டு. இந்தப் பின்னணியில், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் விளைவாக கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும், ஆளும் மகிந்த கூட்டணியின் நடவடிக்கைகள் கூடுதல் முக்கியத்துவம் பெறலாம். ஒரு நாடு தனக்குள்ள இறைமையின் அடிப்படையில் சட்டங்களை நீக்கவும், சட்டங்களை இயற்றவும் அதிகாரமுடையது. அந்த வகையில் பெரும்பான்மை பலமுள்ள மகிந்த அரசாங்கம் இலங்கை அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் பட்சத்தில், அதில் எவரும் தலையீடு செய்ய முடியாது.

ஆனால், 13வது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் ஆள்புலத்திற்கு உட்பட்டதாக இருக்கும் அதேவேளை, குறித்த சட்டம் இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அறுவடையாகவும் இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக இடம்பெறும் விடயங்கள், பின்னர் குறித்த இரு நாடுகளுக்கிடையிலான உறவிற்கான குறியீடாகவும் திகழும். குறிப்பிட்ட உடன்பாடுகள் மீறப்படும்போது அல்லது தன்னிச்சையாக புறம்தள்ளப்படும்போது, அதுவே இரு நாடுகளுக்கிடையிலான விரிசலாகவும் மாறும். 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்கள் அத்தகையதொரு நிலைமையை தோற்றுவிக்குமா என்பதே இன்றைய கரிசனையாக இருக்கிறது.

ஒரு நெருக்கடியான காலகட்டத்திலேயே, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் இலங்கை தமிழர் பிரச்சனை முக்கிய விடயமாக மாறியது. அதற்கானதொரு வலுவான காரணமாக இந்திரா காங்கிரஸ், தமிழ் நாட்டைக் காரணம் காட்டியது. ஆறு கோடி தமிழ் மக்களைக் கொண்டிருக்கும் இந்தியா, தமிழர் விவகாரத்தில் பாராமுகமாக இருக்க முடியாதென்னும் தர்க்கம் முன்னிறுத்தப்பட்டது. இலங்கை தமிழர் பிச்சனையில் தலையீடு செய்வதற்கான தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு என்னும் நிலைப்பாட்டை இந்திரா காங்கிரஸ் வலுவாக முன்னிறுத்தியது. பின்னர் அதுவே ராஜீவால் தொடரப்பட்டது. அன்று ராஜீவால் தொடரப்பட்டது, அவரது மனைவியான சோனியா காந்தியாலும் தொடரப்படுமா?

அன்று, இந்திரா காங்கிரசின் வெளிவிவகார அணுகுமுறையில் தமிழர் பிரச்சனை முக்கிய விடயமாக உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டதன் விளைவுதான் பின்னர் நடைபெற்றவை எல்லாம். ஆனால் தமிழர் தரப்பின் கொள்கைத் தவறுகளால் பிற்காலங்களில் தமிழர் பிரச்சனையிலிருந்து இந்தியா எட்டநிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்தியா எவரது பிரச்சனையின் பேரில் இலங்கையில் தலையீடு செய்ததோ, அவர்களைக் கொண்டே இந்தியாவை வெளியேற்றும் சாணக்கியத்தில் பிரேமதாசா பெரு வெற்றீயீட்டினார்.

உனக்கு இரண்டு எதிரிகள் இருந்தால், ஒரு எதிரியை நண்பனாக்கி, மற்றைய எதிரியுடன் மோதவிடு, உன் இரு எதிரியும் ஒழிவார்கள் என்னும் கௌடில்ய அணுகுமுறை, கொழும்பிற்கு பெருவெற்றியைக் கொடுத்தது. பிரேமதாச இந்தியப் படைகளை வெளியேற்றி, இந்தியாவை தமிழர் பிரச்சனையிலிருந்து ஓரங்கட்டுவதில் வெற்றிபெற்றாலும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தனது பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறானதொரு வலுவான பின்னணியாக ராஜீவ்-ஜெயவர்த்தன உடன்பாடு இருந்து வருகிறது. அந்த உடன்பாடு பல விடயங்களை உள்ளடக்கியிருந்த போதும், 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையே அதன் அச்சாணியாக இருந்தது. ஏனெனில் ராஜீவ்-ஜெயவர்த்தன உடன்பாட்டின் அடிப்படையே தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுதான். தற்போது அதிலும் ஆளும் மகிந்த அரசு கைவைக்கின்றது. 13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம், இந்தியாவை தமிழர் பிரச்சனையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்ற முற்படுகிறது. இதனை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? தமிழர் பிரச்சனையிலிருந்து இந்தியாவை வெற்றியேற்ற முற்படுதல் என்பது, பிறிதொரு அர்த்தத்தில் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை புறம் தள்ளுவதேயாகும்.

இந்தப் பின்னணியில் சமீப நாட்களாக பிறிதொரு விவாதம் தமிழ் நாட்டிலும், இந்தியளவிலும் இடம்பெற்று வருவதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது கச்சதீவு தொடர்பான விடயம். 1974இல் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்னும் விவாதம் அரங்கேறியிருக்கிறது. கச்சதீவை மீளவும் எடுத்துக் கொள்வதற்கு சட்டத்தில் இடமுண்டு என்றும் சட்டவாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ராஜீவ்-ஜே.ஆர் உடன்பாட்டை கொழும்பு பொருட்படுத்தாது விட்டால், கச்சதீவு தொடர்பான உடன்பாட்டில் ஆளும் காங்கிரஸ் இந்தியா கைவைக்கக் கூடிய சாத்தியம் ஏற்படுமா? கச்சதீவை மீளவும் கையகப்படுத்தி, ஓர் இராட்சத போர்க் கப்பலொன்றை அப்பகுதியில் நிறுத்த இந்தியா முற்படுமா? தேர்தலொன்றை எதிர்கொண்டிருக்கும் சூழல் இவற்றுக்கெல்லாம் சாத்தியமில்லை என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில் எதிர்வரும் தேர்தல் மேடைகளில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய விடயமாக இலங்கைப் பிரச்சனை மேற்கிளம்பும் என்பதில் சந்தேகமில்லை. தவிர, ஆளும் காங்கிரசின் வெளிவிவகார இயலுமை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும். இவற்றை சமாளிக்க வேண்டிய நிலைமையை காங்கிரசால் தவிர்க்க முடியாமல் போகலாம்.

விடுதலைப் புலிகளுக்கும் - மகிந்த அரசுக்கும் இடையிலான தீர்க்கமான இறுதி யுத்தத்தின் போதே, காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது. இது ராஜதந்திர ரீதியில் மகிந்த அரசுக்கு சாதகமாகவும், விடுதலைப்புலிகளுக்கு பாதகமான ஒன்றாகவும் அமைந்தது. இது குறித்து இந்தியாவின் பிரபலமான ஆங்கில பத்திரிகையாளரும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பல நூல்களை எழுதியவருமான நாராணய சுவாமி குறிப்பிட்டிருந்த ஒரு விடயம், இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

நோர்வேயின் சமாதான பங்களிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை வெளியீட்டில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். 'விடுதலைப் புலிகளுக்கும் - மகிந்த அரசுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின்போது, இரண்டு இந்தியாக்கள் இருந்தன. ஒன்று பி.ஜே.பி இந்தியா, மற்றையது காங்கிரஸ் இந்தியா. காங்கிரஸ் இந்தியா அதிகாரத்திற்கு வந்தபோது, ஒருவர் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மாறினார். அவர் விதவையான சோனியா காந்தி ஆவார். அவர் விதவையாக்கப்பட்டது விடுதலைப் புலிகளால் ஆகும்'. இதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கும் - மகிந்த அரசாங்கத்திற்குமான தீர்க்கமான யுத்தத்தின் போது, இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தும் வகையிலேயே சுவாமி இதனை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, பிராந்திய அதிகாரமான இந்தியா காங்கிரஸ் தலைமையில் அமைதியாகவே இருந்தது. அந்த அமைதி, பிறிதொரு வகையில் மகிந்த அரசிற்கான அதிஸ்டமாகும். இந்தியா யுத்தத்தை நிறுத்த முற்பட்டிருந்தால், அதனை எந்தவொரு சக்தியாலும் தடுத்திருக்க முடியாது. இதனை கொழும்பின் ஆளும் பிரிவினரே பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் யுத்தம், இந்தியாவின் குறிப்பாக காங்கிரஸ் இந்தியாவின் வரலாற்று எதிரியான தரப்பொன்றுடன் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இது ஒரு எல்லைக்கு மேல் இந்தியாவை வராதவாறு கட்டுப்படுத்தியது. இந்தியாவின் அமைதியின் மத்தியில்தான், விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தில் கொழும்பு வெற்றிவாகை சூடியது. இந்த வகையில் பார்த்தால், மகிந்தவின் கொழும்பு அதிகம் இந்தியா சார்ந்தே இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நிகழவில்லை. கொழும்பின் சமீபகால நகர்வுகள் அதிகம் சீனா சார்ந்த ஒன்றாகவே காணப்படுகிறது. மகிந்த சிந்தனையை சீன மொழியில் பிரசுரிக்கும் நிலைக்கு, கொழும்பு சென்றிருக்கிறது. மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்னும் தகவல், சீன-இலங்கை உறவிற்கான நல்ல குறிகாட்டி ஆகும்.

இந்த பின்புலத்தில் கொழும்பின் தொடர்ச்சியான அணுகுமுறைகள் இந்திய மட்டத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்படப் போகிறது என்பதை உற்று நோக்குவதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த காலப்பகுதியில் மீண்டும் தமிழர் பிரச்சனை இந்திய வெளிவிவகார கொள்கையில் ஒரு முக்கிய விடயமாக மீளெழுச்சி பெறவும் கூடும். நலன்சார் அரசியலில் நிரந்தர நண்பர்கள், நிரந்தர எதிரிகள் என்றெல்லாம் இல்லை. எனவே எதிர்காலம் எத்தகைய படமொன்றை காட்சிப்படுத்தப் போகிறது என்பதை இப்போது ஊகிப்பது கடினம். ஆனால் இந்தியா, தனது பிராந்திய சக்தியென்னும் முகம் இழக்கப்படுவதை ஒரு கட்டத்திற்கு மேல் சகித்துக்கொள்ளாது என்பதை ஓரளவு இப்போதே கணிக்கலாம். இது காங்கிரஸ், பி.ஜே.பி என்னும் கட்சியெல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்திய இலக்காகும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=4a8e77b2-d91e-4cc3-a4c7-d4733fab1d97

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.