Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபையை தளமாகக் கொள்ளும் தமிழர் அரசியலும், அதன் மீதான விமர்சனங்களும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபையை தளமாகக் கொள்ளும் தமிழர் அரசியலும், அதன் மீதான விமர்சனங்களும் - யதீந்திரா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையில் போட்டியிடும் முடிவை அறிவித்த நாளிலிருந்து, சில விமர்சனங்களும் மேலெழுந்தவாறே இருக்கின்றன. அதாவது ஒன்றுமில்லாத மாகாணசபையை கூட்டமைப்பு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் அவ்வாறான விமர்சனங்களின் அடிப்படையாக இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களின் சொந்தக்காரர்கள், 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாணசபை முறைமையை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்வதானது, ஓர் உண்மையான தீர்வை நோக்கிச் செல்வதற்கான பாதையை மூடிவிடும் என்கின்றனர். மாகாணசபையை கையாளுவது தொடர்பான முன்னைய பத்திகள் தொடர்பில் என்னுடன் பேசிய புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவர் பின்வருமாறு கூறினார் - வரதராஜப் பெருமாளும், பிள்ளையானும் ஏலவே அதனை பயன்படுத்திப் பார்த்து விட்டனர்தானே, இனி அதில் பரிசோதிப்பதற்கு என்ன இருக்கிறது? எனவே உங்களது வாதத்துடன் உடன்பட முடியாமல் இருக்கிறது என்றார் அந்த நண்பர்.

இந்தக் கேள்வியின் அடிப்படையிலேயே இப்பத்தி சில விடயங்களை முன்கொண்டுவர முயல்கிறது. இன்று மாகாணசபையை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டு வருவோர், மாகாணசபையை கையாண்டு தோல்வியடைந்த அனுபவத்திலிருந்து வாதிடவில்லை என்பதை முதலில் இப்பத்தி குறித்துக்கொள்கிறது. அவ்வாறான அனைவரும் எழுத்தில் இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை கருத்தில் கொண்ட தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு எழுத்தில் இருப்பவற்றையும் கூட முழுமையாக அமுல்படுத்துவதில் அரசாங்கம் நாட்டம் கொள்ளவில்லை. எனவே எழுத்தில் இருப்பவற்றை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரும் ஓர் அரசியல் போராட்டத்தை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டுமாயின், அதனை எங்கிருந்து ஆரம்பிப்பது? அதனை மாகாண சபைக்கு வெளியிலிருந்து செய்ய முடியுமா?

ஏலவே அத்தகையதொரு போராட்டத்தை முன்னெடுத்து தமிழர்கள் தோல்வியடைந்திருந்தால், இன்று மாகாணசபையை நிராகரிக்குமாறு கோருவதில் ஒரு நியாயம் இருக்க முடியும். ஆனால் அத்தயைதொரு அனுபவம் இன்றுவரை தமிழர் தரப்பிற்கு இல்லை. அத்தகையதொரு அனுபவத்தை முன்னிறுத்தி சர்வதேச சமூகத்திடம் வாதிடுவதற்கான உரித்தை இன்னும் தமிழர் தரப்பு பெறவில்லை. இன்று சர்வதேச சட்டம் பற்றி அதிகம் படித்தவர்கள், ஒரு நாட்டின் உள்ளக பொறிமுறைகளை கையாளுவதில் ஏற்படும் தோல்வியிலிருந்துதான், வெளியக பொறிமுறைகளை நாட முடியும் என்பதை ஏனோ சொல்ல மறந்துவிடுகின்றனர். கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற அரசியல் இயக்கத்தை, சர்வதேசம் 'பயங்கரவாதம்' என்னும் ஒற்றைச் சொல்லில் ஒதுக்கித் தள்ளிவிட்டதையும் அவர்கள் ஏனோ மறந்துவிடுகின்றனர். 1977 பாராளுமன்ற தேர்தல் முடிவை மக்கள் ஆணையாக இப்போதும் கூட உச்சரித்துவரும் சிலரோ, 1977இற்கு பின்னரான தமிழ் தலைமுறைக்கும் அந்தக் கோரிக்கைக்குமிடையில் எந்தவொரு ஜனநாயகரீதியான தொடர்பும் இல்லை என்பதையும் மறந்துவிடுகின்றனர் அல்லது இது குறித்தெல்லாம் சிந்திக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இப்போது அந்த நண்பரின் கேள்விக்கு வருகிறேன். வரதராஜப் பெருமாளையும் பிள்ளையானையும் ஒப்பிட்டு நோக்க முடியாது. அடிப்படையிலேயே இருவருக்கும் வேறுபாடுண்டு. வரதராஜப் பெருமாள் எந்த நாட்டின் அனுசணையில் 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதோ, அந்த நாட்டின் ஆதரவில் இயங்கிய ஒருவர். ஆனால் வரதராஜப் பெருமாளுக்கு பின்னால் வலுவானதொரு பிராந்திய பின்புலம் இருந்திருந்தாலும் கூட, அப்போது ஆயுத அரசியலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பும், ஜனநாயக அரசியல் தளத்தில் பிரதான சக்தியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும், மாகாணசபையை முழுமையாக நிராகரித்திருந்த சூழலில்தான், மாகாணசபையை கொண்டுநடத்த வேண்டிய இக்கட்டு நிலை ஏற்பட்டது. இத்தகையதொரு சூழலில், விடுதலைப்புலிகளும் பிரேமதாச அரசாங்கமும் ஓர் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டபோது, மாகாணசபையை அரசியல் தீர்வு நோக்கி கையாளுதல் என்னும் செய்முறை முடிவுக்கு வந்தது.

இதன் மூலம் மாகாணசபையை அரசியல் தீர்வு நோக்கி கையாளுதல் என்னும் அரசியல் போராட்டம் முளையிலேயே கருகியது. இதன் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் அரசியலை தீர்மானிக்கும் ஒரேயொரு அமைப்பாக உருவெடுத்திருந்த சூழலில், மாகாணசபையை நோக்கி திரும்பிப் பார்க்கக்கூடிய வலுவான அரசியல் அமைப்புக்கள் எவையும் தமிழ் சூழலில் இருந்திருக்கவில்லை. ஏனெனில் விடுதலைப்புலிகளை மீறி அரசியலைக் கையாளுவதற்கான அரங்கொன்றை ஸ்தாபிக்கக் கூடிய ஆற்றல் எவருக்கும் இருந்திருக்கவில்லை. அப்படியொரு நிலைமை இருந்திருக்கவில்லை என்பதற்கும் அப்பால், அதற்கு உழைக்கக் கூடிய ஆற்றலும் எவரிடமும் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. தவிர இக்காலத்தில், விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்படுபவை மட்டுமே தமிழ் மக்களை காப்பாற்றக் கூடியவை என்றவாறான கருத்துருவாக்கமும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதாவது விடுதலைப்புலிகள் மூலம் கிடைக்கப் போகும் அந்த ஒன்று, நிச்சயமாக மாகாணசபை முறைமையைவிடவும் மிகவும் சிறந்த ஒன்றாக இருக்குமென்னும் கருத்தே மேலாதிக்கம் பெற்றிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பகுதியில் குறிப்பிட்டளவான மக்களை உள்ளடக்கி, நடைமுறை அரசொன்றை ஸ்தாபித்திருந்த சூழலில், மாகாணசபை குறித்து எவரும் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கவில்லை. ஆனால் கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை வெளியேற்றும் முயற்சியில் அரசாங்கம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது. வடக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரநிலையில் இருந்ததொரு சூழலில்தான் கிழக்கில் அரசாங்கம் தேர்தலை நடத்தி பிள்ளையானை முதலமைச்சராகவும் ஆக்கியது. வரதராஜப் பெருமாளுக்கு பின்னர் மீண்டுமொரு தமிழர் பிரிக்கப்பட்ட மாகாணசபையில் முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். இது மாகாணசபையை கையாளுதல் என்னும் செயல்முறையில் இரண்டாவதாக நிகழ்ந்த விடயம். ஆனால் இங்கும் மாகாணசபையை கையாளுதல் என்னும் செயல்முறை நிகழவில்லை. ஏனெனில் பிள்ளையான் கொழும்பால் அமர்த்தப்பட்ட ஒரு முதலமைச்சராகவே இருந்தார். கொழும்பால் அமர்த்தப்பட்ட ஒருவர் தனது அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், அதே கொழும்புடன் எவ்வாறு மோத முடியும்?

எனவே மேற்படி இரண்டு நிகழ்வுகளையும் உற்றுநோக்கினால் நீங்கள் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள முடியும். மேற்படி இரண்டு தடவைகளும் மாகாணசபையை கையாளும் செயல்முறை அனுபத்தைப் பெறக்கூடிய வாய்ப்பு தமிழர் தரப்பிற்கு கிடைத்திருக்கவில்லை. எனவே ஒன்றின் அனுபவத்தை பெறாமல், அதன் பலவீனங்கள் பற்றி நாம் எவ்வாறு விவாதிக்க முடியும்? எனவே இந்த விடயங்களை தொகுத்து நோக்கினால், தற்போதுதான் தமிழர் தரப்பிற்கு அத்தகையதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வடக்கு மாகாணசபையில் விக்னேஸ்வரன் தலைமையில், பல சிரேஸ்ட தலைவர்கள் அமைச்சரவையில் இருக்கக் கூடியதொரு சூழலில்தான் மாகாணசபை கையாளும் செயல்முறை ஆரம்பமாகும். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாமையின் அரசியல் தலையீடுகளை அம்பலப்படுத்தும் நோக்கில், ஓர் அரசியல் போராட்டத்தை விக்னேஸ்வரன் தலைமையில் மேற்கொள்ள முடியும். இதுதான் விக்னேஸ்வரன் குறிப்பிடும் மூன்றாவது போராட்டமாகும். அவ்வாறே இப்பத்தி விளங்கிக் கொள்கிறது. ஏனெனில் நீதியரசர் விக்னேஸ்வரன் முன்னர் அந்த கதிரையை அலங்கரித்தவர்கள் போன்ற ஒருவர் அல்ல. அதேவேளை அவர் பிரபாகரனின் நீட்சியுமல்ல. அவரது முகம் முற்றிலும் வேறுபட்ட ஒன்று.

எனவே விக்னேஸ்வரன் தலைமையிலான அரசியல் போராட்டம் என்பது, முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை அமுல்படுத்து என்னும் கோரிக்கையை முன்னிறுத்தும். ஏனெனில் 13வது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசியல் யாப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு உச்ச நீதிமன்ற நீதியரசர், ஒரு நாட்டின் அரசியல் யாப்பை உரியவாறு அமுல்படுத்துமாறு கோரும் போது, அதன் பெறுமதி வலுவான ஒன்று என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அது சர்வதேசத்தால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டுதான், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை களமிறக்கியிருக்கின்றார். ஆனால் தமிழரசு கட்சியில் உள்ள சிலர் ஆரம்பத்தில் இதனை சரிவர புரிந்து கொண்டிருக்கவில்லை. இதனை ஆழமாகப் புரிந்துகொண்ட போதே மாவை சேனாதிராஜா பெருந்தன்மையுடன் விலகிக் கொண்டார்.

எனவே இந்த இடத்தில் சர்வதேச சட்டங்களின் துணையுடன் சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்ளும் மார்க்கங்கள் பற்றி அறிந்தோர், முதலில் இலங்கையின் அரசியல் யாப்பிலுள்ளவற்றை அமுல்படுத்துமாறு கோரும் சட்டப் போராட்டமொன்றை, இலங்கைக்குள் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, எழுந்தமானமாக அரசாங்கத்தால் அதனை நிராகரிக்க முடியாது. அத்தகையதொரு சூழலில், அரசாங்கத்தின் முன் மூன்று தெரிவுகள்தான் இருக்க முடியும். ஒன்றில் 13வது திருத்தச் சட்டத்தில் இருப்பவற்றை முழுமையாக அழுல்படுத்துவதை நோக்கி அடியெடுத்து வைப்பது அல்லது, தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட 13பிளஸ் என்பதை நோக்கி நகர்வது. மூன்றாவது, தெற்கின் அடிப்படைவாத சக்திகளுக்கு அஞ்சி இரண்டையும் புறம்தள்ளிச் செயலாற்றுவது. அவ்வாறு அரசாங்கம் இரண்டையும் நிராகரித்துச் செல்லும் முடிவை எடுக்குமாயின், அரசாங்கத்தால் உள்ளகமட்டத்தில் ஒரு நியாயமான பொறிமுறையை ஏற்படுத்த முடியாது என்னும் விடயம் சர்வதேசத்தின் முன் அம்பலமாகும். இந்த அம்பலப்படுத்தலை மாகாணசபையில் பங்குகொள்ளாமல், அதனை கையாளமல் எவ்வாறு சாத்தியப்படுத்த முடியும்?

மாகாணசபையில் பங்குகொண்டால், அது அரசியல் தீர்விற்கான கதவை அடைத்துவிடும் என்று விமர்சிப்போருக்கு, இப்பத்தி பிறிதொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இன்று இலங்கை விடயத்தில் கரிசனை கொண்டிருக்கும் அனைத்துலக தரப்பினர் அனைவரும், நல்லிணக்க ஆணைக்குழு என்னும் உள்ளக பொறிமுறையை அமுல்படுத்துமாறுதான் அழுத்தம் கொடுத்து வருகின்றனரே தவிர அதனை தாண்டிச் செல்லுவது பற்றியல்ல. எனவே அனைத்துலக தரப்பினர், உள்ளக பொறிமுறை குறித்து அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றதொரு சூழலில், இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வாக, பிராந்திய சக்தியான இந்தியாவின் அனுசரணையில் தரையிறக்கப்பட்ட ஒரு தீர்வாலோசனையை, முழுமையாக ஒரு தவணை கையாண்டு பார்க்க வேண்டிய, அதனை அடியொற்றி இயங்க வேண்டிய உள்ளகப் பொறுப்பை எவ்வாறு தமிழர் தரப்பு தவிர்த்துச் செல்ல முடியும்?

எனவே இந்த அடிப்படையில் சிந்தித்தால், தற்போதைய சூழலில், நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாணசபையை கைப்பற்றி ஆட்சியமைப்பது ஒன்றுதான் நம் முன்னுள்ள ஒரே அரசியல் தெரிவாகும். அந்த வகையில் மாகாணசபை முறைமையானது தமிழர் பிரச்சனையைக் கையாள்வதற்கான ஓர் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது என்பதன் பொருள், முதலில் சட்டரீதியான, பின்னர் அதனை அடியொற்றிய ஒர் அரசியல் போராட்டத்தை மேற்கொள்வதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது என்பதாகும். இந்த வகையில் பொருள் கொண்டால் விடயங்களை விளங்கிக் கொள்வது கடினமான ஒன்றல்ல.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=b5e2358b-6e8a-4ded-8de4-720f7da11b38

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.