Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் பதவியேற்பும் விமர்சனத்திற்குள்ளாகிவரும் கூட்டமைப்பின் முக்கூட்டு அணுகுமுறையும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் பதவியேற்பும் விமர்சனத்திற்குள்ளாகிவரும் கூட்டமைப்பின் முக்கூட்டு அணுகுமுறையும் -  யதீந்திரா

வடக்கு மாகாணசபையின் ஆரம்பமே சர்ச்சைகளுடனும், அதிக வாதப்பிரதிவாதங்களுடனும் ஆரம்பித்திருக்கிறது. வடக்கு மக்களால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையே மேற்படி வாதப்பிரதிவாதங்களினதும், சர்ச்சைகளினதும் அடிப்படையாகும். சம்பந்தன் எவ்வாறு அத்தகையதொரு முடிவை எடுக்க முடியும். வடக்கு மக்கள் அத்தகையதொரு ஆணையை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருக்கவில்லை. மாறாக, அரசுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்திருந்தனர். எனவே சம்பந்தன், சுமந்திரன் மற்றும் புதிதாக இணைந்திருக்கும் விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழர் அரசியலை பிழையான திசைவழி நோக்கி நகர்த்திச் செல்ல முற்படுகின்றனர் என்பதே மேற்படி வாதப்பிரதிவாதங்களின் சாரமாக இருக்கிறது.

வடக்கு முதல்வரின் பதவியேற்பு இலங்கையின் தமிழ்ச் சூழலில் மட்டுமல்லாது, புலம்பெயர் சூழலிலும் கடும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் முல்லைத்தீவில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்போரால் விக்னேஸ்வரன், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து, தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியவை பதவிப் பிரமாணத்தில் பங்குகொள்ளவில்லை. வெளித்தோற்றத்தில் அவர்கள் இதனை பகிஸ்கரித்திருப்பதாகவே செய்திகள் பதிவாகியுள்ளன. இவ்வாறானதொரு நிகழ்வை பகிஸ்கரிப்பதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னர், இலங்கை ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்தமையானது, இன்றைய சூழலில் சரியான ஒன்றுதான் என்று வாதிடுவோரின் கருத்துக்களை செவிமடுப்போம்.

வடக்கு மாகாணசபை என்பது தற்போதுதான் பிறந்த குழந்தை, எனவே ஆரம்பத்திலேயே ஒரு முரண்பாட்டுடன் அதனை நாம் ஆரம்பிக்கக் கூடாது. எனவே ஒரு சுமூக நிலையை பேணிக்கொள்ளும் நோக்கிலேயே மேற்படி தீர்மானத்திற்கு நாம் வர நேர்ந்தது. இந்திய மற்றும் அமெரிக்க மட்டத்தினரும், அத்தகையதொரு அணுகுமுறையைத்தான் எங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். மகிந்தவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுப்பதாக தீர்மானித்த பின்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். ஆனால் இதனை எதிர்ப்பவர்களோ வேறு காரணங்களை சொல்லுகின்றனர். வடக்கு மாகாணசபைக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ததன் மூலம் அதிகரித்துவரும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து ஆளும் மகிந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கே துணைபுரிந்திருக்கின்றனர். இதன் மூலம், தேர்தல் காலத்தில் தாம் வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். வடக்கு மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. இதனை எந்த வகையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேற்படி இரு தரப்பினரின் அபிப்பிராயங்களை அடியொற்றி இரண்டு கேள்விகளை இப்பத்தி முன்கொண்வருகிறது. வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தமையால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதகங்கள் என்ன? இரண்டு, மேற்படி நிகழ்வை எதிர்ப்பவர்கள் சொல்லுவது போன்று, சட்டத்தின் பிரகாரம், சமாதான நீதவான், சட்டத்தரணி அல்லது கட்சியின் தலைவரான சம்பந்தன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அந்த அபூர்வ நன்மை என்ன? ஜனாதிபதியின் முன்னிலையில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வால் உணர்ச்சி வசப்படுபவர்கள் மேற்படி இரண்டு கேள்விகளையும் கருத்தில் கொள்வது அவசியம்.

இவ்வாறானதொரு முடிவை இந்தியா அல்லது அமெரிக்கா வலியுறுத்தியதா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால், வடக்கு மாகாணசபையை நிர்வகிப்பதற்கு ஒரு சுமூக நிலைமை அவசியமா இல்லையா என்பதே இங்கு கருத்தில்கொள்ளப்பட வேண்டியது. அந்த வகையில் நோக்கினால், இதனை தவறான அல்லது தமிழ் மக்களுக்கு பாதகமானதொரு விடயமாக நோக்க முடியாது. இதன் மூலம், சம்பந்தன் தரப்பினர், ஜனாதிபதி தேர்தலின்போது சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் ஏற்பட்ட முரண்பாட்டையும் மேற்படி நிகழ்வின் ஊடாக நிவர்த்தி செய்திருக்கின்றனர். இலங்கையில் இருதரப்பும் இணக்கமான ஒரு தீர்வை காணவேண்டுமாயின், ஆளும் மகிந்த அரசாங்கத்துடன் ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தாமல் அதனை சாத்தியப்படுத்த முடியாது. ஆகக்குறைந்தது அதனை நோக்கி நகரவும் முடியாது. இந்த நகர்வை, அவசரப்பட்டு மகிந்தவின் நிகழ்சிநிரலுக்குள் சரணாகதி அடைந்துவிட்டதாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை. எனவே மகிந்தவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தமையானது தமிழர்களுக்கு சாதகமான ஒரு விடயமே!

அவ்வாறில்லாது, இதனை எதிர்ப்பவர்கள் சொல்லுவது போன்று, சமாதான நீதவான் முன்னிலையிலோ அல்லது சம்பந்தன் முன்னிலையிலோ மேற்படி பதவிப் பிரமாணம் இடம்பெற்றிருக்குமானால், அது வெறுமனே ஒரு தமிழர்களின் சடங்கு போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கும். மேலும், தெற்கின் அடிப்படைவாத சக்திகள் பிரச்சாரம் செய்து வருவது போன்று, கூட்டமைப்பினர் தனிநாட்டுக்கான நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டு வருகின்றனர் என்னும் அர்த்தமற்ற குற்றச்சாட்டையும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கும்.

ஆனால், தற்போது சம்பந்தனின் மேற்படி நுட்ப நகர்வால், தெற்கின் கடும்போக்குவாதிகளின் பிரச்சாரங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. தவிர, இதனூடாக, ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்விற்கான விருப்புறுதியையும் கூட்டமைப்பு நிரூபித்திருக்கிறது. இதனூடாக சம்பந்தன், ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பக்கமாக திருப்பிவிட்டிருக்கின்றார். எனவே ஒரு விடயத்தை எதிர்க்கும் போது அதன் சாதக மற்றும் பாதகமான இரண்டு பக்கங்களையும் உற்றுநோக்க வேண்டியது அவசியமாகும். உணர்ச்சிவசப்பட மட்டுமே தெரிந்திருக்கும் கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் ஆதங்கப்படுகின்றனர் என்பதற்காக சிந்திக்கும் தரப்பினரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடக் கூடாது. சாதாரண மக்களுக்கு நிலைமைகளை தெளிவுபடுத்த வேண்டியதுதான் சிந்திக்கும் தரப்பினரின் பணி. இன்று, மேற்படி பதவிப்பிரமாணம் இந்தளவிற்கு சர்ச்சைகளை ஏற்படுத்தியதற்கு, கூட்டமைப்பினர் தேர்தல் பிரச்சாரங்களின்போது வெளிப்படுத்திய கருத்துக்களும் ஒரு காரணம் ஆகும். வாக்குகளை சேகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களே பின்னர் யதார்த்தபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஒரு "பூமறாங்" போன்று திரும்பித் தாக்குகிறது. இதற்கு புதிதாக அரசியலில் இணைந்துகொண்ட விக்னேஸ்வரனும் விதிவிலக்கல்ல.

இந்த விடயத்தில் ஒரு சிலர் மிகுந்த நிதானத்தை கடைப்பிடித்தாலும், கூட்டமைப்பில் உள்ள பலரிடம் அவ்வாறானதொரு நிதானம் இல்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளை வசப்படுத்தும் நோக்கில், தங்களை புலிகளின் ஆதரவாளர்களாக காண்பித்துக் கொள்ளும் அவ்வாறான சில தலைவர்கள், பின்னர் நடைமுறை அரசியல் என்று வரும்போது சங்கடங்களை எதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாகவே, சம்பந்தனின் முடிவுகளிலிருந்து இவர்கள் அதிகம் விலகி நிற்க நேர்கிறது. இவ்வாறானதொரு சங்கடத்தின் விளைவுதான் சிலர் விக்னேஸ்வரனின் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரிப்பதான தோற்றத்தை காண்பிக்க விளைந்ததன் பின்னணி.

ஆனால், இதே நபர்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு விசுவாசமாக ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த பதவியை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க விரும்பின் அது தவறான ஒன்றல்ல என்றே இப்பத்தி கருதுகிறது. அதன் ஆரம்பமாக, இலங்கை அரசியல் அமைப்பை நிராகரிக்கும் வகையில், தங்களது பாராளுமன்ற உறுப்புரிமையை இவ்வாறானவர்கள் ராஜினாமா செய்ய முன்வரவேண்டும். இதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர்? எனது எழுத்துலக நண்பர் ஒரு சொல்லுவார், ஒவ்வொரு தேர்தல்களிலும் தலைவர்கள் வெல்லுகின்றனர், ஆனால் மக்கள் தோற்றுக் கொண்டிருக்கின்றனர். அந்த நண்பரின் கணிப்பு முற்றிலும் சரியானது. எனவே தற்போது மக்களை வெற்றியாளராக்கும் அரசியலை நோக்கி முன்னகர வேண்டியதுதான் கட்டாயமானது. அவ்வாறானதொரு நோக்கில் சம்பந்தன் தரப்பினர் அணிசேர்ந்திருப்பர் எனின், அவர்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மக்களது நலனை முன்னிறுத்தி சிந்திப்போரின் கடமையாகும். அதற்காக கண்மூடித்தனமாக அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று இப்பத்தி வாதிடவில்லை.

விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபைக்கான முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, அவரை முன்னிலைப்படுத்தியும், சம்பந்தனின் அரசியல் அணுகுமுறையை முன்னிறுத்தியும் பலவாறான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக புலிகளது அரசியலின் தொடர்ச்சியாக தங்களை அடையாளப்படுத்தியிருப்போர்களின் குரலாக தொழிற்பட்டுவரும் 'தமிழ்நெற்' இணையத்தளம், சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகின்றது. 'தமிழ்நெற்' இணையத்தளம், மேற்படி மூவரையும் தமிழ் மக்களது தீர்ப்பை, புதுடில்லி மற்றும் வோசிங்டனின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக திருப்ப முனையும் 'கடத்தல்' என்று விமர்சித்திருக்கிறது. (Wigneswaran-Sumanthiran-Sampanthan trio is bent upon hijacking a peoples verdict to serve the agenda of New Delhi and Washington). தங்களது தாக்குதல் என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதான தாக்குதல் அல்ல. மாறாக, கூட்டமைப்பிற்குள் இருந்து தொழிற்படும் கடத்தல்காரர்களுக்கு (hijackers inside it) எதிரான தாக்குதலாகும் என்று குறிப்பிடும் 'தமிழ்நெற்' தளம், இவர்கள் தனியாக இல்லை, இவர்களுக்குப் பின்னால் நீண்டகாலமாக இவர்களை இயக்கும் குருநாதர்களின் (masters) வலையமைப்பு ஒன்றுள்ளதாகவும் குறிப்பிடுகின்றது. ஏற்கனவே தமிழ்நெற் தளத்தினர், விக்னேஸ்வரனை, ஏகாதிபத்திய சக்திகளின் ஊதுகுழல் (mouthpiece of imperialist) என்று விமர்சித்திருந்ததையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்ளலாம்.

இலங்கையின் மீது இருவேறுபட்ட கோணங்களில் அழுத்தங்களை பிரயோகித்து வரும் அமெரிக்க மற்றும் இந்திய தரப்பை, தேவையற்ற வகையில் விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக நாம் எதைச் சாதிக்க முடியும்? யுத்தத்திற்கு பின்னரான இலங்கை நிலைமைகள் குறித்து தமிழ்நெற் தரப்பினரிடம் முன்னேற்றகரமான அவதானம் இருப்பதாக தெரியவில்லை. தற்போதைய சூழலில் எவர் விரும்பினும் விரும்பாவிடினும், ஈழத்து அரசியல் நகர்வென்பது முற்றிலும் கூட்டமைப்பின் அணுகுமுறையில்தான் தங்கியிருக்கிறது. மக்களும் கூட்டமைப்பை சார்ந்தே நிற்கின்றனர். இதற்கு கூட்டமைப்பிற்கு மாற்றான வலுவான அரசியல் கூட்டுக்கள் எவையும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகும்.

ஆனால் கூட்டமைப்பு என்று பொதுவாக குறிப்பிட்டாலும், தமிழ்நெற் குறிப்பிடுவது போன்று, மேற்படி மூவர் கூட்டே கூட்டமைப்பின் சார்பிலான அரசியல் நகர்வை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். முன்னர் இருவராக இருந்த நிலைமை விக்கியின் வருகையுடன் மூவர் கூட்டாக (Trio) மாறியிருக்கிறது. இக் கூட்டின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களை இக் கூட்டு விளங்கிக்கொள்ளவில்லை என்று எவரும் கூற முடியாது. அதன் ஒரு பகுதியாகவே மேற்படி பதவிப் பிரணமாணமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தம் என்பது, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒன்றல்ல. இது தொடர்பில் சம்பந்தன் தரப்பினரிடம் தெளிவுண்டு. யுத்த கால - இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவமும் (Geo-political importance) யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவமும் ஒன்றல்ல. தற்போது இலங்கையின் புவிசார் முக்கியத்துவம் என்பது, இலங்கை முற்றிலுமாக சீனாவின் பக்கமாக சாய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வது. இதனை கொழும்பு நன்கறியும். ஏனெனில், தற்போது இலங்கையின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச அழுத்தங்களுக்கும், தமிழர் பிரச்சனைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை கொழும்பு நன்கறியும், சம்பந்தரும் அறிவார். இங்கு, தமிழர் பிரச்சனை ஒரு துருப்புச் சீட்டாகவே பயன்படுத்தப்படுகிறது.

யுத்தத்திற்கு ஆதரவளித்த மேற்குலகும், யுத்தத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜ.நாவும், அதே யுத்தத்தையே இலங்கையின் மீதான அழுத்தங்களுக்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இலங்கை சீனாவின் பக்கமாக முற்றிலும் சாய்ந்துவிடக் கூடாது என்னும் நோக்கில்தான் கொமன்வெல்த் மகாநாட்டை கொழும்பில் வைப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் கமலேஸ் சர்மா அரும்பாடுபட்டு வருகின்றார். கனடாவின் கடும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு, அவர் தனது காய்நகர்த்தல்களை தொடர்கிறார். யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் புவிசார் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுதான் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பைப் பொறுத்தவரையில், மேற்குலக அழுத்தங்களை இந்தியாவின் மூலமும், இந்தியாவை சீனாவின் மூலமாகவும் சமாளித்துக் கொள்ள முடியுமென்னும் உபாயத்தைக் கைக்கொள்வதாகவே தெரிகிறது. இதன் இறுதி அர்த்தத்தில், இந்தியாவுடன் அதிகம் நெருக்கமாகி, மேற்குல அழுத்தங்களிலிருந்து நிரந்தரமாக தப்பித்துக் கொள்வதே கொழும்பின் திட்டமாக இருக்கலாம்.

இந்த இடத்தில் தமிழர் பிரச்சனைக்கு என்ன நடக்கும் என்பதே முக்கியம். இந்திய - இலங்கை உடன்பாட்டின் விளைவான 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வே, இறுதியில் ஒரேயொரு தீர்வாக முன்னிறுத்தப்படும். ஏனெனில், இந்தியாவில் எந்த அரசாங்கம் ஆட்சி பீடத்திலிருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்னும்போது அவர்கள் உச்சரிக்கப்போவது 13வது திருத்தத்தைதான். இது தொடர்பில், கொழும்பின் மூவர் கூட்டும், கூட்டமைப்பின் மூவர் கூட்டும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கப் போகின்றன. அதற்கான ஒரு தயாரிப்பையே இந்தியா கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இந்த விடயங்களை சம்பந்தன் துல்லியமாக மதிப்பிட்டதன் விளைவே, புலிகளுடன் எந்தவிதமான தொடர்புகளுமற்ற விக்னேஸ்வரன் அரசியலுக்குள் இழுத்துவரப்பட்டமையும், அவரை மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரணமாணம் எடுக்க வைத்தமையாகும். ஆனால், விக்னேஸ்வரன் குறிப்பிடுவது போன்று, இந்த நகர்வு கூட்டமைப்பின் இராஜதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமா அல்லது கொழும்பின் மூவர் கூட்டின் தந்திரோபாய பொறிக்குள் சிக்கிவிட நேருமா என்பதை இப்போதைக்குக் கணிப்பது கடினமான ஒன்றே!

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=be19e426-8794-4104-9c92-df1d7d305cab

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.