Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்? - யதீந்திரா

விடுதலைப் புலிகள் என்னும் ஆயுத இயக்கம் அழிவுற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த எந்தவொரு விடயமும் தமிழர்களுடன் நேரடியான தொடர்புடையவை அல்ல. அனைத்தும் யுத்த வெற்றிக்குச் சொந்தமான, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தொடர்பானவை. உள்ளுக்குள்ளும் வெளியிலும் அரசாங்கம் எதிர்கொண்ட, எதிர்கொண்டு வருகின்ற அனைத்தும் அரசாங்கத்தின் தொடர்சியான இருப்புடன் தொடர்புபட்டவையாகும். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆட்சிக்கவிழ்ப்பு அரசியல் பிரவேசம், மற்றும் யுத்தவெற்றிக்கு உரியவரான ஜனாதிபதி ராஜபக்சவின் அதிகாரத்திற்கு சட்டரீதியாக சவால்விடுக்க முற்பட்ட முன்னாள் உயர் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் நடவடிக்கை ஆகிய இரண்டும் சமீப காலத்தில் அரசாங்கம் இலங்கைக்குள் எதிர்கொண்ட இரண்டு பிரதான சவால்களாகும்.

இந்த இரண்டு சவால்களையும் ஜனநாயக நடைமுறைகளை பயன்படுத்தியே அரசாங்கம் வெற்றிகொண்டது. இதனை சிலர் ஜனநாயக நடைமுறை இல்லையென்றும் வாதிடலாம். ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களாக விவாதிக்கப்பட்ட மேற்படி இரண்டு விடயங்களும் நாளடைவில் கவனிப்பாரற்ற நிலைக்குச் சென்றது. அரசியலில் நிகழும் ஒவ்வொரு புதிய விடயமும், பழைய விடயங்களை பெறுமதியிழக்கச் செய்கிறது. இதனை ஆளும் தரப்பினர் நன்கு அறிவர். மேற்படி இரண்டு விடயங்களுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை உண்டு. அதாவது, மேற்படி இரண்டு விடயங்களின் போதும், அவை அரசியலில் ஆட்சிமாற்றம் நோக்கிய ஓர் அசைவை ஏற்படுத்தக் கூடும் என்னும் எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. ஏன் அவ்வாறு நடைபெறவில்லை?

சரத் பொன்சேகா விடயத்தை எடுத்து நோக்கினால், அங்கு ஓர் ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியில் குறிப்பிடத்தகு பங்காற்றியவரான சரத் பொன்சேகா, அதற்கு தலைமையேற்ற மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கிய போது அரசாங்கம் விழுந்துவிடுமென்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஹீரோவாக விளங்கிய பொன்சேகா, அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் யுத்தத்தில் சீரோவாகினார். பொன்சேகாவின் வீழ்ச்சியால் அரசாங்கம் இரட்டிப்பு நன்மை அடைந்தது. ஏனெனில் வீழ்ந்தது யுத்த வெற்றிக்கு சொந்தமான அரசாங்கத்தின் வலுவான எதிரி மட்டுமல்ல, இலங்கையின் பாரம்பரியம்மிக்க கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மேலும் பலவீனமடையும் நிலைமையும் தோன்றியது. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும்போதுதான், சரத் பொன்சேகா பொது எதிரணி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார். பொன்சேகாவின் தோல்வியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான ஆதரவுத் தளத்தையும் வெகுவாக பாதித்தது. ரணிலின் தலைமைத்துவ இயலுமை தொடர்பான சந்தேகங்கள் கட்சிக்குள் வலுவடைந்தன. ஐக்கிய தேசியக் கட்சி ஓர் உள்ளுடைவுக்கு (பிரிந்து செல்லாமல் உள்ளுக்குள் சண்டையிடும் நிலைமை) ஆட்பட்டது. இந்த நிலைமைகளானது, ஒட்டுமொத்தத்தில் அரசாங்கத்தை விழுத்தக்கூடிய இயலுமையுள்ள எதிரணி தெற்கில் இல்லையென்னும் நிலைமையை தோன்றுவித்தது. இது அரசாங்கத்தை பொறுத்தவரையில் பாரிய வெற்றியாகும். எதிர்க்கட்சியின் பலவீனமான நிலைமை இன்றுவரை தொடர்கிறது.

இத்தகையதொரு பின்புலத்தில்தான், சிராணி பண்டாரநாயக்கவின் விடயம் மேலெழுந்தது. மீண்டும் ஒன்றுதிரள்வதற்கான ஒரு வாய்ப்பாக சிராணியின் பிரச்சனையை எதிரணிகள் கையிலெடுத்தன. ஆனால் அரசாங்கம், பாராளுமன்றத்தை ஓர் ஆயுதமாக கைக்கொண்டு, அதனையும் வெற்றி கொண்டது. மேற்படி இரண்டு பிரச்சனைகளின் போதும் அரசாங்கத்திற்கு பக்கபலமாக நிற்போர் ஒரு கருத்துருவாக்கத்தை செய்தனர். அது சாதாரண சிங்கள மக்கள் மத்தியிலும் வலுவாக வேரூன்றியது. அதாவது, மேற்படி இருவருக்கும் பின்னாலும் ஒரு சர்வதேச சதிமுயற்சி ஒழிந்திருக்கிறது என்பதுதான் அது. ஜோர்ஜ் ஸோரசின் கருத்தான, முதலில் பதட்டத்தை உருவாக்கி, பின்னர் இடைவெளிகளில் புகுந்துகொள்ளும் திட்டமொன்றே இதன் பின்னிருப்பதாகவும் சிலர் அப்போது எழுதினர். இது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் மேலும் ஆதரவை பெறுவதற்கே வழிவகுத்தது. பொல்லு கொடுத்து அடிவாங்குவது என்றுரைப்பது போன்று, எதிரணியினரின் எதிர்ப்பால் அரசாங்கம் மேலும் பலமடைந்தது.

மேற்படி அவதானத்தின் ஊடாக, அரசாங்கம் எவ்வாறு உள்ளுக்குள் எழுந்த இரண்டு பிரதான பிரச்சனைகளை நுட்பமாக வெற்றிகொண்டது என்பதை அவதானித்தோம். இனி, வெளியில் அரசாங்கம் எதிர்கொண்ட, எதிர் கொண்டுவருகின்ற சவால்களை அவதானிப்போம். இதில் பிரதானமானது, அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் வெற்றிகொள்ளப்பட்ட இரண்டு பிரேரணைகளாகும். மேற்படி இரண்டு பிரேரணைகளும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு வலியுறுத்துகின்றதே தவிர, அதற்கு மேல் பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. அரசாங்கம் சர்வதேச விமர்சனங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் நிறைவேற்றிய ஒன்றையே, அமெரிக்கா தனது அழுத்தவகை அரசியலுக்கான துருப்பாக பயன்படுத்திக் கொண்டது. ஜெனிவா பிரேரணைகளைத் தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் நிலவரம் ஒரு சர்வதேச கவனிப்புக்குரிய விடயமாக மாறியது எனலாம்.

இதன் நீட்சியாக மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை நிலைமைகளை நேரடியாக அவதானிக்கும் பொருட்டு இலங்கைக்கு அழைக்கப்பட்டார். அவரது விஜயம் தமிழர்கள் மத்தியில் பெரிய விடயமாக நோக்கப்பட்டது. ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் இது பெரியதொரு விடயமாக நோக்கப்படவில்லை. மாறாக நவிப்பிள்ளையை திருமணம் செய்ய விருப்பம் என்னும் மேவின் சில்வாவின் அதிரடி அறிவிப்பால், ஐ.நாவின் அதிகாரம்மிக்க நபர்களில் ஒருவரான நவிப்பிள்ளையின் இலங்கை வருகையானது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவைக்குரிய விடயமாகியது. ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை வெளியிட்ட தமிழர் தரப்பினர், நவிப்பிள்ளை விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு கொலைகார அமைப்பு என்று வர்ணித்ததைத் தொடர்ந்து சோர்வுற்றனர். சிலர் அவரை நம்ப முடியாது என்று கூறுமளவிற்கும் நிலைமைகள் சென்றன. இறுதியாக கொமன்வெல்த் மாநாட்டை அடிப்படையாகக் கொண்டு மேலெழுந்த சர்ச்சைகளை குறிப்பிடலாம்.

பல்வேறு விமர்சனங்களையும், மனித உரிமை அமைப்புக்களினதும் எதிர்ப்புக்களையும் மீறி, மாநாடு குறிப்பிட்டவாறு நடைபெற்று முடிந்திருக்கிறது. மனித உரிமை தொடர்பான கரிசனைகளையும் தாண்டி, எவ்வாறு அரச நலன்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதற்கு மேற்படி கொமன்வெல்த் மாநாட்டுக்கான எதிர்ப்புக்களும், அவற்றை மீறி அது வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதையும் ஒருவர் எடுத்து நோக்கலாம். கொமன்வெல்த் மாநாடு இறுதியாக நடந்து முடிந்திருப்பதால் இதன்போது பிரித்தானிய பிரதமர் கமரோன் குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் புதிதாகவும், சுவாரசியமாகவும் இருக்கின்றன. இவை எல்லாவற்றினதும் விளைவாக, அடுத்த ஆண்டு மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அரசாங்கம் மேலும் சில நெருக்கடிகளை சந்திக்கக் கூடுமென்னும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதற்கு ஏற்றவகையில், அரசாங்கமும் பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்திற்கு கைகொடுக்கக் கூடிய நாடுகளான சீனா, ரஸ்யா, கியுபா, சவுதி அரேபியா ஆகியவை மீண்டும் உறுப்புரிமையை பெற்றிருக்கின்ற சூழலில், அவற்றின் ஊடாக மேலும் நட்புசக்திகளை வளைத்துப் போடும் சாணக்கிய விளையாட்டில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தக் கூடும்.

அரசாங்கம் தன்மீதான சர்வதேச பிடியை தளர்த்தும் வகையில் சாணக்கிய விளையாட்டில் குதித்திருக்கின்ற சூழலில், தமிழர் தரப்பின் சாணக்கியம் எவ்வாறிருக்கிறது? தமிழர் தரப்பிடம் சாணக்கிய அணுகுமுறை இருக்கிறதோ, இல்லையோ, ஆனால் உணர்ச்சிவசப்பட்ட அரசியல் செயல்களுக்கு பஞ்சமில்லை. உணர்ச்சி வசப்படுத்தும் அரசியல் சித்து விளையாட்டில், தமிழர்கள் மத்தியில் வர்க்க, சாதிய மற்றும் பால் வேறுபாடுகள் எதுவும் இல்லை. உணர்சிவசப்பட்ட ஒரு தமிழர் கூட்டம், நடைபெற்று முடிந்த பொதுநலவாய மாநாட்டு பரபரப்பை வெற்றிகரமாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. ஓர் அர்த்தமற்ற செயலான மேற்படி நடவடிக்கை, இறுதியில் ஓர் அநாகரிகமான நடவடிக்கையாகவும் அமைந்திருந்தது.

பிரித்தானிய பிரதமருடன் உரையாடிவிட்டு வெளியேறிய சம்பந்தனின் வாகனத்தை இடைமறித்து, அவரை வாகனத்திலிருந்து வெளியில் இழுக்க முற்பட்ட ஒரு கூட்டத்தினர், பின்னர் அவரை படுமோசமான வார்த்தைகளில் பேசுகின்றனர். ஒரு வயதுமுதிர்ந்த மனிதருக்கு கொடுக்க வேண்டிய ஆகக்குறைந்த மரியாதையைக் கூட அத்தரப்பினர் கருத்தில் கொண்டிருக்கவில்லை. இது தொடர்பான ஒளிநாடாவை பல்வேறு இணையத் தளங்கள் பதிவேற்றம் செய்து பெருமைப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த ஒளிநாடா, தமிழர் அரசியல் எவ்வாறு தரம்தாழ்ந்து கிடக்கின்றது என்பதற்கான ஒரு வலுவான சான்றாகும். அரசியல் ரீதியாக கூட்டமைப்பு தொடர்பிலும், அதன் தலைவர் சம்பந்தன் குறித்தும் விமர்சனங்களை முன்வைப்பது வேறு விடயம். அது தவறுமல்ல. ஆனால் அநாகரிகமான செயல்களால் எந்தவொரு நல்ல செய்தியையும் வெளிக்கொணர முடியாது.

இப்பத்தி கடந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற சில முக்கிய விடயங்களை மேலே விபரித்திருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம் - அது சரி - கடந்த நான்கு வருடங்களில், தமிழர் அரசியலில் என்னவகையான ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன? அல்லது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறு ஏதாவது நடந்திருக்கிறதா? இக் கேள்விக்கு நேரடியான பதில் - இல்லை என்பதுதான். ஆனால் நடைபெறுகின்ற விடயங்களில், தமிழர் பிரச்சனை ஒரு விடயமாக நோக்கப்படுகிறது. அது ஒன்றில்தான் தமிழர் தரப்பு மகிழ்சியடையலாம். அரசாங்கத்தின் மீதான அழுத்தம் என்பது, தமிழர் மீதான கரிசனையாக வெளிப்படுகிறது. ஆனால் எந்தவொரு சர்வதேச தரப்பும் தமிழர் பிரச்சனைக்காக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. இதில் இந்தியா ஒரு விதிவிலக்காக தெரிந்தாலும் கூட, இந்தியா அதன் நலன்களைப் புறம்தள்ளிவிட்டு தமிழர் பிரச்சனையை கையிலெடுக்க முடியாது. இதற்கு நல்ல உதாரணம், மன்மோகன் சிங் கொமன்வெல்த் மகாநாட்டை புறக்கணித்தமையாகும். ஆனால் அவர் நிகழ்வில் பங்குகொண்டு, யாழ்ப்பாணத்திற்கும் சென்றிருந்தால் அதன் அரசியல் பெறுமதி கனதியானதாக அமைந்திருக்கும். அத்தகையதொரு எதிர்பார்ப்பே, கூட்டமைப்பின் தலைமையிடமும் இருந்தது. ஆனால் காங்கிரசின் தேர்தல் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த முடிவை பிற்போட வேண்டிய நிலைமை மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்டது. அவர்களது நலன் என்று வரும்போது, தமிழர் பிரச்சனை இரண்டாம் பட்டசமாகிவிடும் என்பதற்கு மேற்படி சம்பவம் வெள்ளிடை மலையாகும்.

எனவே இந்த பின்னணியில் தமிழர் அரசியல் எதிர்காலம் என்பது ஒரு குழப்பகரமான விடயமாகவே இருக்கிறது. ஏனெனில் சர்வதேச சக்திகளின் மென்-வன் அழுத்தங்களிலேயே தமிழர் பிரச்சனை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஊசலாடும் ஒரு விடயத்திற்கான தலைமைப் பொறுப்பையே சம்பந்தன் ஏற்றிருக்கின்றார். அவரது செயலுக்கும், ராஜதந்திர அணுகுமுறைகளுக்கும் மிகவும் மட்டுப்பட்ட வாய்ப்புக்களே இருக்கின்றன. இதனை விளங்கிக் கொள்ளாமல் விமர்சனங்களை முன்வைப்பது ஒரு சரியான விமர்சன அணுகுமுறையாக இருக்க முடியாது. இன்றைய சூழலில், சம்பந்தனால் செய்ய முடியாத ஒன்றை வேறு எவராலும் செய்ய முடியாது என்பதே உண்மை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=64e615cd-c2dd-4dee-b6e7-83862ca5e40f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.