'இரான் போரை முடிக்க பரிசீலனை' - ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு பற்றி டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கவில்லை.
21 மார்ச் 2026, 07:18 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் உடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் மற்றொரு புறம், தரைப்படை வீரர்களை இறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இரானில் உள்ள பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் நாங்கள் மேற்கொண்டு வரும் எங்களது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். ஏனெனில் எங்களது இலக்குகளை அடைவதற்கு மிக நெருக்கமாக நாங்கள் இருக்கிறோம்," என்று போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அவர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். போர் தொடங்கிய நாள் முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப், "அதைக் (ஹோர்முஸ் நீரிணை) கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான பொறுப்பை அதனைப் பயன்படுத்தும் நாடுகளே ஏற்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
ஒரு மதிப்பீட்டின்படி, உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது.
"உதவி கேட்கப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான இந்த நாடுகளின் முயற்சிகளுக்கு நாங்கள் உதவுவோம்" என்று கூறிய டிரம்ப், "ஆனால் இரானிய அச்சுறுத்தல் நீக்கப்பட்ட பிறகு இது தேவையாக இருக்காது. முக்கியமாக, இது அந்த நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும்," என்றும் தெரிவித்தார்.
மேலும், இரானுக்கு எதிரான போரில் இதுவரை எட்டியுள்ள இலக்குகள் குறித்தும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இரானின் ஏவுகணைத் திறன் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் ராணுவத் தொழில் கட்டமைப்பு பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் இரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலையை நெருங்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளான இஸ்ரேல், சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகளுக்கு அமெரிக்கா மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறினார்.
டிரம்பின் செய்தி அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு பிடிக்காமல் போகலாம்
பட மூலாதாரம்,Trump/Truth Social
படக்குறிப்பு,இரானுக்கு எதிரான போரில் இதுவரை அடைந்துள்ள சாதனைகள் குறித்தும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி செய்தியாளர் அந்தோணி சுர்ச்சரின் கூற்றுப்படி, அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் பாம் பீச் நோக்கி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த செய்தியாளர்களுக்கு டிரம்ப்பின் சமீபத்திய 'ட்ரூத் சோஷியல்' பதிவின் அச்சுப்பிரதிகள் வழங்கப்பட்டன.
அதில் இரானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை "படிப்படியாகக் குறைத்துக்கொள்ள" அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தான் குறிப்பாக விளம்பரப்படுத்த விரும்பும் சமூக ஊடகச் செய்திகளுக்கு அதிபர் இதே முறையைத்தான் பயன்படுத்துகிறார்.
கடந்த அக்டோபர் மாதம், தென் கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்த போதும் அவர் இதே போல செய்திருந்தார்.
இரான் குறித்த இன்றைய செய்தி மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதில் இரானுடனான போரில் அமெரிக்காவின் ராணுவ நோக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் புளோரிடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், தனது வார்த்தைகளைத் ராஜ்ஜீய எச்சரிக்கையுடனேயே தேர்ந்தெடுத்துள்ளார் என்று தோன்றுகிறது.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா தலைமை தாங்காது என்ற செய்தி, அமெரிக்காவின் நட்பு நாடுகளிடையே வரவேற்பைப் பெறாமல் போகக்கூடும்.
ஹோர்முஸ் நீரிணை குறித்து டிரம்ப் கூறியது என்ன?
இந்த மோதல் முழுவதிலும் ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க அதிபரின் தொடர்ச்சியான கவனத்தைப் பெற்றுள்ளது.
கப்பல் போக்குவரத்திற்காக இதனை மீண்டும் திறக்க வலுவான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். நேட்டோ நட்பு நாடுகளிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 3 அன்று, இந்த முக்கியமான கடல்வழிப் பாதை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலுக்கும் "தீ வைப்போம்" என்று இரான் அச்சுறுத்திய போது, "தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லும்" என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
மார்ச் 10 அன்று, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் செல்வதைத் தடுக்க இரான் "ஏதேனும் செய்தால்", ஏற்கனவே தாக்கியதை விட இருபது மடங்கு பலமாக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.
இருப்பினும், இந்த குறுகிய கடல் பாதையைத் திறக்க நட்பு நாடுகளின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் கூறினார். மார்ச் 14 அன்று, "பல நாடுகள், குறிப்பாக இதனால் பாதிக்கப்படும் நாடுகள், தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்" என்றார்.
மார்ச் 18 அன்று, அமெரிக்கா இரானிய ஆட்சியை "அழித்துவிட்டால்" ஹோர்முஸ் நீரிணையின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பிய டிரம்ப் , "அதனைப் பயன்படுத்தும் நாடுகளே அதன் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று பரிந்துரைத்தார்.
இன்று, அவர் நேட்டோ நாடுகளை விமர்சித்துப் பேசுகையில், அந்த நாடுகள் "அதிகரித்து வரும் எண்ணெய் விலையைப் பற்றிப் புகார் கூறுகின்றன, ஆனால் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது போன்ற எளிமையான ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ முன்வருவதில்லை" என்று கூறினார்.
தரைப்படைகளை களமிறக்க ஆயத்தம்
பட மூலாதாரம்,Contributor/Getty Images
படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் மார்ச் 2 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இரானின் தலைநகரான தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட ஒரு மாபெரும் வெடிப்புக்குப் பிறகு, புகை மற்றும் தூசிக் குவியல் காணப்பட்டது.
இரானில் ராணுவ நடவடிக்கையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று டிரம்ப் கூறிவரும் நிலையில், பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் செய்தியின் படி, இரானில் தரைப்படை வீரர்களை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் விரிவான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இந்த ஆலோசனைகள் குறித்து அறிந்த பல அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனின் மூத்த அதிகாரிகள், இத்தகைய நடவடிக்கையைத் திட்டமிடுமாறு சிறப்பு வேண்டுகோள் விடுத்து வருவதாக அந்த செய்தி கூறுகிறது.
சிபிஎஸ் செய்தியின் படி, அமெரிக்கப் படைகள் இரானில் நிலைநிறுத்தப்பட்டால், இரானிய வீரர்களைச் சிறைபிடிக்கும் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் பேசுகையில், இரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை "படிப்படியாகக் குறைத்துக்கொள்வது" குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
இதற்கு முன்பு, தனக்கு போர்நிறுத்தத்தில் விருப்பமில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
தரைப்படை வீரர்களை "எங்கும்" அனுப்பும் திட்டம் தன்னிடம் இல்லை என்று அதிபர் டிரம்ப் முன்னதாகச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். மேலும் அவர், "நான் அப்படிச் செய்தாலும், அதை நிச்சயமாக உங்களிடம் சொல்லமாட்டேன்," என்றும் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை, படையினரை நிலைநிறுத்துவது தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை பதிலளிக்கவில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க மத்திய கட்டளை மையமும், சாத்தியமான படை நிலைநிறுத்த இடங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cg54661qeqpo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.