Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரதராஜன் மாஸ்டர் காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளியல் ஆசான் வரதராஜன் நினைவுக் குறிப்பு

குமாரவடிவேல் குருபரன்

11cb4631-c99f-4fb6-b31e-401e9aca2c041.jp

பொருளியல் ஆசான் திரு. சின்னத்துரை வரதராஜன் (1951-2014) அவர்கள் கடந்த 18 ஆகஸ்ட் 2014 அன்று காலமானார்.

பொருளியல் ஆசான் வரதராஜன் அவர்களிடத்து, 2002-2004 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த உயர்தர கலைத்துறை மாணவனாக இருந்தபோது, பொருளியல் கல்லூரி எனும் தனியார் கல்வி நிலையத்தில் நான் கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியது. க.பொ.த உயர்தர வகுப்பில் மட்டுமே தனியார் கல்வி நிலையத்தை நாடிய எனக்கு தனியார் கல்வி நிலையங்கள் மீது விமர்சனப் பார்வை ஒன்றுள்ளது. பாடசாலைகளை பரீட்சை எழுதும் மையங்களாக ட்யூட்டரிகள் மாற்றி விட்டன என்ற கவலை எனக்கு அப்போதும் இருந்தது, இப்போதும் உள்ளது. ஆனால் ட்யூட்டரிகள் சிறந்த ஆசான்களை ஒரு பாடசாலைக்குள் சிறைப்படுத்தாமல் பரந்துபட்ட மாணவர் சமூகத்திற்கும் அவர்களது சேவை கிடைக்கப்பெற உதவின, உதவுகின்றன என்பது உண்மையே. நான் க.பொ.த உயர்தரத்தில் கூட ஒழுங்காக தனியார் வகுப்பிற்கு சென்றது வரதராஜன் சேரிடம் மட்டும் தான். ஆசிரியரை கூடுதலாக நம்பிப் படித்த பாடமும் வரதராஜன் சேரின் பொருளியல் பாடம் மட்டும் தான்.

ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் வரதராஜன் சேர். என்றுமே மடிப்புக் கலையாத அரைக்கைச் சட்டையும் (நீள் கைச்சட்டை என்றால் மடித்து விட்டிருப்பார்) நீள் காற்சட்டையும்தான் போட்டிருப்பார். இரண்டுக்கும் இடையே ஒரு கலர் கொம்பினேஷன் எப்பொழுதும் இருக்கும். சப்பாத்து தான் எப்போதும் காலணி. சற்றே உயரமான ஒரு நீண்ட மேடையில் நின்று தான் படிப்பிப்பார். மேடைக்கு குறுக்கும் நெடுக்கும் நடந்து திரிந்து வகுப்பெடுப்பார். ஏதாவதொரு விடயத்தை வலியுறுத்திச் சொல்வதற்கு கையில் உள்ள வெண்கட்டியை பலகையில் தட்டி ஒலியெழுப்பிச் சொல்லுவார். முதல் விளங்கப்படுத்துவார். அதற்குப் பிறகு நோட்ஸ் டிக்டேட் பண்ணுவார். ஒரு போதும் கையில் எந்தக் குறிப்பையும் அவர் தன்னிடத்து வைத்திருந்து நான் கண்டதில்லை. ஏறத்தாழ 40 வருடங்கள் படிப்பித்திருப்பார் என்று நினைக்கின்றேன். ஒரே விஷயத்தை சலிப்பிலாமல் ஆண்டாண்டு காலம், ஒரே நாளில் பல்வேறு தடவைகள் துடிப்போடு அவர் படிப்பித்து வந்திருக்கிறார் (சம காலத்தில் பல தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்து வந்தார்) என்பது என்னைப் போன்ற இளம் ஆசிரியர்களுக்கு ஆச்சரியமானது. ஒரு தொழில்நுட்ப அறிவு சார்ந்த பாடத்தை இலகுவாகப் படிப்பிப்பது எவ்வாறு, எப்படி என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. 200க்கும் மேற்பட்ட மாணவர்களது உள்ளீர்க்கும் கற்றல் பல்வகைத்தன்மையை புரிந்து கொண்டு, அனைவரும் சலனமில்லாமல் ஒரு மணித்தியாலம் அவர் சொல்வதைக் கேட்கக்கூடிய வகையில் படிப்பிப்பார்.

நாங்கள் சேரிடம் படித்த காலப் பகுதி யுத்த நிறுத்த காலம். அரசியல் வேலைகளுக்காக மீள விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் வந்திருந்த காலப்பகுதி. வரதராஜன் சேரின் நேரத்தில் பரப்புரைகளை அரசியற்துறை சார்ந்தோர் அவரின் அனுமதியோடு நடத்தியதுண்டு. வரதராஜன் சேரும் வகுப்பில் அரசியல் கதைப்பார். 2004 தேர்தல் காலப்பகுதி, ஆனந்த சங்கரி கூட்டமைப்பை விட்டு நீக்கப்பட்ட விடயங்கள் அவர் வகுப்பில் கதைத்தமை ஞாபகத்தில் உள்ளது. தான் எடுக்கும் நிலைப்பாடு தொடர்பில் அதற்கென்றொரு internal logic ஒன்றை அவர் வைத்திருப்பார். அது தொடர்பில் விவாதிப்பதும் அவருக்கு விருப்பமான செயற்பாடாக இருந்தது. யுத்த நிறுத்த காலப்பகுதியில் வன்னிக்குச் சென்று அவர் வகுப்புக்கள் எடுத்ததும் உண்டு. அவரது அரசியல் மற்றும் ஈடுபாடு காரணமாக அவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும் அனுபவித்திருந்தார்.

வரதராஜன் சேர் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் பட்டதாரி. வங்கியியல் அவரது சிறப்புத் தெரிவு. இரண்டாம் வகுப்பு மேல் பிரிவில் சித்தி பெற்றிருந்தார். தற்போதைய யாழ் பல்கலைக்கழகப் பீடாதிபதியும் பொருளியல் பேராசிரியருமாகிய பேரரசிரியர். வி. பி. சிவநாதன் அவர்களும் வரதராஜன் சேரும் சமகாலத்தவர்கள். வரதராஜன் சேர் பேராதனையில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். பேராசிரியர் சிவநாதன் சமகாலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். விரிவுரையாளராக இணைந்த அதே காலப்பகுதியில் வார இறுதி நாட்களில் யாழ்ப்பாணம் வந்து தனியார் கல்வி நிறுவனங்களில் பொருளியல் கற்பிக்கத் தொடங்கி இருந்தார். இந்த ஓட்டத்தில் அவர் இறுதியில் தனியார் கல்விச் சுழலுக்குள் முழுமையாகத் தன்னை உள்வாங்கிக் கொண்டார். பல தலைமுறை க.பொ.த உயர்தர பொருளியல் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆனது. பல்கலைக்கழக புலமை சூழலுக்கு அது என்னைப் பொறுத்த வரையில் ஒரு பேரிழப்பு ஆயிற்று.

பின்னர் 90களின் மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் இணைந்து கொள்ள முயற்சி செய்தார். எங்கள துரதிட்டம் அது கைக்கூடவில்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் பற்றி பொருண்மியப் பார்வையில் முது தத்துவமாணி ஒன்றை யாழ் பல்கலைக்கழகத்தில் செய்வதற்கு பதிவு செய்தார் என நான் அறிகிறேன். ஆனால் அவரது மிகவும் வேகமான ஆசிரியப் பணிக்கிடையில் செய்து முடிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆயினும் இவ்விடயத்தை தனது ஆய்வுக் கரிசனையில்/ செயற்பாட்டுவாதத்தில் அவர் தொடர்ந்து வைத்திருந்தார் என்று அறியக் கிடைக்கிறது. தமிழ்நெட்டில் மார்ச் 2010 தேர்தல் காலப் பகுதியில் அவரது ஆய்வு தொடர்பான ஓர் செய்தி வெளியாகி இருந்தது. அது அவரது ஆய்வின் பரிமாணத்தை அறிய உதவும். (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31436)

தனது மகன் பார்த்தீபனால் வெளியிடப்பட்டு வரும் 'கலிங்கம்' எனும் இதழில் இவ்விடயம் தொடர்பில் ஒரு தொடர் கட்டுரையும் எழுதி வந்தார். அவை சில இணையத்தளங்களிலும் பிரசுரமானது. பெப்ரவரி 2014இல் அவரை சந்தித்த போது இவ்விடயம் தொடர்பில் முறையான ஆய்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை வகுத்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பேசினோம். அது இனி அவரூடாக கை கூடாது என்பது கவலையளிக்கின்றது. அவர் எழுதிய விடயங்களை தொகுத்து வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

வரதராஜன் சேர் பிரதிநிதித்துவ அரசியலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக 2010 பாராளுமன்றத் தேர்தலில் பிரவேசித்தார். பிரதான அரசியல் நீரோட்டத்தில் இல்லாத ஒரு தமிழ் தேசியவாதியை, மக்களால் மதிக்கப்பட்ட, நன்கு அறிமுகமான ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரை த.தே.ம.மு அறிமுகப்படுத்தியிருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போருக்குப் பிந்தைய போக்கு தொடர்பில் வரதராஜன் சேருக்கு இருந்த சலிப்பு, அவரை த.தே.ம.முவில் போட்டியிடத் தூண்டியிருக்கலாம். த.தே.ம.மு ஒரு ஆசனத்தையேனும் பெறும், அந்த ஆசனம் வரதராஜன் சேருக்கே கிடைக்கும் என்று அவருக்காக தேர்தல் பணியாற்றிய அவரது மாணவர்கள் நம்பினார்கள். 'ஒற்றுமை' என்ற ஒற்றைத் தாரக மந்திரம் தேர்தலை வழிநடத்தியதால் அந்த நம்பிக்கை கை கூடவில்லை. மனிதர்கள், அவர் தம் திறமைகள், கொள்கைகள் என்பதற்கப்பால் கூட்டமைப்பு என்ற பெயர்ப் பலகை ஒற்றுமை மக்களுக்கு முக்கியமாக இருந்தது.

11cb4631-c99f-4fb6-b31e-401e9aca2c044.jp

வரதராஜன் சேர் தேர்தல் தோல்வியின் பின்னரும் த.தே.ம.முவில் செயற்பட்டார் - அதன் தலைவராக 2012 வரை இருந்தார். ஆனால் அவர் பங்களிப்பு குறைவடைந்தது. 2013இல் மாகாண சபைத் தேர்தல் காலப் பகுதியில் கட்சியை விட்டு வெளியேறினார். த.தே.ம.மு தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்கள் மாகாண சபையை நிராகரித்ததால் அதில் போட்டியிடவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். மாகாண சபை முறைமையை தான் நிராகரித்தாலும் அது தமிழர் வசம் இருக்க வேண்டும் என்று வரதராஜன் சேர் நினைத்தார். அதிலிருந்து கொண்டு கூடுதலான அதிகாரம் கேட்டு முன்நகரலாம் (incremental approach) என்று அவர் எண்ணியிருந்தார். (அப்படியாக படிப்படியாக அதிகாரம் பெறும் அணுகுமுறை இலங்கை அரசியலமைப்பிற்குள் சாத்தியமில்லை என்பது எனது நிலைப்பாடு). த.தே.கூவின் மாகாண சபை வேட்பாளர்களுக்குள் பொருத்தமான வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று வரதராஜன் சேர் நினைத்தார். வெளிப்படையாக (தற்போதைய வடக்கு மாகாண அமைச்சர்) ஐங்கரநேசன் அவர்களை ஆதரித்தார். மேலும் புளொட் தலைவர் சித்தார்த்தனை ஆதரித்து தி. பரந்தாமன் (வழுதி) என்பவரால் கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் அவரை ஆதரித்துப் பேசினார்.

வரதராஜன் சேரின் வாழ்வையும் சமூக பங்களிப்பையும் நினைவுகூறும் பொழுது - இன்றைய எமது தமிழ் சமூகத்தின் தேவையோடு அதை சேர்த்து யோசிக்கும் போது - நாம் செய்யவேண்டிய பலதை இன்றும் செய்யாமல் அதைப் பற்றி சிந்திக்காமல் இருகின்றோம் என்ற கவலை எழுகின்றது. இதில் ஒன்று தனிப்பட்ட ஆளுமைகளைச் சுற்றியே எமது அறிவுத் தொழிற்பாடு நடைபெற்று வந்திருக்கிறது என்பது. அறிவுத் தொழிற்பாடு முறையாகவும் ஒழுங்காகவும் நடைபெறவும், அத்தகைய அறிவுத் தொழிற்பாடு, செயற்பாட்டை (activism) வழிநடத்தவும் நாம் தனி நபர்களையும் கடந்து நிலைத்து நிற்கக் கூடிய நிறுவனங்களை உருவாக்க தவறிவிட்டோம் என்றே நினைக்கின்றேன்.

அண்மையில் காஸாவில் இடம்பெற்ற துயரத்தின் போது எத்தனை பாலஸ்தீன நிறுவனங்கள் (அது மனித உரிமை அமையங்களாக இருக்கலாம், தொண்டு நிறுவனங்களாக இருக்கலாம், சமூக வலைத்தளங்களாக இருக்கலாம்) காஸாவில் நடந்த பேரவலத்தை வெளிக்கொணர, ஆவணப்படுத்த செயற்பட்டார்கள் என்று பார்க்கின்ற பொழுது அப்படியான நிறுவனங்கள் எம்மத்தியில் இன்று குறைவு அல்லது இல்லை என்பது கவலையளிக்கின்றது. விடுதலைப் புலிகளின் நிழல் அரசில் இப்படியான பல நிறுவனங்கள் இருந்தன. (உதாரணமாக பொருண்மியம் மற்றும் NESOHR ஐ குறிப்பிடலாம்). ஆனால் அவை அவர்களின் அழிவோடு அழிந்து போயின. இன்று நாம் அத்தகைய சமூக, மக்கள் நிறுவனங்களை உருவாக்கி செயற்படுத்த வேண்டிய காலப் பகுதியில் இருக்கின்றோம். வரதராஜன் சேர் போன்றோரிற்கு அத்தகைய நிறுவனங்களை உருவாக்கக் கூடிய வல்லமை இருந்தது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இப்படியான நிறுவனங்கள் இருந்திருந்தால் வரதராஜன் சேர் போன்றோரின் பங்களிப்புகளை இன்னும் நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்திருக்கவும் முடியும்.

மாமனிதர் தராகி சிவராம் 'படித்த ஆக்களுக்கும்', பல்கலைக்கழகம் சார் புலமையாளர்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம், முன்னையவர்கள் தமது கைகளை அசுத்தம் செய்து ஒரு காரியத்தில் இறங்கக் கூடியவர்கள் - தமது கழுத்தை வெளித்தள்ளி ஒரு பொது விஷயத்தில் ஈடுபடக் கூடியவர்கள் - என்பார். பின்னயவர்களுக்கு இது பொதுவில் இயலாது என்று கூறுவார் (பார்க்க: Mark P Whitaker, "Learning Politics From Sivaram: Life and Death of a revolutionary Tamil Journalist in Sri Lanka", (Pluto Press, 2007) பக்கம் 26), எமது இன்றைய தேவை பல்கலைக்கழகம் சார் புலமையாளர்கள் தமது கரங்களை அசுத்தம் செய்யத் தயாராக வேண்டும் என்பது மட்டுமல்ல. (பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அசுத்தத்தையும் நீக்க அந்தக் கரங்கள் அசுத்தப்பட தயாராக வேண்டும் என்பது வேற கதை). சிவராம் சொல்லும் (வரதாராஜன் சேர் போன்ற) 'படிச்ச ஆக்கள்' பிரதிநித்துவ அரசியலுக்கப்பால் இயங்கக்கூடிய நிறுவனங்களை, சமூக வெளிகளை உருவாக்குவதும் அதன் வழி பரந்துபட்ட மக்கள் பங்குபற்றுதல்களுடனான ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டி எழுப்புவதும் இன்றைய காலத்தின் முக்கிய தேவை. இன்று தமிழ் மக்கள் இருப்பது ஒரு நிலை மாறு கட்டம் (transitionary phase). அந்த நிலை மாறு காலத்தில் வெளி நோக்கிய செயற்பாடுகளை விட உள்நோக்கிய உள்ளடக்க விருத்தி (internal capacity building) செயற்பாடுகள் மிக முக்கியமானவை. வரதராஜன் சேர் போன்றவர்களது ஞாபகமாக இப்படியான செயற்பாடுகளே அவருக்கு நாம் செய்யும் மிகச் சிறந்த நன்றிக் கடனாக இருக்கும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=11cb4631-c99f-4fb6-b31e-401e9aca2c04

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.