Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமஃபோன் - உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை

Featured Replies

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்!

 

nagerkovilexp_2107237h.jpg

 

கம்பார்ட்மென்ட் முழுக்க நிலக்கடலைத் தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்குப் பீலியும் தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பியிருப்பார்.

சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா ரயிகளிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று பொருந்தினால் போதும் என்பது பயணிப்பவர்களின் பொது அபிப்பிராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்ற தில்லை. ‘‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயிக் கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடுக்க...’’ (நான் சிலமுறை ‘பிரதிவாதி’ சீட்டில் இருக்கும் எண்ணுக்கான பெர்த்தில் போயாவது படுத்துவிடலாமென முயற்சித்தால், அங்கனக்குள்ளயும் ஒரு அண்ணாச்சி சாமி யாடிக்கொண்டிருப்பார்.)

சாப்பாட்டுப் பொட்டலத்தை அவிழ்த்துவிட்டு, அநியாய விலை கொடுத்து வாங்கின அக்குவா பீனாவை ஓப்பன் பண்ணிய அடுத்த நிமிடமே ‘‘தண்ணீ கொஞ்சம் கிடைக்குமா தம்பீ...’’ என சர்வ நிச்சயமாக ஒருவர் கேட்பார். வாங்கி மடக்மடக்கெனக் குடித்துவிட்டு, மிச்ச தண்ணீரில் கை கழுவி, வாயும் கொப்பளித்துவிட்டுக் கடமை உணர்ச்சியோடு காலி பாட்டிலைத் திரும்பத் தருவார். ‘‘எந்த ஊர் தண்ணீடே... எழவு சப்புன்னுல்லா இருக்கு’’ எனும் ஒருவரி விமர்சனம் பதிலீடாகக் கிடைக்கலாம்.

உரத்த நிந்தனை!

‘‘விஎஸ்கே செட்டுல டின்னு வருதுடே. கச்சாத்துல எத்தனன்னு பாத்து எண்ணி எறக்கி வைய்யி. லோடு மேன் நான் இல்லண்ணா டின்னுக்கு ஆறு ரூவா கேப்பான். அவனுக்கு 5 ரூவாய்க்கி மேல சல்லி பைசா கொடுக்காத. கடய எடுத்து வெக்கயில வெங்காய மூடய மறந்து தொலச்சிடாதல. தக்காளி கெடந்து நாறுது. சவம்! மீனாட்சி ஓட்டல்காரன் கேட்டான்னா ரெண்டு, மூணு கொறச்சித் தள்ளிடு... ஏய்... அண்ணாச்சி ஊர்ல இல்லன்னு சாயங்காலமே கடய சாத்திராதீங்கலே... சாவிய பத்திரமா அக்காட்ட கொடுத்து வீட்டுக்குப் போங்க...கம்பெனிக்காரன் எவன் வந்தாலும் அண்ணாச்சி ஊர்ல இல்ல… பெறவு வான்னு சொல்லு...’’ என ஒவ்வொரு பெட்டிக்கும் உச்சஸ்தாயியில் ஏதாவது ஒரு அண்ணாச்சி இருந்த இடத்திலிருந்தபடியே தன் அப்பரஸெண்டுகளிடம் மன்றாடிக்கொண்டிருப்பார். ஆனால், செல்போன் என்பது ஒலிபெருக்கி அல்ல. அதில் மெதுவாகப் பேசினாலே, எதிர்முனைக்குக் கேட்கும் என்பதை ஏன் இதுவரை யாரும் அவருக்குச் சொல்லிக்கொடுக்க முயலவில்லை என்பதுதான் எனக்குப் புரியாத புதிர்.

கழிப்பறைக்கு வெளியே இருந்து திறப்பதற்கான ஒரு கொண்டி தவிர, உள்ளேயிருப்பவர்கள் பூட்டிக்கொள்ள ஒரு கொண்டி இருப்பது முட்டாள்தனமன்றி வேறென்ன?! முன் யோசனை இன்றிக் கதவைத் திறந்துவிட்டால், இடுப்பு வரை ஏற்றிவிட்ட வேட்டியும், தோளில் கோடு போட்ட அன்-டிராயர் சகிதமாக அண்ணாச்சி ‘குத்தவெச்சாசனம்’ செய்துகொண்டிருப்பார். வெளியே வந்ததும் ‘‘கொல்லக்கி இருக்குதவன எட்டிப்பாக்கியே அறிவு இருக்காலே... செத்த மூதி...’’ என்பார்.

ரயில் சிநேகிதர்கள்

லேசாகப் பேச்சுக்கொடுப்பவர்கள் பெருசாக ஆப்படிப்பார்கள். ‘‘தம்பி! எந்த ஊருக்குப் போறீய’’ எனத் துவங்குவார்கள். ‘‘கோயம்புத்தூரா... எம்மவன் வேல்முருகன் அங்கனதான கட வெச்சிருக் கான். நெல்லை ஸ்டோர்ஸுன்னு. தெரியுமா அவன?!’’ஆகச் சிக்கலான கேள்வி. கோவையில் தடுக்கிவிழுந்தால், ஒரு நெல்லை ஸ்டோர்ஸ்தான். எந்த ஏரியாவுல என மையமாகக் கேட்டு வைப்பேன். மேட்டுப்பாளையம் ரோட்டுல எனப் பதில் வரும். மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் ரோடுதான்... எந்த ஏரியான்னு சொல்லுங்க எனச் சொன்னால் ஆச்சு. ‘‘மேட்டுப்பாளையம் ரோடு நெல்லை ஸ்டோருன்னு கேட்டா, தொட்டில்ல கெடக்க புள்ளகூடச் சொல்லுமே... மெயினான எடத்துல இருக்க அவன் கடய தெரியல்லங்க...’’ கோவை வரும்வரை நம்மை எரிச்சலாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஓப்பன் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரிசர்வில் ஏறிப் படுத்துக்கொள்ளுபவர்கள். டி.டி.ஆரையும், பயணிகளையும் படுத்தும்பாடு சொல்லில் ஒளிரும் சுடர். ஒருமுறை முழங்கை வரைக்குமான தொளதொள சட்டையும், கதர் வேட்டியும் அணிந்த பெரியவர் ஒருவர் ஓப்பன் டிக்கெட்டோடு அப்பர் பெர்த்தில் படுத்துக்கொண்டார். தன்னுடைய ரிசர்வ்டு டிக்கெட்டைக் காட்டி அவரோடு மன்றாடிக்கொண்டிருந்தார் ஒருவர். ‘‘வெள்ளக்காரங்கிட்ட சண்டயப் போட்டு வண்டிய வாங்கி வுட்டவம்ல நாங்கள்லாம்... செம்பகராமம்பிள்ளன்னு ஆராமொழில வந்து கேட்டுப்பாருல... உன்னய மாதி காசு கொடுத்துதாம்ல நானும் ஏறியிருக்கன். இவ்வளவு சீட்டு சும்மா கெடக்குதுல்லா... அங்கன போயி கட்டய சாயில...’’

அப்பர் பெர்த் என்றால் காற்றாடியைப் போட்டதும் சாணி மணம் கமழும். காரணம், வேறொன்றும் இல்லை. தங்களது பாதரட்சைகளின் பாதுகாப்புக் கருதி அவற்றை ஃபேனின் மேல் கச்சிதமாகச் சொருகி வைத்திருப்பார்கள்.

ஆனபோதும்… கோவையிலிருந்து கிளம்பும்போதும் சரி, திருநெல்வேலியிலிருந்து திரும்பும்போதும் சரி ‘‘ஏல, லேய், ஏய் மக்கா, மக்களே, தம்பீ, அண்ணாச்சி’’என ஏதோவொரு பதத்தில் விளித்து... ஏழெட்டுக் கேள்விகளில் நமக்கும் அவருக்குமான பொதுமனிதர் ஒருவரைக் கண்டுபிடித்து,‘‘அவாள் நல்லாருக்காளா... தங்கமான மனியனாச்சே’’என விசாரித்து, ஊர்க் கதை, குடும்பக் கதைகளைக் கேட்டறிந்து...பனங்கிழங்கையோ, முந்திரிக்கொத்தையோ தின்னக் கொடுத்து, ‘‘தாண்டவன்காடு வந்தீங்கன்னா தவசி நாடார் வீடு எதுன்னு கேட்டு வாங்க...தசரா ஜேஜேன்னு இருக்கும்’’ என அழைக்கவும் தவறாமல், இறங்கும்போது தோளைத் தட்டி ‘‘தம்பீ...அப்பா, அம்மாக்கள வயசான காலத்துல வச்சி காப்பாத்துங்கடே... அவாள் மனசு குளிர்ந்தாதான் வாழ்க்கைல முன்னுக்கு வர முடியும்’’எனப் புத்திமதி சொல்லி விடைபெறும் மனிதர்கள் இந்த ரயிலெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு சாயலில், சிறு அசைவில், எச்சில் தெறிக்கச் சிரிக்கும் சிரிப்பில் பெரியப்பாவை, சின்னத் தாத்தாவை, கடையநல்லூர் மாமாவை, அப்பாவை, பெரிய அத்தானை, எட்டாம் வகுப்பெடுத்த பால்துரை சாரை, பருவம் பார்க்கும் ஏசுவடியானை நினைவுபடுத்துபவர்களாக இருந்துவிடுவது என்றும் பிடிபடாத ஆச்சர்யம்.

- செல்வேந்திரன், 

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/article6409844.ece

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை

 

ulagamsuttrumvaliv_2107235h.jpg

 

தூத்துக்குடியில் அப்போதெல்லாம் மொத்தமே நான்கு திரையரங்குகள்தான். இருந்ததிலேயே சார்லஸ் திரையரங்கம்தான் பெரியது. என் பால்யகாலக் கனவுகளின் சமுத்திரம் அது. மறக்கவே முடியாத சம்பவங்களுடன், தமிழ்நாட்டைப் புரட்டிப்போட்ட அரசியல் நிகழ்வுகளையும் சுமந்துநின்ற கட்டிடம் அது.

1960-ல் கட்டப்பட்ட அந்த அரங்கின் கட்டிட அமைப்பு, அழகியலின் உச்சம் என்று சொல்லலாம். விஸ்தாரமான நிலப்பரப்பில், பச்சைப் புல்வெளிகள், நீரூற்று என்று கம்பீரமான புறத்தோற்றம். அகண்ட திரையும், விசாலமான பால்கனியும், வட்டவடிவமான பக்கவாட்டுப் பால்கனிகளும், தூண்களே இல்லாததால் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட திரையும் பிரமிப்பூட்டும். டிக்கெட், பெஞ்ச் டிக்கெட், பால்கனி என்ற பலதரப்பட்ட பார்வையாளர்களின் வகுப்புகள், Dukes, Viscount, Marquess and King's Circle என்று பெயரிடப்பட்டிருந்தன. 1,000-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவுக்கு விசாலமான திரையரங்கம் அது.

சாய்வான முன்னமைப்பில் வளைந்து நெளிந்து போகும் படிக்கட்டில் மேலேறி னால், முதல் மாடி. அங்கிருந்து நோக்கினால் வெளியே வீ.இ. சாலை தெரியும். மதுரை தங்கம் திரையரங்கத்துக்கு அடுத்து, இந்தி யாவிலேயே மிகப் பெரிய திரையரங்கம் என்று பெயர்பெற்றிருந்தது.

அந்த சார்லஸ் திரையரங்கில்தான் எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் 1973 மே 11-ல் திரையிடப்படவிருந்தது. நீண்ட நாட்களாகவே கடனில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட அந்த அரங்கின் உரிமையாளருக்கு, முன்பணம் எதுவும் வாங்காமல் அந்தப் படத்தை எம்ஜிஆர் கொடுத்ததாகத் தகவல் உண்டு.

அப்போது, எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த நேரம். தமிழ்நாடு எங்கும் அவரது பழைய படங்களைக்கூட மீண்டும் திரையிட முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் இருந்த காலம். அறிவிக்கப்பட்ட தேதியில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ சார்லஸ் திரையரங்கில் திரை யிடப்படவில்லை. காரணம், உள்ளூர் அரசியல்வாதிகளின் மிரட்டல், உருட்டல் என்று சொல்லப்பட்டது.

அலைஅலையாய்த் திரண்ட எம்ஜிஆர் ரசிகர்கள், பக்கத்து ஊரான திருநெல்வேலிக்கும் வசதியான ரசிகர்கள் 3 மணி நேரம் பயணித்து மதுரைக்கும் சென்று படம் பார்த்தார்கள். இன்னும், செல்வச் செழிப்புள்ள ரசிகர்கள், சென்னைக்குச் சென்று தேவிபாரடைஸில் பார்த்ததாகச் சொல்வார்கள். படம் வெளியான அன்று சென்னை அண்ணாசாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்குக் கூட்டம் இருந்ததாம்.

சுவரொட்டி விளம்பரம் தடைசெய்யப் பட்டதால், நாளேடுகளில் ஒரு பக்க விளம்பரம் மட்டுமே வந்திருந்தது. கறுப்புக் கண்ணாடியும் கோட்டும் சூட்டும் சூட்கேஸும் கொண்ட எம்ஜிஆர் என்ற ஒற்றை மனிதனின் கம்பீரமான உருவம் மட்டுமே அந்த விளம்பரத்தில் இருந்தது.

இணையம் இல்லை; ஃபேஸ்புக் இல்லை; செல்போன் இல்லை. ஏன், சுவரொட்டிகள்கூட இல்லை. ஆனால், அரங்குக்கு வெளியே கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூடிநின்ற அதிசயம் இன்று சாத்தியமா தெரியவில்லை.

சார்லஸ் திரையரங்கில், படம் மூன்று நாள் கழித்துத் திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதைத் தடுக்க, அரை கிலோமீட்டர் அகலம் கொண்ட வாயில் வெளியில் சிலர் காத்திருந்தனர்.

கவுன்ட்டரில் டிக்கெட் கொடுக்க ஆரம்பித் தாகிவிட்டது. நீ....ண்ட வரிசைகள். வரிசை களைத் தாண்டி, தலைகளில் நடக்கும் சாமர்த்தியமான கால்கள்; சத்தங்கள்; சர்ச்சைகள்; ஆரவாரங்கள்; ஆர்ப்பாட்டங்கள்!

11 வயது நிரம்பிய நானும், அண்ணன் மணியும், மச்சினன் பிரபாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, மூச்சு வாங்க, அதிகாலையில் இருந்தே காத்துக்கிடந்த மயக்கம் தலையைச் சுற்ற, போராடி கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் எடுத்தபின் வந்த வெற்றிக்களிப்பு மறக்க முடியாதது.

“ஏலே! படம் போட்டாம்லே; படம் போட்டாம்லே'' - திடீரென்று பதற்றமான குரல்கள் சுற்றிலும் அதிர்வலைகளை உருவாக்கின. வாசலில் நின்றிருந்த ‘தடுக்கும் படையாளர்கள்' அதிர்ச்சி ஆனார்கள். அரங்கத்தின் உள்ளிருந்து சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் பாட்டு வரிகள் காற்றின்மீது போர் தொடுத்து அதிரடியாய் வெளிவந்தது: “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்''.

எப்படி ரீல் பெட்டி உள்ளே போனது என்ற ரகசியம் சற்று நேரத்தில் தெரியவந்தது. சற்றுமுன் உள்ளே போன பஸ்ஸின் இன்ஜின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தது ரீல் பெட்டி.

“அத்தான்! படம் போட்டான்.... படம் போட்டான்'' என்ற பதற்றத்துடன், அண்ணன் வாங்கிக்கொடுத்த கண்ணாடி டீ டம்ளரைக் கீழே தவற விட்டான் மச்சினன் பிரபா. மணி அண்ணன் மடமடவென்று கூட்டத்தின் உள்நுழைந்து இன்னொரு டீயும் சமோசாவும் வாங்கிக்கொடுக்க, அவற்றைக் காய்ந்த வயிற்றுக்குள் அனுப்பி விட்டு, மூவரும் திமுதிமு என்று ஓடிய கூட்டத்துக்குள் நுழைந்து அரங்கத்தில் ஒருவாறு இடம்பிடித்தோம்.

மாலைகளும் பூக்களும் கற்பூர ஆரத்திகளும் ரசிகர்களின் வெறிபிடித்த ஆரவாரங்களும் விஞ்ஞானி எம்ஜிஆரின் மின்னல் ஆராய்ச்சிக் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தன.

படம் முடிந்து பசியும், களைப்பும் பின்னியெடுக்க, கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வருகையில், அடுத்த காட்சிக்குத் திரண்டிருந்த கூட்டம், “டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா'' என்ற கவலையோடு நின்றதை, இறுமாப்பும் கர்வமும் கலந்த ஏளனப் பார்வையோடு பார்த்தது இன்னும் ஞாபகக் குகையில் ஒளிந்திருக்கிறது.

இன்று அந்த சார்லஸ் திரையரங்கம் இல்லை. அந்த இடத்தில் ஷாப்பிங் மால் வந்துவிட்டது. பழமையைப் பின்தள்ளிவிட்டு, புதுமை அரசாள்கிறது.

அன்று சார்லஸ் திரையரங்கில், ‘தங்கத் தோணியிலே…’ பாட்டுக்கு, திரைமுன் இருந்த பிரத்தியேகமான வட்டவடிவ, அகலத் திண்டில் பூக்களைத் தூவி, சட்டை, லுங்கியோடு பாடி ஆடிய இளைஞர்கள், இன்று அந்த நினைவுகளை அசைபோட்டபடி சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கலாம். சிலருக்கு அந்த நினைவே இல்லாமலும் இருக்கலாம். காலமும் ஆடுமல்லவா நடனம்!

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article6409842.ece?widget-art=four-rel

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.