Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்துக்கள் பத்து

Featured Replies

  • தொடங்கியவர்

கார்ல் பென்ஸ் 10

carl_2633227f.jpg
 

கார் கண்டுபிடிப்பாளர், இயந்திரவியலாளர்

ஜெர்மனியை சேர்ந்த மோட்டார் இயந்திரவியலாளரும், முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனத்தை (கார்) தயாரித்தவருமான கார்ல் பென்ஸ் (Carl Benz) பிறந்த தினம் இன்று (நவம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஜெர்மனியின் மூல்பர்க் நகரில் (1844) பிறந்தார். இன்ஜின் டிரை வரான தந்தை, இவருக்கு 2 வயது இருக்கும்போது இறந்துவிட்டார். கடும் இன்னல்களுக்கு நடுவே, இவரை நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார் தாய். பொறியியலில் பட்டம் பெற்றார்.

# பல நிறுவனங்களில் வேலை செய்தார். மிதிவண்டி, குதிரை வண்டி போல அல்லாமல் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடையறாது சிந்தித்தார். கற்பனையில் சுழன்றதை கணக்கற்ற வரைபடங்களாக தீட்டினார்.

# நண்பருடன் சேர்ந்து பட்டறை தொடங்கினார். இயந்திரங்களின் சுழற்சி நுணுக்கங்களை அறிந்துகொண்டு, நான்குசக்கர வண்டியைத் தயாரித்தார். அது நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். கை சுழற்சியால் சிறிது தூரம் அது தானாகவே ஓடும்படி செய்தார். அகஸ்ட் ரைட்டருடன் இணைந்து இரும்பாலை, இயந்திரவியல் பட்டறையை உருவாக்கினார்.

# இவரது மனைவி பெர்த்தா ரிங்கரும் இயந்திரவியலில் ஆர்வம் கொண்டவர். இருவரும் இரவு பகலாக உழைத்து பல இன்ஜின்களை வடிவமைத்தனர். ஸ்பார்க் பிளக், கார்பரேட்டர், கிளச், கியர் ஷாப்ட் உள்ளிட்டவற்றை உருவாக்கி காப்புரிமை பெற்றனர்.

# 2-ஸ்ட்ரோக் இன்ஜினை வடிவமைத்து 1879-ல் காப்புரிமை பெற்றனர். தொலைதூரம் பயணம் செய்ய இந்த இன்ஜின் சரிப்பட்டு வரவில்லை. இவரது மனைவி சில மாறுதல்கள் செய்து அதை மேம்படுத்தினார்.

# கணவரிடம்கூட சொல்லாமல், தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அதில் ஏறி புறப்பட்டார். மேன்ஹெய்ம் நகரில் இருந்து 106 கி.மீ. தூரத்தில் ஃபோர்ஷெம் நகரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு அந்த வாகனத்திலேயே சென்றார். வாகனத்தில் இருந்த சில குறைபாடுகளை வழியிலேயே சரிசெய்தார். ஊரைச் சென்றடைந்த பிறகு, இத்தகவலை பென்ஸுக்கு தந்தி மூலம் தெரிவித்தார்.

# இது உலகின் முதல் நீண்டதூர கார் பயணமாகும். இதை அடிப் படையாகக் கொண்டுதான், பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற பென்ஸ் அண்ட் ஸீ நிறுவனம் 1883-ல் தொடங்கப்பட்டது. பென்ஸ் நிறுவனத்தின் மோட்டார் வேகன் 1885-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. எரிபொருளால் இயங்கும் முதல் வாகனம் இது.

# 1886-1893 இடையே 25 மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இருவர் பயணிக்கும் ‘விக்டோரியா’ வாகனம் (1893), முதல் சரக்கு வாகனம் (1895) ஆகியவையும் வரவேற்பை பெற்றன. 4 ஆயிரம் வாகனங்கள் விற்பனையுடன் உலகின் முதல்தர வாகன உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தை 1903-ல் பெற்றது பென்ஸ் நிறுவனம்.

# முதலாம் உலகப் போருக்குப் பிறகு நஷ்டம் ஏற்பட்டதால், டிஎம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, ‘மெர்சிடிஸ்-பென்ஸ்’ என்ற புதிய வடிவம் பூண்டது. இந்த பெயரே இதன் வர்த்தகப் பெயராக நிலைத்தது.

# இறுதிவரை இதன் நிர்வாகக் குழுவில் கார்ல் பென்ஸ் இடம் பெற்றிருந்தார். சுகமாகவும் விரைவாகவும் உலகைப் பயணிக்க வைத்த இந்த சாதனையாளரின் வாழ்க்கைப் பயணம் 85-வது வயதில் 1929-ல் நிறைவடைந்தது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%

  • Replies 81
  • Views 18.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புரூஸ் லீ 10

brucelee_2636467h.jpg

பிரபல நடிகர், தற்காப்புக் கலை வீரர்

உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ (Bruce Lee) பிறந்த தினம் இன்று (நவம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் சான்பிரான்சிஸ் கோவில் (1940) பிறந்தார். சீன வம்சாவளியை சேர்ந்தவரான தந்தை, நாடகக் கலைஞர். சினிமா உலகிலும் பலருடன் பழக்கம் உள்ளவர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

# சீனப் பாரம்பரியம் சார்ந்த கல்வி பெறுவதற்காக ஹாங்காங்கில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். யிப் மான் என்ற குருவிடம் தற்காப்புக் கலையை ஆர்வத்துடன் கற்றார்.

# படிப்பைவிட அடிதடிகளில்தான் அதிக நேரம் கழிந்தது. இதற்கு முடிவு கட்டுவதற்காக மீண்டும் சான்பிரான்சிஸ்கோ அனுப்பப்பட்டார். உணவகத்தில் பகுதி நேரமாக வேலை செய்துகொண்டே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சொந்தமாக ஒரு நூலகமே வைத்திருந்தார்.

# சீன தற்காப்புக் கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் தற்காப்பு பயிற்சிப் பள்ளி தொடங்கினார். மேற்கத்திய மல்யுத்தம், ஜூடோ, கராத்தே, குத்துச்சண்டையுடன் சில புதிய முறைகளையும் சேர்த்து புது வடிவிலான தற்காப்புக் கலையை உருவாக்கினார். ‘ஜீட் குன் டோ’ என்ற அந்த கலை இவரால் பிரபலமடைந்தது.

# தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். ஹாலிவுட்டில் கதாநாயகனாக வேண்டும் என்று எண்ணம் நிறைவேறாததால், மனம் சோர்ந்து ஹாங்காங் திரும்பினார். 1971-ல் ‘தி பிக் பாஸ்’ படத்தில் நடித்தார். ஆசிய கண்டத்தை அசத்திய இப்படம், ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்க்கவில்லை.

# அடுத்து வெளிவந்த ‘ஃபிஸ்ட் ஆஃப் ப்யூரி’ மாபெரும் வெற்றி பெற்றது. 1972-ல் ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்’ படத்தை தயாரித்தார். திரைக்கதை, இயக்கமும் அவரே. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏராளமான அமெரிக்க இளைஞர்கள் இவரது வெறித்தனமான ரசிகர்களாக மாறினர். உடனடியாக அடுத்த படத் தயாரிப்பில் இறங்கினார்.

# ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தன. தனது ஹாலிவுட் கனவு நிஜமாகும் சந்தர்ப்பத்தை நழுவவிட அவர் விரும்பவில்லை. சொந்தப் படம் தயாரிக்கும் வேலையை நிறுத்திவிட்டு ‘என்டர் தி டிராகன் பட வேலையில் இறங்கினார்.

# சண்டைக் காட்சிகளில் இவரது வேகத்துடன் கேமராவின் வேகம் ஈடுகொடுக்க முடியாமல் 24 என்று இருந்த ஃபிரேம் அளவை 34-ஆக மாற்றிய ஹாலிவுட் வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது.

# 1973-ல் இவரது ‘என்டர் தி டிராகன்’ திரைப்பட ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது, பாதியில் நின்ற தனது ‘கேம் ஆஃப் டெத்’ திரைப்படம் குறித்து விவாதிக்க வெளியே சென்றவர் மர்மமான முறையில் இறந்தார். நான்கே படங்களில் நடித்து, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சாதனையாளரான புரூஸ் லீ 33-வது வயதில் மறைந்தார்.

# இவரது மறைவுக்குப் பிறகு வெளிவந்த ‘என்டர் தி டிராகன்’ படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகெங்கும் உள்ள இளைஞர்களை ஈர்த்த தனி மனிதன் புரூஸ் லீயாகத்தான் இருக்கும்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80-10/article7922806.ece

  • 6 months later...
  • தொடங்கியவர்

'கவியரசு' கண்ணதாசன் 10

kannadasan-special_2907000f.jpg
 

'கவியரசு' கண்ணதாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்

பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன் (Kannadasan) பிறந்த தினம் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர். இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராய ணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி யும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

* சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.

* சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரிய ராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

* கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

* சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

* 'பாகப்பிரிவினை' படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

* 'பராசக்தி', 'ரத்தத் திலகம்', 'கருப்புப் பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கைகொடுக்கவில்லை. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

* மேலே யாரோ எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுமாம்! 'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த 'கண்ணதாசன் கவிதைகள்', 'அம்பிகை அழகு தரிசனம்' உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.

* கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, 'வன வாசம்' என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'குழந்தைக் காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

* ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/opinion/blogs/கவியரசு-கண்ணதாசன்-10/article8768260.ece?homepage=true&relartwiz=true

  • 1 month later...
  • தொடங்கியவர்

நீல் ஆம்ஸ்ட்ராங் 10

கோப்புப் படம்: ஏபி
கோப்புப் படம்: ஏபி

நீல் ஆம்ஸ்ட்ராங் - நிலாவில் முதலில் இறங்கிய விண்வெளி வீரர்

நிலாவில் முதல்முறையாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் (1930) பிறந்தார். முழுப் பெயர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங். தந்தை ஆடிட்டர். 6 வயதில் முதன்முதலாக தந்தையுடன் விமானத்தில் பறந்தார். விமானம் ஓட்டும் ஆசை இவருக்கு அப்போதே துளிர்விட்டது.

விமான ஓட்டுநர் உரிமம் பெற்றபோது இவருக்கு வயது 16. பள்ளிப்படிப்பை முடித்ததும், அமெரிக்க கடற்படையின் உதவித்தொகை பெற்று பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் பொறியியலில் சேர்ந்தார். நடுவில், கொரியப் போரில் அமெரிக்க கடற்படையின் ஜெட் விமான பைலட்டாகப் பணியாற்ற அழைப்பு வந்தது.

* கடற்படையில் 1952 வரை பணியாற்றிய பிறகு, மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்றார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* நேஷனல் அட்வைஸரி கமிட்டி ஃபார் ஏரோநாட்டிக்ஸ் அமைப்பின் (தற்போதைய நாசா) விண்வெளித் திட்டத்தில் 1962-ல் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அந்த அமைப்பின் கமாண்ட் பைலட்டாகவும் பணியாற்றினார். பல அதிவேக விமானங்களைச் சோதனை செய்தார்.

* மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் 1969-ல் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அதன் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.

* நிலாவில் தரையிறங்கிய முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அங்குள்ள பாறைத் துகள்களை சேகரித்தனர். தங்களது காலடித் தடங்கள் உட்பட பல புகைப்படங்களை எடுத்தனர்.

* அமெரிக்க தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் நிலாவில் கழித்தனர். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹீரோவாகப் புகழப்பட்டார்.

* சார்லட்ஸ்வில் நகரில் உள்ள கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் ஃபார் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் நிர்வாகியாக 1971 வரை பணியாற்றினார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

* உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.

* இவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்’ 2005-ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 ஆகஸ்ட் 25-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/நீல்-ஆம்ஸ்ட்ராங்-10/article8947284.ece?homepage=true&relartwiz=true

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஆனந்த குமாரசுவாமி 10

author_2981975f.jpg

இலங்கை எழுத்தாளர், கலை ஆர்வலர்

இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகச் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த முன்னோடியான இலங்கை படைப்பாளி ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி (Ananda Kentish Coomaraswamy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கை தலைநகர் கொழும்பில் (1877) பிறந்தவர். பிரபல வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளராக விளங்கிய தந்தையை 2 வயதில் இழந்தார். தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால், கணவர் இறந்ததும் குழந்தையுடன் இங்கிலாந்து சென்றார்.

* லண்டன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பயின்ற குமாரசுவாமி, புவிஅமைப்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்களம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட 14 மொழிகள் அறிந்தவர். 18 வயதில் இருந்தே ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

* கிழக்கத்திய மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம், பண்பாடுகளை ஒப்பிட்டு பல நூல்களை எழுதினார். இலங்கைக்கு 1903-ல் திரும்பியவர் மண்ணியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். ‘தோரனைட்’ என்ற தாதுப்பொருளைக் கண்டறிந்ததற்காக, லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

* பணிதொடர்பாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றபோது, பாழடைந்து கிடந்த கோயில்கள், விஹாரங்கள், அங்குள்ள சிற்பங்களை ஆராய்ந்தார். சுதேசிக் கலைகளுக்குப் புத்துயிர் அளிக்கவும், மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கிக் கிடந்த இலங்கை மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தவும் சமூக சீர்திருத்த சங்கத்தை 1905-ல் தொடங்கினார்.

* அதன் சார்பில் ‘சிலோன் நேஷனல் ரெவ்யூ’ என்ற இதழைத் தொடங்கினார். அதில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், சுதேசிப் பொருட்களை ஆதரிப்பது, இந்திய கலைகள் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.

* ‘இந்தியா மீது அன்பு கொள்ளாவிட்டால், இலங்கைக்கு வாழ்வில்லை’ என்று கூறியவர். நல்ல பேச்சாளர். இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதையுடன் ஆழ்ந்த நட்பு கொண்டவர். நிவேதிதையுடன் இணைந்து பவுத்த புராணக் கதைகளைத் தொகுத்தளித்தார்.

* சிவநடனத்தை விளக்கி ‘சித்தாந்த தீபிகா’ என்ற இதழில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினார். இதன்மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி என போற்றப்படுகிறார். பல கலைகள் குறித்தும் அறிந்ததால், ‘கலாயோகி’ என புகழப்பட்டார்.

* லண்டனில் ‘இந்தியக் கழகம்’ உருவாக உறுதுணையாக இருந்தார். 1912-ல் சாந்தி நிகேதனுக்கு வந்து சில ஆண்டுகள் தங்கியிருந்தார். தென் இந்தியாவிலும் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் இருந்தபோது யோகா கற்றார். ‘பிரபுத்த பாரதா’ என்ற இதழில் தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

* அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நுண்கலை அருங்காட்சியகத்தில் கிழக்கத்திய நாடுகள் பிரிவின் கலைக் காப்பாளராகப் பணிபுரிந்தார். 1933-ல் அங்கு ஆய்வாளராகப் பணியாற்றினார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று கலைப் பொருட்களைச் சேகரித்தார். இந்தியக் கலைகள், திராவிட நாகரிகம் குறித்து பல இடங்களில் உரை நிகழ்த்தினார்.

* பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். புத்தகங்கள், கட்டுரைகள் என 500-க்கு மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், திறனாய்வாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி 70-வது வயதில் (1947) மறைந்தார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/ஆனந்த-குமாரசுவாமி-10/article9016949.ece?homepage=true&relartwiz=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வ.உ.சிதம்பரம் பிள்ளை 10

voc_2999582f.jpg
 

சுதந்திரப் போராட்ட வீரர்

 

‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (V.O.Chidambaram Pillai) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத் தில் (1872) பிறந்தவர். தாத்தா, பாட்டியிடம் ராமாயண, சிவபுராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். வீரப் பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழும், அரசாங்க அலுவலர் கிருஷ் ணனிடம் ஆங்கிலமும் கற்றார்.

# தூத்துக்குடி புனித சேவியர் பள்ளி, கால்டுவெல் பள்ளி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பயின்றார். தாலுகா அலுவலகத்தில் பணியாற்றினார். திருச்சியில் சட்டக் கல்வி முடித்து, ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.

# குற்றவியல் வழக்குகளில் கைதேர்ந்தவர். வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்து, காவல்துறையினரின் கோபத்துக்கு ஆளானார். இதனால், இவரை தூத்துக்குடிக்கு அனுப்பிவைத்தார் தந்தை.

# தமிழ் இலக்கியங்கள் குறித்து பல செய்யுள்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். பல ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். சிவஞான போதம் நூலுக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான ராமகிருஷ்ணானந்தரை இவர் சந்தித்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சுதேசி எண்ணங்கள் குறித்த அவரது கருத்துகள் இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

# தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், தரும சங்க நெசவு சாலை, சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைத் தொடங்கி னார். திலகரை அரசியல் குருவாக ஏற்று, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். பிரிட்டிஷாரின் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.

# கொழும்பு சென்று ஒரு கப்பலை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து போக்குவரத்தைத் தொடங்கினார். ஆனாலும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. சொந்தக் கப்பல் வாங்க பங்குதாரர்களைத் திரட்ட வட மாநிலங்களுக்கு சென்றார். எஸ்.எஸ்.காலியோ என்ற கப்பலுடன் திரும்பினார். தூத்துக்குடி கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.

# பாரதியாரின் நெருங்கிய நண்பர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க, சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து போராடினார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தாராளமாக நிதியுதவி வழங்கியதால், தனது சொத்தில் பெரும் பகுதியை இழந்தார். வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார்.

# இவரது உணர்ச்சிமிக்க உரைகள், மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை கொழுந்துவிட்டு எரியச்செய்தது. 1908-ல் பொய்க் குற்றம்சாட்டி இவரை ஆங்கில அரசு கைது செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.

# பின்னர், தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது. கோவை சிறையில் செக்கு இழுக்கவைத்து சித்ரவதைச் செய்தனர். விடுதலையான பிறகு, சென்னையில் குடியேறினார்.

# நாட்டின் விடுதலைக்காக தொழில், சொத்து, சுகம், வாழ்க்கை என அனைத்தையும் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை 64-வது வயதில் (1936) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

http://tamil.thehindu.com/opinion/blogs/வஉசிதம்பரம்-பிள்ளை-10/article9074615.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

மம்மூட்டி 10

mam_3000883f.jpg
 

பிரபல மலையாள நடிகர்

தேசிய விருதை மூன்றுமுறை வென்ற பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி (Mammootty) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகே நடுத்தரக் குடும்பத்தில் (1951) பிறந்தவர். இயற்பெயர் முகமது குட்டி. தந்தை விவசாயி. பள்ளிப் பருவத்திலேயே குடும்பம் எர்ணாகுளத்தில் குடியேறியது. எர்ணாகுளம் புனித ஆல்பர்ட்ஸ் பள்ளி, அரசுப் பள்ளியில் பயின்றார்.

*கொச்சி மஹாராஜாஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, சட்டப் பயிற்சியும் பெற்றார். 1971-ல் கல்லூரியில் படித்தபோது, ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ என்ற படத்தில் நடித்தார். 1973-ல் ‘காலச்சக்கரம்’ படத்தில் நடித்தார். இவை பெரிதாக பேசப்படவில்லை. 1979-ல் முன்னணி வேடத்தில் நடித்த ‘தேவலோகம்’ திரைப்படம் திரையிடப்படவே இல்லை.

*எம்.ஆசாத் 1980-ல் இயக்கிய ‘வீல்கனுண்டு ஸ்வப்னங்கள்’தான் இவரது முதல் குறிப்பிடத்தக்க திரைப்படம். தொடர்ந்து கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘மேலா’ திரைப்படத்தில் நடித்தார். ‘த்ருஷ்ணா’ இவருக்கு கதாநாயக அந்தஸ்தை வழங்கியது. 1982-ல் நடித்த ‘யவனிகா’ என்ற த்ரில்லர் படம் இவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

*தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிகளை ஈட்டி, மலையாளத் திரையுலகின் வெற்றி நாயகனாக இவரை உயர்த்தின. தமிழ், இந்தி, தெலுங்கிலும் முத்திரை பதித்தார். 1989-ல் ‘மவுனம் சம்மதம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

*‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘மக்களாட்சி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஆனந்தம்’ ஆகியவை தமிழில் குறிப்பிடத்தக்கவை. 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘மதிலுகள்’ என்ற இவரது திரைப்படம் சுமார் 40 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ‘டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்’ படத்தில் நடித்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

*தொடர்ந்து சினிமா, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சித் தயாரிப்பு, விநியோக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கேரள அரசின் அட்சயா தகவல் தொழில்நுட்ப விரிவாக்கத் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராகவும் செயல்படுகிறார்.

*மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் பிச்சை தொழில் ஒழிப்பு, ஏழைகள் மறுவாழ்வு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு அமைப்புகளில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

*இவரது ரசிகர் மன்றம் சார்பில் இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிசிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘காழ்ச்சப்பாடு’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

*பத்மஸ்ரீ விருது, 3 முறை தேசிய விருது, 5 முறை மாநில அரசின் விருது, 10-க்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகள், 10-க்கும் மேற்பட்ட கேரள ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகள், 5 முறை ஏஷியாநெட் திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். கோழிக்கோடு மற்றும் கேரள பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன.

*இன்று 65 வயதை நிறைவு செய்யும் மம்மூட்டி, வெள்ளித்திரையில் மட்டுமின்றி, பல்வேறு நலப்பணிகளைச் செய்துவருவதன் மூலம் நிஜ வாழ்விலும் கேரளாவின் சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/மம்மூட்டி-10/article9080091.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.