Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி முறைமையும் தமிழர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி முறைமையும் தமிழர்களும்

(ஒரு பேப்பரிலிருந்து)


மிக விரைவில் இலங்கைக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நடைபெற இருப்பதாகச் செய்திகள் அடிபடுகின்றன.  அதிலும் இரண்டுமுறை பதவி வகித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போட்டியிடக்கூடுமென்று ஊகங்கள் அடிபடுகின்றன.  ஆரம்பத்தில் இலங்கையில் ஜனாதிபதியொருவரின் பதவிக் காலம் ஆறாறாறு வருடங்களாக இரண்டு தடவைகளுக்கே மட்டுப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியுமென்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.  ஆயினும் அந்தத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதிக்குப் பொருந்தாது, இனிவரப்போகும் ஜனாதிபதிகளுக்கே பொருந்துமென்ற வாதங்களும் உள்ளன. ஆயினும், இந்தச் சட்டச்சிக்கல்களைச் சமாளித்து பெரும்பாலும் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடுவாரென்று ஊகங்கள் அடிபடுகின்றன.

அமெரிக்கா போன்ற ஜனநாயக விழுமியங்களை மதித்து நடக்கும் நாடுகளில் இத்தகைய அடிப்படை அரசியலமைப்பில் திருத்த யோசனைகள் கொண்டுவரப்பட்டுத் தனிநபர்களின் பதவிக்காலங்கள் அடிக்கடி நீடிக்கப்படுவதில்லை.  அங்கு நான்கு நான்கு வருடங்களாக இரண்டு தடவைகள்தான் ஜனாதிபதிக்கான பதவிக்காலம்.  இலங்கையிலோ அரசியலமைப்பு கிட்டத்தட்ட வாராந்த மாதாந்த இதழ்களைப் போல பதிது புதிதாய் செய்திகளோடு மாறிக் கொண்டிருக்கிறது.  இதற்குக் காரணம் மக்கள்தான்.  அவர்களின் அரசியல் அணுகுமுறை தனிநபர் வழிபாட்டிலேயே பெரிதும் தங்கியிருப்பதால் ஒரு குறித்த காலத்திற்குப் பிறகு அடுத்த தலைமைக்குச் சந்தர்ப்பத்தை வழங்கும் பாரம்பரியமும் மனோதிடமும் மக்களுக்கு இல்லாமற் போய்விட்டது. அதைச் சந்தர்ப்பமாக்கி அரசியற் தலைமைகள் அரசியலமைப்பையே மாற்றி தாங்கள் ஆட்சியை நிறுத்தலின்றித் தொடர்கிறார்கள்.

தற்போது உள்ள நிலைமையின்படி, ஜனாதிபதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் ஜேஆர் ஜெயவர்த்தனாவின் காலத்திற்திற்கு முன்பிருந்ததுபோன்ற கூடுதல் அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சியைக் கொண்டு வரவேண்டுமென்ற கோஷம் வலுத்து வருகின்றது.  இலங்கை ஜனாதிபதியும் தன்னால் அடுத்த முறை பதவியைப் பெறமுடியாது போகும் நிலைமை ஏற்பட்டால் யாராவது ஆண்டுவிட்டுப் போகட்டும் என்று கருதியோ என்னவோ! ஓர் முன் நிபந்தனையுடன் ஜனாதிபதி முறைமையை ஒழித்துக்கட்டி மீண்டும் பிரதமரின் தலைமையிலான அரசியலமைப்பைக் கொண்டு வருகிறேன் என்று வாக்களித்திருக்கிறார். நிபந்தனையோ சற்றும் பொருத்தமில்லாதது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழக் கோரிக்கையைக் கைவிடவேண்டுமாம். இந்த உறுதி எந்த அளவு கனமானது என்பது வேறு விடயம். ஆனால் அதற்குள்ளும் தானே மீண்டும் நாட்டுக்குத் தலைமைதாங்கும் உள்நோக்கு இருப்பதை மறுக்க முடியாது.  அப்படியொரு நிலைமை உருவாகுமானால் தற்போதைய ஜனாதிபதியின் தலைமைத்துவம் அவரது கட்சி ஆட்சியிலுள்ளவரை தொடர்ந்து இருக்கப் போவதை யாரும் தவிர்க்க முடியாது.  ஜனாதிபதியின் இந்த வாக்குறுதியயைப் பெரிதாக எடுத்துக்கொண்டு பிபிசி சம்பந்தர் ஐயாவிடம்  கேள்வி கேட்டிருக்pறது.  அதனைக் கேலிக்குரிய கோரிக்கையாக சம்பந்தர் ஐயா விமர்சித்திருக்கிறார்.

தமிழர் தேசியத்தின் ஈழக்கோரிக்கை இந்த அளவுக்குப் பேரம் பேசக்கூடியதாகப் போய்விடவில்லை.  ஒரு தனிமனிதரின் தலைமைத்துவத்தை ஒளித்துக் கட்டுவதற்காக தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுவிட்ட ஆத்மதாகமாம் தமிழீழத் தாயகமென்னும் கனவை இனி வேண்டாமென்று விட்டுக்கொடுப்பதோ அரசியற் பேரமொன்றில்; விற்றுவிடுவதோ நடக்கக் கூடிய செயலா?

சிங்கள மக்களின் தலைமைத்துவத்தை மாற்றி அவர்களின் ஆட்சியதிகாரத்தை வேறு தலைமைகளிடம்  கையளித்து விடுவதற்காகத் தமிழீழ தேசியம் ஏன் பேரத்திற்குள்ளாகவேண்டும்? இதனால் யாருக்கு லாபம்?  ஜனாதிபதி முறைமை மாறினாற்கூட தமிழர் உரிமைகள் வழங்கப்பட்டு விடவா போகின்றது?  இவற்றைப் பற்றிய எந்தச் சிந்தனைகளுமில்லாமல் ஈழக்கோரிக்கையைக் கைவிடுகிறோம் ஜனாதிபதி முறைமை நீக்குங்கள் என்று தமிழர்கள் சரணடைந்து விடவா போகிறார்கள்? ஆரம்பத்திலிருந்தே  தமிழருரிமைகள் - சுயநிர்ணய உரிமை உட்பட- முழுமையாகத் தரப்பட்டால் கூட ஈழக்கோரிக்கையை இலகுவில் கைவிடத்  தயங்கியவர்கள் நாம். தற்போது தம்மினத்தை உதறித்தள்ளிவிட்டுச் சிங்கள மக்களின் நன்மைக்காக, ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் ஈழக்கோரிக்கையைக் கைவிடுகிறோமென்று தமிழர்கள் இறங்கி வருவார்கள் என்று ஜனாதிபதி நினைக்கிறாரா?  ஒன்றும் புரியவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.  அவ்வளவு இளக்காரம் நாட்டின் தலைமையிடத்தில் தமிழர் தொடர்பாக இருக்கிறது. அத்தோடு தெளிவற்ற சிந்தனையும் நிறையவேயிருக்கிறது.  அது இலங்கை மக்களின் துரதிஸ்டம்.

உண்மையில் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைபற்றியோ அல்லது 'சமமானவர்களுக்குள் முதலானவர் (பஸ்ட் அமங் ஈக்குவல்ஸ்)' என்று பொதுவாக அரசியல் மொழியில் கூறப்படும் பிரதமர் பற்றியோ தமிழ் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை.  நமக்கு மிகவும் பரிச்சயமான மோதகமும் கொழுக்கட்டையும் போலத்தான் இவ்விரு பதவிகளும் இருக்கும்.  நாம் தனி நபரின் நிறைவேற்று அதிகாரமில்லாத முழுமையான பாராளுமன்ற ஜனநாயகத்தையும் அதன் பாதிப்புகளையும் அறியாதவர்களல்ல.  இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு எண்பது வீத பெரும்பான்மையின் பிடியிற் சிக்கி இந்த இரண்டு ஆட்சி முறைமைகளாலும் எமது உரிமைகள் அனைத்தையும் இழந்திருக்கிறோம்.  ஆட்சியில் எவ்வித பங்களிப்பும் எமக்கு இன்றுவரை கிடைக்கவில்லை.  இன்னும் சொல்லப் போனால் அரசியல் ரீதியாக ஜனாதிபதி முறைமையின் கீழடைந்த பாதிப்புகளோடு ஒப்பிடுகையில் பிரதமர் முறைமையின் கீழடைந்த பாதிப்புகளே மிகவும் அதிகமானவை.  எமது வாக்குரிமையே பறிக்கப்பட்டது.  தனிச்சிங்களச் சட்டம் எம்மவரின் வேலை வாய்ப்புகளையும், இருந்த உத்தியோகங்களையும், பதவியுயர்வுகளையும் பறித்தெடுத்தது.  தரப்படுத்தலால் தமிழ் மாணவ சமுதாயத்தின் கல்வியே பறிபோனது.  பலரை நாட்டைவிட்டே துரத்தியடித்தது. அப்படியிருக்க மீண்டும் அந்த முறைமைக்காக வக்கலாத்து வாங்கி நாம் என்ன பயனைப் பெறப் போகிறோம்?

ஒரு நாட்டின் பிரதமரும் சர்வாதிகாரியாக முடியும், மாறாக, ஜனாதிபதியின் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட முடியும்.  எல்லாமே நாட்டு மக்கள் எடுக்கும்; முடிவில் தான் தங்கியுள்ளது.   எண்பது வீத பெரும்பான்மையைக் கொண்ட சிங்களமக்கள் நினைத்தால் ஆனையைப் பூனையாக்கலாம் பூனையை ஆனையாக்கலாம்.  அவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னாற்போய் ஏதோ நமக்கும் ஏதாவது கிடைத்துவிடுமென்று நப்பாசைப் படுவதில் எதுவித அர்த்தமுமில்லை.  சிறிமாவின் காலத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தினால் அரசியலமைப்பை மாற்றிய போது இதே தமிழ்த் தேசிய அமைப்பின் பிதாமகர் தந்த செல்வா இனித் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கையறு நிலையில் விரக்தியுடன் கூறினார்.  ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அந்தக் கையறு நிலைக்குப் போய்ப் பார்த்தாலென்ன என்று யோசிக்கிறது.  அதாவது, ஜனாதிபதி முறையை ஒளித்துவிட்டு மீண்டும் பிரதமர் முறைக்குப் போகும் முயற்சிகளுக்கு ஆதரவளித்தாலென்ன என்று யோசிப்பது போலத் தெரிகின்றது.

பாராளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவத்தால் எதையும் சாதிக்க முடியாத நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட தனிநபரான ஜனாதிபதியை எமது கணிசமான வாக்குகளால் ஆதரிப்பதன்மூலம் ஒரு சிறிதளவேனும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.  அத்தனி நபரின் பிரத்தியேக கவனிப்பையும், பராமரிப்பையும் சிறுபான்மையினர் பெறுவது பிரதமர் முறைமையிலும் இலகுவானதாகும்.  ஜனநாயகமென்ற போர்வையின்கீழ் பாராளுமன்றத்தில் இனவாதிகளால் நிறைவேற்றப்படும் தமிழர்களுக்கெதிரான பாரபட்சமான சட்டங்கள் அனைத்தையும் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் தடுக்கவோ ஒத்திவைக்கவோ முழு நாட்டினதும் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு  போதிய அதிகாரமுண்டு.   இந்தநிலை அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரதமருக்கு இல்லை.  

ஒரு தொகுதியின் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றப் பிரதிநிதியான பிரதமர் ஆளுங் கட்சியாலேயே நாட்டின் தலைமையை ஏற்கத் தெரிவு செய்யப்படுவார்.  ஜனாதிபதியோ சிறு பான்மையினருட்பட்ட முழு நாட்டினதும் மக்களால் தெரிவாகிறார். அதனால் அவருக்குத் தன்னைத் தெரிவு செய்யத் தம் வாக்குகளையளித்த சிறுபான்மையினரது நலன்களிலும் அக்கறையிருக்கும்.  அதற்கான அதிகாரமுமிருக்கும். பிரதமர் பதவிக்கோ  அப்படியான கடப்பாடுகள் எதுவுமில்லை. அதிகாரமுமில்லை. பாராளுமன்றத்திடம் எல்லாவித பொறுப்புக்களையும் ஒப்புக் கொடுத்துவிட்டு  இங்கு முன்பே சொன்னது போல சமமானவர்களுள் முதலானவராய்த் தானுண்டு தன்பாடுண்டு என்று இருந்துவிடலாம்.  

இதனைத் தமிழ் மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுவதா? அல்லது அடுப்புக்குள் இருந்து மீண்டும் சட்டிக்குள் போவதா என்பதுதான் இந்த விடயத்தில் எமது நிலையாயினும் உள்ளதில் எது சிறந்தது என்பதை அவ்வளவு இலகுவில் தீர்மானித்துவிட முடியாது.  தற்போதைய அரசியல் தலைமை சர்வாதிகாரத்தையும், எம்மீதான இராணுவ அடக்கு முறையையும் தனது அரசியல் அணுகுமுறைகளாகக் கொண்டிருந்தாலும் காலப்போக்கில் இந்த நிலை மாற்றமடைந்து எமது முழு ஆதரவுடன் தெரிவாகும் ஜனாதிபதியொருவரால் எமது அரசியல் பிரதிநிதித்துவம் வலுவடையக் கூடிய நிலைமை ஏற்பட இடமுண்டு.  இந்த நிலை பிரதமர் முறைமையில் ஏற்படுமா என்பது சந்தேகமே.    நாம் ஒரு தேசிய இனத்தின் கட்சியாக இருந்து கொண்டு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் நட்பையும், நிறைவேற்று ஜனாதிபதியின் பிரத்தியேக கவனிப்பையும் ஒரு சேரப் பெற்றுக் கொள்ளக் கூடிய இருவழி நன்மையைச் சீரழித்துவிட்டு, பிரதமர் முறைமைக்குத் தோள் கொடுப்பதன் மூலம் ஆளுங்கட்சியுடன் சேர்ந்தியங்கலாமென்னும் ஒருவழி நோக்கை முயற்சிப்பது சரிதானா என்பதை ஆழ்ந்து சிந்திப்பது முக்கியமானதாகும்.  

இங்கே முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு மாற்றுச் சிந்தனைகள் நிறைய உண்டு.  தமிழ் மக்கள்  அவற்றைச் சேர்ந்து சிந்தித்து முடிவெடுப்பார்களாக.


 
 

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.