Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூய்மை இந்தியாவும் பெல்பாட்டமும்

Featured Replies

காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்!

 

photoOld_2172167f.jpg

 

ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று!
 
இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன.
 
எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படித்தபோது எடுத்த புகைப்படம் கிடைத்துவிட்டது. அந்தப் புகைப்படத்தில் நான் எங்கிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க அவர்களுக்குள் 'போட்டா'போட்டி!
 
காரை பெயர்ந்த பள்ளிக்கூடத்தின் பின்புறம் செங்கற்கள் துருத்திக்கொண்டிருக்கும் சுவரின் பின்புலத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
புகைப்படத்தின் நடு நாயகமாக உட்கார்ந்து இருப்பது மரிய சூசை சார். வரிசையாக நிற்கும் அத்தனை பேரையும் வகுப்புக்குச் செல்ல வைக்க அவரால் மட்டுமே முடியும். புகைப்படத்தைச் சற்று அருகில் கொண்டுவந்தால் பெரிதாக மீசை வைத்துக்கொண்டிருக்கும் தமிழாசிரியர் 'தஸ்புஸ்'என்று மூச்சு விடுவது கேட்கக் கூடும். பெண் பிள்ளைகள் வரிசையில் உட்கார்ந்துகொண்டி ருக்கும் அமராவதி இப்போது எங்கே எப்படி உட்கார்ந்து கொண்டிருப்பாள்? ரெட்டை மண்டை கோவிந்தராஜூ என் அருகில்தான் உட்கார்ந்திருக்கிறான். கூப்பிட்டால் போதும் ஓடி வந்துவிடுவான் என்னோடு விளையாட. 44 ஆண்டுகள் தள்ளி அல்லவா உட்கார்ந்திருக்கிறான். அவன் காதில் விழுமா என் அழைப்பு? பதினாறாம் வாய்ப்பாட்டைத் தலைகீழாக ஒப்பிக்கும் ரங்கனை எப்படியாவது இந்தப் புகைப்படத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டும். அண்மையில் கேள்விப்பட்டேன்: அவன் இப்போது நகராட்சி அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கிறானாம்!
 
'ஒளிபடைத்த கண்ணினாய் வா வா'என்று கீச்சுக்குரலில் பாடும் இந்திராவையும் இப்போதே காப்பாற்றியாக வேண்டும். போன வருஷம் மனநோயாளியாக தற்கொலை செய்துகொண்டாளாம் இந்திரா. போட்டோவில் எல்லோர் மீதும் மழை கொட்டுவதுபோல தாரைதாரையாக வெள்ளைச் சுவடுகள். எல்லோரும் மழையில் நனைந்து கொண்டு நிற்பதுபோல் இருக்கிறது. காலம்தான் மழையாகக் கொட்டுகிறது. காணாமல் போன பெண்!
 
பெட்டியை எதற்கோ குடைந்தபோது என் பழைய பர்ஸிலிருந்து ஒரு சின்னஞ்சிறு புகைப்படம் நழுவி விழுந்தது. ஒல்லியான உடம்புடன் கண்களில் வெட்கப் பிரகாசத்துடன் 'எனக்கு நீள முடியாக்கும்'என்று பீற்றிக்கொள்கிற மாதிரி தரையைத் தொடும் பின்னலை எடுத்து முன்னே விட்டுக்கொண்டு அந்த அழகிய பெண்! 'எந்த போட்டோவை அப்படி உத்து உத்து பாக்குறீங்க?' என்றாள் என் மனைவி. பெண் பார்க்கும் முன் எங்களுக்கு அனுப்பிய அவள் போட்டோதான் அது! 'இந்தப் பொண்ணு காணாம போயிட்டா! அவ போட்டோதான்!' என்றேன். முறைத்துவிட்டுப் போனாள் குண்டு உடம்பும் குழந்தைமை தொலைத்த முகமுமாய். 'கனமான' புகைப்படம்!
 
செத்துப்போனவர்களுக்கு மாலை போட்டு, நாற்காலியில் உட்காரவைத்து போட்டோ எடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அப்படியான ஒரு படம் எங்கள் வீட்டிலும் இருந்தது. இளம் வயதிலேயே அகால மரணம் அடைந்த என் தாத்தா - அவர் அருகே கண்ணீரும் கம்பலையுமாக என் பாட்டி - இடுப்பில் இரண்டரை வயதுக் குழந்தையாக மிரள விழித்தபடி என் அம்மா - ஒரு குடும்பம் நிராதரவாக நிற்கும் சோகத்தைச் சுமந்துகொண்டு பாட்டியின் வீட்டில் பல வருஷங்கள் அந்தப் படம் இருந்தது. என்னால் அந்தப் படத்தைத் தூக்கவே முடியாது என்று தோன்றும். சோகத்தைக் காட்சியாக்கி அந்தப் படத்துக்கு 'கனம்' ஏற்றியிருந்தது காலம்!
 
ஸ்டுடியோவுக்குக் குடும்பத்துடன் போய் போட்டோ எடுத்துக்கொள்வது குடும்ப விழாவாக அனுசரிக்கப்படும். ஆடை அணிகலன்களும், பவுடர் அப்பிய முகங்களும் ஜடையும் பூவுமாய் பெண்களும், புதுச்சட்டை சலவை வேட்டி சகிதம் ஆண்களுமாய் ஸ்டுடியோ விஜயம் நடக்கும். அங்கே போட்டோகிராபரின் அதட்டலும் பிரகாசமான விளக்குகளுமாய் ஆச்சரியமும் ஆனந்தமும் சொல்லி மாளாது! அதுவரை சிரிப்பும் கூத்துமாய் சந்தோஷமாய் இருப்பவர்கள் போட்டோவுக்கு நிற்கும்போது உம்மணாமூஞ்சியாய் மாறி விடுவார்கள்!
 
போட்டோகிராபர் கறுப்பு முக்காடு போட்டதும் பூச்சாண்டி மாதிரி இருப்பதாலோ என்னவோ எல்லாக் குழந்தை களும் கலவரத்துடன் காட்சியளிக்கிறார்கள். இப்போது புகைப்பட ஆல்பங்களின் காலமும் போய்விட்டது. ஐம்பது நூறு அல்ல; ஆயிரக்கணக்கான படங்கள். அவ்வளவும் ஒரு சின்னஞ்சிறு பென்டிரைவில் அல்லது மெமரி ஸ்டிக்கில் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள்.
 
லேட்டஸ்டாக செல்ஃபி வந்துவிட்டது! வர்ணமிழந்த வாழ்க்கைக்கு வண்ண வண்ண புகைப்படங்கள்! நழுவிச் செல்லும் கணங்களை நின்று ரசிக்க நேரமில்லாத இன்றைய மனிதன் அழகான நொடிகளை அடைத்து வைத்திருக்கிறான், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று!
 
- தஞ்சாவூர்க் கவிராயர், கவிஞர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
 

Edited by Athavan CH

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

திரைப்படம் பார்த்த 'சாகசம்'!

 

theater_2206935f.jpg

 

இப்போதெல்லாம் திரைப்படங்களை அலைபேசி, டேப்லெட்டின் ‘அகன்ற திரை’க்குள் பார்த்து விட முடிகிறது. அந்தக் காலத்தில் குமுதம், கல்கண்டு இதழ்களை ஒருவருக்கொருவர் கைமாற்றி வாசித்ததுபோல், இப்போது கொரியா, ஈரான் திரைப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் நண்பர்கள். 30 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை அப்படிச் சிலாக்கியமாக இல்லை. அதாவது, என்னைப் போன்ற சிறுவர்களுக்கு.
 
அப்போதெல்லாம் திரைப்படம் பார்ப்பது என்பது ஏழு கடல், ஏழு மலைகளைத் தாண்டி கிளிக்கூண்டில் இருக்கும் அரக்கனின் உயிரைப் பறிக்கும் சாகசத்துக்கு ஒப்பானது. அம்மா மிகவும் கண்டிப்பானவர் என்பதால், திரையரங்கம் போய்ப் படம் பார்ப்பது மிகப் பெரிய சவால். பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவது படம் பார்த்துவிட்டு வந்து கதை சொன்னால், அதிலேயே படம் பார்த்த திருப்தியை அடைய வேண்டும். இல்லை என்றால், வெறும் போஸ்டரை மட்டும் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
 
செஞ்சியில் அப்போது ‘ரங்கநாதா’ என்று ஒரேயொரு திரையரங்கம்தான். அதில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் டிக்கெட் கட்டணம் 45 பைசா. தினமும் 3 காட்சிகள் ஓட்டுவார்கள். சனி, ஞாயிறுகளில் மட்டும் காலைக் காட்சிக்கு வேறு ஏதாவது ஒரு படம் ஓடும். ஒரு படம் அதிகபட்சமாக 5 நாட்கள் ஓடினால் பெரிய விஷயம். எம்.ஜி.ஆர். படம் என்றால் ஒரு வாரம், 10 நாள் வரை தாக்குப்பிடிக்கும். தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டால், படத்தை மாற்றிவிடுவார்கள். அதற்கு முதல் நாளே அந்தப் படத்தின் போஸ்டர் மீது ‘இப்படம் இன்றே கடைசி’ என்று சிறிய பிட் நோட்டீஸ் ஒட்டுவார்கள். அதுவே எப்படியாவது படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடும்.
 
‘கமிஷன்’ காசில் படம்
 
கடையில் பொருட்கள் வாங்க, அம்மா கொடுத்தனுப்பும் காசில் 3 பைசா, 5 பைசா என்று ‘கமிஷன்’ பிடித்து 45 பைசாவைச் சேர்ப்பதற்குள் மாசமே கடந்துவிடும். கஷ்டப்பட்டுக் காசைச் சேர்த்துவிட்டாலும் அம்மாவிடம் அனுமதி வாங்குவது குதிரைக் கொம்புதான். அவர் இடும் கட்டளைகளை (வீட்டு வேலைகள்தான்!) தட்டாமல் செய்ய வேண்டும். ஒன்றிரண்டு நாட்களுக்கு நல்ல பிள்ளையாய் நடிக்க வேறு வேண்டியிருக்கும். மிகவும் கஷ்டமான விஷயம் அதுதான். அம்மாவுக்குக் கோபம் இல்லாத நேரம் பார்த்து, பேச்சைத் தொடங்க வேண்டும். “அம்மா, அந்தப் படம் நல்லா இருக்குன்னு சாந்தி அக்கா, கீதா அக்கா எல்லாம் பாத்துட்டுச் சொன்னாங்க. நீ காசுகூடக் கொடுக்க வேணாம்மா, எம் ஃபிரண்டு ஆறுமுகம் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்காம்மா..” என்று முடிப்பதற்குள் நாக்கு வறண்டுவிடும். பல நாள் முயற்சி பலனளிக்கும். “சரி… போ…” என்ற அம்மாவின் அந்த வார்த்தை, படம் பார்க்கும் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கிவிடும்.
 
பாதியில் பார்த்த படங்கள்
 
பல நாள் நான் தியேட்டருக்குள் நுழையும்போது கொஞ்சம் படம் ஓடியிருக்கும். பக்கத்தில் இருக்கும் ஆளிடம் ‘படம் போட்டு ரொம்ப நேரமாச்சா’ என்று கேட்பேன். சிலர், ‘இல்லப்பா, கொஞ்ச நேரம்தான் ஆச்சு... ஒரு பாட்டுதான் போச்சு’ என்று இதமாகப் பதில் சொல்வார்கள். சிலரோ வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பதுபோல உற்றுப் பார்த்துவிட்டு, பேசாமல் இருப்பார்கள். சிவாஜி நடித்த ‘அவன் ஒரு சரித்திரம்’ படத்தை ஸ்கூல் பிள்ளைகளுக்காக ஒரு நாள் ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். டிக்கெட் 25 பைசாதான். “நாளைக்குப் படத்துக்குக் கூட்டிட்டுப் போறோம். வர்றவங்க பேரு கொடுக்கலாம்” என்று வாத்தியார் சொன்னதும், எப்படியும் காசு கிடைத்து
 
விடும் என்ற நம்பிக்கையில் என் பெயரையும் கொடுத்து விட்டேன். ஆனால், அந்த 25 பைசாவுக்காக இரண்டு நாட்களாக அம்மாவிடம் வாங்கிய அடி, இப்போதும் முதுகில் வலிப்பது மாதிரியே இருக்கிறது.
 
எட்டாம் வகுப்பைத் தாண்டிய பிறகு, மனதில் கொஞ்சம் தைரியம். அம்மாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் படம் பார்க்கத் தொடங்கினேன். அப்போது பெரிய அக்காவின் கணவர் டீக்கடை வைத்திருந்ததால், பள்ளிக்குச் செல்லும்போது செலவுக்குக் காசு கொடுப்பார். அதைச் சேர்த்து வைப்பேன். அதனால், அம்மாவிடம் கமிஷன் அடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதிலும் ஒரு ‘தொழில் நுட்ப’த்தைக் கடைப்பிடித்தேன். பகல் காட்சி எத்தனை மணிக்குத் தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், முதல் காட்சி எப்போது தொடங்கும் என்பதெல்லாம் அம்மாவுக்கு நன்றாகத் தெரியும்.
 
பகல் காட்சி இரண்டரை மணிக்குத் தொடங்கும் என்பதால், 3 மணி வரை வீட்டில் இருப்பேன். அதன்பிறகு, நண்பன் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் புறப்படுவேன். அப்போதெல்லாம் படம் தொடங்கி ஒரு மணி நேரம் வரை டிக்கெட் கொடுப்பார்கள். அதனால், மூன்றரை மணிக்குச் சென்று பாதிப் படம் பார்ப்பேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் படத்துக்குப் போவேன். முதல் பாதி படத்தை மட்டும் பார்த்துவிட்டு இடைவேளை விட்டதும் வீட்டுக்கு வந்துவிடுவேன். இதனால், அம்மாவுக்குச் சந்தேகம் வராது. இப்படி தவணை முறையில் பார்த்த படங்கள் ஏராளம்.
 
இப்படி அம்மாவிடம் அழுதும் அடி வாங்கியும் திருட்டுத் தனமாகவும் நிறையப் படங்களைப் பார்த்துவிட்டேன். படிக்கும் வயதில் சினிமா மேல் அப்படியொரு ஆர்வம், பைத்தியம். இன்றைக்கும் வீட்டில் தொலைக்காட்சியில் பழைய படங்களைப் பார்க்கும்போது, “இந்தப் படத்தைப் பார்க்க அம்மாவிடம் அடி வாங்கினேன், இந்தப் படத்தைத் திருட்டுத்தனமாகப் பார்த்தேன்” என்று பிள்ளைகளுடன் என் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது உண்டு. அப்போது, மனதில் ஒரு காலப்பயணம் தொடங்கியிருக்கும்.
 
  • தொடங்கியவர்

ஈரம் காயாத கிணற்றடிகள்

kinaru_2217489f.jpg

 

நினைவறியும் பருவத்தில் நான் பார்த்த முதல் நீர்நிலை எங்கள் வீட்டுக் கொல்லையில் இருந்த கிணறுதான். பூமிக்குள் புதைத்து வைத்த ஒரு பெரிய வட்டக் கண்ணாடி போலிருக்கும் அந்தக் கிணறு. அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே அத்தனை அலாதி! ஒரு சிட்டுக்குருவி அந்தக் கிணற்றுக்கு அடிக்கடி வந்துபோகும். ‘விசுக்’கென்று கிணற்றுக்குள் நுழைந்து நீரில் முக்கி எழுந்து பறந்து வெளியேறும் அந்தக் குருவி குளிக்கிறதா? இல்லை தண்ணீர் குடிக்கிறதா என்று அம்மாவிடம் கேட்பேன். “ரெண்டும்தான்டா” என்று அம்மா சொல்லும்.
 
எங்கள் தளத்தெரு கிராமத்தில் அப்போது கிணறு இல்லாத வீடுகள் இல்லை. திண்ணையில் தொடங்கும் எல்லா வீடுகளும் கிணற்றடியில்தான் முடியும். பல்லாண்டுகளாக அடுக்களையில் சிறை கிடந்தனர் நமது பெண்கள் என்பார்கள். அந்தச் சிறையை இரண்டாகப் பிரிக்கலாம். வீட்டுக்குள் அடுப்படி. கொல்லைப் பக்கம் கிணற்றடி. திண்ணையும் கிணற்றடியும் ஒரு வகையில் ஆணாதிக்கம்-பெண்ணடிமைத்தனத்தின் குறியீடுகள். திண்ணையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து, வெற்றிலையைக் குதப்பியபடி, ஆண்கள் ஊர்க் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். கிணற்றடியில் பெண்கள் பாத்திரம் துலக்குவார்கள் அல்லது துணி துவைப்பார்கள்.
 
அக்கால தெருக் காட்சிகளின் பின்னணி இசையாக, கிணற்றடியில் பெண்கள் நீர் இரைக்கும் ஓசைகளே நிறைந்திருந்தன. வீட்டுக்கு வீடு கிணறுகளின் அளவுதான் மாறுபடும். ஆனால், எல்லா வீடுகளிலும் நீர் இரைப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான்.
 
காய்த்துப்போன கரங்கள்
 
முதலில் தாம்புக் கயிற்றில் இரும்பு வாளியால் நீர் இறைக்கும் முறையே இருந்தது. காலப்போக்கில் சகடைகள் (நீர் இறைக்கும் உருளைகள்) வந்தன. மரச் சகடைகள், இரும்புச் சகடைகள் என இரு வகை உண்டு. அதில் கயிற்றுக்குப் பதில் ஈரத்தில் இற்றுப் போகாத இரும்புச் சங்கிலிகள் பயன்படுத்தப்பட்டன. மின்சார தானியங்கி நீர் இறைக்கும் கருவிகள் வரும்வரை, பெண்கள் கிணற்றடியின் கொத்தடிமைகளாகவே இருந்தனர். நீர் இறைத்து நீர் இறைத்து அவர்களின் மெல்லிய உள்ளங்கைகள் காய்ச்சிக் கிடந்தன.
 
பெண்கள் வேலைச் சுமை தெரியாமல் கிணற்றடியில் நாள் முழுதும் உழைக்க, பக்கத்து வீட்டுப் பெண்களின் வாயும் செவியுமே பொழுதுபோக்காக இருந்தன. வேலை பார்த்தபடி அவர்கள் பேசிக்கொள்ளும் கதைகளெல்லாம் அவரவர் கணவன்மார்களின் புகழ்புராணங்கள்தான். தனியே இருக்க நேர்ந்தால் மனசுக்குப் பிடித்த சினிமா பாடல்களை முணுமுணுப்பார்கள். பக்கத்து வீட்டு வனஜாக்கா மாலை நேரங்களில் கிணற்றில் நீர் இறைக்கும் நேரங்களில் முணுமுணுக்கும் ஒரே பாடல் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’
 
வீட்டுக் கிணறுகள் தவிர ஊருக்குள் வேறு சில குடிதண்ணீர்க் கிணறுகள் உண்டு. அதற்குப் பெயர் ‘நல்ல தண்ணீர்க் கிணறு’. சிவன் கோயில் தண்ணீரின் சுவை சுமாராக இருக்கும். ஆனால், பக்கத்திலேயே இருக்கும் தங்க மாரியம்மன் கோயில் கிணற்றுத் தண்ணீரின் சுவையோ தேன் சுவை. ஆண்டு முழுவதும் ஊர் ஜனங்கள் எல்லோருக்கும் தாராளமாகத் தண்ணீர் வார்த்த அந்தக் கிணற்றின் வற்றாத நீர் வளத்தை இப்போது நினைத்தாலும் வியப்பாகவே இருக்கிறது. இவை தவிர ஊருக்கு நடுவாந்தரமாக ஒரு பொதுக்கிணறும் இருந்தது. அதற்குப் ‘பாழும் கிணறு’ என்று பெயர். அது எப்போதோ தூர்ந்துபோய்க் கிடந்தது. அந்தக் கிணறுபற்றி ஊருக்குள் நிலவிய மர்மக் கதைகளை இப்போது நினைத்தாலும் வியர்த்துவிடும்!
 
பாதாளக் கரண்டி
 
என் வீட்டுக் கிணற்றுச் சகடைத் தூண்கள் இரண்டிலும், இரண்டு விளக்கு மாடங்கள் இருக்கும். அவற்றில் பெரிய கார்த்திகை இரவுகளில் மட்டும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும். மற்ற நேரங்களில் கோபால் பல்பொடியும் புலி மார்க் சீயக்காய் பாக்கெட்டுமே அந்த மாடங்களில் இருக்கும். கிணறு என்றவுடன் நினைவைத் தூண்டிலிட்டு இழுக்கும் இன்னொரு உபகரணம் ‘பாதாளக் கரண்டி.’ கிணற்றில் தவறி விழும் பண்ட பாத்திரங்களையோ அல்லது நீர் இழுக்கும் வாளியையோ கிணற்றுக்குள் துழாவிக் கண்டெடுக்கும் கருவி. நீளமான ஒரு இரும்புக் கம்பியின் நான்கு பக்கத்திலும், கருவேல மரத்தின் முட்கிளைகளைப்
 
போல பல அளவுகளில், பல வளைவு வடிவங்களில் கொக்கி
 
கள் பின்னப்பட்டிருக்கும். அதை தாம்புக் கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் விட்டுத் துழாவுவார்கள். தவறி விழுந்த எந்தப் பொருளும் ஏதாவதொரு கொக்கியில் மாட்டிக்கொண்டு மேலே வரும். அதை வேடிக்கை பார்ப்பதற்கு அக்கம்பக்கத்திலிருந்து பொடிசுகள் கூட்டம் கூடிவிடும்!
 
காற்றில் கரைந்த ஈரம்
 
கிணறு இருந்த அந்த வீட்டை விற்றாகிவிட்டது. இன்று ஊருக்குப் போகும்போதெல்லாம் வேறொருவருக்குச் சொந்தமாகிவிட்ட என் வீட்டுக் கிணற்றையும் எங்கள் வடக்குத் தெருவின் சில வீட்டுக் கொல்லைக் கிணறுகளையும் வெகுநேரம் பார்த்தபடி அசைவற்று நிற்கிறேன். ஒருகாலத்தில் எப்போதும் ஈரம் உலராத கிணற்றடிகள் இப்போது காய்ந்துபோய்க் கிடக்கின்றன. அதன் அருகில் ஆள் நடமாட்டம் இல்லை.
 
நீர் தளும்பும் கிணற்றுத் தொட்டிகளில் சருகுகள் மண்டிக் கிடக்கின்றன. துணி துவைக்கும் ‘பவர்லைட் சவுக்கார’ வாசனை இல்லை. கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி வாசனைகள் இல்லை. சகடைத் தூண்களின் விளக்கு மாடங்களில் குளவிக் கூடும் புளியங்கொட்டைகளும் தென்படுகின்றன. கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கும் மின்சார நீர் இரைக்கும் குழாய் வழியே, சத்தமின்றி தண்ணீர் வீட்டுக்குள் சென்றுவிடுகிறது. இப்போதெல்லாம் தங்கள் அழகை ரசிக்க ஆளில்லாமல், தனிமையில் உறைந்து நிற்கின்றன கிணறுகள். பழைய நண்பர்கள் பார்க்க வந்தால் ஒரு புன்னகைத் துளியைச் சிந்துகின்றன. அவை கிணற்றின் நீர் அல்ல, நம் மனதின் ஈரம்!
 
- எஸ்.ராஜகுமாரன், எழுத்தாளர்- ஆவணப்பட இயக்குநர், தொடர்புக்கு: s.raajakumaran@gmail.com
 
  • 2 weeks later...

தூய்மை இந்தியாவும் பெல்பாட்டமும்
ff0b9x.jpg

 

1970-களில் கல்லூரி இளைஞர்கள் மத்தியில் ‘பாபி’ இந்தி திரைப்படம் ஏற்படுத்திய ஆடைப் புரட்சியை இதுவரை எந்த சினிமாவும் சாதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப் படத்தில், ரிஷி கபூர் அணிந்திருந்த சட்டையும் பெல்ஸும் இளசுகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை மறக்கவே முடியாது. ரிஷி கபூர் அணிந்திருக்கும் சட்டையின் காலர் அகலமாகவும் நீளமாகவும் முனை மழுங்கலாகவும் இருக்கும். ‘பாபி’ நெஞ்சத்தைத் தொடும் திரைக் காவியம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ‘பாபி காலர்’ உண்மையிலேயே நெஞ்சத்தைத் தொடும் நீளம் கொண்டதுதான்.

அந்தச் சமயத்தில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு, கல்லூரியில் படிக்கும் அண்ணன்கள், நீளமான காலர் வைத்த சட்டையுடன் பட்டை பெல்ட் அணிந்து செல்வதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதுவும் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் செல்லும்போது சட்டை காலர் காற்றில் படபடத்து முகத்தில் அறையும் காட்சி தனிரகம். ‘பாபி காலர்’ சட்டையில் முதுகுப் பக்கம், நடுவில் ஆங்கில ‘யு’ வடிவில் ஒரு சின்னம் வைத்துத் தைப்பார்கள் அப்போது.

 

ஆட்டம் பெல்பாட்டம்

இந்திப் படங்களில் மிதுன் சக்ரவர்த்தி போன்ற ‘ஏழைகளின் எல்விஸ் பிரஸ்லி’க்கள் மைக்கைக் கையில் வைத்துக்கொண்டு, குட்டிக் குட்டி கலர் பல்புகள் (உடையிலும்தான்) மின்ன மின்னப் பாடிக்கொண்டே ஆடும்போது உங்கள் கவனம் அவர்கள் மீது இருக்காது. கதாநாயகர்கள் அணிந்திருக்கும் நீளமான பேண்ட்டின் பாட்டம் (bottom) மீதுதான் இருக்கும் (ஆட்டம் பாட்டம் என்பதன் பொருள் இதுதானோ?!). காலின் அடிப்பகுதி நீண்டிருக்கும் பெல்பாட்டம் பேன்ட்கள், பெல்ஸ் என்ற நாமகரணத்துடன் பார் போற்ற விளங்கின.

70-களின் தொடக்கத்திலேயே பெல்ஸ் வந்துவிட்டாலும், ‘என்னடி மீனாட்சி’ பாடலுக்கு ஆடும் நம் கமல்ஹாசனும், ‘ஆகாய கங்கை’ என்று கண்ணாடியைச் சுழற்றிக்கொண்டே, புல்தரையைக் கூட்டிக்கொண்டு நடக்கும் ரஜினியும் இந்த பெல்ஸை மேலும் பிரபலமாக்கினார்கள். ‘நிறம் மாறாத பூக்கள்’ விஜயனையும் மறந்துவிட முடியாது. இளம் கதாநாயகர்களுக்குப் போட்டியாகக் களமிறங்க நினைத்த எம்.ஜி.ஆர்., ‘இதயக்கனி’, ‘மீனவ நண்பன்’ போன்ற படங்களிலும் சிவாஜி ‘திரிசூலம்’, ‘பட்டாக்கத்தி பைரவன்’ உள்ளிட்ட படங்களிலும் பெல்பாட்டங்களில் தரிசனம் தந்தார்கள். (தெலுங்குப் படங்களில் என்.டி.ஆரும், மகேஷ்பாபுவின் அப்பா கிருஷ்ணாவும் பெல்பாட்டம் போட்டுக்கொண்டு ஆடிய ஆட்டங்கள் ‘அட்ராசிட்டி’ வகையைச் சார்ந்தவை).

 

பொதுச் சேவைக்கான அடையாளம்!

‘ஸ்வச் பாரத்’ எனப் பிரதமர் மோடி இப்போது முன்னெடுக்கும் தூய்மைப் பணியை அப்போதே பெல்ஸ்காரர்கள் செய்துகாட்டியதை வரலாறு ஏனோ பதிவு செய்யவில்லை. நடக்கும்போது தங்களது பேன்ட்டின் நீண்ட அடிப் பகுதியால் தெருவையும் கூட்டிக்கொண்டே சென்றார்கள். சமுதாய அக்கறை மிகுந்த காலகட்டம் அது! இந்தச் சேவைக்கு சமூகத்திடமிருந்து பாராட்டு கிடைத்தாலும், துணி துவைக்கும் பெண்களிடமிருந்து ஏகவசனம்தான் ஒலிக்கும். “என்ன ஃபேஷனோ கர்மமோ? ஊர்க் குப்பையெல்லாம் இதுலதான் ஒட்டிக்கிட்டு இருக்கு” என்று அம்மாக்களைச் சாபமிடவைத்த உடை அது!

சாலைகளைப் பெருக்குவதன் காரணமாக பேண்ட்டின் கீழ்ப் பகுதி அடிக்கடி கிழிந்துவிடும் என்பதால், அப்பாக்களிட மிருந்தும் வசை மழை பொழியும். எனவே, இதற்கு ஒரு தீர்வு கண்டறியும் நிலைக்கு அக்கால இளைஞர்கள் தள்ளப் பட்டார்கள். பெல்ஸின் அடிப்பகுதி உராய்வில் கிழிவதைத் தடுக்க அரைவட்டமாகக் குதிகால் பகுதியில் ஜிப் வைத்துத் தைத்துக்கொள்வதுதான் அந்தத் தீர்வு.

 

அதற்குப் பின்னிட்டாவது பிரச்சினை தீர்ந்ததா என்றால், அதுவும் இல்லை. தாய்மார்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் விதேசிப் பொருட்களை நெருப்பில் போட்டதுபோல, தண்ணீர் காய வைக்கும் அடுப்பில் பேண்ட்டைத் தூக்கிப் போடாதது ஒன்றுதான் பாக்கி. அந்த அளவுக்கு வெகுண்டெழுந்துவிட்டார்கள் தாய்மார்கள். முன்பாவது கால்சராயின் அடிப்பகுதி கருமையான அழுக்கைத்தான் ஈட்டி வந்தது. ஆனால், பெல்ஸில் பொருத்தப்பட்ட ஜிப்பின் இண்டு இடுக்குகளில் ஊரின் அனைத்து ரக அசுத்தங்களும் சேர்ந்துகொண்டதுதான் அந்தக் கொந்தளிப்புக்குக் காரணம்.

ஒருவழியாக, 80-களின் இறுதியில் டைட் பேன்ட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. அதன் பிறகு, பேரலல் பேன்ட் என்ற கால்சட்டையை சல்மான் கானும், நம்மூர் கார்த்திக்கும் பிரபலப்படுத்தினார்கள். பெல்ஸ் பேன்ட்டின் பொற்காலம் முடிவுக்கு வந்துவிட்டாலும், ‘சம்போ சிவசம்போ’ என்று முழங்கும் ரஜினியின் பெல்ஸைக் காணும்போதெல்லாம், அந்தக் கால நினைவுகள், நினைக்க நினைக்க இனிக்கும்!

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6668401.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.