Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு விவகாரம்: நேர்மையான ஐக்கியத்திற்கு தமிழ்த் தரப்பு தயார் - முஸ்லிம் தரப்பு தயாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு விவகாரம்: நேர்மையான ஐக்கியத்திற்கு தமிழ்த் தரப்பு தயார் - முஸ்லிம் தரப்பு தயாரா?

முத்துக்குமார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழிகளினால் பெற்றிருக்கின்றது. புதிய முதலமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாவிஸ் நஸீர் அகமட் பதவி ஏற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதனால் அம்மாவட்டத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெமீல் அதற்காக முயற்சி செய்தார். அது பலனளிக்கவில்லை. அவர் சாய்ந்தமருதில் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார். கட்சி நீக்க அறிவிப்பை தலைமை செய்தவுடன் அவர் அடங்கிவிட்டார்.

முஸ்லிம்களின் அரசியல் மையம் கிழக்கு மாகாணம் தான். அதுவும் அம்பாறை மாவட்டமே! ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் அவரின் தலைமைக்கு எப்போதும் அம்பாறை மாவட்டத்தில் எதிர்ப்பு இருந்தது. அங்கிருந்து முதலமைச்சர் பதவி வருவது தனது தலைமைக்கு ஆபத்தைத் தரும் என ஹக்கீம் நினைத்திருக்கலாம்.

முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட குறுக்கு வழிகள் ஏராளம். அது விடயத்தில் மகிந்த ராஜபக்ஸ தோற்றுப் போய்விடுவார் என்றே கூறவேண்டும். கூட்டமைப்பு விடாப்பிடியாக முதலமைச்சர் தங்களுக்கே எனக் கூறியிருந்தது. மூன்று தடவை முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் பலன் கிடைக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டமைப்பை முறிக்க தயாராக இருக்கவில்லை.

ரவூப் ஹக்கீம் யாரை எதிர்த்து வெளியேறி மைத்திரியை ஆதரிக்க முற்பட்டாரோ அந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவினை நாடி அதனைப் பெற்றுக் கொண்டார். ரிசாத் பதியுதீனுடன் எதுவும் பேசாமலேயே அவர்களது உறுப்பினர்கள் இருவரையும் பிடுங்கியெடுத்தார். பிள்ளையானுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடமிருந்து இரு உறுப்பினர்களது ஆதரவினைப் பெற்றார். அதாவுல்லா எங்கே தான் தனிமைப்பட்டு விடுவேனோ என அஞ்சி தானாகவே ஆதரவு கொடுத்தார். ரவூப் ஹக்கீமுக்குத் தேவையான பெருபான்மை கிடைத்து விட்டது.

தற்போது வெளியில் இருப்பது கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு உறுப்பினர்களும் தான். சம்பந்தனின் இராஜதந்திரம் தோற்றுப் போனதால் கூட்டமைப்பு ஆடிப்போய்விட்டது. அரசாங்கத்திடமிருந்து இந்த சிறிய அபிலாசைகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நீங்கள் எவ்வாறு பெரிய அபிலாசைகளைப் பெறப் போகின்றீர்கள் என மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். சம்பந்தன் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்துப் பேசியபோதும் அவர்கள் திருப்திப்படுவதாக இல்லை. தற்போது மாகாண நிர்வாகத்தில் சில அமைச்சுப் பதவிகளையாவது பெற முயற்சிப்பதாக தகவல்.

கிழக்கில் 40:37:23 என்ற விகிதத்தில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகிய மூன்று சமூகங்களும் வாழ்வதால் எந்தச் சமூகமும் தனித்து நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாது. இரண்டு சமூகங்கள் இணைந்தால் கைப்பற்ற முடியும். தமிழ் - சிங்கள முரண்பாடு இருப்பதனால் முஸ்லிம்கள் அதனைப் பயன்படுத்தி நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தமிழர்களில் அம்பாறை மாவட்டத் தமிழர்களும், மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களும் முஸ்லிம்களையே எதிரியாகப் பார்க்கின்றனர். இதனால் சிங்கள சமூகத்துடன் இணைந்து நிர்வாகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்தது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயாகமகே தனக்கு முதலமைச்சர் பதவியை மட்டும் தாருங்கள் மீதி அமைச்சுப் பதவிகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் இணைந்து செயற்படலாம் எனக் கேட்டார். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பலருக்கு அதில் விருப்பம் இருந்த போதும் தலைமை அதனை நிராகரித்து விட்டது.

கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டினால் இதனை ஆதரிக்கின்ற போதும் அது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. கிழக்கின் பூர்வீக மக்கள் தமிழர்களும், முஸ்லிம்களுமே! சிங்களவர்கள் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் நிலங்களைப் பறித்தவர்கள். என்ன தான் முரண்பாடு இருந்தாலும் தமிழர்களும் முஸ்லிம்களுமே கிழக்கின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் சவாரி செய்வதை அனுமதிக்க முடியாது.

மாகாணசபை முறைமை ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவித அதிகாரமும் அற்ற ஒன்றாக இருக்கும் போது முதலமைச்சர் பதவியினால் வெறுமனே குறியீட்டுப் பயன் கிடைக்குமே தவிர வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தற்போது இப்பதவி இரு சமூகங்களுக்கிடையேயும் ஈகோ பிரச்சினையை உருவாக்கிவிட்டது. முதலமைச்சர் பதவியை தமிழர்களுக்கு விட்டுக் கொடுத்தால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழக்கும். முஸ்லிம்களிடம் விட்டுக் கொடுத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வாக்கினை இழக்கும். சம்பந்தன் தலைமையின் கவலையெல்லாம் வரும் பாராளுமன்றத் தேர்தலில் இவ் விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே.

இந்த அதிகாரமாற்ற மாகாணசபை முறைமை கூட தமிழர்களின் இரத்தம் சிந்திய போராட்டத்தினால் தான் கிடைத்தது. தமிழர்கள் ஆயிரக் கணக்கில் போராட்டத்தில் உயிரிழந்தனர். இரத்தம் எதுவும் சிந்தாமல் போராட்டத்தைக் காட்டி சிங்கள அரசிடமிருந்து சலுகை பெற்ற முஸ்லிம்கள் மாகாண சபையைக் கைப்பற்றுவதும், தமிழர்களின் நலன்கள் முழுமையாகப் புறக்கணிப்பதும் தமிழர்களுக்கு சகிக்க முடியாததாக உள்ளது.

வடக்கு – கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கின் அதிகாரிகளில் முஸ்லிம்களே அதிகமாக இருந்தனர். அவர்கள் அமைச்சர் பதவிகளின் அதிகாரத்தையும் பயன்படுத்தி கிழக்கில் தமிழர்களை முழுமையாகப் புறக்கணித்தனர். மாகாணசபை நிர்வாகமும் அவர்களின் கைகளுக்கு வந்த பின்னர் அதிகாரிகள் - அமைச்சர்கள் - மாகாண நிர்வாகம் ஆகிய மூன்றும் இணைந்து வெளிப்படையாகவே புறக்கணிப்பைச் செய்தன. சிங்களவர்கள் முஸ்லிம்களின் நிலங்களைப் பறிக்க அவர்கள் சிங்களவர்களுடன் மோதாது தமிழர்களின் நிலங்களை அதிகாரத்தின் துணை கொண்டு பறித்தனர். கடந்த இரண்டரை வருட முஸ்லிம் ஆதிக்க மாகாண நிர்வாகத்தில் புறக்கணிப்பு பச்சையாகவே தெரிந்தது. தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் இந்த உண்மைகளை மறந்து விட்டு பேச முடியாது.

மொத்தத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மைய விடயம் தமிழ் முஸ்லிம் முரண்பாடே! இதனை எப்படித் தீர்க்கப் போகின்றோம் என்பதில் தான் கிழக்கின் எதிர்காலமே தங்கியிருக்கின்றது. கிழக்குத் தமிழர்கள் நேரடியாகவே பிரச்சினைக்கு முகம் கொடுப்பதால் உணர்வுரீதியாக இப் பிரச்சினைகளை அணுகுவது தவிர்க்க முடியாதது. அவர்களின் உனர்வுகளைக் கொச்சைப்படுத்தினால் தமிழ் அரசியல் ஒருபோதும் முன்னே செல்ல முடியாது. ஆனால் தூரநோக்கில் சிந்திப்பவர்கள் இது விடயத்தில் உணர்வுகளுக்கும் யதார்த்தற்கும் இடையே சமநிலையைக் காண்பதற்கு முன்வர வேண்டும்.

யதார்த்த நிலையில் வட – கிழக்கு தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் தாயகமே. எனவே நியாயமான வகையில் இரு சமூகங்களும் தாயகத்தின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராக வேண்டும். அதற்கு இரு தரப்பிலிருந்தும் நேர்மையான உரையாடல்கள் தேவை. கடந்தகாலத் தவறுகளை ஒத்துக் கொள்வதற்கு இருதரப்பும் தயாராக இருக்க வேண்டும். இதற்கு இரு தரப்பிலிருந்தும் நேர்மையான உரையாடல்கள் தேவை. இன்றைய நிலையில் தமிழ்த் தரப்பு தயாராக இருக்கின்றது.

வடக்கு – கிழக்கு இணைந்த தாயகத்தில் முஸ்லிம்களுக்கென ஓர் அதிகார அலகினை வழங்குவதற்கும் தயாராக உள்ளது. ஆனால் முஸ்லிம் தரப்பிலிருந்து சிறிய பிரதிபலிப்புக் கூட வரவில்லை. கிழக்கினை எவ்வாறாவது தமக்குச் சொந்தமான பிரதேசமாக மாற்றுவதில் தான் அவர்கள் அக்கறையாக இருக்கின்றனர். இங்கு ஒருகையால் மட்டும் தட்டி சத்தத்தினை எழுப்ப முடியாது. தமிழர்களின் இருப்பினை விலையாகக் கொடுத்து ஐக்கியத்தைப் பேணமுடியாது.

நேர்மையான உரையாடலுக்கு முஸ்லிம் அரசியல் மூன்று தடைகளிலிருந்து விடுபட வேண்டும். முதலாவது தமிழர்களும் சிங்களவர்களும் மோதினால் நாங்கள் நீந்துவோம். அவர்கள் ஐக்கியப்பட்டால் நாங்கள் மூழ்குவோம் என்ற பச்சை வியாபார அரசியலிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். இரண்டாவது தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் வாழப்போகின்றவர்கள். வட – கிழக்கு முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழப்போகின்றவர்கள். எனவே இரண்டிற்கும் தனித்தனியான அரசியலைப் பின்பற்ற தயாராக வேண்டும். தமிழ்த் தேசியத்திற்குள் மலையக அரசியல் கரைய வேண்டும் என வட- கிழக்குத் தமிழர்கள் நினைப்பதில்லை. மூன்றாவது, ஆளும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு விடுதலைக்காக போராடுகின்ற எதிர்ப்பு அரசியலுக்கு முஸ்லிம்களும் தயாராக வேண்டும். தமிழர்களது விடுதலைப் போராட்டத்தில் குளிர் காயலாம் என்ற நினைப்பதைக் கைவிட வேண்டும்.

முஸ்லிம் தேசியம் பேரினவாதத்திற்கு எதிராகக் கட்டியெழுப்பப்படவில்லை. மாறாக தமிழ்த் தேசியத்திற்கு எதிராகத் தான் கட்டப்பட்டது. அது சிலவேளை காலத்தின் தேவையாக இருந்திருக்கலாம். இன்று முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் தமிழர்கள் அல்ல. சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் தான் ஏற்படுகின்றது. எனவே சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தேசியத்தை மடைமாற்றம் செய்ய தயாராக வேண்டும்.

நேர்மையான ஐக்கியத்திற்கு தமிழத் தரப்பு தயாராக இருக்கின்றது. முஸ்லிம் தரப்பு தயாரா?

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=bf904670-c8b4-48ae-8300-0c1a290caaf3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.