Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் செலவு

Featured Replies

plan_2402342f.jpg
 
அன்றாட வாழ்க்கையில் நாம் பல விஷயங்களுக்கு துறை வல்லு நர்களை, ஆலோசகர்களை நாடுகிறோம். உடல் நலம் பேண மருத்துவர்களிடம் செல்கிறோம். ஏதேனும் தகராறு, பிரச்சினை என்று வந்தால் வழக்கறிஞரிடம் செல்கிறோம். நிதி சார்ந்த விஷயங்களில் கூட வரு மான வரி காரணங்களுக்காக ஒரு தணிக்கையாளரின் (auditor) உதவி யைக் கோருகிறோம்.
 
ஆனால், நிதி வள நிர்வாகம் என்று வரும் போது மட்டும் 'நமக்கு நாமே' திட்டம் போட்டு செயலாற்றுகிறோம். இதை நான் எனது அனுபவத்திலிருந்து மட்டும் சொல்லவில்லை. நாடு தழுவிய அளவில் நிதி வள நிர்வாகம் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதலீடுகளுக்கு தங்கள் பெற்றோர்களையோ, நண்பர்களையோதான் ஆலோசனைக்கு நாடுகிறார்கள். அவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு தாமே சில முடிவுகளை எடுத்துச் செயல் படுத்துகிறார்கள்.
 
பிரச்சினை தெரியாது
 
இப்படிச் செய்வதில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் கண்டு கொள்ள முடியும் - நமக்கு ஆலோ சனை வழங்குபவர்கள் பெரும்பாலும் துறை வல்லுநர்களாக இருப்பதில்லை. மேலும் நமது பெற்றோர்கள் இருந்த காலகட்டமும் அவர்களுக்கு இருந்த நிதித் திட்ட தேர்வுகளும் வேறானவை. அவற்றின் அடிப்படையில் கொடுக் கப்படும் அறிவுரைகள் இந்த காலகட்டத்துக்கு பெருமளவும் பொருந்துவதில்லை.
 
இதெல்லாம் நமக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும் நிதித்துறை வல்லுநர்களை நாடுவதில் நமக்கு சில தயக்கங்கள் இருக்கின்றன என்பது நிஜம். இது ஏன் என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை. எனினும், இத்த கைய ஆலோசகர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், உங்கள் நிதிவள நிர்வாகத்தில் அவர்களுக்குரிய இடம் (role) என்ன என்பதை தெளிவு படுத்துவதன் மூலம் இத்தகைய தயக்கத்தை ஓரளவு குறைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.
 
சென்ற வாரம் ஒரு சுவாரஸ்யமான பெண்மணியைச் சந்தித்தேன். அவருடன் இணையத்தில் பல ஆண்டு களாகத் தொடர்பில் இருந்தாலும், இப்போதுதான் நேரடியாக அவரைச் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் உமா சஷிகாந்த். சென்னையில் வளர்ந்த அவர் இருபது வருடங்களாக மும்பையில் நிதி வளத்துறை ஆசிரியராகப் பணி யாற்றி வருகிறார். அவருடனான உரையாடலில் ஒரு நிதி வள ஆலோ சகரின் பணி என்ன என்பதைப் பற்றி அவரது பார்வையை வித்தியாசமான முறையில் கூறினார். அவர் (பெரும்பாலும்) ஆங்கிலத்தில் கூறியதை நான் சாராம்சமாகச் சொல்கிறேன்.
 
2 முயற்சிகள் தேவை
 
ஒரு தனி நபரின் முதலீட்டுத் தேவைகளும், நிதிவளத் திட்டமும் சரியாக அமைவதற்கு இரண்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இவற்றில் முதலாவதை ‘கீழிருந்து மேல்' எனவும், மற்றதை 'மேலிருந்து கீழ்' எனவும் சித்தரிக்கலாம். இரண்டு முயற்சிகளும் சந்திக்கும் இடத்தில்தான் நல்ல, பயனுள்ள நிதி நிர்வாகம் அமையப் பெறுகிறது.
 
அதென்ன கீழும் மேலும்? எளிமையாகச் சொல்வதென்றால், சந்தையில் சிதறிக் கிடக்கும் பல நிதி மேம்பாட்டு முறைகளை, சாதனங்களைச் சேகரித்து, தேர்ந்தெடுத்து, தொகுத்து தனி நபர்கள் உபயோகிக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களாக மாற்றுவது என்பது கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறை. வங்கி வைப்பு நிதித் திட்டம் முதல் பரஸ்பர நிதித் திட்டங்கள் வரை செய்வது இதைத்தான். இவர்கள் செய்வது
 
‘சிறிய' விஷயங்களைத் தொகுத்து நுகர்வதற்கு (முதலீடு செய்வதற்கு) ஏற்ற பொருட்களாக மாற்றுவது. உதாரணத்திற்கு ஒரு பரஸ்பர நிதி மேலாளர், சந்தையில் நல்ல பங்குகள் எவை என்று தேர்வு செய்து ஒரு பரஸ்பர நிதி மூலம் தொகுத்து வழங்குகிறார்.
 
ஆனால், இவற்றில் எல்லாவற்றிலும் முதலீடு செய்ய முடியுமா? அல்லது அப்படிச் செய்வது சரியா? சரியானது இல்லைதானே...? நமக்கு என்ன வேண்டுமோ அதை தெரிந்தெடுத்து பயன்படுத்துவதான் சரியானது இல்லையா? இதுதான் மேலிருந்து கீழ் செல்லும் அணுகுமுறை. ஒரு குறிப்பிட்ட நபரின் வாழ்க்கைச் சூழ்நிலை, நிதி நிலை, தேவைகள், ஆசைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ற நிதி நிர்வாகப் பொருட்களைத் தெரிவு செய்வது என்பது தான் இந்த முயற்சியின் குறிக்கோள்.
 
இப்பொழுது, யார் எதைச் செய்கிறார்கள்? வங்கிகள், பரஸ்பர நிதிகள், அந்த நிதிகளை மேலாண்மை செய்பவர்கள் ஆகியோர், கீழிருந்து மேல் செல்லும் திசையில் பயணித்து நிதி நிர்வாகப் ‘பொருட்களை' உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு உங்களைப் பற்றிய குறிப்பான அக்கறை இல்லை, பொதுவாக சந்தையின் தேவைக்கேற்ப இத்திட்டங்களை உருவாக்குகிறார்கள்.
 
அப்படியென்றால் உங்களைப் பற்றிய அக்கறையோடு, உங்களுக் கேற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, பரிந்துரைப்பது யார்? அந்த மேலி ருந்து கீழ் அணுகுமுறையை உங்க ளுக்குச் சாதகமான முறையில் செயல்படுத்துபவர் யார்? அவர் தான் இக்கட்டுரையின் கதாநாயகனான நிதிவள ஆலோசகர்.
 
ஆலோசகர் அவசியம்
 
எனது அடுத்த பத்தியில் நிதி வள ஆலோசகர் எப்படி உங்களுக்குத் திட்டங்களைத் தேர்வு செய்கிறார் என்று விவரிக்கிறேன். ஆனால், இப்பொழுது ஆலோசகரின் தேவை மற்றும் அவர் எப்படி அங்கம் வகிக்கிறார் என்பதை மட்டும் உணர்த்த விரும்புகிறேன்.
 
அவரது முக்கிய நோக்கம் உங்க ளைப் புரிந்து கொண்டு, உங்களுக்கு எது தேவை, என்ன திட்டங்கள் பயன்படும் என்பதை கண்டறிந்து உங்களுக்குப் பரிந்துரைப்பது.
 
சமயோசிதமான வழி
 
முதலாவது, உங்கள் முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பது. இதன் முக்கியத்துவம் மிக அதிகம். ஒரு ஆலோசகரின் உந்துதல் இல்லாததால் முடங்கிக் கிடக்கும் நிதித் திட்டங்கள் ஏராளம். இரண்டாவது, அப்படி ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில் உங்களை நிலையாக பயணிக்கச் செய்தல். நடுவில் சோர்ந்தோ, ஏமாற்றமடைந்தோ திட்டத்தைக் கைவிடாமல் இருக்கச் செய்தல். மூன்றாவது, மிக முக்கியமாக, உபயோகமற்ற பல நிதித் திட்டங்களில் உங்களை முதலீடு செய்ய விடாமல் தடுத்தல். இந்த மூன்றாவது மிக முக்கியம். இந்த ஒரு விஷயத்தாலேயே பலரும் பெரும் பயன் அடைவார்கள்.
 
ஆகையால், உங்கள் தேவைகளை அறிந்து, உங்களுக்கு நிதி வள ஆலோசனை வழங்க ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்வதே சமயோசிதமான வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
srikanth_2245017a_2253162a.jpg
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

வளமான ப(ய)ணத்திற்கோர் வழிகாட்டி

 

payanam_2410026f.jpg

 

அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒரு விளம்பரம் உள்ளது. ஒரு வாகனக் காப்பீட்டு நிறுவனம் வெளியிடும் விளம்பரம். அதில் இருப்பது ஒரே வாசகம் தான் - ‘நீங்கள் எங்களுக்கு பதினைந்து நிமிடங்கள் தாருங்கள்; உங்கள் வாகனக் காப்பீட்டுத் தொகையில் பதினைந்து சதவீதம் சேமித்துக் காட்டுகிறோம்'. அவ்வளவுதான். சுமார் இருபது வருடங்களாக இன்றளவும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் வெற்றிகரமான விளம்பரம் இது.
 
இந்தியாவில்…
 
எனக்கு ஒரு ஆசை. இந்தியாவில் இதைச் சற்று மாற்றிச் சொல்லி ஒரு விளம்பரம் செய்ய வேண்டும். 'ஒரு நிதி ஆலோசகருடன் பதினைந்து நிமிடங்கள் செலவிடுங்கள்; அவர் உங்களுக்கு வருடம் 15 சதவீதம் லாபம் வருமாறு திட்டம் தருவார்' என்று. பிரச்சினை என்னவென்றால் இப்படியெல்லாம் லாப வீதத்தைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்தால் செபி(SEBI)யிலிருந்து உதைக்க வருவார்கள். ஆகையால் அப்படிப்பட்ட விளம்பர ஆசையெல்லாம் ஆசை யாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
 
ஆராய்வதில் தவறில்லை!
 
ஆனால் அதிலிருக்கும் அடிப்படைக் கருத்தை மறுக்க முடியாது. ஒரு சரியான நிதி ஆலோசகர் நமது வாழ்வின் நிதிப்பயணத்தை முறையான பாதையில் கொண்டு சென்று நல்ல லாப வீதத்தில் வளம் பெருக்கித் தருவார். அவர் இதை எப்படிச் செய்கிறார்? இது போன்ற ஆலோசகர்கள் செயல்படும் விதம் என்ன? இவற்றைப் புரிந்து கொள்வது நல்லது. நதிமூலத்தை ஆராயக் கூடாது; நிதி மூலத்தை ஆராய்வதில் தவறில்லை.
 
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இங்கு சொல்வது முதலீடுகள் சார்ந்த ஆலோசகர்களைப் பற்றி மட்டுமே. வரி செலுத்துதல், கடன் பெறுதல், காப்பீடு இவற்றுக்கு தனித்தனியே ஆலோசகர்கள் உள்ளனர். எனது நோக்கம் முதலீடுகளில் கவனம் செலுத்துவது மட்டுமே.
 
இத்தகைய ஆலோசகர்களின் செயல்முறையில் மூன்று பகுதிகள் உள்ளன. முதலாவது உங்களைப் (முதலீட்டாளர்) பற்றி மட்டுமேயானது. இன்னொன்று முதலீட்டுச் சாதனங்களைப் பற்றி அறிந்து கொள்வது மட்டுமேயானது. மூன்றாவது இவ்விரண்டையும் இணைக்கும் பாலம். இதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
 
மூன்று விஷயங்கள்
 
ஒரு ஆலோசகர் செய்யும் முதல் விஷயம் உங்களைப் புரிந்து கொள்வது. நிதி வள மேம்பாடு என்று வரும் போது ஒரு முதலீட்டாளரைப் புரிந்து கொள்வது என்பது முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது. ஒன்று, உங்கள் வருமானம், வரவு செலவு ஆகியவற்றை அறிவது. இரண்டாவது, உங்களது எதிர்கால நிதித் தேவைகளைப் (அவை எந்தக் கால வரையறைக்காக இருந்தாலும்) பற்றி அறிவது. மூன்றாவது, உங்கள் உளவியலை - குறிப்பாக உங்களால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை - அறிவது.
 
இவை மூன்றையும் அறிந்து கொள்ளும் போதுதான், உங்களது நிதித் தேவைகளைப் பற்றியும் உங்கள் சேமிப்புப் பழக்கங்கள் மற்றும் எப்படிச் செயல்படுவீர்கள் என்பதைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள முடியும். இவற்றை அறிந்த பிறகு, ஒரு நல்ல ஆலோசகர் முதலீடுகளைப் பற்றி உடனே பேச ஆரம்பித்து பரிந்துரைத்து விட மாட்டார்.
 
முதலில், உங்கள் வரவு செலவு போக்குகளை ஆராய்ந்து நீங்கள் மேலும் சேமிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து கூறுவார். பின்னர், உங்களுக்கு இன்றியமையாத காப்பீடுகள் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொள்வார். அதன் பின்னரே முதலீடுகள் பற்றி யோசிப்பார், செயல்படுவார்.
 
பொருத்தமானது எது?
 
இரண்டாவது பகுதி - எந்த ஒரு நிதி ஆலோசகருக்கும் பரந்து பட்ட முதலீட்டுச் சாதனங்களைப் பற்றிய நல்ல புரிதல் இருக்கும். அது அத்தகைய சாதனங்களை தொடர்ந்து பார்வையிட்டு ஆராய்வதன் மூலமாக வருவது. மேலும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார சூழ்நிலையில் எத்தகைய சாதனங்கள் மற்றும் முறைகள் பொருந்தி வரும் என்பதும் தெரிந்திருக்கும்.
 
நிலையான செயல்பாடு
 
குறிப்பாக பரஸ்பர நிதிகளைப் பொருத்தவரை ஒரு ஆலோசகர் முக்கியமாகக் கருதுவது நிலையான சிறப்புச் செயல்பாடு. அதாவது, இன்றைய அளவில்/ சென்ற ஒரு வருடத்தில்/ போன மாதத்தில் எந்த திட்டங்கள் செயல்பாட்டினைக் கொண்டிருந்தன என்பதை மட்டும் பார்த்தால் போதாது.
 
பல வகையான சந்தை சூழ்நிலைகளிலும் நல்ல செயல்பாடு - அதாவது நல்ல லாபம், அல்லது குறைவான நஷ்டம் - கொண்டிருந்தன என்பதைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். இதையும் தாண்டிச் சென்று, ஏராளமான முதலீட்டுக் காலங்களில் நிதியின் செயல்பாடு எப்படி இருந்தது என்ற அளவில் ஆராய்பவர்களும் உண்டு (இதை rolling returns என்று சொல்வார்கள்).
 
இப்படியாக ஒரு ஆலோசகர் உங்களைப் பற்றிய புரிதலை ஒரு பக்கமும் முதலீட்டுச் சாதனங்களைப் பற்றிய புரிதலை இன்னொரு பக்கமும் வைத்துக் கொண்டு யோசிப்பார். இவற்றை இணைக்கும் பாலம் என்ன?
 
முதலீடுகளை திட்டமிடுவது
 
அதுதான் மூன்றாவது - இதை ‘வகைமை விகிதாசாரத் திட்டம்' என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இதை asset allocation plan என்று சொல்வார்கள். நிதித் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகைப்படும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு ரிஸ்க் அளவையும், லாப எதிர்பார்ப்பு அளவும் இருக்கும். ஒரு நிதித் திட்டம் என்பது முதலில் ஒரு முதலீட்டாளரின் தேவைகள் மற்றும் தன்மைக்கேற்ப இந்த வகைச் சாதனங்களில் இந்த வீதத்தில் முதலீடு செய்யலாம் என்பதை நிர்ணயம் செய்வதிலேயே தொடங்குகிறது.
 
மாறுபடும் விகிதாச்சாரம்
 
உதாரணமாக, ஒரு முப்பது வயது இளைஞர் தனது குழந்தையின் மேற்படிப்புக்கு பதினைந்து வருடத் திட்டம் ஒன்று துவங்க விரும்புகிறார். இன்னொருவருக்கு நாற்பத்தைந்து வயதாகிறது. இன்னம் ஐந்து வருடங்களில் நடத்தி வைக்க வேண்டிய திருமணத்துக்காக முதலீடு செய்கிறார். இவர்கள் இருவரும் வெவ்வேறு அளவில் ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ப அவர்களது வகைமை விகிதாசாரங்கள் மாறுபடும்.
 
இந்த விகிதாச்சாரத்தை முடிவு செய்து விட்டால், ஒவ்வொரு வகைமையிலும் இருக்கும் நல்ல நிதித் திட்டங்களை (முன்னர் ஆராய்ந்து வைத்த படி) தேர்ந் தெடுத்துப் பொருத்தி, ஒரு முதலீட்டுத் திட்டம் உருவாக்கி விடலாம் இல்லையா? இப்படித் தான் ஒரு ஆலோசகர் செயல்பட்டு ஒருவருக்கு எத்தனை திட்டங்கள் தேவையோ அவற்றையெல்லாம் வடிவமைக்கிறார்.
 
மந்திரம் கிடையாது
 
இதில் மந்திரமில்லை; தந்திர மில்லை. ஆனால், இதைச் செவ்வனே செய்வதற்கு, அனுபவம், கல்வி, பொறுமை, ஆராய்ச்சித் திறமை ஆகியவை வேண்டும்.
 
இன்று இந்தப் பத்தியில் ‘நல்ல ஆலோசகர்' என்ற சொற்றொடரைச் சில இடங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். அது என்ன ‘நல்ல' ஆலோசகர்? அவர் எத்தகையவர்? அவருக்கான இலக்கணம் என்ன? அப்படிப்பட்டவரைக் கண்டடைவது எப்படி? அது அடுத்த வாரம்.
 
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முதல் செலவு: விற்பனையாளர் தேவையில்லை!

 

work_2417219f.jpg

 

ஒரு நல்ல நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி என்று சொல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ஒரு நிதி ஆலோசகராக, குறிப்பாக பரஸ்பர நிதிகளைப் பரிந்துரைக்கும் ஆலோசகராக நல்ல முறையில் செயல்படுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை.
 
பொதுவாகவே முதலீட்டுச் சாதனங்கள் என்பவை அரூபமானவை; அவற்றில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. ஒரு தங்க நகை போல, ஒரு கிரவுண்ட் நிலம் போல இதைத் தொட்டுப் பார்க்கவோ, அளந்து பார்க்கவோ முடியாது. இரண்டாவது, அவற்றின் பலன் என்பது பின்னொரு நாளில் வரக்கூடியது - அதாவது உடனடி சந்தோஷம் தரக்கூடியவை அல்ல. மூன்றாவது, பரஸ்பர நிதிகள் என்று வரும்போது, அவை எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் இருக்கும் சாதனங்கள். இப்படி, அரூபமான, உடனடி பலன் தராத, உத்தரவாதமில்லாத முதலீட்டுச் சாதனங்களை உங்களுக்கு விளக்கி, அவை உங்கள் எதிர்காலத்துக்கு உகந்தவை என்று புரிய வைத்து நிலையாக முதலீடு செய்ய வைப்பது என்பது கடினமான விஷயம்.
 
அன்றாடம் புதுப்புது சிக்கல்களையும் வித்தியாசமான மனிதர்களின் வினோதமான சந்தேகங்களையும் எதிர்கொண்டு திறம்பட செயல்பட வேண்டிய பணி இது. இந்த சவால்களை ஒரு ஆலோசகர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே அவர் ஒரு முதலீட்டாளருக்கு எத்தகைய சேவையை வழங்குகிறார் என்று தீர்மானிக்கிறது.
 
இதையெல்லாம் ஒரு தகவல் ரீதியாகத்தான் சொல்கிறேன். ஒரு முதலீட்டாளர் என்ற முறையில் நீங்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. ஒரு முதலீட்டாளருக்குத் தேவை ஒரு நல்ல ஆலோசகர், அவ்வளவுதான். அப்படிப்பட்ட ஒருவருக்கான சாமுத்ரிகா லட்சணங்கள் என்ன? அவரைக் கண்டு கொள்வது எப்படி?
 
இந்த கேள்விகளுக்குப் பதில் காண்பதற்கு முன் பிரச்சினை என்ன என்று பார்த்து விடுவோம். ஒருவர் தன்னை நிதி ஆலோசகர் என்று அழைத்துக் கொண்டு சேவைகளை வழங்குவதற்கான அடிப்படைத் தகுதியை அடைவது சற்று சுலபமானதுதான். ஓரிரு தேர்வுகளைக் கடந்து விட்டு, விண்ணப்பித்து, கொஞ்சம் கட்டணமும் கட்டி விட்டால், எவரும் தம்மை ஒரு நிதி ஆலோசகர் என்று அழைத்துக் கொள்ளலாம்.
 
இவர்களில் பெரும்பான்மை யானோர் உங்களுக்கு இலவசமாக ஆலோசனை சேவையை வழங்குவர். இவர்களுக்கான வருமானம் என்பது நீங்கள் எந்த நிதியில் முதலீடு செய்கிறீர்களோ அந்த நிதி நிறுவனம் தரும் சேவைக் கட்டணத் தொகைதான். நீங்கள் எவ்வளவு முறை முதலீடு செய்கிறீர்களோ, எவ்வளவு அதிகம் முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப ஒரு ஆலோசகருக்கு வருமானம் அதிகரிக்கும். உங்கள் முதலீடு நன்கு வளர்ந்தால், அவர்களது வருமானமும் வளரும்.
 
இப்படி இருப்பதால், ஒரு சிலர் உங்களை எப்பாடுபட்டாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து விட வேண்டும் என்று மெனக்கெட்டு, உங்களிடமிருந்து முதலீட்டினை வாங்கி விட்டு, அதற்கான ஊதியத்தையும் பெற்று விட்டு, பின்னர் உங்களை மறந்து விட்டு இன்னொருவரைத் தேடிச் சென்று விடுவார்கள்.
 
அவர்கள் பரிந்துரைக்கும் முதலீடு உங்களுக்கு உகந்ததா என்பதை விட அவர்களது வருமானத்துக்கு உகந்ததா என்பதிலேயே அவர்களது அக்கறை இருக்கும். இவர்களை ஆலோசகர்கள் என்று சொல்வதை விட, விற்பனையாளர்கள் என்று சொல்வதே பொருந்தும். இவர்களைத் தவிர்ப்பது எப்படி? மாறாக, ஒரு நல்ல ஆலோசகரை அடையாளம் காண்பது எவ்வாறு? இதற்கு ஒரு சில எளிய வழிமுறைகள் உள்ளன.
 
இவற்றில் முதன்மையானது, ஒரு ஆலோசகர் உங்களை ஆரம்பத்தில் அணுகும் முறை. ஒரு நல்ல ஆலோசகர் எந்த ஒரு பரிந்துரை செய்வதற்கு முன்பும் உங்களையும் உங்கள் நிதி நிலைமை, குடும்பச் சூழல், உங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முனைவார். அப்படிச் செய்யாமல், எடுத்த எடுப்பிலேயே, 'சார் ஒரு நல்ல ஸ்கீம் வந்திருக்கு மார்கெட்ல' என்று உரையாடலைத் தொடங்கினால் நீங்கள் ஒரு விற்பனையாளருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
 
இரண்டாவது, முதலீடுகளுக்கு முன்பாக, உங்களது தற்போதைய நிதி நிலைமை குறித்து ஆராய்ந்து அவற்றில் சீர்செய்ய வேண்டியதைச் செய்ய முயற்சி செய்கிறாரா என்பதை நோக்க வேண்டும். உதாரணத்துக்கு நீங்கள் போதுமான அளவு சேமிக்கிறீர்களா, உங்களுக்குத் தேவையான காப்பீட்டுத் தொகை இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொண்ட பின்புதான் முதலீடுகளுக்கு வர வேண்டும்.
 
மூன்றாவது, முதலீடுகள் என்று வரும் போது, எத்தகைய சாதனங்களைப் பரிந்துரைக்கிறார் என்று பார்க்க வேண்டும். ஒரு நல்ல ஆலோசகர் பெரும்பான்மையும், சந்தையில் நன்கு நிலைத்து நின்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களையே பரிந்துரை செய்வார். ஆனால் பல சமயங்களில் புதிதாக வந்திருக்கும் திட்டங்களில் (NFO என்று அறியப்படுபவை) ஒரு ஆலோசகருக்கு ஊதியம் அதிகம். ஆகையால் அவற்றைப் பரிந்துரைக்க முனைவார்கள். அத்தகையவர் என் பார்வையில் உங்கள் நலனை கருத்தில் கொள்ளாத நிதித்திட்ட விற்பனையாளர் என்பதே.
 
நான்காவது, அவர் எத்தகைய சொற்களை பயன்படுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும். சந்தை சார்ந்த எந்த ஒரு முதலீட்டுத் திட்டமும் லாப உத்திரவாதங்கள் இல்லாதவை. ஆனால் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் உத்திரவாதங்களைப் பெரிதும் விரும்புபவர். ஆகையால் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக ‘இது கண்டிப்பாக 20% கொடுக்கும் சார்' என்றோ, ‘நான் கேரண்டி சார்' போன்ற வாக்கியங்களைச் சிலர் பயன்படுத்துவார்கள். இவை யெல்லாம் விற்பனை உத்திகள். இவற்றைப் பயன்படுத்துபவர்கள் விற்பனையாளர்களே.
 
மாறாக ஒரு நல்ல ஆலோசகர் உங்களுக்கு ஒரு திட்டத்தில் இருக்கும் ஆபத்துகளை எடுத்துரைத்து விட்டு, அதில் ரிஸ்க் எடுப்பதன் ஆதாயத்தை விளக்கிக் கூறுவார். அதை நீங்கள் எந்த அளவுக்கு ஏற்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களது ரிஸ்க் தாங்கு சக்தியைத் தீர்மானித்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குவார். மேலும் ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் விளக்கிச் சொல்வார்.
 
இப்படியாக, உங்களைப் புரிந்து கொண்டு, உங்களுக்கேற்ற சிறப்பான செயல்பாடுடைய திட்டங்களை விளக்கிப் பரிந்துரைப்பவரே ஒரு நல்ல ஆலோசகர். இப்படிப்பட்ட ஒருவரைக் கண்டடைவதே உங்களுக்கான முதல் பணி. இப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் சொல்படி செயல்பட்டு முதலீடுகள் செய்தீர்கள் என்றால் உங்கள் நிதிவளம் நிலையாக, நிறைவாக, நிம்மதியாக வளரும்.
 
ஒரு நல்ல ஆலோசகர் எந்த ஒரு பரிந்துரை செய்வதற்கு முன்பும் உங்களையும் உங்கள் நிதி நிலைமை, குடும்பச் சூழல், உங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முனைவார். அப்படிச் செய்யாமல், எடுத்த எடுப்பிலேயே,
 
  • தொடங்கியவர்

முதல் செலவு: முதலீடுகளும் டெஸ்ட் மேட்ச்தான்

 

run_2431903f.jpg

 

திரைப்படத் துறையின் வர்த்த கத்திற்கும் நிதிச்சந்தைகளின் வர்த்தகத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஒரு படம் வெளிவந்த பிறகு அது ஏன் ஓடியது, அல்லது ஓடவில்லை என்பது பற்றி நிறைய கருத்துகள் வரும். அவற்றில் பல சரியானதாகவும் இருக்கும். ஆனால் ஒரு படம் வெளி வருவதற்கு முன்பு செய்யப்படும் ஊகங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கும். ஒரு படம் ஓடுமா ஓடாதா, மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா, நிராகரிக்கப்படுமா என்று முன்னமே தெரிந்து விட்டால் எத்தனை வசதியாக இருக்கும்? ஆனால் அது எப்பேற்பட்ட நிபுணருக்கும் சாத்தியமே இல்லை என்பது நமக்குப் புரிகிறதல்லவா?
 
வெறும் ஊகம்
 
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களும் அது போலத்தான். சந்தை மூடியதும் அந்த நாளில் ஏன் பங்குகள் உயர்ந்தன அல்லது சரிந்தன என்பது பற்றி ஓரளவுக்குச் சரியாக சொல்ல முடியும். ஆனால் நாளை அதே சந்தை எப்படி நகரும் என்று கேட்டால் வரும் பதில்கள், அவை எத்தனை உறுதியுடன் சொல்லப்பட்டாலும், அவை வெறும் ஊகங்கள் மட்டுமே.
 
ஒரு தேர்ந்த ஆலோசகரிடம் நல்ல வாடிக்கையாளராக இருப்பது எப்படி என்பதைத் தொடர்ந்து பார்க்கையில் இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒரு அனுபவ முதிர்ச்சியுள்ள ஆலோசகர், ஒரு சில கேள்விகளுக்கு, ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்லத் தயங்க மாட்டார்.
 
முதலீட்டாளர்கள் பல சமயம் மிகத் துல்லியமான கணிப்புகளையும் கருத்துகளையும் எதிர்பார்த்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, ‘சார், கையில் கொஞ்சம் பணம் இருக்கு; ஒரு மூணு வருஷத்துக்கு முதலீடு செய்யலாம்னு பாக்கறேன். இப்பவே பண்ணலாமா, இல்லை இன்னொரு ஒரு வாரம், பத்து நாள் கழிச்சு செய்யலாமா?’ என்பது அடிக்கடிக் கேட்கப்படும் கேள்வி வகை. இன்னொன்று, ‘என்ன சார் மார்க்கெட் நல்லா மேல போயிட்டிருக்கு, பணத்தை வெளியே எடுத்துடலாமா, இல்ல இன்னும் கொஞ்சம் மேல போகுமா?’
 
இந்த இரண்டு வகைக் கேள்வி களுமே பதில் ‘எனக்குத் தெரியாது’ என்று தான் ஆரம்பிக்கும். ஒரு நல்ல ஆலோசகர் இது போன்ற விஷயங்களை தொலைநோக்குப் பார்வையில் பொருட் படுத்தப்பட வேண்டியவை அல்ல என்று விளக்குவார்.
 
டெஸ்ட் பந்தயம்
 
ஏனெனில் அதுதான் உண்மை. திட்டமிட்ட முதலீடுகள் என்பது ஒரு டெஸ்ட் பந்தயம் போல; அதை டி20 பந்தயம் போல ஆட முயற்சி செய்யக் கூடாது. உங்கள் ஆலோசகர் உங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது போல ஏதேனும் ஒரு காரணம் சொல்லித் திருப்திபடுத்தி விடலாம். அப்படிச் செய்தால் அது அவரது விற்பனைத் திறத்தை மட்டுமே குறிக்கும். ஒரு நல்ல ஆலோசகர் உங்களுக்கு சில சந்தர்ப்பங்களில் ஒரு ஆசிரியராகவும் இருப்பார். அப்படி இருக்க அவருக்கு அவகாசமும் வாய்ப்பும் நீங்கள் அளிப்பீர்களாயின் அதுவே உங்களுக்கும் நல்லது; உங்கள் நிதி வளத்திற்கும் நல்லது.
 
நாயும் மனிதனும்
 
பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை குறித்து ஒரு உவமை சொல்வார்கள். ஒரு மனிதன் ஒரு நாயை நடை பயணத்தில் அழைத்துச் செல்வது போலத்தான் பொருளாதாரமும் பங்குச் சந்தையும் என்று சொல்லலாம். ஒரு மனிதன் அப்படி நடந்து செல்கையில் நாய் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருக்கும். ஆனால் நடத்திச் செல்லும் மனிதனோ நேரே முன்னேறி நடந்து கொண்டிருப்பான்.
 
பொருளாதாரம் என்பது அந்த மனிதனைப் போல் - முன்னேறிக் கொண்டே இருப்பது; பங்குச் சந்தை அந்த நாயைப் போல - முன்னும் பின்னும் போய்க் கொண்டிருக்கும். ஆனால், கடைசியில் பொருளாதாரம் இழுக்கும் இழுப்பில் பங்குச் சந்தையும் முன்னே சென்று தான் ஆக வேண்டும், அந்த நாயைப் போல.
 
இந்த உண்மை உங்கள் ஆலோசகருக்குத் தெரியும். ஆகையால் சந்தையின் அன்றாட சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டார். உங்களையும் அஞ்சாதவாறு பார்த்துக் கொள்வார் - அவரது அறிவுரைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால்.
 
அதற்காக நீங்கள் பொருளாதாரச் செய்திகளை அறிந்து கொள்ளவே வேண்டாம் என்றோ, அது குறித்து உங்கள் ஆலோசகரிடம் கேட்கக் கூடாது என்றோ சொல்ல வரவில்லை. இத்தகைய உரையாடல்கள் உங்களுக்கு பொருளாதாரம் மற்றும் சந்தைகள் பற்றிய நல்ல புரிதல்களை உருவாக்கும்; உங்கள் ஆலோசகருக்கும் உங்கள் கண்ணோட்டம் குறித்து அறிய உதவும். துல்லியமான கணிப்புகள், மற்றும் எதிர்காலம் குறித்த தீர்மானமான கருத்துக்களை எதிர்பார்த்து உங்கள் ஆலோசகரை நாடாதீர்கள். ஏதாவது ஒரு விதத்தில் அது உங்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.
 
விளம்பரங்கள் பயன் தராது
 
முதலீட்டாளர்கள் அடிக்கடி செய்யும் இன்னொரு விஷயம், விளம்பரங்களால் கவரப்பட்டு தங்கள் ஆலோசகரிடம் சென்று ஒரு குறிப்பிட்ட சாதனத்தில் முதலீடு செய்யலாமா என்று வினவுவது. இப்படிக் கேட்பதில் தவறேதுவுமில்லை. ஆனால், என்னுடைய அனுபவத்தில் மிக அதிகமாக விளம்பரம் செய்யப்படும் முதலீட்டுச் சாதனங்கள் பெரும்பான்மையும் முதலீட்டாளர்களுக்கு நல்லவையாக இருப்பதில்லை. இது ஒரு நல்ல ஆலோசகருக்கும் தெரிந்திருக்கும். ஆதலால், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சொல்லும் வழக்கமான பதில், ‘இது உங்களுக்குத் தேவையில்லை’ அல்லது, ‘இது உங்களுக்கு சரி வராது' என்பதாகவே இருக்கும்.
 
சிக்க வேண்டாம்
 
உங்களுக்கு நல்ல முதலீடுகளைப் பரிந்துரைப்பது மட்டுமல்ல; உங்களை மோசமான முதலீடுகளிலிருந்து பாதுகாப்பதும் ஒரு நல்ல ஆலோசகரின் பணி. ஆகையால், உங்கள் ஆலோசகர் இவ்வாறெல்லாம் சொல்லும் போது ஏமாற்றமடையாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். சந்தையில் ஏராளமான முதலீட்டுச் சாதனங்கள் உள்ளன; அவற்றில் ஒரு சில நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டாலும் பரவாயில்லை, மோசமானவற்றில் போய் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே நலம்.
 
கடைசியாக ஒரு விஷயம் - உங்கள் நிதி ஆலோசகரிடம் முதலீடுகள் செய்வதற்கு மட்டும் செல்ல வேண்டும் என்றில்லை. உங்களது முதலீடுகளிலிருந்து உங்களுக்குப் பணம் தேவைப்படும் போதும் கண்டிப்பாக அவரை கலந்தாலோ சியுங்கள். எந்த சாதனத்திலிருந்து எப்படி எடுத்தால் உங்களுக்கு வரி மற்றும் கட்டணங்கள் மிச்சமாகும் என்பதை உணர்ந்து சரியாக பணம் எடுப்பது எப்படி என்று பரிந்துரை செய்வார்.
 
திட்டமிட்ட முதலீடுகள் என்பது ஒரு டெஸ்ட் பந்தயம் போல; அதை டி 20 பந்தயம் போல ஆட முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் எதிர்பார்ப்பது போல ஏதேனும் ஒரு காரணம் சொல்லித் உங்கள் ஆலோசகர் உங்களை திருப்திப்படுத்தி விடலாம். அப்படிச் செய்தால் அது அவரது விற்பனைத் திறத்தை மட்டுமே குறிக்கும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.