Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியர்களின் இரட்டைப் போக்கும் தமிழ் மக்கள் பேரவையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியர்களின் இரட்டைப் போக்கும் தமிழ் மக்கள் பேரவையும்!

கலாநிதி சர்வேந்திரா

<p>தமிழ்த் தேசியர்களின் இரட்டைப் போக்கும் தமிழ் மக்கள் பேரவையும்!</p>
 

 

கடந்த வாரம் இளம் நோர்வேஜிய ஆய்வாளர் ஒருவர் தாயக நிலமைகள் குறித்தும் தமிழ் டயாஸ்பொறாவின் தாயக ஈடுபாடு குறித்தும் என்னுடன் கலந்துரையாடினார். இவர் அண்மையில் இரண்டு வாரங்கள் இலங்கைப் பயணம் செய்து பலரையும் சந்தித்து உரையாடி தரவுகள் சேகரித்து வந்தவர். இப் பயணத்தின்போது இவர் சந்தித்து உரையாடிய தமிழர்கள் பலரும் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் வாழ்வுநிலை சார்ந்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசவில்லை எனவும், ஓர் எச்சரிக்கை கலந்த உணர்வுடன்தான் பேசினார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மாறாக இவர் சந்தித்துப் பேசிய சிங்கள சமூகத்தினர் ஆட்சிமாற்றம் குறித்து கூடுதல் மகிழ்வுடன் பேசியதாகவும் தெரிவித்தார். தமிழ் டயாஸ்பொறாவின் தாயக ஈடுபாடு குறித்தும் நாம் பேசிக் கொண்டோம்.

இவ் உரையாடலின் போது தமிழ் டயாஸ்பொறாவுக்கும் தாயகத் தமிழ் மக்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பதாகக் கூறப்படுவதை நான் மறுதலித்தேன். எனது பார்வையின்படி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ் மக்களுக்கிடையே தாயகத்திலும் சரி டயாஸ்பொறாவின் மத்தியிலும் சரி இரண்டு வகையான போக்குகள் அல்லது பார்வைகள் தென்படுகின்றன என எடுத்துக் கூறினேன். இவை அரசியல் தீர்வு குறித்து வேறுபட்ட நிலைகளில் மையங்கொண்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். நான் அவதானிக்கும் இவ் இருவகைப் போக்குகள் குறித்து இன்றைய பத்தி சுருக்கமாகப் பதிவு செய்கிறது.

இவ் இருவகைப் போக்குகளைப் பற்றிப் பதிவு செய்யும்போது கட்சிகளைக் கடந்த நிலையிலேயே இந்த அவதானிப்பைப் பதிவு செய்கிறேன். ஒருவகைப் போக்கு ஒரு கட்சியுடையது என்றும் மற்றைய போக்கு இன்னொரு கட்சியுடையது என நாம் இதனை வேறுபடுத்த முடியாது. குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இவ் இருவகைப் போக்கைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். இதனால் இப் போக்குகளைப் பற்றிப் பார்க்கும்போது கட்சி வட்டத்துக்குள் சுருங்கிக் கொள்ளாமல் விடுதல் முக்கியமானது.

முதலாவது போக்கு, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்லது ஒரு தேசம் என்பதற்கான அங்கீகாரம் எட்டப்பட்டு அதன் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. இதனை இன்னொரு வகையில் கூறின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை நிலைப்பாடுகளுக்கான அங்கீகாரத்தை எட்டுதல். எந்தவொரு நிலையான அரசியல் தீர்வு முயற்சிக்கும் முக்கியமானது என இப் போக்கு கருதுகிறது. இத்தகைய அங்கீகாரம் எட்டப்படாவிடின் சிறிலங்கா அரசின் தமிழர்களை இனக்கபளீகரம் செய்யும் நீண்டகாலத்திட்டத்தில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாது எனவும் இப் பார்வையைக் கொண்டவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவைத் தமிழ் மக்களின் அடிப்படைகளுக்கு ஆதரவாக வென்றெடுக்க வேண்டுமே தவிர அனைத்துலுக சமூகத்தின் நிலைப்பாடுகளுக்கேற்ப தமிழ் மக்களின் உரிமைகளைக் கைவிடமுடியாது எனவும் இவர்கள் கருதுகிறார்கள்.

இந் நிலைப்பாட்டைக் கொண்டு தாயகத்தில் உள்ளவர்கள் நாடு பிரியாத தீர்வை முன்வைக்க தமிழ் டயாஸ்பொறவில் உள்ளோர் தனிநாட்டையும் தீர்வுமுறைகளில் ஒரு தெரிவாக உள்ளடக்கி, மக்கள் வாக்கெடுப்பு மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கோருகின்றனர். அரசியல் தீர்வு குறித்து ஜனநாயக அடிப்படையில் மனந்திறந்த கருத்துப்பரிமாற்றத்தைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் 6வது திருத்தச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இப் போக்கைக் கொண்டோரிடம் இருந்து கூடுதலாக வெளிப்படுகிறது. இப் போக்கைக் கொண்ட அரசியற் தலைவர்களில் முக்கியமானவர்களாக வடக்கு முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழ மக்கள் புரட்சி முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

<p>தமிழ்த் தேசியர்களின் இரட்டைப் போக்கும் தமிழ் மக்கள் பேரவையும்!</p>

இரண்டாவது போக்கு, தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்ற நிலைப்பாடுகளைத் தமது அரசியல் நிலைப்பாடுகளாக வெளிப்படுத்தினாலும், இவை அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், கிடைக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட போக்கு. இப் போக்கைக் கொண்டவர்கள் கொள்கையளவில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்லது ஒரு தேசம் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதற்கான சாத்தியம் குறைவு என்பதால் இத்தகைய அங்கீகாரம் இல்லாதவோர் தீர்வையும் ஏற்றுக் கொள்வதுதான் விவேகமானது என இவர்கள் கருதுகிறார்கள். அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதும் இவர்களுக்கு முக்கியமானதாகப் படுகிறது. சிங்களத் தலைவர்களிடம் தமக்கு இருக்கும் நெருக்கமான தொடர்புகள் மூலம் காரியம் சாதிக்கலாம் என்றவகையான கருத்துக்களும் இவர்களிடம் உள்ளது. இவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாமல் முதலாவது போக்கின் நிலைப்பட்டு இயங்குவது போலவே தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இப் போக்கைக் கொண்ட முக்கிய அரசியல் தலைவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உலகத் தமிழ் பேரைவத் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் அக்கறை கொண்டோர் அனைவரும் இவ் இரண்டு போக்குக்கள் தொடர்பாகத் தாம் எங்கு நிற்கிறோம் எனத் தம்மை மதிப்பீடு செய்தல் ஒன்றும் கடினமானதல்ல. ஒருவரின் சிந்தனை இவ் இரு போக்கில் எதற்கு நெருக்கமாக இருக்கிறதோ அதற்கேற்பவே அவர்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் வெளிப்படுகின்றன.  நான் இந்த இரு போக்குகளில் முதலாவது போக்குக்கு நெருக்கமானவனாகவே என்னை அடையாளம் காண்கிறேன். எனது சிந்தனையின் அடிப்படையில் எந்தவொரு நிலையான அரசியல்தீர்வுக்கும் அடிப்படையாகத் தமிழ் மக்கள் ஒரு தேசம் அல்லது தேசிய இனம் என்பதற்கான அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாகப்படுகிறது. இத்தகைய அங்கீகாரம் கிடைக்கும் மட்டும் தமிழ் மக்கள் அரசியல் இராஜதந்திர ரீதியில் போராடித்தான் ஆக வேண்டும். இதற்கு குறுக்கு வழியேதும் கிடையாது.

இவ் இரு போக்குத் தொடர்பாகப் பேசும்போது தற்போதய அரசியற் தலைவர் ஒரு சிலரின் ஏமாற்றுத் தனத்தைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். நான் மேற்கூறிய இரண்டாவது போக்கினைப் பிரதிபலித்துக் கொண்டு நின்று அதன் அடிப்படையில் அரசியல்தீர்வு காணும் முயற்சியினைச் செய்து கொண்டு, அதனையே முதலாவது போக்கின் வகைப்பட்ட தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட சமஸ்டித் தீர்வு எனத் தமிழ் மக்கள் மத்தியில் சித்தரிக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த முயற்சியினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே செய்வதனால் இதனால் கிளம்பும் அதிருப்தி தமிழத் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துகிறது. கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தமை முதலாவது போக்கின் பாற்பட்ட கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே என்பதும் இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டியது.

ஈழத் தமிழ் மக்களின் மத்தியிலான அரசியல் நடவடிக்கைளும் இவ் இரு போக்குகளுடனும் தொடர்புபட்டவை. அண்மையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை எனது பார்வையில் நான் இங்கு குறிப்பிட்ட முதலாவது போக்குக்கு நெருக்கமாகத் தென்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரண்டாவது போக்குடன் இயங்குவதன் விளைவாகத்தான் தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றுள்ளதாகவே எனக்குப் படுகிறது. தமிழ் மக்கள் பேரவையினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியமைப்பாக சிலர் சித்தரிக்க முற்படுகின்றனர். முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கீழ்த்தரமான பரப்புரைகளையும் செய்கின்றனர். நான் மேற்குறிப்பிட்ட இரண்டாவது போக்குக்கு எதிரான நிலைப்பாட்டைக் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாடாகவும் சிலர் சித்தரிக்க முயல்கின்றனர். இவை தமிழ் மக்கள் பேரவையின் வரவை கூட்டமைப்பு அச்சத்துடன் பார்க்கிறது என்ற தோற்றத்தைக் கொடுக்கின்றது.

தமிழ் மக்கள் பேரவை தன்னை கட்சி அரசியலுக்கும் தேர்தலுக்கும் அப்பாற்பட்ட மக்கள் இயக்கமாக அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்று அடிப்படைகளை அங்கீகரித்ததொரு தீர்வு என்ற நிலையினை பேரவை தமிழ் மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் என்று நம்புவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையினை எதிர் அமைப்பாக நோக்காமல் பேரவை தரும் அழுத்தத்தை தனது பேரம் பேசும் சக்தியை வளர்ப்பதற்குப் பயன்படுத்த முயல வேண்டும். அப்போது தமிழ் தேசிய அரசியல் வலுப்படும். மாறாக தமிழ் மக்கள் பேரவையினை முறித்துக் கொட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தினால் அதுவே கூட்டமைப்பு முறிவதற்குக் காரணமாக அமைந்து விடலாம்!  

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=b464388e-c76a-4036-a120-82ba65074fa0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.