Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தீர்வுக்கான எதிர்கால முயற்சிகளை குழப்புவதற்கு வியூகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுக்கான எதிர்கால முயற்சிகளை குழப்புவதற்கு வியூகங்கள்

[24 - December - 2006] [Font Size - A - A - A]

அதிகாரப் பகிர்வு மூலம் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை காணப்போவதாக கூறிவரும் அரசாங்கம், அதற்கு முற்றிலும் முரண்பாடான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும் இந்த தன்னிச்சையான முடிவுகளால் சமாதானத் தீர்வு முயற்சி என்பது கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலையையே தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியான நிருவாகச் செயற்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அதேசமயம் வட மாகாணத்துக்கு ஒரு ஆளுநர் நியமிக்கப்படும் வரை மொகான் விஜேவிக்கிரம வடக்கின் பதில் ஆளுநராகவும் பதவி வகிக்கின்றார்.

இதனிடையே வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மூன்று நிருவாக அலகுகளாக பிரிப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். வவுனியாவை மையமாகக் கொண்டு வடக்கு நிருவாக அலகும், கல்முனையை மையமாக வைத்து கிழக்கு நிருவாக அலகையும் அமைப்பதோடு திருகோணமலை மாவட்டத்தை தனியான நிருவாக அலகாக அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளால் தன்னிச்சையான முடிவுகளால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் இது இன நெருக்கடிக்கான சமாதானத் தீர்வு முயற்சிகளை பாதிப்பதோடு அதில் பெரும் பின்னடைவைக் கூட ஏற்படுத்தலாமென அரசியல் வட்டாரங்களும் புத்திஜீவிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி என். ஷ்ரீகாந்தாவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது;

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான சர்வகட்சி மாநாடு என்ற ஒரு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டு அதேநேரத்தில் இராணுவ ரீதியாக தொடர்ந்தும் இந்தப் பிரச்சினையை அணுகிக் கொண்டிருக்கும் அரசு அதற்கு அனுகூலமாக இந்த நிர்வாக ஏற்பாடுகளை செய்ய முயற்சிக்கிறது. இது இன்றைய நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசும் ஜனாதிபதியும் கடைப்பிடிக்கும் குழப்பம் நிறைந்த அணுகுமுறையின் வெளிப்பாடாகவே இதனைக் கருத முடியும்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 1988 ஆம் ஆண்டிலிருந்து வந்த இணைப்பு சட்ட ரீதியாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பானது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் அவசரகாலச் சட்ட விதிகளின் பிரகடனம் ஒன்றின் ஊடாகவே நடைமுறைக்கு வந்தது. இதனை சட்டவிரோதம் என அறிந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு அமைவாக செய்யப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியது.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் பாராளுமன்றத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு இணைப்பை சட்ட ரீதியாக்க முயற்சிக்கவில்லை. அதற்கான பெரும்பான்மைப்பலம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்தும் அரசு அதனைச் செய்யவில்லை.

அதேநேரம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதற்குப் பின்னர் கூட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு ஒரேயொரு ஆளுநரே கடமையில் நீடிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் தான் நிர்வாக ரீதியாக மூன்று பிரிவுகளை வடக்கு, கிழக்கை நிர்வகிக்க அரசு முயற்சிக்கிறது. இதனையே ஆளுநரின் அறிவிப்பு புலப்படுத்துகிறது.

வடக்கு, கிழக்கு பிரிப்பு என்பது இனப்பிரச்சினை தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க சவாலாகும்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் அக்கறையையும் அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது. இந்தப் பின்னணியில் தான் அரசு புதிய அணுகுமுறையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

கலாநிதி அனீஸ் கருத்து

கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனீஸ் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது; தற்போதைய சூழ்நிலையில தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முரண்பட்ட விதத்தில் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் பிரச்சினை மேலும் சிக்கலடையுமே தவிர குறையப்போவதில்லை. திருகோணமலை மாவட்டத்தை தனியான நிருவாக மாவட்டமாக அமுல்படுத்துவதன் மூலம் வடக்குக்கும் கிழக்குக்குமிடையில் சிங்கள மக்களின் ஆதிக்கத்தை உட்புகுத்த எடுக்கப்படும் மறைமுகச் சதியாகவே நோக்க வேண்டியுள்ளது. அத்துடன், இன மோதல்கள் மேலும் விஸ்வரூபமெடுக்கும் நிலைமை கூடத் தோன்றலாம். தூர நோக்கற்ற விதத்தில் அரசு எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் பாரதூரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தப் போகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைக் கூட கவனத்தில் கொள்ளாமல் சிங்கள மக்களின் திருப்தியை மட்டும் பெற்றுக் கொள்ளும் விதத்திலேயே அரசு இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை புறக்கணித்துவிட்டு எந்தத் தீர்வையும் எட்ட முடியாது. பதிலாக இன முரண்பாடும் பிளவுகளும் அதிகரிக்குமே தவிர, சாதகமான தீர்வை நோக்கிப் பயணிப்பதென்பது கானல் நீராகவே போகும்.

விடுதலைப் புலிகள் என்பதற்கப்பால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளை புறந்தள்ளி வைத்து தன்னிச்சையாக மேற்கொள்ளப்படக் கூடிய முடிவுகள் எவ்வாறான பலாபலன்களை கடந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பற்றி பின்னோக்கிச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகளை ஒருபுறம் வைப்போம். ஜனாதிபதியின் அல்லது இந்த அரசாங்கத்தின் இத்தகைய தன்னிச்சை முடிவுகளுக்கு அரசுடனிருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் தலைமைகளும் அங்கீகாரம் அளிக்கப் போகின்றனரா என்பதையும் கேட்டுவைக்க விரும்புகின்றேன். ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கேட்டபோது, இது எடுத்த எடுப்பில் கருத்துக் கூறக் கூடிய விடயமாக அமையவில்லையெனவும் விரிவாக ஆராயப்பட்டே விளக்கமளிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், திருமலை மாவட்டத்தைத் தனியான அலகாக மாற்றுவதன் மூலம் பேரின சமூகம் அங்கு பலமடையச் செய்யும் உள்நோக்கத்தை கொண்டிருப்பதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அத்துடன், இந்த தனித்தனி நிருவாக அலகுகளால் இனவிகிதாசார ரீதியில் பெரும் பாதிப்புகள் ஏற்படவும் வழி பிறக்கலாம். உண்மையிலேயே இப்பிரச்சினையை குழப்பும் உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதையே இதனூடாக நோக்க முடிகிறது.

இங்கு இன்னொரு விடயத்தைக் கூடச் சுட்டிக்காட்டலாம். ஒரு சிலருடைய போக்கு எமக்கு பெரும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது. அதாவது எமக்கு ஒன்றும் கிட்டாமல் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு எதுவும் கிடைக்கக்கூடாது என்ற போக்கில் சிந்திக்கும் சக்திகள் விடயத்தில் நாம் விழிப்படைய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

அடுத்த வாரத்தில் இவ்விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ஹக்கீம் கூறினார்.

ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விளக்கம் கேட்டபோது கூறியதாவது;

இவ்விடயம் சட்டச் சிக்கல் கொண்டதாகவும், யாப்புடன் தொடர்புபட்டதாகவும் இருப்பதால் எடுத்த எடுப்பிலேயே பதிலளிக்க முடியாதுள்ளது. கட்சி செயற்குழு கூடி ஆராய்ந்ததன் பின்னரே கட்சியின் நிலைப்பாட்டை வெளியிட முடியும்.

எனினும், அரசும் ஜனாதிபதியும் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்களே பொறுப்புக் கூற முடியும்.

இத்தகைய தன்னிச்சையான முடிவுகளால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

http://www.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.