Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோனி ஏன் சிறந்த கேப்டன் ?

Featured Replies

தோனி ஏன் சிறந்த கேப்டன் ?

ஜிலீர் திரில்லுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சூப்பர் 10 சுற்று.  இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுகட்டவுள்ளன. சூப்பர் 10 சுற்றில் பல போட்டிகளில் பிபி எகிறவைத்தன. அரையிறுதி போட்டிகள் வரும் புதன் கிழமை முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 10 இல் என்ன நடந்தது என ஒரு ஷார்ட் அலசல் பார்வை இங்கே!

238473.jpg
 

சோடை போன  பாகிஸ்தான் - இலங்கை : -

டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதிக்கு  தகுதி பெற்ற அணிகள் இவ்விரண்டும் தான்.  இரண்டு அணிகளும் சுழற்பந்தை சிறப்பாக கையாளகூடியவர்கள். ஆனால் பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு இம்முறை தகுதி பெறவில்லை. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்திய பாகிஸ்தான் அதன் பின்னர்  நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா என அத்தனை அணிகளிடமும்  பலத்த அடி வாங்கியது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணியில் தொடர்ச்சியாகவும், நிலைத்து நின்றும் ஒரு பேட்ஸ்மேன் கூட ஆடவில்லை என்பதே தோல்விக்கு முக்கிய காரணம். இலங்கையை பொறுத்தவரையில் ஆப்கானை தத்தி தத்தி வென்றது. கெயில் பேட்டிங்கில் களமிறங்காமலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சரணடைந்தது. இங்கிலாந்து அணியுடனான போட்டியில் மிக மோசமாக பந்து வீசியது இலங்கை. பேட்டிங்கில் மேத்யூஸ் பயமுறுத்தினாலும், அவரால் பின்ஷர் வேலையை சரியாக செய்யமுடியாததால் தோல்வி  தழுவியது. இலங்கை அணி ஒரு போட்டியில் கூட வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடவில்லை  மேலும் மேத்யூஸ் கேப்டன்சியும் படு மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 'சோக்கர்' ஜோக்கரான தெ.ஆ - ஆஸி : -

இதுவரை டி20 உலகக் கோப்பையை வெல்லவே வில்லை என்பதால் வென்றே தீர வேண்டும் என முஷ்டி முறுக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கூட கனவாகிவிட்டது.நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளிடம் கடைசி மூன்று ஓவர்களில் வெற்றியை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.
சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் ஒரு விக்கெட் விழுந்தவுடன் சரசரவென சீட்டுகட்டுகள் போல விக்கெட்டுகள் சரிந்ததால் பாகிஸ்தான் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் பேட்டிங் சொதப்பல். ஐ.பி.எல் அனுபவம் மட்டும் கோப்பையை வெல்ல உதவாது என தெளிவாக உணர்த்தினர் ஆஸி வீரர்கள்.

 வழக்கம் போல இந்த முறையும் சொதப்பி தள்ளியது தென்னாபிரிக்கா. கோப்பையை  கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்துடனான முதல் போட்டியில் 229 ரன்கள் எடுத்தும் தோல்வியை தழுவியது  முதல் சொதப்பல். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் அம்லா,  டிவில்லியர்ஸ், டு பிளசிஸ் வந்த வேகத்தில் திரும்ப அதிர்ச்சி தோல்வியடைந்தது தென்னாபிரிக்கா. 'இனி எங்கள் அணிக்கு  மன்னிப்பே கிடையாது' என வேதனையுடன் சொல்லியிருக்கிறார் டு பிளசிஸ்.  இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் கடைசி இரண்டு ஓவர்களில் சொதப்பியதால் தோல்வியை தழுவியது தென்னாபிரிக்கா, தவிர அதிர்ஷ்டக்காற்று கொஞ்சம் கூட தென்னாபிரிக்கா மேல் வீசவில்லை. கோப்பையை வெல்லும்  என எதிர்பார்க்கப்பட்ட அணி கடைசியில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமால் போனது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கூட.

238297.jpg


டு பிளசிஸ் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்தது. முக்கிய பவுலர்கள் ரன்களை விட்டுதந்தும் கூட பகுதி நேர பந்துவீச்சாளராக டிவில்லியர்ஸ், ரசவ், மற்றும் தன்னையும் பயன்படுத்தி கொள்ளவில்லை. கேப்டனாக முன்னெடுத்து செல்ல வேண்டிய டுபிளசிஸ் அனைத்து போட்டிகளிலும் சொதப்பிதள்ளினார். டி 20 போட்டிகளை பொறுத்தவரையில் கடைசி கட்ட ஓவர்களை  யார்  சிறப்பாக கையாளுகிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி. ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணியில் பல டி20  ஸ்பெஷலிஸ்ட்கள் இருந்தாலும் தோல்விக்கு காரணம் மோசமான கேப்டன்ஷிப் தான். 'அவுட் ஆப் தி பாக்ஸ்' யோசிப்பது, பதற்றபடாமல் முடிவெடுப்பது, ஆடுகளங்களை கணிப்பது, அணிக்கு   உற்சாகமூட்டுவது போன்றவற்றை வரும் ஐ.பி.எல்லில் தோனி அணியில் விளையாடவுள்ள இவ்விருவரும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

அசத்திய ஆப்கன், நிலையற்ற வங்கதேசம் :-

இம்முறை உலககோப்பை தொடரில் சிறந்த  பெர்பார்மென்சை வெளிப்படுத்திய அணி ஆப்கன் தான்.  பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும்  அசத்தினார்கள். பேட்டிங்க்கு சாதகமான மும்பை மைதானமாக இருந்தாலும், சுழற்பந்துக்கு சாதகமான டெல்லி, நாக்பூர் மைதானமாக இருந்தாலும் அசத்தினர் ஆப்கன் வீரர்கள். இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் நூலிழையில் வெற்றியை தவறவிட்டது. தென்னாப்ரிக்காவுக்கு எதிராக 170 ரணளுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது ஆப்கன். வெஸ்ட் இண்டீஸ் அணியை 123 ரன்களை அடிக்கவிடாமல் தடுத்து சிறப்பான வெற்றியை அடைந்தது ஆப்கன். வருங்காலத்தில் ஆப்கன் மிகச்சிறந்த அணியாக உருவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளது. வங்கதேசம் நிலையற்ற முறையில் விளையாடியதால் நான்கு போட்டியிலும் தோல்வியை தழுவியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் வெற்றியை நெருங்கினாலும் முழு வெற்றி அடைவதற்கான சூத்திரம் தெரியாமல் அபத்தமாக தோற்றது வங்கதேசம்.

238559.jpg

அரையிறுதியில் ஜெயிக்க போவது யாரு ?

நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் கேப்டன் வில்லியம்சனின் விவேகமான முடிவுகளால் மரண மாஸ் வெற்றி பெற்றி வருகிறது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துக்கு ஒத்துழைக்கும் என்பதால் அணியின் முக்கிய பவுலர்களான ட்ரென்ட் போல்ட், சவுதி  ஆகியோரை தைரியமாக வெளியில் உட்காரவைத்து  மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாடினார் வில்லியம்சன். இந்தியா, வங்கதேச போன்ற ஆசிய அணிகளையே நூறு ரன்களுக்குள்  சுருட்டி எறிந்தனர் ஸ்பின்னர்கள். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் தான் அரையிறுதி விளையாடவுள்ளது நியூசிலாந்து. சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் தனது மேஜிக்கை நியூசிலாந்து தொடரும் என எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து அணியின் பெரிய மைனஸ் இதுவரை சேசிங் எடுத்து விளையாடாதது தான். நான்கு போட்டியிலும் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்தார் வில்லியம்சன். அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட சூழ்நிலையில் வங்கதேசத்துடனான கடைசி போட்டியில் சேசிங் எடுத்து சோதித்து பார்த்திருக்கலாம். ஆனால் அதை தவிர்த்து விட்டார் வில்லியம்சன். எனவே   டாஸ் ஜெயிக்கவில்லை எனில் நியூசிலாந்து சேஸிங்கில் எப்படி விளையாடும் என சொல்ல முடியாத நிலை இருக்கிறது.

 

v5.jpg



சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இங்கிலாந்து அணி மீது நம்பிக்கை வைத்திருந்தார். இங்கிலாந்து இந்த தொடரில் அபாயகரமான அணி என்றும் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழுக்கூடும்  என்றும் கணித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் உடனான முதல் போட்டியில் கிறிஸ்  கெயிலிடம் 'படுத்தே' விட்டது  இங்கிலாந்து. தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 229  ரன்களை விட்டுத்தந்திருந்தாலும்  ஜேசன் ராய், ஜோ ரூட் இருவரும்  சர்வசாதாரணமாய் தென்னாப்ரிக்க பந்துவீச்சை சிதறடிக்க எளிதாக சேஸ் செய்து வரலாறு படைத்தது இங்கிலாந்து. ஒரு வழியாக ஆப்கானிஸ்தான், இலங்கையும் வென்று அரையிறுதியில் நுழைந்திருக்கிறது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருப்பதை மறுக்கமுடியாது. இங்கிலாந்து அணியின் மைனஸ் கேப்டன் மோர்கன் தான். மிக மோசமான பார்மில் இருக்கிறார் மோர்கன்,  தவிர கேப்டன்சியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அரையிறுதியில் இங்கிலாந்து- நியூசிலாந்து போட்டியில்  அன்றைய தினத்தில் ஏதாவதொரு இங்கிலாந்து வீரரின் தினமாக அமைந்து விட்டால் இங்கிலாந்து வெற்றி பெறுவதில் சந்தேகமில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கிறது. அணியில் கிறிஸ் கெயில் மட்டும் மேட்ச்  வின்னர் இல்லை, 15 பேரும் மேட்ச் வின்னர் தான் என்கிறார் கேப்டன் சமி. மும்பை பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் என்பதால் கிறிஸ் கெயில் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தால் வெஸ்ட் இண்டீஸ் மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க வாய்ப்புண்டு. துடிப்பான பீல்டிங் இருப்பதும் நல்ல ஸ்பின்னர்கள் இருப்பதும், கெயில், ரஸ்ஸல், பிராத்வொயிட், சமி , பிராவோ போன்ற வீரர்கள்  உள்ளடங்கியிருப்பதால் அனைவரும்  ஃபுல் உழைப்பை கொட்டினால் வெஸ்ட் இண்டீஸ் இம்முறை உலககோப்பையை வென்றாலும் ஆச்சர்யமில்லை.   

238465.jpg


வலுவான அணியாக உலகக்கோப்பைக்குள் நுழைந்தாலும் அடித்து பிடித்து தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது இந்தியா. பந்துவீச்சில் நெஹ்ரா, ஜடேஜா நம்பிக்கையளிக்கின்றனர். அஷ்வின், பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை விட்டுத்தருகின்றனர். பேட்டிங்க்கு சாதகமான மும்பை ஆடுகளத்தில் இவ்விருவருக்கும் சவாலான பணி காத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது. இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கும் அம்சம் தொடக்க வீரர்கள் தான். ரோஹித் ஷர்மா, தவான், ரெய்னா ஆகிய மூவரும் சேர்ந்து இந்த  தொடரில் குவித்த ரன்கள் 181 மட்டுமே. வீராட் கோலி  மட்டும் 184 ரன்களை இதுவரை குவித்திருக்கிறார். அப்படியானால் எவ்வளவு மோசமாக விளையாடி வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

235995.jpg

தோனி அணியில் மாற்றங்களை மேற்கொள்ள அடம்பிடிப்பதால் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாவது கோலியும், யுவராஜும் தான். கோலி மிகசிறப்பாக விளையாடி வருகிறார். யுவராஜ் இன்னும் முழு திறனை இதுவரை வெளிப்படுத்தவில்லை. கேப்டன் தோனி தனி ஒருவனாக அனைத்து போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.  முன்னெப்போதையும் விட பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என மூன்றிலும் அசத்தலாக விளையாடுகிறார் தோனி. வங்கதேசத்துடன் கடைசி கட்ட தோனியின் சாதுர்யங்களால் இந்திய அணி வென்றது.முதல் நான்கு ஓவரில் பறந்த ஆஸ்திரேலிய அணியை அதன் பின்னர் சிறப்பான பவுலிங் மாற்றத்தை கொண்டு வந்து ஸ்கோரை கட்டுபடுத்தினார்.

 தென்னாப்ரிக்க, ஆஸ்திரேலிய, இந்தியா ஆகிய அணிகளில் இந்தியா தனித்து தெரிவதற்கு ஒரே காரணம் கேப்டன் தோனி தான். இது தான் வித்தியாசம். மற்றபடி மூன்று அணியிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்  ஆனால் சிறந்த கேப்டன் இந்தியாவுக்கு மட்டும் தான்  கிடைத்துள்ளார். எந்த பவுலரை எப்போது வீச வைக்க வேண்டும், எந்த பீல்டரை எங்கே நிறுத்த வேண்டும், எந்த பேட்ஸ்மேனை எப்போது இறக்க  வேண்டும் என்பதை தெரிந்துவைத்திருக்கிறார். தனது கேரியரில் மீண்டும் முழு ஃபார்முக்கு திரும்பியுள்ள தோனி, அணியின் மைனஸ்களை சமாளித்து கோப்பை மீண்டும் வெல்வார் என எதிர்பார்க்கலாம். 

http://www.vikatan.com/news/sports/61438-why-dhoni-is-always-best-captain.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.