Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிவும் இணைவும் – இணைவும் பிரிவும்

Featured Replies

பிரிவும் இணைவும்  -  இணைவும் பிரிவும் 

வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்று தமிழகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் கோஷம் எழுப்பப்பட்டிருந்தது. தென் மாநிலமாகிய தமிழ் நாட்டிற்கு வடக்கில் உள்ள டெல்லி அரசு உரிய உரிமைகளைக் கொடுக்கவில்லை. ஹிந்தியைத் திணிக்க முயல்கின்றது என்ற காரணங்களை வைத்து தமிழ் நாட்டில் தனிநாட்டுக்கான கோரிக்கை எழுந்திருந்த சந்தர்ப்பம் அது. திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

திமுக தலைவர் அண்ணாத்துரையின் தலைமையிலான தமிழகத் தலைவர்கள் திடீரென தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியா என்ற தேசிய கொள்கையைக் கையில் எடுத்திருந்தனர். சீனாவிடம் இருந்து இந்தியாவுக்கு அதன் எல்லையில் அச்சுறுத்தல் எழுந்திருந்ததையடுத்தே இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று கூறுவார்கள்.

இந்திய தேசம் என்பது ஒரு துணைக்கண்டமாக வர்ணிக்கப்படுவது. பல மொழிகள் பல இனங்கள் என அது பலவாறாகப் பிரிந்திருக்கின்ற போதிலும் பாரத தேசம் என்ற தேசியத்தில் அனைவரும் கட்டுண்டு இருக்கின்றார்கள். அங்கு இந்தியா என்ற தேசத்திற்காக – அந்தத் தேசியத்திற்காக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு செயற்படுவார்கள். அந்தத் தேசத்தின் தேச பக்தி என்பது அந்த அளவுக்கு ஆழமானது.

ஆனால், இலங்கையில் தெற்கு தழைத்து வளர்கின்றது. (கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய) வடக்கு வாடுகின்றது – வாட்டி ஒடுக்கப்படுகின்றது என்பதே நிலைமையாக உள்ளது.

இலங்கையின் தேசியம் பல்லினம் பல மொழிகள் சார்ந்ததாக, இந்தியாவைப் போன்று கட்டியெழுப்பப்படவில்லை. சிங்கள பௌத்தமே இங்கு தேசியமாகக் கருதப்படுகின்றது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள அபரிமிதமான அரசியல் செல்வாக்கே இதற்கு முக்கிய காரணமாகும்.

இதன் அடிப்படையில்தான் இலங்கையில் இனப்பிரச்சினை உருவாகி – புரையோடி, தீர்க்க முடியாத வகையில் சிக்கலாகியிருக்கின்றது. இந்த சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு இப்போது நடைமுறையில் உள்ள நல்லாட்சி முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், இந்த அரசியல் முயற்சியானது எந்த அளவுக்கு இதயசுத்தியானது, எந்த அளவுக்கு கொள்கைப் பிடிப்பைக் கொண்டிருக்கின்றது என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. அதேபோன்று ஆழ்ந்த பல அர்த்தங்கள் பொதிந்த கேள்விக்கு உரியதாகவும் காணப்படுகின்றது.

இந்த நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சியை அமைத்திருக்கின்றன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இதைவிட நல்லதொரு சந்தர்ப்பம் வேறு கிடையாது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அரசியல் தலைவர்களும் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த இரண்டு தேசிய கட்சிகளும் இரண்டு வருடங்களுக்கு இணைந்து செயற்படுவது என்றதோர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, இந்த நல்லாட்சி உருவாக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இருப்பினும் இந்த ஆட்சிக் காலம் முழுக்க இரண்டு கட்சிகளும் இணைந்தே செயற்படப்  போகின்றன என்ற கருத்தும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த நல்லாட்சிக்குள்ளேயும் குத்து வெட்டுக்கள், குரோதங்கள் என அரசியல் தில்லுமுல்லுகளுக்கு குறைவில்லை. இருந்த போதிலும், இணைந்த நல்லாட்சியைத் தொடர்ந்து கொண்டு செல்வோம் என்பதில் இருவேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.

பிரிவும் இணைவும்

அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது 65 ஆவது ஆண்டு மாநாட்டைக் கொண்டாடியது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியும் தனது கட்சி மாநாட்டை நடத்தியிருந்தது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள மைத்திரி அணி, மகிந்த அணியென்ற பிளவுக்குள்ளேயேயும் சுதந்திரக் கட்சியின் ஆண்டுவிழா பிரம்மாண்டமாக நிறைவேறியிருந்தது. அந்த அளவுக்கு அது சோபிக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மக்கள் பெருமளவில் திரண்டு அந்தக் கட்சியின் மீதான தமது அரசியல் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியும்,  சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல என காட்டும் வகையில், தனது 70 ஆண்டு கால நிறைவு மாநாட்டின் மூலம் தன்னுடைய அரசியல் பலத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த இரண்டு கட்சிகளுமே எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடுவதற்கான முன்னாயத்த முயற்சியாகவே தமது கட்சி மாநாடுகளை நடத்தியிருந்தன.

அரசியல் கட்சி என்னும் பொழுது, இரண்டு கட்சிகளுமே பிரிந்து நிற்கின்றன. ஆனால் நல்லாட்சி என்ற அரசாங்கத்திற்குள்ளே அந்தக் கட்சிகள் இரண்டுமே இணைந்தே செயற்படுகின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர் குழுவாகச் செயற்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மாத்திரமே வேறுபட்டு நிற்கின்றார்கள்.

அந்தக் குழுவின் தலைமையில் கூட்டு எதிரணி என்றதோர் அரசியல் அமைப்பாக அவர்கள் செயற்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளுக்கோ, அந்தக் கட்சியின் அரச வகிபாகத்திற்கோ எந்த வகையிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.

எதிரும் புதிருமான இயல்புகளையும் செயற்பாட்டு போக்குகளையும் கொண்டிருந்தாலும்கூட, நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு செல்வதில் அவர்கள் மிகுந்த பொறுப்போடு செயற்படுவதையே காண முடிகின்றது.

இந்தக் கூட்டு விரைவில் முறிந்துவிடும். நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து நிலைக்கப் போவதில்லை என கூறியவர்களின் கூற்றைப் பொய்ப்பிக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அது மட்டுமல்ல. அடுத்து வருகின்ற பொதுத்தேர்தலில் தாங்கள் தனித்தனியே போட்டியிட்டாலும்கூட, தேர்தலின் பின்னர் இரண்டு கட்சிகளுமே இணைந்து ஆட்சியமைத்துச் செயற்படப் போவதாக முன்னறிவித்தல் செய்திருக்கின்றார்கள்.

வெளியில் பிரிந்திருந்தாலும், ஆட்சியில் அவர்கள் இணைந்து செயற்படுகின்ற அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இணைந்திருக்கின்ற விதத்தில் புதிய அணுகுமுறையையோ, புதிய போக்கையோ காண முடியவில்லை.

இந்தக் கட்சிகள் இரண்டும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிச் செயற்பட்டபோது, சிறுபான்மை இன மக்களுடைய விடயங்களிலும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்திலும் ஒருவர் மென்போக்கைக் காட்டினால் மற்றவர் கடும் போக்கை வெளிப்படுத்தியிருந்த நிலைமையையே காண முடிந்தது.

ஆட்சியில் இருக்கும் போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுவதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த முயற்சியை முறியடிப்பதுமாகவே இந்த இரண்டு கட்சிகளும் செயற்பட்டு வந்திருக்கின்றன.
இதன் காரணமாகத்தான் இரண்டு கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நல்லாட்சியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் பலத்த எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
இணைந்த நிலைப்பாடு

இருந்த போதிலும், இரண்டு முக்கிய விடயங்களில் இரண்டு கட்சிகளுமே, அரசியல் கட்சிகளாக வெளியில் பிரிந்திருக்கின்ற நிலையிலும், ஆட்சிக்குள்ளே ஒன்றுபட்டு நிற்கின்றார்கள்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சமஸ்டி ஆட்சி முறைமையே சிறந்தது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரங்களை பறித்தெடுக்க முடியாத வகையில் பகிர்ந்து கொண்டு, இணைந்த வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் ஓர் ஆட்சியை சமஸ்டி முறையின் கீழ் அமைத்துக் கொண்டு இணைந்து வாழலாம் என தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோருகின்றது.

அதேநேரம் பொறுப்பு கூறும் விடயத்தில் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவரும் நானே, அந்தக் குற்றத்தை விசாரித்து நீதி வழங்கப் போவதும் நானே என்ற வகையிலான உள்ளக பொறிமுறைக்கு மாறாக சர்வதேச விசாரணை பொறிமுறையே வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த இரண்டு விடயங்களிலும் ஆட்சியில் இணைந்துள்ள தேசிய கட்சிகள் இரண்டினதும் நிலைப்பாடு நேர்மாறாகவே இருக்கின்றன.

எந்த காரணத்தைக் கொண்டும் ஒற்றையாட்சி முறையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது. ஒற்றையாட்சியின் கீழேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த காரணத்தைக் கொண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது. வடக்கு கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசத்தையோ சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்பது நல்லாட்சி புரிகின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்த அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்றது.

அதேபோன்று பொறுப்பு கூறும் விடயத்தில் கலப்பு நீதிப் பொறிமுறையொன்றை அமைப்பதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கி, உறுதியளித்து ஒப்புக்கொண்டுள்ள போதிலும் உள்ளக விசாரணைப் பொறிமுறையே அமைக்கப்படும். கலப்பு நீதிப் பொறிமுறையின்படி வெளிநாட்டு நீதிபதிகளோ, விசாரணையாளர்களோ வழக்குத் தொடுநர்களோ எவருமே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தீர்க்கமான முடிவை இந்த இரண்டு கட்சிகளும் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் கூறிவருகின்றது.

நல்லாட்சி அரசாங்கமானது, நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. அதற்காக நாடாளுமன்றத்தையே அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி பல்வேறு குழுக்களை நியமித்து, பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

புதிய அரசியலமைப்பில் நாட்டு மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்ளடக்க வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களின் கருத்துக்களும் திரட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்துக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாமற் செய்வது, தேர்தல் முறையை மாற்றி அமைப்பது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது என்ற மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, அது குறித்து நாட்டு மக்களின் கருத்துக்களைப் பெற்றிருக்கின்ற போதிலும், ஒற்றையாட்சியின் கீழேயே அரசியல் தீர்வு என்பது தேசிய மட்டத்திலான முடிந்த முடிவாகக் கொண்டு அதன் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும் என்பதில் நல்லாட்சி அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என்பதையும் அரசாங்கத்தின் பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றன.

இணைவும் பிரிவும் 

அரசாங்கத்தினதும், நாட்டின் இரண்டு தேசிய கட்சிகளினதும் நிலைப்பாடு பிரிந்தும், இணைந்தும் இருக்கின்ற அதேவேளை, தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாடு  இணைந்தும் பிரிந்தும் இருப்பதைக் காண முடிகின்றது.

பெரும்பாலான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பே திகழ்கின்றது. கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகள் இப்போது அங்கம் வகிக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் என்பன முன்னர் இதில் இணைந்திருந்த போதிலும் பின்னர் அந்தக் கட்சிகள் விலக்கப்பட்டுவிட்டன அல்லது விலகிவிட்டன.

இந்த நான்கு கட்சிகள் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது இலங்கையின் அரசியல் தளத்தில் ஒற்றுமைக்கு உதாரணமாக ஏனைய கட்சிகளினால் பார்க்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது, அந்தக் கட்சிகள் ஒரு தலைமையின் கீழ் இறுக்கமாகச் செயற்படுகின்றன என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்பில் ஒரு கருத்தும் நாட்டின் அரசியல் பரப்பில் நிலவுகின்றது. ஆனால் உண்மையில் நிலைமை நேர்மாறாக இருக்கின்றது என்பதே தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்தாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்பட்டு வருகின்றது.

தலைமைப் பொறுப்பில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக ஒரு கூட்டுக்குள் இந்தக் கட்சிகள் இணைந்துள்ள போதிலும், அவற்றின் செயற்பாடுகள் இணைந்த செயற்பாடாகக் காணப்படவில்லை. பிரிந்து நின்று செயற்படுகின்ற போக்கையே காண முடிகின்றது.

கூட்டமைப்பின் தலைமை ஏனைய கட்சித் தலைவர்களுடன் முக்கிய விடயங்களில் கலந்து பேசி முடிவுகளை மேற்கொண்டு செயற்படுவதில்லை என்று அந்தத் தலைமைக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இருந்த போதிலும் திடீர் திடீரென இணைப்புக்குழு கூட்டம் என்றோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்ட கூட்டம் என்றோ ஏதோ ஒரு பெயரில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் அமைச்சர்கள், சபை உறுப்பினர்கள் கலந்து கொள்கின்ற கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டங்களில் பல மணித்தியாலங்கள் அவர்கள் கூடி பேசுவார்கள். முடிவில் பெரிய அளவில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுவதில்லை.

இந்தக் கூட்டங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், அடுத்த கட்டச் செயற்பாடுகள், அந்தந்த நேரங்களில் நிலவுகின்ற அரசியல் நிலைமை சார்ந்த முக்கிய முடிவுகள் குறித்து இங்கு விளக்கமளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஏனெனில் முக்கியமான விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைமை கூடிப் பேசவில்லை என்று குறை கூறுகின்ற முறைப்பாடே வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுவது வழக்கமாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பேசப்படுகின்ற அனைத்து விடயங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியாது என்ற கடுந்தொனியிலான கருத்தும் வெளியிடப்படுவதுண்டு.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு கூட்டு அமைப்பாக இணைந்து செயற்படுகின்ற போதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் மத்தியில் தன்னை வளர்த்துக் கொள்வதிலேயே தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது என்ற பொதுவான குற்றச்சாட்டும் உள்ளது.

தேர்தல்களில் இந்தக் கட்சிகள் நான்கும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டாலும்கூட, ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தோற்றுவிட்டால், அந்தக் கட்சியை – அந்தக் கட்சியைச் சேர்ந்தவரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று ஏளனமாகக் கருத்துரைக்கின்ற போக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் காணப்படுகின்றது. இது ஒரு வகையில் அந்தக் கூட்டு அமைப்புக்குள் நிலவுகின்ற பிரிவு நிலையையும் பிரிந்து செயற்படுகின்ற ஒரு தன்மையையுமே வெளிப்படுத்துவதாக அமையும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களே வடமாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார்கள்.

வடமாகாண முதலமைச்சராக இருக்கும் விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியினரே அரசியலுக்கு இழுத்து வந்திருந்தனர். அவ்வாறிருக்க, கூட்டு அமைப்பு என்ற ரீதியிலும்சரி, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ரீதியிலும்சரி வடமாகாண நிலைமைகள், வடமாகாண சபையின் செயற்பாடுகள், அதன் எதிர்காலத் திட்டங்கள். அரசியல் போக்குகள் குறித்து தலைவர்கள் அடிக்கடி கூடிப் பேசி விடயங்களை ஆய்வு செய்து அல்லது விவாதித்து முக்கியமான முடிவுகளை மேற்கொள்வதில்லை.

பிரிந்து நின்று செயற்படும் தன்மை

இரணைமடுவில் இருந்து யாழ் குடாநாட்டுக்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம், அந்தக் குளத்தின் புனரமைப்புத் திட்டம், வடமாகாணத்திற்கான வீடமைப்பு, மீள்குடியேற்றம், காணி விவகாரம் போன்ற பாரிய திட்டங்களையும் சிக்கல்கள் மிகுந்துள்ள பாரிய பிரச்சினைகள் குறித்தும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடனோ வடமாகாண சபையினருடனோ கூட்டமைப்பின் தலைமை கலந்து பேசி வழிநடத்துவதில்லை.

கூட்டமைப்பின் தலைமை ஒரு போக்கு, கட்சி ரீதியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு போக்கு, வடமாகாண சபை ஒரு தனிப்போக்கு, கிழக்கு மாகாண சபை மற்றுமொரு போக்கு என்ற ரீதியிலேயே ஒரு கூட்டாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள போதிலும் கூட்டமைப்பினர் பிரிந்தே செயற்பட்டு வருகின்றனர்.

ஐநா செயலாளர் நாயகம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளவர்கள் பிரிந்து நின்று செயற்பட்டிருந்தனர்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தலைமையில் ஓர் அணியும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் மற்றுமொரு அணியுமாக இரண்டு அணிகள் ஐநா செயலாளர் பான் கி மூனை தனித்தனியே சந்தித்துப் பேசியதையும், அவருடைய கவனத்தை ஈர்ப்பதற்கான போராட்டங்களும் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையைக் கொண்ட சமஸ்டி ஆட்சிமுறை, வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தாயகப் பிரதேச நிர்வாக அலகைக் கொண்டாதோர் அரசியல் தீர்வை வலியுறுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அதன் நியாயத்தன்மையை சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகள் வடக்கையும் கிழக்கையும் இணைக்குமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கோர முடியாது என பிரசாரம் செய்கின்றனர். ஓர் அரசியல்வாதிக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ தனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதற்கு உரிமை உண்டு. ஆனால், ஒரு விடயத்தை மற்றவர் கேட்கக் கூடாது என்று கூறுவதற்கு உரிமை கிடையாது.

இந்த நிலையில் அந்தப் பிரசாரம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிடமிருந்தோ அல்லது கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களிடமிருந்தோ எந்தவிதமான உணர்வுகளும் இதுவரையில் வெளிப்படுத்தப்படவிலலை.

புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒர் அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டின் நியாயத்தன்மையை எதிர்த்தரப்பினருக்கு எடுத்துக் கூறி தெளிவுபடுத்துகின்ற பொறுப்பில் இருந்து  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தவறியிருக்கின்றது.

அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மாறாக,  தெற்கில் அரசியல் கட்சி என்ற ரீதியில் பிரிந்திருப்பவர்கள் அரசாங்கத்தில் இணைந்து நேர் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் கூட்டமைப்பினர் ஓர் அணியில் வலுவாகவும், மிகுந்த உறுதிப்பாட்டுடனும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தன்மையை வெளித் தரப்பினருக்கு எடுத்துரைத்துத் தெளிவுபடுத்த வேண்டும்.

அதன் ஊடாகவே, எதிரணியினருடைய முரண்பாடான நிலைமையைத் தளர்த்தி தங்கள் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். இதற்கு தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் கிடைத்துள்ள அரசியல் அங்கீகாரம் அல்லது அரசியல் அந்தஸ்தை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பயன்படுத்த முன்வர வேண்டும்.

எனவே, அரசியல் கட்சி என்ற ரீதியில் பிரிந்தும், ஆட்சி நிர்வாகத்தில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் இணைந்தும் செயற்படுகின்ற நிலையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளவர்கள் ஏனையோரையும் இணைத்துக் கொண்டு,  பிரிந்து செயற்படுகின்ற போக்கிற்கு முடிவுகட்டி, இறுக்கமாக இணைந்து செயற்பட முயற்சிக்க வேண்டும். முன்வர வேண்டும். இது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும்.

செல்வரட்னம் சிறிதரன்

http://thuliyam.com/?p=41707

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.