Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி

Featured Replies

ஜெய­ல­லிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி

sama-3-7beb92d2dbcbd81e22bda79408d836434436466d.jpg

 

மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் 'தலையாட்டாத' மாநில முதல்வர்களென தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அந்த வகையில் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த மத்திய அரசின் மின்சார சீர்திருத்தத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஜெயலலிதா இல்லாத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையே இது சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தின் நலனுக்கு எதிரான திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எப்போதும் ஆதரவு வழங்கியதில்லை. அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளார். மின்சார சீர்திருத்தத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம், புதிய கல்விக்கொள்கை என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்து வந்துள்ளார். இதன் காரணமாக மத்திய அரசின் மேற்படி திட்டங்களுக்கு அனுமதி வழங்காமலேயே இருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா தற்போது, ஒன்றரை மாதமாக சுகவீனமுற்று அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் அவரால் தீர்மானம் எதுவும் எடுக்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க, முதலமைச்சரின் பொறுப்புக்களை கவனிப்பவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் கூடிய அமைச்சரவையினால் மேற்படி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறானது என்று அ.தி.மு.க.வின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கவலை தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க. கட்சி நிர்வாகம், தமிழக அரசின் நிர்வாகம் ஆகிய இரண்டுமே ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நடராஜனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவரை மீறி வேறு எவரும் எந்தவொரு முடிவினையும் எடுக்க முடியாத நிலைமையிலேயே காணப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு சிரேஷ்ட அமைச்சராகவும், முதல்வரின் பொறுப்புக்களை கவனிப்பவராக இருந்தாலும் கூட, அவரால் சுயமாக தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையே உள்ளது. சசிகலா நடராஜன் சொல்வதையே அவர் செய்ய வேண்டும்.

தவிர, ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்ற நிலையில் இருப்பவர் சசிகலா நடராஜன். அவ்வாறான ஒருவர், ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக, அவரது விருப்பத்திற்கு எதிராக எப்படி குறித்த மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஆனால், சசிகலாவிடம் இதுபற்றி கேள்வி எழுப்ப எந்தவொரு அ.தி.மு.க. தலைவரும் தயாரில்லை; தைரியமும் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

ஆனால், சசிகலா நடராஜனின் தற்போதைய செயற்பாடுகளால் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் அதிருப்தியும், கோபமும் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். கட்சியின் நிர்வாகக் குழுவின் முடிவுகளைக் கூட உதாசீனம் செய்பவராகவே சசிகலா நடராஜன் இருக்கிறார்.

சசிகலா நடராஜனின் இந்த மாற்றத்தின் பின்னணியில் மத்திய அரசின் அழுத்தங்களே காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் ‘உண்மையான’ உடல் நலம் பற்றிய உண்மைகளை நன்றாக தெரிந்து வைத்துள்ள மத்திய அரசு, சசிகலா நடராஜனை மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனடிப்படையிலேயே ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கு, சசிகலா நடராஜன் மூலம் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுக்கொள்ள திட்டம் வகுத்ததாகவும், அது சாத்தியமானதாகவும் கூறப்படுகிறது. சசிகலா நடராஜனின் உத்தரவுக்கமைவாகவே அமைச்சரவையில் குறித்த மூன்று திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இன்னும் சில காலங்களுக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டுமானால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும். அதிலும் சசிகலா நடராஜனின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியதிகாரமும் இருக்க வேண்டுமானால் மத்திய அரசின் சொற்படி நடந்தே ஆகவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஒரு வகையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் 'நிழல் ஆட்சி'யாகவே கருதப்படவேண்டும்.

இதனிடையே, ஒரு புதிய சர்ச்சையும் தோன்றியுள்ளது. அதாவது சுகயீனமுற்றிருக்கும் ஜெயலலிதா பெருந்தொகையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கு உரிமையாளர். தற்போது செயற்பட முடியாத நிலையிலுள்ள அவரது சொத்துக்களை ‘கைமாற்றுவதற்கான’ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் அந்த சர்ச்சை.

ஜெயலலிதாவின் சகோதரனின் பிள்ளைகள் மற்றும் வளர்ப்பு மகன் சுதாகரன் போன்றவர்கள் இருக்கின்றனர். என்றாலும் இவர்களுக்கும், ஜெயலலிதாவுக்குமிடையில் எந்தவித தொடர்புகளும் கிடையாது. நெருங்கிய உறவினர்களை ஜெயலலிதா தமது வீட்டுக்கு அழைத்து பேசியதாகவோ அல்லது அவர்களது வீடுகளுக்கு சென்று பேசியதாகவோ எந்தவித தகவல்களும் இல்லை.

தற்போது சுகவீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவைப் பார்வையிட அப்பலோவுக்கு வருகைதந்த (ஜெயலலிதாவின்) சகோதரனின் மகள், வளர்ப்பு மகன் சுதாகரன் உள்ளிட்ட எவரையும் அனுமதிக்கவில்லை. அவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.

ஜெயலலிதாவை கவனிக்கும் முழுப்பொறுப்பும் சசிகலா நடராஜனிடமும், அவரது உறவினர்களிடமுமே இருக்கின்றது. அதுமட்டுமின்றி சசிகலாவின் கணவர் மற்றும் உறவினர்கள் என 12 பேரை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கியிருந்தார். அவர்கள் கூட (நடராஜனை தவிர) அப்பலோவுக்கு வந்து ஜெயலலிதாவை பார்த்துவிட்டு செல்கின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு அனுமதி இல்லை.

அந்த வகையில் தி.மு.க. தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் அண்மையில் திருமண வீடொன்றில் வைத்து கூறிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

"முதல்வர் விரைவில் நலம்பெற வேண்டுமென்பதே அனைவரது எண்ணமும். முதல்வர் நலமுடன் உள்ளார். தானே உணவு உண்கிறார். பேசுகிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படியானால், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு சின்னம் வழங்க ஏன் கை ரேகை வைத்தார்?" என்று கேள்வி எழுப்பியதுடன், "அவருக்கே தெரியாமல் பல சொத்துக்களுக்கு கைரேகை பெறப்படுகிறது. ஜெயலலிதா எழுந்து வந்தால், யார் யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் சொத்துக்களை கைமாற்றுவதற்கான ‘கைரேகை’ பெறும் தகவலில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியுமென்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே அப்பலோ வைத்தியசாலையின் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், தீவிர கண்காணிப்புப் பிரிவிலிருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 45 தினங்களுக்கு மேலாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா பூரண சுகம் பெற்று பழைய நிலைமைக்கு விரைவில் திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கை வெளியாகியுள்ளது. அவர் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அவ்வாறு இயல்பு நிலைக்கு திரும்பும்போதுதான், அவர் சுகவீனமுற்றிருந்த காலப்பகுதியில், கட்சியிலும் ஆட்சியிலும் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வெளிவரும். அப்போது பலர் வெளியேற்றப்படக் கூடும். சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படக் கூடும். பலர் இதனை விரும்பினாலும், சிலர் இதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-06#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.