Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படி இருந்த தே.மு.தி.க....? விஜயகாந்த் சறுக்கியது இப்படித்தான் !

Featured Replies

எப்படி இருந்த தே.மு.தி.க....? விஜயகாந்த் சறுக்கியது இப்படித்தான் !

 

a7_11258.jpg

மிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது.

அடுத்தடுத்த தோல்விகளுக்கு இடையேயும் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன் இருந்த தே.மு.தி.க., இந்த இடைத்தேர்தலில் அதையும் இழந்து 4,5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி.யை அடுத்து 4வது இடத்தையும், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி. மட்டுமல்லாது நோட்டாவுக்கு அடுத்த 5வது இடத்தை பிடித்தது. கட்சி துவங்கி 11 ஆண்டுகளை கடந்து 12வது ஆண்டில் நடைபோட்டு வருகிறது தே.மு.தி.க. இந்த 11 ஆண்டுகளில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது தே.மு.தி.க. இந்த இடைத்தேர்தல் தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய சறுக்கல் தான்.

a8_11497.jpg

ரஜினியை எதிர்பார்த்த போது கால் பதித்த விஜயகாந்த்,,.!

எல்லோரும் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருந்த நேரம். யாரும் எதிர்பாராமல் அரசியலில் கால் பதித்தார் விஜயகாந்த். 2005ம் ஆண்டு மதுரையில் லட்சக்கணக்கான மக்களுக்கிடையே தே.மு.தி.க.வை துவங்கிய விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தன்னை மாற்று என அறிமுகப்படுத்திக்கொண்டார். தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்று வராதா என காத்திருந்த மக்களால் அவர் பெரிதும் விரும்பப்பாட்டார். ஊடகங்களும் விஜயகாந்த்துக்கு பெரும் வரவேற்பை கொடுத்திருந்தது.

கட்சி துவங்கிய சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் மாற்று அணி என யாருடனும் அணி சேராமல் தனித்தே போட்டியிட்டார் விஜயகாந்த். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என அறிவித்ததோடு, 232 தொகுதிகளில் தனித்து போட்டியிடவும் செய்தார். பா.ம.க.வின் கோட்டை என சொல்லப்படும் விருதாச்சலத்தில் போட்டியிட்டு வென்றார். 231 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தோற்றது. ஆனால் தே.மு.தி.க.வின் வாக்குகள் பெரும் அந்த தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு கணிசமாக இருந்தது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத ஒரு தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த். இந்த தேர்தலில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகள் அ.தி.மு.க.வை அரியணை ஏற விடாமல் தடுத்தது. தி.மு.க. பெரும்பான்மை பெற முடியாத சூழலையும் ஏற்படுத்தியது. அந்தளவு 128 தொகுதிகளில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தது தே.மு.தி.க.  இந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் 8.45 சதவீதம். முதல் முறை தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சி இந்த அளவு வாக்குகளை பெறுவது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது.

a10_11072.jpg

உயர்த்தி விட்ட 'தனித்து போட்டி' இமேஜ்

2006 சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2009 நாடாளுமன்ற தேர்தலின் போது பலமிக்க கட்சியாக இருந்தது தே.மு.தி.க. முதல் தேர்தலில் மக்கள் தந்த ஆதரவை அப்படியே தக்க வைத்திருந்தார் விஜயகாந்த். 'கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி' என மீண்டும் அறிவித்து தனித்தே தேர்தலை சந்தித்தார். 2006ல் தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் நிறைய கூட்டணி வாய்ப்புகளை கொடுத்தது. ஆனால் அத்தனையையும் விலக்கி விட்டு தனித்து தேர்தலை சந்தித்தார்.

அந்த தேர்தலில் ஒரு இடங்களில் கூட தே.மு.தி.க. வெற்றி பெறவில்லை. அவ்வளவு ஏன் ஒரு தொகுதியில் கூட டெபாசிட்டையும் பெறவில்லை. ஆனால் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்திருந்தது. முதல் தேர்தலில் 8.45 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. இந்த தேர்தலில் 10 சதவீதத்தை எட்டி இருந்தது. இடைத்தேர்தல்களையும் புறக்கணிக்காமல் சந்தித்தது. எல்லா தேர்தல்களிலும் மூன்றாவது பெரிய கட்சி என்பதை தக்க வைத்துக்கொண்டது.

a9_11524.jpg

எம்.எல்.ஏ.வில் இருந்து எதிர்கட்சித்தலைவராக...

தொடர்ச்சியாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துக்கொண்டே போனது. அது மகிழ்ச்சியை அளித்தாலும், வெற்றியை சந்திக்காதது கட்சியினரிடையே சோர்வை ஏற்படுத்தியிருந்தது. 'வெற்றி பெற வேண்டுமானால் கூட்டணி அவசியம். நாம் ஏன் கூட்டணி அமைக்க கூடாது' என கட்சிக்குள்ளேயே பேச்சு எழத்துவங்கியது. 'தனித்து நின்றால் ஓரிரு இடங்களில் தான் வெல்ல முடியும். 10 சதவீத வாக்கு வங்கியை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தலாம். ஆனால் கூட்டணி அமைத்தால் கணிசமான எம்.எல்.ஏ..க்களை பெற்று விடலாம்' என மேல் மட்ட அளவில் ஆலோசனை சொல்லப்பட்டது.

இதை தனக்கு சாதகமாக்கி கொண்டார் ஜெயலலிதா. அகில இந்திய தலைவர்களை மட்டுமே தனது இல்லத்துக்கு அழைத்து பேசும் ஜெயலலிதா, விஜயகாந்த்தை போயஸ் கார்டனுக்கு அழைத்து கூட்டணிக்கு அச்சாரமிட்டார். திருமண மண்டப இடிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் தி.மு.க.வை கடுமையாக எதிர்த்த விஜயகாந்த், பொது எதிரியாக தி.மு.க.வை நிறுத்தி அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வென்றிருந்தது. ஆனால் குறைந்த இடங்களில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் 7.88 சதவீதமாக குறைந்திருந்தது. ஆண்ட தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தவித்தது. இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டவர் விஜயகாந்த்.

a12_11559.jpg

இது தான் சரிவின் துவக்கம்....

அ.தி.மு.க. உடனான கூட்டணி 2011 தேர்தல் முடிந்ததும் முடிந்து போனது. அடுத்த 5 ஆண்டுகளில் இருவரிடையே ஏற்பட்ட கசப்பு, வெறுப்பு உணர்வால் தன் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.விடம் இழந்திருந்தது தே.மு.தி.க. ஆனாலும் தே.மு.தி.க. பலமாகவே இருந்தது. தே.மு.தி.க.வையும், விஜயகாந்தையும் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்த தி.மு.க., 2014 நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தன் அணியில் சேர்க்க துடித்தது. தே.மு.தி.க. உங்கள் அணியில் இணையுமா என நிருபர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கேட்க "தே.மு.தி.க.வில் தி.மு.க.வும் இருக்கிறதே" என பதிலளித்து வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார் கருணாநிதி.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தன.  "மோடியை பிரதமராக்க பி.ஜே.பி.க்கு நான் வாக்கு கேட்டு வருகிறேன். சட்டமன்ற தேர்தலில் என்னை முதல்வராக்க இவர்களோடு வாக்கு கேட்டு வருவேன்" எனச்சொல்லி பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த்.

இந்த தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணி இரு இடங்களில் வென்ற போதும், அதிக இடங்களில் அதாவது 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 7.88 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், 5.19 சதவீதமாக குறைந்தது. விஜயகாந்த்தின் புரியாத பேச்சு, பகைமை உணர்வுடன் இருந்த கூட்டணி கட்சிகள் போன்றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

a11_11117.jpg

டெபாசிட்டையும் இழந்தார் விஜயகாந்த்

2014 நாடாளுமன்ற தேர்தலைப் போலவே தே.மு.தி.க. உடன் அணி சேர துடித்தது தி.மு.க. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என செய்தியாளர்கள் கேட்க... 'பழம் நழுவி பாலில் விழும்' என்றார். கருணாநிதியின் இந்த வெளிப்படையான பேச்சு தி.மு.க. - தே.மு.தி.க. அணி குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால் நடந்தது வேறு.

மக்கள் நலக்கூட்டணியோடு அணி சேர்ந்தது தே.மு.தி.க., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் விஜயகாந்த். மூன்றாவது அணி, மாற்று அணி சொல்லப்பட்டு, கூட்டணி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும், எதுவும் எடுபடவில்லை. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது கூட்டணி. தனித்து போட்டியிட்ட போதே வெற்றி பெற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்த தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் தோல்வியை தழுவினார். உச்சகட்டமாக டெபாசிட்டை கூட விஜயகாந்தால் தக்க வைக்க முடியவில்லை.

2014 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்த போது, "தேர்தலில் தோல்வி என்பது இருக்கத்தான் செய்யும். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த வரலாறு உண்டு" என தோல்விக்கு காரணம் சொன்னது தே.மு.தி.க.  2016 சட்டமன்ற தேர்தலின் போது படுதோல்வியை சந்தித்ததற்கு, "மக்கள் நலக்கூட்டணியை மக்கள் விரும்பவில்லை" என்றார் விஜயகாந்த்.

a4_11431.jpg

'இடைத்தேர்தலிலும் மிக மோசமான தோல்வி'

தோல்வி ஒரு புறம் இருக்க மறுபுறம் வாக்குப்பதிவு சதவீதம் வீழ்ச்சியடைந்து கொண்டே சென்றது. இப்போது கூட்டணியை இல்லாமல் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டது தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி. வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கியது. ஆதரவு கேட்டால் தருகிறோம் என மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சொன்ன போது, "கேட்டுப்பெறுவது அல்ல ஆதரவு" எனச்சொல்லி தனித்தே தேர்தலை சந்தித்தது. நிச்சயம் வெற்றி பெற முடியாது என்ற போது, வாக்கு சதவீதத்தை உயர்த்திக்காட்ட வேண்டும் என முனைப்பாக இருந்தது தே.மு.தி.க.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பொதுக்கூட்டங்களில் எங்கும் பங்கேற்காத விஜயகாந்த், 3 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரேமலதா வேன் மூலம் தீவிரமாய் பிரச்சாரம் செய்தார். ஆனால் மக்கள் ஆதரவு மிக குறைவாக இருந்தது. குறைந்த பட்சம் 8 சதவீதம் வாக்குகளையாவது பெற்று விட வேண்டும் என முனைப்புடன் இறங்கியது. மூன்றாவது பெரிய கட்சி என்ற இமேஜை பற்றிப்பிடித்துக்கொள்ள இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலை விட மிக மோசமான தோல்வியை சந்தித்தது. கடந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட வேண்டுமென மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி திருப்பரங்குன்றம். உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் இழந்த போது, திருப்பரங்குன்றத்தில் நின்றிருந்தால் எளிதில் வென்றிருப்பார் என கட்சிக்குள் பேசப்பட்டது. தே.மு.தி.க.வின் பலம் பொருந்திய தொகுதியதாக திருப்பரங்குன்றம் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்தை கூட தே.மு.தி.க.வால் பிடிக்க முடியவில்லை. மூன்றாவது இடத்தை பி.ஜே.பி.யிடம் விட்டுக்கொடுத்து 4வது இடத்துக்கு சென்றது தே.மு.தி.க. இந்த தொகுதியில் தே.மு.தி.க. பெற்ற மொத்த வாக்குகள் 4105. இது பி.ஜே.பி. பெற்ற வாக்குகளை விட 2,825 வாக்குகள் குறைவு. தே.மு.தி.க இந்த தொகுதியில் பெற்ற வாக்கு சதவீதம் வெறும் 2 சதவீதம் மட்டுமே.

a1_11215.jpg

'3வது பெரிய கட்சிக்கு 5வது இடம் தான்'

தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலை இன்னும் பரிதாபம். 4வது இடத்தை நோட்டாவிடம் பறிகொடுத்து, இந்த இரு தொகுதியிலும் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தஞ்சாவூரில் தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் 1,534 வாக்குகள் தான். இது நோட்டா பெற்ற வாக்குகளை விட 761 வாக்குகள் குறைவு. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டாவுக்கு 2295 பேர் வாக்களித்திருந்தனர். தஞ்சாவூர் தொகுதியில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 0.82 சதவீதம். அதாவது ஒரு சதவீதத்தை கூட தொடவில்லை. அரவக்குறிச்சியில் இதே நிலை தான். நோட்டாவுக்கு அடுத்த இடமே தே.மு.தி.க.வுக்கு கிடைத்தது. தே.மு.தி.க. 1513 வாக்குகளை மட்டுமே பெற்றது. தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 0.92% ஆகும். மூன்று தொகுதிகளிலும் சேர்த்து தே.மு.தி.க.வின் சராசரி வாக்குகள் வெறும் 1.25 சதவீதம் மட்டுமே.

இதுவரை இல்லாத அளவு மிக மோசமான தோல்வியை தழுவி வருகிறது தே.மு.தி.க. 10 சதவீதத்தில் இருந்து சறுக்கி ஒரு சதவீதத்தை எட்டி இருக்கிறது அதன் வாக்கு சதவீதம். ஒவ்வொரு தோல்வியின் போதும், 'அரசியலில் தோல்வி என்பது சகஜம். மிகப்பெரிய கட்சிகள் எல்லாம் தோல்வியை தழுவிய வரலாறு இருக்கிறது' என காரணங்களை சொல்லலாம். ஆனால் தொடர் தோல்விகளும், தொடர்ந்து சரியும் வாக்கு சதவீதமும் நிச்சயம் கட்சிக்கு நல்லதல்ல.

என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?

http://www.vikatan.com/news/coverstory/73204-dmdk-suffers-another-setback-in-bypolls.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.