Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவோம் நம் மொழியை: போக வேண்டிய தூரம்

Featured Replies

  • தொடங்கியவர்

அறிவோம் நம் மொழியை: கூட்டணியில் மேலும் சில சிக்கல்கள்!

 

 
 
 
arivom_3047827f.jpg
 
 
 

இந்த வாக்கியத்தைப் பாருங்கள்:

‘கடிகாரத்தை அவருக்குத் தருவதைத்தான் விரும்பவில்லை என்று…’ முற்றுப்பெறாத இந்த வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம்.

‘கடிகாரத்தை அவருக்குத் தருவதைத்தான் விரும்பவில்லை என்று அவருடைய நண்பர் சொன்னார்’ என்று முடித்தால், கடிகாரத்தைத் தவிர, வேறு எதையாவது தரலாம் எனப் பொருள் வருகிறது. அல்லது அவருக்குப் பதில் வேறு எவருக்காவது தரலாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

இதே வாக்கியத்தை இப்படி எழுதினால்… கடிகாரத்தை அவருக்குத் தருவதைத் தான் விரும்பவில்லை என்று…

இந்த வாக்கியத்தை ‘கடிகாரத்தை அவருக்குத் தருவதைத் தான் விரும்பவில்லை என்று அவருடைய நண்பர் சொன்னார்’ என்று முடித்தால், நண்பருக்கு விருப்பம் இல்லை என்னும் பொருள் வருகிறது. தான் என்னும் சொல்லை அதற்கு முன் வரும் சொல்லோடு சேர்த்து எழுதினால், கூடுதல் அழுத்தம் கிடைக்கிறது. பிரித்து எழுதினால் நான் என்னும் பொருள் வருகிறது.

கொள் என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். ‘இதை உன்னுடையதாகக் கொள்’, ‘இதை எடுத்துக்கொள்’ ஆகிய வாக்கியங்களை ஒப்பிட்டுப்பாருங்கள்.

‘என் நம்பிக்கையாகக் கொண்டேன்’, ‘எனக்கென எடுத்துக்கொண்டேன்’ என்னும் வாக்கியங்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

சேர்ப்பதும் பிரிப்பதும் வேறு வேறு பொருள்களைத் தருகின்றன அல்லவா? எந்தப் பொருளில் தர விரும்புகிறோமோ அதற்கு ஏற்ப சேர்த்தோ, பிரித்தோ எழுத வேண்டும். முதல் வாக்கியத்தில் உன்னுடை யதாகக் (கருதிக்)கொள் என்னும் பொருள் வருகிறது. இரண்டாவது வாக்கியத்தில் எடுத்துக் கொள் என்று, எடுத்தல் என்னும் வினைக்குத் துணையாக வருகிறது. எனவே, முதல் வாக்கியத்தில் பிரித்தும் இரண்டாவதில் சேர்த்தும் எழுத வேண்டும். கொள்ளுதல் என்னும் பொருளில் கொள் என்பதைப் பயன் படுத்தினால், பிரித்து எழுத வேண்டும். எடுத்துக் கொள், சேர்ந்துகொள், பார்த்துக்கொள், புரிந்து கொள் என்று இன்னொரு சொல்லுக்குத் துணையாக இது பயன்படுத்தப்படும் போது சேர்த்து எழுத வேண்டும். கொண்டு என்பதும் இதேபோலத் தான்.

ஒரு சொல்லைப் பிரித்து எழுதுவதிலும் சேர்த்து எழுதுவதிலும் இத்தனை வேறுபாடுகள் எழும்போது, பிரித்து அல்லது சேர்த்து எழுதுவதை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்? பேசும்போது தான் என்னும் சொல்லுக்கான பொருள் குரலின் ஏற்ற இறக்கங்கள், அழுத்தங்களின் மூலம் தெளிவாகிறது. ஆனால் எழுதும்போது? பழக்கம் காரணமாகவும், இடச்சார்பு கருதியும் சரியான பொருளை அறிந்துகொண்டுவிடலாம். ஆனால், குழப்பமே எழாத வண்ணம் எழுத முயல்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் அல்லவா?

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

அறிவோம் நம் மொழியை- எச்சரிக்கை: இரட்டை வேடம் பூணும் சொற்கள்

 

 
 
 
 
arivom_3162967f.jpg
 
 
 

சேர்த்து, பிரித்து எழுதும் விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் சொற்கள் இன்னும் பலவும் இருக்கின்றன. கூட, கூடும், பார் முதலானவை அவற்றில் சில. கூட, கூடும் ஆகிய சொற்கள்

ஒன்றுகூடுதல் என்னும் பொருளில் வரும்போது சேர்த்து எழுத வேண்டும். ‘அதுகூடத் தெரியாதா?’, ‘பேசுவதுகூடத் தவறுதான்’ என்றெல்லாம் முதலில் வரும் சொல்லுக்கு அழுத்தம் தருவதற்காகப் பயன்படுத்தப்படும்போது சேர்த்து எழுத வேண்டும். வரக்கூடும், தரக்கூடும் என ஐயத்தை வெளிப்படுத்தும் இடங்களிலும் சேர்த்து எழுத வேண்டும். இந்த இடங்களில் பிரித்து எழுதினால் கூட்டம் கூடுதல் என்னும் பொருளைத் தந்து குழப்பம் ஏற்படுத்தக்கூடும்.

கூடாது என்னும் சொல்லைத் தகாது என்னும் பொருளில் பயன்படுத்தும்போது அதைப் பிரித்து எழுத வேண்டும். எ.டு.: ‘மஞ்சள் கோட்டைத் தாண்டக் கூடாது.’

பார்த்தல் என்னும் செயலைக் குறிக்கும்போது பார் என்பதைப் பிரித்து எழுத வேண்டும் (எ.டு.: அங்கே பார்). யோசித்துப்பார், செய்துபார் என்று பரிசீலனைக்கான பொருளில் சொல்லும்போது சேர்த்து எழுத வேண்டும். இந்த இடங்களில் பிரித்தால் பொருள் குழப்பம் ஏற்படும்.

விடு என்னும் சொல், விடுதல், துறத்தல் என்னும் பொருளில் வரும்போது பிரித்து எழுத வேண்டும் (எ.டு.: கையை விடு, பழக்கத்தை விடு). செய்துவிடு, போய்விடு, முடுக்கிவிடு விட்டுவிடு என இன்னொரு வினைச் சொல்லுக்குத் துணையாக வரும்போது சேர்த்து எழுத வேண்டும். அமெரிக்காவுக்குப் போ என்று சொல்லும்போது ‘போ’ என்பதைப் பிரித்து எழுதலாம். காணாமல்போ, ஒழிந்துபோ என்னும் பயன்பாடுகளில் போ என்பதன் பொருள் போகுதல், செல்லுதல் ஆகிய பொருள்களில் பயன்படவில்லை. எனவே இந்த இடங்களில் சேர்த்து எழுதலாம்.

போல, போல் ஆகியவையும் குழப்பம் ஏற்படுத்தக்கூடியவை. அதுபோல, வந்ததுபோல் என்னும் இடங்களில் சேர்த்து எழுதலாம். அதைப் போல, வந்ததைப் போல் என்று முதலில் வரும் பெயர்ச் சொல்லில் வேற்றுமை உருபு சேர்ந்து வந்தால் பிரித்து எழுதலாம். வேண்டும், முடியாது ஆகிய சொற்கள் இன்னொரு சொல்லுக்குத் துணையாக நின்று வேறு பொருள் தருவதில்லை என்பதால் இவற்றை எப்போதும் பிரித்தே எழுத வேண்டும்.

பிரித்தல், சேர்த்தல் தொடபான எல்லாச் சொற்களையும் எடுத்துக் கூறி விளக்குவது இயலாது. ஒரு சொல்லைச் சேர்த்து எழுதினால் அதற்கு ஒரு பொருள், பிரித்து எழுதினால் வேறொரு பொருள் வரும் என்றால் அந்தச் சொல்லைச் சேர்ப்பதிலும் பிரிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் கூற விரும்பும் பொருளுக்கு எது பொருத்தமாக இருக்கும், எப்படி எழுதினால் நாம் சொல்ல முனையும் பொருளில் குழப்பம் ஏற்படாமல் இருக்கும் என்பனவற்றை ஆலோசித்து இந்த முடிவை எடுக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-எச்சரிக்கை-இரட்டை-வேடம்-பூணும்-சொற்கள்/article9689753.ece?homepage=true&theme=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அறிவோம் நம் மொழியை: எங்கே அழுத்தம் தர வேண்டும்?

 

 
 
 
arivom_3047827f.jpg
 
 
 

வா, போ, விடு, கொண்டு எனப் பல சொற்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு பிரித்து அல்லது சேர்த்து எழுதுவது பற்றிப் பார்த்தோம். ‘போது’ என்பதுபோலச் சற்றே மாறுபட்ட தன்மை கொண்ட சில சொற்களும் உள்ளன. வரும்போது, செல்லும்போது, கொடுத்தபோது எனப் பெரும்பாலும் இது சேர்ந்தே வரும். பொழுது என்னும் பொருளில் மிக அரிதாக வரும்போது மட்டும் பிரித்து எழுதலாம். பொழுது என்பதைப் போது என்று சொல்வது பெரும்பாலும் கவிதை மரபைச் சேர்ந்தது என்பதால் ( ‘ஹே பூதலமே அந்தப் போதினில்’ - பாரதியாரின் ‘பாஞ்சாலி சபத’த்தில்) சமகால உரைநடையில் இது அந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே ‘போது’ என்பதை எப்போதும் சேர்த்து எழுதலாம்.

வரும்பொழுது, வரும்போது இரண்டுக்கும் ஒரே பொருள்தான். எனவே, இந்த இடத்தில் போது என்பதைச் சேர்த்து எழுதுவதுபோலவே பொழுது என்பதையும் சேர்த்து எழுத வேண்டும். பொழுது என்னும் சொல் ஒரு பொழுது, காலைப் பொழுது எனத் தனிப் பொருள் கொண்டு காலத்தைக் குறிக்கும்பொழுது பிரித்து எழுத வேண்டும்.

கீழ்க்காணும் இணைகளை ஆராய்ந்தால் சேர்த்து, பிரித்து எழுதுவது குறித்து மேலும் தெளிவுபெறலாம்.

கீழே வை - முடித்துவை, அங்கே பார் - யோசித்துப்பார், ஊரிலிருந்து வந்தார் - ஊரில் இருந்துவந்தார், கையை விடு - கேட்டுவிடு, அதுகூடத் தெரியாதா அங்கே கூட வேண்டாம் சில சொற்களின் கடைசியில் ஏகாரம் சேர்க்கும்போது மாறுபட்ட பொருள் கிடைக்கும். எ.டு.: ‘அவள் சொல்லிவிட்டாள்’, ‘அவளே சொல்லிவிட்டாள்’. ‘அதுவே அதிகம்’, ‘தரவே கூடாது’, ‘வேண்டவே வேண்டாம்’ ஆகிய தொடர்களில் ஏகாரம் பொருள் மாறுபாட்டைத் தருகின்றன. இத்தகைய அழுத்தத்தை எங்கே தருவது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘திரும்பி வரவே தோன்றாது’ என்றால், இனி ஒருபோதும் திரும்பி வரத் தோன்றாது என்னும் பொருள் வருகிறது. இதை ‘திரும்பியே வரத் தோன்றாது’ எனச் சிலர் எழுதுகிறார்கள். திரும்பி என்பதில் அழுத்தம் கொடுக்கும்போது அந்த அழுத்தம் உரிய பொருளைக் கொடுப்பதில்லை.

‘அதையே பார்க்கக் கூடாது’, ‘அதைப் பார்க்கவே கூடாது’ ஆகிய இரண்டுமே சரியான தொடர்கள்தாம் ஆனால், இரண்டிலும் அழுத்தம் பெறும் இடத்துக்கேற்பப் பொருள் மாறுபடுகிறது. நமக்கு எந்தப் பொருள் வேண்டும் என்பதைப் பொறுத்து எங்கே அழுத்தம்தர வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-எங்கே-அழுத்தம்-தர-வேண்டும்/article9709375.ece

  • தொடங்கியவர்

அறிவோம் நம் மொழியை... எழுத்துக்கு வரும் பேச்சு வழக்கு!

 

 
 
 
arivom_3047827f.jpg
 
 
 

சில சொற்களைப் பிரித்து எழுதுவதா, சேர்த்து எழுதுவதா எனும் குழப்பம் பலருக்கும் பல சூழல்களிலும் எழுகிறது. பேச்சு வழக்கில் இடம்பெறும் சொற்களை எழுத்தில் கொண்டுவரும்போதும் இந்தப் பிரச்சினை வருகிறது. எடுத்துக்காட்டாக, ‘கிட்ட’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். ‘அவரிடம் சொல்ல மாட்டேன்’ என்பதைப் பேச்சு வழக்கில் ‘அவர்கிட்ட சொல்ல மாட்டேன்’ என்று சொல்வோம். ‘அவர் அருகில் வந்தார்’ என்பதை ‘அவரு கிட்ட வந்தாரு’ என்று சொல்வது உண்டு. இந்த இரண்டு சூழல்களிலும் ‘கிட்ட’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுவதா, சேர்த்து எழுதுவதா?

கதாபாத்திரங்களும் செய்திக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்படும் நபர்களும் பேசுவதைக் கூடியவரை அவர்கள் சொன்னபடி எழுதவே கதாசிரியர்களும் இதழாளர்களும் முயற்சிசெய்வார்கள். எனவே, என்கைல சொல்லு, அவராண்ட குடு, பிளேட்டைத் திருப்பிப்போடு முதலான வழக்குகள் கதைகளிலும் செய்திக் கட்டுரைகளிலும் இடம்பெறக்கூடும். முட்டுக்கொடுத்தல், தூக்கிப்போடுதல் முதலான சொற்கள் பேச்சு வழக்கிலும் உரைநடை வழக்கிலும் உச்சரிப்பில் மாற்றமடையுமே தவிர, இரண்டிலும் ஒரே விதத்தில்தான் பயன்படுகின்றன. ஆனால், கிட்ட, கைல, (உன்)னாண்ட முதலான சொற்கள் உரைநடையில் பயன்படுத்தப்படுவதில்லை. இதுபோன்ற சொற்களை எழுத்தில் கொண்டுவரும்போது எப்படிக் கையாள்வது?

போல, கொண்டு, வை, வா முதலான சொற்களுக்குச் சொல்லப்பட்ட அதே முறைதான் இந்தச் சொற்களுக்கும் பொருந்தும். தனிப் பொருள் தந்தால் பிரித்து எழுதலாம். முன்னால் வரும் சொல்லோடு சேர்ந்து, தன் தனிப் பொருளுக்கு மாறுபட்ட பொருளைத் தந்தால் சேர்த்து எழுதலாம்.

கிட்ட என்னும் சொல் அருகில் என்னும் தனிப் பொருளில் வந்தால் பிரித்து எழுதலாம். (அவரி)டம் என்னும் பொருளில் வந்தால் சேர்த்து எழுதலாம். ‘அவர்கிட்ட சொல்லியாச்சு’, ‘அவன் கிட்ட வந்து நின்னான்’ ஆகிய எடுத்துக்காட்டுகளில் இந்த வேறுபாடு துல்லியமாகத் துலங்கும்.

‘எங்கைல சொல்லு, நான் யார்கைலயும் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லும்போது கைல என்பது கை என்னும் தனிப் பொருளைத் தரவில்லை, எனவே சேர்த்து எழுதலாம். ‘எங் கைல குடு’, ‘அப்பா கைல அடிபட்டிருக்கு’ ஆகியவற்றில் கை என்பது கை என்னும் பொருளைத் தருவதால் பிரித்து எழுதலாம்.

போடு என்பதைக் கொல் / கொலைசெய் என்னும் பொருளில் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள். இதை எழுத்தில் கொண்டுவரும்போது, இது அலாதியான தனிப்பொருள் தருவதால் பிரித்தே எழுத வேண்டும்.

பேச்சு வழக்கில் உள்ள சக்கைபோடு, அடக்கிவாசி போன்ற பல சொற்களுக்கும் இதே அடிப்படையில் முடிவுகாணலாம்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-எழுத்துக்கு-வரும்-பேச்சு-வழக்கு/article9714748.ece

  • தொடங்கியவர்

அறிவோம் நம் மொழியை... எங்கே சின்ன ர, எங்கே பெரிய ற?

 

 
 
 
 
arivom_3047827f.jpg
 
 
 

ர, ற, ல, ள, ழ, ன, ண முதலான எழுத்துகளின் பயன்பாடு குறித்துத் தன் மகனுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என வாசகர் ஒருவர் கேட்கிறார். இடையினம், வல்லினம், டண்ணகரம், றன்னகரம், தன்னகரம், லகரம், பொது ளகரம், சிறப்பு ழகரம் முதலான வேறுபாடுகள் தமிழில் மிகவும் முக்கியமானவை. மாற்றி எழுதினாலோ, சொன்னாலோ பெரும்பாலும் வேறு பொருளைத் தரகூடியவை.

ல, ள, ழ, ன, ண முதலான வேறுபாடுகள் பேச்சிலும் எழுத்திலும் உணரப்படும் (எ.டு.: கலம் களம், பலம் - பழம், கனம் கணம்). ர, ற-வைப் பொறுத்தவரை எழுதும்போதுதான் பொருள் மாறுபாட்டை (கரை - கறை) உணர முடியும். பேசும்போது உணர முடியாது.

ஆனால், இதை எப்படிக் கற்றுக்கொடுப்பது? இதற்கென்று ஏதேனும் விதிகள் உள்ளனவா? தொடக்க நிலை மாணவருக்கு ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால் முதலானவற்றுக்கான விதிகளை விளக்குவதுபோல, எந்த இடத்தில் ர, எந்த இடத்தில் ற என்று விதிகளைக் காட்டி விளக்க இயலாது. நான் அறிந்தவரை அதற்கான இலக்கண விதிகள் எதுவும் இல்லை. இந்த இடத்தில் இதுதான் வரும் என்று சொல்லிப் பேசவும் எழுதவும் பழக்குவதுதான் ஒரே வழி.

ஆங்கிலத்தில் Put, Cut ஆகிய சொற்களில் உள்ள U என்னும் எழுத்து இரு வேறு விதங்களில் ஒலிக்கிறது. இதற்குக் காரணம் கேட்டால் அது அப்படித்தான் என்பார்கள். அது மரபு (Convention) என்றே சொல்லப்படும். Cat, Cell ஆகிய சொற்களில் வரும் C என்னும் எழுத்து இரு வேறு விதமாக ஒலிக்கிறது. இதற்கும் எந்தக் காரணமும் இல்லை. ஒவ்வொரு மொழியிலும் அப்படிச் சில கூறுகள் இருக்கும்.

மொழியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கூறுக்கும் உரிய காரணத்தின் அடிப்படையில் இலக்கண விதிகளை வகுத்து வைத்திருக்கும் ஒரு சில மொழிகளில் ஒன்றான தமிழில் இதை விதிவிலக்காகவே காண வேண்டும். ர, ற வேறுபாட்டைப் பொருள் சார்ந்து விளக்க முடியுமே தவிர, ஏன் இங்கே சின்ன ர, ஏன் அங்கே பெரிய ற என்று தொடக்கப் பள்ளி மாணவரோ தமிழைப் புதிதாகப் பயிலும் ஒருவரோ கேட்டால் அது அப்படித்தான் என்றுதான் சொல்ல முடியும். பொருளறிந்து எழுதியும் பேசியும் பழக்குவதுதான் இவற்றை நன்கு அறிந்துகொள்ள ஒரே வழி.

சரியான தரவுகள் கொண்ட நூல்களாலும் சரியான உச்சரிப்புக் கொண்ட ஆசிரியர்களாலும்தான் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த இயலும். முறையான உச்சரிப்பும் முறையான அடிப்படைத் தமிழ் அறிவும் கொண்ட எவரும் இவ்விஷயத்தில் ஆசிரியர்களின் பங்கினை ஆற்ற இயலும்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-எங்கே-சின்ன-ர-எங்கே-பெரிய-ற/article9720065.ece

  • 2 months later...
  • தொடங்கியவர்

அறிவோம் நம் மொழியை - வலசை என்றால் என்ன?

 

 

விலங்குகளும் பறவைகளும் உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் இடம்பெயர்வதற்கு வலசை என்று பெயர்.

இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான் 'வலசை' என்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாக 'வலசை' ஆகிவிட்டது. மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்க 'புலம்பெயர்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். 'வலசை' என்ற சொல்லுக்கு 'குக்கிராமம்' என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 'வலசையூர்' என்று ஒரு கிராமம் இருக்கிறது.
விலங்குகளும் பறவைகளும் உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் இடம்பெயர்வதற்கு வலசை என்று பெயர்.



இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான் 'வலசை' என்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாக 'வலசை' ஆகிவிட்டது.

மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்க 'புலம்பெயர்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். 'வலசை' என்ற சொல்லுக்கு 'குக்கிராமம்' என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 'வலசையூர்' என்று ஒரு கிராமம் இருக்கிறது.

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.