Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...

Featured Replies

மிஸ்டர் கழுகு: நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...

 

p44c.jpg‘‘இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைக்காத காட்சிகள் எல்லாம் இப்போது சட்டமன்றத்தில் நடக்கின்றன’’ என்ற பீடிகையோடு உள்ளே நுழைந்தார் கழுகார். அவர் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த ‘நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...’ என்ற தலைப்பை வைத்து உருவாக்கப்பட்ட ஜூ.வி அட்டையை எடுத்து நீட்டி, ‘‘இதைத்தான் சொல்கிறீர்களா?” என்றோம்.

‘‘ஆம்! ‘ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் தி.மு.க அதகளம் செய்துவிடும்; கேள்விகளால் முதல்வரைத் துளைத்தெடுப்பார்கள்’ என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மெரினாவில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதையடுத்து அவரே, தாக்குதல் பற்றிப் பேச ஆரம்பித்தார். சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, ‘இதுபற்றி முதல்வர் அறிக்கை அளிக்க உள்ளார்’ என்று  சொன்னதும்  மு.க.ஸ்டாலின் அமைதியானார். தி.மு.க-வினரும் அமைதி காத்தனர்.’’

‘‘ம்ம்ம்... போலீஸ் தாக்குதலை நியாயப்படுத்திய முதல்வரின் பேச்சுக்கும் பெரிய அளவில் தி.மு.க  எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே?’’

‘‘ஆமாம்! இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, அ.தி.மு.க-வையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் மு.க.ஸ்டாலின் மென்மையாகத்தான் ‘டீல்’ செய்கிறார்.’’

‘‘எதற்கு இந்த அணுகுமுறை? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்...’’

p44d.jpg

‘‘தி.மு.க செயல் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்  கட்சித் தலைவராகவும் உள்ள மு.க.ஸ்டாலின், ‘பன்னீர்செல்வமே பரவாயில்லை’ என்று கருதுகிறார். அதனால்தான் இந்த மென்மையான அணுகுமுறை. ஜெயலலிதா இருந்த இடத்தில் சசிகலாவை வைத்து அரசியல் செய்வதைவிட... அந்த இடத்தில் பன்னீர்செல்வத்தை வைத்து அரசியல் செய்வது ஸ்டாலினுக்கு வசதியாக இருக்கிறது. இப்போது பன்னீர் இருக்கும் இடத்துக்கு சசிகலா வந்தால், அவரோடு அரசியல் செய்வதில் ஸ்டாலினுக்கும் சரி... தி.மு.க-வுக்கும் சரி... பல சங்கடங்கள் இருக்கின்றன. சசிகலா அப்படி வந்தால், அவரோடு சேர்த்து நடராஜனையும் எதிர்கொள்ள வேண்டும். அது ‘வம்பு பிடித்த வேலை’ என்பது ஸ்டாலினுக்கும், தி.மு.க  முன்னணித் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் சசிகலாவுக்கு பன்னீரே பரவாயில்லை என்று கருதுகின்றனர். எனவேதான் அவர்கள் பன்னீரைக் கடுமையாக எதிர்ப்பது இல்லை. சட்டமன்ற அரசியலில் மட்டுமல்ல... கட்சி அரசியலிலும் ஸ்டாலின் இந்த நடைமுறையையே பின்பற்றுகிறார்; பன்னீர்செல்வமும் அதையே ‘மெயின்டெய்ன்’ செய்கிறார்.’’

‘‘இந்த ஒரு விவகாரத்தை வைத்து மட்டும் அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாதல்லவா?’’

‘‘இந்த விவகாரம் மட்டுமல்ல. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் நடக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, முதல்வரின் இலாகாக்கள் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப் பட்டன. அப்போது, முதல் ஆளாக பன்னீருக்கு வாழ்த்துச் சொன்னது மு.க.ஸ்டாலின்தான். ஆனால், கருணாநிதி பல சந்தேகங்களை எழுப்பி அறிக்கை விடுத்தார். ஜெயலலிதா மறைந்து, அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அஞ்சலி செலுத்தச் சென்றார் ஸ்டாலின். அஞ்சலி செலுத்திவிட்டுப் படியிறங்கியபோது, ஜெயலலிதா உடலின் இன்னொரு பக்கத்தில் இருந்த சசிகலாவிடம் ஆறுதல் சொல்லப் போகலாம் என்பதுபோல கைகாட்டினார், உடன் சென்ற கே.என்.நேரு. ஆனால்,  மு.க.ஸ்டாலின், ராஜாஜி ஹாலின் படிக்கட்டுகளில் கீழே அமர்ந்திருந்த பன்னீர்செல்வத்தின் தோளைத் தொட்டு அணுகி, அவரிடம்தான் தனது இரங்கலைத் தெரிவித்தார். அதன்பிறகு, ‘சசிகலா பொதுச்செயலாளராக வரவேண்டும்’ என்று கி.வீரமணி அறிக்கை கொடுத்தார். இதனால் வீரமணி மீது ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்தார். தனக்கு நெருக்கமான தி.க-வினரிடம் ‘ஆசிரியருக்கு எதற்கு இந்த வீண் வேலை?’ என்று தன்னுடைய வருத்தத்தையும் வெளிப்படுத்தினாராம். இது வீரமணிக்கும் எட்டியது. செயல் தலைவர் ஆனபிறகு, பெரியார் திடலுக்குச் சென்ற ஸ்டாலினிடம், கி.வீரமணி சில விளக்கங்களைக் கொடுத்து சமாதானப் படுத்தினாராம்.’’

‘‘ஓகோ!’’

‘‘மு.க.ஸ்டாலினும், தி.மு.க-வினரும், இதுவரை பன்னீர்செல்வத்தை கடுமையாக எந்த விமர்சனமும் செய்யவில்லை. மாறாக, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக, வர்தா புயல் வந்த நேரத்தில், பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் பாராட்டினார். பன்னீர் முதல்முறையாகக் கொடியேற்றிய குடியரசு தினத்தில், ஆச்சர்யப்படும் வகையில் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.’’

p44b.jpg

‘‘ஸ்டாலின் வரப்போவது முதல்வருக்கு முன்கூட்டியே தெரியுமாமே?’’

‘‘ஆமாம்! மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொள்ளப் போவதை முதல்நாளே தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஜெ.அன்பழகனும், சேகர்பாபுவும் உறுதி செய்தனர். அந்தத் தகவல் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் இருக்கைகள் அமைக்க உத்தரவு பிறப்பித்ததாகச் சொல்கின்றனர்.’’

‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே!’’

‘‘அதுமட்டும் இல்லை. கடந்த 27-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்துக்கு வந்தபோது, அவரது கார் கான்வாய்க்கு முன்பாக மு.க.ஸ்டாலின் கார் சென்றது. அதைக் கவனித்த முதலமைச்சர், தன்னுடைய கான்வாயை மெதுவாகப் போகச் சொன்னாராம். அதே நேரத்தில், முதல்வர் கான்வாய் தனக்குப் பின்னால் வருவதை அறிந்த மு.க.ஸ்டாலின், தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தி பன்னீருக்கு வழிவிடச் சொன்னாராம்.”

‘‘அந்த அளவுக்குப் போய்விட்டதா?”

‘‘இன்னும் இருக்கிறது, கேளும்! சட்டமன்றம் எத்தனை நாள் கூடுவது, எந்தெந்த நாட்கள் நடத்துவது என்று சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்பார்கள். இதில் எப்போதும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். ‘25-ம் தேதி சபை வைத்துக் கொள்ளலாமா?’ என்று சபாநாயகர் கேட்க, ‘அன்று மொழிப்போர் தியாகிகள் நாளாச்சே. அதனால் வெளியூரில் கூட்டம் இருக்கிறது. வேண்டாம்’ என்றாராம் ஸ்டாலின். உடனே 25-ம் தேதி சபை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். விவாதங்கள், வாக்குவாதங்கள் ஏதுமின்றி சில நிமிடங்களில் எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டன.”

p44.jpg

‘‘ ‘ஏதோ நாடகம் நடக்குது நாட்டிலே’ என்ற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருகிறது!”

‘‘சட்டசபையில் பேசியபோது அமைச்சர் செல்லூர் ராஜு, ‘வீரமங்கை சின்னம்மா’ என்று சசிகலாவைக் குறிப்பிட்டார். ‘இது சபை நாகரிகம் அல்லவே’ என்றார் ஸ்டாலின். ‘தலைவரைப் புகழும் கலாசாரத்தை நீங்கள்தானே ஆரம்பித்தீர்கள்’ என்று முதல்வர் பன்னீர் கேட்டதும், ‘நாங்கள் தவறு செய்தால் நீங்களும் தவறு செய்ய வேண்டுமா?’ என்றார் ஸ்டாலின். உடனே சபாநாயகர் தனபால், ‘நீங்கள் உங்கள் தலைவரைப் பாராட்டுங்கள். அவர்கள் அவர்கள் தலைவரைப் பாராட்டட்டும். நான் இரண்டையும் தடுக்கவில்லை’ என்று சொன்னார். இதை எல்லாம் பார்க்கும்போது பெரிய நாடகமாகத்தான் தெரிகிறது. இப்படி ‘கட்சி அரசியல், சட்டமன்ற நடவடிக்கைகள், தனிப்பட்ட பண்புகள் என்று அனைத்து விஷயங்களிலும் ஓ.பன்னீர்செல்வமும் ஸ்டாலினும் ஒரு மாயக் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழக அரசியலுக்கு இது புதுமையாக இருக்கிறது. ஆரோக்கியமாகவும் தெரிகிறது. ஆனால், இந்தக்கூட்டணி, மக்களுக்கு நன்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியா? அல்லது ‘எதற்கு வம்பு’ என்ற அடிப்படையில் அமைந்த கூட்டணியா எனத் தெரியவில்லை! இந்தப் பக்கம் துரைமுருகன் போன்றவர்களும், அந்தப் பக்கம் முதல் வரிசையில் இருக்கும் அமைச்சர்களும் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போயிருப்பது நிஜம்!

‘‘இந்த இணக்கம் எல்லாக் கட்சிகளுக்குள்ளும் வந்தால் எப்படி இருக்கும்?”

‘‘சில இடங்களில் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித்தொடர்பாளர் சொர்ணா சேதுராமன் மகன் விஷ்ணு- மானஸா திருமணம், சென்னையில் கடந்த 29-ம் தேதி திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் -ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைகள் அதிகம் தென்பட்டன. காங்கிரஸ்காரர்களை மிஞ்சும் வகையில் பி.ஜே.பி-யினர் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். திருநாவுக்கரசர், சொர்ணா சேதுராமன் ஆகிய இருவரும் ஒரு காலத்தில் பி.ஜே.பி-யில் இருந்தவர்கள் அல்லவா? பழைய பாசத்தில் டாக்டர் தமிழிசை, இல.கணேசன் எம்.பி. என்று பி.ஜே.பி தலைவர்களும் வந்து குவிந்துவிட்டார்கள். காங்கிரஸ் - பி.ஜே.பி. தலைவர்கள் பாசத்தோடு பேசிக்கொண்டார்கள்” என்றவர், ‘‘ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறை இல்லாமல், பேசியே சரி செய்த திருச்சி போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனை நீர் பாராட்டி இருந்தீர் அல்லவா? அவரை உயர் நீதிமன்ற நீதிபதியும் பாராட்டினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரை கோட்டைக்கு அழைத்து பாராட்டி இருக்கிறார். தவறுகளை கண்டிப்பதோடு, நல்ல விஷயங்களை யார் செய்தாலும் முதலில் ஜூ.வி பாராட்டும். பிறகு அவர்களுக்கு பாராட்டு தொடரும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்றபடி பறந்தார்.

படம்: வீ.நாகமணி
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி


தள்ளிப் போகிறது உள்ளாட்சித் தேர்தல்!

ள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது. ‘ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என நீதிமன்றத்தில் சொன்ன தமிழக அரசு, அப்படி நடத்துவது சாத்தியமில்லை என சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறது. தனி அதிகாரிகள் பதவிக் காலத்தை இந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ‘தமிழகம் முழுக்க வறட்சி வாட்டியெடுக்கும் இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஆளும் கட்சிக்கு நல்லதல்ல’ என்று உளவுத்துறை அறிக்கை வந்துள்ளதாம். அதனால், பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதைக் காரணம் காட்டி, நீதிமன்றத்தில் அவகாசம் வாங்கப்போகிறார்கள்.

p44a.jpg

திருமணத்தில் புதிய கூட்டணி?

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மகள் ஸ்ரீஜனனி - டாக்டர் விவேக் திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி திருச்சியில் நடக்கிறது. பேராசிரியர் அன்பழகன் தலைமையில், ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் என பலரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார் நேரு. திருமண விழாவில் ஒரு புதிய கூட்டணி உருவானது போல இருக்குமாம்!

இது ரப்பர் மேட்டர்!

னவரி 29-ம் தேதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீரென குமரி மாவட்டத்துக்கு வந்தார். குமரியில் உள்ள அரசு ரப்பர் தோட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் ரப்பர் மரங்கள் 5 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பால் சுரக்காத பழைய ரப்பர் மரங்களை வெட்டிவிட்டு புதிய மரங்களை ரப்பர் கழகம் சார்பில் அவ்வப்போது நடுவார்கள். அதுபோல பழைய மரங்களை வெட்டி ஏலம் விட இப்போது திட்டமிட்டிருந்தனர். இதில் முறைகேடு நிகழ்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியதால், ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏலத்தில் இ-டெண்டர் முறையைப் பின்பற்ற தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன. வனத்துறை அமைச்சருக்கு இ-டெண்டரில் உடன்பாடு இல்லையாம். எனவேதான் ஆய்வு என்கிற பெயரில் அவரச அவசரமாக குமரிக்கு திடீர் விசிட் அடித்து அதிகாரிகளை சந்தித்துப் பேசினார் என்கிறார்கள். அவர் வரப் போவது அதிகாரிகளுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ முன்கூட்டியே தெரியாதாம்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.