Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைலன்ட் மோடில் தி.மு.க!

Featured Replies

மிஸ்டர் கழுகு: சைலன்ட் மோடில் தி.மு.க!

 

p44c.jpg‘‘சட்டசபைச் செய்திகளோடு வருகிறேன்” என்று கழுகார் முன்னோட்டம் கொடுத்திருந்தார். சட்டசபை முடிந்து மாலையில் அவர் உள்ளே நுழைந்ததும், ‘‘சபையில் என்ன கொடுக்கப்பட்டது... என்ன குடித்தார்கள்?” என்றோம்.

‘‘சட்டசபை நிகழ்வுகள் சுவாரஸ்யமாகத்தான் போகின்றன. அந்தச் சுவாரஸ்யத்தோடு கொஞ்சம் ‘தண்ணி’ கலந்துவிட்டது கடந்த வாரம்!” என்றார் கழுகார், சிரித்தபடி.

‘‘எந்தத் தண்ணி என்று சொல்லவில்லையே?”

‘‘சபாநாயகர் தனபால், கடந்த நான்காம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் மாலை வீடு திரும்பினார். ‘நீர்ச்சத்துக் குறைவு, உயர் ரத்த அழுத்தம் காரணமாக சபாநாயகர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்’ என்று அப்போலோ மருத்துவமனை முன்னதாக அறிக்கையும் வெளியிட்டது. முதலமைச்சர், துணை சபாநாயகர், எம்.எல்.ஏ-க்கள் என்று பலரும் சபாநாயகரை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.”

‘‘முந்தைய கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டுதானே?”

p44d.jpg

‘‘ஆமாம். அப்போலோவுக்குப் போவதற்கு முந்தைய நாளான ஜூலை 3-ம் தேதி, பேரவையில் பேசிய சபாநாயகர் தனபால், ‘நம்முடைய எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் ‘நீரா பானம்’ வழங்கப்படும். அதனை எம்.எல்.ஏ-க்கள் பருகிப் பார்க்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.  சட்டப்பேரவை உணவகத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு ‘நீரா பானம்’ வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. சபாநாயகர் தனபால், தாமே முன்மாதிரியாக இருந்து, சிறு பாட்டிலில் இருந்த நீரா பானத்தை அருந்தியதாகச் சொல்கிறார்கள்.  இதைத் தொடர்ந்துதான் மறுநாள் காலையில் பேரவைக்கு வருவதற்குப் பதிலாக, மருத்துவமனைக்குப் போனார் சபாநாயகர்.”

‘‘அது என்ன நீரா பானம்?”

‘‘மலராத தென்னம்பாளையிலிருந்து உற்பத்தி செய்யப்படுவது நீரா பானம். ‘இது உடலுக்கு வலுவை அளித்தாலும், ஒரே சமயத்தில் நீரா பானம் அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து விடும்’ என்கிறார்கள். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டால், ‘சபாநாயகருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைங்க. அந்த நீரா பானம் குடிச்சதால இப்படி ஆகியிருக்குமோன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. அதைத்தான் அவரு குடிக்கவே இல்லையே... அட, யாருமே அதைக் குடிக்கலைங்க’ என்றார்.”

‘‘எங்கிருந்து அந்தப் பானம் வந்தது?”

‘‘காதி விற்பனை மையங்கள் மூலமாக நீரா பானம் வந்திருக்கிறது. எந்த காதி விற்பனை மையத்திலும் நீரா பானம் ஸ்டாக் இல்லை என்கிறார்கள். நீரா பானம் சீஸன் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. ‘ஒரு மாதத்துக்கு முன் சீஸன் முடிந்துபோன சரக்கைக் கொண்டுவந்து சட்டசபையில் கொடுத்து விட்டார்களா?’ எனச் சந்தேகம் கிளப்புகிறார்கள். இதே பானத்தை தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அருந்த, அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாம். அவ்வளவுதான். வேறு எந்த அதிர்ச்சியும் இல்லை.”

“சட்டசபையில் எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் இணக்கமான போக்கிலே செல்கிறார்களாமே?”

“மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க-வின் பிடி இறுக்கமாக இருக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.  அ.தி.மு.க-விலோ, உள்கட்சிக் குழப்பத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடரைச் சுமுகமாக எப்படி நடத்துவது என முழித்தனர். ஆனால், தி.மு.க-வின் நெருக்கடி இல்லாமல், உள்கட்சி நெருக்கடியும் இல்லாமல், எடப்பாடி அமைச்சரவை அனைத்து மானியக் கோரிக்கைகளையும் சுமுகமாக நிறைவேற்றி வருகிறது. ஆட்டம்கண்டு வரும் ஆளும்கட்சிக்கு எதிராக அவையில் ஆக்ரோஷம் காட்ட வேண்டிய தி.மு.க, இப்படி இணங்கிப்போவது ஏன் என்ற கேள்வி தி.மு.க-வின் சில முன்னணி யினருக்கே எழுந்துள்ளது. ‘பத்து நாள்களாக நாங்கள் தினமும் வெளிநடப்பு செய்துள்ளோமே’ என்று தி.மு.க-வினர் சமாளித்தாலும், சபைக்கு வெளியே அவர்கள் காட்டும் ஆக்ரோஷம், சபைக்குள் இல்லை என்கிறார்கள்.”

p44b.jpg

“அப்படியா?”

“எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. அதில், தி.மு.க உறுப்பினர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க உறுப்பினர்களைச் சபாநாயகர் தனபால் மன்னித்துவிட்டார். அதன் பின்னணிக்கும், அவைக்குள் இரண்டு கட்சிகளும் காட்டும் நெருக்கத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஒரு பெருந்தன்மையான அறிவிப்பு வந்திருக்குமா?’ என்று அ.தி.மு.க-வினரே கேட்கின்றனர்.

‘‘சரிதான்!’’

‘‘அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக, குட்கா விவகாரத்தில் தி.மு.க கச்சைக் கட்டியது. ஆனால், சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சரின் பதிலுரையை மட்டுமே தி.மு.க-வினர் புறக்கணித்தனர். விவாதத்தின்போது துரைமுருகனுக்குப் பதில் அளித்த விஜயபாஸ்கர், ‘எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கூப்பிட்டால் வருவேன்’ என்று சிலேடையில் பேசினார். இதை விவகாரமாக எடுத்துக்கொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ‘தி.மு.க-வினர் கூப்பிட்டால் போய்விடுவீர்களா?’ என்று கொக்கிபோட்டுக் கேள்வி எழுப்பினார். இரு தரப்பு உறுப்பினர்களும் சிரித்துவிட்டனர். உடனே விஜயபாஸ்கர் எழுந்து, ‘மருந்துக்கடைகளுக்கு ஆய்வு செய்யத்தான் அவரோடு போவேன்’ என்று விளக்கம் அளித்தார். குட்கா விவகாரம், ரெய்டு விவகாரம் என அமைச்சரவையில் அதிக சிக்கலை எதிர்கொண்டு வரும் விஜயபாஸ்கரின் மானியக் கோரிக்கையையே காமெடியாக தி.மு.க கொண்டுசென்றது. ‘இந்த அமைதிக்குப் பின்னணியில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே இருக்கிறார்’  என்றும் சொல்லப்படுகிறது.”

p44a.jpg“யார் அவர்?”

“ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கிறார் அவர். அ.தி.மு.க-விலிருந்து வந்த அதிரடி பார்ட்டி. அவர்தான் இப்போது தி.மு.க-வின் அறிவிக்கப்படாத கொறடா போல செயல்படுகிறார். அவரிடம் அ.தி.மு.க அமைச்சர்கள் நெருக்கம் காட்டி வருகிறார்கள். ‘சட்டசபையில் எங்கள் துறையின் மானியக் கோரிக்கையின்போது, பெரிய அளவில் எந்தப் பிரச்னையையும் கிளப்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அவரிடம் பல அமைச்சர்கள் ரகசிய ஒப்பந்தம் போட்டு இருப்பதாக தி.மு.க தரப்பில் கிசுகிசுக்கிறார்கள். பல அமைச்சர்களுக்கு நெருக்கமாக தி.மு.க உறுப்பினர்கள் மாறிவருவதாக அ.தி.மு.க உறுப்பினர்களே புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ‘தி.மு.க உறுப்பினர்கள் எந்தப் பரிந்துரை கொடுத்தாலும், அவற்றை அமைச்சர்கள் உடனே செய்துகொடுத்துவிடுகிறார்கள். ஆனால், ஆளும்கட்சியினர் கொடுக்கும் சிபாரிசுகளை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிடுகிறார்கள்’ என்கிறது  அ.தி.மு.க தரப்பு.’’

‘‘அடடே!’’

‘‘தி.மு.க சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிவருகிறார்கள் அமைச்சர்கள். தனது தொகுதியில் சட்டக் கல்லூரி விடுதியைக் கட்ட துரைமுருகன் வைத்த கோரிக்கையை ஏற்று, நான்கு கோடி ரூபாய் ஒதுக்கி சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து துரைமுருகன் அமைச்சரைப் பாராட்டு மழையில் நனைய வைத்தார். அதேபோல், தி.மு.க உறுப்பினர்களின் தொகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கான டெண்டர்களை, அவர்கள் கை காட்டும் நபர்களுக்கே ஒதுக்கிக்கொடுக்கிறார்கள் என்று அ.தி.மு.க-வினர் புலம்புகிறார்கள்.”

“கறுப்புக் கண்ணாடியோடு சட்டசபைக்கு வந்துள்ளாரே ஸ்டாலின்?”

“சில நாள்களாகவே அவருக்குக் கண்ணில் சிறுபிரச்னை இருந்துள்ளது. எதையும் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். கடந்த திங்கள் கிழமை, ‘கண் புரை’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு நாள்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, காவல்துறை மானியக் கோரிக்கையன்று கறுப்புக் கண்ணாடியோடு சட்டமன்றம் வந்துவிட்டார். சபாநாயகர் தனபாலும், உடல்நலக்குறைவால் இரண்டு நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு அன்றைய தினம் சட்டசபைக்கு வந்திருந்தார். அவையில் ஸ்டாலின் பேசியபோதும், சபாநாயகர் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். சபாநாயகரும் ஸ்டாலின் உடல்நலன் குறித்து விசாரித்து, விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நட்பு உணர்வைப் பார்த்து, அ.தி.மு.க உறுப்பினர்கள்தான் வயிற்றெரிச்சலோடு இருக்கிறார்கள்.”

“தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எப்படி இருக்கிறார்கள்?”

“சட்டசபையில் பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குப் பேசுவதற்கு வாய்ப்பு குறைவாகத்தான் தரப்படுகிறது. ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படுகின்றன. அவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கும், ‘உடனடியாகப் பரீசிலனை செய்யப்படும்’ என்று அமைச்சர்கள் வாக்குறுதி தருகிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை, அவை நடைபெறும்போதே அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் செந்தில்பாலாஜியின் இருக்கைக்கே சென்று அமைச்சர் கருப்பணன் அரை மணி நேரம் பேசினார். அதேபோல், எடப்பாடி அரசுக்கு எதிராகச் செயல்படும் தங்க தமிழ்செல்வனை, அமைச்சர்கள் பலரும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தங்கள் அணியைச் சேராத எம்.எல்.ஏ-க்கள் இருக்கையில் இருந்தால், அவர்களிடம் வலியச்சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் அமைச்சர்கள் குறியாக உள்ளார்கள்.”

p44.jpg“தினகரன் என்ன மூடில் இருக்கிறார்?”

“ஷீரடி போன தினகரன், அங்கிருந்து பெங்களூரு சென்றார். சசிகலாவைக் கடந்த 5-ம் தேதி சந்தித்தார். வழக்கமாக, சித்தியைத் தனியாகச் சந்திக்கும் அவர், இந்த முறை அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் கட்சி நிர்வாகிகளையும் அழைத்துச் சென்றுள்ளார். ‘கட்சியில் தினகரனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என வலியுறுத்தவே அவர்களைக் கூட்டிச் சென்றதாகத் தகவல். மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக சசிகலாவிடம் தினகரன் சொல்ல... ‘கொஞ்சம் அமைதியாக இரு’ என்று சசிகலா சொல்லியுள்ளார். ‘குடும்பத்தைப் பகைத்துக்கொண்டு கட்சி நடத்த வேண்டாம்’ என்று சசிகலா அறிவுரை சொன்னதாகத் தகவல். அதே நேரத்தில், தினகரனுக்கு எதிரான வேலைகளைத் தீவிரமாக்கியுள்ள எடப்பாடி அணி, தினகரன் ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இவர்களுக்கு, சசிகலா குடும்பத்தினர் ஆதரவும் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், பறப்பதற்கு முன் டெயில் பீஸாக ஒரு தகவல் சொன்னார்...

“ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு முன்புவரை, ‘கட்சி நிதி’ என்கிற பெயரில் அமைச்சர்கள் குறிப்பிட்ட தொகை தருவது வழக்கமாக இருந்தது. ஜெயலலிதா இறந்ததும் இது நின்றுபோனது. சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும், ‘இதைக் கட்சியின் கீழ்மட்ட பிரமுகர்களுக்குச் செலவு செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார். ஆனால், அப்படி யாருமே செலவு செய்வதில்லையாம். அந்தந்த அமைச்சர்களின் பாக்கெட்களுக்கே போகிறது என்பதை லேட்டாகப் புரிந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள், இதுதொடர்பாக எடப்பாடியிடம் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டனர். ‘நாங்கள் கேட்கும் எதுவுமே நடப்பதில்லை. கட்சி, ஆட்சி... இரண்டையும் ஒருசேர நடத்த நீங்கள் ஒன்றும் ஜெயலலிதா அல்ல. ஆட்டம் போடும் அமைச்சர்களுடன் திரைமறைவில் கைகோத்து நாடகம் போடுகிறீர்களா?’ என்று கோபமாகக் கேட்டார்களாம். எடப்பாடி இதில் திகைத்துப் போயிருக்கிறாராம்!”

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.