Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி!

Featured Replies

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி!

 

 

‘‘உண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தைரியசாலிதான். அவர் தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொள்கிறார். அவரைப் போலவே நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்’’ என்று எடப்பாடி புகழ் பாடி ஆரம்பித்தார் கழுகார்.

‘‘என்ன ஆச்சு உமக்கு?” என்றோம்.

p2.jpg‘‘நான் சொல்வதைக் கேட்டால் நீரே அதை வழிமொழிவீர். எடப்பாடியிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் பற்றித்தான் கோட்டை வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. ‘அமைதியாக வலம்வரும் இவர் ஆளையே விழுங்கிவிடுவார்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். சசிகலா குடும்பம் பற்றிய எந்தப் பயமும் இல்லாமல் தூள் கிளப்புகிறார் எடப்பாடி என்பதுதான் இதில் ஹைலைட்.”

‘‘வரிசையாகச் சொல்லும்...”

‘‘முதல்வராகப் பதவி ஏற்று எடப்பாடி கோட்டைக்குச் சென்றதும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமர்ந்திருந்த அதே அறையில், ஜெயலலிதாவின் இருக்கையில் போய் ஜம்மென்று அமர்ந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் செய்யத் துணியாத காரியத்தை முதல் தடவையே அடித்து உடைத்து, ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலியில் அமர்ந்து பேட்டியும் கொடுத்தார் எடப்பாடி. ஐந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, ‘இனி அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன்’ என்று சொல்லிவிட்டுப் போனவர்தான். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடியைச் சந்திக்கச் சென்ற டெல்லி பத்திரிகையாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். இதில் இருந்தே ஆரம்பிக்கிறது ஜெயலலிதாவுக்கும் எடப்பாடிக்குமான ஒற்றுமை.’’

‘‘ம்!”

‘‘ஜெயலலிதா பங்கேற்கும் அரசு விழாக்களுக்கும் கட்சி விழாக்களுக்கும் பச்சை கலரில் இருக்கும் வகையில் மேடை அலங்காரத்தைப் பார்த்துக்கொள்வார்கள். அதுபோலவே எடப்பாடி நடத்தும் விழாக்களிலும் ‘பச்சை நிறமே... பச்சை நிறமே...’ முன்னே நிற்கிறது. மேடை அலங்காரம், பேனர், போடியம், தரை விரிப்புகள், விழா பேட்ஜ்கள் என்று அனைத்துமே பச்சை நிறத்தில்தான் ஜொலிக்கின்றன. ஜெயலலிதா கலந்துகொள்ளும் விழாக்களில், மேடையின் முன்பக்கம் 50 அடி தூரத்துக்கு இடத்தைக் காலியாக விட்டுவிட்டுத்தான் வி.ஐ.பி-க்களுக்கே இருக்கை போடுவார்கள். பாதுகாப்பு கெடுபிடியும் இருக்கும். எடப்பாடிக்கும் அப்படியே பின்பற்றுகிறார்கள். ஜெயலலிதா உடல்நிலையைக் காரணம் காட்டி, வெளியூர் பயணங்களைத் தவிர்த்து வந்தார். புதிய கட்டடங்கள், பாலங்கள் என்று பல்வேறு திட்டங்களைக் கோட்டையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் முறையில் தொடங்கிவைத்தார். அதேபாணியை எடப்பாடியும் பின்பற்றுகிறார்.’’

‘‘ஓஹோ!”

p2a.jpg

‘‘ஜெயலலிதா கோட்டைக்கு வரும்போதும் கோட்டையில் இருந்து போயஸ் கார்டனுக்குப் போகும்போதும் வழியில் நிற்பவர்களிடம் மனுக்களை வாங்குவார். போயஸ் கார்டனுக்கு வரும் கோரிக்கை மனுக்களைத் தனது உதவியாளர் பூங்குன்றன் மூலம் வாங்கி, உரிய நடவடிக்கைகளை எடுப்பார். அதைப்போலவே, தனது வீட்டுக்குவரும் பொதுமக்களை எடப்பாடி சந்தித்து மனுக்களை வாங்குகிறார். அவர் வெளியூர் சென்றிருந்தால், உதவியாளர் வாங்கி உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைக்குச் செல்லும் பாதை நெடுகிலும் வெடிகுண்டு நிபுணர்கள் படை ஆய்வுசெய்து கிரீன் சிக்னல் கொடுத்தபிறகே தனது பயணத்தைத் தினமும் தொடங்குகிறார் எடப்பாடி. அதுபோல, அவர் செல்லும் ரூட்களில் எல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஜெயலலிதா போகும் வழிகளில் அவர் கண்ணில் பட வேண்டும் என்று மாஜிக்கள் ஆங்காங்கே வழிநெடுக நிற்பார்கள். அதுபோல, இப்போது எடப்பாடி பழனிசாமி பார்வை தங்கள்மீது விழ வேண்டும் என்று மாஜிக்கள் ரோட்டு ஓரங்களில் நின்று கொண்டு, ‘வணக்கம்’ வைக்கும் கலாசாரம் உருவாகி இருக்கிறது.”

‘‘அந்த அளவுக்கு வந்துவிட்டதா?”

‘‘ஜெயலலிதா கோட்டைக்கு வந்தாலும், வராவிட்டாலும், தினசரி வி.ஐ.பி-க்களுடன் சந்திப்பு நடந்ததுபோலப் புகைப்படங்கள் வெளியிடப்படும். அதுபோலவே இப்போதும் நடக்கிறது.”

‘‘நீர் சொல்வதை நிச்சயம் வழிமொழிகிறோம். பூங்கொத்து, கெத்தும் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறதே?’’

‘‘ஜெயலலிதாவுக்குப் பூங்கொத்து ரொம்பப் பிடிக்கும். அவருக்குக் கொடுக்கக் கொண்டுவரும் பூங்கொத்து என்ன கலரில் இருக்க வேண்டும்; எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கிளாஸ் எடுப்பார்கள். எந்தக் கடையில் ஜெயலலிதாவுக்கான பூங்கொத்து வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடுவார்கள். அதுபோலவே, இப்போதும் நடக்கிறது. மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கடந்த 10-ம் தேதி கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பூங்கொத்து கொடுத்தபோது, ஜெயலலிதா ஸ்டைலில் கெத்தாக அதை வாங்கினார் எடப்பாடி.”

‘‘மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் திடீரென வந்து எடப்பாடியைப் பார்த்தாரே! விசிட்டில் என்ன விசேஷம்?’’

‘‘ஜனாதிபதி தேர்தலுக்காகத்தான் இந்தச் சந்திப்பு என்கிறார்கள். அ.தி.மு.க-வின் ஒட்டுமொத்த ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் பி.ஜே.பி வேட்பாளருக்கு வந்தாக வேண்டும் என்று சொல்லவே  வந்ததாகச் சொல்கிறார்கள். ‘கட்சி இப்போது மூன்று கோஷ்டியாக இருக்கிறது. உங்களது பிரச்னையில் வோட்டுகள் மாறிவிடக் கூடாது’ என்று டெல்லி பி.ஜே.பி தலைமை சொல்லி அனுப்பியதாம்.  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நாகப்பட்டினம் எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி காங்கிரஸுக்குத்தான் தனது வாக்கு என்று அறிவித்துவிட்டார். இவரின் தோழர்களான கருணாஸ், தனியரசு இருவரும் என்ன செய்வார்கள் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. இவர்கள் மூவரும் ஒரே மாதிரி முடிவுகள் எடுப்பார்கள் என்று டெல்லிக்குச் சொல்லப்பட்டதாம். தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் ஓட்டுகள் அப்படியே கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது. ‘இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று அவர் சொன்னதாகத் தெரிகிறது. முதல்வர் அறையில் இருவரும் தனியாக முதலில் பேசினார்களாம். ‘அது இறுக்கமான பேச்சாக இருந்தது’ என்கிறார்கள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.’’ 

‘‘பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விசேஷ வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதனால் பணம் கைமாறியதாகவும் பிரச்னை எழுந்துள்ளதே?”

p2b.jpg

‘‘கடந்த புதன்கிழமை அன்று திடீரென பெங்களூரு புறப்பட்டுப்போனார் தினகரன். ஆனால், அவர் சசிகலாவைச் சந்திக்கவில்லை. சொந்த வேலையாகப் போனதாகச் சொல்கிறார்கள். அதற்கு அடுத்த நாள்தான், ‘சசிகலாவுக்குச் சிறையில் வசதிகள் செய்துதர கர்நாடகச் சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவ் இரண்டு கோடி ரூபாய் வாங்கினார்’ என்று சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா கடிதம் எழுதிய விவகாரம் மீடியாக்களில் பரவியது.’’

‘‘ம்!’

“பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறித் தனிச் சமையல் அறை கொடுக்கப்பட்டுள்ளது பற்றியும், அவர் விரும்பும் உணவுகளைச் சமைத்துக் கொடுப்பதற்காகச் சிறைவாசிகள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளது பற்றியும் குற்றம் சாட்டி உள்ளார் ரூபா. ‘நீங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் லஞ்சம் பெறவில்லை என்றால், உங்கள்மீது சுமத்தப்பட்ட களங்கத்தைப் போக்க முன்வர வேண்டும். நான் ஆய்வுக்குச் சென்றுவந்த பிறகும், இந்தச் சலுகைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன’ என்று சிறைத் துறை டி.ஜி.பி. மீது குற்றம் சாட்டி உள்ளார் ரூபா. இந்தக் கடிதத்தின் நகலை ஊழல் தடுப்புப் பிரிவுக்கும், கர்நாடகக் காவல்துறை டி.ஜி.பி-க்கும் அனுப்பியிருக்கிறார் ரூபா. ஆனால், ‘சிறைத்துறை விதிகளுக்கு எதிராக எந்தச் சலுகையையும் சசிகலா பெறவில்லை’ என்று அ.தி.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி சொல்கிறார்.

டி.ஜி.பி சத்யநாராயண ராவ், ‘என்மீது தவறு இருந்தால் விசாரணை செய்யட்டும். அதற்குத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், ரூபா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று சிறைத்துறை வட்டாரங்கள் சொல்கின்றன. சசிகலாவின் சமையல் அறை குறித்த தகவலை ரூபா வெளியிட்டதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. பரப்பன அக்ரஹாரா சிறையில் 32 சிறை வாசிகளுக்கு ஹெச்.ஐ.வி இருப்பதாக இரு வாரங்களுக்கு முன்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ரூபா பதிவிட்டிருந்தார். அதற்காக டி.ஜி.பி ஒரு மெமோவை அனுப்பினார். அந்தக் கடுப்பில்தான், இந்தத் தகவலை ரூபா கசியவிட்டார் என்றார்கள்.”

‘‘கோட்டை வட்டாரத்தில் ஏதாவது விசேஷம் உண்டா?’’

‘‘முதல்வர் அலுவலகத்தில் சிவ்தாஸ் மீனா, இன்னசென்ட் திவ்யா ஆகிய இருவரும் மாற்றலாகிப் போய்விட்டார்கள். புதியவர்கள் இருவர் வரப்போகிறார்கள். அதேநேரத்தில், தலைமைச் செயலாளரும் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அவருக்கும் உள்துறை செயலாளருக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடாம். எடப்பாடிக்கு மிகவும் பிடித்த ராஜீவ் ரஞ்சன் அந்த நாற்காலிக்கு வரக்கூடும் என்கிறார்கள். இப்போது இவர், முதல்வர்வசம் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் செயலாளராக இருக்கிறார். ஆனால், சேகர் ரெட்டி விவகாரத்தில் இவர் பெயர் அடிபடுவதால் கொஞ்சம் யோசிக்கிறாராம் எடப்பாடி. பத்திரப்பதிவுத் துறையில் வழிகாட்டு மதிப்பைக் குறைத்து நடவடிக்கை எடுத்த விஷயத்தில் முதல்வரின் குட்புக்ஸில் இருக்கிறார் ஹன்ஸ் ராஜ் வர்மா. எனவே, அவரும் பரிசீலனையில் இருக்கிறார்’’ என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு


இரட்டை இலை... தினகரன் தப்பிப்பாரா?

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தினகரன் மீது புகார்.  பரப்பன அக்ரஹாரா சிறையில் சில வசதிகளைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாகச் சசிகலா மீது புகார். புதிய சிக்கலில் சசிகலா சிக்கிக்கொள்ள... இரட்டை இலை விவகாரத்திலிருந்து தினகரன் வெளியே வரப்போகிறார் எனச் செய்திகள் கிளம்பியிருக்கின்றன. எப்.ஐ.ஆரில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட தினகரன், திகார் சிறையில் கம்பி எல்லாம் எண்ணி ஜாமீனில் வெளியே வந்தார்.  இப்போது அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இல்லை எனச் செய்திகள் கிளம்பின. ‘‘முதல் குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இல்லாமல் போனாலும், இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படலாம்’’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது டெல்லி போலீஸ்.


‘‘அமெரிக்க அதிபரைவிட காங்கிரஸ் தலைவர் பதவி கஷ்டம்!”

ம்பது ஆண்டு பொது வாழ்வு பொன் விழா கொண்டாடியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். ஆனால், அவருக்கு 68 வயது தான். இதை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் கிண்டலாகத் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். ‘‘ தனக்குக் குடைச்சல் கொடுத்துவரும் இளங்கோவன் உள்ளிட்ட சிலரை ஒதுக்கி வைக்க இந்த விழாவைப் பயன்படுத்திக்கொள்ள திருநாவுக்கரசர் திட்டமிட்டார்” என்று சொல்கிறார்கள்.

p2c.jpg

திருநாவுக்கரசர் விரும்பியது போலவே, காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், யசோதா, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான சின்னா ரெட்டி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், காதர் மொய்தீன் எனத் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வரிசை கட்டி அமர்ந்திருந்தனர். விஜயகாந்த்துக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் திருநாவுக்கரசர். தனக்கு யாரெல்லாம் வாழ்த்து சொன்னார்கள் என்று மேடையிலே அவர்கள் பெயரையும் சொன்னவர், பி.ஜே.பி தலைவர் தமிழிசை வாழ்த்து தெரிவித்ததையும் மறக்காமல் சொல்லிவிட்டார். அவர் வெளிப்படையாகச் சொல்லாதது, ‘இளங்கோவனுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை’ என்பதைத்தான். ப. சிதம்பரத்தை எப்படியும் விழாவுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று திருநாவுக்கரசர் விரும்பினாராம். ஆனால், அழைப்பிதழ் கொடுக்கும்போதே, ‘அன்று வெளியூர் பயணம் போகிறேன்’ என்று சிதம்பரம் சொல்லிவிட்டாராம்.

திருநாவுக்கரசருக்கான பாராட்டு விழாவாக இருந்தாலும் தி.மு.க கூட்டணி கும்பமேளாவாகவே இது இருந்தது. விழாவில் பேசிய பலரும், ‘‘காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இனிவரும் தேர்தலிலும் தொடர வேண்டும்’’ என்றார்கள். புதுவை முதல்வர் நாராயணசாமி, ‘‘அமெரிக்க அதிபர் பதவியைவிட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கடினமானது’’ என்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.