Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சசிகலாவின் சிறை வீடியோ வெளியானது எப்படி?’ - வில்லங்கத்தை விவரிக்கும் கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி #VikatanExclusive

Featured Replies

‘சசிகலாவின் சிறை வீடியோ வெளியானது எப்படி?’ - வில்லங்கத்தை விவரிக்கும் கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி #VikatanExclusive

 
 

 சசிகலா, டி.ஐ.ஜி ரூபா

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபாவை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் வீடியோக்கள் வெளியானததற்கு கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கிடையே நடக்கும் ஈகோவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

சசிகலாவும் சிறை வீடியோவும்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிமுறை மீறி சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா, பகிரங்கக் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இது, பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சிறைத்துறையிலிருந்து போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் ரூபா. ரூபாவின் அதிரடியால் சசிகலாவும், சிறைத்துறையினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ரூபாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று மறுத்தவர்களுக்கு அதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ரூபாவின் இடமாற்றத்துக்கு கர்நாடக பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
இந்த வீடியோ உண்மையானதா, அது எப்படி வெளியானது, வீடியோவை சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிடம் கொடுத்தது யார்? என்று கர்நாடக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

யார் இந்த ரூபா?

டி.ஐ.ஜி ரூபா

ரூபா விவகாரம் குறித்து அவருடன் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரிடம் பேசினோம், அவர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். “பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீட்டர் தூரத்தில் உள்ள தாவன்கெரே என்ற ஊர்தான் ரூபாவின் பூர்வீகம். கடந்த 2000ம் ஆண்டில் போலீஸ் வேலைக்கு வந்த ரூபாவுக்கு கர்நாடக மாநிலத்திலேயே பணி வழங்கப்பட்டது. பயிற்சியின்போது துப்பாக்கிச் சுடுவதில் தனித்துவமாக விளங்கினார். 2016ல் குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றார். கர்நாடக மாநிலம், பீதர் மாவட்ட எஸ்.பியாக பணியைத் தொடங்கிய அவர், கனிமவள கொள்ளையைக் கட்டுப்படுத்தினார். உடனடியாக அவர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பிறகும் ரூபா, தன்னுடைய அதிரடியை நிறுத்தவில்லை. தமிழகத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரியைப் போல ரூபாவுக்கும் கர்நாடக மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்துவருகிறது. ரூபாவின் பெயரைக் கேட்டாலே இங்கு பலருக்கு கலக்கம் ஏற்படும். அந்தளவுக்குக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தவர் ரூபா. கட்சிப்பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்தார். இதனால் இடமாற்றம் என்று பந்தாடப்பட்டார். இருப்பினும் ரூபா, தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. 

சிறையில் அதிரடி

சிறைத்துறைக்கு ரூபா, மாற்றப்பட்டதும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலும் அதிரடி நடக்கும் என்று எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்தப்படியே சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட சலுகைகளை அறிக்கையாக உயரதிகாரிகளிடம் சமர்பித்தார். இது, சசிகலா தரப்புக்கும் சசிகலாவின் ஆதரவு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ரூபா, போக்குவரத்துப்பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அங்கேயேயும் ரூபாவின் தனித்துவமாக செயல்படுவார். சசிகலாவின் சிறை வீடியோ வெளியானததற்கு கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ பிரச்னையே காரணம்"என்றார்.

சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், வீடியோ ஆதாரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது, எல்லாம் பாகுபலியை மிஞ்சிய கிராபிக்ஸ் என்று சசிகலாவின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ரகசிய விசாரணை

தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகள் குறித்தும் ரூபா, முகநூலில் பதிவு செய்வது வழக்கம். அப்போது காவல் பணி குறித்து வெளிப்படையாகப் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் சமூகத்தைச் சார்ந்தே இருப்பது அவரது பதிவின் மூலம் தெரிகிறது. அவரது முகநூலில் 25,482 பேர் பாலோவர்களாக உள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த விதிமுறைகளை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தினார். இதனால், அவருக்கும் உயரதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகளை எளிதாக சமாளித்தார். தன் தரப்பு நியாயத்தை சொல்லியதோடு எந்த விசாரணைக்கும் தயார் என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளார் ரூபா. இந்த சமயத்தில் சசிகலா குறித்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

இந்த வீடியோக்கள் எப்படி வெளியானது என்று கர்நாடக உளவுத்துறை, சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வீடியோக்கள் சிறையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவா இல்லை ரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருவதாக கர்நாடக சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. சசிகலா விவகாரம், கர்நாடக காங்கிரஸ் கட்சியினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றலாமா என்ற ஆலோசனையும் நடந்துவருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

பா.ஜ.க.வினர் எரிந்த ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுந்திருக்கின்றன. அதாவது, சசிகலாவுக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் சிறை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக சிறைக்குள் இருக்கும் வி.வி.ஐ.பி.க்களுக்கு இத்தகைய சலுகைகள் என்பது சர்வசாதாரணம். ஆனால், அதை ரூபா வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் பின்னணியில் ஓர் அரசியல் சதுரங்க வேட்டை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் மாற்றங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் சசிகலா சிறை விவகாரம் சூடுபிடித்துள்ளது. சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகம் என்று அந்த அணியினர் சொல்கின்றனர். 

ஏற்கெனவே இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் டெல்லி போலீஸார் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இடம் பெறவில்லை. இதை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். ஆனால், டெல்லி போலீஸ், அடுத்த குற்றப்பத்திரிகையில் நிச்சயம் டி.டி.வி.தினகரன் பெயர் இடம் பெறும் என்று சொல்கின்றனர். டி.டி.வி.தினகரன் மீதான பிடி விலகுவதாகத் தெரிந்தாலும் அவரும் பா.ஜ.க.வின் கண்காணிப்பிலேயே இருக்கிறார் என்று பா.ஜ.க. தரப்பில் சொல்லத் தொடங்கியுள்ளனர். 

சசிகலாவுக்கும் ரூபாவுக்கும் என்ன பிரச்னை? 

சிறைத்துறை டி.ஐ.ஜியாக பொறுப்பேற்றதும் அதிரடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் நுழைந்த ரூபா, அங்குள்ள விதிமுறை மீறல்களை வெளிப்படுத்தியுள்ளார். இது, சசிகலா, அனுபவித்த சலுகைகள் பறிக்கக் காரணமாகிவிட்டது. அதோடு சலுகைகள் பெற சசிகலா தரப்பு இரண்டு கோடி ரூபாய் வரை உயரதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்தாக ரூபா சொன்ன குற்றச்சாட்டு ஐ.பி.எஸ். வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆதாரமில்லாமல் நிச்சயம் ரூபா சொல்ல வாய்ப்பில்லை. இதனால், அவரிடம் விசாரணை நடத்திய உயரதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் குறித்து கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

சசிகலாவின் சிறை வீடியோ

அதற்கு சசிகலா தரப்பு, தனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக ரூபா, உயரதிகாரிகளிடம் சொல்ல.. அதைக்கேட்டு ஆடிப்போய்விட்டனர் கர்நாடக ஐ.பி.எஸ் உயரதிகாரிகள். உடனடியாக இந்தத் தகவல் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் தரப்பிலிருந்து ரூபாவை அமைதியாக இருக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றப்படி சசிகலாவுக்கும் தனக்கும் எந்தவித தனிப்பட்ட பிரச்னை எதுவும் இல்லை என்று ரூபா விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வீடியோ வெளியானது எப்படி?

சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை. அவர் வெளியில் செல்வதுபோல வெளியான வீடியோ குறித்து விசாரித்துவருகிறோம். வீடியோவில் உள்ள இடம், சிறையில் உள்ள 'விசிட்டர்ஸ்' பகுதி. அந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கம் போல உள்ளனர். சிறைத்துறை விதிமுறைகளுக்குட்பட்டு அவர்கள் மூன்று பேரும் நடத்தப்படுகின்றனர். தனி சமையலறை, ஷாப்பிங் சென்றது போன்ற தகவல்கள் எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. சிறைக்குள் இருக்கும் சசிகலா, இளவரசியால் எப்படி ஷாப்பிங் செல்ல முடியும். அதற்கு வாய்பே இல்லை. இருப்பினும் எங்களது விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்" என்றார்.

 

நம்மிடம் பேசிய சிறைத்துறை உயரதிகாரி ஒருவரிடம் சசிகலா, வீடியோ எப்படி வெளியானது என்ற கேள்வியைக் கேட்டதற்கு, "வீடியோ வெளியாகுவதற்கு வாய்ப்புகள் குறைவு. வீடியோவில் சசிகலாவுடன் வரும் போலீஸாரிடம் விசாரணை நடந்துவருகிறது. ஆனால், வீடியோவில் சசிகலா, இளவரசி மற்றும் ஒரு யூனிபார்மில் ஒரு பெண் போலீஸ், மற்றும் இன்னொருவர் ஆகியோரின் முகம் தெளிவாகத் தெரிகிறது. அதுபோல இன்னும் சில வீடியோக்களும் உள்ளன. இவைகள் எல்லாம் உண்மையா என்று பரிசோதிக்கப்பட வேண்டும். உண்மையென்றால் சசிகலா, இளவரசி மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவருக்கு உதவிய சிறைக் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

http://www.vikatan.com/news/coverstory/96062-karnataka-ips-officers-statement-about-sasikala-prison-video.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.