Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலின் தசாவதாரம் - ஒரு அட்வான்ஸ் முன்னோட்டம் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Featured Replies

ஏப்ரலில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் நிறைவடைகிறது. பிறகு போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள். ஜுன் - ஜுலையில் திரைக்கு வந்துவிடும் கமலின் 'தசாவதாரம்!'

கமலுக்கும் சரி தமிழ் திரையுலகுக்கும் சரி இது மற்றுமொரு திரைப்படம் அல்ல, ஒரு சாதனை! உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் ஒரே படத்தில் பத்து வேடங்களை இதுவரை ஏற்று நடித்ததில்லை. 'தசாவதாரம்' அதனை உடைக்கிறது. இதில் கமலுக்கு பத்து வேடங்கள்.

படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை.

ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே 'தசாவதாரம்.' இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்!

படத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார். சைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.

முன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,

'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது சைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது'

என கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.

இன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.

கமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.

படத்தின் முக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள்.

மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.

படத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.

கமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.

படத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். "எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு" என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

"எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்" என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. "கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்."

நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை. சரியாகச் சொன்னால் மூன்று கெட்டப்புகளின் சிறு துளிகளை மட்டும். இதுவரை எட்டு கெட்டப்புகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனி இரண்டு மட்டுமே பாக்கி.

கெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.

கமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.

இன்னும் சில மாதங்களில் தமிழ் திரையில் ஒரு சாதனையான படைப்பை பார்க்கயிருக்கிறோம் என்பதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.