Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை

Featured Replies

இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை

மெரினா கடற்கரை அருகே இருந்த நடிகர் சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றம்

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை புதன்கிழமையன்று இரவு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் இதனை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில், இயந்திரங்களின் மூலம் சில மணி நேரத்தில் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது.

அங்கிருந்து ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலை, சென்னை சத்யா ஸ்டுடியோவிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அந்த இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மெரினா கடற்கரை அருகே இருந்த நடிகர் சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றம்

இரவோடு இரவாக சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தமிழகத்திற்கு தலை குனிவு என சிவாஜி ரசிகர்களின் அமைப்பான சிவாஜி சமூக நலப் பேரவை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கே. சந்திரசேகரன், "தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் 13,000க்கும் மேற்பட்ட சிலைகள் இருக்கின்றன. அவையும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாகத்தான் இருக்கின்றன. அவற்றை அகற்ற அரசு முன்வருமா?" என கேள்வியெழுப்பினார்.

 

நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் சிலை அகற்றப்படுவதாக தமிழக அரசு கூறுகிறது; நீதிமன்றத்தின் எல்லா உத்தரவுகளையும் இந்த அரசு அப்படியே பின்பற்றுகிறதா என்ற கேள்வியையும் சந்திரசேகரன் எழுப்பினார்.

எல்லாத் தலைவர்களுக்கும் மணி மண்டபம் தனியாகவும் சிலைகள் தனியாகவும் இருப்பதுபோல, சிவாஜி கணேசனுக்கும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம். கடற்கரையில் காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையில் இதனை அமைத்திருக்கலாம் என்கிறார் அவர்.

மெரினா கடற்கரை அருகே இருந்த நடிகர் சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றம்

சிவாஜி கடந்த 2001ஆம் ஆண்டில் மரணமடைந்த நிலையில், அவருக்கு சென்னையில் மணி மண்டபமும் சிலையும் அமைக்க வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரப்பட்டது. இடையடுத்து சென்னை சத்யா ஸ்டுடியோவுக்கு அருகில் மணி மண்டபம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் பணிகள் ஏதும் நடக்கவில்லை.

இந்நிலையில், 2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, ஆளுனர் உரையிலேயே சிவாஜிக்கு மணி மண்டபமும், சிலையும் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே, அதாவது ஜூலை 21ஆம் தேதி கடற்கரைச் சாலையில் இந்தச் சிலை திறந்துவைக்கப்பட்டது.

 

அப்போதே, இந்தச் சிலை கடற்கரையில் உள்ள காந்தி சிலையை மறைப்பதாக புகார்கள் எழுந்தன. அதற்குப் பிறகு, இந்தச் சிலை போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், சிலையை அகற்ற வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த போக்குவரத்துக் காவல்துறை, அந்தச் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறியது.

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் சிலையை அகற்றத் தயாராக இருப்பதாக தமிழக அரசும் தெரிவித்தது. இதனால், அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மெரினா கடற்கரை அருகே இருந்த நடிகர் சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றம்

இந்நிலையில், இந்தச் சிலையை அங்கிருந்து அகற்றினால், காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையில் அமைக்க வேண்டுமென சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், சிலையை அகற்றத் தடையில்லை என்று கடந்த ஜூலை 17ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், இந்தச் சிலை புதன்கிழமையன்று இரவில் அகற்றப்பட்டிருக்கிறது.

 

http://www.bbc.com/tamil/india-40810315

  • தொடங்கியவர்

”சிவாஜி சிலையை அகற்றிவிட்டீர்கள்... இனி சிக்கல்தான்!" - கொந்தளிக்கும் சிவாஜி ரசிகர்கள்

சிவாஜி சிலை

'சிவாஜியைப்போன்று நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என அண்ணாவால் பாராட்டப்பெற்றவர் சிவாஜி கணேசன். “நடிப்புக்கு ஓர் பல்கலைக்கழகம்” என பாராட்டப்பட்டவர். தமிழ்த்திரைப்படத்துறைக்கும் ஓர் அடையாளமாக இன்றளவும் கருதப்படுபவர். ஆனால் தம் நடிப்பால் மக்களின் கவலையை மறக்கவைத்த அந்தக் கலைஞனின் சிலை விவகாரத்தில் அரசு காட்டிய மெத்தனமும், அதனால் சென்னையில் அவருக்கென இருந்த ஒரு சிலையும் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டதும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனை தமிழ்த்திரையுலகமும் தமிழக அரசும் சிலை விவகாரத்தில் அவமதித்துவிட்டதாக குமுறுகின்றனர் அவர்கள்.  இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவரான சந்திரசேகரன், ''தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர் சிவாஜி கணேசன். தமிழகத்தில் சிவாஜிக்கென சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, இந்த ஒரு சிலை மட்டுமே இருந்தது. மற்ற தலைவர்களுக்கு திரும்புகிற திசையெல்லாம் சென்னையில் சிலைகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு சிலைதான் அரசின் கண்களை உறுத்தியிருக்கிறது என்பது வேதனை தருகிறது.

கே. சந்திரசேகரன்இதுதொடர்பாக நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு நியாயமானதொரு வாதத்தை வைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அடையாறில் சிவாஜிக்கு கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாக ஒப்புக்கொண்டு அதை நிறைவேற்றியிருக்கிறது இன்று. உண்மையில் கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துக்களும் அங்கு ஏற்பட்டதில்லை. எங்களுக்கு சிலையை அகற்றுவதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் அதை சிவாஜிக்கு மரியாதை செலுத்தும்விதமாக அங்கேயே வேறிடத்தில் வைத்திருக்கலாமே என்றுதான் சொல்கிறோம். விபத்து என்பது சென்னையில் நடக்காத இடம் ஒன்று இருக்கிறதா...நீதிமன்றத்தின் உத்தரவை இன்று கர்மசிரத்தையாக கேட்கும் தமிழக அரசு கடந்த காலத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதா?...

டாஸ்மாக் கடைகளை மூடச் சொன்ன உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன ஆனது?...உள்ளாட்சித் தேர்தலை நடத்தச் சொல்லி பல மாதங்கள் ஆகிறது...அதை நடத்திவிட்டார்களா...தங்களுக்கு சின்னம் இல்லாததால் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இன்றுவரை மதிப்பளிக்கவில்லை. அண்ணா நுாலகம் தொடர்பாக எத்தனையோ உத்தரவுகள் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளன... இத்தனைக்கும் செவிமடுக்காத தமிழக அரசு சிவாஜி சிலை விவகாரத்தில் மட்டும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றியிருக்கிறது.

சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க நாங்கள் வைத்த கோரிக்கைககு எந்த உத்தரவாதமும் அளிக்காதது சிவாஜி ரசிகர்களை வேதனைப்பட வைத்துள்ளது. இது சிவாஜிக்கான அவமானம் இல்லை; அரசுக்கு ஏற்பட்ட அவமானம்! ஒரு தமிழனுக்கு, தமிழ்த்திரைப்படத்துறைக்கு சேவையாற்றிய கலைஞனுக்கு தமிழக அரசு செய்கிற மரியாதை இதுதானா? அரசு இதில் உறுதியாக இருந்திருந்தால் இன்று சிவாஜிக்கு இந்த அவமானம் நேரிட்டிருக்காது. விபத்து நடக்கும் என்று சிலையை அகற்றியிருக்கிறார்கள். இனி எந்தக் காலத்திலும் அங்கு விபத்து நடக்காது என காவல்துறையும் அரசும் இப்போது உத்தரவாதம் அளிப்பார்களா...?. தலைமைச் செயலகம் உள்ள பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறதென்றால் உடனே அதை அகற்றுவார்களா இவர்கள்...இது சிவாஜியை அவமதிக்க திட்டமிட்டு நடந்த ஒன்று. திருவிளையாடலில் நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே என சிவாஜி பாடியிருப்பார். அது பொய்யல்ல; சிவாஜி சிலையை அகற்றியிருக்கிறார்கள்...இதற்கான விலையை அரசு கொடுப்பார்கள்” என்றார் வேதனையான குரலில்.

சிவாஜி கணேசன்

 

தொடர்ந்து, “ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியை சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் தனது மூத்த கலைஞனுக்கு நடந்த இந்த அவமதிப்பை கண்டுகொள்ளாததும் வேதனை. எல்லாவற்றிலும் இன்று அரசியல் வந்துவிட்டது. தமிழகத்தில் அரசியல்வாதி என்றால் சட்டத்தை வளைத்தாவது மரியாதை செலுத்துவார்கள். கலைஞன் என்றால் அவன் கிள்ளுக்கீரைதான். இதற்கான பலனை அனைவரும் அனுபவிப்பார்கள்” என்று முடித்தார்.

தமிழகத்தில் ஒரு தமிழ்க்கலைஞனுக்கு நேர்ந்த இந்த அவமானத்தை அரசு தவிர்த்திருக்கலாம்!

http://www.vikatan.com/news/tamilnadu/97814-sivaji-fans-reacts-against-to-state-govt-on-his-statue-issue.html

  • தொடங்கியவர்

சிவாஜி சிலை அகற்றம்: கமல்ஹாசன் கருத்து

 

 
kamal13168467f

சென்னை கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சிலை நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

‘சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன். மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம். அதை எந்த நாளும் காப்போம். அரசுக்குமப்பால் என் அப்பா!’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article19425564.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.