Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரமணி

Featured Replies

 
card-bg-img
 

சினிமா என்றாலே காதலை மையப்படுத்தி தான் படங்கள் எடுக்கப்படும். பல படங்கள் இதை பிரதிபலித்ததுண்டு. ஆனாலும் இதிலிருந்து சற்று விலகி வந்துள்ள படம் தான் இந்த தரமணி.

தரமணி தரமானது தானா, மணி ஓசை போல் புரியவைக்கும் சேதி என்ன என பார்க்கலாம்.

கதைக்களம்

ஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய பெண். தான், தன்னுடன் தன் அம்மா, ஒரு சிறுவயது மகன் என தனிக்குடும்பமாக வாழ்கிறார். இவருக்கு பின்னாலும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது. ஐடி நிறுவனத்தில் ஒரு மனிதவள அதிகாரியாக (HR) சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில சோகங்கள் இவருக்கு பின்னாலும் இருக்கிறது.

அடை மழைக்காக சாலையோரம் ஒதுங்கும் ஆண்ட்ரியா சட்டென பின்னால் இருப்பவரை பார்த்து மிரள்கிறார். அந்த வழிபோக்கன் தான் நம்ம ஹீரோ. பின் என்ன இருவரும் பேசிக்கொள்வதிலேயே பின்னால் என்ன நடக்கப்போகிறது என கணித்து விடலாம். கதையின் நாயகனாக வசந்த் இவரின் பின்னாலும் ஒரு தனி ட்ராக்.

இருவரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாக, பின் காதலர்கள் ஆகிறார்கள். சீக்கிரம் வந்த காதல் சட்டென விரிசலாகிறது. ஆண்டிரியா ஒரு பாதையில் செல்ல, ஹீரோ தவறான பாதையில் செல்கிறார். முன் பின் அறிமுகமில்லாத இவர்கள் எதற்காக சந்தித்தார்கள், ஏன் பிரிந்தார்கள், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை.

இதற்கிடையில் அஞ்சலி வேறு. அவர் ஒருவரை காதலித்து விட்டு, வெளிநாடு சென்றதும் மாறிவிட்டார். இவர் இப்படி மாறக்காரணம் என்ன என்பதையும் இப்படம் காட்டியிருக்கிறது.

படம் பற்றிய அலசல்

ஆண்ட்ரியா இக்கதைக்கு பொருத்தமானவர் என அவரது நடிப்பே சொல்கிறது. அவருக்கே உரிய ஸ்டைல், தனக்கென ஒரு கொள்கை என சுற்றும் இவர் ஆண்களின் மாற்று பார்வையில் பரிதவிக்கும் பெண்களில் ஒருவர்.

சூழலை எதிர்கொள்ளும் விதம், தைரியம் இருந்தாலும் தன் மகன் தான் தனக்கு உலகம் என நினைப்பவர். இக்கதையில் நடிப்பதற்கே இவருக்கு தனி தைரியம் இருந்திருக்கிறது.

வசந்த் அறிமுக நாயகனாக நடித்திருந்தாலும், திறமையை காட்ட இது ஒரு நல்ல சான்ஸ். காட்டியிருக்கிறார். படம் முழுக்க ஒரு இயல்பான நடிப்பு.

அஞ்சலி ஒரு ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தாலும், இவரால் கதையில் ஒரு ஸ்ட்ராங்க் ஃபிளாஷ் பேக் சுழல்கிறது. இவரின் நடிப்பும் எதார்த்தம்.

இயக்குனர் ராம் சற்று வித்தியாசமாக ஆண் என்னும் போர்வையில் சிலர் பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா காதலில் வெற்றியானாலும், தோல்வியானாலும் அதற்கேற்ப படங்களில் பாடல்களை கொடுத்து கவர்ந்து விடுவார். அது இப்படத்திலும் தொடர்கிறது.

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இப்படம் மூலம் மீண்டும் நம் எண்ணங்களில் தான் இருப்பதை தன் வரிகள் மூலம் காட்டியிருக்கிறார்.

க்ளாப்ஸ்

ஆண்ட்ரியாவின் நடிப்பு கதைக்கு மெருகூட்டுவதை சொல்லாமல் இருக்க முடியாது.

இயக்குனர் பார்வையில் குழந்தைகளுக்கான விசயம் இதில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஒளிப்பதிவு, யுவனின் பாடல்கள் என உள்ளிருக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.

இருப்பதை இருப்பதாக கேமிராவில் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பல்ப்ஸ்

அடுத்தடுத்து பாடல்கள் தொடர்ந்து வருவது ஒரு மாதிரி இருக்கிறது.

படத்தின் நீளம் எதிர்ப்பார்ப்பை தளரவைப்பதாக தெரிகிறது.

யுவன் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் ஏதோ ஒன்று குறைவதாக தோன்றுகிறது.

மொத்தத்தில் இயக்குனர் சொன்னது போல தான். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடுவது மாதிரி தான். தரமணி தரம் குறையாமல் படம் காட்டியிருக்கிறது.

ஆபாச படம் என பலர் நினைத்தாலும், தரமணி வயது வந்தோர்க்கு மட்டுமே என்பதை தான் தெளிவாக்கியிருக்கிறது.

Cast:
Direction:
Ram
Production:

http://www.cineulagam.com/films/05/100854

  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவின் உண்மையான படைப்புக்கு வாழ்த்துகள் ராம்! - தரமணி விமர்சனம்

 

தரமணி அமைந்திருக்கும் சென்னையின் ராஜிவ் காந்தி சாலை, சென்னையின் எந்த  இயல்புக்கும் இலக்கணத்துக்கும் ஆட்படாத ஒரு விநோதப் பிரதேசம்..! 

Andrea

 

சென்னை... ஏன் தமிழகமே மின்வெட்டு இருளில் மூழ்கிக் கிடக்கும்போது, சென்னையின் ஓ.எம்.ஆர் அலுவலகங்கள் 24*7 மின்னொளி/குளிர்சாதனத்தில் திளைத்துக் கிடக்கும். உலகின் அத்தனை கால நேர அட்டவணைப்படியும் ஏதேனும் ஒரு குழு பரபரத்துக் கிடக்கும். ஐ.டி. பூங்கா வேலைக்கு புரசைவாக்கம் வீட்டிலிருந்து கிளம்பும் ஆண்/பெண், அலுவலக வளாகத்துக்குள் நுழைந்ததும் அமெரிக்க மனநிலைக்கு மாறுவார்கள். ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மில்லியன் கணக்கில் சம்பளம் வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கில் வேலைக்கு ஆள் எடுக்கப்படும். ஒரே நாளில் பலரை துரத்தவும் செய்யும். ஆனால், அவற்றைக் கண்காணிக்க/நெறிமுறைப்படுத்த கொட்டிவாக்கத்தில் ஒரு லேத் பட்டறை தன் தொழிலாளிகளைக் காப்பாற்றும் தொழிலாளர் சட்டங்கள் எதுவும் கூட ஓ.எம்.ஆரில் கை கொடுக்காது. 

வெளிநாட்டு க்ளையண்ட்களுக்கான சர்வதேச தர ஓட்டல்கள், தள்ளுவண்டி கடை பிளாஸ்டிக் பேப்பர் தட்டில் இட்லிகளை அவசர அவசரமாக விழுங்கும் டீம் லீடர், முதல் மாத சம்பள நோட்டிஃபிகேஷன்களை தொடரும் கார், வீடு ஈ.எம்.ஐ. சலுகைகள், ஏரிகளாகவும் கடலின் வடிகால் பாதைகளாகவும் வயல்வெளிகளாகவும் இருந்த பகுதிகள், 'பீச் வீயூ' அபார்ட்மெண்ட்களாக விண்ணை முட்ட, 'ஆர்கனிக் உணவகங்கள்' காய்கறிகளை ஊட்டி/பெங்களூரிலிருந்து இறக்குமதி செய்து 'பிரீமியம் மீல்ஸ்' ஆக பந்தி வைக்க, ஒன்றரை கோடி ஆடி கார் L1 டீம் மேனஜரும் 10 ரூபாய் ஷேர் ஆட்டோ பயணியான திறமைசாலி L3 நபரும் ஒரே புராஜெக்ட்டில் மண்டையை உடைத்துக் கொண்டிருப்பார்கள். hugs, flirts, dating, livin, break-up என எதுவும் 'no offence meant' மோடில் கடந்து செல்லும். இப்படி பல தலைமுறைகளாக ஒரு தமிழனின் மனநிலையில் பதிந்திருக்கும் பல கற்பிதங்களை விளையாட்டாக கலைத்தபடி, எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காமல், ஆனால் பரபரப்பாக இயங்கிய வண்ணமிருக்கும்  தரமணியும், தரமணியைத் தாண்டி விரியும் ஐ.டி உலகமும். 
      
இயக்குநர் ராமின் 'தரமணி'யும் அப்படி தமிழ் சினிமாவின் கற்பிதங்களைக் கண்டுகொள்ளாமல், இன்னதென்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதை சொல்லல் மூலம் தமிழ் சினிமா ரசிகனுக்கு ஒரு புது அனுபவம் தருகிறது. செறிவான துணிச்சலான முயற்சிக்கு வாழ்த்துகள் ராம்..! 

andrea

 

வழக்கமான ஒரு சினிமாவுக்கு போல வழக்கமான ஒரு விமர்சனமாக தரமணி பற்றி பேச முடியாது. தரமணியின் மையம் அதன் கதையோ, கதை சொல்லியிருக்கும் யுக்திகளோ மட்டுமல்ல. தரமணியை நகர்த்திச் சொல்லும் ஆண்ட்ரியா, வசந்த் ரவி முதல் அழகம்பெருமாளின் மனைவியாக  உரையாடல்களிலேயே கடக்கும் வீனஸ் வரை ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் சூழல்களும்தான் இப்படத்தின் பேசு பொருளாக இருக்க வேண்டும். 

சிங்கிள் மதர், '34-28-36' சைஸ், 80,000 சம்பளம், கே கணவர், பார்ட்டி, டேட்டிங், பிட்ச் வசை  ஆண்ட்ரியாவின் ஒவ்வொரு நாளும் கொடுக்கும் உணர்வுப் பெருக்கு, அது உண்டாக்கும் மன அழுத்தம்.... கச்சித வார்ப்பு. பியர்ட்வாலா, முரட்டு முட்டாள், சுவாரஸ்ய காதலன் என வசந்த் ரவியின் கதாபாத்திரம் மற்றும் காஸ்டிங்... வெரி குட். ஐந்து சீன் அஞ்சலி முதல் 'சூப்பர்... சூப்பர்... சூப்பர்' என இன்ஸ்பெக்டர் கணவன் முன் ஆக்ரோஷமாக ஆடும் பெண் வரை படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் இயல்பில் கச்சிதம்...மற்றும் நிஜம்!      

வேதாளத்தை முதுகில் சுமந்து திரியும் விக்கிரமாதித்யன்போல பெண்களின் கற்பு குறித்த சந்தேகக்கேள்விகளை எப்போதும் சுமந்து திரியும் ஆண்களின் அற்பத்தனத்தை முகத்திலறைந்து கேள்வி கேட்கும் காட்சிகளால் செவிட்டில் அறைந்து கொண்டே இருக்கிறது 'தரமணி'.

கணவனைப் பிரிந்து தன் குழந்தையுடன் வசிக்கும் கார்ப்பரேட் பணியாளர் ஆண்ட்ரியா. ஒரு மழைக்காலப் பகற்பொழுதில், காதலில் தோல்வியுற்று தாடி வைத்துத் திரியும் வசந்த்ரவியைச் சந்திக்கிறார். ஒருகட்டத்தில் ஆண்ட்ரியாவின் வாழ்க்கைக்குள் உள்ளே நுழையும் வசந்த்ரவி, கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப்பிராணியாக மாறி, கேள்விகளால் ஆண்ட்ரியாவைத் துளைத்தெடுக்கிறார். வசந்த்ரவி மட்டுமல்ல, எல்லா ஆண்களுமே சந்தர்ப்பம் கிடைத்தால் சபலம் கொள்கிறவர்களாகவும், அதேநேரத்தில் தனக்குச் சொந்தமான பெண்களின்மீது சந்தேகம் கொண்டவர்களாகவும் எப்படி சமூகப் பச்சோந்திகளாக வாழ்கிறார்கள் என்பதைத் துணிச்சலுடன் விவரிக்கின்றன சம்பவங்கள். 

ஆண்ட்ரியா - 'தரமணி'யைத் தாங்கி நிற்கும் துணிச்சல் தேவதை. காதல், நெருக்கம், கசப்பு, விரக்தி, வெறுப்பு, சலிப்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் எதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். காதலில் கழுத்து வரை மூழ்கி அதைக் கண்களின் வழி வெளியே கொட்டுவது, கோபத்தில் கன்னப்பருக்கள் அதிர அலறுவது, 'நீ போய்ட்டியோனு நினைச்சேன். போறதா இருந்தா சொல்லிட்டுப் போ' என சுருண்டு அழுவது, சிகரெட் பிடிக்க பெண்களுக்கும் காரணமிருக்குமென்று விரல் இடுக்கில் சிகரெட் புகைய அலட்சியமாகப் பதில் சொல்வது, இறுதிக் காட்சியில் கதவுக்குப் பின்னால் நின்று அழுவது வரை அசரடித்திருக்கிறார் ஆண்ட்ரியா! இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அவருக்கென அமைந்திருக்கும் தனித்துவமான இந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு கச்சிதமாகச் செய்யமுடியுமோ, அத்தனை நேர்த்தியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இன்னும் நிறைய படங்களில் நடியுங்கள் ஆண்ட்ரியா!

Andrea

ஐந்துக்கும் குறைவான காட்சிகளில் அஞ்சலி. சுடிதாருக்கு டாப் போடும் வைஜெயந்தி மாலாவாக, சேலை கட்டிய சரோஜாதேவியாக ஒரு சராசரி ஆண் எதிர்பார்க்கும் சராசரித் தமிழ்ப்பெண்ணாக இருந்து, அமெரிக்கா போய் அதன் கலாசாரச் சூழலுக்கு ஏற்ப மாறும் காட்சிகளில் கச்சிதம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் பழைய காதலனைச் சந்திக்கும் காட்சியில் தான் ஒரு நடிப்புப் பிசாசு என்பதை அழுத்தமாய் நிரூபித்திருக்கிறார் அஞ்சலி. "நீ பணம் கொடுத்தே வாங்கமாட்டேன்னு நினைச்சுத்தான் சாக்லேட் பாக்ஸ்ல வெச்சுக் கொடுத்தேன்", "அந்த போட்டோஸ் அப்படியே இருக்கட்டும். உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. நான் சந்திச்சதிலேயே ஒரே நல்லவன் நீதான்!" என்கிற வசனங்களில் ஆண்திமிருக்கு சவுக்கடி கொடுக்கிறார் அஞ்சலி.

கதாநாயகன் வசந்த் ரவி ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் ராமையே பிரதிபலிக்கிறார். ராமைப் போலவே உடல்மொழி, குரல், சமூகம் பற்றிய புகார்கள் என்று அவர் பேசுவது இயக்குனர் ராம் பேட்டிகளில், மேடைப்பேச்சுகளில் பேசுவதையே நினைவுபடுத்துகிறது.  வசந்த்ரவியின் பாத்திரத்தை ஒருவகையில் 'கற்றது தமிழ்' ஜீவாவின் நீட்சி என்று சொல்லலாம். 'கற்றது தமிழ்' படத்தில் பெண்கள் டி-ஷர்ட்டில் எழுதப்பட்ட வசனங்களுக்காகக் கோபப்படுவது, பீச்சில் நெருக்கம் காட்டும் காதலர்களிடம் நடந்துகொண்ட விதம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளாகின. அதற்கான பதிலை வசந்த் ரவி மூலம் இந்தப் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் ராம். ஆணாதிக்கத்தின் அத்தனைக்கூறுகளையும் அச்சு அசல் பிரதிபலித்த உடல்மொழிக்காக, வாழ்த்துகள் வசந்த் ரவி!

"வீனஸ் எனக்குப் பொண்டாட்டியா இருந்தாலும் யாரோ ஒருத்தருக்கு அக்காதானேடா, மகள்தானேடா, தங்கைதானேடா?" என்று உருக்கம் காட்டும் அழகம்பெருமாள், ஆண்ட்ரியா காறித்துப்பியபிறகும், "ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ் அதிகமாயிடுச்சு" என்று கூலான உடல்மொழி காட்டும் அந்த 'பாஸ்', வசந்த்ரவியால் பாதிக்கப்படும் பெண்கள், அசிஸ்டென்ட் கமிஷனர், அவரது மனைவி என சின்னச் சின்ன கேரக்டர்களையும்கூட செதுக்கியிருக்கிறார் ராம். அதிலும் 'தாடிவாலா' என்று வசந்த்ரவியிடம் அன்பு காட்டி, 'பிட்ச்னா என்னம்மா?' என்று ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பி அதிரவைக்கும் அந்தச் சிறுவன், நம் மனசில் அழுத்தமாக அமர்ந்துகொள்கிறான்.  "சிகரெட் குடிக்காதே, நீ ஒரு பையனுக்கு அம்மா", "நீகூடத்தான் ஒரு அம்மாவுக்குப் பையன்" என்று வசனங்கள் ஒவ்வொன்றும் எதார்த்தத்தையும் எள்ளலையும் பொதிந்துவைத்திருக்கின்றன. யுவன்ஷங்கர் ராஜாவின் இசை, கவிதையாய் மிளிர்கிறது. தேனி ஈஸ்வரின் கேமரா, புறாக்களைப் போல தரமணியைச் சுற்றிச் சுழல்கிறது.

ஆண்ட்ரியாவுக்கும் வசந்த்ரவிக்கும் இடையிலான வாக்குவாதக் காட்சிகள், காவல் அதிகாரி - அவர் மனைவிக்கு இடையே நடக்கும் மோதல்களும் அதன் திடுக்கிட வைக்கும் முடிவும், கார்ப்பரேட் நிறுவன நடைமுறைகள், தன் மகன் மாடிப்படியில் இறங்கிவரும்போது தன்மீது ஆதிக்கம் செலுத்தும் ஆண்களில் ஒருவராகவே ஆண்ட்ரியா பார்க்கும் காட்சி, கண்ணாடிச் சுவரில் மோதி மரணிக்கும் புறா, 'பிட்ச்னா என்னம்மா?' என்று மகன் கேட்கும்போது, ஆண்ட்ரியா பூனைக்குப் பால் கொடுக்கும் காட்சி என படம் முழுவதும் கவித்துவக் காட்சிகள். 

Tharamani

 

ஏரிகளை ஆக்கிரமித்து எழும்பிய கட்டிடங்களைப் போல தரமணி குறித்து நமக்கும் சில கேள்விகள் எழுகின்றன. தமிழக மீனவர் படுகொலை, ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது, வடமாநிலத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது என்று ராம் பேசியிருக்கும் பல விஷயங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றையெல்லாம் பேசவேண்டும் என்பதற்காக, கதையோட்டத்துக்கு வெளியே பேசியிருப்பது உறுத்துகிறது. படம் முழுக்க, வாய்ஸ் ஓவரில் ராம் போடும் 'ஸ்டேட்டஸ்'கள் புதுமையான உத்திதான் என்றாலும் படத்தின் சீரியஸ்தன்மையைக் குலைக்கிறது. காட்சி நமக்குக் கடத்தும் சீரியஸ்னெஸ்ஸை ராமின் வாய்ஸ் ஓவர் சட்டென்று கீழிறக்குகிறது.

ஆண் பெண் இருவருக்குமான உறவுச் சிக்கல்களில் நவீனத் தொழில்நுட்பங்களின் பங்களிப்பை படம் அதிகம் பேசியிருக்கிறது என்றாலும், 'வாட்ஸ்அப்பில் பேசாதீங்க சார்.... ரெக்கார்ட் பண்ணி ஃபேஸ்புக்ல போடுவாங்க'. 'ஃபேஸ்புக்ல நீங்க பார்ல சண்டை போட்டது வைரல் ஆகியிருக்கு', 'ஸ்கைப்ல பேசலாம்', 'ஃபேஸ்புக்ல உனக்கு எப்படி இத்தனை ப்ரெண்ட்ஸ்?'... படத்தின் இறுதிக் காட்சியில் கூட 'நீங்கெல்லாம் பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறமாதிரி, நான் படத்துக்கு நடுவே ஸ்டேட்டஸ் போடுறேன்' என இயக்குநரே சொல்கிறார். டெக்னாலஜியை இவ்வளவு எதிர்மறையாக காட்டியிருக்க வேண்டுமா?

இப்படியான விமர்சனங்களைத் தாண்டி ஓரின சேர்க்கையாளரின் பிரச்னையை ஆபாசமாக்காமல் எதார்த்தத்தோடு பதிவு செய்தது, கார்ப்பரேட் சூழல் பெண்களுக்கு சுதந்திரத்தையும் பாலியல் ஒடுக்குமுறைகளையும் ஒருசேரக் கொடுத்திருப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது, ஆண்ட்ரியா குடிக்கும், புகைக்கும் காட்சிகளை வெறுமனே அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்லாமல் இயல்பாகக் காட்டியிருப்பது, 'இது சரி, இது தவறு' என்று கறுப்பு - வெள்ளையாக வாழ்க்கையைப் பார்க்காமல் மனிதர்களை அவர்களின் பலத்தோடும் பலவீனத்தோடும் பார்க்கவேண்டும் என்ற அறவுணர்வை முன்வைத்திருப்பது, காலங்காலமாக 'கற்பு' என்ற பெயரில் ஆணாதிக்கம் செலுத்தும் வன்முறையை அதிரும்படி சொல்லியிருப்பது என்று பலவகையில் முக்கியமான படம் 'தரமணி'.

taramani

 

 

இன்னும், படம் பற்றி பேசிக் கொண்டே செல்லலாம். ஆனால், இது போதும், இப்போதைக்கு.
தமிழின் உண்மையான நேர்த்தியான, எந்த சமரசமுமில்லாமல் தமிழர்களின் மனசாட்சியை அறைந்து கேள்வி கேட்கும் முக்கியமான படைப்பு....'தரமணி'..! 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/98898-thanks-for-the-daring-truthful-movie-taramani-congrats-to-director-ram.html

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: தரமணி

 

 
taramanireviewjpg

மூகத்தின் இருவேறு அடுக்குகளில் வாழும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எதிர்பாராமல் அரும்பி மலரும் காதலையும், அதனால் விளையும் உறவுச் சிக்கலையும் ‘உலகமயமாக்கல்’ எனும் பயாஸ்கோப் வழியாகச் சொல்வதுதான் ‘தரமணி’.

காதலிலும் பணத்திலும் ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்த இளைஞன் வசந்த் ரவி. கணவனைப் பிரிந்து குழந்தையோடும், தன் தாயோடும் தனித்து வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண் ஆண்ட்ரியா. இருவருக்கும் நட்பு மலர்ந்து காதலாகிறது. இணைந்து வாழ்கின்றனர். ஐ.டி. கம்பெனியில் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி, தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் துணிச்சல் மிக்க பெண் ஆண்ட்ரியாவின் வாழ்க்கை முறையில் ஒன்றமுடியாமல் தவிக்கிறான் வசந்த். நடத்தையில் சந்தேகம், சண்டையால் விரிசல் ஏற்பட்டுப் பிரிகிறார்கள். அதற்குப் பிறகு தவறான வழியில் தடம் மாறும் வசந்த், இறுதியில் திருந்தி காதலியை நோக்கித் திரும்புகிறானா? புதிய உறவால் ஆண்ட்ரியா எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன? அவனை அவள் ஏற்கிறாளா? இதை ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி’ (இயக்குநர் ராம் படம் நெடுகிலும் அடிக்கடி சொல்வது போல) சொல்கிறது தரமணி.

வழக்கமான காதல் கதை பாணியில் இருந்து விலகி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆண்ட்ரியா, வசந்த், சவும்யா தொடங்கி, சாலையில் அடிபட்டுக் கிடக்கும் பிழைக்கவந்த வடமாநில கட்டிடத் தொழிலாளி வரை, பெரும்பாலான கதாபாத்திரங்கள் உலகமயமாக்கலின் குழந்தைகள் என்று நம்ப வைத்துவிடுகிறார். உலகமயமாக்கல் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற சிக்கல்களை ஒரு காதல் கதைக்குள் ‘வாய்ஸ் ஓவர்’ மெசேஜ்களாக இயக்குநர் சொல்லிச் செல்லும்போது திரையரங்கில் கரவொலி, சிரிப்பொலியோடு ‘கமென்ட்களும்’ எழுகின்றன.

சுய சார்போடும் சுயமரியாதையோடும், அதே நேரத்தில் கனிவோடும் உயர்ந்து நிற்கிறது ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம். தோற்றம், உடல்மொழி, குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு என அனைத்திலும் பாத்திரத்தோடு கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனாலும், இன்னும் எத்தனை காலம்தான் தறுதலை மன்னன்களை உருகி உருகிக் காதலிக்கும் பொறுப்பான பெண்களை நம் தமிழ் சினிமா காட்டப்போகிறதோ! காதலனிடம் காதலி, ‘‘நீ எப்போதுதான்டா வேலைக்குப் போவே?’’ என ஒருதரம்கூட கேட்காவிட்டாலும் திரையரங்கில் பார்வையாளர்கள் கத்தி கூப்பாடு போடுகிறார்கள். அதிகம் ஸ்டீரிரோ டைப் ஆண்களையே அவர் எதிர்கொள்வதாக காட்டியிருப்பது வலிந்து உருவாக்கப்பட்ட முரண்.

முதல்பாதி முழுவதும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கும் வசந்த் ரவி, 2-ம் பாதியில் பின்தங்கிவிடுகிறார். தரமணி ரயில்நிலையக் காவலராக வரும் அழகம்பெருமாள், பிரபுவின் காதலி அஞ்சலி, காவல் ஆணையர் ஜேஎஸ்கே சதீஷ்குமார், அவரது மனைவி, ஆண்ட்ரியாவின் மகன் என துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் படத்துக்கு உயிரூட்டியிருக்கின்றனர்.

உலகமயமாக்கலினால் மனித மனம் வெற்றிடமாகிப் போனதை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. பின்னணி இசையிலும், நிசப்தத்தை மிக கவனமாக முக்கிய காட்சிகளில் பொருத்திய விதத்திலும் அசத்தியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் அடிக்கடி வந்தாலும் கதைப் போக்கின் விளைவையும், கதாபாத்திரங்களின் மன உணர்வையும் நமக்குக் கடத்திவிடுகின்றன மறைந்த நா.முத்துகுமாரின் பாடல் வரிகள். தமிழ்த் திரைக்கு அவர் எத்தனை பெரிய இழப்பு என்பதை இந்தப் படமும் உணர்த்துகிறது!

நம் மனதில் தென்றல்போல வருடிப் பதியும் அழகம்பெருமாளின் மனைவி கதாபாத்திரத்தைச் சிதைத்தது வக்கிரத்தின் உச்சம். பெண் குடிப்பதை உரிமையாகக் கொண்டாடும் போஸ்டரும், படத்தில் ஆங்காங்கே இயக்குநர், ராமேஸ்வர கடலோடிகள் உயிர் பிழைக்கும் அரசியலையும், பணமதிப்பு நீக்க விவகாரத்தையும் ஒற்றை வரியில் ’வாய்ஸ் ஓவராக’ பேசிவிட்டால் நல்ல படம் ஆகிவிடுமா? ‘கற்றது தமிழ்’ என்றால்தான் வேலை கிடைக்காது, கற்றது ஆங்கிலம் என்றாலும் அப்படித்தானா ராம்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19485164.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

'தரமணி'யில் உங்களுக்குப் புரிந்தது முழங்காலா... மொட்டைத்தலையா? #VikatanExclusive

 
 

தரமணி

”என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும், இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சிசெய்யுங்கள். அதுதான் சிறந்த வழி.” 

இவ்வாறு தன் படைப்புமீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கிறார், எழுத்தாளர் சதத் ஹாசன் மாண்டோ. கிட்டத்தட்ட இதுதான் இன்றைக்கு இயக்குநர் ராமுக்கும் நடந்திருக்கிறது. 'தரமணி' திரைப்படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அதன்மீதான விமர்சனங்கள் வேறு விதமான வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருக்கின்றன. 

அப்படி விமர்சிப்பவர்கள், படத்தை ஒரு குறுகிய வட்டத்தினுள் நின்றே பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. உலகமயமாக்கலைப் பற்றி படம் பேசுகிறது. வயலும் வயக்காடுமாக இருந்த பகுதி, கட்டடக் காடாக மாறிய பிறகு, அங்கே வேலைபார்க்க வரும் ஆல்தியா முதல் அந்தக் கட்டடங்களைக் கட்டும் பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வரை மொத்தமாக அதன் கோரத்தைப் போகிறபோக்கில் பகிர்கிறது. இதில் வரும் வான்வழிக் காட்சிகள் (ஏரியல் காட்சிகள்), நம்மை படம் முழுக்க கடத்திக்கொண்டே போகின்றன. தரமணி, கட்டடங்களால் நிரம்பிப்போன பகுதி. நடுவில், ஆங்காங்கே பாவம்பார்த்து விடப்பட்டிருக்கும் சதுப்பு நிலம். ஆண்ட்ரியா வீடு இருக்கும் இடம், முழுவதும் கட்டடங்களால் நிரப்பப்படாதது. வெட்டப்படாத சில மரங்கள், புல்வெளி, சின்னச்சின்ன குளங்களாகச் சுருங்கிய ஏரிகள். தரமணியில் இருந்த வயல்வெளிகளும் சதுப்பு நிலமும் அகற்றப்பட்டு, விவசாயிகளிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் 90-ம் ஆண்டுகளுக்குப் பிறகு பிடுங்கப்பட்ட இடம். 

இதற்கு நடுவே, தரமணி மட்டுமல்லாது இன்னும் பல நிலங்களை விழுங்கிய ’புதிய சென்னையில்’ ஐ.டி-யில் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஆல்தியா, அதே ஐ.டி-யில் குறைவான சம்பளத்தில் வேலைபார்க்கும் அபூர்வ சௌமியா, கால்சென்டரில் 12,000 ரூபாய்க்கு வேலைபார்க்கும் பிரபு... இந்தக் கதாபாத்திரங்களுடன், பெருங்குடி ஹவுசிங் போர்டில் வசிக்கும் தரமணியின் ஸ்டேஷன் மாஸ்டர், போலீஸ்காரர், சொந்த ஊரைவிட்டு வந்து ஏதோ ஒரு தொழில்செய்து குடும்பத்துடன் வாழும் ரஹீம் பாய். இவர்கள்தான் இந்தக் கதையின் முக்கிய நபர்கள். தவிர, ஷேர் ஆட்டோவும் டீ கடைகளும் என்று பல வர்க்கங்கள் ஒன்றாக ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்களுக்கிடையே நடக்கும் உறவுச் சிக்கல்கள்தான் படம். 

தரமணி

படத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக இருப்பது, அபூர்வ சௌமியாவின் அந்தச் சிறிய பகுதிதான். ஆனால், 'அபூர்வ சௌமியாவை இப்படிக் காட்டலாமா? ராம் வலிந்து திணித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வேறு வழியில்லாமல், நியாயப்படுத்துகிறார்' என்று கூறினால், நீங்கள் உங்கள் மேட்டுக்குடி மனநிலையிலிருந்து இன்னும் கீழே வர வேண்டும். உங்களைப் பொறுத்தவரை ஐ.டி என்றால், பல ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஜாலியாக ஊரைச் சுற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால், ஊரிலிருந்து வேலைக்காகச் சென்னை நோக்கி வரும் கடனாளி அப்பாவின் பெண்தான் செளமியா. கல்விக் கடனால் தத்தளிக்கும் மாணவர்களின் ஒரு பிரதிநிதி. அவள் தன்னுடைய காதலனின் துணையோடு ஆன்சைட் செல்கிறாள். அங்கு அவளுடைய வாழ்க்கை முறை வேறுபடுகிறது. 

வெளிநாட்டில் வேறு வேலைபார்க்கலாம் என்று நினைத்தவளுக்கு, வேலை கிடைக்கவில்லை. குடும்பச் சூழ்நிலையினால், ஒருவரை திருமணம்செய்து, அங்கேயே இருப்பதன்மூலம், குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று நினைக்கிறாள். மீண்டும் குடும்பத்தின் சிக்கல் காரணமாக, இங்கு அடமானம் வைக்கப்படும் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே சௌமியா மாறுகிறாள். மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய உலகமயமாக்கல், நிறைய தனித்து வாழும் பெண்களை உருவாக்கியுள்ளது. ஒரு பெண் தனித்து இருக்கிறாள் என்பதை அறியும் ஆண், அவனது பாலியல் ஆதிக்கத்தைக் காட்டும் ஒரு கடவுச்சீட்டாக நினைக்கிறான். ஆல்தியாவின் பாஸ், அவளிடம் தவறாக நடந்துகொள்வதற்குக் காரணமாக சொல்பவற்றில், எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவள் தனித்து இருக்கிறாள் என்பதுதான் முதன்மையானது. ஏதோ ஓர் ஊர்க்காரப் பெண் அந்த இடத்தில் இருந்தாலும், அந்த பாஸ் அப்படித்தான் நடந்துகொண்டிருப்பான். இதைவிட மோசமாகவே நடந்திருப்பான். எனவே, ஆல்தியாவும் இங்கே ஒரு பிரதிநிதியாகவே நிற்கிறாள். 

ஐ.டி, கார்ப்பரேட் என்றதும், ஒரே ஒரு பகுதியை மட்டும் காட்டாமல், 'தரமணி' உண்மையிலேயே நம் கண்முன்னே நாம் வாழ்ந்துவரும் சமகால சென்னையை விரிக்கிறது. நகரமயமாதலோடு சேர்ந்து நகரும் புறாவின் கதை, அது சாகும்போது நம்மை அறியாமலேயே ஒரு குற்ற உணர்ச்சிக்குள் கொண்டுசேர்க்கிறது. ஓர் உயர் வர்க்க பெண்ணும் நடுத்தர வர்க்க ஆணும் இணைவது என்பது எத்தகைய சிக்கலாக இருக்கும் என்று ராம் பேசுவது, இருவரும் இணையவேகூடாது என்பதாகத்தான் இருக்கிறது என்கின்றனர் சிலர். 

தரமணி

இது எவ்வளவு பெரிய அபத்தம்! படம் பல்வேறு உறவுச் சிக்கலைப் பற்றிப் பேசுகிறது. வீட்டில் பார்த்துச் செய்த ஆல்தியாவின் திருமணம், தோல்வியில் முடிகிறது. போலீஸும் அவரின் மனைவியை மோசமாக நடத்துகிறார். இதில் வரும் காதலும் பல சிக்கல்களைச் சந்திக்கிறது. வர்க்கப் பாரபட்சம் இல்லாமல், ஆண்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் இயக்குநர் ராம். கடைசியில், ’நீங்க போன் பண்ணதும் நான் வேற மாறி நினச்சேன்’ என்று பிரபு கூறும்போது, ‘ஆம்பளைங்களுக்கு வேற என்ன யோசிக்கத் தெரியும்?’ என்ற ஒற்றை வசனம், பெண்களின் மனதில் இருக்கும் கோபத்தை பட்டாசாகத் தெறிக்கிறது. நடுவில், தன் முன்னாள் காதலிகளின் எண்களைப் பகிரும் காட்சி, ஆண்களிடம் இருக்கும் வக்கிரத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. உடைமை மனப்பான்மைகொண்ட ஒரு நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக பிரபு நிற்கிறார். 

இந்தப் படத்தை விமர்சிப்பவர்கள் பலரும் கூறும் மற்றொரு விஷயம், எல்லோரையும் ஒரு பாலியல் வறட்சிகொண்டவர்களாகச் சித்திரித்திருக்கிறார் என்பதே. உண்மையில், இங்கு நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாலியல் வறட்சிகொண்டவர்களாகவே இருக்கிறோம். அதன் அளவு வேண்டுமானால் மாறலாம். இந்த வறட்சி, பல நேரங்களில் பாலியல் வக்கிரமாக, வன்மமாக மாறுவதும் உண்டு. நெடுங்காலமாக காமம் என்கிற உணர்வை அடக்கிவைக்க மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள், பாலியல்ரீதியிலான வறட்சியில் இருப்பது ஆச்சர்யப்படும் விஷயமில்லை. இந்தச் சமூகமே பாலியல் வறட்சிகொண்ட சமூகமாக இருக்கும்போது, சமூகத்தின் ஒரு விளைபொருள் எப்படி மாறுபட்டு இருக்க முடியும்? 

மேலும், தொலைபேசியில் பேசும் பெண்களில் இருவர், கதாநாயகனைத் திட்டும் காட்சிகளும் அந்தப் படத்தில் இடம்பெறும். கடைசியில் வரும் போலீஸின் மனைவியும் பிரபுவைப் பாலியல்ரீதியாக அணுகி இருக்க மாட்டார். பிரபுவோடு போனில் பேசும் பெண்கள், பெரும்பாலும் அவர்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள துணை இல்லாதவர்களாகவே காட்டப்பட்டிருப்பார்கள். எனவே, அந்த இடத்தில் ராம் அதற்கான நியாயத்தைக் காட்டாமல் நகரவில்லை. இத்தனை நாள் ‘கள்ளக் காதல்’ என்கிற வார்த்தையை நாம் கடந்தவிதத்திலும் இனி கடக்கும்விதத்திலும் ஒரு சிறிய அளவிலாவது மாற்றம் இருக்கும். 

அதுமட்டுமன்றி, ஆண்ட்ரியாவிடம் அவருடைய பாஸோ, மற்றவர்களோ கேட்டதுபோல Sleep with me என்று பிரபு அந்தப் பெண்களிடம் நேரடியாகக் கேட்கவில்லை. அப்படிக் கேட்டால், அது இருவரும் ஏற்றுக்கொண்ட, மகிழ்கிற ஒரு களவியாக இருக்க முடியாது. அதற்கு மாறாக, முதலில் அவர்களிடம் பேசத் தொடங்கும் பிரபு, அவர்களுடன் ஊர் சுற்றுவார். அதுதான் காமத்தின் முதல் அடி. அந்த போஸீஸ் வெளியே அழைக்கும்போது, அவருடன் போகாத குப்தாவின் மனைவி, பிரபுவிடம் பேசுவார். Let’s have sex -க்கும் Sleep with me-க்கும் இருக்கும் வேறுபாடுதான் அது. படத்தில் வரும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரம், ஆல்தியாவுடன் வேலைபார்க்கும் பெண். பிரபு கோபமாக போன் செய்வது தெரிந்து, அந்த கேபினில் இருக்கும் மற்றொருவருடன் காபி சாப்பிட கிளம்புகிறார். ஆனால், அந்தப் பெண் வேறொரு ஆணுடன் சால்சா ஆடுவதை அவரின் கணவர் பார்ப்பதைக்கூட பாலியல் இச்சையாகப் பேசுகிறார்கள். இதுவும் சமூகத்தில் நடத்தைமீது நமக்கு இருக்கும் பார்வைதான். 

படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் புனிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் ஏன் வேறு உறவுக்குச் செல்லாமல் மீண்டும் அந்த ஆணிடமே சரணடைகிறார் என்று கேட்கிறார்கள். மனித உறவு என்பது இவர்கள் பேசுவதுபோல அத்தனை எளிமையானது அல்ல. ஓர் உறவிலிருந்து பிரிந்து, அந்தப் பிரிவை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு நகர்வதற்கு ஒவ்வொருவருக்கும் எடுக்கும் காலம் மாறுபடும். ஸ்டேஷன் மாஸ்டர் மனைவி பிரச்னை, அதன்பின் அவருடனான சந்திப்பு, நாகூர் இவை எல்லாம் பிரபுவை வேறொன்றாக மாற்றிவிடுகிறது. அதன்பின்பு போலீஸ் மனைவிக்கும் போலீஸ்காரருக்கும் நடக்கும் சண்டை மற்றும் போலீஸ் மனைவியின் மரணம் அவனை மொத்தமாகப் புரட்டிப்போடுகிறது. துப்பாக்கி வெடித்த அடுத்த நொடி, அவன் அந்த இடத்தில் ஆல்தியா இருப்பதாக உணர்கிறான். அவன் கையில் துப்பாக்கி இருந்தால், அவனும் ஆல்தியாவைக் கொன்றிருப்பான் என்று நம்புகிறான். கடைசியில், பிரபுதான் தன்னை முழுவதுமாக மாற்றிச் சரணடைகிறானே ஒழிய, அந்தப் பெண் சரணடையவில்லை. மேலும், பிரபு பெண்களிடம் போனில் பேசியது எதுவும் ஆல்தியாவுக்குத் தெரியாது என்பதால், அதை மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லை. ஆல்தியாவுக்கும் பிரபுவுக்கும் நடந்த சண்டைகளையே மன்னிக்கிறாள். 

இங்கு விமர்சிப்பவர்கள் எல்லாம், அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்களே தவிர, ஆல்தியாவாக யோசிக்கவில்லை. மிகவும் மோசமான முந்தைய உறவிலிருந்து வெளியே வந்த ஆல்தியாவுக்கு, ஏழு வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் ஓர் உறவு, எல்லாமுமாக மாறுகிறது. ஒவ்வொருவரையும் புரிந்து, அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண் ஆல்தியா என்பதால், கடைசிக் காட்சி அபத்தமாகத் தெரியவில்லை. 

 

ராம் அவரைப்போலவே வெட்டியாக, அழுக்காக இருக்கும் ஆண்களையே அவர் படத்தின் கதாநாயகராக ஆக்குகிறார் என்பதெல்லாம், அவரின் மீதான தனிப்பட்ட தாக்குதல். அழகியல்குறித்து அவர்களுடைய பார்வையின் குறைபாடே ஒழிய வேறொன்றுமில்லை. 'தரமணி'யை மொட்டைத்தலையாகப் புரிந்துகொண்டால், மொட்டைத்தலை. முழங்காலாகப் புரிந்துகொண்டால், முழங்கால். படம் பார்த்த பல ஆண்களிடமும் ஏதோ ஒரு விதத்தில் குற்ற உணர்வை ராம் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/99776-did-you-understand-what-exactly-the-movie-taramani-speaks-of.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.