Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation

Featured Replies

“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation

 
 

உலகில் வாழ்ந்து வரும் பெண்களில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு (2016). அதென்ன ஜெனிடல் மியுட்டிலேஷன் என்பவர்களுக்குப் பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளுவதில் இன்பம் தரும் பகுதியை, ப்ளேடாலோ அல்லது ஏதேனும் கருவியைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துவிடுவார்கள். பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கான சிறு துவாரத்தை மட்டும் வைத்துவிட்டுப் பிற பகுதிகளைத் தைத்து மூடிவிடுவார்கள். இப்படிச் செய்வதில் பல நிலைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் இந்தச் சடங்கு, நடைபெற்றால்தான் அவள் சுத்தமானவளாகப் பார்க்கும் நடைமுறை சில கலாசாரங்களில் இருக்கிறது.

இந்தியாவிலும் சில பகுதிகளில் பெண்ணுறுப்புச் சிதைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. உலகம் முழுக்க இதற்கு எதிரான மிகப்பெரிய அளவிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது வரவேற்க வேண்டிய விஷயம். இன்று (06 பிப்ரவரி) உலகப் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான நாள் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) முன்னிட்டு, இந்த நிகழ்விற்கு ஆளாகிப் பின், இதற்கு எதிரான மிகப்பெரிய பிரசாரங்களில் முன்னெடுத்து வரும் பெண்களின் கருத்துகள் இதோ...

 

ஜஹா டுக்குரேஹ்

அமைதியான, அன்பான ஊர் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த எங்கள் சொந்த ஊரான மொகடிஷுவில்  எனக்கு அந்தப் பயங்கரம் என் ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்டது. எங்கள் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கள் வீட்டிற்கு பல்வேறு பரிசுப்பொருள்களுடன் நிறையப் பேர் வந்தார்கள். அது போன்றதொரு சூழ்நிலையில் இருப்பதே அலாதியாக இருந்தது. நானும் என் சகோதரி லெய்லாவும் விளையாடிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பக்கத்து வீட்டுக்காரப் பெண் என்னை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே உணவு அருந்தும் மேஜை இருந்தது. தெரியாத ஒரு ஆள், வித்தியாசமான சில கருவிகளுடன் அங்கு அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள். ”அவளை டேபிளில் படுக்கவைத்து, உடையை அகற்றுங்கள்” என்ற அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும், நான் அழத் தொடங்கிவிட்டேன். மற்றொரு அறையிலிருந்த என் தங்கை மற்றும் அருகில் இல்லாத அம்மாவை நினைத்து அழத் தொடங்கினேன். அந்தச் சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்யமுடியாது என்றானதும், வீட்டின் கூரையை வெறித்துப் பார்க்கத் தொடங்கினேன். எனக்கு அந்த நிமிடங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. குளிர், அவமானம், குழப்பம் இதோடு சேர்த்து மோசமான வலி. நான் நினைவிழக்கத் தொடங்கினேன். ஆனால், அந்தக் கருவிகளின் ஒலி எனக்கு கேட்டுக்கொண்டே இருந்தது - ஃபேரஸ் ஹுஸ்ஸைன்


 

கற்பனை செய்து பாருங்கள்... நீங்கள்  ஆறு வயதுக் குழந்தை. விடியற்காலையில் எழுந்து, குளித்து, உடைகளை அணிந்து கொண்டு உங்கள் தோட்டத்தின் முடிவில் இருக்கும் ஒரு கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். அதன் பின் உலகின் மோசமான நிகழ்வு உங்கள் உடலில் அரங்கேற்றப்படுகிறது. அந்த நிகழ்வை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்கவே மாட்டீர்கள். காரணம் அது உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தமாக, விவாகரத்தாக, குடும்ப வன்முறையாக... பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நான் பல வருடங்களாக மெளனமாக இருந்தேன். என்னுடைய மௌனத்தை நான் உடைத்தபோது, ஒரு அடைக்கப்பட்ட கதவிலிருந்து வெளியே வந்ததுபோல் உணர்ந்தேன். இனி அங்கு பேசாமல் இருக்கும் கோடானுகோடிப் பெண்களுடைய குரலாக நான் இருக்க விரும்புகிறேன்.  ஏனெனில், அது எவ்வளவு மோசமானது என்பது எனக்குத் தெரியும்! - ஹீபோ வார்டர்


 

நான் எப்படி இவ்வளவு வலிமையான பெண்ணாக மாறினேன் என்பதற்கான காரணம் எனக்குப் புரிய சற்றுத் தாமதமானது. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்களின் தொகுப்பும்தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் வாழ்வதைத் தேர்ந்தெடுத்தேன். நான் உறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டவள். சில நொடிகளில் நடந்தேறிவிட்ட அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கதறலையும் வலியையும் தாண்டி, மெதுவாகக் கண்களைத் மூடித் திறந்தேன். அப்போது சோகமாகவும் வருத்தம் தோய்ந்த முகத்தோடும் இருந்த என் தாயின் கண்களைப் பார்த்தேன்.

 ”நீ வாழ விரும்புகிறாயா. நீ வாழ விரும்பினால் போரிடு” என்றார் அவர். “என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகள் முழுவதும் எனக்குப் புரியாவிட்டாலும், இறைவனிடம் என் உயிரை வைத்திருக்கும்படி கண்களை மூடி வேண்டினேன். வலி வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணர்ந்துகொண்டேன். ஒரு முத்து உதிப்பதைப்போல, என் வலியிலிருந்து எனக்கு ஏதாவது நல்லது நடக்கலாம். எனக்கு ஏற்பட்ட வலியின் மூலமாகவே என் தைரியத்தை வளர்த்தெடுத்தேன். ஏனெனில் இந்த வலி வீணாவதில் எனக்கு விருப்பமில்லை - ஜே கமாரா ஃப்ரெட்ரிக்


 

நீங்கள் நேசிக்கும் நம்பும் ஆட்கள்கூட உங்களைக் காயப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்துகொண்ட காலம் அது. நடந்தவற்றை ஏற்றுக்கொள்வற்கே எனக்குப் பல காலம் தேவைப்பட்டது. என் பாட்டியின் நம்பிக்கையின்படி, பெண்ணுறுப்புச் சிதைவு என்பது பெண்ணாக என்னை எந்த வகையிலும் உயர்த்தப்போவதில்லை... என் நம்பிக்கைகளின்படி குறைக்கப் போவதும் இல்லை.

என்னால் நான் விரும்பும் மனிதர்களிடம் கோபப்படவும், வருத்தப்படவும் முடியும். என்னால் வலிமையாகவும், வலிமை குன்றியவராகவும் இருக்க முடியும். ஏற்கெனவே நடந்துவிட்ட ஒன்றை என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இன்றைய பொழுது என் கைகளில் இருக்கிறது. என்னை உறுதிப்படுத்திக்கொள்ள, வளர்த்தெடுக்க என்னால் முடியும் என்பதை என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பயங்களிலிருந்து வெளியே வந்து இந்தக் கொடுமைகளுக்கு எதிராக என்னால் போராட முடிகிறது என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இனி ஒருவருக்கேனும் இந்தக் கொடுமை நடக்கக் கூடாது. அது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மோசமான வலியினை உண்டாக்கும். முக்கியமாக, இது தேவையற்றது!  - ஃபட்டுமட்டா ஜாட்டா


 

என் வாழ்நாளுக்கும் மனதிலிருந்து அகல முடியாத வலியை ஏற்படுத்திவிட்டார்கள். சிறுமியாக இருந்தபோது நான் சென்ற சுற்றுலா, என் மனதில் வடுவாகிப் போயிருக்கிறது. அந்த வாடை, என்னுடைய கதறல், உடலிலிருந்து வெளியேறிய ரத்தம்... என அப்போது எழுந்த என் உணர்வுகளை இப்போதும் மறக்க முடியவில்லை. உளவியல் ரீதியாகக் கடுமையான பாதிப்பினை அது என் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கொடுமையிலிருந்து என் தங்கையைப் பாதுகாக்க முடியவில்லை என்கிற குற்றவுணர்ச்சியிலிருக்கிறேன். நான் என்னை ஒரு முழுமையான பெண்ணாக உணரவில்லை. என்னிடமிருந்து ஒன்று எடுக்கப்பட்டுவிட்டது. உணர்வு மற்றும் உள்ள ரீதியிலான இந்த வலிகள் என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதியாகி இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவை என்னுடைய முடிவல்ல! - ஆயிஸ்ஸா எதூன்


 

என்னுடைய 7 வயதில், சோமாலியாவில் என்னுடைய பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டது. இதன் விளைவுகளை 12 வயதில் சந்திக்கத் தொடங்கினேன். சிறிதாக விடப்பட்டிருந்த துவாரம் வழியாக மாதவிடாய் வரமுடியாமல் தொற்று ஏற்பட்டுப் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு என்னுடைய முதல் சீரான மாதவிடாய் போக்கை 17 வயதில் பெற்றேன். அதன் பிறகு நடந்த தொற்றுகள் தொடர்கதையாகிப் போனது. என் அம்மாவும், பாட்டியும் இந்தக் கொடூரத்துக்கு பலியானவர்கள்தாம்.

உச்சகட்டமாக IVF மற்றும் கருச்சிதைவுகளை அனுபவித்தேன். என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும், என் உடன் பிறந்தவர்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் கொடூரம் நடக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள்தாம் பெண்ணுறுப்புச் சிதைவினை அனுபவிக்காத முதல் தலைமுறை. அவர்களிடம் ‘மற்றவர்கள் உன்னை எந்த அளவிற்கு நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதே அளவு நீ உன்னை நேசி. மற்றவர்கள் உன் காதுகளில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் விஷயங்களை நீயே உனக்குச் சொல்லிக்கொள். உனக்காக மட்டுமில்லை, உன்னைச் சுற்றியிருக்கும் குரலற்றவர்களுக்கும் குரலாக இரு” என்று எப்போதும் சொல்லுவேன் - ஹோடா அலி


 

13 வயதில் எனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையில், பீறிட்டக் குருதியின் காரணமாக மரணத்துக்கு அருகில் சென்று வந்தேன். நான் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக இந்தச் சடங்கு ரகசியமாகத்தான் நடத்தப்படும். என்னுடைய பெண்ணுக்கு இது நடக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதை எப்போதும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய இந்தப் பயம் அவளுக்கு 'அந்த வலி' எப்படியிருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறது. இன்று அவளும் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறாள். ஒரு விஷயம் பல நாள்களாக நீடிக்கிறது என்பதற்காகவே அவற்றை நீடிக்கவிடக் கூடாது. மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு விஷயம் கலாசாரமாக இருக்கக் கூடாது - ஹவா டாபோ செஸ்ஸே


 

அந்த நிகழ்வு நடக்கும்போது நான் பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை. எனவே, அப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு நினைவும் எனக்கில்லை. உங்களுடைய நினைவு தெரிந்து உங்கள் பெண்ணுப்பு சிதைக்கப்படுகிறது அல்லது உங்களுக்கு அப்படி ஒன்று இருந்ததாகவே தெரியும் முன்பே அகற்றப்படுகிறது. எப்படி இருந்தாலும், அதன் விளைவுகளை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். உடல் ரீதியாக உங்களுக்கு ஏற்படும் தொற்றுகள், பாலியல் ரீதியான ஆரோக்கியம் ஒருபுறம் இருக்க நீங்கள் மன ரீதியாக அனுபவிக்கும் துன்பம் மற்றொரு புறம் உங்களை வாட்டும். கட்டாயம் மற்ற பெண்களைப்போல் உங்களால் உடலுறவு கொள்ள முடியாது. சிலர் இதனைக் கலாசாரம், மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார்கள். ஆனால், இது சரி தவறு சம்பந்தப்பட்ட விஷயம். பெண்ணுறுப்புச் சிதைவு என்பது கட்டாயம் தவறு. 

எனக்கு குழந்தை பிறக்கும்போது, அவளுக்கு இது போன்றதொரு கொடுமை நிகழவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் குழந்தையைப் பாதுகாப்பதன் மூலம், இது போன்றதொரு கொடூரம் வேறு எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதைத்தான் செய்துகொண்டும் இருக்கிறேன் - ஜஹா டுக்குரேஹ்


 

நான் கருவுறும்போதுதான், உறுப்புச் சிதைவு என்னை எந்த அளவுக்குத் தீவிரமாக பாதித்திருக்கிறது என்பதை உணரத்தொடங்கினேன். அது மிக மோசமான மன உளைச்சலைக் கொடுத்தது. ஒவ்வொரு முறை மருத்துவரிடம் நான் செல்லும்போதும் மிக மோசமான உடல் உபாதைகளுக்கு உள்ளானேன். என்னை யாராவது தொட்டாலே பயந்து ஒடுங்கினேன். மருத்துவர் என்னைத் தொட்டுப் பரிசோதிக்கும்போதெல்லாம் எனக்கு பய அடைப்பு ஏற்பட்டது. அந்த நிமிடம்தான் என் குழந்தைகளுக்கு இப்படியொரு நிகழ்வு ஏற்படக் கூடாது என்பதை முடிவு செய்தேன். ஒரு பெண் அந்த நிகழ்வுக்கு உட்படுத்தப்படும்போதே, அவள் நம்பும் நபர்களால் அத்துமீறித் தாக்கப்படுகிறாள்; மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறாள். அதன் தழும்புகளைத் தன் வாழ்நாள் முழுக்க தாங்கிச் செல்கிறாள்  - லெய்லா ஹுஸ்ஸைன்


 

அப்போது எனக்கு பதினோரு வயதிருக்கும்... எனக்கும் என் சகோதரிகளுக்கும் சேர்த்து உறுப்புச் சிதைவுக்கான நிகழ்வு நடைபெற்றது. இதை ஒரு கலாசார நிகழ்வாகவும், எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாசாரமாகவும் மக்கள் பார்க்கலாம். ஆனால், அனுபவிக்கும் பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் மோசமான காயங்களை ஏற்படுத்தும். யாருக்கும் பயன்பெறாத, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமை. இது உறவுகளைப் பாதிக்கும். ஆனால், மக்கள் இது குறித்து உரையாட மாட்டார்கள்.

தற்போது எனக்கு 36 வயதாகிறது. எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். உறுப்புச்சிதைவின்போது நான் அனுபவித்த வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாது. பிரசவ வலிகளுக்கும் அப்பாற்பட்டு கற்பனை செய்யக்கூட முடியாத வலியைத் தரும் உறுப்புச் சிதைவு.  என்னுடைய பெண் குழந்தைகளை இந்தக் கொடூரத்திலிருந்து நான் காப்பாற்றியிருக்கிறேன் - சரியன் கரிமா கமரா

https://www.vikatan.com/news/womens/115622-fgm-survivors-speak-out-what-it-is-like-to-experience-the-most-cruelest-act-known-on-earth.html

  • தொடங்கியவர்

சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்

 

உங்கள் விருப்பம் இல்லாமல் உங்கள் உடலின் ஒரு பகுதியை ஒருவர் வெட்டினால் எப்படி இருக்கும்? அதை எந்த வகையிலாவது நியாயப்படுத்த முடியுமா?

சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் இது நடக்கிறது. புனேவைச் சேர்ந்த நிஷ்ரின் சைஃப், பெண் உறுப்பு சிதைப்பு சடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

"அப்போது எனக்கு ஏழு வயது. எதுவும் எனக்கு சரியாக நினைவில்லை. அந்த சம்பவத்தின் மங்கிய காட்சிகள் மட்டுமே என் நினைவில் உள்ளன," என்கிறார் நிஷ்ரின்.

"பல பெண்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த சிறிய அறைக்குள் என் அம்மா என்னை அழைத்துச் சென்றார். அப்போது அவர் என் உள்ளாடையைக் கழட்டினார்," என்று பிபிசியிடம் கூறினார் நிஷ்ரின்.

"அப்போது எனக்கு பெரிதாக வலி ஒன்றும் இல்லை. வெறும் ஊசியை வைத்து குத்தியது போலவே இருந்தது. பின்னர் வலியைத் தாங்க முடியவில்லை. என்னால் அடுத்த சில நாட்கள் சிறுநீர் கழிக்கவே முடியவில்லை," என்கிறார் அவர்.

Bohra muslimsபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிக்கும் படம் மட்டுமே

வளர்ந்த பின்னர் தனக்கு நடந்ததை சகித்துக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டார் நிஷ்ரின்.

இந்தியாவில் பெண் உறுப்பு சிதைப்பு வழக்கம்

வழக்கமாக ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பில் உள்ள தோல் அகற்றப்படும். எனினும் பல நாடுகளில் பெண்களுக்கும் இந்த வலி மிகுந்த சடங்கு செய்யப்படுகிறது.

female genital mutilationபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிக்கும் படம் மட்டுமே

இந்தியாவும் அந்தப் பட்டியலில் அடக்கம். போரா இஸ்லாமிய (தாவூதி போரா மற்றும் சுலைமான் போரா) குழுவினரிடையே இது சாதாரணமாக நடக்கிறது.

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள அவர்கள் மிகவும் வளமான, கல்வியறிவு மிக்க சமூகத்தினர் ஆவர்.

போரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் நிஷ்ரின் இந்த சடங்குக்கு ஆளானார்.

பெண் உறுப்பு சிதைப்பு என்றால் என்ன?

இந்த சடங்கு 'காஃப்டா' என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.

பெண் உறுப்பு சிதைப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. போரா இஸ்லாமியக் குழுவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு 6-7 வயது இருக்கும்போதே பெண் உறுப்பு சிதைக்கப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு மயக்க மருந்துகூட கொடுக்கப்படாது. தாங்க முடியாத அந்த வலியைப் பொறுத்துக்கொள்வதையும், வலியால் துடிப்பதையும் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

வழக்கமாக பிளேடுகள் அல்லது கத்தி இதற்கு பயன்படுத்தப்படும். சடங்கு முடிந்த பிறகு வலியைக் குறைப்பதற்காக மஞ்சள், வெந்நீர் அல்லது களிம்புகள் பயன்படுத்தப்படும்.

பெண் குறிக் காம்பு போரா சமூகத்தால் தடைசெய்யப்பட்ட 'ஹரம் கி பூட்டி' என்று கூறப்படுகிறது என்கிறார் போரா இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இன்சானியா தாரிவாலா. பெண்களின் உடலில் அதன் இருப்பு அவர்களது பாலியல் ஆசைகளைத் தூண்டும் என்று கருதப்படுகிறது.

female circumcisionபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"பெண் உறுப்பு சிதைப்பால் பெண்கள் திருமணத்துக்கு முன்பு பாலுறவுகொள்ள மாட்டார்கள்," என்று நம்புகிறார்கள் என்கிறார் இன்சானியா.

ஏமாற்றி உறுப்பு சிதைக்கப்படும் சிறுமிகள்

இன்சானியாவை இந்தச் சடங்கில் இருந்து அவரது அம்மா காப்பாற்றிவிட்டார். ஆனால், திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வதாக ஓர் அரைக்குள் ஏமாற்றி அழைத்துச் சென்று, இன்சானியாவின் மூத்த சகோதரிக்கு இந்த சடங்கை நிறைவேற்றிவிட்டார் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்.

"என் அம்மா எனக்கு சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் குடும்பத்தில் பலருக்கும் அவர் மீது கோபம் இருந்தது. என் சகோதரியின் வலியை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான், அதற்கு எதிராக நான் போராடுகிறேன்," என்கிறார் இன்சானியா.

நாற்பது வயதாகும் நிஷ்ரின் தனது மகள்களுக்கு இந்த கொடிய சடங்கு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்கிறார். "இது ஒரு குழந்தைகள் மீதான வன்கொடுமை," என்கிறார் அவர்.

உடல் தூய்மையைப் பராமரிக்க பெண் உறுப்பு சிதைக்கப்படுவதாக நிஷ்ரினிடம் கூறப்பட்டது. ஆனால், அதற்கும் இச்சடங்குக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்பதை பின்னர் அவர் புரிந்துகொண்டார்.

மசூமா ரானால்விபடத்தின் காப்புரிமைMASOOMA RANALVI/FACEBOOK Image captionமசூமா ரானால்வி

"இச்சடங்கிற்கான காரணங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருகிறார்கள். முதலில் தூய்மைக்காக என்றார்கள், பின்னர் பாலுணர்வைக் கட்டுப்படுத்த என்றார்கள். இப்போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் பாலுணர்வை அதிகரிக்கவே இது செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள் ," என்கிறார் இன்சானியா.

"அது பாலுணர்வை அதிகரிக்கவே செய்யப்படுகிறது என்றால், ஏழு வயது சிறுமிக்கு செய்வதன்மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்," என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

பெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக இந்தியாவில் பிரசாரம் செய்துவரும் மசூமா ரானால்வி, மேற்கண்ட கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் பெண்களின் உடல் நலத்தில் அது மோசமான தாக்கத்தையே செலுத்துகிறது என்றும் கூறுகிறார்.

"இது பெண்கள் உடல் நலத்தை மட்டுமல்லாது மன நலத்தையும் பாதிக்கிறது. இது பின்னாளில் அவர்கள் பாலுறவின் மூலம் மகிழ்ச்சி அடைவதையும் தடுக்கிறது," என்கிறார் மசூமா.

'சாஹியோ', 'வி ஸ்பீக் அவுட்' உள்ளிட்ட அமைப்புகள் இந்தியாவில் இதற்கு எதிராக போராடி வருகின்றன.

ஆஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஏற்கனவே இதை ஒரு குற்றமாக அறிவித்துள்ளன.

Female Genital Mutilationபடத்தின் காப்புரிமைAFP

இந்தியாவில் ஏன் தடை இல்லை?

சமீபத்தில் இந்த சடங்கைத் தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதற்கு, "பெண் உறுப்பு சிதைப்பு நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால் அரசு இந்த நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது," என்று அமைச்சகம் பதில் அளித்தது.

"பெண் உறுப்பு சிதைப்பை ஒரு குற்றமாகவே கருதாத நாட்டில் எப்படி அதற்கான குற்ற ஆவணங்கள் இருக்க முடியும்," என்று கேட்கிறார் மசூமா.

Supreme Courtபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"என்னவென்றே அறியாத மிகவும் இளம் வயதில் அவர்கள் எப்படி காவல்துறையிடம் புகார் அளிக்க முடியும்? அது எப்படி வெளிவரும், " என்கிறார் அவர்.

உடந்தையாக இருக்கும் மருத்துவர்கள்

"போரா சமுதாய மத குருக்களிடமும் அரசு பேச வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கொடிய சடங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாது," என்கிறார் மசூமா.

சில படித்த, பணமுள்ள போரா குடும்பத்தினர் மருத்துவர்கள் மூலம் இதைச்செய்கிறார்கள்.

female circumcisionபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இது ஒரு மருத்துவ நடைமுறை அல்ல என்பதால் மருத்துவர்களுக்கும் இதுகுறித்து எதுவும் தெரியாது. எனினும் பணத்துக்காக அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள்," என்று கூறும் மசூமா இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கழகத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை.

"பெண் உறுப்பு சிதைப்பை முடிவுக்கு கொண்டுவர நாம் மருத்துவர்களின் உதவியையும் பெற வேண்டும். கற்பதிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறியும் சோதனை செய்வது குற்றமாக்கப்பட்டதைப் போல பெண் உறுப்பு சிதைப்பு செய்வதும் குற்றமாக்கப்பட வேண்டும்," என்று முடிக்கிறார் மசூமா.

http://www.bbc.com/tamil/global-42985909

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.