Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய நிலைமை தொடருமானால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலைமை தொடருமானால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம்

[22 - March - 2007]

-ஆர்.ஹரிஹரன்-

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை எதிர்த்து அண்மையில் சென்னையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க.வினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் அக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஆற்க்காடு வீராசாமி, மு.க.ஸ்ராலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளில் இந்திய மீனவர்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாட்டை மிகவும் காரசாரமாகக் கண்டித்தனர். இருப்பினும் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் எவற்றையும் தெரிவிக்கவில்லை.

விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்திற்கும், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான போராட்டத்திற்குமிடையே தெளிவான வித்தியாசமுண்டு என்ற கருத்தின் அடிப்படையில் தி.மு.க.செயற்பட்டு வருகின்றது என்பது தெளிவாகும்.

இந்தப் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. வழங்கும் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகின்றது என எடுத்துக்கொள்வது தவறாகும். அதேபோல தனித் தமிழீழத்திற்கு வழங்கும் ஒத்துழைப்பாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இந்தப் பேரணியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.கருணாநிதி `இலங்கை அரசு இவ் விடயம் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்தைகளை மேற்கொண்டு கூட்டு கடற் கண்காணிப்பை மேற்கொள்ள இணங்கினால் இந்திய மீனவர்களின் பாதுகாப்பை அதன் மூலம் உறுதிப்படுத்தலாம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்' எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் கருணாநிதியின் இந்தக் கருத்தில் அடங்கியுள்ள முக்கியத்துவம்தான் என்ன? இரு நாடுகளினதும் கடற்படைகள் இணைந்து கடலோரக் காவற்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறாரா? இல்லையேல் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கடற்கண்காணிப்புப் பணிகளுக்கு மீண்டும் உயிரூட்டவேண்டும் எனக் கூறுகின்றாரா? அல்லது ஒருவேளை பாக்கு நீரிணையில் பாதுகாப்புப் பணிகளில் இந்தியா ஈடுபட வேண்டும் எனக் கூறுகிறாரா? அல்லது இலங்கையுடன் இணைந்து கடற்கண்காணிப்புப் பணிகளில் இந்தியா ஈடுபடுவது தொடர்பாக இந்தியா இதுவரை அனுசரித்து வந்த கொள்கையினைக் கைவிடவேண்டும் எனக் கூறுகிறாரா? எனப் புரியவில்லை.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இந்திய விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பாக்கு நீரிணையில் இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கருத்தை வெளியிட்டிருந்தார். இருப்பினும் புதுடில்லி அரசு அது தொடர்பான கருத்து எதனையும் வெளியிடவில்லை. விடுதலைப் புலிகள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்வதை இந்தியா விரும்பவில்லை என்பதே மகிந்த ராஜபக்‌ஷவின் யோசனை தொடர்பாக இந்தியா அக்கறை கொள்ளாததற்கான காரணமாகவும் இருக்கக் கூடும். அல்லது இந்தியாவின் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன்சிங் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவது தேவையற்றது என நினைத்திருக்கலாம்.

ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜேன் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்பட்ட வேளையில் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்த மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்புகள் விலாவாரியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் அந்த அறிக்கையின் பின் இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன. இந்திய அமைதிப்படையினர் இந்நாட்டில் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டன. தமிழ் தேசியம் தொடர்பான யுத்தத்தின் பின்னர் இந்திய அமைதிப்படை இந்தியா திரும்பிய வேளையில் அந்தப் படையினரை கருணாநிதி வரவேற்க மறுத்துவிட்டார். எனவே இலங்கையில் உருவாகியுள்ள தற்போதைய நிலைமை தொடர்பாக கருணாநிதி கொண்டுள்ள நோக்கங்களை இந்தியர்களும் (குறிப்பாக தமிழர் அல்லாதவர்கள்) இலங்கையர்களும் அறிந்துகொள்ள முயற்சிப்பது இயல்பானதே.

எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தம் தொடர்பாக கருணாநிதி மிகக் கவனமாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அவரது கருத்துகள் வரையறைகளைக் கொண்டனவாகவே அமைந்துள்ளன. அரசியலைப் பொறுத்தவரையில் தி.மு.க.தலைவர்களுக்கு இது ஓர் சிறிய விடயமாகும். விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தலைவர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த காத்திருப்பதால் தி.மு.க.தலைவர்கள் தங்கள் அரசியல் அட்டவணையின்படியே செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி உரையாற்றியபோது விடுதலைப்புலிகளைத் தடைசெய்த விடயம் சரியானதா? அல்லது தவறானதா? என்பது விவாதத்திற்குரிய விடயமாயினும் அந்தத் தடை நடைமுறையில் இருக்கும்வரை அந்தச் சட்டத்தை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். சட்டத்தை மீறுபவர்கள் அதன் பலாபலன்களை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் தெளிவுபடத் தெரிவித்திருந்தார்.

கருணாநிதியின் இந்தக் கருத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் அடங்கியுள்ளன. தமிழீழத்திற்கான போராட்டத்திலிருந்து தூர விலகி நின்று தமிழ் போராட்டத்திற்கான வலுவான ஒத்துழைப்பை வழங்குதல், இலங்கைத் தமிழர் போராட்டத்துக்கு ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து ஒதுங்கியிருத்தல் மற்றும் தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் களவாகக் கொண்டு செல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்தல் ஆகியனவே இந்த மூன்று முக்கியமான விடயங்களாகும்.

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினையானது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க மேற்கொள்ளப்படும் போராட்டமாகக் கருதப்பட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் அரசியல் அட்டவணையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதை ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை என்றே அவர்கள் கருதுகின்றனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலின்போது 51 சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாகக் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இதை விடுதலைப் புலிகளுக்கோ அல்லது அவர்களது போராட்டத்திற்கோ ஒத்துழைப்பு வழங்குவதாகக் கருத முடியாது.

தமிழ் நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போக்கைக் கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டாலும் அங்குள்ள நிலைமைகளுக்கேற்ப அரசியல் ஆதாயங்களை தேடும் முயற்சிகளில் அவை ஈடுபடுகின்றன. மறுபுறத்தில் பாட்டாளி மக்கள் கட்சியானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியாகும்.

அந்தக் கட்சி தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பைத் தெரிவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கட்சி முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்தையடுத்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயத்தில் அமைதிபேணுகிறது. இருப்பினும் மக்கள் பொறுமையிழக்கும் சந்தர்ப்பங்களில் இக் கட்சி இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கள் கட்சியை வலுவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது.

இருப்பினும் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் விடுதலைப் புலிகளுக்குள்ள கடும் அனுதாபப்போக்கை இந்த அரசியல் நோக்கங்களின் மூலம் குறைக்க முடியாதுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அதிகமான அரசியல் கட்சிகளிடம் விடுதலைப் புலிகள் மீதும், தமிழீழத்தின் மீதும் அனுதாபம் இருப்பதைக் காணமுடிகிறது. ஒளிவு மறைவிலான இவ்வாறான அனுதாபத்தை எவரும் பொறாமைப்படும் அளவிற்கு சக்திமிக்க ஒத்துழைப்பாக வளர்க்கக்கூடிய ஆற்றல் தமக்குள்ளது என்பதை விடுதலைப்புலிகள் காட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல், நிதிவளங்கள் மற்றும் பிரசார உத்திகள் ஆகியன ஊழல் பேர்வழிகள் காரணமாகக் குழம்பியிருக்கும் தமிழ்நாட்டில் மீண்டும் அவர்களுக்கு அரசியல் ரீதியில் சாதகமான நிலைமைகளை உருவாக்கும்.

விடுதலைப் புலிகள் இராணுவ வழிமுறைகளில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர். திரைக்குப் பின்னாலும் அவர்களுக்கு அரசியல் செயற்பாடுகள் எவையுமில்லை. இதனால் அவர்கள் அரசியல் கருத்துகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை. விடுதலைப் புலிகள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வின்போது ஆற்றல் பெறுவதிலும் அழுத்தங்களைக் கொடுப்பதிலும் ஈடுபடுகின்றனர். இந்த நிலைமை அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமல்ல எனக் கருதுபவர்கள் `ஜேன்' ஆணைக்குழுவின் அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும்.

1989 இல் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மேற்கொள்வது இலகுவானது அல்ல. விடுதலைப் புலிகள் இலங்கை பாதுகாப்புப்படைகளின் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதுடன் அவர்களது கடல்வழி விநியோகங்கள் பாதுகாப்பற்றவை என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவேதான் விடுதலைப்புலிகளின் கவனம் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பியுள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் தமிழ்மக்கள் அனுபவித்துவரும் துயரங்களைக் கவனத்தில் கொள்ளாது இராணுவ நடவடிக்கைகள் தொடருமாயின் மீண்டும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்கு அழுத்தங்களைக் கொடுக்கக்கூடும். ஆனால், தமிழ்நாடு தனதுபாதுகாப்பு தொடர்பாகச் செயற்படத் தயாராயுள்ளதா? தற்போது இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தின்போது தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் விநியோக மையமாக ஆக்குவதை மாநில அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளாதிருக்கும் என்பதை நம்பமுடியாது.

கடந்த மாதம் 8 ஆம் திகதி கரையோரப் பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகளை அமைப்பது தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டுப் பாதுகாப்பு உயர் அதிகாரியொருவர் தெரிவித்த கருத்து இதை உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதற்கான காரணம் அங்கு நிலவும் உதாசீனப் போக்காகும். தங்களது ஆயுதத் தளபாடங்கள் கைப்பற்றப்பட்டு சந்தேகத்தின் பேரில் அவர்களது ஆட்கள் கைதுசெய்யப்பட்டாலும் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் தமிழ்நாட்டில் செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி வள்ளத்துடன் கைதுசெய்யப்பட்ட கடற்புலி உறுப்பினர் தெரிவிக்கும்வரை அந்த வள்ளத்தில் வெடிபொருட்கள் இருந்ததை எந்தவொரு பாதுகாப்பு அதிகாரியும் (இந்திய) அறிந்திருக்கவில்லை. வெடிபொருட்கள் அடங்கிய அந்த வள்ளம் பல நாட்களாக துறைமுகத்துக்குள்ளேயே தரித்து நின்றது. விடுதலைப் புலிகளுக்குத் தேவை இருந்திருந்தால் அந்த வள்ளத்தை வெடிக்கவைத்துத் துறைமுகத்தையே அழித்திருக்கலாம்.

விடுதலைப் புலிகளின் அனைத்துச் செயற்பாடுகளும் தமிழ்நாடு பொலிஸாரின் கழுகுக் கண்ணிலிருந்து தப்பாதிருக்க வேண்டும்.

அரசு வாத விவாதங்களில் ஈடுபடுவதிலும் பார்க்க பயங்கரவாதிகளுக்கு அல்லது பிரிவினை வாதிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதிலுள்ள பயங்கரத்தை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இல்லையேல் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தமிழ் நாட்டில் செயற்படுவார்களாயின் அவர்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகக் கூடும்.

(கட்டுரையாளர். இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி) தமிழில் நேமிக்கா

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.