Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபிதியின் கொள்கை விளக்கமும் யதார்த்தமும்

Featured Replies

ஜனாதிபிதியின் கொள்கை விளக்கமும் யதார்த்தமும்

 

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றவுள்ள உரையானது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய கொள்கைப்பிரகடன உரையாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தவுரையானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த உரையாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு அரசியல் சாசன ரீதியில் தீர்வு காணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் அந்த முயற்சிகள் அண்மைக்காலமாக முடங்கிய நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்துக்கு ஜனாதிபதி இவ்வுரையின் மூலம் ஏதாவது சமிக்ஞை காட்ட முனைவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

தேசிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைகளுக்கு தீர்வு காணும் உரையாகவோ அல்லது தேசிய அரசாங்கத்தை நீடிப்பதற்கான ஒரு உரையாகவோ இது அமையலாம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு பங்கம் ஏற்படாமல் இக்கொள்கை விளக்கவுரையை பயன்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் தமிழ் மக்கள் இவ்வுரை மீது அதிக கவனம் செலுத்தும் நிலையும் காணப்படுகிறது. அதே நேரத்தில் இவ்வுரையை பயன்படுத்தி தேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளை கூட்டு எதிரணியினர் இரகசியமாக முன்னெடுத்து வருவதாக செய்திகள் கசிகின்றன.

அரசின் எதிர்கால கொள்கைகள், திட்டங்கள், முன்னெடுப்புக்கள் தொடர்பில் தீர்க்கமான அதேவேளை காத்திரமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் அவர் அளிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு காணப்படும் அதேவேளை அண்மைக்கால அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்க்கமான ஒரு முடிவைக்காணும் வகையில் அவரது உரை அமையலாம் என்பதும் பொதுவாக எதிர்பார்க்கப்படும் விடயமாகும்.

இவ்வாறான சூழலில்தான் நல்லாட்சி அரசாங்கத்தின் 4ஆவது அமைச்சரவை மறுசீரமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை 01. 05. 2018. நடைபெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நல்லாட்சி அரசாங்கத்தினுடைய கூட்டுத்தன்மைக்கு ஆப்பு வைக்கும் முறையில் தேசிய அரசாங்கத்தில் பங்குத்தன்மை வகிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் மறுபக்கம் சுதந்திரக்கட்சிக்குள்ளும் பிளவுகளையும் பிரிவுகளையும் உண்டு பண்ணிவிட்டது என்ற விடயம் இலங்கை அரசியலில் சில மாற்றங்களை உருவாக்கி வருகிறது என்பது அறியப்பட்ட விடயம்.

மே மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதியவர்கள் புதியதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் உண்மைத்தன்மை யிருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில், தேசிய அரசாங்கத்துக்குள் நெருக்கடிகள் உள்ளன. எனினும் மே 8 ஆம் திகதியிலிருந்து புதிய பயணம் ஆரம்பமாகும். பாராளுமன்ற அமர்வின்பின் கட்சியின் புதிய மாற்றங்கள் என்னவென்பதை அறிவீர்கள் என பீடிகை போட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

மிகக்குறுகிய காலத்தில் 4 முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்த வரலாறு இதுதான் இலங்கை அரசியலில் முதல் தடவையாக இருக்க வேண்டும். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பதவி நிலை மாற்றங்களுக்கும் சுதந்திரக்கட்சிக்குள் அமைச்சரவை மாற்றங்களுக்கும் காரணமாகிப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் ஒட்டுமொத்த அரசியலுக்கும் சவாலாகவே மாறியுள்ளது.

கடந்த வாரம் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் கொண்டு வரப்பட்ட பதவி நிலை மாற்றங்களென்பது தலைமை மீது கொண்ட அதிருப்தியினாலும் நம்பிக்கையீனங்களாலும் ஏற்பட்டது என்பது பட்டவர்த்தனமாக தெரியப்பட்ட விடயமாக இருந்தாலும் அந்த அதிருப்திகளை சமாளித்து சமநிலைப்படுத்தவே ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற விடயம் வெளிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மறு சீரமைப்பு மற்றும் செயற்பாட்டுக்குழுவின் முடிவின் படி கட்சித் தலைவர் பதவி உட்பட கட்சியின் ஏனைய முக்கிய பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்ற ஆலோசனைகளுக்கும் மறு சீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கும் அமைய கட்சியின் பிரதித்தலைவராக சஜித் பிரேமதாசவும் உபதலைவராக ரவி கருணாநாயக்கவும் பொதுச் செயலாளராக அகிலவிராஜ்காரியவசமும் தவிசாளராக கபீர் ஹாஷிமும் பொருளாளராக ஹர்ஷ டி சில்வாவும் நியமிக்கப்பட்டிருப்பதுடன் இன்னும் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டுமென்ற உட்கட்சிப்போராட்டங்கள் நடந்த வண்ணமேயுள்ளன. அது மட்டுமின்றி இந்த பதவி நிலை மாற்றங்கள் நடந்த பின்பும் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை ஆசனக்காரர்கள் மீண்டும் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களை புறக்கணிக்கப்போவதாகவும் கட்சி தலைமையின் கட்டளைகளுக்கு தாம் செவிசாய்க்கப்போவதில்லையெனவும் முரண்பட்டு நிற்பதைக்காணக்கூடி யதாகவுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவையிலும் மாற்றங்கள் நடந்தேறியுள்ளன.நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இவர்களில் 6 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் கள், பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாகவும் எதிரணியில் அமர்வதற்கும் அங்கீகாரம் கேட்டுள்ள நிலையிலும் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பகுதியளவில் அமைச்சரவை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான புதிய நியமனங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த அமைச்சரவை மாற்றம், கட்சியின் பதவி நிலை மாற்றங்கள் என்பன வழமையாக நடைபெறும் மாற்றங்களாகவோ அல்லது புதிய விடயமுமல்ல எனப்பார்க்கப்படினும் தேசிய அரசாங்கம் ஆரோக்கியம் உடையதாகவில்லையென்பதையே காட்டுகிறது.

கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளும் விரிசல்களும் தேசிய அரசாங்கத்தின் பிளவை வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைகிறதே தவிர 2020 ஆம் ஆண்டுவரை தேசிய அரசாங்கம் நீடித்து நிலைக்கும் என்ற ெதளிவான பாதையைக்காட்டுவதாக இருக்கவில்லை. 2020 ஆம் ஆண்டுவரை தேசிய அரசாங்கம் நீடிக்குமென பிரதமராலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் இரா. சம்பந்தன் அவர்களாலும் அடித்துக்கூறப்பட்டாலும் அதற்குரிய சூழ்நிலை பெரும்பாலும் நலிவடைந்து வருவதையே அனுமானிக்க முடிகிறது.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் தேசிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி– ஐக்கிய தேசியக்கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதைக்குழப்ப பல்வேறு சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின் றன.

எனினும் 2020 ஆம் ஆண்டுவரை எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் தேசிய அரசாங்கத்தை நடத்தியே செல்வோமென கூறியுள்ளார்.

எவ்வாறு உறுதியுடன் பேசப்பட்டு வந்தாலும் ஆளும் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்கள் உருவாகிக்கொண்டிருப்பது வெளிப்படையாகவே அடையாளம் காணக்கூடிய விடயங்களாக இருக்கிறது.

அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசன முன்னெடுப்புக்கள் தேக்க நிலையில் உள்ளன. அரசாங்கம் அந்த முயற்சிகளை கைவிட்ட நிலையே காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பகிரங்கமாகவே முன்வைத்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான போராட்டங்களில் சர்வதேசமும் பங்களிப்பு நல்கவேண்டுமென அவர்கள் அண்மைக்காலமாக கோரி வருவது தேசிய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையிழப்புக்களையே காட்டுகிறது. இவ்வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்ற அழுத்தத்தை அவர்கள் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இதன் மறு அர்த்தம் யாதெனில், தேசிய அரசாங்கம் நீடித்துச் செல்லக்கூடிய சுமுகமான சூழ்நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது என்ற உண்மையையே இது புலப்படுத்தி நிற்கிறது.

தேசிய அரசாங்கம் உருவாகிய 2015 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒரு வருடத்துக்குள் முன்வைக்கப்பட வேண்டுமென்று எவ்வாறு கோரினார்களோ அந்த அழுத்தத்தை மீண்டும் கொடுக்க வேண்டிய நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இவ்வருட இறுதிக்குள் முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோஷம் இப்பொழுது முன்வைக்கப்படுகிறது. கடந்த மே தினக்கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 27 தீர்மானங்களை அரசுக்கு முன்வைத்திருப்பதுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை மிகவிரைவில் இந்த ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டுமென அரசிடமும் அரசியல் கட்சிகளிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்திடமும் கோருகிறோமென கோரிக்கை விடுத்துள்ளது.

இது இவ்வாறிருக்கிற நிலையில் மறுபுறத்தில் ஜே.வி.பி.யினர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் வகையில் 20 ஆவது சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற் கொண்டு வருவதாக செய்திகள் பரவலாக பேசப்படுகிறது. அரசாங்கம் பலவீனம் அடைந்துள்ள இன்றைய நிலையில்

சர்வதேச சக்திகளை பலப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போதுள்ள பலவீனமான அரசியல் சூழலில் ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாயின் பாரிய நெருக்கடிகளை அரசு சந்திக்க வேண்டிவருமென பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக் ்ஷ தெரிவித்திருந்தார். உயிரை தியாகம் செய்தேனும் ஜே. வி. பி.யின் 20 ஆவது திருத்தப் பிரேரணையை தோற்கடிப்போமென தேசிய சுதந்திர முன்னணியினர் சூளுரைத்துள்ளனர்.

இந்த போக்குக்கு மத்தியில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பற்றிய நகர்வுகள் வேகப்படுத்தப்படுகின்றன. ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற உட்கட்சிப்போராட்டம் வலுவடைந்து வருகிற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கொட்டப்பட்டு வருவதைக்காணுகிறோம்.

சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படுவாரா அல்லது அவருக்கு பதிலீடு கண்டுபிடிக்கப்படுமா என்ற போட்டி நிலைகள் சுதந்திரக்கட்சிக்குள் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் தற்போதைய ஜனாதிபதியவர்கள் தான் பதவியேற்ற காலத்திலிருந்து கூறிவருகிற செய்தி யாதெனில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிற்கப்போவதில்லை புதியவர்களுக்கு இடம்கொடுக்கப்போகிறேன் என்பதேயாகும்.

இவை ஆளும் தரப்பு சார்ந்த சர்ச்சைகளாக இருக்க இவற்றுக்குப்புறத்தே கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டிருப்பதும் தேசிய அரசாங்கத்துக்கு தலையிடி தருகின்ற விடயமாகும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ்ஷ தனது சகோதரர் மஹிந்தராஜபக் ஷ ஆசீர்வதிப்பாராயின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யான் களமிறங்க காத்திருக்கிறேனென கூறிக்கொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் அண்ணனார் வாய்திறக்கிறாரில்லை. காரணம் முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக் ்ஷவுக்கும் சிலவேளைகளில் ஆசையிருக்கலாம்.

தேசிய அரசாங்கத்தைப்பொறுத்தவரை அதனுடைய உயிர்ப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து கொண்டு போகிறதென்பது வெளிப்படையாகவே தெரியப்படுகிற விடயம். இவ்வாறான நெருக்கடியான நிலையில் அரசியல் தீர்வு விவகாரத்துக்கு என்ன நடக்கப்போகிறதென்பது சந்தேகத்துக்குரிய விடயமாகவே ஆகிக்கொண்டிருப்பதாக பேசப்படுகிறது.

அரசியல் சாசன முன்னெடுப்புக்கள் கடந்த 6 மாத காலமாக தேக்க நிலைபெற்ற நிலையிலேயே காணப்படுகிறது. மீண்டும் அரசியல் சாசன முன்னெடுப்புக்கள் மேற் கொள்ளவிருப்பதாக அரச தரப்பினர் அறிவித்துள்ளனர். அறிவித்தபோதும் இந்த அறிவித்தல் எந்தளவுக்கு சாத்தியப்பாடு கொண்டதாக அமையுமென்று கூறமுடியாது. மிஞ்சி மிஞ்சிப்போனால் இன்னும் 19 மாதங்களே தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலமாக இருக்க முடியும். அடுத்த வருடம் டிசம்பர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரவாரம் தொடங்கிவிடும். ஜனாதிபதி வேட்பாளர்களாக யார் நிறுத்தப்படவிருக்கிறார்கள். அவர்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எப்படியிருக்கப்போகிறது என்பதுபற்றி இப்பொழுது யாராலும் ஆருடம் கூறமுடியாது.

இந்த அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு அரும்பாடுபட்ட சிறுபான்மை சமூகத்துக்கு என்ன பரிசை இன்றைய அரசாங்கம் அளித்து விட்டுச் செல்லப்போகிறதென்பது பற்றி தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. அதுவுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால போக்குகளை நாடி பிடித்துப்பார்ப்பின் கடந்த காலத்திலிருந்த உறுதிப்பாடுகளிலிருந்து அவர் குலைந்து கொண்டிருக்கிறார் என்ற சந்தேகங்களே தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதுவுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் ஆரம்ப காலத்திலிருந்த புரிந்துணர்வுகளும் நெருக்கங்களும் பலவீனமடைந்துள்ளன என்பதற்கு பல உதாரணங்கள் காட்டப்படுகிறது.

புதிய அமைச்சரவை மாற்றங்கள், பதவி நிலை மாற்றங்கள், தேசிய அரசாங்கத்தை பலப்படுத்துகிறதோ என்னவோ தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை பெற்றுத்தரும் ஒரு சூழ்நிலையை கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உருவாக முடியுமா என்பதுதான் கேள்வி. மே 8 ஆம் திகதி ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையைப்பொறுத்தவரை இரண்டு விவகாரங்களுக்கு முடிச்சவிழ்க்கும் உரையாக அமையவேண்டுமென்பதுதான் யாவரும் எதிர்பார்க்கிற விடயம்.

ஒன்று தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கக்கூடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உருவாக்கப்படுமா--? தேசிய அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தமக்குள் மீண்டும் இணக்கப்பாட்டை உண்டாக்கி வலுவான அரசாட்சியை முன்னெடுத்துச் செல்ல விட்டுக் கொடுப்புக்களும் இணக்கப்பாடுகளும் வருமா என்பது பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமானதாகவும் மறுபுறத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அரசியல் சாசன முன்னெடுப்புக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்படுமா என்பது பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவதா கன விடயங்களாகும்.

வழிப்படுத்தல் குழு, உபகுழுக்கள் ஆகியன நியமிக்கப்பட்டு அவை தமது அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பித்து இருக்கிறபோதும் அரசியல் சாசனத்துக்குரிய வரைபுகளோ அல்லது திட்டங்களோ இன்னும் முன்னெடுக்கப்ப டவில்லையென் பதே உண்மை நிலையாகும். அதுவுமன்றி ஒற்றை ஆட்சி முறையிலான யாப்பா அல்லது சமஷ்டி வடிவிலான யாப்பா புதிய அரசியல் சாசனமாக கொண்டுவரப்பட வேண்டுமென்பது தொடர்பில் வழிப்படுத்தல் குழு தனது முன்மொழிவுகளையோ அல்லது ஆலோசனைகளையோ தெரிவிக்கவில்லை. அதுவுமன்றி கட்சிகளுக்கிடையில் இன்னும் தெளிவான உடன்பாடு காணப்படவில்லை.

அதுவுமன்றி தேசிய அரசாங்கத்தில் அங்கம்பெறும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சிகளுக்கிடையில் இதுபற்றிய தெளிவான முடிவு எட்டப்படவில்லை. இவ்வாறு இருக்கும் நிலையில்தான் தேசிய அரசாங்கத்துக்கிடையில் கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டு குழம்பிப்போன நிலையில் நம்பிக்கையில்லாப்பிரேரணை உள்ளூராட்சி தேர்தலில் பின்னடைவுகள் போன்ற சிக்கல் நிலைகள் உருவாகி சற்று தெளிவு காணப்பட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதியின் கொள்கை விளக்கம் இடம்பெறவுள்ளது.

இக்கொள்கை விளக்கமானது தேசிய அரசை பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமென்பதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதைக் காண முடிந்தாலும் சுதந்திரக்கட்சிக்குள்ளும் ஐக்கிய தேசியக்கடசிக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் ஒருபுறமாகவும் மறுபுறம் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சுதந்திரக்கட்சியினருக்குமிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நெருக்கடி நிலைகள் தேசியப்பயணத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே விமர்சிக்கப்படுகிறது.

தேசிய அரசுக்கு நெருக்கடி நிறைந்த ஒருகால கட்டமாக இன்றைய நிலை காணப்படுகிறபோதும் அதை வெற்றிகொள்ளும் முயற்சியில் அல்லது சமாளிக்கும் கைங்கரியத்தில் இருகட்சிகளின் தலைமைகளும் பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் கடுமையாக தம்மை அர்ப்பணித்து வருகிறபோதும் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் இன்றைய நெருக்கடி நிலையை தமக்கு சாதகமாக்க கூட்டு எதிர்க்கட்சியினரும் அரச எதிர்ப்பு சக்திகளும் தீவிரமாக முயன்று வருகின்றன என்பது வெளிப்படையாக தெரிகிறபோதும் ஜனாதிபதியின் 8 ஆம் திகதியின் கொள்கை விளக்க பிரகடனம் சாதுரியமான சாணக்கியமான முடிவை தருமென்பது எதிர்பார்க்கப்படும் விடயமாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-05#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.