Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்!

Featured Replies

ரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்!

 

 

 
prakah

மகாபலிபுரம் அருகே மரங்கள் சூழ்ந்த தோட்டம். மெல்லிய காற்று. நிலவொளி தவழும் பௌர்ணமி இரவு. ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அட, அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை... பேரெடுத்து உண்மையச் சொல்லி பிழைக்க முடியலை... இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியலை’ ‘பலே பாண்டியா’-வின் கண்ணதாசனின் பாடல் ஒலிக்க வெடித்துச் சிரிக்கிறார் பிரகாஷ்ராஜ். “கவியரசர் என்னிக்கோ எழுதின வரிகள். இன்னிக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு இல்ல...” என்று கேட்கிறார். கருத்துச் சுதந்திரம், மதவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பன்முகம் காட்டும் பிரகாஷ்ராஜ், “எந்தக் கேள்வின்னாலும் கேளுங்க... எல்லாத்துக்கும் பதில் சொல்வேன்...” என்று நாம் கேட்ட அத்தனை கேள்விகளையும் அச்சமோ தயக்கமோ இன்றி எதிர்கொண்டார்.

 

 

ஆக, சினிமாவில் இருந்து அரசியல். இப்போது இதுதான் ‘ட்ரெண்ட்’ இல்லையா?

‘இருட்ல இருக்கேன்... எப்படிக் கவிதை எழுதுறதுன்னு கேட்க மாட்டேன். இருட்டைப் பத்தி கவிதை எழுதுவேன்’னு கவிஞர் ப்ரெட் சொன்னார். புலம்பறதால ஒண்ணும் நடந்துடாது. புது மாற்றத்தை நம்மகிட்ட இருந்துதான் தொடங்கியாகணும். வசதியான வீடு, காஸ்ட்லியான காரு, பல மொழிகளில் நடிப்பு, காதல், கவிதை, நண்பர்கள்னு ரொம்ப ஜாலியா, சுயநலமா வாழ்ந்திட்டிருந்த எனக்குக் குற்றவுணர்ச்சி வந்துச்சு பாருங்க, அங்க வந்துருச்சி பொறுப்பு. அறம்ங்கிறது வேற ஒண்ணும் இல்ல. நம்ம குற்றவுணர்ச்சிதான். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவர், பயணிகளை ஏத்திக்கிட்டு பஸ்ஸை நெடுஞ்சாலையில வேகமா ஓட்டிட்டுப் போற மாதிரி நம்ம ஆட்சியாளர்கள் நடந்துக்குறாங்க. ஆனா, எங்கக் குதிக்கணும்னு மட்டும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவு இருக்கு. நாமதான் பின்பாட்டு பாடிக்கிட்டு ‘எல்லாம் சுபிட்சமா’ இருக்குனு நினைச்சிட்டு இருக்கோம். என்னைக் கலைஞன்னு சொல்லிக்கிறேன். ஆனா, பொறுப்பா இருக்கேனாங்கிற கேள்விக்கான பதில்தான் என்னோட அரசியல் பயணம்.

 

உங்கள் தோழி கௌரி லங்கேஷ் மரணத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கோபமா?

அது மரணம் இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடந்த படுகொலை. மரணமா இருந்தா கடந்துவந்துட முடியும். கொலையைப் பார்த்துட்டு எப்படி வர முடியும்? கௌரி லங்கேஷ், துணிச்சலும் சமூக அக்கறையும் கொண்ட நேர்மையான பத்திரிகையாளர். மதவாத சக்திகளைத் துணிச்சலாக விமர்சனம் செய்ததற்காகவே கெளரியை வீட்டு வாசலில் வெச்சு சுட்டுக் கொன்னாங்க. கெளரியோட மரணத்தை என் கையில் தூக்கிச் சுமந்து சவக்குழியில் இறக்கி வெச்சிருக்கேன். கௌரியோட அப்பா, என் குருநாதன் லங்கேஷைப் புதைக்கும்போது அவருக்குப் பிடிச்ச ‘ஸ்டெபிக்ராஃப்’ போட்டோவையும் ஒரு பாட்டில் ரம்மையும் சேர்த்துப் புதைச்சோம். செத்துப்போனவருக்கு இதெல்லாம் போய்ச் சேராதுனு அறிவுக்குத் தெரியும். அது நிறைவான மரணம். ஆனா, கௌரியோட உடலை சவக்குழியில் இறக்கி வைக்கும்போது என் உடம்பும் மனசும் சேர்ந்து நடுங்குது. எங்க அழுகைக்கு நடுவுல அவளைச் சுட்டுக் கொன்னவங்களோட சிரிப்பும் கேட்குது. கௌரியோட சாவைவிட, அவங்களோட கொண்டாட்டம் பயத்தைத் தருது. ‘இதையெல்லாம் அமைதியா வேடிக்கைப் பார்க்கப் போறோமா?’ங்கிற கேள்வி நெஞ்சை அறுக்குது. அந்த வினாடிதான், அவளைப் பொதைக்கலை... விதைக்கிறோம்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த உணர்வு எனக்கு மட்டுமில்லை. கௌரியோட இறுதிஊர்வலத்துல கலந்துகிட்ட ஒவ்வொருத்தருக்கும் இருந்துச்சு. கௌரி சாவுக்குப் பதில் கேட்கிறதின் மூலம், என் வாழ்வுக்கும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிற அத்தனை பேருக்கும் பாதுகாப்பு தேடுறேங்கிறதுதான் உண்மை.

 

கேள்விகளுக்குப் பதில் கிடைக்கிறதா?

ஓ... நல்லாவே கிடைக்குதே... ‘அநியாயத்தைக் கண்டிக்காம, மௌனமா இருக்கிறது சரியா?’னு பிரதமரைப் பார்த்து ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். ‘நீ இந்து விரோதி. அதனால இந்தியாவுக்கும் விரோதி’ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நான் பேசிட்டு வந்த இடம் தீட்டு ஆகிடுச்சின்னு பசுவோட சிறுநீர் தெளிச்சு சுத்தப்படுத்தினாங்க. ‘இதுதான் தூய்மையான பாரதமா?’னு கேட்டேன். ‘கௌரிக்கு வந்த நிலைமை உனக்கும் வேணுமா?’னு கொலை மிரட்டல் பதிலா வர ஆரம்பிச்சது. ‘இதுதான் பாதுகாப்பான பாரதமா?’னு கேட்டேன். ‘வருமான வரித்துறையில் இருந்து, ‘வரி எல்லாம் ஒழுங்கா கட்றீங்களா’னு பதில் கேள்வி கேட்கிறாங்க. கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டிய பொறுப்புல இருக்கிறவங்க, ‘நீ ஏன் இதையெல்லாம் கேட்கிற?’னு குரல்வளையை நெரிக்கிறாங்க.

 

நீங்கள் குறிப்பா யாரிடமாவது கேட்க விரும்புகிற கேள்விகள் உண்டா?

அடடா... ஒண்ணா, ரெண்டா... நிறைய இருக்குங்க. வரிசையா கேட்கிறேன். இதை எல்லாம் என் கேள்விங்கிறதைவிட மக்களோட கேள்வின்னு சொல்லலாம். தூத்துக்குடியில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டவங்களுக்குப் பிரதமர் மோடி ஏன் இரங்கல்கூட தெரிவிக்கல? ஏன் தமிழர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா... இல்ல, அவர் தமிழர்களுக்குப் பிரதமர் இல்லையா? இனிமே இந்தியாவோட தேசிய விலங்கு புலியா, பசுவா? சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு பல மாதங்கள் ஆகியும், சசிகலா முதல்வராக முயலும்போது தீர்ப்பு வெளியானது ஏன்? மாண்புமிகு பிரதமர் அவர்களே இதுக்கெல்லாம் பதில் சொல்வீங்களா? முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த சரியான தேதி எது? தமிழக ஆட்சியாளர்களுக்கு இது ஒரு கேள்வி போதும்னு நினைக்கிறேன். அதுக்கே அவங்க மேலிடத்தில் கேட்டுதான் பதில் சொல்லணும். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சார்கிட்ட கேட்கிறேன்... மாநிலத்தில் ‘சிஸ்டம் சரியில்லை’னு கொதிச்சிப்போய் அரசியலுக்கு வந்திருக்கிற நீங்க, தமிழ்நாட்டுல பினாமி அரசாங்கம் நடத்துற பாஜக-வை ஏன் ஒரு வார்த்தைகூட கண்டிக்கலை? மாநிலத்துல சிஸ்டம் கெட்டுப்போயிருச்சினா, மத்தியில் சரியா இருக்கா? வணக்கம், ‘உலக நாயகன்’ கமல் சார்.. இது உங்களுக்கு... பலவீனமான மாநில அரசை சாட்டையை எடுத்து விளாசுறீங்க. ஆனா, மத்திய அரசு பத்தி மட்டும் ரொம்ப மென்மையா விமர்சனம் செய்றீங்க... ஏங்க? இப்படி நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டுல கேள்வி கேட்டா வாயிலே சுடுவோம்னு இப்ப பதில் சொல்லி இருக்கு தமிழக அரசு. இருக்கு... அதுக்கும் இருக்கு, துப்பாக்கிக் குண்டுகளைவிட மக்களோட கேள்விகளுக்கு சக்தி அதிகம்னு புரிய ரொம்ப நாள் ஆகாது!

 

மற்ற கட்சிகளைவிட பாஜக-வை அதிகமாக விமர்சனம் செய்வது ஏன்?

மற்ற கட்சிகளைவிட மதவாதத்தை வைத்து ஆட்சி செய்கிற பாஜக மிகவும் ஆபத்தானது. அதனால்தான் அதை அதிகமா எதிர்க்க வேண்டியிருக்கு. ஒரு சிறந்த பத்திரிகைக்காரன் எப்பவுமே எதிர்க்கட்சியாதான் இருக்கணும்னு லங்கேஷ் சொல்வாரு. இளைஞனா இருக்கும்போது ஆழமா மனசுல பதிஞ்ச விஷயம் இது. எந்தக் கட்சி தப்பு பண்ணாலும் ஒரு குடிமகனா நிச்சயம் எதிர்ப்பேன்.

 

தூத்துக்குடி போராட்டம், சமூக விரோதிகளால் வன்முறையானது என்று நடிகர் ரஜினி ஆவேசமாகச் சொல்லியிருக்கிறாரே?

பாஜக தலைவர்களின் குரல் என்னவோ, அதையே ரஜினிகாந்த் பிரதிபலிக்கிறார். ஆகாதவர்களை தேச விரோதி, சமூக விரோதி என்று முத்திரை குத்துவது ஆபத்தானது. கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். 100 நாட்கள் மக்கள் அற வழியில் போராடும்போது, ரஜினி என்ன செய்துகொண்டிருந்தார்? மக்களோடு மக்களாக நின்று அற வழியில் போராட்டத்தை நடத்த வேண்டியதுதானே? அவரை யார் தடுத்தார்கள்? நீண்டகாலமாக நடக்கும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் கண்டுகொள்ளாத அரசுகளும், அதை அமைதியாக வேடிக்கைபார்த்தவர்களும்தான் என் பார்வையில் சமூக விரோதிகள்.

http://tamil.thehindu.com/opinion/columns/article24071557.ece

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.