Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம்!”- ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ்

Featured Replies

”இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம்!”- ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ்

 

``பாசிச சக்திகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை. மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் இவர்களுடைய இறுதிநாள்கள் எப்படி இருக்கும் என்பதை மனித இனம் நிச்சயம் பார்க்கும்.”

”இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம்!”- ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ்
 

 

நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப்பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும்.

– பெரியார் (விடுதலை:23-8-1940)

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-இல், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடந்த பேரணியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு வன்முறையில் பொதுமக்கள் 13 பேர் (அரசு கணக்குப்படி) உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்தது. மற்றொரு பக்கம் போராட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகக் காவல்துறையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம், சென்னை கவிக்கோ மன்றத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் பிரகாஷ்ராஜ், மனிதநேயச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், பத்திரிகையாளர்கள் பீர் முகம்மது, அருள் எழிலன், வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், வழக்கறிஞர் அருள்மொழி, மீனவர் சங்கத் தலைவர் பாலன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்ரார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்கள் அஞ்சலிக்காக முன்னிலைப்படுத்தப்பட்டு நிகழ்வு தொடங்கியது.

 

 

பிரகாஷ்ராஜ் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்ட ’மறக்கமுடியுமா தூத்துகுடியை!’ நிகழ்வு

``நம்மைச் சுடுபவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்கப் போகிறோமா?"

``இந்தக் கூட்டம் வெறுமனே அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமல்ல" என்று தன் உரையைத் தொடங்கினார் பத்திரிகையாளர் பீர் முகம்மது. ``வரைவு வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. சென்னை மாவட்ட வாக்குச்சாவடிகள் மூவாயிரத்துக்கும் கீழாகக் குறைந்ததாக நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிக்கக்கூடிய நிலையில் எப்படி வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறையும்? இதுகுறித்து நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம். உதாரணத்துக்கு, சென்னைத் துறைமுகம் பகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 41,500 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். ஓட்டுரிமை இருந்தால்தானே மக்கள் கேள்வி எழுப்ப முடியும்?  ஓட்டுரிமையே இல்லாமல் செய்துவிட்டால் அவர்களால் கேள்வி எழுப்ப முடியாது என்கிற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கும் பின்னணியும் இதுதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே, மத்தியில் இருக்கும் அரசு இப்படியான மறைமுகச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ஆனால், இவர்களை ஆட்சியில் மீண்டும் அமரவைக்கப் போகிறோமா? தூத்துக்குடி சம்பவத்தைப் போன்று மீண்டும் ஒரு கொடூரம் நிகழாதிருக்க என்ன செய்ய வேண்டும்?. நம்மைச் சுடுபவர்களின் கையில் மீண்டும் அந்த அதிகாரத்தைக் கொடுக்கப் போகிறோமா என்பதை முடிவெடுக்கும் தொடக்கப்புள்ளியாக இந்தக் கூட்டம் இருக்கட்டும்.

 

 

இப்போதும், பின்வாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்க மத்திய அரசின் உதவியுடன் போராடிக்கொண்டிருக்கிறது வேதாந்தா குழுமம். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை எல்லாம் இதற்காக அணுகிக்கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சிக்கு எதிராக தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று பொய்ப் புகார் அளிக்கிறார்கள். இதனை நாம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது" என்றார். 

அ.மார்க்ஸ்

``சிதறிய மூளையை அள்ளி எடுத்துக் கடலில் போட்டோம்...!”

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, அங்கு முதன்முதலாகச் சென்ற உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றிருந்தவர் மனித நேயச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

அவர் பேசுகையில், ``துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாள் தூத்துக்குடியிலிருந்து பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர், `தூத்துக்குடிப் போராட்டம் சாதி, மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்தது. ஆனால், சூழ்ச்சியாளர்கள் குறிப்பிட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தூண்டுதலின்பேரில் நடந்ததாகச் செய்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்குக் கவலை அளிக்கிறது’ என்றார். போராட்டத்தின் தொடக்கத்தில் அந்த மக்கள் யாரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதுநாள்வரை ஆலையை மூடவேண்டும் என்கிற கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததால், அவர்கள் ஆலையை மூடும் கோரிக்கையை மறந்துவிட்டிருந்தார்கள். ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை நிறுத்தவேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. ஆனால், நாள்கள் கடக்க கடக்க மக்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, அவர்களது இந்தக் கோரிக்கை மீண்டும் உயிர்பெற்றது. போராட்டம் என்றால் அதில் கற்கள் விழுவது நடப்பதுதான். ஆனால், அதற்குப் பதிலாக துப்பாக்கியைத்தான் போலீஸார் ஏந்த வேண்டுமா?. துப்பாக்கியை ஏந்தினாலும் இப்படித்தான் சுட்டுக்கொல்ல வேண்டுமா?

இறந்தவர்கள் அத்தனை பேரின் நெஞ்சிலும் குண்டு துளைத்திருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களைத் தாக்க வந்ததாலேயே, மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்கிறார்கள். தன் அண்ணன், அண்ணி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாகப் பேரணியில் பங்கேற்ற ஸ்னோலின் போன்றவர்களா ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பார்கள்? ஆட்சியர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் என்றால், அவர்கள் எதற்காகக் குழந்தைகளை அழைத்து வரவேண்டும்?. சுடப்பட்டு இறந்தவர்களில் வினிதா என்று கூறப்பட்டவரின் குடும்பத்தைச் சந்தித்தோம். திருமணமான தனது மகளைப் பார்ப்பதற்காக, தான் சமைத்த மீன்களை எடுத்துக்கொண்டு மகள் வீட்டுக்குச் சென்றவரை வீடு தேடிச்சென்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டு அவரது முகத்தைத் துளைத்து மூளையைச் சிதறடித்திருந்தது. அவருடைய உடலே அடையாளம் காணமுடியாத அளவுக்கு இருந்தது. தன் அம்மாவைக் காணவில்லை என்று தேடிவந்த மகளுக்கு முதலில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட விவரம் தெரியவில்லை. இத்தனைக்கும் சுடப்பட்ட உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்படும்போது, அவர் அருகிலேயேதான் இருந்திருக்கிறார். அப்போது, வினிதாவின் தலையிலிருந்து மூளைச் சதை சாலையில் விழுந்துள்ளது. மருத்துவமனை பிணவறைக்குச் சென்றதும்தான், அவருடைய கழுத்தில் இருந்த சங்கிலியை அடையாளமாக வைத்து வினிதா என்று கண்டறிந்திருக்கிறார் அவரது மகள். உடனடியாக அவர் செய்த காரியம் என்ன தெரியுமா? அங்கே சாலையில் சிதறிக்கிடந்த தன் தாயின் மூளைச் சதையை அள்ளி எடுத்துச்சென்று கடலில் போட்டதுதான். நாய் எதுவும் அதைச் சாப்பிட்டுவிடக் கூடாது என்று அவர் அப்படிச் செய்ததாகச் சொன்னபோது, என் உடல் நடுங்கியது. இப்படியான பயங்கரவாதத்தைத்தான் காவல்துறை அங்கே அரங்கேற்றியிருக்கிறது” என்றார். 

 ``துரத்தி வந்து கேள்வி கேட்போம்!”

பிரகாஷ்ராஜ்நேரடியாகப் பேசப் போவதால் நான்கே வார்த்தைகளில் பேசினால் போதும் என்று தன் பேச்சைத் தொடங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். ``பல வருடங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றி ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப் பற்றி ஆவணப்படுத்துவதற்காக, லண்டனிலிருந்து ஒரு எழுத்தாளர் இலங்கைக்குச் செல்கிறார். கடலில் பல கிலோமீட்டர் தூரம் பயணப்பட்டதும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடைய எலும்புகள் அங்கே தெரிகின்றன. அதைப் பார்த்து அந்த எழுத்தாளர் அச்சம் கொள்கிறார். அதைப் பார்த்ததும் அவரை அழைத்துச் சென்ற வழிகாட்டி `இதைப் பார்த்ததும் உங்களையும் அறியாமல் ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது இல்லையா? அந்த பயத்தைதான் அவர்கள் இங்கே விதைக்க முயற்சி செய்கிறார்கள்’ என்றார். அதே பயத்தைத்தான் தூத்துக்குடி மரணங்களின் வழியாக இங்கே தமிழகத்தில் ஆட்சியாளர்கள் விதைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். எந்த வரலாற்றிலும் இப்படியான பாசிச சக்திகள் நிம்மதியாக வாழ்ந்ததாகப் பதிவுகள் இல்லை. மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் இவர்களுடைய இறுதிநாள்கள் எப்படி இருக்கும் என்பதை மனித இனம் நிச்சயம் பார்க்கும். இவர்களிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தூத்துக்குடியில் கொல்லப்பட்ட 13 பேரை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம்! 

அந்த 13 விதைகளும் பல ஆயிரம், பல லட்சம் விதைகளாக மாறி இவர்களைத் துரத்தித் துரத்திக் கேள்வி கேட்கும். இங்கே மோடியாக இருந்தாலும் அ.தி.மு.க.வாக இருந்தாலும் இதரக் கட்சிகளாக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான். இவர்கள் தேர்தல் அரசியலில் இருக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள்; மக்களுக்கானவர்கள் அல்ல. 13 பேரின் உயிரைக் குடித்த ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு பற்றி எவ்விதக் கவலையும் தெரிவிக்காமல் `மதகுரு' என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர், அந்த ஆலை 15,000 பேருக்கு வேலை அளிக்கும். அந்த வாய்ப்பை மக்கள் இழந்துவிட்டதாக வருத்தப்படுகிறார். செப்பினால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் அதில் சொம்பு எப்படித் தயாரிக்கலாம் என்பது பற்றியும் விவரிக்கிறார். இப்படியான மனிதர்களிடம் தெளிவாகவும், அச்சமில்லாமலும் நேரடியாகவும் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. மக்களிடம் அச்சமிருந்தால் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி அச்சமில்லாமல் கேள்வி கேட்பவர்கள் சாதி, மத, இனத்தை அடையாளம்காட்டி, அவர்களைப் பிரித்து வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், தனிமனிதனாக சக மனிதன் துன்பத்தில் இருக்கும்போது, அவருக்காகக் கேள்வி எழுப்பவேண்டியது நமது கடமை. இதைத் தேர்தல் அரசியலுக்கு வந்துதான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றில்லை. தேர்தல் அரசியல் எனக்குத் தேவையில்லை. தேர்தல் அரசியல் நம்மைக் கேள்வி கேட்க வைக்காது. நான் மக்களுக்கான அரசியலில் இருக்கிறேன். மக்களுக்கு எங்கு தவறிழைக்கப்பட்டாலும் கேள்வி கேட்கிறேன். இவர்கள் என் மீது துப்பாக்கிகளைக் கொண்டு குறிவைத்தாலும் எனது கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும்” என்றார் அவர்.

அருள்மொழி

``அவர்கள் எய்த அம்பு, அவர்கள் பக்கமே திரும்பியிருக்கிறது!”

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் மொழி பேசுகையில், ``அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் வசித்த மெக்சிகோ நாட்டு மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து அமெரிக்க அரசால் பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது. அதனை எதிர்த்து அமெரிக்க மக்களே அங்கே சிறைவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த மக்களுரிமைப் போராட்டம் ஒன்றில், `Australia is unfair' என்று அவர்களுடைய தேசிய கீதத்தையே மாற்றியமைத்துப் பாடி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனை அந்த நாடு தேசத்துரோகம் என்று அறிவிக்கவில்லை. ஆனால், இங்கே இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்தான், சாதாரணமாகக் கேள்வி கேட்பதும், மக்களிடையே அதுதொடர்பாக விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதுகூட தேசத் துரோகமாகப் பார்க்கப்படுகிறது. இவர்களது இந்த தேசத் துரோகி என்கிற வார்த்தை அவர்களையே பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

அண்மையில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன் கணவர் இந்து என்பதால் தானும் மதம் மாறினால்தான் பாஸ்போர்ட் தரப்படும் என்று பாஸ்போர்ட் அலுவலகம் நிர்பந்தித்ததாக கூறி ட்விட்டரில் வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டிருந்தார். `பாஸ்போர்ட் அலுவலகம் செய்தது தவறு' எனச் சுட்டிக்காட்டி, அந்தப் பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க தேவையான நடவடிக்கைகளை சுஷ்மா சுவராஜ் எடுத்தார். இதையடுத்து அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே சுஷ்மாவை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசத் தொடங்கினார்கள். `பெண் குழந்தைகளைக் காப்போம்' என்று குரல்கொடுத்த மோடி, இந்த வன்சொற்களுக்கு எதிராகத் துளியும் குரல்கொடுக்கவில்லை. அவர்கள் விதைத்த விதை அவர்கள் பக்கமே திரும்பியிருப்பது கண்டு ஆட்டம் கண்டிருக்கிறார்கள். இறுதியில் சுஷ்மாவுக்காக மக்கள் நாம்தாம் குரல்கொடுக்க வேண்டியதாக இருந்தது. எங்கு தவறு நடந்தாலும் மக்கள் குரல் கொடுப்பார்கள் அதில் உண்மை இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அத்தாட்சி. இதைப் போலத்தான் தூத்துக்குடி சம்பவமும். இதை நிகழ்த்தியவர்களை எவ்வித அச்சமும் இன்றி நேரடியாகக் கேள்வி எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்" என்றார். 

த.வெள்ளையன்

``மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவை!”

வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் பேசுகையில், ``காந்தியின் அகிம்சைவழிப் போராட்டத்தைப் பற்றி நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால், அவர் மட்டும் நாம் சுதந்திரம் பெற காரணம் இல்லை. அதற்காக, எண்ணற்ற உயிர்கள் பலியாகி இருக்கின்றன. நம் நாட்டை நேரடியாகக் கைப்பற்றும் முயற்சியில் ஆங்கிலேயர்கள் இறங்கவில்லை. முதலில் அவர்கள் இங்கே வணிக வியாபாரம் செய்யும் நோக்கத்தில்தான் வந்தார்கள். பிறகு அத்தனை துறைகளையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களை விரட்டியடிக்க நமக்கு இருநூறு வருடகாலம் தேவைப்பட்டது. தற்போதும் அதே சூழல்தான், நம்நாட்டில் வியாபாரம் செய்வதற்காக அனைவரையும் நம் பிரதமர் கூவி அழைத்து வரவேற்றுக் கொண்டிருக்கின்றார். அனைவரும் தற்போது வியாபாரம் செய்ய படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வணிகர்கள் நம் உடைமைகளைக் கைப்பற்றினால் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவையாக இருக்கும். அதற்கான தொடக்கப் புள்ளிதான் தூத்துக்குடி சம்பவமும், அதில் நேர்ந்த உயிரிழப்புகளும். இதை நமது பிரதமருக்கு யார் எடுத்துச் சொல்லிப் புரியவைப்பார்கள்” என்றார். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் கொள்கை முடிவை வலிமையாக்க வலியுறுத்திய முக்கியத் தீர்மானங்கள் நிகழ்வில் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் அரசியலில் இல்லாத மக்கள் அரசியல்வாதிகளால் நிரம்பியதாக நிகழ்வு அமைந்திருந்தது. 

https://www.vikatan.com/news/tamilnadu/130088-tuticorin-sterlite-protest-rememberance-meeting-presided-by-actor-prakashraj.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.