Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை: பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

Featured Replies

தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை: பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

 

(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த கட்டுரைத் தொடரின் முதல் பாகம்.)

தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியா முழுவதும் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் மொழிகள் பற்றிய தரவுகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அந்தத் தரவுகளை 2001இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிட்டால், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களில் குறைந்துள்ளதும், இந்தி, ஒடியா, வங்கம் உள்ளிட்ட வட இந்திய மற்றும் பிற மாநில மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

2001இல் வட மாநிலங்களில் சுமார் 8.2 லட்சமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 7.8 லட்சமாகக் குறைந்துள்ளது. இதேபோல 2001இல் எட்டு லட்சமாக இருந்த வட மாநிலங்களில் வாழும் மலையாள மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 7.2 லட்சம் என்ற அளவில் சுருங்கியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் அதிகபட்சமாக இருந்தாலும் அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவின் திராவிட மொழிகள் பேசுபவர்களின் மக்கள்தொகை குறைந்துள்ளதாகவும், வடஇந்தியாவின் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது எனவும் அந்தத் தரவுகள் மூலம் தெரியவருகிறது.

பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN

அதாவது 2001இல் தென்னிந்திய மாநிலங்களில் வசித்த வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 58.2 லட்சம். இது 2011இல் சுமார் 20 லட்சம் அதிகரித்து 77.5 லட்சமாகியுள்ளது.

வேலை வாய்ப்புகள் அதிகம்.. தொழிலாளர்கள் குறைவு..

"தென்னிந்திய மாநிலங்களில் வடஇந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால் வேலைவாய்ப்புகளுக்காக அதிக வட இந்தியர்கள் தென்னிந்தியா வந்துள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது," என்று கூறும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், "அதன் காரணம் இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம். ஆனால், தொழிலார்களுக்கு தட்டுப்பாடு உண்டு. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுப்பாட்டால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட பிறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது," என்கிறார்.

"தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்தியத் தொழிலாளர்கள் வருவது ஆதாயம் உள்ளதா என்பதையும் தாண்டி, அவர்களுக்கான தேவை தென் மாநிலங்களில் இருப்பதாகவும், வட மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் சமநிலை இல்லாமல் இருப்பது இந்தியாவின் 'Engine of Growth' (வளர்ச்சிக்கான உந்துவிசை) ஆக உள்ள தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு சாதகமாக உள்ளது," என்றும் அவர் கூறுகிறார்.

'தொழில்துறைகள் முடங்கிவிடும்'

"கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் தென்னிந்திய மாநிலங்கள் வட இந்தியத் தொழிலாளர்களை அதிகம் சார்ந்துள்ளது. அவர்கள் இல்லாவிட்டால் அந்தத் துறைகள் முடங்கிவிடும்," என்று வட இந்தியத் தொழிலாளர்கள் இல்லாமல் போனால் உண்டாகும் பொருளாதார தாக்கங்கள் குறித்தும் அவர் விவரித்தார்.

பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களில் வசிப்பதால், அவர்களின் உணவு, உடை போன்றவை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், "தமிழர்கள் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதால் தமிழ் சினிமாவுக்கான வியாபாரம் அந்த நாடுகளிலும் அதிகரித்துள்ளது. ஓர் இனம் வேறு இடத்துக்கு செல்லும்போது அவர்களின் உணவுகள், பக்தி நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பாடல்கள் போன்றவையும் அவர்களுடன் வருவது இயல்பானதுதான்," என்றார்.

இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள பகுதிகளில் கோவை, திருப்பூர் நகரங்களைச் சுற்றியுள்ள மேற்கு தமிழகமும் ஒன்று.

இப்பகுதியிலுள்ள ஜவுளி மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிய வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் திருப்பூரில் வந்து அனுமதியின்றி தங்கியதால் கைது செய்யப்படும் சில சம்பவங்களும் சமீப ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.

அந்த அளவுக்கு தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்து தங்கிப் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மேற்குத் தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் திருப்பூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்படும் பின்னலாடை ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தொழிலாளி.. இன்றைய முதலாளி..

வெளிமாநிலத் தொழிலாளர்களின் தேவை குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம்.

பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

"தொழிலாளர்கள் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வட மாநிலத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இங்கு வருவது தொழில்துறைக்கு நல்லதுதான். முன்பெல்லாம் முகவர்கள் மூலம்தான் வட மாநில தொழிலாளர்கள் வருவார்கள். இப்போதெல்லாம் முகவர்கள் இல்லாமலேயே தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது," என்கிறார் அவர்.

"முந்தைய ஆண்டுகளில் தனி ஆட்களாக வந்தவர்கள் தற்போது தங்கள் குடும்பத்துடன் வருகிறார்கள். ஆனால், அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்களை அனைத்து தொழில் நிறுவனங்களாலும் ஏற்படுத்தித் தர முடியாது. வட மாநில தொழிலாளர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசும் முயல வேண்டும்," என்று ராஜா சண்முகம் வலியுறுத்துகிறார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீப காலங்களில் வட மாநிலங்களிலும் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கே திரும்பிவிட்டால், இங்குள்ள பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்மறைத் தாக்கம் உண்டாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பத்து ஆண்டுகள் ஒரே ஊரில் இருந்தால் அதுவே சொந்த ஊர் எனும் நிலை வந்துவிட்டது. நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி. எனவே, அவர்கள் திரும்பிச் செல்வது என்பது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது, " என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-44731578

  • தொடங்கியவர்

தென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்?

(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த பிபிசி தமிழின் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பாகம்.)

criminal indiaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபடம் சித்தரிக்க மட்டுமே.

வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொழில் நகரான திருப்பூரில் ஜூலை 2016இல் ஓர் அதிர்ச்சியான செய்தி பரவியது.

திருப்பூரில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கிப் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முகமது மொஷிருதீன் எனும் நபர் தனது சொந்த மாநிலத்துக்குத் திரும்பியபோது, ஒரு ரயில் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தவர்கள் மேற்கு வங்கக் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர். அவர் மீதான குற்றச்சாட்டு இணையதளம் மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது.

பெற்றோரின் அனுமதி இல்லாமல் தன் காதலியைத் திருமணம் செய்துகொண்டு, திருப்பூருக்கு பிழைப்புத் தேடி வந்து தன் மனைவி மற்றும் இரு இளம் வயது மகள்களுடன் வசித்து வந்த மொஷிருதீனை அவர் வசித்து வந்த பகுதியினருக்கு ஒரு மளிகைக் கடைக்காரராக மட்டுமே தெரியும். ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது அந்தக் காலகட்டத்தில், அங்கு வடமாநிலத் தொழிலாளர்களின் நம்பகத்தன்மை மீது பொதுச் சமூகத்தில் ஓர் அவநம்பிக்கையை உண்டாக்கியது.

 

 

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு குற்றச் சம்பவத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படும்போதும், தேடப்படுவதாக செய்திகள் வெளியாகும்போதும், தமிழகத்தில் வந்து தங்கி பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மீது ஒரு சந்தேகப் பார்வை விழுகிறது.

தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் நெரிசல் மிகுந்த அறைகளிலோ, அல்லது குழுவாக வேறு இடங்களிலோதான் அவர்கள் ஒன்றாகத் தங்குவதைப் பார்க்க முடிகிறது. பொதுச் சமூகம் வசிக்கும் குடியிருப்புகளில் அவர்கள் தங்குவது குறைந்த அளவிலேயே உள்ளது.

"எல்லா சமூகங்களிலும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் 1-2%தான் இருப்பார்கள். வடமாநில தொழிலாளர்களிலும் அந்த 1-2% இருப்பார்கள். அதற்காக நல்லவர்களாக உள்ள 90%க்கும் அதிகமான பிறரை சந்தேகிக்கக் கூடாது," என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன்.

வடமாநிலத்தவர்கள் அதிகம் இருக்கும் பணியிடங்களில் செங்கல் சூளைகளும் ஒன்றுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடமாநிலத்தவர்கள் அதிகம் இருக்கும் பணியிடங்களில் செங்கல் சூளைகளும் ஒன்று.

வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் குற்றம் செய்தால் அவர்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசிய அவர், "அவர்களின் சொந்த மாநில காவல் துறையிடம் அவர்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். ஆனால், வேறு மாநிலத்தில் அவர்கள் குற்றம் செய்தபின் அவர்களின் காணொளி அல்லது புகைப்படம் கிடைத்தாலும், அவர்கள் உள்ளூரில் பரிட்சயம் இல்லாதவர்கள் என்பதால் அவர்களை பொதுமக்களால் அடையாளம் காட்டக் கூட முடியாது," என்றார்.

அதையும் மீறி அவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் சொந்த மாநிலத்துக்கே சென்றாலும் அவர்களைக் கைது செய்ய முடியாது என்று தன் சொந்த அனுபவம் ஒன்றையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

 

 

"2014இல் கொலை செய்துவிட்டு, தான் வேலை செய்த நகைப் பட்டறையில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற ஒரு நபரைத் தேடி, ராஜஸ்தான் மாநிலம் பாத்மேர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குச் சென்றோம். அப்போது உள்ளூர் காவல் துறையைச் சேர்ந்த ஒரு நபரும் எங்களுடன் வந்திருந்தார். ஆனால், குற்றவாளியைக் கைது செய்வது குறித்து விசாரித்ததால், அவர் பெண்கள் தனியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறி அவரைத் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். இன்றுவரை அந்தக் குற்றவாளியைக் கைது செய்ய முடியவில்லை," என்றார்.

வேறு மாநிலங்களில் இருந்து வந்து குற்றம் செய்துவிட்டு தப்பிக்கும் நபர்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்று இன்னொரு நபரின் கதையையும் சொன்னார் ராமச்சந்திரன்.

"நாசிக்கிலிருந்து ஒரு நபர் விமானம் மூலம் வேறு மாநிலங்களுக்குச் செல்வார். விமானப் பயணச் சீட்டுகளை இணையப் பரிமாற்றம் மூலமோ, ஏ.டி.எம் அல்லது கடன் அட்டைகள் மூலமோ அவர் வாங்க மாட்டார். பணத்தை ரொக்கமாகக் கொடுத்துதான் வாங்குவார்."

வடமாநில தொழிலாளி.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகேரளாவிலுள்ள ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் வடகிழக்கு மாநில தொழிலாளி. (கோப்புப் படம்)

"விமானம் மூலம் தான் வந்து இறங்கும் ஊரில் ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுப்பார். ஒரு இடத்துக்குப் போகச் சொல்லிவிட்டு, போகும் வழியில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்கு வண்டியைத் திருப்பச் சொல்வார். அது பெரும்பாலும் வெளி நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாத பிற்பகல் நேரமாகத்தான் இருக்கும்."

"பெரும் மருத்துவமனைகளில் எல்லா ஊழியர்களுக்கும் எல்லா மருத்துவப் பணியாளரையும் தெரியாது. எனவே அவர்களிடம் தன்னை ஓர் மருத்துவர் என்று பிறரிடம் அறிமுகம் செய்துகொள்வார். கழுத்தில் தான் கொண்டு வந்திருக்கும் ஸ்டெதஸ்கோப்பை அணிந்து கொள்வார். வெளிநோயாளிகள் பிரிவில் அப்போது இருக்கும் மருத்துவ உதவியாளரை ஏதேனும் மருத்துவ ஆவணங்களை வாங்கி வருமாறு எங்காவது அனுப்பிவிடுவார்."

 

 

"அந்த நேரத்தில் வெளியே காத்திருக்கும் பெண் நோயாளிகளில் அதிக நகைகள் அணிந்திருப்பவரை உள்ளே அழைப்பார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நகைகள் தடையாக இருப்பதாகக் கூறி, நகையைக் கழட்டச் சொல்வார். அவர்களுக்கு ஊசி போட திரும்பிப் படுக்குமாறு கூறி, அந்த நேரத்தில் நகைகளை லாவகமாகத் திருடிச் சென்றுவிடுவார்."

"பல கட்டத் தேடலுக்குப் பிறகு 2014இல் அந்த நபர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கைது செய்யப்பட்டு தண்டனையும் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அவர் விடுதலையான சில மாதங்களிலேயே, அவரைத் தேடி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து காவல் துறையினர் தமிழகம் வந்தனர்."

"நீண்ட நாட்கள் வந்து தங்கிப் பணியாற்றுபவர்கள் திட்டமிட்டு குற்றச்சம்பவங்கள் எதிலும் ஈடுபட அதிக அளவில் வாய்ப்பில்லை. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் குற்றம் செய்யும் மாநிலத்துக்கு வந்துவிட்டு உடனே திரும்பி விடுவார்கள். நீண்டகாலம் தங்கிப் பணியாற்றுபவர்கள் குற்றம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் உள்ளிட்ட காரணங்களால் உணர்ச்சிவயப்பட்டு குற்றம் செய்தவர்களாக இருப்பார்கள்," என்கிறார் ராமச்சந்திரன்.

 

https://www.bbc.com/tamil/india-44736366

  • தொடங்கியவர்

'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'

 
 
 

(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த பிபிசி தமிழின் கட்டுரைத் தொடரின் இறுதிப்பாகம்.)

north indiaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று 2011இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த மொழிகள் தொடர்பான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, வட மாநிலங்களில் இருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லாதது, தென் மாநிலங்களில் தொழில்துறைக்கு போதிய அளவு மனித வளம் இல்லாதது போன்றவையே பொதுவான காரணங்களாகக் கருதப்பட்டாலும், ஓர் ஊரில் நிலவும் அமைதியும், நேர்மறையான சமூகக் சூழல், பருவநிலை ஆகியவையும் பிற ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து நீண்ட காலம் தங்கத் தூண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

 

 

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சமூக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் இருதய ராஜன் பிபிசி தமிழிடம் பேசும்போது, "ஓர் ஊரின் சமூகத்தில் சகிப்புத்தன்மை நிலவினால், தாற்காலிகமாகத் தங்கிப் பணியாற்ற அந்த ஊருக்கு வந்தவர்கள்கூட, தாங்கள் திட்டமிட்ட காலத்தைவிடவும் நீண்ட நாட்கள் தங்கி வேலை செய்ய விரும்புவார்கள். தனியாக வந்து தங்க நினைத்தவர்களுக்கு தங்கள் குடும்பத்தினரையும் பின்னர் அழைத்து வருவார்கள்," என்று கூறினார்.

Religious symbolsபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒரு மாநிலத்தில் நிலவும் சமூக சகிப்புத்தன்மையும் பிற மாநிலத்தவர்கள் வந்து நீண்ட காலம் தங்கி வேலை செய்ய வழி வகுக்கிறது.

மக்கள் புலம் பெயர்தல் குறித்த ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவரான இருதய ராஜன் மேலும் கூறுகையில், "சிங்கப்பூரில் தமிழர்களால் இந்துக் கோயில்களைக் கட்ட முடிகிறது. கனடாவில் சீக்கியர்களால் குருத்வாராக்களை கட்ட முடிகிறது. துபாயில் சென்று பணியாற்றும் கேரளத்து கிறித்தவர்களால் அங்கு தேவாலயம் கட்ட முடிகிறது. ஒரு வேளை குடிபெயர்ந்துள்ள ஊர்களில் அதற்கான சூழல் இல்லாவிட்டால், பணிக்காக அங்கு செல்வோர் நீண்ட காலம் வாழ விரும்ப மாட்டார்கள்," என்றார்.

'தவறான தகவல்களையும் கொடுத்திருக்க வாய்ப்புண்டு'

இந்திய அரசு வெளியிட்டுள்ள மொழிகள் குறித்த தரவுகள் ஏழு ஆண்டுகள் பழையவை என்பதால் அதை தற்போதைக்கு முழுதும் சரியானதாகக் கருத முடியாது என்று கூறும் அவர், "வேலைவாய்ப்புகளுக்காக குடிபெயர்தல் என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். ஓராண்டுக்கு முன்பு கேரளாவின் கொச்சி நகரில் மெட்ரோ ரயில் அமைக்க வேலை செய்துகொண்டிருந்தவர்கள், இன்று வேறு ஊரில் வேறு வேலை செய்துகொண்டிருக்கலாம். இவ்வாறு சில மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருப்பவர்கள் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை," என்று கூறுகிறார்.

மும்பையிலுள்ள தாராவியில் பொங்கல் கொண்டாடும் தமிழ் பெண்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமும்பையிலுள்ள தாராவியில் பொங்கல் கொண்டாடும் தமிழ் பெண்.

"இந்தக் கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்கள் தவறான தகவல்களையும் கொடுத்திருக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, மும்பையில் 1970களிலும் 1980களிலும் தமிழர்களுக்கு எதிர்ப்பு இருந்தது. இப்போது பிகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக அந்த மனநிலை உள்ளது. அந்த மாநிலங்களில் இருந்து வந்த தொழிலார்கள், முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் தம்மைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தெரிவிக்காமல் மறைத்திருக்கலாம். இந்தி என்று சொன்னால் சிக்கல் எழலாம் என்று கருதி, அவர்கள் மொழி மராத்தி என்று தற்காப்பு கருதி மாற்றிச் சொல்லியிருக்கலாம். எனவே இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரி என்று கருத முடியாது," என்கிறார் இருதய ராஜன்.

 

 

'இது மாற்றம் நிகழ்ந்து வரும் காலகட்டம்'

தென்மாநிலங்களில் இருக்கும் வட இந்தியத் தொழிலாளர்களைப் பொருத்தவரை, பண்பாட்டு ரீதியாக இப்போது நாம் மாற்றம் நிகழ்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கிறோம் என்கிறார் மானிடவியல் ஆய்வாளர் பக்தவச்சல பாரதி.

"தென்னிந்திய நகரங்களில் வேலைவாய்ப்பு காரணங்களுக்காக அவர்கள் தங்கி இருந்தாலும், அவர்களுக்குள் குழுவாகச் சந்தித்துக்கொள்வது, உரையாடுவது என்று அவர்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். நீண்ட காலமாகத் தங்குபவர்களுக்கு இங்குள்ள மொழியைக் கற்றுக்கொள்வது தவிர்க்க முடியாதது ஆகிறது. இங்கு உணவகத்தில் ஒரு வட இந்தியத் தொழிலாளர் பணியாற்றுகிறார் என்றால் அவர் தென்னிந்திய உணவுகளை உண்ணத் தொடங்குவார். அவ்வாறு அவர்கள் 'ஓரினமாவது' மெல்ல மெல்ல நிகழ்ந்து வருகிறது," என்று கூறுகிறார் அவர்.

religion culture and societyபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவர்களின் கடவுள் மற்றும் வழிபாடு குறித்து பேசும்போது,"எல்லோருக்கும் முதலில் இஷ்ட தெய்வம், பின்பு வீட்டு தெய்வம், அதன்பின் குல தெய்வம் கடைசியாக ஊர் தெய்வம் என்று இருக்கும். அவர்களுக்கும் இது மாதிரியான தெய்வங்கள் இருக்கும். அந்த தெய்வங்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்து அவர்கள் வழிபடுவார்கள். இங்குள்ள ஒரு கோயில் திருவிழாவில் அவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால் அது பொழுதுபோக்கிற்காக மட்டுமே இருக்கும். ஒருவேளை இங்குள்ள ஊர் தெய்வங்களை அவர்கள் பக்தியுடன் வணங்கினாலும், இதுவும் ஏதோ ஒரு தெய்வம் என்ற அளவிலேயே வணங்குவார்கள்," என்கிறார் பக்தவச்சல பாரதி.

"வட இந்திய தொழிலாளர்கள் இன்னும் விடுதிகளிலோ, வேறு இடங்களிலோ குழுவாக வாழ்கிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளில் இன்னும் நம் அண்டை வீட்டுக்கார்களாகவில்லை. இங்குள்ள மக்களுக்கு அவர்களுக்கு இருக்கும் உறவு என்பது பணி செய்யும் இடத்திலேயே நிகழ்கிறது. சந்தைகள், சாலைகள் என எல்லா இடங்களிலும் அவர்களின் இருப்பை நாம் அறிகிறோம். ஆனால், அவர்களுடன் முகத்துக்கு முகம் நேராகப் பார்த்து உறவாடும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. அப்படி வந்தபின்தான் இங்குள்ள பொதுச்சமூகம் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு வரும்," என்று வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்குள்ள சமூகத்தில் இன்னும் முழுமையாகக் கலக்காதது குறித்து பக்தவச்சல பாரதி கருத்துத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-44752711

  • தொடங்கியவர்

 

நாங்கள் ஏன் தமிழகம் வந்தோம்?- வட மாநில தொழிலாளர்கள் கருத்து

வட மாநிலங்களில் இருந்து வேலை தேடி தென் இந்தியாவுக்கு வரும் தொழிலாளர்கள், தமிழகத்தில் வாழ்வதை எப்படி உணர்கின்றனர். அவர்கள் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியானதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.