Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்!

Featured Replies

விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்!
mqdefault-720x450.jpg

முதலை நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது யானைப் பலத்துடனிருக்கும். அதைத் தரையில் எடுத்துப் போட்டால் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று கூறப்படுவதுண்டு.

அப்படித்தான் பாம்பும். பாம்புக்குத் தரையில் வயிறு படும் வரைதான் பலமெல்லாம். அதைத் தரையிலிருந்து தூக்கி விட்டால் அது பலமிழந்து விடும்.  கழுகு பாம்புடன் மோதும் போது அதைத்தான் செய்வதுண்டு. பாம்பின் வாலைப்பிடித்து வானில் தூக்கி விட்டால் பாம்பு அதன் இயங்குதளத்தை இழந்து விடும். பலத்தையும் இழந்து விடும்.

அரசியலிலும் அப்படித்தான். தனது பலம் எது – பலவீனம் எது – தனக்கு பலமான களம் எது – பலவீனமான களம் எது என்பதைக் குறித்து சரியாக முடிவை எடுப்பவரே சிறந்த தலைவர். எதிரியை தனக்கு வசதியான – தான் வெல்லக்கூடிய ஆடுகளத்திற்கு இழுப்பவரே சிறந்த தலைவர். ஆனால் விக்னேஸ்வரன் அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடிய ஒருவரா?

அவர் இப்பொழுதும் நம்புகிறார். தனது பலம் தன்னுடைய நீதித்துறை வாழ்க்கைதான் என்று. தனது பேச்சுக்களின் தொகுப்பிற்கு அவர், நீதியரசர் பேசுகிறார் என்றே தலைப்பிட்டுள்ளார். ஆனால் அவர் பிரபல்யம் அடைந்ததும் அதிகளவு வெளியுலகின் கவனத்தை ஈர்த்ததும் ஒரு முதலமைச்சராகத்தான்.

இதைக் கூராகச் சொன்னால், புலிகள் இயக்கத்திற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர்முனையாகவே இவர் இன்றிருக்கும் பிரபல்யத்தைப் பெற்றார்.

ஆனால் அவர் தன்னை ஒரு முதலமைச்சர் என்று அழைப்பதை விடவும் ஒரு நீதியரசர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறார். சட்டத்தரணிகளின் அரசியலில் தன்னை ஒரு நீதியரசராகப் பேணுவதன் மூலம் அவர் தன்னுடைய முதன்மையைப் பேண விரும்புகிறாரா?

பொதுவாக தமிழ்ச்சட்டத்தரணிகள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் உண்டு. கெட்டித்தனமாக வழக்காடும் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக வர விரும்புவதில்லை என்பதே அது. நீதிபதிகளுக்கு சமூத்தில் மதிப்பிருக்கும், பொலிஸ் பாதுகாப்பிருக்கும். ஆனால் கெட்டிக்காரச் சட்டத்தரணிகளைப் போல உழைக்க முடியாது என்று ஓர் ஒப்பீடு உண்டு.

உழைக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு சட்டத்தரணி நீதிபதியாக வர விரும்புவதில்லை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு. ஆனால் விக்னேஸ்வரன் தான் முன்பு ஒரு நீதியரசராக இருந்ததையே தனது முதன்மை அடையாளமாக இப்பொழுதும் கருதுகிறார்.

வடமாகாண சபைக்குள் அவருக்கு நெருக்கடி வந்த போதும் அவர் பெருமளவுக்கு ஒரு நீதிபதியாகவே நடந்துகொண்டார். ஒரு தலைவராக அல்ல. வடமாகாண சபையை ஒரு நீதிமன்றமாக மாற்றி, அமைச்சர்களை விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பும் வழங்கினார்.

வடமாகாண சபைக்குள் அவருக்கு வந்த பிரச்சினையின் அடித்தளம் அரசியல் நீதி சார்ந்த ஒன்றுதான். எதிர்ப்பு அரசியலுக்கும், இணக்க அரசியலுக்கும் இடையிலான ஒரு மோதல் அது. ஆனால் அதை நீதி என்ற தளத்தில் வைத்து மட்டும் கையாள முடியாது. அதற்குமப்பால் அதை அரசியல் என்ற அதன் பிரயோகத்தளத்தில் வைத்தே கையாண்டிருந்திருக்க வேண்டும்.

அவருடைய எதிர்ப்பு அரசியலை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரனும் அவருடைய அணியும் அவருக்கு ஆதரவான அமைச்சராகிய ஐங்கரநேசனைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கினர். முதலில் ஐங்கரநேசனைப் பாதுகாக்க முற்பட்ட முதலமைச்சர் முடிவில் அவரைப் பாதுகாக்கவில்லை.

ஐங்கரநேசனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முற்பட்ட அவர் ஏனைய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று விரும்பினார். ஐங்கரநேசனைத் தான் பாதுகாக்க விரும்பவில்லை என்று காட்ட ஒரு விசாரணைக்குழுவை நியமித்தார்.

விசாரணைக்குழு தொடர்பாக பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அது முடிவில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அப்பொழுது விக்னேஸ்வரன் ஐங்கரநேசனோடு சேர்ந்து ஏனைய அமைச்சர்களையும் மாற்றினார்.

இது விடயத்தில் அவர் தான் நியமித்த விசாரணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்டு தீர்ப்பை வழங்கினார். அத்தீர்ப்பை எதிர்த்து டெனீஸ்வரன் தொடுத்த வழக்கு இப்பொழுது விக்னேஸ்வரனை மறுபடியும் நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது.

தனக்கு வந்த நெருக்கடியை ஓர் அரசியல் விவகாரமாக அணுகாமல் அதை ஒரு சட்டப்பிரச்சினையாக நீதி விசாரணையாக அணுகியதே இன்றுவரை அந்தப் பிரச்சினை இழுபடக் காரணம். தொடக்கத்திலேயே திட்டவட்டமான அரசியல்த் தீர்மானத்தை எடுத்து தனது எதிரணியை மடக்கியிருந்திருந்தால் பிரச்சினை நீதிமன்றம் வரை போயிருந்திருக்காது.

அதாவது ஒரு தலைவராக வெட்டொன்று துண்டிரண்டு என்று முடிவெடுத்திருந்திருக்க வேண்டும். சுமந்திரன் அணியானது அவரைப் பலவீனப்படுத்துவதற்கு ஐங்கரநேசனைக் குறிவைத்துத் தாக்கியபோது, ஒன்றில் அவர் ஐங்கரநேசனைப் பாதுகாத்து உறுதியான முடிவுகளை எடுத்து எதிர்த்தரப்பை அடக்கியிருக்க வேண்டும் அல்லது ஒரு நீதிபதியாக ஐங்கரநேசனைத் தண்டித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இரண்டையும் செய்யவில்லை. ஐங்கரநேசனை பதவி விலகக்கேட்ட பின்னரும் அவர் ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவாகக் காணப்படுகிறார்.

ஐங்கரநேசன் குற்றமிழைத்துள்ளார் என்றால் பிறகெப்படி பசுமை இயக்கத்தின் தொடக்க விழா உட்பட ஏனைய செயற்பாடுகளில் விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகப் பங்குபற்றலாம்? இது விடயத்தில் விக்னேஸ்வரன் ஒரு நீதிபதியாக மட்டுமல்ல ஓர் அரசியல்வாதியாகவும் செயற்படப் பார்க்கிறார் எனலாமா?

ஆம் அதுதான் நடைமுறை. ஓர் அரசியல்வாதியாகச் செயற்படுமிடத்து நூறு வீதம் நீதிபதியாகவும் செயற்பட முடியாது. அதுவும் இலங்கைத்தீவின் முழுவளர்ச்சியுறாத ஜனநாயகப் பரப்பில் ஒரு நூறுவீத நீதிமான் அரசியல்வாதியாக இருக்கவே முடியாது.

முன்னாள் அமைச்சர் வாரியம் தொடர்பில் விக்னேஸ்வரன் நூறுவீதம் நீதிபதியாகச் செயற்படவில்லை என்பதே சரி. இனிமேலும் அவர் அப்படிச்செயற்பட முடியாது. அவர் முன்னெடுத்து வரும் எதிர்ப்பு அரசியலுக்குக் குறுக்கே நிற்பவர்கள் விடயத்தில் ஒரு தலைவராக முடிவெடுத்தால் மட்டுமே அவருக்கு அடுத்த கட்டம் உண்டு.

மாறாக ஒரு நீதிமானாகவோ அல்லது அறநெறியாளராகவோ அல்லது ஆன்மீகவாதியாகவோ அவர் முடிவெடுப்பாராக இருந்தால் அவருடைய எதிரணி அவரைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டுப் போய்விடும். அவரைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கி முடிவில் நோயாளியாக்கி தானாக அவர் அரசியலை விட்டு ஒதுங்கும்படி செய்துவிடும்.

எனவே தன்னை இனியும் ஒரு நீதிபதியாக அவர் காட்டிக்கொண்டிருக்க முடியாது. அது மட்டுமல்ல அப்படிக் காட்டுவது முதலாவதாக அகமுரண்பாடானது இரண்டாவதாக எதிர்த்தரப்புக்குச் சாதகமானது.

அது எப்படி அகமுரண்பாடானது?

அவர் நீதியரசராக மேலெழுந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பு எது என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகப் பார்க்கும் ஒரு நீதிபரிபாலனக் கட்டமைப்பு அது.

அந்த நீதியைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கைத் தீவில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் என்று பொதுவான ஒரு அரசியல் நீதி இல்லை. மேலும் இலங்கைத் தீவின் நிதிபரிபாலனக் கட்டமைப்பானது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தைப் பாதுகாக்கிறது என்றே தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்துபோன ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் பென் எமர்சன் இலங்கைத்தீவின் நிதிபரிபாலனக் கட்டமைப்பைப்பற்றித் தெரிவித்திருந்த காட்டமான விமர்சனங்களையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.

குறிப்பாக சட்டமா அதிபர் குறித்து அவர் தெரிவித்திருந்த விமர்சனங்கள் கடுமையானவை. அதோடு நாவற்குழியில் கைது செய்யப்பட்டு காணமாற் போன பொது மக்கள் தொடர்பான வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட சட்டத்தணிகள் சில நாட்களுக்கு முன்பு என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறு இனச்சாய்வுள்ள ஒரு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்குள்தான் விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தவர். அவர் இப்பொழுது முன்னெடுக்கும் அரசியலானது அந்நீதிபரிபாலனக் கட்டமைப்புக்கு எதிரானதுதான். எனவே தான் வகித்த உயர் பதவியை அவர் தொடர்ந்தும் ஞாபகப்படுத்துவது ஓர் அக முரண்.  இது முதலாவது.

இரண்டாவது, அந்நீதிபரிபாலனக் கட்டமைப்புக்குள் அவருடைய அரசியலுக்குரிய நீதியை அவர் பெறவேண்டியிருப்பது என்பது. இங்கே தான் தனக்கு சாதகமான போர்க்களம் எது என்று விக்னேஸ்வரன் கருதுகிறார் என்ற கேள்வி முக்கியம் பெறுகிறது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய மெய்யான பலம் எனப்படுவது அவர் உறுதியாக நிற்கும் எதிர்ப்பு அரசியல் தளம்தான். அவருடைய பலம் அவர் முன்பு வகித்த நீதியரசர் பதவி அல்ல. அவரை நம்பிக் காத்திருக்கும் ஆதரவாளர்கள்தான். அவர் ஒரு நீதிபதி என்பதால் அவர் நீதியாக நடப்பார் என்று தமிழ் மக்கள் நம்பக்கூடும். ஆனால் அதற்காக மாகாணசபையை நீதிமன்றம் ஆக்கியிருக்கக் கூடாது.

ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு நீதிபதியாகவும் இருக்க முற்பட்டதால்தான். முன்னைய அமைச்சரவையை நீக்கினார். ஆனால் அதன் விளைவுகள் உண்மையான நீதிமன்றத்தை நோக்கி அவரை இழுத்துக் கொண்டு வந்து விட்டன.

அப்படித் தனக்குப் பாதகமான ஒரு ஆடுகளத்திற்கு அவர் மோதலை நகர்த்தியபடியால்தான் தவராசாவுக்கும், டெனீஸ்வரனுக்கும் விளக்கங் கொடுக்க வேண்டி வந்தது.

மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களேயிருக்கின்றன. ஆனால் இக்குறுகிய காலத்தையும் அவர் நிம்மதியாகக் கடக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மாகாண சபையின் சாதனை இதுதானா என்று அவரை அவருடைய எதிரிகள் விமர்சிக்கும் ஒரு நிலை வந்திருக்கிறது.

ஆனால் அப்படி விமர்சிக்கும் பலரும் ஒன்றை மறந்துவிட்டார்கள். இலங்கைத்தீவில் எந்த ஒரு மாகாண சபையிலும் நடவாத அதிசயத்தை அவர் வடக்கில் அரங்கேற்றினார். அமைச்சர்களை விசாரிக்க ஒரு குழுவை நிறுவி தனது நீதி எது என்பதையும் நிரூபித்தார்.

அப்படியொரு துணிச்சல் இலங்கைத்தீவில் வேறெந்த முதலமைச்சருக்கும் வரவில்லை. வயதால் இளைய வடமாகாணசபை காட்டிய முன்னுதாரணம் அது. ஒரு முதலமைச்சராகவும், நீதிபதியாகவும் இருக்க முற்பட்டதன் விளைவு அது. இப்பொழுது அந்த நீதியே அவரைச் சுற்றிவளைக்கிறதா?

http://athavannews.com/?page_id=600055&cat=163570

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.