Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் - நிலாந்தன்

November 11, 2018

 

மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’ அவர்களை விமர்சித்தார். வண்ணாத்திப் பூச்சிகள் என்பது தன்னினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும். அதற்கு மங்கள சமரவீர தான் மைத்திரியைப் போல ‘ஒர் அட்டையல்ல’ என்று கூறியுள்ளார். பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்; சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த 5ம் திகதி சுமார் இருபத்தையாயிரம் பேர் கூடியிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்தே மைத்திரி ரணிலை மேற்கண்டவாறு விமர்சித்தார்.அக்கூட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயர் மக்கள் மகிமை. ரணிலைப் பற்றி பேசத்தொடங்கும் பொழுது முதலில் மைத்திரியிடம் ஒரு தயக்கம் இருந்தது. அவர் பதட்டமாகவும், தளம்பலாகவும் காணப்பட்டார். அவருடைய உடல் மொழியானது அவர் திணறுவதைக் காட்டியது. அவருடைய வலது கை அசைவுகள் அவர் பதறுவதைக் காட்டின. ரணிலை இயக்குவது வண்ணத்திப் பூச்சிகளே என்ற தொனிப்பட அவர் பேசத் தொடங்க அவருடைய பின்னணியில் அமர்ந்திருந்த மகிந்த தன்னுடைய தலையில் கையை வைத்தார். ஆனால் கூட்டம் ஆர்ப்பரித்தது. மைத்திரி துணிச்சலடைந்தவராக திரும்பவும் அதை கூறியபொழுது மகிந்தவும் ஏனைய பிரதானிகளும் அதை ரசித்து ஆமோதித்து சிரித்தார்கள். கூட்டம் முன்னதை விட அதிகமாக ஆர்ப்பரித்தது. இப்படியாகப் போயிற்று இலங்கைத்தீவின் அரசியல் நாகரீகம்.
இப்படிப்பட்டதோர் அரசியல் நாகரீகத்தின் பின்னணியில் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்ததில் வியப்பேதுமில்லை.இது தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது. கூட்டமைப்பும் இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக ஒரு கதை வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகாரமுடைய அரசுத் தலைவருக்கு எதிராக வழக்கில் வெல்ல முடியுமா? நீதிமன்றத்துக்குப் போய் நீதி பெறலாமென்றால் ஏன் ரணில் இது வரை அதைச் செய்யவில்லை? தமது நீதித்துறை தொடர்பில் ஒரு நாட்டின் தலைவர் எப்படிப்பட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்?

வரும் பதினான்காம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதாக மைத்திரி கடந்த கிழமை அறிவித்திருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்றுக்கொள்ளாத வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாகவே அவர் இவ்வாறு அறிவித்ததாகக் கருதப்படுகிறது. அக்கால அவகாசத்திற்குள் மகிந்த தன் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விடுவார் என்று மைத்திரியும், மகிந்தவும் நம்பினார்கள். ஆனால்; நிலமை மகிந்தவிற்கு சாதகமாக இருக்கவில்லை. ஆட்சியைக் கவிழ்த்த கையோடு அவர் தனக்குரிய பெரும்பான்மையைத் திரட்டியிருந்தால் வெளிநாடுகளின் அழுத்தம் வரமுன்னரே தன்னைத் ஸ்தாபித்திருக்கலாம். ஆனால் ஆட்சியைக் கவிழ்த்த கையோடு அவர் எதிர்பார்த்த வேகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு எம்பிமார்களை விலைக்கு வாங்க முடியவில்லை;.

அதே சமயம் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக தன் முடிவை அறிவித்துவிட்டது. ஜே.வி.பியும் அவ்வாறு அறிவித்துவிட்டது. இதனால் நிலமை ரணிலுக்கு சாதகமாகத் திரும்பிவிட்டது. இந்நிலையில் பதினான்காம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டினால் அதில் தோற்கடிக்கப்படலாம் என்ற ஒரு பதட்டம் மகிந்த அணியின் மத்தியில் தோன்றியது. எனவே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார்கள்.

பத்தொன்பதாவது திருத்தத்தின்படி ஒரு நாடாளுமன்றத்தைக் கலைப்பதென்றால் 54 மாதங்கள் கழிய வேண்டும். அதன்படி முன்னிருந்த நாடாளுமன்றத்தை 2020 பெப்பரவரி மாதமே கலைக்கலாம். அதேசமயம் ஒரு வாக்கெடுப்பில் மகிந்த தோற்கடிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக பெரும்பான்மையைக் காட்டக்கூடிய மற்றொருவரை பிரதமாராக நியமிக்க வேண்டும் ஆனால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதுமட்டுமல்ல இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்னரே இந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்து விடும். அதாவது வருமாண்டின் இறுதிப் பகுதியில் அது முடிவடையும்.

பத்தொன்பதாவது திருத்தம் எனப்படுவது மகிந்த அணியை முடக்குவதற்காகவும், ரணிலைப் பாதுகாப்பத்காகவும் உருவாக்கப்பட்ட ஒன்று. வெளித் தோற்றத்திற்கு அது அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கானது என்று கூறப்பட்டாலும் உள்நோக்கத்தைப் பொறுத்தவரை அது ராஜபக்ஷக்களுக்கு எதிரானது. அது ஒரு யாப்புப் பூட்டு.எனவே சட்டப்படி முயற்சித்தால் அது தனக்கு சாதகமாக இருக்காது என்று விளங்கியபடியால்தான் ராஜபக்ஷ சட்ட மீறலாக அதாவது யாப்பு மீறலாக ஆட்சியைக் கவிழ்த்தார். எனவே இனிமேலும் யாப்புக்கு உட்பட்டு அவர் தன்னை ஸ்தாபிக்க முடியாது. யாப்பை மீறித்தான் அதைச் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்வதற்கு ஒரு தோதான ஆளாக மைத்திரி காணப்படுகிறார். கடந்த 5ம் திகதி நடந்த கூட்டத்தில் அவர் பேசியதைப் பார்த்தால் அவர் நிச்சயமாக ராஜபக்ஷக்களை திருப்திப்படுத்தவே முயற்சிப்பார். அதன்படி அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். யாப்பு நாகரீகம், நாடாளுமன்ற நாகரீகம், ஜனநாயக விழுமியங்கள் போன்ற வார்த்தைகள் இலங்கைத்தீவுக்குப் பொருந்தாது.குறிப்பாக மைத்திரி-மகிந்த அணிக்கு யாப்பு என்ற பூட்டை சடடப்படி திறக்க முடியாது. எனவே பூட்டை உடைப்பதே அவர்களுக்குள்ள ஒரே வழி.அதாவது அளாப்பி விளையாடுவது.

அப்படி நாடாளுமன்றத்தைக் கலைத்தால்தான் மகிந்தவின் திட்டம் நிறைவேறும். ஏனெனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஒரு புதிய தேர்தலை நடாத்த வேண்டியிருக்கும். நிச்சயமாக அதில் மகிந்த வெல்லக்கூடிய வாய்ப்புக்களே அதிகம். இனி நடக்கக் கூடிய எல்லாத் தேர்தல்களிலும் தனக்கு வெற்றி நிச்சயம் என்று மகிந்த நம்புகிறார். அதில் உண்மையும் உண்டு. அவர் வெற்றிபெறக் கூடாது என்பதற்காகத்தான் ரணில் தேர்தல்களை ஒத்தி வைத்துக்கொண்டு வந்தார். அவ்வாறு பல மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இந்த ஆண்டு நடாத்திய போது அது மகிந்தவின் பலத்தை நிரூபிப்பதாக அமைந்து விட்டது. அதில் பெற்ற வெற்றிகளின் பின்னணியில்தான் மகிந்த ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்;. அத்தேர்தல் முடிவுகளின் படி கடந்த நான்காண்டுகளாக கூட்டாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைகள் அனைத்தும் காலாவதியாகி விட்டன என்ற ஒரு வாதத்தை மகிந்தவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இப்பொழுது நடந்துகொண்டிருப்பது மக்களாணைக்கும், யாப்பிற்கும் இடையிலான ஒரு யுத்தம் எனலாமா? அல்லது மக்கள் ஆணைக்கும், மேற்கத்தைய மற்றும் இந்திய விருப்பங்களுக்கும் எதிரான ஒரு யுத்தம் எனலாமா?

ஆம் அப்படித்தான் ராஜக்ஷ ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இந்த யுத்தத்தில் யாப்பை முறித்துக்கொண்டு ஒரு பொதுத் தேர்தலை நடாத்தி அதில் மகிந்த தனது ஆட்சியை நிலைநிறுத்தலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எனவே மகிந்த – மைத்திரி அணிக்கு இப்பொழுது தேர்தல்கள் தேவைப்படுகின்றன. அதற்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதே ஒரே வழி. யாப்பு மீறலாக அதைச் செய்து விட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து தமக்குத் தேவையான சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்? அதாவது அளாப்பி விளையாடி வென்று விடடால் பின்னர் வெற்றியே எல்லாவற்றையும் நியாயப்படுத்திவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்?

ஒரு தேர்தல் நடந்தால் அதில் மகிந்த பெருவெற்றி பெறுவாரென்றும் அவர் தன்னுடைய முன்னைய ஆட்சிக்காலங்களில் செய்ததைப் போல ஏனைய கட்சிகளை உடைத்து எம்பிமார்களை தன்வசப்படுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக்கூட பெற்றுவிடக்கூடும் என்று தென்னிலங்கையில் வசிக்கும் ஒரு தொழிற்சங்கவாதி சொன்னார். மகிந்தவை ரணில் எதிர்கௌ;வதென்றால் தமிழ் – முஸ்லிம் வாக்குகளை அதிகம் நம்பியிருக்க வேண்டிவரும். ஆனால் ரணில் மைத்திரி கூட்டிற்கு வாக்களித்து ஏமாற்றமும், விரக்தியும் அடைந்திருக்கும் தமிழ் மக்கள் முன்னைய தேர்தல்களில் வாக்களித்ததைப் போல இனிமேலும் கொத்தாக வாக்களிப்பார்களா? குறிப்பாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் கஜேந்திரமாருக்குக் கிடைத்த வாக்குகள் விக்னேஸ்வரனின் புதிய கட்சி என்பவற்றை கருதிக் கூறின் தமிழ் வாக்குகள் ஒரு கொத்தாக ரணிலுக்கு விழக்கூடிய வாய்ப்புக்கள் முன்னரைப் போல இல்லை. எனவே மகிந்தவிற்கு எதிராக ரணில் பெறக்கூடிய வெற்றிகள் தொடர்பில் நிறையச் சந்தேகங்கள் உண்டு.

அது மட்டுமல்ல. இப்பொழுது கூட்டமைப்பு மகிந்தவிற்கு எதிராக நிலை எடுத்திருக்கிறது. இது அதன் தர்க்கபூர்வ விளைவாக வாக்குகளை இனரீதியாக பிளக்கும். எப்படியெனில் தனது வெற்றியைத் தடுத்தது தமிழ் மக்களே என்று மகிந்த நம்புவார். புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த பின்னரும் தமிழ்த்தரப்பு நாட்டில் இன்னமும் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதை சிங்களக் கடும்போக்குவாதிகள் வெறுப்போடும், வன்மத்தோடும்தான் பார்ப்பார்கள். தென்னிலங்கையை யார் ஆள வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத அவமானகரமான ஒரு யதார்த்தம். தேர்தல் காலங்களில் மகிந்த அணி இந்த விவகாரத்தைத் தூக்கிப் பிடித்தால் அது சிங்கள கடும்போக்கு வாக்குகளை மட்டுமல்ல சாதாரண அப்பாவிச் சிங்கள மக்களின் திரளான வாக்குகளையும் மகிந்தவை நோக்கியே தள்ளிவிடும்.

ரணில் – சம்பந்தர் கூட்டு எனப்படுவது யானை – புலி கூட்டாகவே காட்டப்படும். சம்பந்தர் நிச்சயமாக ஒரு புலி இல்லை. அவர் தன்னுடைய கட்சியை எப்பொழுதோ புலி நீக்கம் செய்து விட்டார். அவரைக் கார்ட்டூனில் வரையும் சிங்களக் காட்டூனிஸ்ட்டுக்கள் அவருடைய மேற்சட்டையின் பின்பக்கம் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலி வாலை இப்பொழுது வரைவதில்லை. ஆனால் தேர்தல் என்று வரும் பொழுது மகிந்த அணி இனவாதத்தைக் கக்குமிடத்து வாக்குகள் இனரீதியாகவே பிளவுபடும். அதாவது கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஐ.நாவும் மேற்கு நாடுகளும் முன்னெடுத்து வந்த நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் இலங்கைத்தீவில் தோல்வியுறத் தொடங்கிவிட்டன.

கடந்த வியாழக் கிழமை கொழும்பில் சோபித தேரரின் நினைவு நாள் இடம்பெற்றது. பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட நினைவுப் பேருரை ஆற்றியிருக்கிறார். அப்பேருரையில் அவர்……..’சகல குழுக்களினதும் தார்மீகத் தலையீடு ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது. வண. மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். அதேபோன்ற அணுகுமுறையே இன்று முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகிறது’ என்று உரையாற்றியிருக்கிறார்.அப்படித் தார்மீகத் தலையீடு செய்யத்தக்க தரப்புக்கள் இச்சிறிய தீவில் யாருண்டு? இரண்டு கட்சிகளும் மக்கள் தம் பக்கமே என்று காட்டப் போட்டி போட்டுகொண்டு கூட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் ஒழுங்குபடுத்தி வருகின்றன. ஆனால் மக்கள் மகிமை என்று கூறிக்கொண்டு தலைவர்கள் மேடைகளில் தங்களைத் தாங்களே பரிசுகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்கால அரசியல் நடப்புக்களைக் குறித்து சபரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளரான முஸ்லிம் பெண்மணி ஒருவர் சமூகவியற் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரான சரத் ஆனந்தவிடம் பின்வருமாறு கேட்டிருக்கிறார். ‘ தற்போதைய நம்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று. அதற்கு கலாநிதி சரத் ஆனந்த பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘ நாட்டு மக்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி வைத்து விட்டு, அவர்களின், மூக்கின் மேல் மலத்தை எடுத்துப் பூசி முகர்ந்து பார்த்தபடி கிடவுங்கள் என்று விட்டுவைத்துள்ள மாதிரியான உணர்வுதான் எழுகிறது. வேறென்ன சொல்ல இந்த நிலமை பற்றி?’

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.