Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கொரோனா அரசியலும் பாராளுமன்ற தேர்தலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். உலக நாடுகளுடன் அதிக தொடர்புடைய நகரங்களும், நகர மக்களுமே தொற்றின் பிரதான இடம் பிடித்த மாவட்டங்களாக உள்ளன. இதே நேரம் இத்தகைய நெருக்கடியின் மத்தியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிடுகின்றதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையும் கொரோனா தொற்றின் மத்தியில் தேர்தலின் அவசியப்பாடு பற்றி உரையாட முயலுகிறது.

 

முதலாவது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை மீண்டும் அவசரகால சட்டத்தின் விதியின் கீழ் கூட்டமுடியுமென அரசியலமைப்பு கூறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கை தொடர்பில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசவுடனான சந்திப்பொன்றில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்~ தெரிவித்த கருத்து கவனத்திற்குரியது.

தற்போதைய சூழலில் ஒரு அவசர சட்டத்தை பிரகடனப்படுத்துவது சாத்தியமற்றது என்றும் முடிந்தவரை பாராளுமன்ற தேர்தலை நிகழ்த்தி முடிப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்ற சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற தேர்தலை கட்டம் கட்டமாக அல்லது மாவட்ட ரீதியாக நடாத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா தாக்கத்துக்குள்ளாகிய மாவட்டங்கள் என்ற அடிப்படையில் மூன்று பிரிப்புக்களை அரசாங்கம் வகுத்துள்ளது. அதாவது கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள் ஒரு தொகுதியாகவும், தொற்று குறைந்தளவு உள்ள மாவட்டங்கள் ஒரு தொகுதியாகவும், தொற்று இல்லாத மாவட்டங்கள் ஒரு தொகுதியாகவும் பிரித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் பாராளுமன்ற தேர்தலையும் அத்தகைய பிரிப்புக்கூடாக அல்லது மேலதிக நடவடிக்கையூடாக மேற்கொள்ள அதிக வாய்ப்புக்கள் தென்படுகிறது.

இரண்டாவது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் தேர்தல் நடாத்தி அடுத்த பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். அதன்படி யூன் 02ம் திகதி புதிய பாராளுமன்றம் அமைக்கப்படுவது சட்டப்பிரகாரம் அவசியமானது. ஏதும் நெருக்கடி காரணமாக இரண்டு வாரம் ஒத்திவைக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால் வேறு ஏதும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பாராளுமன்றத்திற்கே அதிகாரமுண்டு எனவும் சட்டம் குறிப்பிடுகிறது. அதாவது தேர்தலை கட்டம் கட்டமாக நடாத்துவது அல்லது கால இடைவெளியின் அடிப்படையில் நிகழ்த்துவது என்ற விடயங்கள் தீர்மானிப்பது பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு என வாதிடப்படுகிறது.

மூன்றாவது பிரச்சாரம் இல்லாது தேர்தலை நடாத்துவது பற்றிய நெருக்கடி எதிர்கட்சிகளால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறலாக கருதப்படுமாயின் தேர்தல் நடாத்துவது சிக்கலுக்குரியதாக மாறும். அதற்கான மனுவை எதிர்க்கட்சிகள் அல்லாத ஏதாவது ஒரு அமையம் தாக்கல் செய்தால் கூட தேர்தல் நடாத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகமுண்டு.

நான்காவது எதிர்கட்சிகளும் சரி பிரதேச மட்டத்திலுள்ள கட்சிகளும் சரி பிரச்சாரத்தை பெரிய விடயமாக கருதுகின்றன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. ஒரு தரப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படும் போது மற்றத் தரப்பு அதிக பிரச்சாரத்தினை முதலீடாகக் கொண்டே தேர்தலை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் ஐ.தே.கவின் ஒரு பிரிவினருக்கு தேர்தல் பிரச்சாரமின்றி நிகழுமாயின் பாரிய நெருக்கடியை தேர்தலில் எதிர்கொள்ளும் துயரம் ஏற்படும். அது அத்தரப்பை அரசியலிருந்து முற்றாக இல்லாமல் செய்யும் நிலையை ஏற்படுத்திவிடும்.

அவ்வாறே தமிழர் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள புதிய தரப்புக்களும் ஏற்கனவே தோல்விகளை எதிர்கொண்ட தரப்பினருக்கும் பிரச்சாரம் மிகப்பிரதானமான விடயமாக உள்ளன. வடக்கு கிழக்கில் அதிகமாக முளைத்துள்ள கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் பாரிய பாதிப்பினை பிரச்சாரமற்ற தேர்தல் ஏற்படுத்தும். இதில் கட்சிகள் மட்டுமன்றி புதிய அறிமுகம் குறைந்த வேட்பாளரது வாய்ப்புக்கள் சாத்தியமற்றதாக போகக் கூடியதாக மாறும்.

ஐந்தாவது இத்தகைய நடைமுறைகளால் பலவீனமான எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் செயல்படும் நிலை ஏற்படும். பலமான எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இல்லாது போகுமாயின் ஜனநாயகம் கேள்விக்குரியதாகும். உலகளாவிய ரீதியில் தாராள ஜனநாயக அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் இலங்கையில் ஜனநாயகமற்ற சூழலை அதிகப்படுத்தும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சியும் பலவீனமானதாக அமைந்தால் முழுமையான பாதிப்பினை ஏற்படுத்தும். ஏற்கனவே கொரோனா இலங்கையின் ஜனநாயக வெளியை முடமாக்கிவிட்டது. இத்தகைய முடக்கம் இல்லாதுவிட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியாது என்பது யதார்த்தமானது தான். ஆனால் அதற்காக ஜனநாயக வெளியை நிராகரிக்க முடியாது. அதற்கான வாய்ப்புக்களை இழக்கவும் முடியாது.

ஆறாவது, ஆளும் தரப்பு தற்போதைய சூழலில் சட்ட வரைபுக்காக தேர்தலை நிகழ்த்தினாலும் சரி அல்லது ஆளும் தரப்பின் நலனுக்காக நிகழ்த்தினாலும் சரி முழுமையான வெற்றி ஆளும் தரப்புக்கே உரியதாகும். பெருமளவிற்கு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திய விதத்தினைப் பார்க்கும்போது அதன் செயல்வடிவம் சிறப்பானது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பெரும் தேசங்கள் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளும் போது இலங்கை வெற்றிகரமாக தப்பிப் பிழைப்பதற்கு தற்போதைய ஆட்சி காரணம் என்பது தவிர்க்க முடியாது ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும். அதனால் ஆளும் தரப்பு இயல்பாகவே பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பாண்மையை பெறுவது சாதாரணவிடமாகவே தெரிகிறது.

பிரமதர் மகிந்த ராஜபக்~வின் கொரோனா தொடர்பான உரை கூட தேர்தல் உத்திகளை அதிகம் பிரதிபலிப்பது போல் அமைந்திருந்தது எனக் கருத இடமுண்டு. எனவே தேர்தலை நடாத்துவதென்பது ஆளும் தரப்புக்கு சாதகமானதாகவே அமையும். அதனால் சட்டச் சிக்கலுக்கோ, கொரோனா நெருக்கடிக்கோ அப்பால் சென்று தேர்தலை ஆளும் தரப்பு நடாத்தியே தீரும் என்பதில் குழப்பம் அத்தரப்புக்கு இல்லை. எதிர் தரப்பினால் எந்தளவுக்கு ஆளும் தரப்பின் உத்திகளை தகர்க்க முடியும் என்பது கேள்விக்குரியதே. எதிர் தரப்பு மிகப் பலவீனமான சூழலுக்குள்ளே காணப்படுகின்றது. அதனால் ஆளும் தரப்புடன் இணைந்து போகும் நிலையே பொருத்தமானதாக அமையப் போகிறது.

எனவே கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி இலங்கை அரசியலில் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. ஆளும் எதிர் தரப்பு என்பதற்கு அப்பால் சுதேசம், தேசியம் சார்ந்த அரசியலின் எழுச்சிக்கு வாய்ப்பான காரணத்தை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஈட்டப்படும் அரசியல் வெற்றியானது அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அடுத்துவரும் தசாப்தங்களுக்கே முதலீடாக மாறிவிடும்.சுனாமி தாக்கம் சிறந்ததொரு அனுபவம் ஆகும். உலகத்தின் போக்கும் இலங்கையின் போக்கும் ஒரே திசையில் பயணிக்கின்றதை காணமுடிகிறது. உலகம் முழுவதும் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. இதற்கான அடிப்படைப் பாராளுமன்ற தேர்தல் இரண்டாவது வாய்ப்பாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://thinakkural.lk/article/38524

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.