Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரொணா காலத்தில் சகவாழ்வு எதிர்கொள்ளும் சவால்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான சந்திப்பு ஒன்றிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

977-1.jpgஉலகளாவிய ரீதியிலே தோன்றியிருக்கும் கொரொணா வைரஸ் தொற்று இலங்கையினையும் மிகவும் மோசமான முறையிலே பாதித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட வகையான வைரஸினால் ஏற்படுத்தப்படும் ஒரு நோயாக இருக்கும் அதேவேளை, இந்த நோயினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது தனியே ஒரு மருத்துவ நெருக்கடி மாத்திரமல்லாமல், ஒரு வகையிலான சமூகப் பொருளாதார அரசியல் ரீதியிலான நெருக்கடியாகவும் இப்போது மாறி வருகிறது.

எமது நாட்டிலும், சமூகங்களினுள்ளும் இருக்கும் பிளவுகள் இந்த மருத்துவ நெருக்கடியின் விளைவுகளை நாம் வேறுபட்ட வகைகளிலே எதிர்கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும் காரணங்களாக அமைகின்றன. இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கைகளும், சமூகத் தூரப்படுத்தல் செயன்முறைகளும் அவசியமானவையாக இருக்கும் அதேவேளை, இந்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான பிரச்சினைகள் பலவும் ஏற்பட்டுள்ளன.

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தின் சார்பாக‌ எழுதப்படும் இந்த பத்தியின் நோக்கம் கொரொணா வைரஸ் தொற்றுக் காரணமாக எழுந்துள்ள பொருளாதார, சமூக ரீதியிலான பாதிப்புக்களை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகிறோம் என்பதனையும், அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவதிலே நாம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம் என்பதனையும் பற்றி சில கருத்துக்களினை முன்வைப்பதே. இந்த நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரையிலும் வாராந்தம் இந்தப் பத்தியினூடாக நாம் மக்களுக்கு எமது கருத்துக்களை முன்கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம்.

கொரொணா காலத்தில் மதவாத அரசியல்

யாழ்ப்பாணத்திலும் சரி இலங்கையிலும் சரி கொரொணாத் தொற்று ஏற்பட்டத்தனை அடுத்து சிறுபான்மை இனங்களையும், சமயங்களையும் சேர்ந்தோருக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. தென்னிலங்கையிலே, கொரொணாவினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையினைச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசியல்வாதிகளும், ஊடகங்களும் திட்டமிட்ட வகையிலே முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வன்மம் மிக்க‌ கருத்துக்களை விதைப்பதிலே ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் மக்களின் மத்தியிலேயே இந்த நோய் கூடுதலாக இருப்பது போலவும், அவர்களினாலேயே இந்த நோய் பரப்படுவதாகவும் கருத்துக்கள் விதைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் கடுமையாகக் கண்காணிக்கப்படல் வேண்டும் எனவும் சிங்களத் தேசியவாதத் தரப்புக்களினால் வலியுறுத்தப்படுகிறது.

கொரொணாத் தொற்றினால் இறந்த முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த இருவரது உடலங்கள் அவர்களது மத நம்பிக்கைகளுக்கு முரணான முறையில் அரசினால் தகனம் செய்யப்பட்டன‌. உலக சுகாதார ஸ்தாபனம் கொரொணாத் தொற்றினால் இறந்தோரினை நல்லடக்கம் செய்வதனால் எந்த மருத்துவ ரீதியிலான பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்திருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் தகனம் செய்வது மாத்திரமே சுகாதார ரீதியிலே பொருத்தமான முறையாக‌ இருக்கும் எனத் தனது சுற்றுநிரூபம் ஒன்றின் மூலமாக வலியுறுத்தியிருக்கிறது. மக்களின் மத நம்பிக்கைகளையும் தனிப்பட விருப்புக்களையும் அவமரியாதை செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றமை மிகவும் வருந்தத் தக்க ஒரு விடயமாக இருக்கிறது. இவ்வாறான செயன்முறைகள் நாட்டு மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வினையும், ஒற்றுமையினையும் பாதிக்கக் கூடிய அதேவேளை, இந்த நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பி நிலைமையினை மேலும் பல வழிகளிலே சிக்கலாக்கும் நடவடிக்கைகளாகவும் அமைகின்றன.

யாழ்ப்பாணத்தில் கொரொணாத் தொற்றும் கிறீஸ்தவர்களும்

யாழ்ப்பாணத்திலே சுவிஸ்லாந்தில் இருந்து வந்த கிறீஸ்தவ மத போதகர் ஒருவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பின்னர் போதகர் தனது நாட்டுக்குத் திரும்பிய பின்னர் அவருக்குக் கொரொணாத் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தவர் ஒருவருக்கும், போதகர் யாழ்ப்பாணத்திலே பங்குபற்றிய கூட்டத்திலே கலந்துகொண்டிருந்த சிலருக்கும் கொரொணாத் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலே சிறுபான்மையாக இருக்கு மதத்தினருக்கு எதிராக இயங்கும் சக்திகள் இந்த சம்பவங்களினைத் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

இந்தச் சம்பவங்களை அடுத்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் அனைத்துக் கிறீஸ்தவருக்கும் எதிரான வகையில் பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்களும், கிறீஸ்தவ சமயத்தினை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களும் சமூக ஊடகங்களிலே பரவலான முறையிலும், சில பிரதான ஊடகங்களிலே மறைமுகமாகவும் பதிவிடப்பட்டு வருகின்றன. கொரொணா பரவக் கூடும் என்ற அச்சம் நிலவிய காலத்திலே மக்கள் கூடியளவில் ஒன்று கூடும் வகையில் மத நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்தமை பொறுப்பற்ற செயலாக இருக்கும் அதேவேளை, இவ்வாறான செயற்பாடுகள் எல்லா சமயங்களினைச் சேர்ந்தவர்களாலும் வெவ்வேறு இடங்களிலே முன்னெடுக்கப்பட்டன. எனவே ஒரு குறித்த சமயத்தினருக்கு எதிராக மாத்திரம் கருத்துக்களைப் பதிவு செய்கின்ற போக்கு எமது பிரதேசத்தின் பன்மைத்துவக் கலாசாரத்துக்கும், சகவாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றும் தோரணையில் சைவ சமயத்தினரையும் கோயில்களையும் ஒட்டுமொத்தமாகத் தாக்கும் சில‌ முயற்சிகளும் கூட சில சமூக வலைத்தளங்களிலே பதிவாகி உள்ளன. மதங்களுக்கு இடையிலே விரோதத்தினையும், போட்டிகளையும் வளர்த்துவிடும் வகையிலான ஒரு நெருக்கடியாகக் கொரொணா நிலைமை மாறுவதனைத் தவிர்க்கும் வகையில் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களும், சமய நிறுவனங்களும் செயற்பட வேண்டியது அவசியம்.

விஞ்ஞானமும் மத நம்பிக்கைகளும்

கொரொணாத் தொற்று ஏற்பட்டுள்ள இன்றைய சூழலிலே விஞ்ஞானம் சார் மருத்துவ ரீதியிலான அறிவுக்கும், சமய ரீதியிலான அறிவுக்கும் இடையிலே முரண்பாடுகளை வளர்த்தெடுக்கும் முயற்சிகளும் சில தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றன‌. வைத்திய ரீதியில் முன்வைக்கப்படும் நியாயபூர்வமான எல்லா அறிவுரைகளையும் மக்கள் பின்பற்றுவது நோய்த் தொற்றினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். அதேவேளை, நெருக்கடியான இந்த சூழலிலே மக்களிலே பலர் ஆன்மீக ரீதியிலும், உளவியல் ரீதியிலும் தம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சமயங்களும், சமய நம்பிக்கைகளும் அவர்களுக்கு உதவுகின்றன என்பதனையும் நாம் மறுக்க முடியாது. எனினும் சமய நம்பிக்கையின் பேரிலே மக்கள் தமது ஆரோக்கியத்தினைப் பேணும் முயற்சிகளைக் குழப்புவதும், மதங்களின் பெயரிலே இந்த நோய்த் தொற்றுத் தொடர்பிலே மக்கள் மத்தியிலே, தமது எதிர்காலம் தொடர்பிலே அவநம்பிக்கையினை ஊட்டும் கருத்துக்கள் பரப்பப்படுவதும் நிறுத்தப்படுவது மிகவும் முக்கியம். விஞ்ஞானமும், சமயங்களும் மக்கள் மத்தியிலே உடல் உள ரீதியிலான ஆரோக்கியத்தினையும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையினை வளர்த்தெடுப்பதிலேயும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது இன்றைய காலத்திலே அவசியம்.

நாட்டின் மக்கள், அதிலும் குறிப்பாக வறிய, உழைப்பாளர் வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள், இன்று தமக்கு வேண்டிய அத்தியாவசியமான உணவுகளையும், மருந்துகளையும் கூடக் கொள்வனவு செய்வதற்கு வசதியற்ற நிலையில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலே உணவு நெருக்கடி ஒன்று தோன்றும் நிலையும் அவதானிக்கப்படுகிறது. அரசினால் வழங்கப்படும் உதவிகளும், நிவாரணங்களும் போதுமற்றனவாக இருப்பதுடன், அவை பலரினைச் சென்றடையாத நிலையும் அவதானிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் சமூகங்கள் ஒன்றை ஒன்று பாதுகாத்து, ஒன்றுக்கு ஒன்று உதவிகளை வழங்கி இந்தப் பேரிடரான நிலைமையினைச் சமாளிப்பது அவசியம். இவ்வாறான காலப்பகுதியில் மதவாத, இனவாத ரீதியிலே வதந்திகளைப் பரப்பும் சக்திகளினதும், பிளவுகளை ஏற்படுத்தும் சக்திகளினதும் கரங்கள் மேலோங்குவதனைத் தடுக்கும் வகையில் நாம் அனைவரும் பொறுப்புடனும், நிதானத்துடனும் செயற்படுவது மிகவும் அவசியம்.

 

http://thinakkural.lk/article/38527

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.