Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு

  • லதன் சுந்திரலிங்கம் நேர்காணல்

latan-300x200.jpegகொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி மக்களை அதிகளவுக்குப் பலியெடுத்துவரும் நாடுகளில் பிரித்தானியா முக்கியமானது. பிரித்தானியாவில் தற்போதைய நிலையில் கொரோனா மரணம் 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் தொகை தினசரி அதிகரித்துச் செல்லும் நிலையில், மருத்துவத் துறையினர் நோயாளிகளைப் பராமரித்துக் – குணமாக்குவதில் இரவு பகலாக தீயாக உழைக்கின்றார்கள்.

பிரித்தானியாவின் மருத்துவச் சேவையில் NHS எனப்படும் தேசிய சுகாதார சேவைப் பிரிவுதான் முக்கியமான பங்கை வகிக்கின்றது. இதில் அதிகளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது கொரோனாவுடன் வெளிப்படையாகியிருக்கின்றது. சுமார் 25,000 ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் மருத்துவர்களாகவும், தாதியர்களாகவும், மருத்துவத் துறையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளிலும் பணியாற்றுகின்றார்கள். இது பிரித்தானிய மருத்துவத் துறையின் ஏழில் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆபத்தான பணியில் தமிழ் மருத்துவர் ஒருவர் தனது உயிரையும் பலிகொடுத்திருக்கின்றார். விஷ்னா இராசையா என்ற அந்த மருத்துவர் கடந்த வாரம் உயிழந்தமை பிரித்தானிய மருத்துவத் துறையினரை அதிரவைத்துள்ளது.

ஐரோப்பாவில் மருத்துவத்துறைக்கு அதிகளவானவர்களைப் பயிற்றுவித்து அனுப்பிவைப்பவர்களில் முக்கியமானவர் லதன் சுந்தரலிங்கம். நோயாளர்களைப் பராமரிக்கும் பணியிலும் அவரது அமைப்பு தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றது. சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட லதன் சுந்திரலிங்கம் ஒரு இளம் தொழிலதிபர். தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர். இன்றைய ஆபத்தான கால கட்டத்தில் பிரித்தானிய மருத்துவத்துறையில், இலங்கைத் தமிழர்கள் இப்போது செய்துவரும் பணி அந்த நாட்டின் வரலாற்றில் பொறிக்கப்படும் எனக் கூறுகின்றார் லதன். தொலைபேசி மூலமாக அவரிடம் நேர்கண்ட போது இது குறித்த பல முக்கியமான தகவல்களை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

கேள்வி: பிரித்தானியாவில் தற்போதைய நெருக்கடியில் மருத்துவத்துறையிலுள்ள தமிழர்களின் சேவை வரலாற்றில் பொறிக்கப்படும் எனச் சொல்கின்றீர்கள். எதற்காக?

பதில்: கொரோனா வைரஸினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா உள்ளது. மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. படுக்கைகள் போதாது என்ற நிலையில், லண்டனிலுள்ள என்ஸெல் மைதானம் 2,000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக அவசரமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த மைதானத்தில்தான் மாவீரர் தின நிகழ்வுகள் கூட இடம்பெறுகின்றன. இந்தளவு பெரிய மைதானம் மருத்துவமனையாக மாற்றப்பட்டிருப்பது பிரித்தானியா எதிர்கொண்டுள்ள பாரிய மருத்துவ நெருக்கடியை வெளிப்படுத்துகின்றது.

இந்தப் பின்னணியில் மருத்துவத்துறையில் உள்ள தமிழர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கின்றது. மூன்றாவது உலகயுத்தம் போன்ற இந்த நிலையில், மருத்துவத்துறையில் தமிழர்கள் அர்ப்பணிப்புடன் செய்யும் பங்களிப்பை பிரித்தானிய மக்கள் நன்றியுடன் பார்க்கின்றார்கள்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது யூதர்கள் பிரித்தானியாவுக்கு ஆதரவாக அளித்த பங்களிப்பு முக்கியமானது. யுத்த கள நிலையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனை பிரித்தானியர்கள் இன்று கூட நன்றியுடன் நினைவு கூருகின்றார்கள். அது போல இந்த சந்தர்ப்பத்தில் – மூன்றாவது உலக யுத்தம் போன்ற ஒரு நிலையை கொரோனா உருவாக்கியிருக்கும் பின்னணியில் மருத்துவத்துறையில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. பிரித்தானிய தொலைக்காட்சிகள் தமிழர்களின் பங்களிப்பை விதந்து குறிப்பிடுகின்றன. பிரித்தானியாவின் வரலாற்றில் – இடர் மிகுந்த ஒரு காலப்பகுதியில் முக்கியமான பங்கை அங்குள்ள தமிழ் மக்கள் செய்கின்றார்கள் என்பது எம்மையும் பெருமைகொள்ள வைக்கின்றது.

பிரச்சினை – ஆபத்து என்றவுடன் பலர் ஒதுங்கிப்போய்விடுகின்றார்கள். ஆனால், மருத்துவத் துறையில் பணிபுரியும் இலங்கைத் தமிழர்கள் அவ்வாறு ஓடவில்லை. தமது உரியைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் அவர்கள் பணியாற்றுகின்றார்கள். அது பிரித்தானிய மக்கள் மத்தியில் ஈழத் தமிழர்கள் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. அதனால்தான் சொல்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்கள் வழங்கியிருக்கும் பங்களிப்பு பிரித்தானிய வரலாற்றில் எழுதப்படும்.

கேள்வி: ஏனைய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஈழத் தமிழர்கள் இவ்வாறு அதிகளவு அர்ப்பணிப்புடன் செயற்படக் காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழ் மக்களுக்குள்ள மனப்பலம் இதற்குக் காரணம். இந்தத் தலைமுறையினர் தாயகத்தில் இருந்த போது போருடன் பழகியவர்கள். போருக்குள் வாழ்ந்தவர்கள். இது போன்ற நிலைமைகள் – ஊரடங்கு வாழ்க்கை என்பன எமது மக்களுக்கு பழகிய ஒன்று. ஆபத்தான நிலைகளில் வேலைசெய்து பழகியவர்கள் எம்மவர்கள்.

பிரித்தானிய மருத்துவத்துறையினர் பலர் தற்போதைய நிலையில் அச்சத்தினால் தமது பணிகளுக்குச் செல்லாமல் இருக்கின்றார்கள். ஆனால், தமிழ் மக்கள் அச்சத்துக்கு மத்தியிலும் கடமைக்குச் செல்கின்றார்கள். இலங்கையில் இருந்த போது போருக்குள் கடமையாற்றியதால் அதில் அவர்களுக்கு நல்ல அனுபவம் உள்ளது. போருக்கு மத்தியிலும் துணிச்சலுடன், அர்ப்பணிப்புடன் மருத்துவத்துறையில் பணியாற்றியவர்கள் அவர்கள். இப்போது அந்தத் துணிச்சருடன் பணிக்குச் செல்கின்றார்கள். இது பிரித்தானிய மக்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படுகின்றது. அர்ப்பணிப்பும், மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் விரைந்து செயற்படுவதும் அந்த நாட்டில் அவர்கள் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கின்றது.

எம்மவர்கள் மருத்துவத்துறையில் துணிச்சலாகவும், அர்ப்பணிப்பாகவும் செயற்படுவதன் பலன்கள் இப்போது தெரியாவிட்டாலும் இந்தப் பிரச்சினை முடியும் போது இதன்பெறுபேறை, பிரித்தானிய மக்கள் இதனை எவ்வாறு பார்த்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இது பிரித்தானிய வரலாற்றில் நிச்சயமாகப் பதியப்படும்.

கேள்வி: மருத்துவத் துறை என்னும் போது மருத்துவர்களாக மட்டுமா அல்லது மற்றைய துறைகளிலும் ஈழத் தமிழர்களுடைய பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றதா?

பதில்: டாக்டர்களாக மட்டுமல்ல. தாதியர்களாகவும் தமிழர்கள் பலர் பணிபுரிகின்றார்கள். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மட்டும் போதாது. இதில் தாதியர்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டவர்கள் பயன்படுத்துவது உட்பட பல விடயங்களில் அவர்களுடைய அறிவும் அனுபவமும் முக்கியமானது. அவர்கள்தான் நோயாளர்களை 24 மணி நேரமும் நேரடியாகப் பராமரிக்கின்றார்கள். எம்மவர்கள் இந்த அனைத்துத் துறைகளிலும் பணிபுரிகளின்றார்கள். அந்தத்த துறைகளில் படித்து விற்பன்னர்களாக அவர்கள் உள்ளனர். சுமார் 25,000 தமிழர்கள் பிரித்தானிய சுகாதாரத்துறையில் பணிபுரிகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியர்களைப் பொறுத்தவரையில் முடக்கல் என்பது அவர்களுக்குப் புதிது. எம்மவர்களுக்கு ஊரடங்கு என்பது பழக்கமானது. அத்துடன் ஆபத்தான காலங்களில் அர்ப்பணிப்புடன் ‘றிஸ்க்’ எடுத்து வேலை செய்து பழகியவர்கள். அதனால், இது ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல.

கேள்வி: ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸை வெற்றிகொள்வதில் ஆசிய நாடுகளைப் போல சிறப்பாகச் செயற்படாமைக்குக் காரணம் என்ன?

பதில்: ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் குளிர் இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஆசிய நாடுகளில் சன நெரிசல் அதிகம், சுகாதார வசதிகள் குறைவு. அவ்வாறிருந்தும் ஐரோப்பிய நாடுகளைவிட அங்கு பாதிப்புக்கள் குறைவாகத்தான் இருக்கின்றது. அதனைவிட எமது உணவு முறையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். மஞ்சள், முருங்கை இலை போன்றன ஆசிய நாடுகளில் உணவாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இவற்றுக்கு இப்போது பெரிய சந்தை உருவாகியுள்ளது. முருங்கை இலையை தூளாக்கி டப்பிகளில் அடைத்து ஐரோப்பாவில் விற்கின்றார்கள். ஐரோப்பியர்களே இப்போது அவற்றைத் தயாரித்து விற்கின்றார்கள். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. அதாவது தமிழர்களின் பாரடபரியங்களை அவர்கள் இப்போது பின்பற்ற முனைகின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.