Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்றாட நிகழ்வாகிவிட்ட ஆட்கடத்தல்கள், படுகொலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றாட நிகழ்வாகிவிட்ட ஆட்கடத்தல்கள், படுகொலைகள்

[06 - June - 2007]

ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள் இலங்கையின் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. சட்டம், ஒழுங்கு செவ்வனே கடைப்பிடிக்கப்படுகின்றதா என்ற விரக்தி, வேதனையுடனும் எந்தநேரமும் என்னமும் நடக்கலாம் என்ற பீதியுடனுமே மக்கள் நாட்களை கழிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளும் சமூகப்பணியாளர்களும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், நடைமுறையில் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை செவ்வனே அமுல்படுத்தும் தன்மை குறித்து மக்கள் மனதில் சந்தேகமும் விரக்தியுமே ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் வன்முறைச் சம்பவங்களின் பட்டியலில் செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் இருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் யாழ். குடாநாட்டில் 4 பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் சேர்ந்திருக்கிறது.

இந்தக் குரூரத்தனமான செயற்பாடுகள் பொதுமக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.

தலைநகரில் வைத்து கடத்தப்பட்ட செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் சுமார் 100 கிலோமீற்றர் தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையென ஜனாதிபதி செயலகம் திங்கட்கிழமை அறிக்கையொன்றை விடுத்திருக்கின்றது.

கடல்கோள் புனர்நிர்மாணம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பிரசல்ஸில் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள தருணத்திலும் சர்வதேச தொழிலாளர் அமைய மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதற்காக ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ள வேளையிலும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதற்கான பிரசார நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டதாக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் படுகொலைகள் தென்படுவதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

இலங்கைக்கும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் அபாயகரமானதும் கோழைத்தனமானதுமான முயற்சிகள் இதுவென ஜனாதிபதி செயலகம் கவலை தெரிவித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களின் குரூரக் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் விசாரணைக்கென இரு பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் படுகொலைச் சம்பவங்களை மாத்திரமல்லாது அப்பாவிப் பொதுமக்கள் தினந்தோறும் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது, சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

வகைதொகையின்றி அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தாவிடின், அதிகாரத்திலிருக்கும் உரிமையை எந்தவொரு அரசுமே கோருவதற்கு உரிமையில்லை.

இன்று தலைநகர் கொழும்பு உட்பட சகல பகுதிகளிலுமுள்ள மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் எதுவுமே செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

நீதி, நியாயம், அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுவதிலும் பார்க்க, மௌனமாக இருப்பதே உசிதமானதென பலர் விரக்தியுடன் கூறிக்கொள்வதையும் கேட்க முடிகிறது.

ஆட்கடத்தல்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தலைநகர் கொழும்பைப் பொறுத்தவரை இது கிரமமாக இடம்பெறும் விடயமாகிவிட்டதாகத் தென்படுகிறது.

இந்தக் கொடுமைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான காரணம் என்ன? சட்டம், ஒழுங்கை அமுல்படுத்த வேண்டியவர்கள் `பதிலளிக்கும் கடப்பாட்டை' உரிய முறையில் கடைப்பிடிப்பதில்லை என்பது இந்த விடயங்களைப் பொறுத்தவரை வெளிப்படையானதாகும்.

அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய குரூரத்தனமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் பிரகாரம் நீதி விசாரணைக்குட்படுத்தி உரிய தண்டனை வழங்கும் நடைமுறைகளை முறைமையாக அமுல்படுத்தினால் இந்தக் கொடுமைகளை இல்லாதொழிக்க முடியும்.

எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள் தமது அன்றாட அலுவல்களை எந்தவொரு இடையூறுகளும் இல்லாமல் மேற்கொள்ளக் கூடிய நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தமக்கு நியாயம் தரும் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு மக்களுக்கு முழுமையான பாத்தியதை உண்டு. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை நாகரிகமான சமூகங்களின் `இருப்புக்கு' சவால்கள் ஏற்பட்டிருப்பதாக தோன்றுகின்றது.

ஆகவே, அரசாங்கம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொறுப்பானவர்கள் தமது கடமையை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்களா என்பது தொடர்பாக துரிதமாக ஆராய்ந்து பரிகாரம் காண வேண்டும்.

எந்த வகையிலாவது மனித உயிர்கள் பலவந்தமாக பறிக்கப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் சகல வழிகளிலுமே சொல்லொணா நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். அந்த மக்கள் இயல்பு வாழ்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நியாயபூர்வமான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

`சமன் செய்து சீர்தூக்கும் கோலாக' நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்களின் செயற்பாடுகள் சொல்லிலும் செயலிலும் இருந்தால் தற்போதைய அவலங்கள் நீடிக்காது என்பது உறுதியான நம்பிக்கையாகும்.

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்றாடம் இடம்பெறும் ஆட்கடத்தல், காணாமற்போதலை வெளிப்படுத்த இடமளிக்காவிடின் பாராளுமன்றம் எதற்கு?

[06 - June - 2007]

* ஐ.தே.க. எம்.பி.க்கள் ஆவேசம்; புலிகளுக்கு ஆதரவாக பேசினால் பிஸ்டலுடன் வரவேண்டியிருக்குமென மேர்வின் எச்சரிக்கை

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் இருவர் கொழும்பில் வைத்து வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஐ.தே.க.வுக்கும் அரச தரப்புக்குமிடையே சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்கள் முடிவடைந்த பின்னர் எதிர்க் கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா விசேட கூற்றொன்றை முன்வைத்தார்.

கொழும்பு புகையிரத நிலையத்தில் வைத்து வெள்ளைவானில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அவர் பேச முற்பட்டார்.

அமைச்சர் ஜெயராஜ் கடும் எதிர்ப்பு

அப்போது குறுக்கிட்ட அரசதரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மேற்படி விடயம் தொடர்பான அறிக்கை குறித்து ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. முன் அனுமதி பெறவில்லையென சபாநாயகரிடம் கூறினார்.

அத்துடன், நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பொதுப் பிரச்சினை தொடர்பாக கட்சித் தலைவர் மாத்திரமே விஷேட கூற்றொன்றை சபையில் வெளியிட முடியுமெனவும் சுட்டிக்காட்டி ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி.யின் கூற்றை வெளியிட அனுமதிக்க வேண்டாமென சபாநாயகரிடம் கோரினார்.

சபாநாயகர் அனுமதி மறுப்பு

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் எதிர்ப்பையடுத்து, ஜோசப் மைக்கல் பெரேரா விஷேட கூற்று விடுவதை ஏற்க முடியாதென சபாநாயகர் தெரிவித்தார். ஜோசப் மைக்கல் பெரேராவின் கூற்று பொதுப் பிரச்சினை அல்லவெனவும் அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் முன் அனுமதி பெறப்படவில்லையெனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகருடன் ஐ.தே.க.வினர் தர்க்கம்

இதற்கு பதிலளித்த ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி., தொலைபேசி மூலம் நான் உங்களிடம் அனுமதி பெற்றேன். அத்துடன், நான் கொண்டுவந்தது பொதுப் பிரச்சினைதான். அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் இருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது பொதுப் பிரச்சினை இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் எதற்கு?

ஆனால், ஜோசப் மைக்கல் பெரேராவின் பதிலை ஏற்க மறுத்த சபாநாயகர், சபையின் ஒத்துழைப்புடன் நிலையியற் கட்டளை சட்டங்களை என்னால் வளைக்க முடியும். ஆனால், அதனை ஒரேயடியாக முறிக்க முடியாதென்றார்.

இதனால் சினமடைந்த ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் ரவிகருணாநாயக்க, லக்ஷ்மன் செனவிரட்ண, ஜோன்ஸ்டன் பெரேரா, தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. மக்கள் தினமும் கடத்தப்பட்டு காணாமல்போய் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் கதைக்க முடியாதென்றால் பாராளுமன்றம் எதற்காக? மக்களுக்கு தேவையற்ற அதனை தூக்கியெறியுங்கள் என சபாநாயகருடன் தர்க்கப்பட்டனர்.

அரச தரப்பு, ஐ.தே.க. கடும் வாக்குவாதம்

இதனையடுத்து, அரச தரப்பினருக்கும் ஐ.தே.க.வினருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. விசேட கூற்றை சமர்ப்பிக்க அனுமதிக்கும்படி ஐ.தே.க.வினரும் அனுமதிக்கக் கூடாதென அரச தரப்பினரும் வாதாடினர். இந்நிலையில் நாளை (இன்று) இக்கூற்றை ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் சமர்ப்பிக்கலாமென சபாநாயகர் கூறினார்.

ஜோசப்பை இரவு கடத்தினால் யார் நாளை சமர்ப்பிப்பது?

சபாநாயகர் கூறியதை ஏற்க மறுத்த ஐ.தே.க.வினர், நாடு இருக்கும் நிலையில் ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி.யை இன்று இரவு யாரும் கடத்திச் சென்றால் நாளை யார் விசேட அறிக்கையை சமர்ப்பிப்பது. எனவே, இன்றே அதனை சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால், அதற்கு அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

`துப்பாக்கியுடன் வருவேன்' மேர்வின் மிரட்டல்

இந்நிலையில் ஐ.தே.க.- அரச தரப்பினருக்கிடையிலான தர்க்கம் உச்சக்கட்டத்தையடைந்தது. அப்போது சபைக்கு நடுவே வந்த பிரதியமைச்சர் மேர்வின் சில்வா சபைக்கு இனிமேல் துப்பாக்கியுடன்தான் வரவேண்டியிருக்குமெனக் கூறினார். கடத்தல், கொலை தொடர்பாக புலிகளுக்கு ஆதரவாக பேசினால் பிஸ்டலுடன் தான் சபைக்கு வரவேண்டியிருக்குமென்றார்.

இந்நிலையில் விமல் வீரவன்சஸவை விசேட கூற்றை வெளியிடுமாறு அழைத்த சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. நாளை (இன்று) தனது கூற்றை வெளியிடலாமெனவும் அதற்கு அரசு பதிலளிக்க வேண்டுமெனவும் கூறினார்.

சிரித்தவாறு அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க

9.30 மணிக்கே சபைக்கு வந்து விட்ட எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் நடந்த சர்ச்சைகளை சிரித்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தார். அத்துடன், தனது உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளும் கூறிக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் நடந்த சர்ச்சையின் பின் சபை அலுவல்கள் வழமைக்கு திரும்பின.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.