Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரும் போர்க் குற்ற விசாரணையும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரும் போர்க் குற்ற விசாரணையும் !
===============================

உலகில் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்கப்படும் மற்றும் உரிமை மறுக்கப்படும் இனங்கள், சமூகக் குழுக்கள் தமது உரிமைக்காவும் இருப்புக்காவும் பல்வேறு முறைகளில் போராடி வந்திருக்கின்றன. அவ்வாறு போராடியவர்கள் ஆயுதமுனையிலும் சட்டத்திற்கு முரணான வகையிலும் அடக்கி மௌனிக்கச் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கிறார்கள். அத்தோடு சந்தேகத்தின் பேரில் எத்தனையோ அப்பாவிகள் கொல்லபட்டிருக்கிறார்கள் அல்லது விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சகல ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்த சமூகமாகவே இலங்கைத் தமிழ் சமூகம் இருக்கின்றது. கடந்த 2009 இல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்த பின்னர் அதுவரை நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கையாக கடந்த ஒரு தசாப்த காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைத் தேடியலையும் வயதான பெற்றோரின் இறுதி ஆசை என்று கூடச் சொல்லலாம்.  

இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும் முக்கிய பேசு பொருளாக இருந்தது மட்டுமன்றி தமிழர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளில் ஊர்வலம், உண்ணாவிரதம் இருந்தது எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.

ஒரு வழியாக மார்ச் மாத இறுதியில் வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க, 14 வாக்களிப்பைத் தவிர்த்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புலம்பெயர் மக்கள்  அதன்பின்னர், தமது போராட்டமும் பிரச்சாரம் வென்றது என்று கொண்டாடித் தீர்த்ததுடன் எதிராக வாக்களித்த சில நாடுகளையும் மண்ணள்ளி எறிந்து வாய் வலிக்கத் திட்டிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். இனி எல்லாவற்றையும் ஐ.நா. பார்த்துக் கொள்ளும் என்றே நினைத்து அமைதி கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு நிகழ்வின் பின்னர் அது தொடர்பாக ஒரு முறையான மீளாய்வு செய்வது, எதிர்காலத்தில் நாம் மேலும் வினைத்திறனுடனும் சரியான திசையிலும் கருமம் ஆற்ற உதவும். ஆனால் அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் முறையான மீளாய்வு, சரியான திசையில் கருமம் ஆற்றல் போன்ற விடயங்களில் நம்மவர்கள் பலமற்று இருக்கிறார்களா என்ற கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன். ஏனெனில் இலங்கைக்குத் எதிரான தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் ஏன் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்ற ஆய்வை இதுவரை எம்மவர்கள் முறையாகச் செய்ததாகத் தெரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, வாக்கெடுப்பு முடிந்து ஒரு வாரத்தின் பின்னர், வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பங்களாதேஷ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மூமேன் (Abdul Momen) சொல்லிய தனது பக்க விளக்கம் எங்களில் எத்தனைபேரின் கண்ணில் பட்டது?
 வடக்கு கிழக்கில் எத்தனையோ தமிழ் பா.உ.க்கள் இருந்தபோதும் கொழும்பில் இருந்து செயற்படும் தமிழ் பா.உ. வான மனோ கணேசன் அவர்கள் இந்த விடயத்தைக் கவனித்து அதனை தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக தன்னால் முடிந்த வகையில் தமிழ் மக்கள், அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வர முயற்சித்திருக்கிறார். அதனை உண்மையில் தமிழ் மக்கள் பாரட்ட வேண்டும்.
அமைச்சர் அப்துல் மூமென் சொல்லியுள்ள அதாவது அவர் தவறாகப் புரிந்து வைத்துள்ள  இரண்டு விடயங்களை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்..
1. புலிகள் தமிழ் இந்துக்களுக்காக ஒரு தனிநாட்டை வடக்குக் கிழக்கில் உருவாக்க போராடியதாக கூறுகிறார். 
2. அடுத்தது, சர்வதேச விசாரணையை இலங்கையிலிருந்து தப்பிப் போய் வெளிநாட்டில் வாழும் புலிகள்தான் கோருவதாக கூறுகிறார். 

இலங்கையில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக எமது அயல்நாடுகளில் சரியான புரிதல் ஏற்படுத்தப்படவில்லை என்பதை மனோ கணேசன் அவர்கள் தனது பதிவில் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, தமிழ் மக்களில் பலருக்கு உலக அரசியல், ராஜதந்திர உறவுகள் தொடர்பான புரிதலும் இல்லை என்பதையே அவருடைய பதிவிற்கு தமிழர்கள் பலர் வந்து போட்ட பின்னூட்டங்கள் சுட்டி நிற்கின்றன.

சிலர் தெளிவாக இதற்கு எமது அரசியல்வாதிகள் சரியான முறையில் தொழிற்பட்டு எமது பிரச்சனைகள் தொடர்பாக அயல்நாட்டு அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்தாமையே காரணம் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் வேறு பலர், “பங்களாதேஷ் ஒரு வறிய நாடு, ஊழல் மிகுந்த நாடு, மகிந்த அவர்களைக் காசு கொடுத்து வாங்கியிருப்பார், பங்களாதேஷ் முட்டாள்கள், அவர்களின் கருத்துக்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை” என்ற ரீதியில்தான் கருத்திட்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது எத்தகைய முட்டாள்தனமான அணுகுமுறை?

ஒரு நாட்டின் மக்கள் முட்டாள்களா? இல்லையா? என்பதல்ல இங்கு பிரச்சனை. சர்வதேச நாடுகளின் ஆதரவை பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் பெற்றுக் கொண்டார்கள் என்பதுதான் இங்குள்ள முக்கிய பிரச்சனை. ஆதரவு தராத நாடுகளுக்கு மண்ணள்ளி வீசி சாபம் கொடுப்பதை நிறுத்திவிட்டு சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதில் எமது புத்திசீவிகளும் அரசியல்வாதிகளும் எவ்வளவு வினைத்திறனுடன் செயற்பட்டார்கள் என்பதைத்தான் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.  
பங்களாதேஷ் மட்டுமல்ல, கடந்த காலங்களில் தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்த எரித்திரியா கூட இம்முறை எதிராகவே வாக்களித்துள்ளது. அப்படியென்றால் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புகளில் ஏற்கனவே இருந்த ஆதரவுத் தளங்களையும் இழந்து வருகிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. 

உலகின் பல நாடுகளின் தூதரகங்கள் இலங்கையிலேயே இருக்கும் நிலையில் எமது கௌரவ பா.உ.க்கள் எத்தனைபேர் இதுவரை தெற்காசிய நாடுகள் உட்பட, ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளோடு நெருங்கிய அரசியல் ராஜதந்திர உறவுகளைப் பேணினார்கள் என்பதை தமிழ் மக்கள் அவர்களை நோக்கிக் கேட்க வேண்டும். அதுபோலவே அந்த நாடுகளின் வெளிநாடு அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்தார்கள்?

வெறுமனே அறிக்கை விடுவதாலும் வருடம் ஒருமுறை, எழுதிக் கொண்டுபோன உரையை பாராளுமன்றத்தில் அனல் பறக்க பேசுவதாலும் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என்று மக்களை நம்ப வைத்துக் கொண்டும் கொழும்பிலும் யாழிலும் ரூம் போட்டு ஊடக சந்திப்பு செய்து கொண்டும் காலத்தை கடத்துவதை நிறுத்திவிட்டு இனியாவது அனைத்து தமிழ் பா.உ. க்களும் ஒன்று சேர்ந்து செயற்பட முன்வரவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழ் அரசியல்வாதிகள் மீது அவர்களுக்கு ஆதரவும் நிதியும் வழங்குவோர் கொடுக்க வேண்டும். 

இம்முறை ஐ.நா. வில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்பதற்காக புலம்பெயர் அமைப்புகளும் செயற்பட்டதாகத் தெரிகின்றது. எனினும் இவர்களுடைய பரப்புரைகள் பெரிதும் மேற்குலக நாடுகளுக்கே மட்டுப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மக்கள், பா.உ.க்கள் மற்றும் தமிழ் மக்களின் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து தொடர்ந்து வேலை செய்யவேண்டும். இதனூடாக பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் தொடர்ந்து உரையாடுவதுடன் தொடர்ச்சியான பரப்புரைகள் மூலம்தான் விழிப்புணர்வுகளைக் கொண்டு வரமுடியும்.

இல்லையென்றால் இது தொடர்பாக ஐ.நா.வில் கலந்துரையாடும் ஒவ்வொரு தடவையும் இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் ஆரவாரமாக ஊர்வலம், உண்ணாவிரதம், வீதி மறிப்பு, கவன ஈர்ப்பு என மூச்சுப்பிடிக்க சத்தம் எழுப்பிவிட்டு அதன் பின்னர் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். நீதி கோரும் மக்களும் தமது கோரிக்கைக்கு விடையேதும் கிடைக்காமலே போய்ச் சேர்ந்தும் விடுவார்கள்.

https://www.facebook.com/101881847986243/posts/307240834117009/?d=n

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.