Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் நீயுமா - போட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீயுமா? - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை!

நானும் நீயுமா? - 1

நானும் நீயுமா? - 1

தமிழ் சினிமாவில் தொடரும் இருபெரும் ஆளுமைகள் குறித்து சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய தொடர்... நானும் நீயுமா?

நம்மைச் சுற்றிலும் உள்ள பல விஷயங்களைக் கவனியுங்கள். அவை பெரும்பாலும் இருமைகளால் நிறைந்திருப்பதைக் காணலாம். நன்மை x தீமை, பிறப்பு x இறப்பு, உண்மை x பொய் என்பது போல் ஏராளமான விஷயங்கள்... நாம் அன்றாட வாழ்வில் கலந்து விட்ட கணினியின் அடிப்படை அலகு கூட 0 x 1 என்கிற இருமைதான்.

இந்த இருமைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பிரிக்க முடியாத இணைப்பாக அமைந்து இருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருக்கும். தொடர்ச்சியாக அமைந்திருக்கும். எதிரெதிர் முனைகளில் நின்று கொண்டிருப்பதான பாவனையைத் தரும். ‘'இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்து விடு'’ என ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரியில் இதை அற்புதமாக உணரலாம்.

ஓகே... எதற்காக இந்த மினி வியாக்கியானம் என்றால் எந்தவொரு துறையிலும் இருபெரும் சக்திகள் மட்டும் முன்னணியில் இருக்கும். எதிரும் புதிருமாக நின்று கொண்டிருக்கும். ஒன்றுடன் ஒன்று வலுவாகவும் தொடர்ச்சியாகவும் போட்டியிட்டுக் கொண்டிருக்கும். அப்படி இருந்தால்தான் அந்தத் துறை உயிர்ப்பாக இருந்து வளர்ச்சியடையும். இல்லையெனில் சீக்கிரமே அழிந்து போகும். இந்த இருமைகள் தற்செயலாக உருவாவதல்ல. வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல இயற்கையே இதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ச்சியாகக் கட்டமைக்கும்.

தியாகராஜ பாகவதர்
 
தியாகராஜ பாகவதர்

சற்று யோசித்துப் பாருங்கள். நமக்கு இரவு என்கிற விஷயமே இல்லாமல் பகல் என்பது மட்டுமே உண்டு என்றால் அது எத்தனை சலிப்பான, தாங்க முடியாத அனுபவமாக இருக்கும்?! ஒரு திரைப்படத்தில் நாயகன் மட்டுமே இருக்கிறான். தொடர்ந்து வெற்றியடைகிறான். ஆனால் வில்லனே இல்லை என்றால் அந்தத் திரைப்படம் நிச்சயம் தோல்விதானே?!

இந்த இருமைகளின் வரிசையில் தமிழ் சினிமாத் துறையும் விதிவிலக்கல்ல. (ஹப்பாடா... ஒருவழியா டிராக்கிற்கு வந்துட்டேன்!). எந்தவொரு காலகட்டத்திலும் இருபெரும் நடிகர்கள் முன்னணியில் எதிரும் புதிருமாக நின்று கோலோச்சிக் கொண்டிருப்பார்கள். அந்தத் துறையையே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்கள். சூரியன் x நிலவு போல இவர்கள் இருந்தார்கள் என்றால் மீதிமிருக்கும் நடிகர்களால் அவ்வப்போது மின்னும் நட்சத்திரங்களாக மட்டுமே இருக்க முடியும்.

இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் பல்வேறு தகவல்களுடன் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

 
இந்த வரிசையின் துவக்கத்தில், ‘தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பா் ஸ்டார்’ என்கிற அந்தஸ்துடன் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஒருபுறம் ரகளையாக கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அதன் மறுமுனையில் பி.யு.சின்னப்பா பிரகாசித்துக் கொண்டிருந்தார்.

பாகவதருக்குப் புகழும் செல்வமும் ரசிகர்களின் அபரிதமான வரவேற்பும் ஏராளமாக இருந்தது. தங்கத்தட்டில் சாப்பிடும் அளவிற்கு அவர் ராஜவாழ்க்கை வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

இதைப் போலவே பி.யு. சின்னப்பாவும் சினிமா மூலம் தான் சம்பாதித்த பணத்தில் வீடுகளாக வாங்கிக் குவித்தார். ‘'புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இனி சின்னப்பா வீடு வாங்க தடை செய்யப்படுகிறது’' என்று அறிவிப்பு வெளியிடும் அளவிற்கு செல்வத்தில் மிதந்தார். இருவருமே அசாதாரணமான திறமைசாலிகள். அபாரமான பாடகர்கள். நாடகத்துறையிலிருந்து கிளம்பி மிகவும் சிரமப்பட்டுதான் இந்த உச்சியை அடைந்தார்கள். போலவே அவர்களின் வீழ்ச்சியும் ஏறத்தாழ ஒற்றுமையுடன் பரிதாபகரமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

*********************

நடிகர் பி.யு சின்னப்பா
 
நடிகர் பி.யு சின்னப்பா

முன்னணியில் ஆட்சி செய்யும் இது போன்ற இரண்டு ஆளுமைகள், நேரெதிரான அடையாளங்களையும் திறமைகளையும் அதே சமயத்தில் அதிசயக்கத்தக்க ஒற்றுமைகளையும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவர்தான் இதன் உச்சத்தில் இருப்பார். அடுத்தவர் ஒருபடி கீழே இருப்பார். திறமை, புகழ், மக்கள் செல்வாக்கு, வணிக மதிப்பு போன்ற பல அளவீடுகளின் மூலம் இந்த வித்தியாசத்தைக் காணலாம்.

தியாகராஜ பாகவதர் காண்பதற்கு பேரழகர். ஆண்களே மயங்கும் அளவிற்கு அழகு என்றால் பெண்களுக்கு கேட்கவா வேண்டும்? பாகவதரைப் பார்த்து அவரது அழகில் மயங்கி பெண்கள் மூர்ச்சையாகி கீழே விழுந்ததாகக்கூட கதைகள் உண்டு. அதிலும் நேரில் கூட அல்ல. திரையில் பார்த்ததற்கே இந்தக் கதை. போலவே பாகவதரின் குரலிலும் ஆலாபனையிலும் தேன் சொட்டும்.

 

ஆனால், பாகவதரோடு ஒப்பிடும் போது சின்னப்பா தோற்றத்தில் சற்று கரடுமுரடானவர். ஆனால் குரல் வளம் அபாரமானது. பாகவதருக்கு ஈடானது. இளம் வயதிலேயே சிலம்பம், குஸ்தி போன்றவற்றையும் கற்றிருந்தார் சின்னப்பா. தமிழில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த ஹீரோ இவர்தான். 1940-ல் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் அது.

இது போன்ற ஆளுமைகளுக்கு இடையேயுள்ள போட்டியானது ‘ஆரோக்கியமான போட்டி’ என்று ஊடகங்களில் ரொமான்டிசைஸ் செய்யப்படுவதில் ஓரளவிற்கு உண்மையிருந்தாலும் இருவருக்கு உள்ளேயும் ஒருவரையொருவர் விஞ்ச வேண்டும் என்கிற கடுமையான போட்டி இருக்கும். மக்களின் வரவேற்பை தாங்களே அதிகம் பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பார்கள். இதற்குள் வெளியில் அறியப்படாத பல ரகசிய வரலாறுகளும் முட்டல் மோதல்களும் கண்ணுக்குத் தெரியாத விரோதங்களும் நட்புகளும் இருக்கலாம். (மணிரத்னம் அற்புதமாக இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தை இங்கு நினைவுகூருங்கள்).

ரஜினி
 
ரஜினி

கோஷ்டி என்கிற விஷயம் இல்லாமல் மனிதக்கூட்டம் உண்டா என்ன? எனவே இது போன்ற ஆளுமைகளுக்கு தனித்தனியான ரசிகக்கூட்டமும் தன்னிச்சையாகவே உருவாகி விடும். இந்த இரு ரசிகர் கோஷ்டிகளும் தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள். தங்களுக்குப் பிடித்த நடிகர்தான் உயர்வானவர் என்பதற்காக அடித்துக் கொள்வார்கள். இந்தப் போக்கை சமூகவலைத்தளங்களில் இன்றும் கூட பார்க்கலாம்.

ஒரு நடிகரை ஏன் ஒரு சராசரி நபருக்கு பிடிக்கிறது என்பதற்கு புறவயமான காரணங்கள் முதற்கொண்டு அந்தரங்கமான காரணங்களும் நிறைய இருக்கும்.

ரஜினிகாந்த்தின் கறுப்பான தோற்றமும் எளிமையும் முதலில் அவருக்கு சில பின்னடைவுகளை ஏற்படுத்தின. ஆனால் பிற்பாடு அவர் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை எட்டுவதற்கு அதுவே ஒரு காரணமாக அமைந்ததுதான் வரலாறு. அவரது திராவிடத் தோற்றம், ‘ஹேய்... நம்மளை மாதிரியே இருக்கான்ப்பா’ என்கிற அபிமானத்தையும் உள்ளார்ந்த பிரியத்தையும் ரசிகர்களுக்குள் வளர்த்திருக்கலாம்.

 

இதன் எதிர்முனையில் எம்.ஜி.ஆரின் தோற்றத்தைக் கவனியுங்கள். பெயரில் சந்திரனை வைத்துக் கொண்டிருந்தாலும் அவர் எந்தவொரு கூட்டத்திற்குள்ளும் வந்து இறங்கும் போதும் ‘'சூரியனே வந்து இறங்கியது போல அந்த இடம் பிரகாசமாக மாறிற்று. அத்தனை சிவப்பாக, தகதகவென்று மின்னினார்'’ என்றுதான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். கறுப்பாக இருக்கிற ரஜினிகாந்த்தும் வெற்றி பெற்றார். சிவப்பாக இருந்த எம்.ஜி.ஆரும் வெற்றி பெற்றார்.

கறுப்பு என்பதற்காகவே ‘ஹேய்... நம்மாள்டா’ என்று ரஜினிகாந்த்தின் மீது தன்னிச்சையான பிரியம் உருவானதைப் போலவே நமக்கு சிவப்பு நிறத்தின் மீதும் உள்ளார்ந்த கிளர்ச்சியும் ரகசிய விருப்பமும் உண்டு. சிவப்பு நிற அழகு க்ரீம்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிகுந்த லாபத்தை அடைவதின் ரகசியம் இது. இதன் பின்னால் உள்ளது நிற அரசியல். ‘வெள்ளை நிறம் உயர்வானது; அழகானது’ என்று நம் ஆழ்மனதில் விதைக்கப்பட்டிருந்ததற்கு பின்னால் நெடும் வரலாறு உள்ளது. ‘'தாங்கள்தான் நாகரித்தை வளர்த்தவர்கள்; உயர்வானவர்கள். பிற சமூகங்கள் எல்லாம் நாகரிகப்படுத்தப்பட வேண்டியவர்கள்'’ என்று ஐரோப்பியர்களுக்கு உள்ள மேட்டிமைத்தனமான போக்குதான் இதற்கு காரணம். இவ்வகையான வரலாறுகளும் கற்பிதங்களும் இப்போது உடையத் துவங்கியிருக்கின்றன.

எம்.ஜி.ஆர்
 
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் அபரிதமான வெற்றிக்கு அவரின் தோற்றமும் ஒரு முக்கிய காரணமாக இருந்ததை பாகவதருக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இந்த இருபெரும் ஆளுமைகளில் ஒருவர் மட்டும் எப்படி உச்சியின் முனையை அடைகிறார்; மக்களின் அபரிதமான செல்வாக்கைப் பெறுகிறார், மற்றொருவர் ஏன் ஒருபடி கீழே இருக்கிறார்? கீழே இருக்கிறவர் முன்னவரை விடவும் அதிக திறமைசாலியாக இருந்தும் ஏன் முந்த முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்ள பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

தியாகராஜ பாகவதர் x பி.யு. சின்னப்பா என்கிற இருபெரும் ஆளுமைகளின் வரிசை என்பது பிற்காலத்திலும் அச்சு மாறாமல் அப்படியே தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது வரலாற்றின் கட்டாயம். தேவையும் கூட!

 

https://cinema.vikatan.com/tamil-cinema/a-new-series-on-comparison-between-two-stars-from-different-eras

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீயுமா - 2: போட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் யார்?

பி.யு சின்னப்பா, தியாகராஜ பாகவதர்

பி.யு சின்னப்பா, தியாகராஜ பாகவதர்

இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

இந்தத் தொடரின் முதல் வார கட்டுரையில், எப்படி தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகள் எதிரும் புதிருமாக இயங்கும் வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதின் அடிப்படையைப் பார்த்தோம். இரண்டாவது வாரத்திற்குள் செல்வதற்கு முன்னால் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

‘’நாம் ஏன் பழைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்?’’ என்பது போன்ற சலிப்பான கேள்விகளை கடந்த பதிவின் பின்னூட்டங்களில் பார்த்தேன். ஒரு வீட்டிற்கு அஸ்திவாரம் அவசியமா என்பதைப் போன்ற கேள்வி இது. ஆம்… கடந்த கால வரலாற்றின் மீதுதான் நிகழ்கால வரலாறு நின்று கொண்டிருக்கிறது. எனவே நிகழ்காலத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள நாம் கடந்த காலத்தை நோக்கி நிச்சயம் பயணித்தேயாக வேண்டும்.

 

இரண்டாவது ‘’சினிமா நடிகர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அவசியம்தானா?’’ என்கிற நோக்கிலான கேள்விகள்.

தமிழ் சமூகம் சினிமா நடிகர்களின் மீதான மோகத்திலிருந்து பெருமளவும் விலகிவிட்டதா என்பதை யோசித்துப் பார்த்தாலே இதற்கான விடை கிடைத்து விடும். இன்றும் கூட அரசியலுக்கு வரும் நடிகர்களிடம் அதிகாரத்தை அப்படியே தூக்கிக் கொடுத்து விடும் மனோபாவம் ஏறத்தாழ அப்படியே நீடிக்கிறது.

நானும் நீயுமா?
 
நானும் நீயுமா?

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால் ஒருவர் புகழ்பெற்ற நடிகர் என்கிற ஒரே காரணத்தினாலேயே அவருடைய அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதைப் போன்ற அவலம் வேறில்லை. கடந்த காலத்தில் மட்டுமல்ல, நிஜத்திற்கும் நிழலுக்குமான வித்தியாசத்தை இன்றைய இளைய தலைமுறையினர் கூட பெரும்பாலும் புரிந்து கொள்ளவில்லை. தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்காக சமூகவலைத்தளங்களில் நடக்கும் குடுமிப்பிடிச் சண்டைகளை இன்றும் கூட வேதனையுடன் பார்க்க முடிகிறது.

இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்கள் தனிநபர்கள்தான். அது தொடர்பான ஆசாபாசங்கள், போட்டி மனப்பான்மைகள் அவர்களுக்குள்ளும் உண்டு. எனவே அவர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் நம்மைப் போன்ற மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்.

ஓகே… முன்னுரை போதும். இரண்டாவது வாரத்திற்குள் சட்டென்று நுழைந்து விடுவோம்!

 

தொலைக்காட்சி சேனல்களைத் திருப்பும்போது கறுப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் காட்சிகள் வருவதை சில நொடிகள் கூட இளைய தலைமுறையினரால் சகிக்க முடிவதில்லை. சட்டென்று திருப்பி 'ரகிட ரகிட ரகிட' என்பது போன்ற பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே இந்தத் தொடரிலும் கறுப்பு - வெள்ளை காலத்தை சட்டென்று முடித்து விட்டு கலர் ரீலுக்குள் விரைவில் நுழைந்து விடலாம். கடந்த வாரத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் மற்றும் அவருக்கு இணையாக சாதனை புரிந்த பி.யூ.சின்னப்பா பற்றி பார்த்தோம்.

இருவரின் இசைப்பாணியும் வெவ்வேறாக இருந்தது. பாகவதரை விடவும் சின்னப்பாவின் பாடும் முறையை ஒரு படி மேலே வைக்கிறார்கள் இசை விமர்சகர்கள். ஆனால், சின்னப்பாவை விடவும் பாகவதரே அதிக புகழும் செல்வாக்கும் பெற்றிருந்தார். காரணம் அவரின் பிரகாசமான தோற்றம். அவரது அழகில் மயங்கி அவரை பார்க்கத் துடித்தவர்களில் பெண்களுக்கு நிகராக ஆண் ரசிகர்களும் இருந்தார்கள். அவரின் சிகையலங்காரம் உள்ளிட்ட பல விஷயங்களை நகலெடுத்தார்கள். 'பாகவதர் கிராப்' என்பது அந்தக் காலத்தில் புகழ்பெற்றதாக இருந்தது. இந்த விஷயத்திலும் தமிழ் ரசிகர்கள்தான் முன்னோடி.

தியாகராஜ பாகவதர்
 
தியாகராஜ பாகவதர்
ஏறத்தாழ சமமான திறமைகளைப் பெற்றிருந்தாலும் ஒருவர் முன்னே நிற்கிறார், மற்றொருவர் ஒருபடி கீழே நிற்கிறார் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கான துவக்க உதாரணம்தான் பாகவதரும் சின்னப்பாவும்.

இத்தனைக்கும் பாகவதரோடு ஒப்பிடும் போது சின்னப்பாதான் சிறந்த நடிகர். முறையாக சண்டை பயின்றவர். தமிழ் சினிமாவில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர் (உத்தமபுத்திரன் - 1940). மூன்று வேடங்களில் நடித்தவரும் இவர்தான். அப்படி இவர் நடித்த 'மங்கையர்க்கரசி' 1949-ல் வெளியானது. இது மட்டுமல்ல 'ஆர்யமாலா' (1941) என்கிற திரைப்படத்தில் பத்து வெவ்வேறு வேடங்களில் தோன்றி அசத்தினார்.

கமல்ஹாசனின் 'தசாவதாரம்’ படத்திற்கு முன்னோடி சின்னப்பாதான். (இன்னொருவர் எம்.என்.நம்பியார்). பாகவதரை விடவும் ஒரு முறையான கதாநாயகனாக பல்வேறு திறமைகளை சின்னப்பா கொண்டிருந்தாலும் அவரையும் முந்திக் கொண்டு பாகவதரின் கொடிதான் உயரப் பறந்தது. காரணம் அவரது அழகான தோற்றம். ஒருவரின் திறமையை விடவும் அவரின் புறத்தோற்றத்திற்கு நாம் அதிக மதிப்பளிக்கிறோம் என்கிற அணுகுமுறை இன்றும் கூட நீடிக்கிறது.

 

‘’ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது" என்கிற பொன்மொழிக்கேற்ப இப்படிப்பட்ட இரு ஆளுமைகளும் இணைந்து பங்காற்ற மாட்டார்கள். ஒரு படத்தில் நடிப்பதன் புகழும் வணிகமதிப்பு மொத்தமும் தனக்கே கிடைக்க வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையே இதற்கு பிரதான காரணம். இது ஒருவகையில் ஆரோக்கியமான போட்டியாக இருந்தாலும் சமயங்களில் கோடு தாண்டுவதுண்டு.

தியாகராஜ பாகவதரும், சின்னப்பாவும் எந்தவொரு திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை. விதிவிலக்காக ஒன்று நிகழ்ந்தது. ஆனால் அந்த அதிசயம் சினிமாவில் நடைபெறவில்லை. நாடகத்தில் நடந்தது. 'பவளக்கொடி' என்னும் நாடகத்தில் பாகவதர் அர்ஜூனனாகவும், சின்னப்பா கிருஷ்ணனாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள்.

10 வேடத்தில் நடித்த முதல் நடிகர் பி.யு சின்னப்பா
 
10 வேடத்தில் நடித்த முதல் நடிகர் பி.யு சின்னப்பா

இதுபோன்ற கலைஞர்கள் நாடக மேடைகளில் ஒருவரையொருவர் முந்தி தங்களின் திறமையைக் காண்பித்து ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற வேண்டும் என்று குறியாக இருப்பார்கள். எனவே நாடகத்தில் இல்லாத விஷயங்களைக் கூட மேடையில் சட்டென்று சமயோசிதமாக செய்து பாராட்டுக்களைப் பெற்று விடுவார்கள். 'பவளக்கொடி' நாடகத்திலும் இது போன்ற ருசிகரமான சம்பவம் நடந்தது. பாகவதரின் அற்புதமான குரலில் மயங்கிக் கிடந்த ரசிகர்களை, தனது திடீர் யோசனையால் நடித்து முந்த முயன்றார் சின்னப்பா. பாகவதர் இதற்கு முதலில் கோபித்துக் கொண்டாலும் பிறகு சின்னப்பாவின் திறமையைப் பாராட்டினார்.

வானத்தில் இருக்கும் சூரியன், நிலவு போல இப்படிப்பட்ட இரு ஆளுமைகள் திரையில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் நட்சத்திரங்கள் போல சிலரும் இருப்பார்கள். இவர்களுக்கான ரசிகர் பட்டாளமும் உருவாவதுண்டு. அப்படியாக பாகவதர் என்கிற சூரியனையும், சின்னப்பா என்கிற நிலவையும் தாண்டி நட்சத்திரமாக ஜொலித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். ‘’செந்தமிழ் தேன்மொழியாள்’’ என்கிற அந்தக் காலத்து ஹிட் பாடலைக் குறிப்பிட்டால் இப்போதைய தலைமுறையினருக்கு கூட நினைவிற்கு வந்து விடும். டி.ஆர்.மகாலிங்கமும் அற்புதமான குரல் வளத்தைக் கொண்டவர். தமக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருந்தார். மகாலிங்கத்தைப் போலவே அந்தக் காலத்தில் வேறு சில நட்சத்திரங்களும் இருந்தார்கள்.

 

என்றாலும் இந்தக் காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் தியாகராஜ பாகவதரும், பி.யூ.சின்னப்பாவும் மட்டுமே. இந்த இரு ஆண்களுக்கு நிகராக புகழ்பெற்ற நடிகையைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும்… அல்லவா? அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று டி.ஆர்.ராஜகுமாரியைச் சொல்லலாம். இந்தக் கனவுக்கன்னியின் அழகைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி மறுபடி மறுபடி இவரது திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டாடினார்கள் அந்தக் காலத்து ரசிகர்கள்.

காந்தக் கண்.. கவர்ந்திழுக்கும் நடிப்பு... அன்றைய நயன்தாரா டி.ஆர்.ராஜகுமாரி...
 
காந்தக் கண்.. கவர்ந்திழுக்கும் நடிப்பு... அன்றைய நயன்தாரா டி.ஆர்.ராஜகுமாரி...

என்னதான் ஒரு நடிகை அதிக திறமைகளைப் பெற்றிருந்தாலும் ஓர் ஆண் நடிகரின் புகழுக்கும் செல்வாக்குக்கும் இணையாக பெண்களால் நகர முடிந்ததில்லை. ஏறத்தாழ இன்றும் கூட இந்த நிலைமைதான் தொடர்கிறது. நயன்தாரா போன்ற அரிதான சில நடிகைகளால் சூழல் மாறினாலும் இன்னமும் ஆண் நடிகர்கள்தான் தமிழ் சினிமாவில் கோலோச்சுகிறார்கள்.

இனி இதற்கு அடுத்தக் காலக்கட்டத்திற்குள் நுழைவோம். அடுத்த வார இரு பெரும் ஆளுமைகள்… எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி!

- போட்டி போடுவார்கள்!

https://cinema.vikatan.com/tamil-cinema/naanum-neeyuma-2-thyagaraja-bhagavathar-vs-p-u-chinnappa

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.