Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழின் சுவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழின் சுவை!

 

நம் தமிழ் மொழியின் சுவையை உணர முற்பட்டால் திகட்டத்திகட்ட சுவைக்க ஆயிரமாயிரம் விசயங்கள் உள்ளன. அதிலும் இலக்கணச்சுவையை அறிந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இலக்கணம் அதிகம் அறியாத என் போன்றோரும் கொண்டாட நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சப்புகழ்ச்சி அணி. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது. நம் ஆதிகாலப் புலவர்களில் மிகவும் குசும்பு படைத்தவர்கள் பலர்.. இரட்டுற மொழிதல் – சிலேடை அணிப் பாடல் என்ற ஒருவகை உள்ளது. அதில் வல்லவர் நம் கவி காளமேகப்புலவர். இவர் அம்மனையே வம்புக்கு இழுக்கிறார் என்றால் இந்தப் புலவர்களுக்கு அந்த தெய்வங்களே எவ்வளவு செல்லம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் பாருங்கள். இவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல் இதோ:

images-4மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!

இந்தப்பாடலில் வஞ்சப்புகழ்ச்சி மட்டுமன்றி இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது பாருங்கள். முதலில் மேலோட்டமாக, திட்டுவது போல் உள்ள பொருளைப் பார்ப்போம்.

மதுரைவாசியான ஆடுமாடு மேய்க்கும் ஒருவனின் தங்கை தம் வீட்டைவிட்டு தில்லை நகரில் வசிக்கும் ஆடு மேய்ப்பவனுக்குத் துணைவியாகிவிட்டாள். ‘கோனான்’ என்பது இடையர் குலத்தோரின் பட்டப்பெயர். அதாவது ஆடு, மாடு மேய்க்கும் இடையர். கோட்டான் போல ஒரு மகனையும் பெற்றாள் அந்த சிற்றிடைச்சி. அதாவது சிறிய இடையர் குலப்பெண் என்று கிண்டலாகப் பாடுவது போல் உள்ள இந்தப்பாடலுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதையும் பார்க்கலாம் ;

‘கோன்’ என்பதற்கு மன்னன், அரசன், தலைவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஆடு என்றால் நடனம் ஆடுவது என்ற பொருளும் உண்டல்லவா? ஆக ’ஆட்டுக்கோன்’ என்றால் ஆடலரசன் என்ற பொருள் வருகிறதல்லவா. தில்லை நடராசப்பெருமான் தான் ஆட்டுக்கோன். அதேபோல் மாட்டுக்கோன் என்பதற்கும் உட்பொருள் உண்டு. மாடு என்றால் செல்வம். செல்வத்திற்கு அதிபதியான ஆண்டவன், பெருமாள் அல்லவா. மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது பெருமாளின் தங்கை மதுரையை விட்டு தில்லைக்கு வந்து நடராசரின் மனைவியானாள் என்பதே முதல் இரண்டடியின் பொருள்.

அது சரி. அடுத்த ஈரடியில், குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள் என்கிறாரே .. இங்குதான் நம் புலவர் தம் சொற்திறத்தைக் காட்டி விளையாடியிருக்கிறார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்று ஒரு பொருள் இருந்தாலும், கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது , அதாவது மரித்துக் குட்டுவது என்றும் மற்றொரு பொருள் உள்ளது. ‘மரித்து’ என்பதற்கு ‘நினைத்து’ என்ற பொருளில், விநாயகரை நினைத்து வணங்கும்போது குட்டிக்கொள்வதைக் குறிப்பால் உணர்த்தி, விநாயகரைப் பெற்றவள் என்கிறார்.

‘கோட்டானை’ என்ற சொல் கோடு + ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டணி. இங்கு கோடு என்பதற்கு யானைத்தந்தம் என்று பொருள் வருகிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டானை என்ற பொருளாகிறது.

இறுதி அடியாக வருவது கட்டிமணிச் சிற்றிடைச்சி. கட்டி என்றால் பொன் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது பொன்னால் ஆன மணியைத் தம் சிற்றிடையில் (ஒட்டியாணம்) அணிந்தவள் அம்மை. இப்படி அழகாக சிவகாமி அன்னையை வர்ணித்துள்ளார்.

இன்றும் பல கவிஞர்கள் இந்த உத்தியைக் கையாண்டு இரட்டை அர்த்தப் பாடல்களும், வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.vallamai.com/?p=71949

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் இனிமையும்! எளிமையும்!!

 

நமது தாய்மொழியின் பெயர் "தமிழ்". தமிழை "உயர்தனிச் செம்மொழி" என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்" என்பதற்கு "அழகு" எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் "தமிழ் தழுவிய சாயல்" என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை" எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்"ழை உடையது "தமிழ்" எனப் பொருள் கூறுவதும் உண்டு.

தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்" வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.

தமிழுக்கு "முத்தமிழ்" எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.

சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு" என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்" என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்" எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.

வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்" எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்" எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும்.

நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு" என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை"யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

"தமிழுக்கும் அமுதென்று பேர்", தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து" என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. "தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்"" எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

இனிமைச் சிறப்பு

"தமிழ்" என்பதற்கு "இனிமை" என்றும் ஒரு பொருளுண்டு. இதனை "இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்" என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

"பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்" என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:

"போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?" என்னே தமிழின் சுவை!

"அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்" எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?

"தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்"" என்பதே. என்னே தமிழின் இனிமை!

தன்னைப் "பித்தன்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், "தமிழால் வைதான்" என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் "தமிழால் வைதாரையும் வாழவைப்போன்" என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, "தமிழும் அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்" என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

நன்றி என்பதைக் குறிக்கும் "தாங்க்ஸ்" என்ற ஆங்கிலச் சொல்லும், நல்லது என்பதைக் குறிக்கும் "அச்சா" என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும். தமிழில் நன்றி, வணக்கம் என்பது மட்டுமல்ல, "இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாது" என்று வைவதுகூட அதன் மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று. என்னே தமிழின் இனிமை!

கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.

"நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்;

இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்;

ஒரு கொடியைப் பிடித்தேன்;

ஏறிச் சென்று கலைத்தேன்;

சட்டியில் பிழிந்தேன்;

நன்றாக வடித்தேன்;

அதனைக் கண்டு மகிழ்ந்தேன்;

அதில் சிறிது குடித்தேன்;

களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்;

இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்;

தேனை அடைத்தேன்; எடுத்தேன்;

விரைந்தேன்; நடந்தேன்;

வந்தேன்; சேர்ந்தேன்;

இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்"" என்று.

நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன்.

அவனுக்கு உரியதையும் தந்தேன்.

அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்?

ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே!

இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்" எனக் கூறுங்கள்.

அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்" என ருசிக்கும்.

என்னே தமிழின் இனிமை!

எளிமைச் சிறப்பு!

தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது.

தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ் ஓர் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே. இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம். ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது.

தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது. ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம்.http://www.tamilandam.com/பதிவு/3-தமிழ்-மொழியின்-இனிமையும்-எளிமையும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவேந்தரும் தமிழும்
 

 

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

(சங்கநாதம்: 1-2)
 

எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம்.

தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.
 

1.1.1 தமிழ் உயிர் போன்றது
 

தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக் காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப் பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார். எனவே,
 

செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே !
செயலினை மூச்சினை உனக்களித்தேன்

(பாரதிதாசன் இசையமுது, தமிழ்: 5)
 

என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே, வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.
 

தமிழெனும் அமிழ்தம்
 

பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள். வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம் என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட, "ஆகா! என்ன சுவை! என்ன சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்கொண்டு, கூறுகிற மரபு உண்டு. பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே
 

தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

(இன்பத் தமிழ்: 1-2)
 

என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும், நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்! எனவே தமிழை அமிழ்தம் என்றும் உயிர் என்றும் சொன்ன சொற்கள் மிகை அல்லவே!
 

• தமிழெனும் உயிர்
 

இயற்கையில் பல்வேறு வகையான சுவைகள் இருக்கின்றன. நன்கு பழுத்த பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது. தென்னையின் இளநீரிலும் இனிமை இருக்கிறது. அவ்வாறு ஆயின் தமிழில் என்ன இருக்கிறது? இதோ பாரதிதாசன் கூறுவதைக் கவனியுங்கள்:

http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/images/c0114101.jpg
காட்சி
 

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !

(பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி 19. தமிழின்இனிமை, முதல் பாடல்)
 

(கழை = கரும்பு)

என்ன நண்பர்களே! “எனினும்”, “இருந்தாலும்” என்று பாரதிதாசன் கூறுவதின் பொருள் என்ன? தமிழில் “இனிமையைக் காண்கிறேன் என்று சொல்ல அவர் தயங்குகிறாரா? சற்று எண்ணிப் பாருங்கள். ‘இனிப்புடையதாயிருத்தல்’. ‘உயிர்ப்பு உடையதாயிருத்தல்’ - இவற்றுள் எது மிகுதியும் விரும்பத்தக்கது? உயிர் இல்லையேல் சுவைப்போருக்கு இனிப்பு ஏது, நுகர்ச்சி ஏது? கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் கவிஞர் கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா!

வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை விடச் சுவையானவன் இறைவன்’ என்றார். பாரதிதாசனுக்கு அந்த உணர்வை, இனிமையைத் தமிழ் தந்திருக்கிறது.

“சோலையினுள் மலர்களின் தேன் அருந்தவரும் வண்டின் ஒலியையும், புல்லாங்குழல் (Flute) ஒலியையும், வீணையின் இசையையும், குழந்தைகளின் மழலைப் பேச்சினையும் கேட்டு மகிழ்ந்து, அவற்றோடு மெய்மறந்து ஒன்றி இருக்கிறேன். ஆனால் அவற்றிடமிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ள இயலும். தமிழை விட்டு என்னால் பிரிய முடியாது. ஏன் என்றால், தமிழும் நானும் உடலும் உயிரும் போன்றவர்கள்” இதனைத்,
 

தமிழும் நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர்

(பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுதி 19. தமிழின் இனிமை, மூன்றாவது பாடல்)
 

என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழ் மொழி தமிழ்மக்களின் உயிராக இருப்பதால், உலகிலுள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று பறைசாற்றுகின்றார்.
 

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும்
தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே

(பாரதிதாசன் கவிதைகள் முதல்பகுதி 23. எங்கள் தமிழ், வரிகள்: 9 - 10)
 

ஒவ்வொரு மனிதனும், தன் உயிரைப் பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், மேம்பாடு அடையச் செய்வதற்கும், எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வான். அதைப்போல நம் உயிர் போன்ற தமிழைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் நாம் எல்லாவித முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதற்குத் தயார் ஆக வேண்டும் என்று கூறுகிறார் பாரதிதாசன்.
 

1.1.2 தமிழின் இனிமை
 

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான இன்பம் கிடைக்கும். சிலருக்குப் பொருள் ஈட்டுதல் இன்பம் தரும். ஒரு சிலருக்கு அவர்கள் வகிக்கும் பதவி இன்பம் நல்கும். புகழ் இன்பம் வழங்கும். ஆனால் பாரதிதாசனுக்கு எது இன்பம் தருகிறது தெரியுமா? தாய்மொழியாம் தமிழ் இன்பம் தருகிறது. தமிழ் தரும் இன்பத்தைத் தம் பாடல்களின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.

தமிழுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? என்று வினவும் பாரதிதாசன்,
 

இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத் தமிழ்நாட்டினர் எண்ணுக.

(முதல் பகுதி : தமிழ் உணவு, வரிகள்: 36 - 37)
 

என்று குறிப்பிடுகிறார். எனவே, தமிழுக்கு இன்பம் என்று இன்னொரு பெயருண்டு. தமிழ் நாட்டினரே அதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

தமிழ் என்ற உடனே, இன்பம் தானாக வந்து கிட்ட வேண்டும். அந்த இன்பத்தை நீங்கள் நுகர வேண்டும் என்று கூறுகிறார்.

(கிட்டுதல் = அடைதல், கிட்ட = அடைய)

இயற்கையில் அமைந்துள்ள பல பொருள்களை நாம் நுகரும் போது அவை நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றை மனத்தில் நினைத்த உடனே, இன்ப உணர்வு ஏற்படும். அதைப்போல் தமிழைப் பற்றி நினைத்த உடனேயே இன்ப உணர்வு வரும்.

தமிழ் இன்பம் தருவதால், அது அமுதம் போன்றது என்று குறிப்பிடுகிறார். அமுதத்தை உண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, அல்லது இன்பம், தமிழைப் படிக்கும் போது கிடைக்கும். எனவே,
 

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது !

(முதல் தொகுதி, 23. எங்கள் தமிழ் - வரிகள்: 1 - 2)
 

என்று இனிமையின் எல்லை எனக் கருதப்படும் அமுதத்தையே தமிழ் இன்பத்திற்கு இணையாகக் கூறுகிறார் பாரதிதாசன். http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114101.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.